அனல் 1
சென்னையின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது அந்த அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி.
ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பாலினத்தவரும் படிக்கும் அந்த கல்லூரியில், இரண்டாம் ஆண்டு வேதியியல் துறை வகுப்பறையில் ப்ரொஃபஸர் பாடம் நடத்துகிறேன் பேர்வழி என தாலாட்டு பாடிக் கொண்டிருந்தார்.
மதிய உணவு இடைவேளைக்கான மணி அடிக்கவும்,
‘அடங்கப்பா சாமி உட்டா இவரு பேசியே செவ்வாய் கிரகத்துக்கு ஃளைட் ஓட்டிடுவாரு போலடா’ என மைண்ட் வாய்ஸில் கவுண்டர் விட்ட படியே
ப்ரொஃபஸருக்கு முன் மாணவமணிகள் அனைத்தும் வகுப்பறையை விட்டு கலைந்து சென்றனர். (சத்தமா சொன்னா தான் இன்டர்நல் மார்க்ல துண்ட போட்ரு வாங்களே).
அவ்வகுப்பறையில் இருந்து வெளியேறிய இரண்டு மாணவர்கள் மட்டும் தங்கள் சக தோழியைத் தேடிக் கொண்டிருந்தனர்.
“டேய் மித்ரா எங்கடா போய் தொலைஞ்சா இந்த ராட்சசி. நம்ம கூட சேர்த்துகிட்டாலும் சேர்த்துடேன் நான், இவ அட்டகாசம் தாங்க முடியல” என கடு கடுத்தவாறே தன் ராட்சசியைத் தேடினான் விவேகன்.
அப்போது மித்ரன் தங்களைக் கடந்து சென்ற சக மாணவனிடம், “டேய் எங்க ஃப்ரெண்ட் தென்றல அந்த பக்கமா பார்த்தியா?” என வினவ.
“அந்த பொண்ணா? அங்க கேன்டீன் கிட்ட ஒரு பையன் கூட பேசிட்டு நிக்குறாடா அந்த பையன் முழியே ஒன்னும் சரியில்லை நானே அத சொல்ல தான் உங்களை தேடிட்டு இருந்தேன் நீங்களே வந்துட்டீங்க” என்று சொல்லிவிட்டு சென்றான்.
“என்னது பையன் கூட பேசிட்டு நிக்குறாளா!” என்று அலறியவாறே ஓட்டம் பிடித்தனர் சங்கமித்ரன் மற்றும் விவேகன். அவர்களின் ராட்சசி இருக்கும் இடம் நோக்கி.
அங்கே சென்றடைந்தவர்கள் அவள் இருந்த நிலையைக் கண்டு அதிர்ந்து நின்றனர்.
மெதுவாக அவள் பக்கத்தில் சென்ற விவேகன், “தென்றல்” என வேகமாக அழைக்க, அலறி அடித்துக்கொண்டு திரும்பியவள் அவனைக் கண்டு “ஈ…” என இளித்து வைத்தாள்.
“அவன என்ன பண்ண அவன் ஏன் அழுதுட்டு இருக்கான்?” என விவேகன் வினவ, அப்போது அவளுக்கு முன் அந்த ஆடவன் பதில் வழங்கினான்.
“அண்ணா அக்காவ எதுவும் சொல்லாதீங்க என் மேல தான் தப்பு அவங்க ரொம்ப நல்லவங்க அண்ணா” என விவேகனிடம் கூறியவன்,
தென்றலிடம் திரும்பி “ரொம்ப நன்றி அக்கா உங்களை என் வாழ்நாள் முழுசும் மறக்க மாட்டேன்” என கண்ணீர் மல்க கூறியவன், அவர்களிடமிருந்து விடைப்பெற்று கொண்டு சென்றுவிட்டான்.
அவன் தென்றலை அக்கா என அழைத்த போது சிரிக்க துவங்கிய மித்ரன், அவன் சென்ற பிறகு,
தென்றலின் அருகில் வந்து,
“அட பிசாசே என்ன பண்ண அவன? அக்கான்னு சொல்லிட்டு போறான்?” என கூற அவளும் அவனுடன் சேர்ந்து சிரிக்கத் துவங்கிவிட்டாள்.
விவேகன் இவர்களை முறைத்துக் கொண்டு நிற்பதைப் பார்த்தவர்கள் அவர்களின் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் தட்டுத்தடுமாறி ஒருவழியாக சிரிப்பை நிறுத்தினர்.
தென்றலின் கையைப் பிடித்து இழுத்து சென்ற விவேகன், அவளை கேன்டீன் அழைத்து சென்று ஒரு இருப்பிடத்தில் அமர வைத்துவிட்டு அவனும் அவள் எதிரில் அமர்ந்தான்.
இவர்களைப் பின்தொடர்ந்து வந்த மித்ரன் தென்றலின் அருகில் அமர்ந்து கொண்டான்.
பிறகு விவேகன் தென்றலிடம் தனது கேள்விக் கணைகளைத் தொடுக்க துவங்கினான்.
“க்ளாஸ் டைம்ல எங்கள விட்டுட்டு வெளிய வராதனு எத்தன டைம் சொல்றது கேட்கவே மாட்டியா நீ?
என்னதான் நினைச்சுட்டு இருக்க? அந்த பையன் அக்கான்னு சொல்லிட்டு போறான். என்ன பண்ணி வச்ச அவன” என இவன் உச்சஸ்தானத்தில் கத்த, இந்த இரண்டு ஜந்துக்களும் மீண்டும் சிரிக்க துவங்கிவிட்டன.
மீண்டும் எந்தவிதமான சிக்கலிலும் இவள் சிக்கிவிட கூடாதே என்ற பயம் அவனுக்கு மட்டும் தானே தெரியும்.
இவர்களின் சிரிப்பு கண்டு மீண்டும் கோபமுற்ற விவேகன் அவர்கள் அமர்ந்திருந்த மேசையில் ஒரு அடி போட இரண்டும் கப்சிப் என வாயை மூடிக்கொண்டது.
மித்ரனிடம் திரும்பி ஒரு விரல் நீட்டி வாயைத் திறக்காதே என எச்சரித்தவன், தென்றலிடம் திரும்பி அவன் கேள்விகளுக்கு பதில் சொல்லுமாறு புருவங்களை ஏற்றி இறக்கினான்.
“சும்மா சும்மா என்னையவே திட்டாத விவு. அந்த வழுக்க மரம் க்ளாஸ் எடுக்க சொன்னா சும்மா சும்மா என்னையவே பார்க்கிறான். எனக்கு அது பிடிக்கல நீயும் அவரை எதுவும் கேக்க மாட்ட அதான் டெஸ்க்குக்கு அடியில புகுந்து வெளியே ஓடி வந்துட்டேன்”.
“அது நீ இந்த காலேஜ்ல சேர்ந்ததுல இருந்தே செய்ற ஒன்னு தான இதுல புதுசா என்ன இருக்கு அவன என்ன பண்ண அத மட்டும் சொல்லு” இதற்கு மேல் பொறுமையாய் கேட்க முடியாது என்னும் குரலில் விவேகன் கேட்க.
அந்த பொறுமையையும் சோதித்து பார்க்கும் விதமாக தென்றல் அவர்கள் கல்லுாரி கேன்டீனில்,
‘நான் எப்போது வேண்டுமானாலும் யார் தலையில் வேண்டுமானாலும் விழுந்து விடுவேன்’ எனும் செய்தியுடனும் ‘க்ளீச் க்ளீச்’எனும் சத்தத்துடனும் சுத்திக் கொண்டிருந்த சீலிங் ஃபேனைப் பார்த்தாள். அதுவும் தமிழ் சீரியலே தோர்த்து விடும் போன்ற அளவுக்கான ஸ்லோமோஷனில்.
அவளின் ஸ்லோமோஷனில் விவேகனின் மண்டை சூடேறிப் போக அவன் பல்லைக் கடிக்கும் சத்தம் பக்கத்து டேபுலில் இருந்தவர்கள் வரைக் கேட்டது.
இதற்கு மேல் பொறுமையாக இருந்தால் மூன்றாம் உலகப்போர் நடக்கும் சாத்தியக் கூறுகள் அதிகம் இருந்ததனால் மித்ரன் பேசத் துவங்கினான்.
“அடேய் இன்னுமாட உனக்கு புரில ஃப்ளாஷ் பேக் போகனுமாம் மேல பார்த்து தொலடா க்ளாஸ்க்கு டைம் ஆச்சி பசி வேற மூளையைத் திண்ணுடும் போல” என மித்ரன் அலுத்துக் கொள்ள,
இவ்வளவு நேரம் ஏச்சுக்கு பேச்சி பேசிக் கொண்டிருந்த இருவரும் கோரஸாக,
“ஓ… மூளை அப்படினு ஒரு வஸ்து உனக்கு இருக்கா?” என அவனைக் கேலி செய்து ஹைஃபை அடித்துக் கொண்டனர்.
“என்னை கலாய்க்கனும்னா மட்டும் ஒன்னு கூடிடுவீங்களே, சீக்கிரம் அந்த இத்துப் போன ஃப்ளாஷ்பேக்க சொல்லி முடி” என மித்ரன் தலையில் அடித்து கொண்டான்.
இப்போது மூவரும் ஸ்லோமோஷனில் ஃப்ளாஷ் பேக் நோக்கி பயணமாகினர்.
வகுப்பறையைக் கட்டடித்த பயம் சிறிதும் இல்லாமல் கல்லூரி வளாகத்தை அளந்து கொண்டிருந்தாள் தென்றல்.
அப்போது அவளை ஒரு அழகான ஆணின் குரல் அழைத்தது.
யாரோ எவரோ என்ற பயம் சிறிதும் இல்லாமல் “எவன் அவன்” என கேட்டவாறே திரும்பி பார்த்தாள்.
இதற்கு முன்னென்றால் இந்நேரம் பயந்து அலறி, மயங்கி சரிந்திருப்பாள். ஆனால் இப்போது அப்படி இல்லையே எல்லாம் அவன் செயல்…
எதிரில் நிற்பவனை ஏற இறங்க பார்த்தவள் மைண்ட் வாய்ஸில், ‘இவன எங்கையோ பார்த்த மாதிரியே இருக்கே யாரா இருக்கும் என யோசித்தவள்.
சரி என்னனு தான் கேப்போமே காசா பணமா நமக்கும் நேரம் போகும்’ என நினைத்துக் கொண்டு,
“சொல்லுங்க என்னையா கூப்டீங்க?” என அக்மார்க் ஆக்டிங் மாட்யுலேஷனில் தென்றல் கேட்க.
அதையும் உணராத அந்த அப்பாவி, “ஆமா தென்றல் உங்க கிட்ட ஒன்னு சொல்லனும்” என அந்த அழகான குரலுக்கு சொந்தமான ஆடவன் சொல்ல,
“அட என்னங்க நீங்க, ஒன்னு என்ன எவ்வளவு வேணுமோ சொல்லுங்க” என்றாள் டைம் பாஸ் ஆக வேண்டுமே என்ற நோக்கில்.
“நான் உங்கள ஒரு வாரமா லவ் பண்றேன் உங்க கிட்ட சொல்ல முடியல அந்த பசங்க எப்போதுமே உங்க கூடவே இருக்காங்க இப்போ தான் உங்கள தனியா பார்த்து பேச சந்தர்ப்பம் கிடைத்தது அதான்… என இழுத்தவன்.
ஐ லவ் யூ தென்றல்.” என முடித்தே விட்டான்.
இந்த உரையாடலின் நாயகியோ முகத்தில் எந்தவித உணர்ச்சிகளையும் காட்டாது.
‘அடங்கொப்புரானே மெரினா கூவத்துல தலை முழுக’ என அதிர்ச்சி ஆனவள் என்ன சொல்லி இந்த புறாவ ஓட்டலாம் என மனதில் கணக்கு போட துவங்கினாள்.
அப்போது தான் அவளுக்கு அவளின் நண்பன் ஒருவன் சொன்னது நினைவில் வந்தது.
‘அட இவனுக்கு பேய்னா டர்ருல இது போதுமே’ என நினைத்தவள். முகத்தை இப்போது சோகமாக வைத்துக் கொண்டு,
“எனக்கும் உங்கள புடிக்கும்ங்க.” என இவள் சொல்லவும்,
அந்த அப்பாவி கண்ணில் ஹார்ட்டின் எமோஜி வண்ணமயமாக சிரித்தது. சிறிது நேரத்தில் அதில் இவள் குச்சி வைத்துக் குத்தப் போவது தெரியல பாவம் யாரு பெத்த புள்ளையோ.
“ஆனா நான் உங்கள லவ் பண்றதுல ஒரு சிக்கல் இருக்குங்க. நான் யார லவ் பண்ணணும்னு என் அக்கா சொல்லுராளோ அவர தான் நான் லவ் பண்ணுவேன்” என இவள் சோகமாக சொல்லி முடிக்க.
“யாருங்க உங்க அக்கா சொல்லுங்க நான் அவங்க கிட்ட பேசுரேன்” என இவள் திட்டம் அறியாத அப்பாவி அதுவாகவே ஆஜரானது.
“உங்க பக்கத்துல தாங்க நிக்கிறா பேசுங்க அவளுக்கு கேக்கும்” என்றாளே பார்க்கலாம் பையன் அறண்டே போய்ட்டான்.
“என்னங்க சொல்றீங்க என் பக்கத்துலயா? இங்க தான் உங்களையும் என்னையும் தவிர வேறு யாருமே இல்லையே” என அவன் நடுக்கத்துடன் வினவ.
“அவ உங்க கண்ணுக்கு தெரிய மாட்டாங்க ஏன்னா அவ இப்போ உயிரோட இல்ல” என இவள் சொல்ல அவன் முகம் முற்றிலும் இருண்டு போனது.
அவன் முகத்தை மேலும் பார்த்தால் எங்கே தன்னையும் மீறி சிரித்து விடுவோமோ என்று பயந்து சோகமாகவே தலையை குனிந்து கொண்டவள்.
“அவ லவ் பண்ண பையன் இவள ஏமாத்திட்டான். அந்த சோகம் தாங்காம அவ செத்து போய்ட்டா. அவள மாதிரியே அவ தங்கை நான் ஆக கூடாதுனு அவ பேயா என் கூடவே இருப்பா.
என் கிட்ட யாருனா ப்ரொப்போஸ் பண்ண அவங்க கூடவே இருந்து அவங்கள கவனிப்பா” என இவள் சிறிது இடைவெளி விட
“என்னது கூடவே இருப்பாங்களா…?” என இவன் அதிர்ச்சி ஆக!
“ஆமாங்க அப்பறம் என் கிட்ட வந்து பையன் நல்லவனா, கெட்டவனானு சொல்லுவா அத வெச்சி தான் நான் ஓகே சொல்லுவேன்” என இவள் அதே சோகத்துடன் நிறுத்த.
“என்னங்க சொல்றீங்க இப்படி எல்லாம் கூட நடக்குமா?” இவன் சிறிது சந்தேகத்துடன் கேட்க.
“ஆமாங்க நீங்க ‘தில்லுக்கு துட்டு 2’ படம் பார்க்களையா அது மாதிரி தான் இது” என இப்போதும் அதை உண்மைப் போலவே இவள் கூற,
பேய் என எழுதி வைத்தாலே அதைப் பார்க்க பயம் கொள்பவன் பேய் படத்தை எப்படி பார்த்திருப்பான்.
அந்த படத்தைப் பார்த்த நண்பர்கள் கதைக் கூறி கேட்டிருக்கிறான். அதையும், இவள் ஐந்தே நிமிடத்தில் புணைந்த கதையையும் ஒப்பிட்டு பார்த்து அரண்டு போய் கண்கள் கலங்க நின்றிருந்தவனை விவேகனும் மித்ரனும் தான் காப்பாற்றினர்.
காதலைக் கூற வந்தவன் அக்கா என கூறி, விட்டால் போதும் என ஓடியே விட்டான்.
ஃப்ளாஷ் பேக் ஓவர் என இவள் எண்டு கார்ட் போட,
பெரும் மூச்சுடன் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
பின் எரிச்சலுடன் எழுந்த விவேகன்,
“இந்த வாய் இல்லன்னு வெச்சிக்கோயேன் உன்னை எல்லாம் நாய்”, என எதோ கூற வந்தவனை இடைமறித்து,
“என்ன நாய் கவ்விட்டு போய்டும்னு சொல்ல வரியா” எனக் கூறியவளைக் கண்டு முறைத்தவன்.
‘இல்லை’ என தலை அசைத்து விட்டு, “நாய் மோந்து கூட பார்க்காது.” என சிரிக்காமல் கூறிவிட்டு,
அவர்களுக்கான மதிய உணவை வாங்கி வர சென்று விட்டான்.
திரும்பி சென்றவனின் இதழ்களில் அவனுக்கே அவனுக்கான ட்ரேட் மார்க் புன்னகை. பெரிய பெரிய போராட்டத்திற்கு பிறகு அவளை சிறிதளவேனும் மாற்றி விட்ட பெருமிதம்.
இவன் இதே போல் கண்டிப்பாக இல்லாவிடில் மீண்டும் அவள் கூட்டிற்குள்ளேயே ஒடுங்க வாய்ப்புகள் அதிகம். ஆனால் எல்லா நேரங்களிலும் அவளிடம் அவனால் கண்டிப்புடன் நடந்து விட முடியுமா?
அவன் சென்ற பிறகு தென்றலை பார்த்து விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தான் மித்ரன்.
பிறகு விவேகன் மூவருக்கான உணவோடு வர, மூவரும் மதிய உணவை சில பல அரட்டைகளுடன் முடித்துக் கொண்டு தங்கள் அடுத்த வேலை வகுப்பிற்கு சென்றனர்.
யார் இவர்கள்? தெரிஞ்சிக்க ஆசையா?
வாங்க பார்க்கலாம்.
முதலில் கதையின் நாயகி தென்றல்.
தர்மராஜ் மற்றும் தேவகி தம்பதியரின் அருமைப் புதல்வி. தர்மராஜ் அவரின் அத்தை மகளாகிய தேவகியைக் காதலித்து மணந்துகொண்டார். அவர்களின் காதல் சின்னமாக தென்றல் மற்றும் அவளின் இளைய சகோதரி அக்ஷ்யா.
தர்மராஜ் சென்னையில் சொந்தமாக இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். இவர்களின் குடும்பம் நடுத்தர வர்க்கத்தினருக்கும் சற்று மேல்தட்டு நிலையிலுள்ள குடும்பம்.
தென்றல். அவளைப் பற்றி கூற வேண்டுமென்றால் பிரம்மனே பூலோகம் இறங்கி வந்து வடித்த சிலை எனலாம் அப்படி ஒரு அழகு.
இப்படி சொல்லத்தான் எனக்கும் ஆசை ஆனா என்ன பண்ண என் நாயகி அப்படி இல்லையே. நம்ம தென்றல், நாலே முக்கால் அடி உயரத்தில இருக்கும் எழுவது கிலோ தாஜ்மஹால்.
கோதுமையும் மைதாவும் கலந்த பொன்னிறம். இடையைத் தாண்டி வளர்ந்த கரு கரு கேசம். பார்ப்பதற்கும் பழகுவதற்கும் மிகவும் மென்மையானவள். சுருக்கமா சொல்லனும்னா, நம்ம தென்றல் ஒரு நெய் குழந்தை.
அடுத்து நம்ம சங்கமித்ரன்.
சங்கரன் மற்றும் மித்ராவதி அவர்களின் தவ புதல்வன். இந்த தம்பதியினர் ஒருவர் மீது ஒருவர் கொண்ட காதலினால் தங்கள் மகனுக்கு அவர்களின் பெயரை இணைத்து சங்கமித்ரன் என பெயரிட்டனர்.
மித்ரனின் சிறு வயதிலேயே அவனின் தந்தை இறந்துவிட, தாயின் அரவணைப்பில் வளரும் செல்லப்பிள்ளை. சரியான சேட்ட பிடிச்சவன். ஆறடி ஆடவன் வெள்ளையும் இல்லாத கருப்பும் இல்லாத தமிழ்நாட்டு கலர் மன்மதன். இவனும் கொஞ்சம் நம்ம தென்றல் மாதிரி தான் அமுல்பேபி. விளையாட்டுத்தனம் எவ்வளவு இருக்கோ அந்த அளவுக்கு பொறுப்பாகவும் நடந்து கொள்பவன்.
அடுத்து நம்ம விவேகன்.
விவேகன் பெயருக்கு ஏற்றார் போல எந்த ஒரு செயலிலும் வேகமாகவும் அதே நேரம் விவேகமாகவும் செயல்படக் கூடியவன். அவனைப் பெற்றவர்கள் யார்? எங்கிருக்கிறார்கள்? என இப்போது வரைக்கும் யாருக்கும் தெரியாது. பிறந்து சில நாட்களே ஆன நிலையில் ஆசிரமத்தின் வாயிலில் கைவிடப்பட்டு கண்டெடுக்கப்பட்ட கருப்பு வைரம்.
அன்று முதல் அந்த ஆசிரமமும் அதில் உள்ள மற்ற நபர்களும் தான் இவனுக்கு உறவு. சிறுவயதிலேயே தாய் தந்தையின் பாசத்தை இழந்ததாலேயோ என்னவோ எப்போதுமே அவன் முகத்தில் ஒரு இறுக்கம் நிறைந்திருக்கும்.
அவன் சிரிச்சா பேரழகன் தான் ஆனா சிரிக்க மாட்டான். ஆறடிக்கும் கூடிய உயரமும் கண்ணனின் கார் மேக நிறத்திலும் உரமேறிய தேகமும் உடையவன். அதுக்கு காரணமும் ஜிம் இல்ல தென்றல் அப்பா கூட இவனும் மெக்கானிக் ஷாப்ல வேலை செய்வான் அதனால் வந்த உடல் கட்டு.
பள்ளிப் பருவம் வரை ஆசிரமத்தில் இருந்தவன், இப்போது மித்ரன் மற்றும் அவன் தாயுடன் மித்ரன் வீட்டில் தங்கி உள்ளான் அவனின் ராட்சசி சொன்னதற்காக மட்டும்.
மூணு பேரும் ஒரு வழியா க்ளாஸ்க்கு போய் சேர்ந்துட்டாங்க. அடுத்து ஆங்கிலப் பாட பிரிவுக்கான மேடம் டெய்சி வர தென்றலும், மித்ரனும் தங்களின் ஜொள்ளு விடும் வேலையை தொடரும்போது, மேடம் சொன்ன செய்தி கேட்டு இருவருக்கும் தலையில் தென்றல் கையால் செய்த கேரட் அல்வா வந்து விழுந்தது போலாயிற்று. தலையில இடி விழுவதும் நம்ம தென்றல் செய்த அல்வா விழுவதும் ஒன்னுதாங்க.
அது என்னன்னா இன்னும் ரெண்டு வாரத்துல செமஸ்டர் எக்ஸாம் அதான் இந்த ஷாக்.
ஒரு வழியா டெய்சி மேம் அவங்க வந்த வேலைய முடிச்சுட்டு கிளம்ப, அடுத்தடுத்து பாட வேலைகளும் நடந்து முடிந்து எல்லோரும் வீட்டுக்கு போறதுக்கு மணியும் அடிச்சிட்டாங்க.
டெய்சி மேம் செமஸ்டர் எக்ஸாம்ன்னு சொன்னதும் கவுந்த தென்றல் மற்றும் மித்ரன் கப்பல்கள் இப்போதுதான் நிமிர்ந்தது.
விவேகன் முன் நடக்க, இவனுக்கு பின்னால் நான்கடி வித்தியாசத்தில் மித்ரனும், தென்றலும் ரகசியம் பேசிக் கொண்டே வீடு நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.
“ஏய் ராட்சசி உன்னால்தானே அவன் உம்முன்னு வரான் போய் பேசி அவனை சிரிக்கவை” என மித்ரன் தென்றலை விரட்ட,
இவளும் அவனுக்கு பளிப்பு காண்பித்து விட்டு அவர்களுக்கு முன்னால் நடக்கும் விவேகனிடம் ஓடி சென்றாள். நடந்து போன அவன் வேகத்துக்கு இவளால ஈடுகட்ட முடியாதே…
ஓடி சென்று விவேகனின் இட கையை பிடித்தவள் “விவு ப்ளீஸ் பேசு…” என கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
“விவு பேசேன் ப்ளீஸ் இனி அப்படி போக மாட்டேன். போனாலும் உன்னை கூட்டிட்டு போறேன்.” என கொஞ்சல் மொழியில் கெஞ்ச விவேகனின் கோபமும் தளர்ந்தது.
அவள் பிடித்து இருந்த அவனின் கையை அவளின் கையில் இருந்து உருவியவன் அவளின் தோளில் கைப் போட, புயல் வேகத்தில் ஓடி வந்து மித்ரனும் இவர்களுடன் இணைந்து கொண்டான்.
சிறிது நேரம் நடந்து சென்ற பிறகு மூவருக்கும் இடையிலான இறுக்கம் தளர்ந்து வழக்கம்போல வானரப் படையின் சேட்டைகளை செய்துக் கொண்டே நடக்கத் துவங்கினர்.
அப்போது விவேகன், மித்ரனிடம் திரும்பி,
“அது ஏன்டா நான் ஜாலியா இருக்கும் போது என்னை அடிக்கற, வம்பு இழுக்கிற, கடிக்கிற எல்லாம் பண்ற. நான் கோபமா இருக்கும்போது மட்டும் இவள என்கிட்ட தள்ளி விட்டுட்டு நீ அஞ்சடி பேக் வாங்குற ஏன்?” என சிரிப்பு கலந்த பானியில் வினவ,
அதற்கு மித்ரன், “அதில்லடா, நீ கோவமா இருக்கும் போது அவளை தவிர்த்து உன் பக்கத்துல யாரு வந்தாலும் கண்டிப்பா கண்ணம் பழுத்திடும். நான் வேற கொஞ்சம் செக்கச் செவேல்னு இருக்கேனா இன்னும் அதிகமாக பழுத்திடும். அதனாலதான் அவளை தள்ளி விட்டேன்” என்றான் சிரித்துக்கொண்டே.
அவன் பதிலைக் கேட்டு சிரித்த தென்றல், “விவரம் தான்டா நீ. இனி அவன் கோவமா இருக்கும்போது, அவன் பக்கத்தில் போக சொல்லு அப்போ இருக்கு உனக்கு” என ஒழுங்கு காட்டினாள்.
அவளின் முக பாவனையை கண்டு சிரித்த விவேகன், “சரி சொல்லுங்க ஏன் ரெண்டு பேரும் எக்ஸாம்ன்னு சொன்னதும் முகத்தை தொங்க போட்டிங்க” என வினவ,
“உனக்கே தெரியுமில்ல விவு எனக்கு கெமிஸ்ட்ரில பிராக்டிக்கலா அறிவிருக்க அளவு தியரில இருக்காதுனு. மேஜர் பேப்பர்ல மட்டும் அரியர் வெச்சிட்டேன்னா அம்மா அடி பிச்சிடுவாங்க” என தென்றல் பாவமாய் கூற,
அவள் கூறியதைக் கேட்டு அவளை முறைத்த மித்ரனும், விவேகனும் கோரசாக “யாரு நீ அரியர் வெச்சா டார்லிங் உன்ன அடிச்சிடும். நீ அதுக்கு பயந்துடுவ இத நாங்க நம்பனும் அதானே!” என நக்கலாக வினவ,
அவர்கள் கேட்ட பாவனையை கண்டு சிரித்தவள், “அடிக்க மாட்டாங்க. ஆனா வருத்தப்படுவாங்கல்ல அது வேணாம் விவு அதனால தான். எதுனா பண்ணேன். எனக்கு பயமா இருக்கு. புது காலேஜ் வேற, வந்த முதல ஃபெய்ல் ஆனா மானம் போய்டும்.” என புலம்பி தள்ள,
அவள் கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்த விவேகன் சிறிது நேரம் யோசிப்பது போல் பாவனை செய்தவன்,
“சரி விடுங்க சி.எஸ் டிபார்ட்மெண்ட்ல எனக்கு ஒரு புது ஃப்ரெண்ட் சிக்கி இருக்கான். அவன் நமக்கு கெமிஸ்ட்ரி சொல்லித்தரேன்னு சொல்லி இருக்கான். நாளைக்கு அவன பாக்கலாம். இப்ப வீட்டுக்கு போகலாம் வாங்க” என கூறி முன் நடக்க,
அவன் பின்னே ஓடியவரே, “அதுயாரு எங்களுக்கு தெரியாம உனக்கு ஃப்ரெண்டு? அதுவும் சி.எஸ் டிபார்ட்மெண்ட் பையன் கெமிஸ்ட்ரி சொல்லித் தருவானா?” என தென்றல் அலுத்துக் கொள்ள,
“ஆமா அவன் நல்லா படிக்கிற பையன். டுவல்த்ல அவனும் சையின்ஸ் குரூப் தான படிச்சிருப்பான். அதனால ஒன்னும் ப்ராப்ளம் இல்ல நம்பி கத்துக்கலாம்” என அவளை இழுத்துக் கொண்டு வீடு நோக்கி சென்றான் விவேகன்.
இவள் விவேகன் உடன் இவ்வளவு சண்டை முட்டிக் கொண்டிருக்கும் போது, மித்ரன் இவர்களை கண்டு இளித்து கொண்டே வந்தான். அவனை கூர்ந்து நோக்கிய பின்பு தான் தெரிந்தது, அவன் இளித்துக் கொண்டு வந்தது இவர்களைப் பார்த்து அல்ல இவர்களுக்கு முன் நடக்கும் அழகான பெண்களைப் பார்த்து என.
அவனை தீ பார்வை பார்த்த தென்றல் “ஏன்டா வளந்த தடிமாடு உனக்கும் சேர்த்து தானடா நான் இவன்கிட்ட கத்தி கூப்பாடு போட்டு இருக்கேன். உனக்கு என்ன அங்க பார்வை வந்து இவன்கிட்ட என்னன்னு கேளு இல்ல ஈவினிங் சாப்பிட பானிபூரி கட்டு” என மிரட்ட அவனும் பானிபூரி கிடைக்காது என பயந்து கொண்டு அவளுடன் சென்றான்.
“டேய் யாருடா அது புது ஃப்ரெண்டு? பேராச்சும் சொல்லிட்டு போயேன்டா. இவ என்ன போட்டு கொலை பண்ணிடுவா போலிருக்கே” என மித்ரனும் தென்றலுக்கு பரிந்து பேச,
விவேகன் இவர்களைப் பார்த்து திரும்பி “அவன் பேருதான சொல்லிட்டு போச்சு.” என இலகுவாக கையை நெட்டி முறித்தவாறே,
இவர்களைப் பார்த்து, “அவன் பேரு தமிழ்.” என்றான்.
“தமிழா” என இரண்டு ஜந்துக்களும் கோரசாக யோசிப்பது போல் பாவனை செய்ய,
“ரொம்ப யோசிக்காதீங்க மூளை உருகி மூக்கு வழியா வந்திடபோகுது” என இவர்களைக் கேலி செய்தவன்,
“ஆமா தமிழ்தான்.” என்றான் அலட்சியமான தோள் குலுக்களுடன்.
“முழு பேரே தமிழ் தானா?” என தென்றல் சந்தேகமாக வினவ,
‘இல்லை’ என தலையசைத்த விவேகன் “அவன் முழு பேரு…” என பலமாக இழுத்தவன்
“தமிழ் நிலவன்” என அவன் பெயரை சொல்லி முடித்தான், அவனை முதலில் சந்தித்த நினைவை மனதில் நிறுத்தி மென்மையாக சிரித்தவாறு.
அவன் சிரிப்பதை உலகத்தின் எட்டாவது அதிசயமாக பார்த்த இரண்டு ஜந்துக்களும், ‘என்னடா இவனே சிரிக்கிறான் அவன் பேர சொல்லிட்டு!’ என தலையை சொறிந்தவாறு அவனைப் பின்தொடர்ந்து சென்றனர்.
தென்றல் பேசும்…