காதலில் கூத்து கட்டு 14

IMG-20210202-WA0002-c7e37ad9

காதலில் கூத்து கட்டு 14

காதலில் கூத்து கட்டு 14

 

“எல்லாருமே என்கிட்ட ஏன் பொய் சொல்லிட்டாங்க, நீ அவ்வளோ அழகு இல்லனு! உன்ன நேர்ல பார்க்கும் போது தான் தெரியுது நீ எவ்வளோஒ அழகுனு” அவளின் முகத்தில் ரசனையான பார்வை பதித்து அவன் சொல்ல,

 

காஞ்சி பட்டில் மிளிர்ந்தவள், பூரிப்பிலும் வெட்கத்திலும் அழகாய் புன்னகைத்து தலை தாழ்த்திக் கொண்டாள்.

 

அடுத்த காட்சியில், “என்னுடைய முக அழகின் ரகசியம், ‘திரிபுரா ஆயுர்வேதிக் ஃபேஸ் கிரீம்… முகத்தில் பொலிவை கூட்டும், மனதில் தன்னம்பிக்கை சேர்க்கும், ‘திரிபுரா ஆயுர்வேதிக் ஃபேஸ் கிரீம்” மணப்பெண் அந்த ஃபேஸ் கிரீமை கையில் வைத்தப்படி அழகான புன்னகையுடன் சொல்ல, அந்த ஒன்றரை நிமிட விளம்பரம் முடிந்தது.

அதற்கான டப்பிங் வேலைகள் தான் அங்கு நடைப்பெற்று கொண்டிருந்தது. 

 

டப்பிங் கலைஞர்கள் பேசி முடித்ததும், “ஓகே தான வசி” என்று கேட்க, “பர்ஃபெக்ட்” என்று தம்ஸ்அப் காட்டியவன், “லாஸ்ட் ஒன்ஸ் செக் பண்ணிடலாம்” என்று மறுபடி மறுபடி அந்த விளம்பரத்தை திரையில் ஓடவிட்டு கவனிக்கலானான்.

 

அவனது அலைப்பேசி இசைத்து கவனத்தை கலக்க, யாரென்று பார்க்காமல் எடுத்து காதில் ஒற்றி, “ஹலோ, கிளிக்கர்ஸ் ஆட் ஃபிலிம் மேக்கர்ஸ்” என்றான்.

 

“டேய் சசி பேசறேன் டா”

 

“சொல்லு சசி, கொஞ்சம் பிஸியா இருக்கேன்”

 

“அப்ப உனக்கு விசயம் தெரியாது?” சசிதரன் சந்தேகமாக கேட்க,

 

வசீகரன், “எந்த விசயத்தை கேக்குற நீ” வேலை நேர குறுக்கீட்டில் கடுப்பானான்.

 

“ரமிக்கு மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணி இருக்கறது, உனக்கு தெரியுமா‌? தெரியாதா?” சசிதரன் கேட்கவும் வசீகரன் முகம் மாறியது.

 

“வாட்?” 

 

“நெக்ஸ்ட் வீக் என்கேஜ்மென்ட், நெக்ஸ்ட் மன்த் ஃப்ர்ஸ்ட்ல மேரேஜ்னு கேள்வி பட்டேன்” சசிதரன் மேலும் சொல்ல, வசீகரனுக்கு அதனை எப்படி எடுத்துக் கொள்வது என்று புரியவில்லை. ஆனாலும் ஏதோ தவறாக பட்டது.

 

“இவ்வளோ அவசரமா எதுக்கு? என்னடா நடக்குது அந்த வீட்டுல” 

 

சசிதரன், “அந்த வீட்டுல என்ன வேணா நடந்துட்டு போகட்டும், நீ உன் ஹீரோயிசத்தை காட்டுறேன்னு எதுவும் பண்ணி வைக்காத, அவங்களுக்கும் நமக்கும் இப்ப எந்த சம்பந்தமும் இல்ல, புரியுதா?” திவ்யாவின் மீதான கோபத்தை அப்படியே குரலில் இறக்கினான்.

 

அண்ணனின் கோபத்தை கணக்கில் கொள்ளாத வசீகரன், இந்த திடீர் திருமண ஏற்பாட்டில் ரம்யாவின் நிலையை எண்ணி கவலை கொண்டான். தன் நெற்றியை விரல்களால் தேய்த்தபடி, “மாப்பிள்ளை யாரு? டீடியல்ஸ் தெரியுமா உனக்கு?” அண்ணனிடம் விசாரிக்க,

 

“பேரு நவீன் குமார், வேற டீடியல்ஸ் தெரியல, நமக்கு எதுக்கு அதெல்லாம்” சசிதரன் முயன்று வரவழைத்த அலட்சியத்தோடு பேசிக் கொண்டிருக்கும் போதே, வசீகரன் இணைப்பை துண்டித்து இருந்தான்.

 

இவன் தலை பாரம் அதிகமானது போன்ற உணர்வு. விரல்களால் தலையை அழுத்த கோதி கொண்டவனுக்கு இந்த புது பிரச்சனைக்கு தீர்வென்ன என்ற யோசனை.

 

“என்னாச்சு வசி? எனிதிங் ராங்” தேவா கேட்க,

 

“ரம்யாக்கு மேரேஜ் பிக்ஸ் பண்ணி இருக்காங்களாம்” சொல்லிவிட்டு காலை தரையில் கோபமாக உதைத்து கொண்டான்.

 

“என்னாது? அந்த பொண்ணு இன்னும் காலேஜ் கூட முடிச்சிருக்க மாட்டாளே டா? முதல்ல இந்த விசயத்தை உனக்கு யாரு சொன்னது ரமியா?” தேவா நம்பாமல் கேட்க,

 

இல்லையென்று தலையசைத்தவன், “சசி தான் சொன்னான். ஏன் இப்படி திடீர்னு? எனக்கு சுத்தமா எதுவும் புரியலடா”

 

“எனக்கு புரிச்சிடுச்சு” என்ற தேவா, “நீயும் ரமியும் லவ் பண்றீங்கனு நினச்சு அவளோட அப்பன் உன்னயும் அவளையும் பிரிக்கறதுக்குனே, அலஞ்சு திரிஞ்சி ஒரு மாப்பிள்ளய புடிச்சு மேரேஜ் பிக்ஸ் பண்ணி இருக்காரு” என்றான் ஒரே மூச்சாக.

 

வசீகரன், “அந்த ஆளு என்ன லூசாடா” என்று பொங்கியவன், “பாவம் ரம்யாக்கு அங்க என்ன பிரச்சனைனு தெரியலயேடா” என்று தவிப்பாக தன் முகத்தை அழுத்த தேய்த்து விட்டான்.

 

“ஓகேடா, ஃப்ர்ஸ்ட் இந்த வொர்க்க ஃபினிஷ் பண்ணிடலாம், இன்னும் லேட் பண்ணா இங்க பில் எகிரிடும், அப்புறம் அதை பார்த்துக்கலாம்” தேவா சொல்ல,

 

“பினிஷிங் மட்டும் தானே நீ பார்த்துக்க தேவா, நான் அங்க என்ன பிரச்சனைனு பார்த்துட்டு வந்திறேன்” மேலும் நிற்காமல் வசீகரன் சென்று விட, தேவா தலையசைத்து விட்டு அவன் விட்டு சென்ற வேலையை கவனிக்கலானான்.

 

***

 

வசீகரன், ரம்யாவின் எண்ணுக்கு முயல, அது தொடர்பற்று போயிருந்தது! 

 

அடுத்து திவ்யாவின் எண்ணிற்கு முயல, அலுவலகத்தில் இருந்தவள், சற்று தயங்கி தான் அழைப்பை ஏற்றாள்.

 

“அந்த நவீன் குமாரோட நம்பர் இருக்கா உன்கிட்ட” வசீகரனின் நேரான கேள்வியில் கோபமானவள்,

 

“உன்னால தான் ரமிக்கு இவ்வளவு பிரச்சனை வசி, இன்னும் என்ன பண்ண போற நீ” அவனை குற்றம் சாட்டினாள்.

 

“பிரச்சனை பண்ணவன் தானே சால்வ் பண்ணனும். சொல்லு”

 

“என்கிட்ட இல்ல, எம் சி ஹாஸ்பிடல் ரிஷப்ஷன்ல கேட்டு பாரு ஒருவேளை சொல்லுவாங்க”

 

“அவன் டாக்டரா?”

 

“இல்ல. அவனை தவிர அவன் ஃபேமிலில எல்லாரும் டாக்டர்ஸ்”

 

“ஓகே தேங்க்ஸ்”

 

“வசி நீ எதுவும் தப்பா…” திவ்யா சொல்லி முடிக்கும் முன் இணைப்பை துண்டித்திருந்தான்.

 

யாருக்காக யாரிடம் பேசுவது என்று ஒன்றும் விளங்கவில்லை திவ்யாவிற்கு. முன்பைவிட அவளின் குழப்பங்களும் தவிப்புகளும் அதிகமானது தான் மிச்சம்.

 

***

 

மதிய வேளையில், எம் சி மருத்துவமனையின் நிர்வாக அறையின் இருக்கையில் சரிந்து அமர்ந்தபடி உறங்கி போய் இருந்தான் நவீன் குமார். 

 

அவன் அம்மா, அப்பா, அண்ணன், அக்கா என அனைவரும் மருத்துவமனையின் முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதால் அவனுக்கான வேலைகள் அங்கே பெரிதாக இருப்பதில்லை. மருத்துவம் படிக்க சோம்பல் பட்டு, நிர்வாக படிப்பை பெயருக்கு முடித்து வைத்திருப்பவனிடம் வேறென்ன பெரிதாக எதிர்பார்க்க முடியும்.

 

ஒலி எழுப்பிய கைப்பேசியை கண்கள் திறக்காமல் கைகளால் மேஜையில் துழாவி எடுத்து காதில் வைத்தான்.

 

“ஹலோ, நவீன் குமார் ஸ்பீக்கிங்” என்க.

 

“ரம்யா பத்தி உங்க கிட்ட பேசனும். எப்ப பேசலாம்?” கத்தி போல கேட்ட குரலில் சட்டென விழித்து எழுந்து நேராக அமர்ந்தவன், “நீ யாரு மேன்?” குரல் எரிச்சலாக வந்தது.

 

“நான் வசீகரன்” 

 

“ஈவ்னிங் ஃபைவ் ஓ கிளாக்…” நவீன் சொல்லி முடிக்கும் முன்னே, “உங்க ஹாஸ்பிடல் ரிஷப்ஷன்ல தான் இருக்கேன்” வசீகரன் சொல்லி முடித்தான்.

 

‘என்னடா’ என்று இருந்தது நவீனுக்கு, “ஓகே ரிஷப்ஷன்ல கேட்டு என் ரூம்க்கு வா” என்றதோடு எரிச்சலோடு வைத்து விட்டான்.

 

ஐந்து நிமிட இடைவெளியில் எதிரே வந்து நின்றவனை நவீனின் பார்வை அளந்தது.

 

வசீகரன் எந்த பூச்சும் இல்லாமல் நேராக பேச்சை தொடங்கினான்.

 

“எங்க ஃபேமிலி மிஸ்அன்டர்ஸ்டேன்டிங்க்ல ரம்யா வீட்ல இந்த கல்யாணத்தை முடிவு பண்ணி இருக்காங்க, அவளை ஃபோர்ஸ் பண்ணி உங்க கூட கல்யாணம் நடத்தி வைக்க ட்ரை பண்றாங்க, ரம்யா சின்ன பொண்ணு சார், காலேஜ் கூட இன்னும் முடிக்கல, ப்ளீஸ் எப்படியாவது இந்த மேரேஜ நிறுத்திடுங்க” வசீகரன் சற்று இறங்கி பேசவும், நவீன் சத்தமாக சிரித்து வைத்தான்.

 

“யாரு அவளா சின்ன பொண்ணு, ஆஃப் சைஸ் பீப்பா மாதிரி இருக்கா நீ பாப்பா ரேஞ்சுக்கு பேசுற” நவீன் நக்கலாக பேச,

 

“மரியாதையா பேசுங்க, உங்க ஏஜ் என்ன? அவ ஏஜ் என்ன? உங்க பக்கத்துல அவ குழந்தை மாதிரி இருப்பா! இப்ப அவளுக்கு படிக்கிற வயசு சார்” வசீகரன் எழுந்த கோபத்தை அடக்கி, அவனுக்கு புரிய வைக்க முயன்றான்.

 

“சோ வாட், அதான் வயசுக்கு வந்துட்டால்ல, அப்புறமென்ன?”

 

அவன் கீழ்த்தரமான பேச்சில், “யோவ் எவ்வளோ சீப்பா பேசற நீ, ச்சே” அவன் முகத்தில் ஓங்கி நாலு குத்துவிட பரபரத்த கைகளை முயன்று மடக்கி அடக்கிக் கொண்டான்.

 

“ஆமா டா இதைவிட சீப்பா கூட பேசுவேன், எனக்கு பேசி இருக்கிற பொண்ண பத்தி எவனோ ஒரு பொறுக்கி நீ பேச வந்திருக்க, எனக்கு எப்படி இருக்கும்? அவளுக்கு யாருடா நீ? லவ்வரா? உனக்கு பயந்து தான் அந்த திவாகர் அவசரமா அவன் பொண்ண என் தலையில கட்ட பார்க்கிறானா?” நவீன் கடுப்புடன் படபடக்க,

 

“நீ மனுசனா இருப்ப உன்கிட்ட பேசினா புரிஞ்சிப்பன்னு நினச்சு வந்தேன். ஆனா நீ” வசீகரன் பற்களை நறநறத்தான்.

 

“நான் மனுசன் இல்லனு சொல்றீயா, யூ ராஸ்கல், உன்ன அடிச்சு விரட்டறத்துக்குள்ள மரியாதைய காப்பாத்திட்டு போயிடு” நவீன் கத்த,

 

“கத்தாதடா சுனாபுனாக்கி, போயும் போயும் உன்கிட்ட பேச வந்தேன் பாரு. என் டைம் வேஸ்ட்” என்று அருவருப்பாக சொல்லிவிட்டு வசீகரன் வேகமாக வெளியேறிவிட்டான்.

 

நவீனின் முகத்தில் ஏகத்துக்கும் கோபம் ஏறியது. அவனின் கோபம் அப்படியே ரம்யாவின் வீட்டில் எதிரொலித்தது.

***

 

வசீகரன், நவீனை சந்தித்து பேசியதை அறிந்து ஆடி தீர்த்து விட்டார் திவாகர். அவர் அத்தனை கத்தியும் ரம்யா ஒரு வார்த்தை பேசவில்லை. வழக்கம்போல லாலிபாப்பை வாயிலிட்டு கொண்டு, கார்டூன் சேனலின் சத்தத்தை அதிகமாக்கி வைத்திருந்தாள்.

 

கடைசியாக, “கல்யாணம் முடியற வரைக்கும் இந்த வீட்ட விட்டு வெளியே போய் பாரு, உன் கால உடைச்சி வைக்கிறேன்” என்று மிரட்டி செல்பவரை பார்க்க இவளின் இதழ்களுக்கிடையில் விரக்தியான நெளிப்பு மட்டுமே.

 

சொந்த வீடு சிறையாகி போனதில் சோர்ந்து போயிருந்தாள். இந்த திருமணம் வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லி ஆயிற்று கெஞ்சியும் கேட்டாயிற்று. ஆனாலும் வீட்டில் யாரும் இறங்குவதாகவே இல்லை. எந்த ஏலியன் பிடித்து கொண்டதோ அவர்களுக்கு. நேற்று வரை வீட்டின் செல்ல பெண்ணாக இருந்தவளை இன்று எதிரியாக பார்க்க ஆரம்பித்து விட்டார்கள், அவளின் அம்மா உட்பட. அவள் சொல்லும் எதையும் நம்பவும் மறுத்து இருந்தார்கள்.

 

போர்க்களத்தின் நடுவே நீருக்கு வாடும் ஒற்றை பூச்செடி போல அவள்நிலை. 

 

மாலையில் தவமணி அவளை பார்க்க வந்திருந்தாள். வசீகரன் தான் ரம்யாவை பார்த்து வர கேட்டு இருந்தான். தோழியின் நிலை குறித்த கவலையில் தவமணியும் மறுக்காமல் வந்திருந்தாள். நல்லவேளையாக யாரும் தடுக்கவில்லை. பைரவி அவளை இயல்பாகவே வரவேற்றார்.

 

அவருக்கு உதட்டை இழுத்து காட்டி புன்னகை தந்தவள், ரம்யாவை கேட்க, பைரவி அவளை மகளின் அறைக்கு அனுப்பி வைத்தார்.

 

கட்டிலில் சுருண்டு கிடந்தவள், “ரமி” அழைப்பில் எழுந்து தவமணியை கண்டதும், “தவா” என்று அவளை அணைத்து கொண்டவள் கண்கள் தன்னால் கலங்கின. இந்த சூழ்நிலையின் இறுக்கத்தை முழுதாக மூன்று நாட்கள் கூட தாங்க முடியவில்லை ரம்யாவால்.

 

“ஏய் அழாத ரமி, வசி தான் உன்ன பார்த்துவிட்டு வர சொன்னான், நீ நல்லா இருக்கல்ல” தவமணி அக்கறையாக வினவ,

 

ஏதோ தோன்ற கண்களை துடைத்துக் கொண்ட ரம்யா, “தவா, உன் மொபைல் கொஞ்சம் தரயா பிளீஸ்” அவள் மறுக்காமல் மொபைல் தர அதை வாங்கி கொண்டு நேரே குளியலறைக்குள் நுழைந்து கதவடைத்து வசி எண்களுக்கு அழுத்தினாள்.

 

மறுமுனையில் உடனே எடுத்தவன், “தவா, ரம்யாவ பார்த்தியா? எப்படி இருக்கா? ஏதாவது சொன்னாளா?” என்று விசாரிக்க,

 

“வசி” அழைத்த ரம்யா குரல் உடைந்தது. அவனிடம் இத்தனை அக்கறையை அவள் எதிர்பார்க்கவில்லை.

 

“ஏய் ரம்யா, என்னாச்சு? அழறியா?”

 

“யாரும்… நான் சொல்றதை கேக்கவே இல்ல. அந்த மாப்பிள கிட்ட பேசினேன்…! அவன் ரொம்ப மோசமா பேசறான். எனக்கு பயமா இருக்கு வசி, செத்து போகனும் போல எல்லாம் தோனுது” இவள் தேம்பலுடன் திக்கி சொல்ல, மறுமுனை கட்டானது.

 

ஒரு நொடி அவள் திகைக்க, மறுநொடி அவன் வீடியோ கால் செய்திருந்தான். கண்களை துடைத்துக் கொண்டு அதை உயிர்ப்பிக்க, அவன் முகம் திரையில் தெரிந்தது.

 

வசீகரன், “நீ அழுதுட்டே பேசறது எனக்கு சரியா புரியல” என்றவன் வீங்கி தடித்திருந்த அவளின் உதட்டை கவனித்து, “ரம்யா, யார் உன்ன அடிச்சது?” என்று பதறினான்.

 

“நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சண்டை போட்டேனா, அப்பா என்னை அடிச்சு தள்ளி விட்டுட்டாரு. ரொம்ப வலிச்சது… ஏன் நான் சொல்றதை யாருமே நம்ப மாட்டிங்கறாங்க, எனக்கு அழுக அழுகயா வருது” காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி தவித்தவளுக்கு மிதந்து வந்த மரத்துண்டாக அவன் அக்கறை நம்பிக்கை தர, அதை கெட்டியாக பற்றி கொண்டாள்.

 

“சரி அழாத, நான் இருக்கேன்ல உன்ன விட மாட்டேன்”

 

“உன்னால மட்டும் என்ன செய்ய முடியும்? 

 

“ஏதாவது செய்றேன்” என்றவனுக்கும் என்ன செய்வது என்று புரியவில்லை. உரிமையற்ற பெண்ணிற்காக என்ன உறவை சொல்லி போராடுவது?

 

அவன் தயக்கம் அவளுக்கும் புரிந்தது. தனக்காக அவன் இவ்வளவு கவலைப்படுவதே பெரிய விசயம். இயல்பான நட்பு கூட இல்லாதவனிடம் என்னவென்று உதவியை எதிர்பார்ப்பது என்ற சங்கடம் அவளிடம். 

 

“அப்பாவால என்ன முடியுமோ செய்யட்டும், ஆனா, அந்த சனியன்புடிச்ச நவீன மட்டும் நான் கட்டிக்க மாட்டேன், அவங்க இன்னும் பிரஷர் பண்ணி என் ஹெல்த் கன்ட்ரோல் மிஸ்ஸாச்சுனா… நானும் மிஸ்ஸாயிடுவேன். போகட்டும், ரொம்ப நாள் சந்தோஷமா என்னாலயும் வாழ முடியும்னு வாழ்ந்து காட்ட ஆசப்பட்டேன். அதான் முடியாது போல” அவள் குரல் தழுதழுத்தது.

 

“உனக்கு எதுவும் ஆகாது, மறுபடியும் சாகறதை பத்தி பேசாத ரம்யா, இந்த கல்யாணத்தை நான் நடக்க விட மாட்டேன்” அவளிடம் உறுதி தந்தவன், “உன் அப்பனுக்கு மூளை குழம்பி போச்சா என்ன? போயும் போயும் அப்படி ஒருத்தனை உனக்கு பார்த்திருக்காரு” என்று ஆதங்கமாக கேட்டான். 

 

“எனக்கும் அதான் தோனுது, மென்டல் டிஸ்ஆர்டர் பிகினிங் ஸ்டேஜ்ல இருக்காரு போல” ரம்யா மூக்கை உறிஞ்சியபடியே சொல்ல, வசி சிரித்து விட்டான்.

 

“பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கறவ தான நீ, பார்க்க வேண்டியது தான, உன் அப்பனோட பைத்தியத்துக்கான வைத்தியத்தை” என்று கிண்டலாக பேசி, அவள் மனதை இலகுவாக்க முயன்றான்.

 

“நான் தான் முழுசா படிக்கவே இல்லயே, இனியும் படிப்பேனா டவுட் தான். பேசிக் மட்டும் ஓரளவு தெரியும் அவ்வளவு தான். எனக்கு சைக்காலஜி ரொம்ப பிடிக்கும் தெரியுமா? மத்தவங்க மைன்ட் ரீட் பண்றது, அவங்க கேரக்டர் அப்சர்வ் பண்றதுல எல்லாம் அவ்வளோ இன்ட்ரெஸ்ட். மனுசனோட எயிட்டி பர்சன்ட்டேஜ் நோயிக்கு அவங்க மனசு தான் காரணம். மனசை நல்லா வச்சிருக்கறது மூலமா நலமா வாழலாம். அதுக்கு வழிகாட்டியா இருக்கனும்னு நினைச்சேன்” இன்னும் முட்டி வந்த வார்த்தைகளை அடக்கி, பேச்சை நிறுத்திக் கொண்டாள்.

 

“உன் கனவெல்லாம் நிச்சயம் நிறைவேறும் ரம்யா, உன்னோட‌ முதல் பேசன்ட் உன் அப்பன் தான், அவருக்கு ஒழுங்கா டிரீட்மென்ட் பண்ணா எல்லா சரியாயிடும்”

 

“அது ஒவ்வொரு ஸ்டேஜ்லயும் அவங்க ஏஜ் லெவலுக்கு ஏத்த மாதிரி டென்ஷன் ஃபார்ம் ஆகும், ம்ம் டுவன்டி ஃபைவ் ஏஜ் குள்ள நல்ல வேலை கிடைக்காதவங்களுக்கு வேலையபத்தின டென்ஷன், பயம் வரும், அதேபோல தேர்ட்டி ஏஜ் வரை கல்யாணம் கூடலனா, ரொம்ப வருசம் குழந்தை பிறக்கலனா… இதுமாதிரி அந்த வயசுல அவங்க எதிர்பார்ப்பு பூர்த்தி ஆகலைன்னா, ஏமாற்றம், கோபம், வெறுப்பு, இயலாமை, பிடிவாதம் இந்த உணர்வெல்லாம் அதிகமாகி அவங்க மைன்ட்செட்ட மாத்தி விட்டுடும். அப்பாவும் இப்ப அந்த மென்டல் கன்டிஷன்ல தான் இருக்காரு போல” என்று விளக்கம் தர, வசீகரன் புருவங்கள் இரண்டும் உயர்ந்தன.

 

“ஆஹா, அப்ப இதுக்கு என்ன டிரீட்மென்ட்டு?”

 

“அப்போதைக்கு அவங்க எதிர்பார்ப்பு பூர்த்தி ஆனாலே கொஞ்ச கொஞ்சமா ரிலாக்ஸ் ஆகிடுவாங்க! ஒருவேளை, அப்பா எனக்காக நல்லவனா ஒருத்தனை பார்த்திருந்தா! அவரோட பிடிவாதத்துக்காவது நான் சம்மதம் சொல்லி இருப்பேன், ஆனா அந்த நவீன் ரொம்ப மோசம் தெரியுமா” என்றவள், அவன் தன்னிடம் பேசிய தகாத பேச்சுகளை வசீகரனிடம் ஒப்புவித்தாள். 

 

அவனுக்கு சுறுசுறுவென்று கோபம் ஏறியது. தான் சென்று அவனிடம் பேசிய போதே அவனின் மோசமான பேச்சுக்கு மூக்கில் நாலு குத்து விடும் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு தான் வந்திருந்தான். ரம்யாவிடமும் அத்தனை கேவலாமாக பேசி இருக்கிறான் என்பதை அறிந்தபின், அவனை அடித்து துவைத்து விடும் வேகம் அவனுக்குள்.

 

“ஸ்கூல்ல காலேஜ்ல என்னை குண்டுனு நிறையபேர் கேலி பண்ணி இருக்காங்க வசி, ஏன் நீ கூட தான் என்னை கிண்டல் பண்ணி பேசி இருக்க, அதெல்லாம் விளையாட்டா என்னால கடக்க முடிஞ்சதே. ஆனா அவன் பேசினது… ரொம்ப மோசம்… என்னால தாங்கிக்க முடியல” அவள் முகங்கன்ற சொல்ல,

 

“அவனெல்லாம் மனுச ஜென்மமே இல்ல, அவன் பேச்சுக்கெல்லாம் நீ அழ தேவையில்ல, அவனை தூக்கி குப்பைல போடு”

 

“எனக்கு மட்டும் அவனை தூக்கி இடுப்புல வச்சிக்கனும்னு ஆசையா, வீட்ல யாருமே நான் சொல்றதை கேக்க மாட்டேங்கிறாங்க” என்று கோபமாக ஆரம்பித்தவள் கடைசியில் தேம்பலில் முடிந்தது.

 

“நான் உன் அப்பன் கிட்ட பேசுறேன், என்ன செஞ்சாவது இந்த கல்யாணத்தை கண்டிப்பா நிறுத்தறேன். எனக்காக நீ ஒன்னே ஒன்னு மட்டும் செய்யனும்” 

 

அவள் என்ன என்று அவனை பார்க்க, “இப்படி அழுது வடியாம எப்பவும் போல சிரிச்சிட்டு இருக்கனும்”

 

“ஆமா இங்க நடக்கறதெல்லாம் பார்த்தா சிரிப்பு எங்க இருந்து வருமா?”

 

“எல்லாம் சரியாகிடும் டா, என்னை நம்பு, நான் செஞ்ச குழப்பத்தை நானே சரி பண்ணிடுவேன்… நீ என்னை நம்பற இல்லை” 

 

“விதி… இப்ப உன்ன விட்டா வேற யாரும் இல்ல எனக்கு. எதாவது செஞ்சு இந்த கல்யாணத்த மட்டும் நிறுத்திடுடா உனக்கு புண்ணியமா போகும்”

 

“நான் பார்த்துக்கொள்கிறேன், பை, டேக் கேர்” அவன் விடைபெற,

 

“வசீ… நீயும் பத்தரமா இரு, அப்பா உன்மேல ரொம்ப கோவமா இருக்காரு” என்றாள். 

 

அவன் சிறு புன்னகையுடன் “ம்ம்” தலையசைத்து இணைப்பை துண்டித்தான்.

 

முகம் தெளிந்து வெளியே வந்த தோழியை ஆழமாக பார்த்த தவமணி, “நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டியே ரமி?” என்று புதிராக கேட்டாள்.

 

கைப்பேசியை அவளிடம் தந்து விட்டு, “கேளேன் தவா, அதென்ன ஒன்னு” என்று அவளை போலவே கேட்டு ரம்யா, மெத்தையில் சம்மணமிட்டு வாட்டமாக உட்கார்ந்து கொண்டாள்.

 

“நீயும் வசியும் லவ் பண்றீங்களா என்ன?” தவமணி சந்தேகமாக கேட்டுவிட, ரம்யா முகம் சுருங்கி போனது.

 

“ஏன் நீயும் இப்படி கேக்குற தவா?”

 

“இல்ல ரமி, உனக்கு ஒரு பிரச்சனைனு சொன்னதும் வேற எதையும் யோசிக்காம அவன் ஓடி வரான். நீயும் உன் பர்சனலை எந்த தயக்கமும் இல்லாம அவன்கிட்ட ஷேர் பண்ற… இதெல்லாம் லவ்வர்ஸ்க்கு நடுவுல தான் சாத்தியம்! அதான் கேட்டேன்”

 

“ம்ஹூம் இப்ப நடக்கிற இந்த பிரச்சனைக்கு பதிலா, ஒருவேளை வசி மேல எனக்கு காதல் வந்திருந்தா கூட சந்தோசப்பட்டு இருப்பேனோ என்னவோ?” ரம்யா வெறுமையாக சொல்ல, தவமணி தோழியை ஆறுதலாக அணைத்து கொண்டாள். “எல்லாம் சரியாகிடும் ரமி, உன்ன ரொம்ப நேரம் அழுமூஞ்சியா பார்க்க கடவுளுக்கு கூட பொறுக்காது” என்றாள் தேறுதலாய்.

***

 

காதல் கூத்து கட்டும்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!