மாலை வரையிலும் கல்லூரியில் சிறு சலசலப்பு இருக்கத்தான் செய்தது. கல்வியமைச்சர் பேசிவிட்டு சென்றபின் , உடனடியாக மாணவர்களை தவறாய் பேசிய ஆசிரியர்கள் வந்து மன்னிப்பு கேட்டு விட்டனர்.
மாணவர்கள் பெரிதாய் எதையும் அவர்களிடத்தில் எதிர்பார்க்கவில்லை. மன்னிப்பு தான் அதிலும் அவர்கள் அதனை மனமார கூறவேண்டும் என்று தான் எண்ணினர்.
என்னவோ அவர்கள் மன்னிப்பு கேட்டு விட, அதனை அத்துடன் விட்டுவிட்டனர்.
இவையனைத்தும் நடந்த பின்பும் மீடியாக்கள் கல்லூரி வளாகத்திலே நின்று அவர்களுக்கு தேவையான விவரங்களை கேட்டப்படியும், சொன்னப்படியுமே இருக்க, ஸ்டுடெணட் சேர்மேனாக அவனால் அங்கிருந்து நகர முடியவில்லை.
மாணவிகளுக்கு தகுந்த பாதுகாப்பை வழங்கினர் மாணவர்கள். அவர்களை எந்தவகையிலும் மீடியாக்கள் தொந்தரவு செய்யாமல் இருக்க பார்த்துக்கொண்டனர்.
உள்ளிருப்பு போராட்டத்தில் இருந்ததனால், அனைவருக்குமான உணவை வழங்கும் படி, கல்வியமைச்சர் உத்தரவிட்டிருக்க, அதன்படி மாணவ மாணவிகளுக்கு உணவு வழங்கப்பட்டது.
இவை அனைத்தையும் அவனின் நண்பர்களுடன் மேற்பார்வை பார்த்தான் சிம்மன்.
மாணவர்களிடம் பேசிவிட்டு கல்லூரி நிற்வாகத்தையும் எச்சரிக்கை செய்து வெளி வந்தவரை பத்திரத்தையாளர்கள் சூழவும், அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறி முடித்தவர், வெளியே இருந்த தன் காரில் ஏறி அமர்ந்தவருக்கு மகனை பார்த்ததில் அந்த குளிரிலும் முகமெங்கும் வியர்த்து விட, மூச்சு விடவே சிறிது சிறமமாக இருப்பது போல் ஓர் உணர்வு.
பக்கத்திலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து குடித்தவருக்கு, அப்போதும் ஒரு நிலையில் இருக்க முடியவில்லை.
பத்து நிமிடத்தில் தன்னை தானே சரிசெய்தவர், வெளியில் நின்ற அவரின் பிஏவை அழைத்தார்.
“சொல்லுங்க சார்” என்று நின்றவனிடம்,
“சிம்மன் இங்க தான் படிக்கிறான்னு ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லலை. அவன் வெளிநாட்ல படிக்கிறதா தானே என்கிட்ட சொன்ன”சீற்றத்துடன் தீனதயாளன் கேட்கவே, முழித்தார் அவரின் பிஏ.
“என்னையா இப்படி முழிக்கிற?”
“அது வந்துங்க சார்…” பாட்டாய் இழுப்பதை கண்டு ஆத்திரமானார்.
“என்னை டென்ஷன் பண்ணாம சொல்லு”என,
“சுலோச்சனா மேடம் தான் சொல்ல சொன்னாங்க” என்றதும் ஆயாசமாக உணர்ந்தார் தீனதயாளன்.
அவரால் அவர் மனைவியை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேச முடியாது. வெளியில் இவர் புலியாக தெரிந்தாலும், வீட்டில் எலி தான்.
சுலோச்சனா வைப்பது தான் அங்கு சட்டம். அவரை மீறினால் அங்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதற்கு பயந்தே அவரிடம் வாக்குவாதம் எதுவும் வைத்து கொள்வதில்லை.
சுலோச்சனா தீனதயாளனின் இரண்டாவது மனைவி. முதல் மனைவியோடு வாழும்போதே, அவருக்கு தெரியாமல் சுலோச்சனாவை திருமணம் செய்து கொண்டார்.
இதை அறிந்த அவரின் முதல் மனைவியான அன்னபூரணி, அவரின் மகனோடு அவ்வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
முதலில் பூரணிக்கு தெரியாமல் தான், சுலோச்சனாவுடன் வாழ்ந்து வந்தார். ஏதோ ஒரு நிலையில் தெரிய வர, அவரை விட்டு முற்றிலுமாக விலகி சென்றுவிட்டார் பூரணி.
அப்போது நரசிம்மனிற்கு பத்து வயது தான் இருக்கும். அப்போதிலிருந்து அவன் அவனது அன்னையுடன் தான் இருக்கிறான்.
எத்தனையோ முறை தீனதயாளன் மகனை காண முயற்சித்தாலும், சிம்மன் தந்தையை பார்க்க மறுத்திடுவான்.
பல நாட்களுக்கு பிறகு மகனை இப்போது தான் காண முடிந்தது. அதிலும் இப்படியான ஒரு சூழ்நிலையில் காண நேர்ந்ததை எண்ணி உள்ளுக்குள் வெட்கினார்.
அவரின் எண்ணவோட்டங்களை கலைத்தார் அவரின் பிஏ சீனிவாசன்.
“சார், கிளம்பலாமா?” என்க,
“சரி வண்டியை எடுக்க சொல்லு” சொல்லி விட, உடனே ட்ரைவர் வண்டியை கிளப்பினார்.
இரவு வேளை மெஸில் அமர்ந்து அனைவரும் சாப்பிட்ட படியே கொட்ட மடித்து கொண்டிருக்க, சிம்மன் அவனின் நண்பனுடன் பேசிக்கொண்டிருந்தான்.
“எப்படியோ, நம்ம நினைச்ச மாதிரியே முடிஞ்சது. இப்போ தான் நிம்மதியா இருக்கு மச்சான்”
இருவரும் பேசிக்கொண்டு இருந்த சமயம், சிம்மனிடம் வந்த மாணவன் ” உங்களுக்கு கால் வந்திருக்காம். வார்டன் உங்களை வர சொன்னாரு” என வந்தவன் சொல்லி செல்ல,
“அம்மாவா தான் இருக்கும் டா. இங்க நடந்ததை பத்தி சொன்னா அவங்க ரொம்பவே சந்தோஷப்படுவாங்க” என புன்னகை பூத்த முகமாக அவன் கூறவும்,
“இதுவே நான் எங்க அம்மா கிட்ட சொன்னா, எடுபட்ட பையலே உன்னை படிக்க அனுப்பினேன்னா, இல்லை சண்டை போட அனுப்பினேன்னா டான்னு கேட்டு கேட்டு வெளக்கமாத்துலையே அடிப்பாங்க மச்சி” என்கவும், வாய்விட்டு சிரித்தான் நரசிம்மன்.
“உன்னோட முடியல டா…”
“போதும் என்கிட்ட மொக்க போட்டது. இப்போ போய் உங்க அம்மா கிட்ட பேசு” என்றதும் இருவரும் எழுந்து தட்டை கழுவி, அதை வைக்கும் இடத்தில் வைத்தவர்கள் வார்டன் அறைக்கு சென்றார்கள்.
“சரி மச்சான், நீ பேசிட்டு வா… நான் ரூம்க்கு போறேன்” சொல்லி சென்றுவிட, சிம்மன் வார்டன் அறைக்குள் நுழைந்தான்.
சிம்மனின் வருகையை அறிந்த வார்டன்,” வா சிம்மா, போ போய் பேசு” என கூறி நகர்ந்து விட்டார்.
சிம்மனும் அன்னையுடன் பேசப்போகிறோம் என்ற உற்சாகத்துடன் காதினில் வைத்தான்.
“ஹலோ அம்மா!”
“நான் மாணிக்கம் பேசுறேன் தம்பி…” என அவரின் ட்ரைவர் பேசவும், அவனின் புருவங்கள் சுருங்கியது.
“அங்கிள்! அம்மா எங்க? நீங்க எதுக்கு ஃபோன் அட்டன் பண்றீங்க?” கேள்விகள் அடுக்க, பேச திராணியில்லாது மௌனமாய் அழுதார்.
“அங்கிள் லைன்ல இருக்கீங்களா இல்லையா?”
“ஹான், இருக்கேன் தம்பி. அம்மாக்கு…” சொல்ல முடியாமல் தவிக்க,
“அம்மாக்கு என்ன அங்கிள்? அவங்க இப்போ எங்க, நீங்க அவங்க கிட்ட முதல்ல ஃபோனை கொடுங்க” பதற்றத்துடன் அவன் பேச பேச, அவனின் மூளையோ பலவாறாக சிந்தனை செய்தது. அது எதுவும் அத்தனை உவப்பானதாக இல்லை.
எதற்காகவோ மீண்டும் கீழே வந்த சரவணன், நண்பன் நிற்கும் கோலம் கண்டு அங்கே வந்தவன், அவன் முதுகை தட்ட, அதில் சுயம் பெற்றவன் அப்படியே தரையில் மண்டியிட்டுவிட்டான்.
“டேய்!!!” பதறியவனாக அவனை தூக்க முயல, அந்த பக்கத்திலிருந்து பெரும் சத்தம்.
“தம்பி…தம்பி…” குரல் கொடுத்தவறாக அவர் இருக்க, ரிசிவரை எடுத்து பேசலானான் சரவணன்.
அவர் சொன்னதில் ஆடிப்போனவன், நண்பனை பார்த்தான்.
“சரிங்க அங்கிள். நாங்க உடனே கிளம்பி வரோம்” என வைத்தவன், நண்பனிடம் வந்தான்.
“மச்சான்!!!” என்கவுமே, அவனை அணைத்து கொண்டு கண்ணீர் சிந்தினான்.
“மச்சான்!! இப்போ இது அழுகிற நேரம் இல்லை டா. வா லீவ் சொல்லிட்டு கிளம்பலாம்” என அதற்கான ஏற்பாடுகளை செய்தான் சரவணன்.
அனைத்தையும் முடித்து ரயில் நிலையம் வரவே பத்தை கடந்து விட, ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸை பிடித்து அதிகாலை போல் செங்கல்பட்டு வந்திறங்கினர்.
அதன் பின்னர் வாடகைக்கு கார் பிடித்து மருத்துவமனைக்கு வரும் போது நன்கு விடிந்திருந்தது.
மூச்சு வாங்க கண்களில் விழி நீரை தேக்கி வைத்துவாறே மருத்துவமனை வந்தடைந்தவன், அன்னை இருக்கும் இடம் நோக்கி வர வர அவனின் கால்கள் தள்ளாடியது.
அன்னையின் நிலையை பற்றி கேட்க வேண்டி வாயை திறந்தவனுக்கு பேசும் திராணியற்றிருந்தான்.
சரவணன் தான் அவன் கூடவே இருந்தான்.
“அம்மாக்கு எப்படி இப்படி ஆச்சு அங்கிள்?” கேட்டவனின் குரலில் அத்தனை வலி. அதனுடன் வேதனையும்.
“தெரியல பா. எங்கேயோ வேகமா கிளம்பி போனாங்க. கூட வரேன்னு சொன்னதுக்கு கூட மறுத்திட்டாங்க” என்றவரின் குரலிலும் வருத்தம் நிறைந்தே காணப்பட்டது.
மருத்துவ சாதனங்களின் உதவியோடு அங்கே ஐசியூவில் படுத்திருந்தார் அன்னபூரணி.
ஐசியூவின் நுழைவு வாயிலாக பார்க்கும்போது, அவர் நன்றாக இருப்பதாக தான் தோன்றும்.
ஆனால் அவரோ சுயநினைவை இழந்து கோமாவிற்கு சென்றிருந்தார்.
அன்னையை இந்த நிலையில் காண காண சொல்ல முடியாத வலி அவனுள் ஊடுருவல் செய்ய, சுவற்றை பிடித்து நின்றான்.
தன் அன்னையின் நிலைக்கு காரணமானவர்களை கொன்று விடும் ஆவேசம் அவனுள்.