அத்தியாயம் 3
கீச்… கீச்… என்ற பறவைகளின் ரீங்காரத்தில் கண்விழித்தவள் எழுந்து கதவை திறந்துகொண்டு வெளியே வந்தாள். சில்லென்று வீசிய குளிர் காற்று அவள் தேகத்தை சிலிர்க்க வைக்க, தோளின் ஒரு பக்கம் தொங்கிய சால்வையை நன்றாக இழுத்து போர்த்திக்கொண்டு தன் எதிரே பச்சை பசேலென விரிந்திருந்த தேயிலை பாத்திகளை கண்டவளுக்கு மனதில் புத்துணர்ச்சி தோன்றியது.
அந்த அழகான காலை சூழலை சுகமாய் அனுபவித்துக்கொண்டே சுற்றி பார்க்க, தேயிலை பாத்திகளை தாண்டி உயர்ந்து வளர்ந்திருந்த மரங்கள், அந்த மரங்களிடையில் தெரிந்த அருவி,என அனைத்தும் அவளை வா என்று அழைப்பதை போல தோன்ற, மெல்ல அந்த மரங்கள் அடர்ந்த காட்டை நோக்கி நடக்க துவங்கினாள்.
‘யாருமற்ற வனாந்தரம் அச்சுறுத்தும் என்று யார் சொன்னது? எத்தனை விதமான மரங்கள்… செடிகள்… பூக்கள்…’ என்று நினைத்தவள், கண் மூடி ஆழ்ந்து மூச்சு இழுத்து அந்த காட்டுப்பூக்களின் வாசனையை முகர்ந்தாள். பரபரப்பான நகர வாழ்க்கையுடன் இந்த இயற்கை அழகை ஒப்பிடும் போதும் இது ‘பூலோக சொர்க்கம்’ என்று அவளுக்கு தோன்றியது.
தன்னை மறந்து, வால்பாறையின் இயற்கை அழகை கண் மூடி ரசித்தபடி நின்று இருந்தவளை, “சத்யா…. சத்யா!!!!”என்று அழைக்கும் சத்தம் கேட்க. மெல்ல கண் திறந்து, “நான் இங்க இருக்கேன் கிருஷ்ணா.” என்றாள்.
இவள் குரல் கேட்டதும் வேகமாய் அவள் அருகில் வந்த கிருஷ்ணா, அவளை அணைத்துக்கொண்டு, “தேங்க் காட்!!! உனக்கு ஒண்ணுமில்ல. நான் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா.”என்று பதறியவன், பின், “இப்படியா சொல்லாம கொள்ளாம தனியா வருவ??” என்று கடிந்து கொண்டான்.
அவன் கோபத்துக்கு பின் இருக்கும் அக்கறையை உணர்ந்தவள் புன்னகையுடனே, “சாரி பா…. எனக்கு சீக்கிரமே முழிப்பு வந்துருச்சு. உன்னை பார்த்தால் நீ நல்லா இழுத்து போர்த்தி தூங்கிட்டு இருந்த. சரி உன்னை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு எழுந்து வெளியே வந்தேன். அப்பறம் இயற்கையை ரசிச்சுக்கிட்டே இங்க வந்துட்டேன்.” என்றாள்.
வெகு நாட்களுக்கு பிறகு சத்யா முகத்தில் தெரிந்த மலர்ச்சியை கண்ட கிருஷ்ணா தன் கோபத்தை கைவிட்டுவிட்டு, “அப்படிங்களா மேடம்!!!! அப்படி இந்த அத்துவான காட்டுல என்ன இருக்குன்னு சொன்னிங்கன்னா நானும் ரசிப்பேன்.” என்று கேட்க.
“என்ன இல்ல கிருஷ்ணா??? எந்த பக்கம் திரும்பினாலும் பச்சை பசேலுன்னு கண்ணு குளிர்ச்சியா தேயிலை தோட்டம், அடர்ந்து வளர்ந்த மரங்கள், அதில் வசிக்கும் பறவைகள், விதவிதமான செடிகள், அதில் பூக்கும் பூக்கள் வாசமும் மூலிகை வாசமும் கலந்து நாம் சுவாசிக்கும் காற்றில் வீசும் அற்புதமான நறுமணம். இன்னும்…..”என்று ஏதோ சொல்ல போனவளை தடுத்து.
“ஹ்ம்ம…… போதும் போதும், லிஸ்ட் பெருசா போயிட்டே இருக்கு…இன்னைக்கு இது போதும். மீதியை நாளைக்கு நீயும் நானும் சேர்ந்து வந்து ரசிச்சுக்கலாம் இப்போ கேம்பக்கு போலாம் வா” என்றபடி கை நீட்ட , சத்யா புன்னகையுடனே அவன் கை பிடித்துக்கொண்டு அவனுடன் நடந்தாள்.
கிருஷ்ணா, முழு பெயர் வம்சி கிருஷ்ணா. சென்னையில் பிரபலமான மருத்துவமனையில் மன நல மருத்துவராக வேலை செய்கிறான். தன் மருத்துவமனை வால்பாறையில் உள்ள பழங்குடி மக்களுக்காக ஏற்பாடு செய்திருந்த மெடிக்கல் கேம்பை சாக்காக வைத்து சத்யாவின் மன மாற்றத்துக்காக தன்னுடன் இங்கு அழைத்து வந்தான். இங்கு வந்த நாள் முதலாய், வால்பாறையின் அழகு சத்யாவை வெகுவாக கவர்ந்து இருந்தது.
இந்நிலையில் மருத்துவ குழு தாங்கள் வந்த வேலையை முடித்துக்கொண்டு கிளம்ப நினைக்க, அந்த பழங்குடி மக்கள் இவர்களை தங்களது காவல் தெய்வத்துக்கு நடக்கும் திருவிழாவில் கலந்து கொள்ளுமாறு வற்புறுத்த. அவர்களின் வேண்டுகோளை மறுக்க முடியாமல் அனைவரும் ஒப்புக்கொண்டனர். இந்த இடத்தை விட்டு செல்ல மனமே இல்லாமல் இருந்த சத்யா , இதை கேட்டதும் இன்னும் சில நாட்கள் இங்கே இருக்கலாம் என்று நினைத்து மகிழ்ந்து போனாள்.
அதனால் தான் இங்கு இருக்க போகும் இந்த கொஞ்ச நாளுக்குள் இந்த இயற்கை அழகை முடிந்த வரை அனுபவிக்க வேண்டும் என்று எண்ணி காலை கண்விழித்ததும் இயற்கையை ரசிக்க கிளம்பிவிட்டாள். அத்தோடு, தான் ரசிதத்தை எல்லாம் கிருஷ்ணவிடம் சொல்லிக்கொண்டே வந்தாள். இருவரும் கேம்பக்கு வரும் போது காலை உணவு தயாராகி இருக்க. இருவரும் குளித்துவிட்டு வந்து சாப்பிட்டனர். அப்போது கிருஷ்ணாவின் ஃபோன் அடிக்க, சத்யாவின் அன்னை ஸ்ரீவித்யா தான் அழைத்திருந்தார்.
“ஹலோ அத்தை…. சொல்லுங்க” என்றான் கிருஷ்ணா.
“ஹலோ கிருஷ்ணா…. எப்படி இருக்க?? சத்யா எப்படி இருக்கா??” என்று கேட்டார் ஸ்ரீவித்யா.
“நாங்க நல்லா இருக்கோம் அத்தை. நீங்களும் மாமாவும் எப்படி இருக்கீங்க??”
“நாங்களும் நல்லா இருக்கோம் கிருஷ்ணா. என்ன நீங்க ரெண்டு பெரும் இல்லாமல் தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு. நீங்க எப்போ கிளம்பிறீங்க???” என்று கேட்டார் ஸ்ரீவித்யா.
“அது நாங்க வர இன்னும் ஒரு வாரம் ஆகும் அத்தை.” என்று கிருஷ்ணா சொல்ல.
“என்ன பா இப்படி சொல்லற. இன்னைக்கு கிளம்பிடுவேன் தானே சொன்ன.”
“இங்க ஏதோ திருவிழாவாம் அத்தை, எங்களை கண்டிப்பா கலந்துக்கனும்ன்னு கேட்டுக்கிட்டாங்க அதுனால தான். ஆனா போற போக்கை பார்த்த உங்க பொண்ணு இங்க இருந்து கிளம்ப மாட்ட போல.”
“ஏன்??”
“அதை உங்க பொண்ணு கிட்டயே கேளுங்க.” என்று சொன்ன கிருஷ்ணா கைபேசியை சத்யாவிடம் கொடுத்தான்.
கிருஷ்ணவை செல்லமாக முறைத்துக்கொண்டே பேச துவங்கிய சத்யா, தான் பார்த்ததையும் ரசித்தைதையும் சிறு குழந்தை போல அன்னையிடம் பகிர்ந்துகொள்ள துவங்கினாள்.
*****************
மிவா பங்களா…..
சமையல் அறையில் காலை உணவை தயார் செய்துகொண்டு இருந்தார் வசுமதியும் தேவகியும். வசுமதி அவர்களுக்கு உதவிக்கொண்டிருந்த பாவனாவிடம், “பவிம்மா எல்லாத்தையும் எடுத்து டைனிங் டேபிளில் வைச்சுட்டு நீ போய் எல்லாரையும் சாப்பிட கூப்பிடு.” என்று சொன்னார்.
“சரி அத்தை” என்று சொல்லிவிட்டு பாவனா செல்ல.
“எல்லா அர்ரெஞ்ச்மெண்ட்ஸும் கர்ரெக்டா இருக்கான்னு நல்லா செக் பண்ணிடு கதிர். விஐபி’ஸ் வரதுனால ஹோட்டல் மானேஜ்மென்ட் கிட்ட சொல்லி செக்யூரிட்டி டைட் பண்ண சொல்லு. அதே மாதிரி ஃபைனல் கெஸ்ட் லிஸ்ட் ரெடி பண்ணி வை நான் வந்து செக் பன்றேன்.” என்று தனது பி.ஏ கதிரிடம் போனில் உத்தரவிட்ட படி வந்து சாப்பிட அமர்ந்தார் மித்ரெஷ்.
இன்று மாலை நடக்கவிருக்கும் அபி – பாவனா திருமண வரவேற்ப்புக்கு தான் இத்தனையும். இது முழுக்க முழுக்க தொழில் வட்டத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் ஏற்பாடு செய்யபட்டதால் அனைத்தும் மித்ரெஷே கவனித்துக்கொண்டார்.
வசுமதி உணவு பரிமாற துவங்க, “பசங்களும் வரட்டும் மதி” என்ற மித்ரெஷ் போனில் எதையோ பார்த்துக்கொண்டு இருந்தார்.
“ஏங்க உங்க கிட்ட ஒண்ணு சொல்லணும்.”
“சொல்லு மதி”, என்றார் போனில் இருந்து கண்ணை எடுக்காமல் .
“அது….. இன்னைக்கு ஈவினிங் ரிசப்ஷனுக்கு, ஸ்ரீ ஃபேமிலியை நான் இன்வைட் பண்ணி இருக்கேன்”.என்று வசுமதி சொல்ல.
“வாட்????” அதிர்ச்சியாக கேட்டார் மித்ரெஷ்.
“இன்னைக்கு ஈவினிங் ரிசப்ஷனுக்கு, ஸ்ரீ ஃபேமிலியை நான் இன்வைட் பண்ணி இருக்கேன்னு சொன்னேன்.”என்று வசுமதி மீண்டும் சொல்ல.
“நீ தெரிஞ்சு தான் பண்றியா மதி…. நான் தான் உன்னை பொறுமையா இருக்க சொன்னேன் இல்ல. நான் அவளோ சொல்லியும் நீ இப்படி பண்ணின என்ன அர்த்தம்.??”என்று கோபமாக கேட்டார் மித்ரெஷ்.
அப்போது “என்ன அப்பா…….. அம்மா என்ன பண்ணுணாங்க???” என்று கேட்டுக்கொண்டே வந்து அமர்ந்தான் ரிஷி. அவனை தொடர்ந்து அபி, நந்தகுமார் பாவனா, அமிர்தாவும் வர. அனைவருக்கும் உணவை பரிமாறினாள் பாவனா.
“என்ன ஆச்சு அப்பா??” ரிஷி மீண்டும் கேட்க,
“அது ஒண்ணும் இல்லை ரிஷி.” என்றார் மித்ரெஷ்.
“ஒண்ணுமில்லைன்னா எதுக்கு அம்மா கிட்ட கோபமா பேசினிங்க???”.
மித்ரெஷ் தன் மனைவியை பார்க்க, வசுமதியே சொன்னார்.
“அது ஒண்ணுமில்ல ரிஷி, இன்னைக்கு ஈவினிங் நம்ப அபி பவி ரிசப்ஷனுக்கு என் ஃப்ரெண்ட் ஃபேமிலி இன்வைட் பண்னினேன். அதுக்கு தான் உங்க அப்பா கோபப்படுறார்.”
“இதுல கோபப்பட என்ன இருக்கு அப்பா.” ரிஷி தந்தையிடம் கேட்க.
“அப்பா கோபப்படுற அளவுக்கு அப்படி எந்த ஃப்ரெண்டை ம்மா இன்வைட் பண்ணிங்க.” கேட்டாள் அமிர்தா.
மகளை அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்த வசுமதி, “சத்யா தான்”. என்றார்.
“என்னது சத்யா வா!!!!!!” என்று அமிர்தா அதிர்ச்சியாக கேட்க. மற்றவர்கள் அமிர்தாவை விசிதிரமாய் பார்க்க. ரிஷி, “இப்போ எதுக்கு அம்மு இவளோ ஷாக் ஆகுற??” என்று கேட்டான்.
அமிர்தா தாயைப்பார்க்க, அவர் கண்ணாலே மகளுக்கு செய்கை செய்தார். அதை புரிந்து கொண்டு அமிர்தவும் “ஒண்ணுமில்லை அண்ணா சும்மா தான்.” என்றாள்.
தங்கையை புருவம் சுழித்து பார்த்தவன் தந்தையிடம், “அவங்க வரதுல உங்களுக்கு என்ன அப்பா பிரச்சனை.” என்று கேட்டான் ரிஷி.
“எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை ரிஷி. அவங்க வருவதை ஏன் முன்னாடியே சொல்லைன்னு தான் உங்க அம்மாகிட்ட கேட்டுட்டு இருந்தேன்.” என்றார் மித்ரெஷ்.
“ஓகே” என்று சொன்ன ரிஷி உணவில் கவனமாக. மற்றவர்களும் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
“அவங்க எங்க ம்மா இருக்காங்க??” என்று ரிஷி கேட்க.
“யாரு??” மகன் யாரை கேட்கிறான் என்று புரியாமல் கேட்டார் வசுமதி.
“சத்யா ஆண்ட்டி….” என்றான் ரிஷி.
இதை கேட்டதும்…. தண்ணீர் குடித்து கொண்டிருந்த அமிர்தவுக்கும், சாப்பிட்டு கொண்டிருந்த மித்ரெஷுக்கும் ஒரு சேர புரையேறியது.
“ஹேய் ….. அம்மு….. பார்த்து…” என்ற ரிஷி தங்கையின் தலையில் தட்டிவிட்டான்.
“சாரி அண்ணா…. ஐ கான்ட் ரேசிஸ்ட்….” என்று சொன்ன அமிர்தா. “என்ன சொன்னிங்க சத்யா ஆண்ட்டியா?? அவங்களுக்கு நம்ப பவி அண்ணி வயசு தான் இருக்கும் அண்ணா.” என்று சொல்லி சிரித்தாள்.
இதை கேட்டதும் என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்த ரிஷி , “எனக்கு என்ன தெரியும் இப்போ நீங்க தானே சொன்னிங்க அம்மா ஃப்ரெண்ட் சத்யான்னு. அதான் அப்படி கேட்டேன்.” என்று சொல்ல.
“ஏன் டா எனக்கு பவி வயசுல ஃபிரண்ட்ஸ் இருக்க கூடாதா???” வசுமதி கோபமாக கேட்க.
“அய்யோ அம்மா நான் எப்போ அப்படி சொன்னேன்.”
“பின்ன இப்போ நீ கேட்டதுக்கு வேற என்ன அர்த்தம்??”
“தெய்வமே நான் எதுவும் சொல்லல. ஆளை விடுங்க எனக்கு வேலை இருக்கு. நான் கிளம்புறேன்.” என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றான் ரிஷி.
அன்று மாலை, அபிமித்ரன் – பாவனா வின் திருமண வரவேற்பு அந்த 5 நச்சத்திர ஹோட்டலில் வெகு விமர்சியாக நடந்துகொண்டிருந்தது. தொழில் நண்பர்கள் அனைவரும் வந்து மணமக்களை வாழ்த்தி பரிசு கொடுத்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது கையில் மைக் உடன் மேடை எறிய அமிர்தா, “குட் ஈவினிங் லேடீஸ் அண்ட் ஜென்டில்மென். ஐ வெல்கம் யு ஆல் ஆன் திஸ் ப்யூடிஃபுல் ஈவினிங். அண்ட் தேங்க் யு ஃபார் யுவர் வால்யூபிள் பிரசென்ஸ். சோ நவ் டூ மேக் திஸ் ஈவினிங் மோர் ஸ்பெஷல் என்னோட செல்ல ரிஷி அண்ணா ஒரு பாட்டு பாடுவார். ” என்று சொல்ல.
இதை எதிர்பார்க்காத ரிஷி, “அம்மு என்ன பண்ற?? நான் பாட மாட்டேன்.” என்று தலையசைத்து மறுத்தான்.
அபியும் அமிர்தாவும் , “பிளீஸ் அண்ணா….” என்று கெஞ்ச. வேறு வழி இல்லாமல் மேடை ஏறினான் ரிஷி.
“என்ன பாடறது??” என்று ரிஷி மெல்லிய குரலில் தங்கையிடம் கேட்க. “நீங்க எப்பவும் பாடும் பாரதி பாட்டு. பாடுங்க.” என்று அமிர்தா சொல்ல. ரிஷி பாட துவங்கினான் அவனுக்கு மிகவும் பிடித்தமான பாரதி பாட்டை…
சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே!
சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே!
என்று பாட துவங்கியவனின் நினைவு அவன் அறியாமலே தன்னவளிடம் சென்றது. அவன் குரலும் அத்தனை இனிமையாக இருந்தது.
என்னைக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்!
சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே!
4 வருடங்கள் முன்பு இதே போன்ற ஒரு அழகான மாலை பொழுதில் இதே ஹோட்டலில் தானே தன்னவளை முதல் முறை உணர்ந்தேன். (ஆம் உணர்ந்தான் …… பார்க்கவில்லை.) அவன் கண் முன்னே அந்த அழகான காட்சி விரிந்தது.
பிள்ளைக்கனியமுதே, -கண்ணம்மா!
பேசும் பொற்சித்திரமே!
அள்ளியணைத்திடவே-என்முன்னே
ஆடிவருந் தேனே
தவறு செய்து தாயிடம் அடி வாங்கிய பின்னும் கோபமாய் இருக்கும் தாயிடமே ஆறுதல் தேடும் சிறு குழந்தையைப்போல,தன்னிடம் அறை வாங்கிய பின்னும் ஆறுதல் தேடி தேகம் நடுங்க தன் மார்பில் அன்று தஞ்சம் அடைந்தவளை அள்ளியணைத்தது நினைவுக்கு வந்தது.
ஓடி வருகையிலே- கண்ணம்மா!
உள்ளம் குளிருதடீ;
ஆடித்திரிதல் கண்டால் உன்னைப்போய்
ஆவி தவிழுதடி
யாருமற்ற அந்த வனத்தில், தானும் அவளுமாய் தனிமையில் கழித்த பொழுதுகள் எத்தனை இனிமையானவை. ஆர்பரிக்கும் அருவில் அந்த அருவிக்கு நிகராய் சந்தோஷத்தில் ஆர்பரித்தபடி நனைந்தவளை கண்ட போது அவளை இறுக்கி தழுவி கொள்ள சொன்ன மனதை அடக்க எத்தனை பாடுபட்டான். அவளிடம் மட்டுமே தன் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் போவதை அந்த நொடியில் அல்லவா உணர்ந்தான்.
உச்சிதனை முகந்தால் – கருவம்
ஓங்கி வளருதடி
மெச்சி யுனை யூரார்- புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடீ.
அவளது கோபம், திறமை, தைரியம், குழந்தைத்தனம் என அவளது பரிமாணங்களை கண்டு அவன் பல சூழலில் வியந்திருக்கிறான்.
கன்னத்தில் முத்தமிட்டால்……
தன்னவளோடான முதல் இதழ் முத்தம் நினைவுவர, அந்நேரம் அவன் உணர்ந்த அவளது ஸ்பரிசமும், வாசமும் இப்போதும் அவனுள் வேட்கையை தூண்டி அவள் மேல் பித்தம் கொள்ள செய்தது.
கன்னத்தில் முத்தமிட்டால்……உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடீ
உன்னை தழுவிடிலோ- கண்ணம்மா
உன்மத்த மாகுதடீ.
அன்று ஒரே அறையில் தன்னில் தஞ்சம் புகுந்தவளை தன் மார்போடு அனைத்து கொண்டு உறங்கியது நினைவு வர அவன் முகத்தில் ஒரு அழகான புன்னகை மலர்ந்தது.
உன் கண்ணில் நீர்வழிந்தால்- என்நெஞ்சில்
உத்திரங் கொட்டுதடி;
தன் உயிருக்கு உயிரான அன்னை இறந்த அன்று அவள் கதறிய கதறலில் உண்மையில் அவள் இதயத்தில் இரத்தம் வழிந்தது.
என் கண்ணில் பாவையன்றோ? கண்ணம்மா
என் கண்ணில் பாவையன்றோ? கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ!
என்னுயிர் நின்னதன்றோ!
என்னுயிர் நின்னதன்றோ!
இன்று அவள் தன்னை விட்டு சென்ற பின்னும் தன் இதய துடிப்பு அவள் ஒருத்திக்காக மட்டுமே என்று உணர்ந்த போது நெஞ்சில் தோன்றிய வலி அவன் கண்களில் பிரதிபலித்தது.
ரிஷி பாடி முடிக்க, அனைவரும் அவன் குரலில் மயங்கி தான் போயினர். வசுமதிக்கு நீண்ட நாட்கள் கழித்து மகன் பாடுவதை கேட்க அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. ரிஷியோ சுற்றம் மறந்து தன்னவளின் நினைவுகளில் மூழ்கிப்போனான்.
ஹாலில் இருந்தவர்களின் கை தட்டலில் தன்நிலைக்கு வந்த ரிஷி, அப்போது தான் சுற்றுப்புறம் உணர்ந்தான். தன்னவளின் நினைவுகளில் இருந்து சட்டென்று வெளி வர முடியாமல் தவித்தவன் வேகமாய் அங்கிருந்து வேகமாய் வெளியேறினான். அதைக் கண்டு அவன் பின்னே வந்த வசுமதி,
“ரிஷி…… கண்ணா….. நில்லு……எங்க போற?” என்று கேட்க. ரிஷியோ முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் அன்னையை பார்த்து, “அம்மா ஒரு ஃபைவ் மினிட்ஸ். நான் வந்துடேறேன்.”என்று சொல்லிவிட்டு வேகமாய் அங்கிருந்து நகர்ந்தான்.
ரிஷி சென்ற திசையை பார்த்துக்கொண்டே வசுமதி நிற்க, “வசு ஏன் இங்க நீக்கிறீங்க?” என்ற குரலை கேட்டதும் மனதில் சந்தோஷம் பொங்க திரும்பி பார்த்தார். ஸ்ரீவித்யாவும், அவர் கணவர் விக்ரமனும் தான் நின்று இருந்தனர். அவர்களை புன்னகையுடனே வரவேற்றார் வசுமதி. “வா ஸ்ரீ…. வாங்க அண்ணா….” என்றவரின் பார்வை சத்யாவை காணாமல், “சத்யா வரலையா ஸ்ரீ???.” என்று கேட்டார். “இல்ல வசு, சத்யாவும் கிருஷ்ணாவும் இன்னும் கேம்பில் இருந்து வரல. அதான் நாங்க மட்டும் வந்தோம்.” என்றார் ஸ்ரீவித்யா.
மனதில் ஏமாற்றம் எழ, வசுமதியின் முகம் வாடியது. பின் தன்னை சமாளித்துக்கொண்டு, “சரி நீங்க வாங்க உள்ளே போகலாம்” என்று அவர்களை அழைத்து சென்றார்.
உள்ளே வந்த வசுமதி மித்ரெஷ்யிடம் சத்யா வராததை சிறு ஏமாற்றத்துடன் சொன்னார். “என்னங்க இது. ரிஷியையும் சத்யவையும் மீட் பண்ண வைக்கலாம்னு நினைச்சேன் ஆனா இப்படி ஆயிடுச்சு.” என்று சொல்லி வருத்தப்பட. மித்ரெஷுக்கு மனைவியின் முடிவில் உடன்பாடு இல்லை என்றாலும் மனைவி வருந்துவது பொறுக்காமல்.
“சரி விடு மதிம்மா…. இப்போ இல்லைன்னா என்ன இன்னொரு நாள் பார்த்துக்கலாம்.” என்று மனைவியை சமாதானப்படுத்தினார் மித்ரெஷ்.
“சரி… ரிஷி எங்க?” என்று மித்ரெஷ் கேட்க.
“அவன் இதோ வரேன் சொல்லிட்டு எங்கயோ போயிட்டான்.” என்றார்.
“சரி வா… நாம வந்தவங்களை கவனிப்போம்” என்று மனைவியை அழைத்துச்சென்றார்.
ஸ்ரீவித்யாவையும் விக்ரமையும் கண்ட அமிர்தாவின் கண்கள் சத்யாவை மட்டுமல்லாது இன்னொருவரையும் தேடியது. அன்னையின் அருகில் வந்து, “என்ன அம்மா சத்யாவை காணோம். ஆண்ட்டி அங்கிள் மட்டும் வந்திருக்காங்க?.” என்று கேட்ட அதே நேரம் வசுமதியின் ஃபோன் ஒலித்தது. அதில் ஒளிர்ந்த பெயரை கண்டதும் பரபரப்பானவர்.
சத்யாவும், கிருஷ்ணாவும் ஏதோ கேம்ப் போயிருக்கங்கலாம். அதான் வரலை. இப்போ நீ போய் பவி பக்கத்தில் நில்லு. போ” என்று சொல்லி மகளை அனுப்பி வைத்துவிட்டு அவசரமாய் அந்த கால்லை அட்டென்ட் செய்து காதில் வைத்தார்.
மறுமுனையில் சொன்ன செய்தியை கேட்டு சந்தோஷத்தில் துள்ளி குதித்தபடி தன் கணவரிடம் விரைந்தார்.
***************