ANIMA 7

ANIMA 7

யோசனையில் ஆழ்ந்திருந்த மலரின் முகத்தைப் பார்த்துக்கொண்டே… கைப்பேசியின் அழைப்பைத் துண்டித்த ஈஸ்வர்… “ஹை ஜெய்! எப்படி இருக்கீங்க!” என்று கேட்கவும்…

அந்த நேரத்தில் அவனை அங்கே எதிர்பார்க்காததால்… ஒரு நொடி திகைத்தவன்… “நல்லா இருக்கேன் அண்ணா!” என்றுவிட்டு… “இந்த ங்க… வை விட்டுடலாமே அண்ணா!” என்றான் ஜெய்…

அதற்கு அவனை நோக்கிப் புன்னகைத்த ஈஸ்வர் … “விட்டுடலாமே!” என்றுவிட்டு…

“என்ன… க்ரே!” என்று தொடங்கி… ஜெய் அங்கே இருப்பதை உணர்ந்து… தயங்கி…  “மலர்… எப்படி இருக்க?” என்று கேட்கவும்…

அந்த தயக்கமெல்லாம் ஏதும் இன்றி… இயல்பாக… “எனக்கு என்ன ஹீரோ! நான் சூப்பரா இருக்கேன்” என்றுவிட்டு… “நீங்க எப்ப வந்தீங்க?” என்று மலர் ஈஸ்வரிடம்… கேட்க…

“எதைப் பற்றி கேட்குற?”  என்ற ஈஸ்வர்…

“காங்கோ…விலிருந்து ஷூட்டிங் முடிஞ்சு… நேற்று சென்னை வந்தேன்…”

“உங்க வீட்டுக்கு வந்து… அரை மணி நேரம் ஆகுது! போன் சிக்னல் கிடைக்காம மாடிக்கு வந்து பைவ் மினிட்ஸ் ஆகுது” என அவன் விளக்கமாகச் சொல்லவும்…

“செம்ம கடி…” என்றாள் மலர்…

ஜெய்யோ… “வாவ்! காங்கோ போயிருந்திங்களா அண்ணா! செம்ம!” என்று வியந்தவன்…  “கீழே வாங்க அண்ணா!  அத்தை ஸ்பெஷலா… எதாவது செஞ்சிருப்பாங்க… சாப்பிடலாம்!” என்று ஈஸ்வரை உபசரிக்கும் வண்ணம் சொல்லவும்…

“ஜெய்! நீ கீழே போ… நாங்க ஒரு பைவ் மினிட்ஸ்ல… வந்துடறோம்!” என்று மலர் சொல்ல… அவளை விளங்காமல் ஒரு பார்வை பார்த்த ஜெய்… கண்களாலேயே… “நீ கீழே வா… உன்னை கவனிச்சுக்கறேன்!” என்ற செய்தியை சொல்லிவிட்டு… அங்கிருந்து சென்றான்…

பின்பு ஈஸ்வரை நோக்கி… “இந்த வாரத்துல… ஒருநாள் உங்களால… எனக்காக ஒதுக்க முடியுமா?” என்று மலர் கேட்க… வியப்பில் புருவங்களை உயர்த்தி அவளை ஒரு பார்வை பார்த்தவன்… “வாட்! புரியல!” என்கவும்…

“ஓ மை காட்… பெருசா ஒண்ணுமில்ல…”

“என்னோட ஆபிஸ்ல… வேலை செய்யும் சாஃப்ட்வேர் என்ஜினீர்ஸ்… சிலர் சேர்ந்து… செங்கல்பட் தாண்டி… சில ஏக்கர் நிலம் வாங்கி… அதில் கூட்டு விவசாயம் செஞ்சிட்டு இருக்காங்க…”

“அதுக்கு… ஆக்ரோ கன்சல்டன்ட்ஸ் சிலர் ஹெல்ப் செய்யறாங்க”

“நீங்க ஒரு நாள் அங்கே விசிட் பண்ணிங்கன்னா… கொஞ்சம் போட்டோஸ் எடுத்து… அதை சோஷியல் மீடியாஸ்ல போட்டால்… இந்த விஷயம் மக்கள் மத்தியில் கொஞ்சம் பிரபலம் ஆகும் இல்லையா! அதற்காகத்தான் கேட்டேன்!” என்று மலர் விளக்கமாகச் சொல்லவும்…

யோசனையுடன் தனது தாடையைத் தேய்த்துக்கொண்டே… “ம்… வரலாம்… பிரச்சனை இல்ல… பட் டேட்தான்… ம்… நான் எதுக்கும் தமிழிடம் கேட்டு சொல்றேன்… ஓகே…வா!” என்று ஈஸ்வர் சொல்லவும்…

மகிழ்ச்சியுடன்… “தாங்க்யூ… ஹீரோ! தாங்க்யூ சோ மச்… நான் என் ஃப்ரெண்ட்ஸ் எல்லோரிடமும் சொல்லிடறேன்…” என்றுவிட்டு… அவனுடன்… கீழே வந்தாள் மலர்…

பின்பு பொதுவாக தங்கையிடமும்… மற்ற  அனைவரிடமும் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு… சூடாமணியின் வற்புறுத்தலால்… அங்கேயே உணவு உண்டுவிட்டு… அங்கிருந்து கிளம்பிச் சென்றான் ஈஸ்வர்…

அதுவரை ஜெய்… மலரை கண்களாலேயே… எரித்துக் கொண்டிருக்க… அவன் அங்கிருந்து கிளம்பி… வெளியில் வர… அவனுடனேயே தானும் வந்தவள்… ஈஸ்வருடன் பேசியவற்றை அவனிடம் சொல்லவும்…

“இதை… நான் இருக்கும்போதே சொல்லியிருக்கலாமே?’ என்ற ஜெய்யின் கேள்விக்கு…

“சாரி ஜெய்! உனக்கு தெரியக்கூடாதுன்னு இல்ல…”

“நான் கேட்டு… அவர் முடியாதுன்னு சொல்லியிருந்தால்!”

“நான் பல்….பு வாங்கறத… நீ பார்க்க வேண்டாமே…ன்னுதான் உன்னை… அங்கிருந்து அனுப்பினேன்” என்று மலர்… கொஞ்சம் நீட்டி முழக்கிச் சொல்லவும்…

வாய் விட்டுச் சிரித்தவன்… “போனால் போகுதுன்னு விடுறேன் போ!” என்றுவிட்டு…

“பை! எதுக்கும் கொஞ்சம் கேர்ஃபுல்லா இரு!” என்று அந்தக் கொலை சம்பவத்தைக் குறிப்பிட்டு சொல்லிவிட்டு… அங்கிருந்தது சென்றான் ஜெய்…

இரண்டு நாட்கள் சென்ற நிலையில்… மலரை அவளது கைப்பேசியில் அழைத்திருந்தான் ஈஸ்வர்… அடுத்தநாளே… அவள் குறிப்பிட்ட அந்த இடத்திற்கு வருவதாக அவன் சொல்லவும்… மகிழ்ச்சியடனே… அந்தச் செய்தியை அவளது நண்பர்களுக்குத் தெரியப்படுத்தினாள் மலர்…

சொன்னதுபோலவே… அடுத்தநாள்… அவனுடைய ஃபார்ச்யூனரில்… அவள் குறிப்பிட்ட… புத்தகரம் என்ற அந்தக் கிராமத்திற்கு வந்து இறங்கினான் ஈஸ்வர்…

ஏற்கனவே அவளது நண்பர்களுடன்… அங்கே வந்து காத்துக்கொண்டிருந்தாள் மலர்…

ஈஸ்வர் அங்கே வந்ததும்…  அவனை வரவேற்று… ஆண்கள் பெண்கள் என… அவளது நண்பர்கள் இருபத்தி ஐந்து பேர்… மற்றும் இரண்டு விவசாய ஆலோசகர்கள்… மேலும் அந்தப் பண்ணையில் வேலை செய்யும்… அந்தக் கிராமத்தை சேர்ந்த மக்கள் சிலர் என… அனைவரையும்… அவனுக்கு அறிமுகம் செய்துவைத்தாள் மலர்…

அதில் மலருடன் வேலை செய்யும் சஞ்சீவன்… என்பவர்… “ரொம்ப நன்றி… ஜி… மலர் உங்களை அவங்க உறவினர்னு சொன்னாங்க… அதனால நாங்கதான்… உங்களை இங்கே அழைச்சிடடு வர முடியமான்னு கேட்டோம்… நீங்க இங்கே வந்ததுக்கு… மனமார்ந்த நன்றி” என்று சொல்லிவிட்டு…

“உங்க நேரத்தை… அதிகம் வேஸ்ட் பண்ண மாட்டோம்… ஒரு சில போட்டோஸ்க்கு… நீங்க போஸ் கொடுத்தால் கூட போதும்… நீங்க இங்க வந்ததே… எங்களுக்கு… மிகப்பெரிய சப்போர்ட்” என அவர் சொல்லி முடிக்க…

“நீங்கள் எல்லோரும் சேர்ந்து செய்வது… உண்மையிலேயே… ஒரு மிகப்பெரிய நல்ல விஷயம்… அதனாலதான் நான் உடனே வர சம்மதிச்சேன்… அதுவும்… இன்று நாள் முழுவதுமே… மலருக்காக என்று ஒதுக்கியிருக்கேன்… சோ… நோ ஹர்ரி…” என்று மலரைப் பார்த்துக்கொண்டே ஈஸ்வர் சொல்லவும்… மலராது முகம் புன்னகையில்… மலர்ந்தது…

அதன் பிறகு அந்த விவசாயப் பண்ணை முழுவதையும்… அவர்கள் ஈஸ்வருக்கு சுற்றிக்காண்பித்தனர்…

அங்கே வயல் வரப்புகளில்  அதிக அளவில் பனைமரங்கள் வளர்ந்திருக்க… நெல்… கரும்பு… வேர்க்கடலை… எள் எனப் பயிரிட்டிருந்தனர்…

அவர்கள் ஒவ்வொரு இடமாக செல்லச்செல்ல… ஏற்கனவே   தயாரக இருந்த தொழில்முறை புகைப்படக் கலைஞர்… அனைத்தையும் புகைப்படம் எடுக்கத் தொடங்கினார்…

அணிந்திருந்த ஜீன்ஸை மடக்கிவிட்டு… விவசாய வேலைகளில் ஈடுபடுவது போன்று… முதலில் புகைப்படத்திற்கு… ‘போஸ்’ கொடுத்துக்கொண்டிருந்த ஈஸ்வர்… நேரம் செல்லச்செல்ல… முழுமையாக அதில் ஈடுபடத் தொடங்கியிருந்தான்… அவனையும் அறியாமலேயே…

அவனது ஒவ்வொரு அசைவையும்… மற்றவர்களைப் போலவே முதலில் பார்வையாளராக பார்த்துக் கொண்டிருந்தவள்…  நேரம் செல்லச் செல்ல… கண்களை வேறுபுறம் திருப்பாமல்… அணு அணுவாக… அவனை ரசிக்கவே தொடங்கியிருந்தாள் அணிமா மலர்… அவளையும் அறியாமலயே…

தொடர்ந்து… அங்கே நிறுத்திவைக்கப்பட்டிருந்த அவர்களுக்குச் சொந்தமான ட்ராக்ட்டரில்… லாவகமாக ஏறி உட்கார்ந்த ஈஸ்வர் … மலரையும் அதில் உட்காரச்சொல்லவும்… கொஞ்சமும் தயங்காமல்… மலர் அருகில் ஏறி உட்கார்ந்தவுடன்… அனாயாசமாக அதைக் கிளப்பிக்கொண்டு… அந்தப் பண்ணையை சுற்றி… உற்சாகத்துடன் அந்த ட்ராக்ட்டரி செலுத்தினான்…

அனைத்தையும் அந்தப் புகைப்பட கருவி உள்வாங்கிக்கொண்டிருந்து…

கூடவே… தனது கைப்பேசியில்… மலரும் அனைத்தையும் பதிவு செய்துகொண்டாள்…

முன்னதாகவே திட்டமிட்டு…  மதிய உணவை அவர்கள் அங்கேயே ஏற்பாடு செய்திருக்க… அனைவருடனும் சேர்ந்து… அங்கேயே வாழை இலைகளை அறுத்து… அங்கே இருக்கும் பம்ப் செட்… குழாயில் அவற்றை சுத்தம் செய்து… அவர்களுடன் உணவையும் உண்டு முடித்தான் ஈஸ்வர்…

எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல்… ஈஸ்வர் அதிக நேரம் அவர்களுடன் செலவு செய்வது… அதுவும் அத்தனை எளிமையாக அவன் அனைவருடனும் பழகுவது என… அவனது செய்கைகள் அனைவருக்குமே… ஆனந்த அதிர்ச்சியைக் கொடுத்தது என்றால் மிகையில்லை…

ஒவ்வொரு நொடியும் அவன் பால் சாயும்…  தனது மனதின் நிலையை எண்ணி… விடுபட முடியாத திகைப்பில் ஆழ்ந்து இருந்தாள் மலர்…

ஏனோ அந்த நேரம் “செம்பு கூட கலக்காத… சுத்தத் தங்கம் ஈஸ்வர்”  என்ற அந்தப் பெண்ணின் குரல்… அவள் செவிகளில் கேட்பதுபோல் தோன்றவும்… அவளது உடல் ஒரு நொடி அதிர்ந்தது…

‘தான் மிகப்பெரிய தவறு செய்கிறோமோ?’ என்ற கேள்வி… முதன் முதலாக அவளது மனதில் தோன்றி… அடுத்த நொடியே…  மலைபோல வளந்து நின்றது…

அதற்குள் ஈஸ்வருடைய கைப்பேசி திரும்பத் திரும்ப ஒலிப்பதும்… அவன் அதைப் புறக்கணிப்பதுமாக இருக்க… ஒரு கட்டத்தில்… வேறு வழியின்றி அழைப்பை ஏற்று… அங்கிருந்து தனியே சென்றான் அவன்…

கிட்டத்தட்ட… இருப்பது நிமிடங்கள் கழித்தே அங்கே திரும்ப வந்தவனின் முகமும்… கண்களும்… ஜிவு ஜிவு என்று சிவந்துபோயிருந்தது… அதன்பின் முன்பு இருந்த உற்சாகம் கொஞ்சமும் இன்றி… அமைதியாக மாற்றிப்போனான் ஈஸ்வர்…

அது மற்றவர்களுக்குப் புரிந்ததோ இல்லையோ…  மலருக்கு நன்றாகவே புரிந்தது…

அவனது அந்த மாற்றமும்… மலரின் மனதைப் பாதிக்கவே செய்தது…

அதுபற்றி… அவள் ஈஸ்வரிடம் கேட்க எத்தனிக்கையில்… அவளது கைப்பேசி ஒலிக்கவும்… அதில் ஒளிர்ந்த பெயரை பார்த்தவள்… வியப்புடன் அங்கிருந்து தனியே சென்று பேசிவிட்டு வந்தாள்…

ஆனால் முன்பிருந்த குழப்ப நிலை மாறி… கொஞ்சம் தெளிவாகி இருந்தாள் மலர்…

பிறகு சிறிது நேரத்தில்… மலரை அழைத்த ஈஸ்வர்… “நீ இங்கே வரும்பொழுது எப்படி வந்த கிரேட்டல்!” என்று கேட்கவும்…

“ம்ப்ச்… நீங்க என்னை மறுபடியும் கிரேட்டல்னு கூப்பிட்டால் நான் பதில் சொல்லவே மாட்டேன்…” என்று மலர் சீறவும்…

லேசாக புன்னகை அரும்ப… ஈஸ்வர் “ஓகே… அப்படி கூப்பிடல… இப்ப சொல்லு…” என்க…

“எங்க டீம் உடன்… வேன்ல வந்தேன்…” என்று மலரின் பதிலில்…

“அப்படினா… நான் உன்னை வீட்டில் ட்ராப் பண்ணட்டுமா… எப்படியும்… அந்த வழியாகத்தான் போவேன்…”

“அங்கே வந்தால்… ஜீவிதாவையும் பார்த்ததுபோல் இருக்கும்…” என்றான் ஈஸ்வர்…

மறுக்காமல் அவனுடன் செல்ல ஒப்புக்கொண்டாள் மலர்…

பின்பு அவளுடைய நண்பர்கள் அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு… அங்கிருந்து கிளம்பினர் இருவரும்…

காரை செலுத்திக்கொண்டே… “ரொம்ப நாளைக்குப் பிறகு… இன்றைக்குத்தான் மலர்… நான் ரொம்ப ரிலாக்ஸாக பீல் பண்றேன்…”

“அதுக்கு நீதான் காரணம்… தேங்க்ஸ்!” என்றான் ஈஸ்வர்…

‘எனக்குமே… இன்றைக்கு… எல்லாமே புதுசா இருக்கு…” என்ற மலர்… மனதில் எதோ எண்ணம் தோன்ற… தனது கைப்பையிலிருந்து… பேனாவை எடுத்து… ஈஸ்வரிடம் நீட்டியவள்… “எனக்கு… உங்க ஆட்டோக்ராப் வேணுமே… அதுவும் இங்கே…” என்று அவளது கையை நீட்ட…

வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு… அவளது விரல்களைப் பிடித்துக்கொண்டே… அவளது வலது கை மணிக்கட்டின் அருகில்…  கையெழுத்திட்டவன்…  “பார்த்தியா… எப்படியும்… கையை வாஷ் பண்ணும்போது… என் ஆட்டோகிராப்பும் போயிடும்… பிறகு இது உனக்கு எதுக்கு…” என்று ஈஸ்வர் நக்கல் கலந்த குரலில்… கேட்கவும்…

“அது… ஜீவன்னு ஒண்ணு இருக்கு… எப்பவுமே… அது என்னை தொல்லை பண்ணிட்டே இருக்கும்… அவனை வெறுப்பேற்றத்தான்…” என்று சொல்லிவிட்டு… நாக்கைக் கடித்துக்கொண்டவள்…  பிறகு மனதில் எதோ யோசனையுடன்… தன்னை மறந்து… ஒரு பாடலை… முணுமுணுக்க…

“ஹேய்… நீ நல்லா படுவ இல்ல… ஜீவி கல்யாண ரிசப்ஷன்ல நான் கேட்டேன்…” என்று ஈஸ்வர் கேட்கவும்…

“ம்… அது எங்க அண்ணாவின் ரிஸப்ஷனும் கூட… ம்க்கும்…” என அவள் நொடிந்துகொள்ள…

“ஆமாம் தாயே… நானும் ஒத்துக்கறேன்…” என்றவன்… “நீ ஹம் பண்ண அந்தப் பாட்டை… ரெண்டு லைன் பாடேன்… கேட்கலாம்…” என்று அவன் சொல்ல…

“ஆஹான்!’ என்றவள் பிகு செய்யாமல் பாடவும் செய்தாள்… ‘மெல்லிசையே… என் உயிர்த்தோடும் மெல்லிசையே!  என்ற அந்தப் பாடலை… சில வரிகள் பாடியதும் நினைவு வந்தவளாக…

“நீங்க… உண்மையிலேயே… முழு திருப்தியோடதான்… நடிகனா இருக்கீங்களா ஹீரோ?” என்று மலர் கேட்கவும்…

“தெரியல!” என்றவன்… “ஆமாம்… ஏன் இந்தக் கேள்வியை கேட்ட?” என்று வினவ…

“ம்… ஒண்ணுமில்ல… நான் ஸ்கூல் படிக்கும்பொழுது… என் கூட படிச்ச பொண்ணுங்கல்லாம் இந்த IT படிப்பை… ரொம்பவே தூக்கி பேசி… நானும் ஓடிப்போய்… அதுல சேர்ந்தேன்…”

“ஆனால்… படிப்பு முடிச்சு… வேலைலயும் சேர்ந்த பிறகு… ஏனோ… எனக்கு அதில் மனசு ஒட்டல…”

“இது உனக்கானது இல்லனு… அடிக்கடி உள்ளுக்குள்ள தோணிட்டே இருந்தது…”

“ஒரு ஸ்டேஜ்ல… மூச்சு முட்டுவது போல தோணவே… பேப்பர் போட்டுட்டேன்…”

“இன்னும்… ஒன் ஆர் டூ மந்த்ஸ்ல… எப்ப வேணா… ரிலீவ் ஆகிடுவேன்…”

“மேற்கொண்டு… எனக்குன்னு ஒரு… ஐடியா வெச்சிருக்கேன்…” என்றவள்… தொடர்ந்து…

“அதுமாதிரி… இந்த வில்லன் வேலையெல்லாம் விட்டுட்டு… மக்கள் உங்களை… ஒர்ஷிப் செய்யற மாதிரி… உங்களுக்கு முழு திருப்தி கொடுக்கும் வகைல… உங்க லைனை… நீங்க ஏன் மாத்திக்க கூடாது?” என்று மலர் கேட்கவும்…

சிரித்துக்கொண்டே… “என்ன… என்னை வில்லனிலிருந்து… ஹீரோவா மாற… சொல்றியா?” என்று ஈஸ்வர் கேட்கவும்…

தொளைக் குலுக்கியவள்… “அப்படியும் சொல்லலாம்!” என்று முடித்தாள் மலர்…

பின்பு நினைவு வந்தவனாக… “அந்த பாட்டை… பாதியிலேயே நிறுத்திட்டியே… எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது… நீ…  அதை கம்ப்ளீட் பண்ணலாமே…” என்று அவன் சொல்லவும்…

“சாரி… எனக்கு மூட் மாறிப்போச்சு… பிறகு ஒருநாள் படறேன்… இப்ப விட்டுடுங்க ப்ளீஸ்!” என்றாள் மலர்… அதற்குள் அவளது கைப்பேசியில்… அழைப்பு வரவும்… அதை ஏற்றவள்… “நான் அப்புறம் பேசறேன்… டார்லிங்… கொஞ்சம் பிஸி… ப்ளீஸ்!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்…

அவளது டார்லிங் என்ற விளிப்பில்… ஆராய்ச்சியுடன் ஈஸ்வர் அவளைப் பார்க்க… அவள் முகத்திலிருந்து அவனால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை… அதற்குள் அவர்கள் வீடு வந்து சேர்ந்துவிட… இருவரும் உள்ளே நுழைந்தனர்…

“வாங்க தம்பி…”

“எப்படி இருக்கீங்க?”

“உங்ககூடத்தான் வந்துட்டு இருக்குறதா… மலர் சொன்னா…” என்ற சூடாமணி…

“ஜீவிம்மா… உங்க அண்ணா வந்திருக்காரு பாரு…” என்று அவளை அழைத்தார்…

ஜீவிதாவுடன் பேசிக்கொண்டே… தாத்தா… பாட்டி இருக்கும் அறை நோக்கி ஈஸ்வர் செல்ல…

அதே நேரம்… அங்கே புயலென நுழைந்த… ஜெய்… “அத்தை… உங்க பொண்ணுகிட்ட நான் கொஞ்சம் முக்கியமா பேசணும்…” என்றவன் அவரது பதிலைக்கூட எதிர்பார்க்காமல்… மலரின் கையைப் பற்றி… அவளை மாடியை நோக்கி  இழுத்துக்கொண்டு செல்ல… அதைப் பார்த்துக்கொண்டிருந்த ஈஸ்வரின் முகம் கருத்துப் போனது…

அவர்கள் வீட்டின் முதல் தளத்தில் இருக்கும் வரவேற்பறைக்குள் நுழைந்து… ஜெய் அவளுடைய கையை விடவும்… கோபமாக அவனை முறைத்துக்கொண்டே…

“என்ன ஜெய்… இப்ப என்னை இப்படி இழுத்துட்டு வர அளவுக்கு… என்ன அவசரம்” என்று கேட்க…

“ஏய்… மறுபடியும்… இன்றைக்கு… அதே போல ஒரு கொலை… அவுட்டர் ரிங் ரோட்ல நடந்திருக்கு…”

“இந்த தடவை செத்துப்போனது… ஒரு ஆளு… ஐம்பது வயது இருக்கும்”

“அவனோட… ஒரு புது செல் போன் கிடைச்சிருக்கு…”

“அதுல… உன்னை பத்தின… எல்லா டீட்டைல்சும்… பக்கவா… PDF ல வச்சிருக்கான்…”

“அந்த போன்ல… வேறு எந்த டேட்டாசும்… இல்ல… ஏன்… சிம் கார்ட் கூட இல்ல” என்றவன்… கைப்பேசியில்… அரைகுறையாக எரிந்துபோன அவனது உடலைக்காண்பித்து…

“இவனை… நீ எங்கயாவது பார்த்திருக்கியா?” என்று கேட்டான் ஜெய்…

அவனது தோரணையே சொல்லாமல் சொல்லியது… அவன் அங்கே வந்திருப்பது… ஒரு காவல்துறை அதிகாரியாக மட்டுமே என்று…

 

 

 

 

 

 

error: Content is protected !!