295797628_586832783012651_1027496183334268553_n-3f7cc3a7

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா 01

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா

01

 மணம் இல்லா மலராக

 ஒளி இல்லா நிலவாக

கரை இல்லா கடலாக

கனி இல்லா மரமாக

அவள் இன்றி தவிக்கிறேன் நான்.

நிதானம் இல்லாத வாழ்வில் விடிந்ததும் தன் இயந்திரமான வேலையைப் பார்க்க ஓடோடி செல்லும் மக்கள். போகும் வழியெங்கும் போக்குவரத்து நெரிசல். அந்த காலத்தில் பறவைகளின் சத்தம் கேட்க கேட்க இனிமையாக இருக்கும். ஆனால், இன்றோ வெறும் வண்டிகளின் ஹாரன் சத்தம் மட்டுமே கேட்கும்படியாக இருந்தது அந்த சென்னை மாவட்டம்.

சென்னையின் மையப்பகுதியில் அமைந்திருந்தது அந்த பேரங்காடி. காலை வேளையிலே அந்த பேரங்காடியில் பெரும் கூட்டம் கூடி இருந்தது. அங்கு எப்போதும் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டேதான் இருக்கும். ஏனெனில் அங்கே கிடைக்காதப் பொருட்கள் ஏதும் இல்லை. குறைந்த விலையிலிருந்து அதிக விலை கொண்ட அனைத்து விதமான பொருட்களும் அங்கே விற்பனையில் இருந்தது.

அந்த கூடத்தில் யாரையும் கண்டு கொள்ளாது வேக நடையிட்டு லிஃப்டிற்குள் நுழைந்தான் அந்த ஆறடி உயரத்தில் உள்ள ஒருவன். அவனுக்கு பின்பே நாற்பது வயதை எட்டிய ஒருவர் சாந்தமுகத்துடன் அதற்கு அடுத்தாற் போல் இருந்த லிஃப்ட்டினுள் நுழைந்தார்.

வயது மட்டுமே நாற்பதை தாண்டி இருக்க, பார்ப்போர் யாருக்கும் அது எளிதில் அறிய வாய்ப்பில்லை என்பது போல்தான் அவரது உடற்கட்டு இருந்தது. அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும் அவர் நாற்பத்தி மூன்றை எட்டியவர் என்பது.

இருவரும் நேராக இறங்கியது என்னவோ அந்த அங்காடியின் நான்காவது மாடியில். அவர்களுக்கு பின்னே இரு காட்ஸ் வருகை தந்தனர்.

முதலில் ஆறடிக்கு உரியவன் அவரை முடிந்தளவு முறைத்து விட்டு அவனது இருக்கையில் சென்று அமர்ந்துக் கொள்ள, அவரோ அவனை கண்டு கொள்ளாது அவரது இடத்திற்கு சென்றார்.

வசீகரன் அனைவரையும் தன் பால் இழுக்கும் வசீகரத்தை கொண்டவன். இருபத்து நான்கு வயதை அடைந்த இளைஞன். தன் தந்தையைப் போலவே உடற்கட்டுடன் ஆறடிக்கு குறையாமல் வெள்ளை நிறத்தை கொண்டவன். எம்பிஏ படித்தவன், தந்தையின் தொழிலை பார்த்துக்கொண்டே அவனுக்கு பிடித்தமான அட்வெர்ட்டைஸ்மெண்ட் கம்ப்பெனி வைத்து நடத்துகிறான். அதற்கு அவன் அன்னையின் பெயரை வைத்து நண்பனுடன் சேர்ந்து கடந்த இரண்டு வருடங்களாக நடத்தி வருபவன்.

சிறிது நேரத்திலே வெளியே வந்தவர், நேராக அவனது அறைக்குள் நுழைந்து சாவகாசமாக அங்கே இருந்த சோஃபாவில் கால்மேல் கால் போட்டு அமர்ந்தார்.

“அப்பா ப்ளீஸ் என்னால இங்க இருக்கிற வேலைய விட்டுட்டு அந்த கல்யாணத்துக்கு எல்லாம் போக முடியாது” என்று அடம்பிடித்து கொண்டிருந்தான்.

“இங்க பாரு வசி, நீ அந்த கல்யாணத்துக்கு போய்தான்  ஆகணும்” என்று வம்படியாக அவரும் பேச,

“முடியாது முடியாது முடியவே முடியாது” என்று சிறுபிள்ளையாய் தலையை இடவமாக ஆட்டியபடியே சொல்ல,

“ஏன் போக முடியாது உனக்கு. நான் இந்த அளவுக்கு நிக்கிறேன்னா அதுக்கு காரணம் அவங்க குடும்பம்தான்டா. அந்த மரியாதைக்காகவாது நீ போய்தான் ஆகணும்” என்று சொன்னார் பாரிவேந்தர்.

“ஏன் அந்த கல்யாணத்துக்கு நீங்க போக வேண்டியதுதானே. என்னை ஏன் போக சொல்றீங்க?”

“தம்பி உனக்கே தெரியும்தானே, அப்புறம் என்னடா இப்படி கேக்குற?” என்றவரின் குரலில் மெல்லிய வருத்தம் எட்டி பார்த்தது.

“இங்க பாருப்பா நீ என்னை தம்பி தம்பின்னு கூப்பிட்டு, பாக்குற எல்லாரும் நீ எனக்கு அண்ணாவான்னு கேக்குறாங்க. உனக்கு கொஞ்சமாச்சும் தோன வேணாம், நம்ம பையன யாரும் சைட் அடிக்க மாட்டேங்கிறாங்களே அதுக்கு காரணம் நாமதான்னு, இப்படி ஜிம் பாடி மெயிண்டெயின் பண்ணிட்டு இருக்க. இதுல எல்லாரும் உன்னோட நம்பர் வேற கேக்குறாங்க” என்று கடுப்பாக சொன்னாலும் அவனுமே அவன் தந்தையை இரசிப்பது உண்டே.

“தம்பி அதெல்லாம் தானா வரணும், நாமளா எதிர்ப்பார்க்கக்கூடாதுடா. அதுக்கெல்லாம் கொடுத்து வச்சிருக்கணும்” என்று ஓரப்பார்வையால் அவர் சொல்லி நகைக்க,

“யோவ் ரொம்ப பேசுன அப்புறம் நான் கண்ணம்மா கிட்ட சொல்லி குடுத்திடுவேன் பாத்துக்கோ” என்று மிரட்டினான்.

“டேய் கண்ணம்மான்னு கூப்பிட்ட அவ்வளவுதான்  பாத்துக்கோ” என்று எச்சரிக்கை விடுத்தார்.

“அதெல்லாம் முடியாது கண்ணம்மாவ கண்ணம்மான்னுதான்  சொல்லுவேன்” என்று பழிப்பு காட்டி ஓட,

“நில்லுடா ராஸ்கல்” என்று அந்த அறையிலே அவன் பின்னே ஓடினார்.

அந்த நேரம் பார்த்து உள்ளே நுழைந்த வசியின் நண்பன் விபுனன், இவர்களின் விளையாட்டை கண்டு, ‘இதுங்களுக்கு என்ன குழந்தைங்கன்னு நினைப்போ’ என்று முகபாவனையைக் காட்டினான்.

“வா விபு” என்று அவன் முதுகில் ஒரு தட்டு தட்டினார் பாரிவேந்தர்.

“வரேன் பா” என்றவன் முதுகை தேய்த்துக்கொண்டான்.

“சரி நீங்க ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு போயிட்டு வாங்க” என்று அவரின் சட்டை கையை முட்டிவரை மடக்கிச் சென்றார்.

“ஏன்டா உங்க ரெண்டு பேருக்கும் சின்ன பசங்கன்னு நினைப்பா, இப்படி ஓடி பிடிச்சி விளையாடுறீங்க?” என்று கடுகடுக்க,

“பொறாமைடா உனக்கு” என்று அவனும் முதுகில் அடி வைத்து வெளியேறினான்.

‘எங்க அம்மா இவங்க அடிக்கிறதுக்காகதான்  பெத்து போட்டிருக்காங்களா? ரெண்டு பேரும் இப்படி அடிக்கிறாங்க’ என்று கண்ணீர் வடிக்காத குரலில் மனதிற்குள் கூறியவன், வசியை பின்தொடர்ந்து சென்றான்.

***

காலையில் எழுந்த அவர் வேகவேகமாக  வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருக்க, அந்த நேரம் பார்த்து இருவரது நிழல் அவருக்கு தெரிய மெதுவாக நிமிர்ந்து பார்த்தார்.

பக்கத்து வீட்டு பரிமளமும் அவரது பெண்ணும் நின்றிருக்க, புன்னகை முகமாக, “வாங்க” என்று வரவேற்றார்.

அவரது முகத்தை பார்த்து திருப்பிக் கொண்ட பரிமளம், ”ஏய்! எதுக்கு இங்க வந்தியோ அதை சீக்கிரமா சொல்லிட்டு வா?” என்று கடுகடுத்தார்.

“நாளைக்கு எனக்கு நிச்சயதார்த்தம் ஆன்ட்டி, நீங்க கண்டிப்பா வரணும். உங்களோட ஆசிர்வாதம் எனக்கு வேணும்னு நினைக்கிறேன்” என்று சொல்லி குங்குமத்தை அவர் முன் நீட்ட,

“கண்டிப்பா வரேன்டா கண்ணு” என்றவர் குங்குமத்தை எடுத்து நெற்றி வகிட்டில் வைத்துக் கொண்டார்.

“சரி அதான் கொடுத்துட்டல்ல வா போலாம்” என்று அந்த பெண்ணை இழுத்துக் கொண்டு சென்றார்.

அவரின் செயலை புன்னகையோடு பார்த்திருந்தவர், கோலம் போடும் வேலையைத் தொடர்ந்தார்.

சென்ற வேகத்திலே திரும்பி வந்த பரிமளம், “இங்க பாரு நங்கை, அவதான் ஏதோ சின்ன பிள்ளை உனக்கும் சொல்லணும்னு அடம்பிடிச்சு கூட்டிட்டு வந்தா, நானும் கல்யாணம் ஆக போற பொண்ணு மனசை நோகடிக்க கூடாதுன்னுதான் கூட்டிட்டு வந்தேன். ஆனா அவ கூப்பிட்டான்னு சொல்லி அங்க வந்திடாதே. அப்புறம் என்னோட பொண்ணு வாழ்க்கை என்ன ஆகுறது சொல்லு. உனக்கு நான் சொல்ல வரது புரியும்னு நினைக்கிறேன்” என்றவர் விருட்டென சென்று விட்டார்.

அத்தனை நேரமும் புன்னகை முகமாக இருந்த தேவநங்கையின் மனம் இவரின் பேச்சில் வருத்தத்தை தொடுத்தது. ஆனாலும் இதழில் புன்னகை தவழ்ந்தது.

கோலத்தை முடித்த பின் வீட்டிற்குள் சென்றவர், அவரது கார்காரர் ஃபோட்டோவை எடுத்து நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டார் தேவநங்கை.

“அடடே! காலையிலேயே தேவாக்கும் அவரோட காதலருக்கும் ரொமான்ஸ் ஓடுது போலையே” என்றபடி மெதுவாக பாவாடையை தூக்கிக் கொண்டு கொலுசொலி சத்தம் வராதவாறே நடந்து வந்தாள் ஆதினி.

அவர் பக்கத்தில் வந்த ஆதினி, ”பேஆ” என்று கத்த, அவரோ அதையெல்லாம் கண்டுக் கொள்ளாது அந்த புகைப்படத்தை எடுத்து உள்ளே வைத்தார்.

“ஏன்டி, இப்படி காதுல வந்து கத்துற‌? நான் என்ன செவுடா, சொல்லு எதுக்கு இந்த கத்து கத்துற?”

“அதை எப்படி நான் என் வாயால சொல்லுவேன் ப்யூட்டி” என்று பாவமாக முகத்தை வைத்து சொல்ல,

“அடி கழுத… என்னையே செவுடுன்னு சொல்லுறியா நீ” என்று அவள் காதை பிடித்து திருகினார்.

“உண்மையதான சொல்ல முடியும் ப்யூட்டி. எனக்கு பொய் சொல்ல வேற தெரியாதே” 

“யாரு உனக்கு தெரியாது இதை நான் நம்பணும் அதானே” என்க.

“அதே அதே” என்றவள் வலி தாங்க முடியாமல், ”தேவா குட்டில ப்ளீஸ் என் பிஞ்சு காதை விடேன் வலிக்குது” என்று வலியில் முகத்தை சுருக்க,

உடனே கையை எடுத்த நங்கை, ”ரொம்ப  வலிக்குதா?” என்று பாசமாக கேட்டார்.

“ஆமா வலிக்குதுதான், நீ சூடா காப்பி கலந்து குடுத்தா, நான் வலிக்கு இதமா குடிச்சிப்பேன்”

“நான் கூட வலிக்குதோன்னு நினைச்சி கேட்டேன். ஆனா ஒரு காப்பிக்கு இந்த ஆர்ப்பாட்டம் பண்ற நீ, இப்ப கொடுக்க நான் இருக்கேன், இன்னும் கொஞ்ச நாள்ல புகுந்த வீட்டுக்கு பொயிட்டா அங்க வந்து யாரு உனக்கு காப்பி கலந்து கொடுப்பா சொல்லு?”

“ஹான், அந்த நாள் இன்னும் வரலை நங்கை வந்தா உன்னைய கடத்திட்டு போயிடுவேன். அப்போ டெய்லியும் காப்பி கிடைக்கும்ல, எப்படி என்னோட ஐடியா” என்று புருவம் உயர்த்தி கேட்ட ஆதினியை கண்டு தலையில் அடித்துக் கொண்டார்.

“எம்மா எவ்ளோ பெரிய அறிவாளி ஆகிட்டீங்க, இது மட்டும் உங்க அப்பாவுக்கு தெரிஞ்சது உன்னைய கொன்னே போட்டிருவாரும்மா தாயே” என்றவாறே மணக்க மணக்க காப்பியை கலந்து கொடுத்தார் தேவநங்கை.

அதை ரசித்து ருசித்து குடித்தவாறே, “சரி சரி இன்னைக்கு சீக்கிரமா வந்துடு வேலைக்கு. எனக்கு இன்னைல இருந்து எக்ஸாம் ஸ்டார்ட் ஆகுது. உன் முகத்தை பார்த்துட்டுதான் காலேஜ்க்கு போவேன் சரியா” என்று சொல்லி  வேக நடையிட்டு சென்றாள்.

அவருக்கு போகும் அவளை பார்க்க பார்க்க விந்தையாக இருந்தது. அந்த ஊரே தன்னை ராசி இல்லாதவராக பார்க்க, ஆனால் இந்த பெண் மட்டுமே தன்னை அவளுக்கான அதிர்ஷ்ட தேவதை போல் பார்க்கிறாளே. கடவுளின் செயல்கள் யாவும் விந்தையே.

அதன்பின் ஆதினி கூறியது போலவே சீக்கிரமாக கிளம்ப தயாரானார். அவரும் இந்த ஊருக்கு வந்த நாளில் இருந்து அங்கே சமையல் செய்யும் வேலையைச் செய்கிறார். அது மட்டும் இல்லாமல் பால்வாடியிலும் சமையல் வேலை செய்கிறார். அதுவும் அத்தனை விருப்புற்று குழந்தைகளுக்காகவும் ஆதினிக்காகவும் இதனை செய்கிறார்.

யாருக்காகவோ பயந்து பயந்து வாழ்ந்து கொண்டிருப்பவரே இந்த தேவநங்கை. சொந்தங்கள் அனைத்தையும் உதறிவிட்டு தனது கார்காரர் புகைப்படத்தை மட்டுமே சொத்தாக எடுத்துக் கொண்டு இந்த ஊருக்கு வந்து விட்டார். கிட்டதட்ட அவர் இங்கே வந்து இருவது வருடங்கள் ஆகப் போகிறது.

ஆதினிக்காக அன்று வேகமாக கிளம்பியவர், அவளுக்குப் பிடித்த கேசரியை வீட்டிலே செய்து கொண்டு சென்றார்.

“என்ன அக்கா இன்னைக்கு சீக்கிரமா கிளம்பி வந்துட்டீங்க” என்று சீதாலட்சுமி, ஆதினியின் அன்னை கேட்டாள்.

“இல்லம்மா இன்னைக்கு ஆதினிக்கு பரிட்சை இருக்குன்னு சொல்லி சீக்கிரமா போகணும்னு நேத்து சொன்னா.  அதான் இன்னைக்கு சீக்கிரமாவே வந்துட்டேன்”

“ஊரே உங்களை அவதூறா பேசினாலும், உங்களோட நல்ல மனசு தெரிஞ்ச ஒருத்தி அவ மட்டும்தான் இல்லையா. இப்படி ஒரு பாசம் பெத்த அம்மாவான எனக்கு கூட தரல. ஆனா அவ உங்களுக்கு அத்தனை அன்பையும் தரா” என்று சந்தோஷமாகவே அதை கூறினார்.

வெறும் மென்னகை புரிந்தவர், சமையல் அறை நோக்கி சென்று விட்டார்.

இங்கே விபுவை அழைத்துக் கொண்டு மண்டபத்திற்கு வந்தான் பாரிவேந்தரின் மைந்தன் வசீகரன்.

அவனுக்கு அந்த மண்டபத்திற்குள் நுழையும்போதே ஏகபோக வரவேற்பு. அதனை எல்லாம் வெறும் புன்னகையோடு ஏற்றுக் கொண்டாலும், அவனின் மனம் ஏனோ சஞ்சலமாகவே இருந்தது.

காரணங்கள் அறியா சஞ்சலம் அவனுள் உருவாகிட, மனது அவனுக்கு கனக்க தொடங்கியது. அங்கே நடப்பதை பார்க்க பிடிக்காமல் முன் இருக்கையில் விபுவுடன் அமர்ந்திருந்தான்.

ஆனால், இவனுக்கு மாறாக விபுனன், அங்கு இருந்த இளம் பெண்களை எல்லாம் சைட் அடித்துக் கொண்டு இருந்தான்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!