Aathiye anthamaai – 1

Aathiye anthamaai – 1

1.முன்னோட்டம்

          ஆன்மிகம் (Spiritual) என்றதும் கடவுளை வணங்குவதோ வழிப்படுவதோ என்று எண்ணி கொள்ள வேண்டாம். அது நம் ஆத்ம பலம் சம்பந்தபட்டது.

           தொட்ட தமிழன் வரலாறை நாம் மூட நம்பிக்கை என தொலைத்து கொண்டிருக்கிறோம்.அவை எல்லாம் கடவுள் நம்பிக்கை என்ற பெயரால் பெரும் காரண காரியத்தோடு நமக்குள் புகுத்தபட்டது. கண்களை மூடி இறைவனை தரிசிப்பது கடவுள் நம் பிரச்சனைக்கு தீர்வு தருவார் என்பதற்காக அல்ல. நம்மை நாமே ஒருநிலைப்படுத்தி நமக்கான பிரச்சனைகளுக்கான தீர்வை நம் மனம் கண்டறியும் நோக்கத்தில். அதேப் போல்
மும்முறை கோவிலை நாம் வலம் வருவது நமக்குள் ஆக்கபூர்வமான சக்தி பெருகும் நோக்கத்தில். இப்படி நம் சம்பிராதாயங்கள் கணக்கில் அடங்கா பதில்களை கொண்டிருக்க நாம்தான் கேள்விகளை எழுப்புவதேயில்லை.

          தமிழன் கவிஞன், சிற்பி, ஓவியன், படைப்பாளி, புலவன், வீரன், சாம்ராஜ்யங்களை கட்டி ஆண்டவன் என்பது எல்லோரும் அறிந்ததே .இவை எல்லாவற்றையும் தாண்டி அவன் பெரிய அறிவியல் மேதை. அவனின் பெரும் கண்டுபிடிப்புதான் கடவுள். கோவில்களோ அவனின் அறிவியல் கூடம்.

          இந்த கதை நிறைய கற்பனைகளோடு சில உண்மைகளும் கலந்தவை. இது என்னுடைய புதிய முயற்சி.ஆனால் சில வருடங்களுக்கு முன்பே என்     மனதில் உதித்த பழைய சிந்தனை. தவறு இருப்பின் திருத்துங்கள், பிடித்தால் பாராட்டுங்கள், பிடிக்காமல் போனால் உரிமையோடு கடிந்து கொள்ளுங்கள்.

  1. செல்வியின் திருமணம்

நகர வீதிகள் எங்கும் மின்விளக்குகள் நட்சத்திரங்களாய் ஜொலித்து கொண்டிருந்தன.

வானை இடித்து விடுமோ என்று எண்ணங்கொள்ளச் செய்யும் அளவிற்கு உயர்ந்த கட்டிடங்கள்,

காதுகளை குத்தகைக்கு எடுத்து கொண்ட கைபேசிகள், சாலைகளில் சரமாரியாய் ஓடும் வாகனங்கள்,

இடைவிடாமல் காதுகளை துளைக்கும் ஹாரன் சத்தங்கள், தனித்தீவாய் மாறிவிட்ட வீடுகள்,

தொலைகாட்சியில் தொலைந்து போன உறவுகள் என மக்களின் வாழ்க்கையில் பரபரப்பு நாட்கள் செல்ல செல்ல அதிகரித்து கொண்டே சென்ற நிலையில்,

இத்தனை வேகமாய் ஓடும் காலக் குதிரையின் கயிற்றை யார் கட்டுப்படுத்துவது ?!

அது நிச்சயம் சாத்தியமற்ற ஒன்று.

ஆனால் நம் கற்பனை குதிரைகளுக்கு காலமோ நேரமோ கிடையாது.

அதை சில நேரங்களில் பின்னொக்கியும் ஓடும்.

சில நேரங்களில் நிகழ் காலத்தை விட்டு விலகி முன்னோக்கியும் ஓடும்.

நம் கதைக்காக அந்த கற்பனை குதிரையை நிகழ்காலத்தை விடுத்து  இருபத்தி ஐந்து வருடங்கள் பின்னோக்கி ஒடச் செய்வோமாக…

கண்ணுக்கெட்டிய தூரம் பசுமை படர்ந்திருந்து.

அடர்ந்து விரிந்து கிடந்த மரங்கள்.

காக்கை குருவியின் சத்தங்கள்.

வழியெங்கும் ஆடு மாடுகளின் நடைப்பயணங்கள்.

வீடுகளை வளைய வந்து கொண்டிருக்கும் கோழிகள் என அந்த ஆதித்தபுரம் கிராமமே அழகிற்கு இலக்கணமாய் விளங்கியது.

பொழுது சாய்ந்த போதிலும் வீதிகளில் அமர்ந்து பெண்கள் புரளிப் பேசிக் கொண்டிருக்க,

அவர்கள் ரகசியமாய் பேசிக் கொண்ட போதிலும் அந்த பேச்சுக்கள் நம் காதுகளிலும் கொஞ்சம் விழத்தான் செய்தன.

“ஏன்டி பொன்னம்மா ?… இதென்னடி கொள்ளையா இருக்கு, செல்விக்கு போயும் போயும் இப்படி ஒரு வாழ்கையா ?!”

“அவ நல்ல பொண்ணுதானே செண்பகம்”

“நல்ல பொண்ணுதான்டி… ஆனா அவதான் கொஞ்ச நாளாவே பித்து பிடிச்ச மாதிரி நடந்துகிட்டு இருந்தாளே!

தெரியாதாடி உனக்கு ?”

“ஆமாம் ஆமாம்” என்று முன்றாமவள் தலையசைக்க,

செல்வியை பற்றி அந்த ஊரே இப்படித்தான் பேசிக் கொண்டிருந்தது.

அவளை பெண் பார்க்க வந்தவர்கள் எல்லோருமே வீதிகளில் இவர்களின் பேச்சுகளை காதில் வாங்கிக் கொண்டு திரும்பிப் போய்விடுவது வழக்கமான ஒன்றாய் நடந்து கொண்டிருந்தது.

ஆனால் இன்று செல்விக்கு நடைபெற்றது போல் அந்த ஊரில் யாருக்குமே அப்படி ஒரு திருமணம் நடந்திருக்காது.

அது திருவிழாவோ என்று சந்தேகம் கொள்ளும் அளவிற்கு அந்த திருமணம் கோலாகலமாய் அரங்கேறியது.

அதுவும் ஊர் தலைவர் சண்முகவேலனின் மகன் சிவசங்கரன் என்பது அந்த திருமணத்தில் முக்கிய அம்சம்.

ஊரில் பெண்பிள்ளையை பெற்றவர்கள் எல்லோரும் அப்படி ஒருவன் மருமகனாய் வரமாட்டானா என்று ஏங்கும் நிலையில்,

அவன் செல்வியை திருமணம் செய்து கொண்டதை தாங்க இயலாமல் எல்லோரும் வயிற்றெரிச்சல் ஏற்படுவது சகஜம்தானே!

சிவசங்கரன் வீடுதான் அந்த ஊரிலேயே அழகிய பெரிய வீடு.

பின்புறம் மாட்டுக் கொட்டகை, மறுபுறம் கிணறு , முன்புறமோ அடர்ந்த மரங்கள், செடிகள் என அந்த வீட்டின் வெளிப்புற தோற்றமே அத்தனை அம்சமாய் காட்சியளிக்க,

முற்றத்தின் வழியாக நிலவின் ஒளி தடை ஏதுமின்றி அந்த வீட்டினுள் நுழைந்து வெளிச்சத்தை பரப்பிக் கொண்டிருந்தது.

அந்த வீட்டின் மாடியில் உள்ள கடைசி அறையில் சிவசங்கரன் தனக்கே உரிய கனவுலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான்.

ஜன்னலின் வழியே வீசும் புன்னை மரக்காற்று அவனுக்கு ரம்மியமான சூழ்நிலையை தோற்றுவிக்க,

செல்வியை திருமணம் செய்ய வேண்டும் என்ற அவனுடைய எண்ணம் இன்று ஈடேறிவிட்டிருக்க, அவனோ மனதிற்குள் ஆனந்த பிரவாகத்தில் மூழ்கி திளைத்துக் கொண்டிருந்தான் என்றே சொல்ல வேண்டும்.

சிவசங்கரன்.

அளவிற்கு கொஞ்சம் அதிகமான உயரம். மாநிறமான மேனி.

கட்டுடலான தேகம்.

நேர்த்தியாக வளைந்து அவன் கம்பீரத்தை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கும் முறுக்கு மீசை.

அடர்த்தியான புருவங்களுக்கு இடையில் பாலமாய் அமைந்திருக்கும் திருநீறு.

இவை எல்லாவற்றையும் மீறி அவனை மிடுக்காக காட்டும் வேட்டிச் சட்டை என எந்த ஒரு பெண்ணையும் கவர்ந்துவிடும்படியான தோற்றம் அவனுடையது.

அவன் செல்வியுடன் தொடங்கும் போகும் தன் வாழ்க்கை பயணத்தை எண்ணி பலநூறு கனவுகளோடு காத்துக் கொண்டிருந்த சமயம்  அந்த அறையின் நிசப்தத்தை உடைத்து கொண்டு  நுழைந்தாள் அவள்.

அந்த அறை முழுக்க ரீங்காரமிட்ட அவளின் கொலுசு சத்தத்தின் ஒலியால் சிவசங்கனின் நெஞ்சம் அத்தனை வேகமாய் படபடத்து கொள்ள,

அவளோ அவனிற்கு நேர்திசையில் நின்றுக்கொண்டு பாராமுகமாய் இருந்தாள்.

அந்த கணம் சிவசங்கரனின் விழிகள் செல்வியின் மீது நிலைகொண்டுவிட்டது.

சிறுவயதிலிருந்து இன்று வரை அவன் பார்த்தூ வளர்ந்த அவளின் வளர்ச்சியில் எத்தனை மாற்றங்கள் ?

பதின்மூன்று வயதில் மூன்றாம் பிறை நிலவை போல் ஒரு தெளிவான அழகு.

பதினாறு வயதில் அவளின் அழகு வளர்ந்து முழு நிலவை போல் ஒளிவீச,

சட்டென்று இன்று அவள் முகம் இருளை கிழித்து கொண்டு உதிக்கும் சூரியனைப் போல் அதீத பிரகாசமாய் ஜொலித்து கொண்டிருந்தது.

கண்கள் கூசும்படியான அந்த பிரகாசமான அழகை அவன் எத்தனை நேரம் அப்படியே ரசித்து கொண்டிருந்தான் என்பது அவனுக்கே தெரியாது.

செல்வி.
மாநிறமான மேனி கொண்டவள்தான். அதே நேரம் எல்லாப் பெண்களும் பொறாமை கொள்ளும்படியான உயரம். ஒல்லியான உருவம்.

கரு நாகம் போல் நீண்டு தொங்கும் தலைமுடி.

சோழர் காலத்தில் செதுக்கி வைத்த சிற்பம்  அவள் முகம்.

அவள் கண்கள் அத்தனை சீக்கிரத்தில் யாரையும் நிமிர்ந்து பார்த்துவிடாது.

ஆனால் அப்படி அந்த கண்கள் நேராய் பார்த்துவிட்டால் அந்த பார்வையின் தாக்கத்தையும், விழியின் அழகையும் அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்துவிட முடியாது.

அப்படி ஒரு கூர்மையான அகல விரிந்த விழிகள் அவளுக்கு.

அவள் மேனி பொன் நகைகளை பார்த்ததேயில்லை.

ஆனால் இன்று அவள் பூட்டியிருந்த நகைகள் எல்லாம் அவள் அழகோடு இயைந்து அவளை இன்னும் பேரழகியாய்  காட்சி அளிக்கச் செய்தது.

சிவசங்கரன் மெல்ல தன் மூச்சை இழுத்துவிட்டு கொண்டு,.ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபடி இருந்த நிலவிற்கு தடை சொல்லிவிட்டு கதவை அடைத்தான்.

அவனுக்கே உரிய மிடுக்கான நடையில் செல்வியின் அருகே வந்து நின்றான்.

அவள் கைகளில் இருந்த பால் டம்ளரை அவன் வாங்க முற்பட, அவள் நடந்து கொண்டு விதம் அவன் பலமான இதயத்தை உலுக்கிவிட்டதே !

அவள் கைகள் நடுங்கி பால் கீழே கொட்டியது என விவரிக்கப்பட வேண்டிய காட்சி வேறுவிதமாய் அரங்கேறியது.

அவன் கைகள் அவளின் கைகளின் மேல்பட்டதும் அவளே அந்த பால் டம்ளரை தரையில் விட்டெறிந்தாள்.

சிவசங்கரனுக்கு தான் கண்ட காட்சி மெய்தான் என்று நம்பவே சில மணி நேரங்கள் பிடித்தன.

அவன் ஒருவாறு தன்னிலை மீட்டு கொண்டு அவளிடம்,

“என்னாச்சு உனக்கு ?” என்றவன் அதட்டலாய் கேட்க,

அவளிடம் இருந்து பதில் ஏதும் வரவில்லை.

மீண்டும் அதே கேள்வியை இன்னும் சத்தமாய் அவளின் தோள்களை உலுக்கியபடி கேட்டான்.

அந்த நொடி உக்கிரமாய் அவனை நிமிர்ந்து பார்த்தவள்,

“பேய் பிடிச்சிருக்கு… இல்ல இல்ல பைத்தியம் பிடிச்சிருக்கு”
என்று தன் குரலை உயர்த்தி கத்திவிட,

அவன் அதிர்ச்சியே ரூபமாய் நின்றான்.

அவன் கண்ட காட்சியை அவனால் நம்பவே முடியவில்லை.

அவளா அப்படி தன்னிடம் நடந்து கொண்டாள் ?

அதுவும் தன்னை பார்த்தாலே தலையை நிமிராமல் மிரட்சியோடு நிற்கும் செல்வியா இவள் ?!

3. நாணயம்

சில விநாடிகள் யோசனையில் ஆழ்ந்தவன், அவளுக்கு இந்த புது சூழல்  பயத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி இருக்கக் கூடும் என்று மனதை தேற்றிக் கொண்டு

அவளைப் பொறுமையோடு நெருங்கினான்.

அவள் தலையை கவிழ்ந்தபடி நின்றிருக்க, அவளின் தோள் மீது கைவைத்தவன்,

“என்னமா நடந்தது?… யாராவது ஏதாவது சொன்னாங்களா?!” என்று கொஞ்சம் அமைதியாகவே அவளிடம் கேட்டான்.

ஆனால் அவள் தன் முகத்தின் இறுக்கத்தை மாற்றாமல் இல்லை என்பது போல் தலையசைத்தாள். அவன் மீண்டும்,

“இந்த கல்யாணத்துல உனக்கு விருப்பம்தானே செல்வி?!” என்று வினவ,

அந்த கேள்வியை இங்கே இப்போது கேட்பது அத்தனை அபத்தம் என்று தெரிந்தும் கேட்டான்.

அவளோ அவன் முகத்தை எந்தச் சலனமுமின்றி ஏறிட்டுப் பார்க்க,

அவளின் கண்களின் கூர்மை அவனின் இதயத்தைக் கிழித்தது.

பெருமூச்சொன்றை வெளிவிட்டவள் அவனை நோக்கி,

“இந்த கல்யாணம் நடக்கலான்னா எங்க அம்மா நாண்டுகிட்டு செத்துருவேன்னு சொல்லிச்சு… அதான் நான் செத்தாலும் பரவாயில்லன்னு இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்” வெகுநிதானமாக அவள் பதிலளிக்க, அவன் சுக்குநூறாய் உடைந்தான்.

விழிகள் சிவப்பேற அவளை ஆழ்ந்து நோக்கியவன்,

“என்னடி சொன்ன?… திரும்பச் சொல்லு” என்று உச்சபட்ச கோபத்தோடு கேட்க

அவனை சீற்றமாய்  பார்த்தவள்,

“உங்க குடும்பத்துல வாக்கப்படறதுக்கு நான் நாண்டுகிட்டு தொங்கி இருக்கலாம்னு சொன்னே !” என்றாள் அழுத்தமாக!

அவள் சொன்ன வார்த்தைகள் அவன் நாடி நரம்புகளில் பாய்ந்த குருதிகள் உஷ்ணமாய் மாற்ற, எத்தனை நேரம்தான் அவனும் தன் கோபத்தை கட்டுப்படுத்தி கொண்டிருக்க முடியும் ?

அவள் கன்னங்களில் தன் விரல்கள் பதியுமாறு அவன் ஓர் அறை கொடுக்க,  அவனின்  கரத்தின் வலிமையைத் தாங்க முடியாமல் அவள் தெறித்து கீழே விழுந்துவிட்டாள்.

வீழ்ந்து கிடந்தவளை அவன் உக்கிரமாய் பார்க்க,

அவள் முகமோ எந்த வித உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தவில்லை கண்ணீர் உட்பட!

அவன் அடித்த அடி அவளுக்கு வலித்திருக்குமோ தெரியாது.

ஆனால் அவள்  கூர்மையாக அவனைப் பார்க்கும் பார்வையும் அவளுடைய வார்த்தைகளும் அவனை வெகுவாய் காயப்படுத்தி இருந்தது.

இனியும் எந்தவித அதிர்ச்சிகளையும் தாங்க அவன் இதயத்திற்கு பலமில்லை என்று எண்ணமிட்டுக் கொண்டே படுக்கையில் சரிந்தான்.

சில மணி நேரங்கள் முன்பு அழகாய் பூத்திருந்த அவன் கனவுகள் அத்தனையும் வாடி வதங்கிப் போனதே !

தன் மீது அவளுக்கு அப்படியென்ன கோபம் ?

அது அவளுக்கு மட்டுமே தெரிந்திருக்க கூடும்.

அவன் படுக்கையில் கிடந்தாலும் அவன் கண்களை உறக்கம் தழுவவில்லை.

அவளைத் திருமணம் செய்து கொள்ளுவதற்காக அவன் குடும்பத்தில் உள்ள எல்லோரையும் எதிர்த்துக் கொண்டுவிட்டான்.

இப்பொழுது அவன் செயலை நினைத்தால் அவனுக்குச் சிரிப்புதான் வந்தான்.

சிவசங்கரனின் தந்தை ஊர்த் தலைவனாய் இருக்கும் சண்முகவேலன்.

வயல்வெளிகளைத் தோப்பு துறவுகளைக் கவனிப்பது ஊர்பிரச்சனைகளை தீர்ப்பது என எப்போதும் ஓய்வில்லாமல் பெற்ற  பிள்ளைகளை கூடக் கண்டுகொள்ள முடியாத அளவுக்கு வேலை அவருக்கு.

தாய் சங்கரி கடைசி மகள் பரமேஸ்வரியை பிரசவித்தது விட்டு மறைந்து போனாள்.

தாயில்லாத தனிமையை சிவசங்கரனுக்கு அவன் பாட்டி ஆதிபரமேஸ்வரி ஒருவாறு தீர்த்து வைத்தார்.

சில காலங்களில் நோய்வாய்ப்பட்டு அவன் பாட்டியும் இறந்து போக, அன்றிலிருந்து தந்தையின் பின்னாடி நடந்தவன், இளையவனாய் இருந்தும் பொறுப்புகளை தானே முன் வந்து சுமக்க ஆரம்பித்தான்.

அவனுக்கு இரண்டு சகோதரிகளும் இரண்டு அண்ணன்மார்களும் இருந்தனர்.

அக்கா மனோரஞ்சிதம்,.தங்கை பரமேஸ்வரி.

அண்ணன்கள் வேல்முருகன், மாணிக்கம்.

மூத்தவர்களாய் இருந்தும் சிவசங்கரனை போல் பொறுப்பை சுமந்து பழகாதவர்கள்.

ஏதோ பெயருக்காக வேலை செய்வது போல் அப்பாவின் எதிரில் நடிப்பவர்கள்.

அவர்களின் மனைவிகள் கனகவள்ளி, கண்ணம்மா.

மூத்த மகன் வேல்முருகனை திருமணம் செய்து கொண்டு வந்த கனகவள்ளி தன் கணவனை கைப்பொம்மையாய் மாற்றிக் கொண்டுவிட,

இயல்பாகவே வீட்டின் ராஜ்ஜியம் அவள் கைக்கு போனது.

அதன் காரணமாய் அடுத்து வந்த மருமகளான கண்ணமாவையும் அவளே ஆட்டிப்படைக்கத் தொடங்கினாள்.

வேல்முருகனுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர்.

மாணிக்கத்திற்கு இரண்டு மகன்கள்.

அதிலும் அவனின் கடைசி மகன் முருகன் படுசுட்டி.

அவனின் அக்கா மனோரஞ்சிதம் ஒரு முரடனைத் திருமணம் செய்து கொண்டு வெளியூரில் இருக்கிறாள்.

அவளுக்கும் இரண்டு மகன்கள்.

அந்த வீட்டின் கடைக்குட்டி தங்கை பரமேஸ்வரியோ இன்று உயிருடன் இல்லை.

இந்த அழகான கூட்டு குடும்பத்திற்குள் இவர்களின் திருமணம் பெரும் புயலை உருவாக்கியிருந்தது.

அதிலும் கனகவள்ளிதான் இவர்களின் திருமணத்தை இன்று வரை எதிர்த்துக் கொண்டிருப்பவள்.

அவளுக்கோ அவள் தங்கை அமுதவள்ளியை சிவசங்கரனை மணமுடித்து வைக்க வேண்டும் என்ற பேரவா !

அதற்குக் காரணம் வீட்டில் பொறுப்பானவன் சிவசங்கரன்.

அவன் சண்முகவேலனுக்கு ரொம்பவும் செல்லமகன்.

சொத்துக்களில் அவனுக்கு அதிக பங்கு போய்விடுமோ என்ற பயம்.

அவனுக்கு தன் தங்கையை மணமுடித்து அவனின் பங்கையும் தன் வசம் வைத்துக் கொள்ள எண்ணம் கொண்டிருந்தாள்.

இப்படியான குடும்ப அரசியலுக்குள் சிவசங்கரன் ஐந்து வருடங்களாய் செல்வியை நேசிப்பதை யாருமே ஏற்றுக் கொள்ள தயாராகில்லை, அவன் அப்பா உட்பட!

செல்வியின் தாய் மங்களம் சண்முகவேலனுக்கு சொந்தத்தில் தங்கை முறை என்றாலும் அவள் கணவனை இழந்து ஏழ்மையில் வாடுபவள்.

சிறு கூரை வீடு, கொஞ்சம் நிலமே அவர்களின் சொத்து.

இந்தக் காரணங்கள் எல்லாவற்றையும் சிவசங்கரனின் பிடிவாதம் உடைத்தெறிந்தது.

எப்படியோ தன் குடும்பத்தினரிடம் எதிர்த்துப் போராடி தான் நேசித்தவளையே அவன் மணமுடித்து இருக்க,

யாருக்காக அவன் இத்தனையும் செய்தானோ

அவள், ‘உன்னை திருமணம் செய்தது உயிரை விடுவதற்கு சமானம்’ என்று கூறிவிட்டாள்.

அந்த வார்த்தை உயிர் வரை பாய்ந்து அவனைக் கொல்லாமல் கொல்ல,

விழிகள் மூடிப் படுத்து கிடந்தவனுக்கு வெகுளியாய் பார்த்து ரசித்த அவளின் அந்த முகமே முன்வந்து நின்றது.

ஆனால் இன்று ஏனோ அந்த வெகுளித்தனம் அவளிடம் இல்லாமல் போயிருந்தது மனம் வேதனையுற்றவள்

மெல்ல அவள் புறம் பார்வையைத் திருப்பினான்.

அவளோ சுவற்றில் சாய்ந்த மேனிக்கு உறங்கிக் கொண்டிருக்க, அவனின்  விழிகள் அவளை அடித்ததை எண்ணி அந்த நொடி வருந்தி நீரை உகுத்தன.

அவன் மனமோ தான்தான் நிம்மதியற்று கிடக்கிறோம் என்று எண்ணிக் கொண்டிருக்க,

 

அவன் விழிகள் அப்போது செல்வியின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த டாலரை உற்று பார்க்கலாயின.

 

மஞ்சள் கயிற்றில் பிணைக்கப்பட்டிருந்த அந்த டாலரில் அவன் குடும்பத்தின் குலதெய்வம் ஆதிபரமேஸ்வரியின் சிலை தத்துரூபமாய் வடிக்கப்பட்டிருந்தது.

 

அதெப்படி அவள் கழுத்தில் ?

 

எண்ணி ஆச்சமுற்றவனுக்கு உண்மையில் விளங்கவில்லை.

 

அது அவன் குடும்பத்தாரின் பெண் வாரிசுகள் மட்டுமே அணிந்து கொள்ளும் டாலராயிற்றே.

 

ஆனால் அது அவள் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்தது அவனுக்குப் புரியாத புதிராய் இருக்க,

 

இந்தப் புதிருக்கான விடையை அவள் மட்டுமே சொல்ல முடியும்.

 

ஆனால் ஆழ்ந்து உறக்கத்தில் கிடக்கும் அவளை எழுப்ப மனமின்றி தலையணையை நிமிர்த்திச் சாய்த்தபடி பெருமூச்சுவிட்டான்.

 

அவன் பாட்டி அந்த நாணயத்தைப் பற்றி ஏதோ சொன்னது மின்னலடித்தது போல் அவனுக்கு ஞாபக வந்தது.

 

‘அந்த டாலரை அணிந்து கொண்டிருக்கும் பெண்களுக்கு ஆளுமைத் திறன் இயல்பாகவே வந்துவிடும் என்றும் அவர்கள் நினைத்ததை நடத்தும் வல்லமை படைத்தவர்களாய் இருப்பார்கள்’ என சொல்லியிருக்க,

 

அந்த நொடி சிவசங்கரனுக்கு செல்வியின் வித்தியாசமான நடவடிக்கைக்கு அந்த டாலர் காரணமாக இருக்குமோ என்று சந்தேகிக்க தோன்றியது.

 

இப்படியாக யோசித்துக் கொண்டிருந்தவன்  சிறிது நேரத்தில் அவனையும் மறந்து நித்திரை மூழ்கினான்.

 

*************

 

அப்போது செல்லம்மா தன் கதையின் முதல் அத்தியாயத்தை முடித்து விட்டு எழுதுகோலைக் கீழே வைத்து விட்டு நிகழ் காலத்திற்குள் நுழைந்தார்.

 

முடிவில்லாத தன் கதையினை தொடங்கிவிட்டேன்.

 

இதன் அந்தத்தை நான் எங்கனம் தேடுவேனோ என்றவர் சிந்தித்திருக்க,

 

அவர் கண்களில் கண்ணீர் ஆறாய் பெருகி ஓட ஆரம்பித்தது.

 

அந்தச் சமயம் அவரின் சிந்தனையை கலைக்கும் விதமாய் அறையின் கதவு தட்டப்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!