தாகம் – 26
வானம் மேக மூட்டமாய் காட்சி அளித்தது. ரமேஷ் வாங்கி குடுத்த கேமராவோடு மாடியில் சூர்ய உதயத்தை படமாக்கி கொண்டிருந்தாள் திவ்யா.
” குட் மார்னிங் திவ்யா…. கேமரா எப்படி இருக்கு ?” , என்று ரமேஷ் கேட்க, “சூப்பர் “, என்று திவ்யா பதில் அளிக்க , “நீ சுமாரா எடுத்தா கூட சூப்பரா இருக்கும்..”, என்று ரமேஷ் கூறினான்.
“ஓ…!” , சரி உன்னை போட்டோ எடுக்கிறேன் …. சுமாரா இருக்கா சூப்பரா இருக்கானு பார்ப்போம்” , என்று திவ்யா கூற, ஜாகிங் முடித்து ட்ஷர்ட் ட்ராக்ஸ் அணிந்து வந்த ரமேஷ் மாடிப்படி திண்டில் ஏறி அமர்ந்தான் .
“சூப்பரா இருக்க ரமேஷ்… உண்மையிலே சுமாரா இருக்கிறவங்கள எடுத்தா கூட , சூப்பரா இருக்கு பாரேன். நல்ல கேமரா தான் ..” , என்று திவ்யா கூற, அவள் காதுகளை ரமேஷ் திருக, ” இந்த போட்டோவை சித்ரா கிட்ட காட்டட்டுமா..? “, என்று திவ்யா வினவினாள்.
“எந்த சித்ரா?”, என்று திவ்யாவை கூர்மையாக பார்த்தபடி கேட்டான் ரமேஷ்…
“எத்தனை சித்ராவை தெரியும்..?” , என்று திவ்யா நக்கலாக கேட்க, “ரொம்ப பழைய ஜோக்…”, என்று தோளை குலுக்கினான் ரமேஷ்.
“எதையோ மறைக்கிற மாதிரி தோணுதே.. “, என்று திவ்யா கூற, “நான் எதுக்கு மறைக்கணும்?”, என்று ரமேஷ் கேட்டான்.
“அது தான் எனக்கும் தெரியல… ” , என்று கூறிய திவ்யா, மாடி படி திண்டில் ஏறி அமர்ந்தபடி “G.K ” இண்டஸ்ட்ரீஸ் சித்ரா உன்னை விசாரிச்சாங்க..” , என்று கேமராவை பார்த்தபடியே கூறினாள்.
“என்னையா..? எதுக்கு..? சித்ரா , விக்ரம், நான் மூணு பேரும் கிளாஸ் மேட்ஸ்.. .” , என்று யோசனையாக கூறினான் ரமேஷ்…..,
“ஆனா சித்ரா விக்ரமை பற்றி கேட்கலை உன்னை பத்தி தான் கேட்டாங்க…. “, என்று சித்ரா கூற, தோளை குலுக்கி கொண்டு , “நமக்கு ஏற்கனவே நிறைய வேலை இருக்கு… அதை பார்ப்போம்.. “, என்று கூறிவிட்டு படி இறங்கி சென்றான் ரமேஷ்…
திவ்யா யோசனையோடு அமர்ந்திருக்க, “ரொம்ப யோசிக்காத.. அந்த அளவுக்கு எதுவும் worth இல்லை…. “, என்று கீழே இருந்து குரல் கொடுத்தான் ரமேஷ்..
“நான் யோசித்து கொண்டிருப்பேன் என்று இவனுக்கு எப்படி தெரியும்..?” , என்று நினைத்துக் கொண்டு படி இறங்கினாள் திவ்யா.
இருவரும் அலுவலகம் கிளம்ப, வானம் எப்பொழுது தன் ரூபத்தை காட்டுமோ , என்று எண்ணும் விதமாக கருநீல நிறத்தில் காட்சி அளித்தது.
” மழை வரும் போல் தெரிகிறது. நான் உன்னை டிராப் பண்ணிட்டு, அப்படியே ஆபீஸ் போறேன்.. “, என்று கூறியபடி ரமேஷ் பைக் எடுக்க, மறுப்பேதும் சொல்லாமல் அவனோடு கிளம்பினாள் திவ்யா.
ரமேஷ் அலுவலகம் செல்லும் வரை மேகங்கள் அதன் வேலையை காட்ட வில்லை.
ரமேஷ் நேரடியாக விக்ரமின் அறைக்கு செல்ல, விக்ரம் லேப்டாப்பில் மூழ்கிருந்தான்.
ரமேஷின் காலடி ஓசை கேட்டு நிமிர்ந்த விக்ரம், ரமேஷின் முகத்தை பார்த்து , “Anything fishy?” , என்று வினவினான்.
“ஆம்” , என்று விக்ரம் எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தபடியே தலை அசைத்தான் ரமேஷ்.
ரமேஷ் அவன் மொபைலில் ரிக்கார்டு செய்திருந்த நேற்றைய பேச்சை ஒலிக்க செய்தான்.
” அந்த பொண்ணு சின்ன பொண்ணு அறிவில்லாம தனியா சுத்துது..
விக்ரமிற்கு அந்த பொண்ணு மேல அக்கறை இருக்கிற மாதிரி தெரியலியே…. இவ்வளவு சொன்ன பிறகும்.. அந்த பொண்ணை தனியா இறக்கி விட்டுட்டு போயிருக்கான்… அது தான் அந்த அம்மா கல்யாணம் வேண்டாமுன்னு சொல்லுதுல…. திவ்யா கூவம் நதிக்கரை பக்கம் போக கூடாது……”, என்ற கம்பீர குரல் ஒலித்தது.
” நீங்க யாரு..? ” , என்று ரமேஷ் வினவ, சிரிப்பு சத்தத்தோடு மொபைல்
பேச்சு துண்டிக்கப் பட்டது..
விக்ரம் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தான். மீண்டும் மொபைல் பேச்சை ஒலிக்க செய்தான். அந்த பேச்சு முடிந்த உடன், ” நான் திவ்யாயை பற்றி பேசிய விஷயம் திவ்யா, உனக்கு, எனக்கு , அம்மா நாலு பேருக்கு தான் தெரியும்… இதை தாண்டி யாரோ ஒருவருக்கு தெரிஞ்சிருக்கு.. யார் அது…?” , என்று விக்ரம் சிந்திக்க,
“மிரட்டல் திவ்யா செய்ற வேலைக்கா இல்லைனா வேற எதுவும் விஷயமா இருக்குமோ…? ஏன் திவ்யாக்கு கால் பண்ணாம.., உனக்கும் எனக்கும் பண்ணனும்..?” , என்று ரமேஷ் கேட்டான்..
” Just to divert us….. நிச்சயமா இது திவ்யா செய்ற வேலைக்காகத் தான்… என்னை மிரட்டணுமுனா உனக்கு கால் பண்ணிருக்க மாட்டாங்க” , என்று விக்ரம் கூற, “ஆண்ட்டி கல்யாணத்துக்கு மறுப்பு தெரிவிச்ச விஷயம் எப்படி தெரிஞ்சிருக்கும்…?” , என்று ரமேஷ் கேட்க விக்ரமிற்கு பொறி தட்டியது.
“ஒரு வேளை வேறு யாரோ சொல்லி தான் அம்மா கல்யாணம் வேண்டாமுன்னு சொல்றாங்களோ..? ” , என்று விக்ரம் சிந்தித்த படியே “வீட்டுக்கு வந்த phone calls track பண்ணா தெரிச்சிரும் …” , என்று கூறிக் கொண்டு லேப்டாப்பை பார்த்தான்.
கடந்த வாரங்களில், அவர் வீட்டுக்கு வந்த அனைத்து அழைப்புக்களையும், ரிகார்ட் செய்யப்பட்ட பேச்சுக்கள் கொண்ட ” recorded folder” யை லேப்டாப்பில் பார்த்தான்.
விக்ரமை அதிர்ந்து பார்த்த ரமேஷ், “டெய்லி எல்லா பேச்சையும் ரிகார்ட் பண்றதுண்டா..?” , என்று வினவ, “அம்மா சில விஷயங்கள் மறந்திடுறவங்க.. ஆட்டோமேடிக்கா எல்லா பேச்சுக்களும் ரிகார்ட் ஆகும்…. நான் தேவையானது மட்டும் கேட்பேன்…” , விக்ரம் கூற தலை அசைத்து கேட்டுக் கொண்டான் ரமேஷ்.
“இதுல எந்த தேதினு தேடறது ” , என்று ரமேஷ் வினவ, “முதல் தடவை நான் திவ்யாவை பார்த்தது இன்டெர்வியூல , ரெண்டாவதா அந்த விபத்து, அப்புறம் அம்மன் கோவில் பக்கம், அதே நாள் நிஜம் பத்திரிக்கை ஆஃபீசிலே, நெக்ஸ்ட் coffee shop, அடுத்து பீச் ரிசார்ட்“,என்று விக்ரம் கூறிக்கொண்டே போக, “இது காதலா? இல்லை ஞாபக சக்தியா..? ” , என்று ரமேஷ் வியந்தான்.
” Yes I got it… , நம்மளை பீச் ரிசார்ட்ல தான் பார்த்திருக்கணும்.. அம்மாவும் நான் எதுவுமே சொல்லாம அவங்களாகவே, அந்த பொண்ணை மறந்திருனு அந்த ரிசார்ட் விசிட் க்கு அப்பறம் தான் சொன்னாங்க… Something has gone wrong there…” , அதுக்கு அப்பறம் வந்த கால் லிஸ்ட் மட்டும் பார்த்தா போதும் ” , என்று கூறிக் கொண்டே விக்ரம் லேப்டாப்பில் தேட, சில நிமிடங்களில் அந்த உரையாடல் அவன் கையில் சிக்கியது.
விக்ரம் “Recorded audio file” யை ஆன் செய்தான்.
” என்னம்மா அந்த பொண்ணோட அப்பாவுக்கு உதவி பண்ணி அவரை கொலை செய்துடீங்க…. இப்ப உன் மகன் அந்த பொண்ணுக்கு உதவி பண்ணி அந்த பொண்ணை சாகடிக்க போறானோ..?” , என்று கம்பீரமாக ஒலித்தது அதே குரல்.
“ஹல்லோ ஹல்லோ… இது பொய் … ” , என்று அவன் தாயின் குரல் பதட்டத்தோடு ஒலித்தது.
அந்த தாயின் பதட்டத்தில், ரமேஷ் சிந்தனையில் ஆழ்ந்தான். விக்ரமிற்கு கோபம் தலைக்கேறியது. விக்ரமின் கை முஷ்டி இறுகியது.
இதை தன்னிடம் மறைத்த தாயின் மீதும் விக்ரமிற்கு கோபம் வந்தது.
விக்ரமின் முகத்தை பார்த்து, அவன் நினைப்பதை யூகித்து , “விக்ரம் ஆண்ட்டி மேல கோபம் வேண்டாம்… அவங்க என்ன பண்ணுவாங்க..? பாவம்.. இப்படியே இருந்தா எல்லாருக்கும் நல்லதுன்னு நினைச்சிருப்பாங்க… ” , என்று ரமேஷ் கூற, ” அம்மா இந்த மிரட்டலை என்கிட்டே மறச்சிட்டாங்க…. என்கிட்டே சொல்லிருக்கணும்… எதுவுமே தெரியாத மாதிரியே பேசினாங்க.. கல்யாணம் வேண்டாமுன்னு, திவ்யா அம்மாவை தான் காரணமா சொன்னாங்களே தவிர…இதை சொல்லவேயில்லையே… பிசினெஸ் விஷயத்துல கூட விட்டுக்கொடுக்காத நான், இந்த மிரட்டலுக்கெல்லாம் பயந்து என் கல்யாண விஷயத்தில் விட்டு கொடுத்திருவேனா..? இவங்க என்ன தடுக்கிறது ? திவ்யா அவ நினைச்சதை தான் செய்வா.. ” , என்று விக்ரம் அழுத்தமாக கூற, “திவ்யா அதிர்ஷ்டசாலி” , என்று நினைத்து மௌனமாய் சிரித்துக் கொண்டான் ரமேஷ்.
“ஏன் சிரிக்கிற ரமேஷ்.. நம்மளால திவ்யா அளவுக்கு மத்தவங்களுக்காக யோசிக்க முடியுமா..? திவ்யாவுக்கு உதவி பண்ற மாதிரியாவது இருக்கணும்ல ” , என்று விக்ரம் தீவிரமாக பேச, “சரியான ஜோடி… “, என்று நொந்து கொண்டான் ரமேஷ்.
“தெரிந்த நபர்கள் மூலம் மொபைல் நம்பர் வைத்து ட்ராக் செய்ய வேண்டும்.” , என்று முடிவெடுத்து மற்ற பணிகளை இருவரும் தொடர்ந்தனர்.
இவர்கள் நினைத்தால் நடந்து விடுமா..?
சுமார் 12:30 மணி போல், திவ்யா ரமேஷை பார்க்க அலுவலகத்திற்கு வந்தாள். திவ்யாவை தன் அறையிலிருந்து கண்ணாடி வழியாக பார்த்த விக்ரம் அவளை அழைத்து உள்ளே வர சொன்னான்.
” ரமேஷ் இல்லையா..? ” , என்று திவ்யா வினவ, “கிளைண்ட்ஸ் மீட் பண்றதுக்காக போயிருக்கணும்னு நினைக்கிறேன்.. ” , என்று விக்ரம் கூற, “கொஞ்சம் டீடெயில்ஸ் வேணும்.. அது தான் ரமேஷை நேர்ல பார்த்து வாங்கிட்டு போகலாமுன்னு நினச்சேன்.. எப்படியும் வேற இண்டஸ்ட்ரியில யாரை மீட் பண்ணணும்னாலும் திரும்ப appointment வாங்கணும்.. ரொம்ப கஷ்டம்.. உங்க இண்டஸ்ட்ரினா எனக்கு ஒர்க் ஈஸி…”, என்று திவ்யா கூறினாள்.
“ரெண்டு இண்டஸ்ட்ரி தான் நீங்க இன்டெர்வியூ பண்றீங்களா..? “, என்று விக்ரம் வினவ, “மொத்தமா 20 இண்டஸ்ட்ரீஸ்…. நான் நாலு இண்டஸ்ட்ரி டீடெயில்ஸ் கலெக்ட் பண்றேன் “, என்று திவ்யா பெருமையாக கூறினாள். “ரமேஷ் ரெண்டு தானே சொன்னான்… ” , என்று விக்ரம் நினைக்க, “என் டீம் மேட் ஸ்வாதி லீவு போட்டுட்டு போய்ட்டா… , அவளோடதையும் நான் தான் பண்றேன்.. ” , என்று திவ்யா கூறினாள் கூடுதல் தகவலாக..
அந்த இண்டஸ்ட்ரி டீடைல்ஸையும் பேச்சு வாக்கில் கேட்டு தெரிந்து கொண்டான் விக்ரம்.
“எப்படியும் அரைமணி நேரத்துல ரமேஷிற்கு வேலை முடிஞ்சிரும்… ” , என்று விக்ரம் கூற தலை அசைத்து கொண்டு விக்ரமை ஆழமாக பார்த்தாள் திவ்யா.
திவ்யாவிற்கு விக்ரம் அவன் தாயிடம் பேசியது நினைவுக்கு வந்தது. அவள் முக மாற்றத்தை கண்டு கொண்டு , “சாரி ” , என்று கூறினான் விக்ரம்.
” உங்க கிட்ட கூட பேசாம அம்மா கிட்ட சொல்ல வேண்டிய சூழ்நிலை வரும்னு நான் நினைக்கல.. “, என்று விக்ரம் தடுமாற, “ஏற்கனவே சொன்ன மாதிரி தெரியுதே….” , என்று திவ்யா மெதுவாக கூற, “அது….. ” , என்று விக்ரம் தடுமாறினான்.
“நீங்க என்ன நினைக்கிறீங்க..? ” , என்று விக்ரம் நேரடியாக வினவ, “உண்மையை சொல்லணும்முனா எனக்கு தெரியல..”, என்று பதில் கூறினாள் திவ்யா.
விக்ரம் மெளனமாக அவளை பார்க்க , ” நான் காதல், கல்யாணம் இதெல்லாம் யோசிச்சதேயில்லை… எனக்கு காதல் மேல நம்பிக்கையும் கிடையாது.. அதனால என்னால ஒருத்தரை விரும்ப முடியுமான்னு எனக்கு தெரியல.. உங்களை பிடிக்கலைனு நான் சொல்லல … எங்க வீட்ல பாக்கிற ஒருத்தரை தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்… ” , என்று நிதானமாக கூறி முடித்தாள் திவ்யா.
விக்ரம் அவளுக்காக கொண்டு வந்திருந்த கிப்ட்டை கொடுத்தான்.
திவ்யா தயங்க, “ஒரு நண்பனா …. ” , என்று விக்ரம் கூற, ” நண்பன்னு சொல்லி , உங்களை நீங்க ஏமாத்திக்கிட்டு , ஊரையும் ஏமாத்த வேண்டாம்… ” , என்று கறாராக கூறினாள் திவ்யா.
“ஹா.. ஹா.. ” ,சத்தமாக சிரித்தான் விக்ரம்.
“நீங்க என்னை நண்பனா ஏத்துக்க விரும்பலை… ” , திவ்யாவின் கண்களை கூர்மையாக பார்த்தபடி கூறினான் விக்ரம்.
திவ்யா பதில் பேசவில்லை.
“நடக்காதுனு தெரிஞ்சி ஒரு விஷயத்தை ஏன் பேசணும்… அம்மா இதுக்கு சம்மதிக்க மாட்டாங்க… ” , என்று திவ்யா கூற, இந்த மிரட்டல் கால் பற்றி கூறி திவ்யாவை குழப்ப விரும்பாமல் பேச்சை திசை மாற்ற விரும்பிய விக்ரம் “நிச்சயம் நடக்கும்” , என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
“நான் சொன்னா வாங்கிக்க மாட்டியா ? “, என்று விக்ரம் ஆழமாக கேட்க,
மறுக்க முடியாமல் விக்ரம் அளித்த கிப்ட்டை வாங்கி கொண்டாள் திவ்யா.
ரமேஷும் அதற்குள் வர, தன் வேலையை முடித்துக் கொண்டு கிளம்பினாள் திவ்யா.
மழை பெய்ய தொடங்கியது. ஆட்டோ பிடித்து தன் அலுவலகத்திற்கு சென்றாள்.
மழை நின்றபாடில்லை.
காலையில் பெய்ய தொடங்கிய மழை. சற்று அதிகமாக இருந்ததால், அனைவரும் விக்ரம் ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரிலிருந்து சீக்கிரமாக வீட்டிற்கு கிளம்பினர்.
பாக்கியம் புடவையை தலையில் போற்றிக்கொண்டு வேகமாக சாலையை கடந்து டீக்கடை சந்துக்குள் போவது தெரிந்தது. விக்ரமின் கார் மழை ட்ராபிக்கால் சாலையில் ஊர்ந்து கொண்டிருந்தது.
ரமேஷ் திவ்யாவை அழைத்துக் கொண்டு கிடைத்த இடத்திற்குள் புகுந்து சென்று கொண்டிருந்தான்.
அவர்கள் வீட்டுக்குள் நுழையவும் மழையால் மின்சாரம் துண்டிக்கப்படவும் நேரம் சரியா இருந்தது.
இன்வெட்டர் லைட் வெளிச்சத்தில் இருவரும் சாப்பிட்டுவிட்டு படுக்க செல்ல, திவ்யா அந்த கிப்ட்டை பிரித்து பார்த்தாள். யாரோ கதவை தட்ட , அந்த கிப்ட்டை தலையணைக்குள் ஒளித்து வைத்தாள் திவ்யா.
ரமேஷ் உள்ளே நுழைய , திவ்யாவிடம் இருந்த சின்ன பதட்டத்தை அவன் கவனிக்க தவற வில்லை.
“வேலையா இருக்கியா ?” , என்று ரமேஷ் வினவ, “ஆம் ” , என்று திவ்யா தலை அசைக்க ரமேஷிடம் பொய் சொல்லுகிறோம் என்ற மன உறுத்தலும் திவ்யாவிடம் தலை தூக்கியது.
மேஜை மேல் இருந்த கிப்ட் கவர் ரமேஷின் கண்களில் பட , இதை எங்கு பார்த்தோம் என்று யோசித்த ரமேஷிற்கு பதில் தெரிய முகத்தில் புன்னகை பூத்தது.. “ஓகே குட் நைட்….” , என்று கூறிக் கொண்டு தன் அறைக்கு சென்றான் ரமேஷ்.
அந்த கிப்ட்டை பார்த்த திவ்யாவின் முகத்தில் புன்னகை பூத்தது. அவன் கூறிய வார்த்தையை நினைத்து தலை அசைத்து சிரித்தாள்.
” விக்ரம் என்ன கிப்ட் கொடுத்திருப்பான்?” , என்று நம்மை போல் ரமேஷ் மனதிலும் ஒரு ஆர்வம் இருந்தது.
வெளியே மழை வெளுத்துக் கொண்டிருந்தது..
அடை மழை தொடரும்….
தாகம் தொடரும்……