அத்தியாயம் 08
“டேய் விடுடா! விடு”
இடுப்பை வளைத்து மரக்கட்டையைத் தூக்குவது போல கிடைவாக்க்கில் அவளது உடல் இருக்கும் படி வெளியே சென்ற ஆராதனாவை அவள் கத்தக் கத்த உள்ளே தூக்கிவந்த பத்ராவைப் பார்த்துப் பதறித்தான் போயினர் ஹாலில் இருந்த அனைவரும்.
ஹாலினுள் வந்து அவன் அவளை இறக்கி விட்டது தான் தாமதம் பளார் என்று அவனது கன்னத்தில் பதிந்தது ஜனார்த்தனத்தின் விரல்கள். அடித்தாலும் அசையாமல் இருந்தவனைப் பார்த்து
“காட்டு மிராண்டியாடா நீ? ஒரு பொண்ணை இப்பிடித்தான் கையாளுவாங்களா? ச்சே! இப்படியாடா வளர்த்து வைச்சு இருக்கேன் உங்க ரெண்டு பேரையும்? ஒருத்தன் ஒரு பொண்ணைக் கடத்திட்டு போறான். இன்னொருத்தன் என் கண்ணு முன்னாடியே இன்னொரு பொண்ணைத் துன்புறுத்துறான்” என்று கத்தியவரை சலனமே இல்லாமல் பார்த்தவன்
“பாஸ் இவங்களை வெளியில அனுப்பக் கூடாது என்று சொல்லி இருக்கார்” என்று அமர்த்தலாகவே பதிலுறுத்தான்.
அவ்வளவு கத்திய பின்னும் ரோபோ போல பதிலளித்தவனைப் பார்த்து ச்சீ என்று ஆனது அவருக்கு. அவரின் நிலை உணர்ந்து அவரின் தோள்களில் கைகளைப் பதித்து அழுத்திய அஷ்வஜித் மாதவியின் முன்னால் சென்று மண்டியிட்டு அமர்ந்தான்.
“ஆன்டி! நீங்க யார்? என்ன செய்தீங்க?இது எதுவுமே எனக்குத் தெரியல. ஒரு பொண்ணை தவறான கண்ணோட்டத்தில நான் பார்த்ததே இல்லை. அதுக்குக் காரணம் என் அண்ணாவோட வளர்ப்பு!! அப்படிப்பட்டவர் இப்போ உங்க பொண்ணைத் தன்னோட கட்டுப்பாட்டுல வைச்சு இருக்கிறார் என்றப்போ எனக்கே அதிர்ச்சியா தான் இருக்குது. நான் பேசுறேன் அண்ணன் கிட்ட. கொஞ்ச நாள் பொறுத்துக்கோங்க. எங்களால ஒருத்தங்க வாழ்ந்தாங்க என்று தான் இருக்கனும். அழிந்து போனாங்க என்று இருக்கக் கூடாது” இறுதி வரிகளைக் கூறும் பொழுது அஷ்வஜித்தின் கண்கள் பத்ராவையே நோக்கியது.
மாதவி தயக்கமாக தலையசைக்கவும் எழுந்து பத்ராவை வெட்டவா குத்தவா என்று முறைத்துக்கொண்டு இருந்த ஆராதனாவின் அருகே சென்றவன்
“மிஸ்?” என்று இழுத்தான்.
“ஆராதனா” பல்லைக் கடித்தவாறு பதில் வந்தது.
“ஆல்ரைட்! மிஸ்.ஆராதனா! உங்க நட்போட வலிமையைப் பார்த்தால் உண்மையிலேயே ஆச்சர்யமா இருக்குது. உங்க பிரெண்ட் என் அண்ணன் கூட இருப்பது யார் யாருக்கெல்லாம் இப்போ தெரியும்?” புருவம் சுருக்கியவள்
“இங்க இருக்கிறவங்களுக்கு..” என்று தயக்கமாக இழுத்தாள்.
“ரைட்! இப்போ பேப்பர்ல உங்க பிரெண்ட் தன்னோட காதலனோட போய் இருக்காங்க என்று போட்டு இருக்குது. இப்போ நீங்க பொலிஸுக்கு போய் விஷ்வா அண்ணா அவங்களைக் கடத்தி வைச்சு இருக்கிறார் என்று சொன்னா அது வேற மாதிரி உங்க பிரெண்டோட வாழ்க்கையைப் பாதிக்கும் என்று உங்களுக்குத் தெரியலயா?”
“என்ன மிரட்டுறீங்களா? இல்ல உங்க அண்ணன காப்பாத்தப்பார்க்கிறீங்களா?”
“ஏங்க?! மிரட்டுறவன் இப்படித்தான் பதமாப் பேசிட்டு இருப்பானா? உங்க ப்ரெண்ட் ஒரு நாள் முழுக்க என் அண்ணனோட கஸ்டடியில இருந்து இருக்காங்க. பிடிச்சவனோட போறது வேற! இது முள் மேல விழுந்த சேலையைப் பதமா எடுக்கா வேண்டிய நேரம். அன்ட் அண்ணனுக்கு போலிஸ் லெவல் இல்லை, மினிஸ்டர் லெவல்ல பவர் இருக்கு! எப்படியும் நீங்க வெளியில போக விடமாட்டாங்க இவங்க. அதுக்கு பதிலா எங்களோட கெஸ்ட்டா கொஞ்ச நாள் இருங்க ப்ளீஸ். உங்க பிரெண்டோட சேர்ந்து உங்க ரெண்டு பேரையும் காணல என்றதுமே உங்க மேல சந்தேகம் வந்து இருக்கும்ல எல்லோருக்கும்? இப்போ உங்களையும் தாங்க தேடிட்டு இருப்பாங்க! புரிஞ்சுக்கோங்க..இங்க நீங்க சுதந்திரமா இருக்கலாம். உங்க ப்ரெண்டை உங்க கிட்ட சேர்க்க வேண்டியது என்னோட பொறுப்பு”
அஷ்வஜித்தின் பேச்சின் நியாயம் ஆராதனாவிற்கும் புரியவே செய்தது. அமைதியாக யோசித்தவள் மெல்ல சென்று மாதவியின் அருகில் அமர்ந்து கொண்டாள்.
அமந்ததுமே தன்னருகில் சோர்ந்து போய் இருந்த மாதவியைத்திரும்பிப் பார்த்தவளுக்கு இப்போது அவரது மனநிலை எப்படி இருக்கும் என்று புரிந்தது. அவர் இவர்களைக் கோவமாக பேசாததே ஏதோ ஒரு பழைய கணக்கின் விடைதான் இப்பொழுது நடக்கும் சம்பவங்கள் என்றும் புரிந்தது. ஆனால் அதற்குப் பலியானது மிருணாளினியின் வாழ்க்கையல்லவா. ஒரு பெருமூச்சுடன் மாதவியின் கைகளை அழுந்தப் பற்றிக்கொண்டாள்! தான் இருக்கின்றேன் என்பது போல.
********
பசித்துத் தொலைத்தது மிருணாளினுக்கு. முன் தினம் விடியலில் உண்டது. வீராப்பாக அந்தப்பெண் அளித்த உணவைத்தட்டி சாப்பாடே கிடைக்காமல் செய்தாகி விட்டது. இப்பொழுது பசித்துத் தொலைக்கிறதே!! பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்று பெரியவர்கள் சும்மாவா சொல்லி இருக்கின்றார்கள்.
அறையில் இருந்து மெல்ல வெளியேறி கீழிறங்கியவள் ஹாலை நோக்கினாள். யாருமே இல்லை! கிட்சன் பக்கம் சென்று என்ன இருக்கின்றது என்று பார்ப்போமா? ஆசைகாட்டிய மனதை ‘த்தூ’ என்று துப்பி அடக்கியவள் மெல்ல வெளியேறி தோட்டத்தின் பக்கம் நடக்கலானாள்.
தோட்டம் என்னவோ அழகாகத் தான் இருந்து தொலைத்தது. ஆனால் அதனை இரசிக்கும் நிலையில் இவள் இருந்தால் அல்லவோ? சலிப்புடன் பின்புறம் இருந்த நீச்சற்குளத்தினருகே சென்றவள் அங்கே வெண்ணிற மேசையைச் சுற்றிப் போடப்பட்டிருந்த வெண்ணிற சாய்வான மூன்று கதிரைகளில் ஒன்றில் அமர்ந்து வயிற்றைச் சுற்றி கைகளை இட்டுக்கொண்டாள் பசியை அடக்குவது போல.
அப்படியே விழிமூடி எவ்வளவு நேரம் இருந்தாளோ தெரியாது. “க்கும்” என்ற கனைப்புச் சத்தத்தில் பட்டென விழிகளைத் திறந்தவள் முன்னே நின்ற விஷ்வஜித்தைக் கண்டு முறைக்கக் கூட சக்தி இல்லாதவளாக விழிகளை மூடிக்கொண்டாள்.
“என்ன மிருணாளினி! பசியோட உச்சத்தில இருக்கீங்க போல? சாப்பாட்டோட அருமை இப்போவாச்சும் தெரிஞ்சு இருக்கனுமே?” அவனின் பேச்சில் சுள்ளெனக் கிளம்பிய கோவம் பசிமயக்கத்தையும் தாண்டி வீறுகொண்டு எழ சினத்துடன் விழிவிரித்து அவனைப் பார்த்தவள்
“சாப்பாட்டோட அருமை எனக்கு தெரிஞ்சுடுச்சு மிஸ்டர்! அதேபோல ஒரு பெண்ணோட அருமை உனக்கும் சீக்கிரமே தெரிய வரும்” அவளின் சினப்பேச்சில் புருவம் உயத்தியவன்
“ஐ சீ!! நான் தெரிஞ்சுக்க ஆவலா இருக்கேன் மிஸ்!! இப்போ நான் உன்னைப் பார்க்க வந்தது இந்தப் பேப்பர்ஸ்ல சைன் வாங்க”
“எ..என்..என்ன பேப்பர்ஸ்?” திக்கியவளைப் பார்த்து நக்கலாக சிரித்தவன்
“உன்னோட அப்பா! அதான் அந்த இடியட் பிரகாசம்“
“ஹேய்!!” சீறியளைப் பார்த்தவனின் விழிகளில் என்ன இருந்தது? குரல் அப்படியே அமிழ்ந்து போனது தொண்ண்டைக் குழிக்குள்
“அவர் என்னோட அப்பா! அவரை மரியாதை இல்லாம பேசாத“
“ஹாஹா! அவன் என்னோட எதிரி! அவனுக்கு மரியாதை கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்ல” என்றபடி கையில் இருந்த காகிதங்களை நீட்டியவாறே மற்றைய கதிரையொன்றில் அமர்ந்தான்.
காகிதங்கள் மேல் பார்வையோட்டியவள் நிமிரும்பொழுது ‘அவ்வளவு தானா நீ?’ என்ற பார்வையை தன் மீது வீசுவது ஏனோ விஷ்வஜித்திற்குப் பிடிக்கவில்லை! பல்லைக் கடித்தவன்
“ம்ம்! சைன் பண்ணு” என்று உந்தவும்
“ச்சே!! போயும் போயும் என்னோட கம்பனிப் பங்குகளுக்காகவா இவ்வளவும்? வந்த அன்று கேட்டு இருந்தாலே உன் பெயரில் எழுதி உன் முகத்தில விட்டெறிஞ்சு இருப்பேனே!!”
விழிகள் சிவக்க அப்படியே சற்று முன்னே சாய்ந்தவன் “யாருக்குடி வேணும் உன் அப்பனோட சொத்து? உன்னோட பங்கு? உன் அப்பனோட சொத்து என்ன என்று உனக்குத் தெரியுமா? முதல்ல இதெல்லாம் அவனோட சொத்தே இல்லை தெரியுமா? அவன் இதையெல்லாம் எப்படி உருவாக்கினான் தெரியுமா? அப்பனாம் அப்பன்! உனக்கு விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இப்போ போடு கையெழுத்தை! இல்லையென்றால்” என்றபடி அவள் முகத்தி சில புகைப்படங்களைத் தூக்கி எறிந்தான்.
புகைப்படத்தின் விளிம்பொன்று விழியைச் சற்றுப் பதம் பார்த்துக் கீழே விழ கண்ணில் எழுந்த எரிச்சலில் மென்விரல்களால் விழிகளைத் தேய்த்துக்கொண்டவள் மற்றைய கையை நீட்டி விழுந்திருந்த புகைப்படம் ஒன்றை எடுத்தாள். அதில் காலையில் அழுதுகொண்டு இருந்த மாதவி மற்றும் அவர் அருகில் அமர்ந்திருந்த ஆராதனாவின் விம்பங்கள் இருக்கவும் விஷ்வஜித்தை நிமிர்ந்து பார்த்தவள்
“உனக்கு இரக்கமே இல்லையா? இப்படி என்னைப் போட்டு வதைக்கிறியே!” என்று தவிப்பாக கேட்டாள்.
கதிரையில் இருந்து எழுந்து ட்ராக் சூட்டின் பாக்கெற்றில் கைகளை விட்டு நிமிர்ந்து நின்றவன்
“இரக்கமா? ஹாஹா!! அதுவும் உன்னோட குடும்பத்தின் மேலா? ஃபன்னி கர்ள்! உங்க குடும்பம் செய்த அநியாயத்துக்கு அடுத்தவனா இருந்து இருந்தா இப்போ என்னை எதிர்த்துக் கேள்விகேட்கும் நிலையில் உன்னை வைச்சு இருந்து இருக்க மாட்டான். எதிர்த்து வாதம் செய்யாம சைன் பண்ணு! இல்ல அவங்க ரெண்டு பேரையும் என்ன செய்வேன் என்றே எனக்குத் தெரியாது“
விழிகளில் வழிந்த நீரை அழுந்தத்துடைத்தவள் அவன் கொடுத்த பத்திரத்தையும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்த பேனையையும் தன்புறமாக இழுத்து மளமளவென கையெழுத்திட்டாள். ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் கையெழுத்திடுபவளை வினோதமாகப் பார்த்த விஷ்வஜித் அவள் நிமிரவும் மீண்டும் முகத்தை இறுக்கிக் கொண்டான்.
“இந்தா வைச்சுக்கோ! இன்னும் என்ன தான் நான் செய்யனும் என்று சொல்லி முடிச்சுடு! அவங்க இரண்டு பேருக்கும் எதாவது ஆச்சு” ஒரு கண் புகைப்படம் பட்டதில் சிவந்து இருக்க மறு கண் வெண்மையாக இருக்க காளியைப் போல் முறைத்துக் கொண்டு இருந்தவளைப் பார்க்கையில் சுவாரஸ்யமாக இருந்தது போலும் அவனுக்கு.
எதுவுமே பேசாமல் ஒரு நிமிடம் அவளைப் பார்த்தவன் பட்டென்று பத்திரங்களைப் பறித்துக் கொண்டு திரும்பி நடக்கலானான்.
“பத்ரா! ஏற்கனவே வாங்கிய எட்டு வீதப் பங்குகளோட இப்போ ஐம்பது வீதப் பங்குகளும் என்னோட பெயரில இருக்கு! இப்போ அவனோட வைர சாம்ராஜ்ஜியத்தை ஆட்டி வைக்கப் போறவன் நான்! அருணகிரியோட கான்ட்ராக்ட் கிடைச்சுடுச்சு ல?” அவன் யாருடனோ கைபேசியில் பேசியவாறு செல்லும் ஒலி மெல்ல மெல்லத் தேய்ந்து மறைய ஏன் இவ்வளவும் என்று புரியாமல் அப்படியே மீண்டும் விழிகளை மூடிக்கொண்டாள்.
“அம்மா!”
சிறிது நேரத்தில் யாரோ அழைக்க ‘அய்யோ என்னைத் தனியாக விடுங்களேன்‘ என்று கத்த வேண்டும் போல இருந்தது மிருணாளினுக்கு! அதற்கும் தெம்பின்றி விழிகளைப் பிரித்தவள் தன்முன்னால் ஜூஸ் அடங்கிய குவளையை நீட்டிய படி நின்ற மல்லிகாவை ஆச்சர்யமாக நோக்கினாள்.
“இதைக் குடிங்கம்மா” இன்முகமாக நீட்டியவளைப் பார்த்து மதியம் தான் செய்தது நினைவில் வர சங்கடமாக அசைந்தவள் உடலின் சோர்வை எண்ணி குவளையைப் பற்றி மளமளவென பழற்சாற்றை அருந்தி முடித்தாள்.
பருகிய வேகத்திலேயே அவளது பசி தெரிய முன்னால் இருந்த தட்டைக் காட்டியவள் “கொஞ்சமா சாப்பிடுங்கம்மா! இடியாப்ப பிரியாணி தான். உடம்புக்கு தெம்பா இருக்கும்“
தட்டில் இருந்த வாசனையே அவளை வா வா என்று அழைக்க விளக்கம் தந்த மல்லிகாவை விநோதமாகப் பார்த்தவள்
“உன்னோட முதலாளிதான் எனக்கு சாப்பாடு கொடுக்கக் கூடாது என்று சொன்னார்ல? எப்படி அவர் பேச்சை மீறிக் கொண்டு வர்ற?”
“அய்யா தான்மா இப்போ உங்களுக்கு சாப்பாடு கொடுக்கச் சொல்லிட்டுப் போனாரு! அய்யா நல்லவங்கம்மா! சாப்பாட்டுல அடிக்க மாட்டார் என்று எனக்குத் தெரியும். அதுனால தான் உங்களுக்காக உணவை ரெடி பண்ணி வைச்சு பார்த்துட்டே இருந்தேன். நினைச்சது போலவே சொல்லிட்டாருமா! சாப்பிடுங்கம்மா“
‘க்கும்! உங்க அய்யா? நல்லவரு?’ மனதுக்குள்ளேயே நொடித்துக் கொண்டவள் அவனோடு சண்டை பிடிக்கவாவது தெம்பு வேண்டும் என்று எண்ணி மல்லிகா கொண்டு வந்த உணவை ஸ்பூனாலேயே அள்ளிச் சாப்பிட்டு முடித்தாள்.
உணவு உண்டு நீர் அருந்தி ஆசுவாசமாக அமர்ந்தவள் முன்னால் சற்று சூடான வெந்நீர் அடங்கிய குவளையை வைத்த மல்லிகா “அம்மா கொஞ்சம் நிமிர்ந்து அடி பட்ட கண்ணைக் காட்டுங்க ஒத்தனம் கொடுக்கனும்” எத்தனை ஆச்சர்யங்களைத் தான் ஒவ்வொரு நாட்களும் அவளுக்குக் காட்டுகின்றது.
“உனக்கெப்படித் தெரியும்?”
“அய்யா தான் மா அதையும் சொன்னாரு” என்ற படி மீண்டும் அய்யா புராணத்தைப் பாடியபடி கண்களில் ஒத்தனம் கொடுத்தவளைத் தடுக்கத் தோன்றாது சிலையாக அமர்ந்து இருந்தாள் மிருணாளினி ‘எப்படிப்பட்ட மனிதன் இவன்?’