ANIMA3

ANIMA3

பொங்கல் பண்டிகையன்று திரையிடத் தயாராக… ஜெகதீஸ்வரன் நடித்த நான்கு படங்கள் வரிசையில் இருந்தன… அவன் வெவ்வேறு முன்னணி நாயகர்களுக்கு வில்லனாக நடித்திருந்தான்…

அத்துடன் அப்பொழுது வெளியிடப்பட்ட அந்தத் திரைப்படமும்… வசூலை அள்ளிக் குவித்துக் கொண்டிருந்ததுடன், ஈஸ்வருக்கு மக்கள் மத்தியில் மிக நல்ல வரவேற்பையும் பெற்றுத் தந்திருந்தது…

அவை அனைத்தையும் தாண்டி… அன்றைய தினம்… பெயர் தெரியாத அந்தப் பெண்… அவனிடம் பேசிவிட்டுச் சென்ற விதம்…… அவனது மனதிற்கு ஒரு நிறைவைக் கொடுத்திருந்தது…

அன்று திரை அரங்கிலிருந்து… அவனை ‘ஹீரோ’ என்று அவள் சொல்லிச் சென்ற ஒரு வார்த்தை… அவனைத் திகைப்பில் ஆழ்த்தியிருந்தது… மேலும்… அன்றைய நிகழ்ச்சிகள் முடிந்து… அவன் வீடு திரும்பும் சமயம்…  தமிழ் வேறு… அங்கே அவள் பேசிய அனைத்தையும் சொல்லி முடித்திருந்தான்… 

ஒரு வேளை இவள் அணிமா மலர்தானோ! என்ற ஐயம் அவன் மனதில் தோன்றிக்கொண்டே இருந்தது…

அடுத்து வந்த நாட்களில்… மேலும் அவளைப் பற்றி சிந்திக்க நேரமில்லாமல்… அவனது வேலைகளில் மூழ்கிப்போனான் ஈஸ்வர்…

************************

தாம்பரம் புறவழிச் சாலையில்… போரூர் செல்லும் தடத்தில்… காற்றைக் கிழித்துக்கொண்டு அதிவேகமாய் பறந்துகொண்டிருந்தது… அணிமா மலரின்… சிவப்பு நிற யமஹா R16 பைக்… பைக் ஓட்டும் பொழுது அவள் வழக்கமாக அணியும் உடையில் அணிமா…

வேகமாக வண்டியை ஓட்டி வந்தவள்… அவளுக்கு முன்பாக சென்றுகொண்டிருந்த… பைக்கை தடுப்பது போல் நிறுத்த… அதை ஓட்டி வந்தவன் நிலை தடுமாறி… அப்படியே கீழே சரிந்தான்…

அதற்குள்… அவளது பைக்கை… பிரேக் போட்டு நிறுத்தியவள், தலைக் கவசத்தைக் கழற்றி அதன் மேல் வைத்துவிட்டு… ஒரே எட்டில் விழுந்து கிடந்தவனை நெருங்கி… அவனைத் தூக்கி நிறுத்தி… அவன் அடுத்து யோசிக்கத் தொடங்கும் முன்பாகவே…  கை முஷ்டியை மடக்கி… அவனது முகத்தில் சரமாரியாக குத்தத் தொடங்கினாள்…

அவனது மூக்கிலிருந்து… ரத்தம் வழியத் தொடங்கியிருந்தது…

“என்னடா! பொம்பளைங்கன்னா… உனக்கு அவ்வளவு கேவலமா போச்சா… நாயே!”

“நீ என்ன செஞ்சாலும்… வெளியில சொல்ல மாட்டாங்கன்னு நினைச்சு தான… கேவலமான வேலையெல்லாம் செஞ்சிட்டு இருக்க…”

சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவளது கால் முட்டி… அவனுடைய அடி வயிற்றில்… நான்கு முறை இறங்கி இருந்தது…

அப்படியே சுருண்டு கீழே விழுந்தான் அவன்…

அடுத்த நொடி… அவனுடைய கைப்பேசியை… அவனிடமிருந்து பறித்தவள்… அவனை மறுபடியும் அடிக்கக் கையை ஓங்க…

அவளது கரங்களைப் பிடித்து… அவளைத் தடுத்து நிறுத்தினார்… அப்பொழுது அங்கே வந்து சேர்ந்த காவல் அதிகாரி ‘ஜெய் கிருஷ்ணா IPS!’

அவர் அந்தப் பகுதியின் காவல் துறை துணை ஆணையராக சில தினங்களுக்கு முன்புதான் பதவியேற்றிருந்தார்… 

“ஓஹ்… ஸ்டாப் இட்… நீ பாட்டுக்கு அவனை அடிச்சிட்டு இருக்க… நீ நினைக்கற மாதிரி… அவன் அக்யூஸ்டா இல்லாமல் வேறு யாராவது… இன்னொசண்ட்டா இருந்தால்… உனக்குதான் பிரச்சினை…” என ஜெய் சொல்லவும்…

“ஓ மை காட்! ஒரு செகண்ட் இருங்க மிஸ்டர் ACP…” என்றவள்… அவனிடமிருந்து பறித்த கைப்பேசியை… உயிர்ப்பித்து… அதில் இருந்த காணொளி ஒன்றை ஓடவிட்டுப் பார்க்க… அருவருப்பில்… அவளது முகம் கறுத்துப் போனது… பட்டென்று அதை… நிறுத்தியவள்… அந்தக் கைப்பேசியை ஜெய்யிடம் கொடுத்து…

“நீங்களே பாருங்க… இதுல மூணாவதா இருக்கும் வீடியோவை பாருங்க… அதில் இருக்கும் பெண்தான்… என்னோட வேலை செய்யறா…”

“லாஸ்ட் வீக்… அவ தனியா இருக்கும்போது… அவங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சு… அவளை நாசம் செய்து… போன்ல வீடியோ எடுத்துட்டு… வீட்டில் இருந்த நகை… பணம் எல்லாத்தையும் கொள்ளை அடிச்சிட்டு… வெளியில சொன்னா… வீடியோவை சோஷியல் மீடியாஸ்ல எல்லாம் அப்லோட் பண்ணிடுவேன்னு மிரட்டிட்டு போயிருக்கான் இந்த நல்லவன்…”

“அவ தற்கொலைக்கு… ட்ரை பண்ணி… ஹாஸ்பிடல்ல இருக்கா…”

“அவளோட ஹஸ்பண்ட்… இதைப் பத்தி கம்ப்ளைண்ட் பண்ண பயந்துட்டு… விட்டுட சொல்லிட்டாரு…”

“அவளைப் பார்க்க போனப்ப… என்கிட்ட சொல்லி… ரொம்ப அழுதா…” என்றவள்…

அவன் வந்த பைக்கை சுட்டி காண்பித்து… “இந்த ஃப்ரன்ட் வைசர்ல… ஒட்டி வச்சிருக்கான் பாருங்க… கண்ணீரோட… கண்கள் இருப்பது மாதிரி ஸ்டிக்கர்… இதுவும்… இவன் கழுத்தில கருப்பு கயிறில் கோர்த்து போட்டிருக்கான் பாருங்க… இந்த மிளகாய் மாதிரி டாலர்… இதெல்லாம்தான்… அவள் அவனைப் பற்றி சொன்ன அடையாளம்…”

“நான் ஆபீஸ் போய்ட்டு இருக்கும்போது… ஒரு கூல்பார்ல… இந்த பைக்கைப் பார்த்தேன்… இவன் அதை ஸ்டார்ட் செய்யவும்… நிச்சயமா இன்தான் அந்த பெருக்கின்னு… எனக்கு புரிஞ்சுது…”

“உடனே உனக்கு…” என்றவள்… தொண்டையை செருமிக்கொண்டு… “உங்களுக்கு தகவல் கொடுத்துட்டு… இவனை ஃபாலோ பண்ணிட்டு வந்தேன்!” என்று முடித்தாள் அணிமா மலர்…

அவன் அந்த கைப்பேசியின் பதிவுகளை ஆராயவும்… கடந்த இரண்டு மாதங்களில்… ஐம்பதுக்கும் மேற்பட்ட காணொளிகள்… அதுபோன்றே அவனால் பதிவுசெய்யப்பட்டிருந்தது…

அதைப் பார்த்து திடுக்கிட்டுத்தான் போனான் ஜெய்…

அடுத்த சில நிமிடங்களிலேயே… அந்தப் பகுதியின்… கவல்துறை ஆய்வாளர்… அவர்களது பிரத்தியேக வாகனத்தில் அங்கே வந்துவிடவும்.

ஜெய் அவரிடம்… அடிபட்டுக் கிடந்தவனை… கைதுசெய்யச் சொல்லவும்… அவனைப் பார்த்த அந்த இன்ஸ்பெக்டர்… அதிர்ந்துதான் போனார்…

துணிச்சலுடன் ஒரு பெண் புகார் அளித்திருக்க… அவன் இதே போன்ற ஒரு வழக்கில்… குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு… சிறைத் தண்டனை பெற்ற குற்றவாளி… மூன்று மதம் முன்புதான் ஜாமீனில்… வெளியில் வந்திருந்தான்…

“சார்! இவன்தான் சார்… அக்யூஸ்ட் மதி எழில்… இவன் ஜாமின்ல வெளிய வந்து சுத்திட்டு இருக்கான் சார்… அதுக்குள்ள வேலையை காட்ட அரபிச்சுட்டான் போல இருக்கே!” என்று சொல்லி அவர் மற்ற இருவரையும் அதிர வைத்தார் அந்த காவல்துறை ஆய்வாளர்…

தலையில் அடித்துக்கொண்டு… மலர் ஜெய்யை பார்த்த பார்வையில்… கடுப்பானாவன்… அவசரமாக அந்தக் குற்றவாளியை அந்த ஆய்வாளரிடம் ஒப்படைத்துவிட்டு…

“ஏதோ… இவன் அக்யூஸ்டா இருந்ததால… நீங்க தப்பிச்சீங்க…”

“இல்லனா அவனை அடிச்சிருக்கும் அடிக்கு… நீங்க ஸ்டேஷனுக்கு வந்து பதில் சொல்லும் நிலைமை வந்திருக்கும்…”

“இனிமேல் நான் பார்த்துக்கறேன்… நீங்க நேரத்தோட போய் உங்க வேலையை பாருங்க…” என்று கெத்தாக அவளிடம் சொன்னவன்…

அவளையும்… அவளது பைக்கையும்… ஆராய்ச்சியாக ஒரு பார்வை பார்த்துவிட்டு… கைப்பேசியை உயிர்ப்பித்து யாருடனோ பேசியவாறே… அங்கிருந்து கிளம்பினான் ஜெய்…

“அடப்பாவி… நீ என்கிட்ட ஒரு நாள் மாட்டாமயா போவ… அன்னைக்கு இருக்குடா உனக்கு” என மனதிற்குள் கருவியவாறு… அங்கிருந்து பைக்கை கிளப்பிக்கொண்டு சென்றாள் மலர்…

அவள்… அந்த மதி எழில் என்பவனை… அடித்து நொறுக்கியதையும்… பின்பு அங்கே நடந்த அனைத்தையுமே… எதிர்த் திசையிலிருந்து… தனது டொயோட்டா ஃபார்ச்யூனரில் உட்கார்த்தவாறு பார்த்துக்கொண்டுதான் இருந்தான் ஈஸ்வர்.

அதி வேகமாக வந்து… மலர் ஒருவனைக் கவிழ்த்ததை கண்டு முதலில் பதறியவன்… சில நொடிகளிலேயே அவள் அணிமா மலர்தான் என்பதை உணர்ந்துகொண்டான்…

அதுவும் அவள் அடித்த அடியில்… நிச்சயமாகச் சேதாரம் என்னவோ… எதிராளிக்குத்தான் என்பது புரியவும்… சிரிப்பே வந்துவிட்டது அவனுக்கு…

நிச்சயம் எதோ அவளிடம் வாலாட்டி இருக்கிறான்… இல்லையென்றால்… அவள் அவ்வளவு சீற்றத்துடன் ஒரு ஆண்மகனை… அடித்து வெளுக்க வாய்ப்பே இல்லை என்பதும் அவனுக்கு நன்றாகவே புரிந்தது…

சினிமாவில்… அவன் செய்யும் சண்டைக் காட்சியை நேரில் காணவும்… அதுவும் ஒரு பெண்… இவ்வாறு ஒரு அடிதடி காட்சியை அரங்கேற்றவும்… வியப்பாக இருந்தது ஈஸ்வருக்கு…

மொத்தத்தில் அவளது செய்கையை அவன் ரசித்துக்கொண்டு இருந்ததால்… அவளைத் தடுக்கும் மனநிலையிலெல்லாம் இல்லை அவன்… முந்தைய சந்திப்பில் விடுபட்டுப் போயிருந்த… ‘ரௌத்திரம்’ மற்றும் ‘அருவருப்பு’ இரண்டையும்… அவளது கண்கள் பிரதிபலித்தது அன்றைய தினம்…

மேலும் ஒரு இளம் வயது அதிகாரி… அந்தக் காவல் துறையினருக்கே உண்டான மிடுக்குடன்… அங்கே வந்துவிட… இடை புக வேண்டிய அவசியமே இல்லாமல் போனது அவனுக்கு…

இதழ்க்கடையில் அடக்கப்பட்ட சிரிப்புடன் அவன் வண்டியைக் கிளப்பவும்… அருகில் உட்கார்ந்துகொண்டிருந்த அவனது செங்கமலம் பாட்டி… பேரனை நோக்கி… “அந்தப் பையனை பாரேன்… கொஞ்சம் கூட பயமே இல்லாம… எப்படி ஒருத்தனை போட்டு அடிச்சான்னு… போலீஸ்காரன் போல இருக்கு… ம்!” என்கவும்… சிரிப்பே வந்துவிட்டது அவனுக்கு…

“பாட்டி… அது… பையன் இல்ல பொண்ணு!” என்று ஈஸ்வர் சொல்லவும்… கொஞ்சம் கூட நம்பவே இல்லை அவர்…

“நீ புரியாம உளறாதே… அது பையன்தான்” என்று வீட்டிற்கு வந்துசேரும் வரையிலியுமே… சொல்லிக்கொண்டே இருந்தார் பாட்டி…

அடுத்த வாரத்திலேயே… அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சம்பந்தம் பேசவென… அவரே போய் நிற்கப்போகிறார் என்று யாராவது சொல்லியிருந்தால்… நம்பியிருப்பாரா செங்கமலம் பாட்டி?

“நரசிம்மரை… நன்றாகத் தரிசனம் செஞ்சிங்களா மாமி?” என்றவாறே… சிங்கப்பெருமாள்கோவில் சென்று திரும்பியிருந்த… அவரது கையைப் பற்றி அவரை வீட்டிற்குள் அழைத்துச்சென்று… அவரை சோபாவில் உட்காரவைத்தார்… அவரது மருமகளும்… ஈஸ்வரின் அம்மாவுமான சாருமதி…

அதற்குள்… “பாட்டி… வந்துட்டீங்களா? கேழ்வரகுல உங்க டயட்காக…  ஒரு புது டிஷ்… ட்ரை பண்ணியிருக்கேன்… சீக்கிரம் வந்து… சாப்பிட்டு பார்த்து எப்படி இருக்கு சொல்லுங்க…” என்றவாறே அவரது அருகில் வந்து உட்கார்ந்துகொண்டாள்… ஜீவிதா… ஈஸ்வரின் தங்கை…

காரை… நிறுத்திவிட்டு… உள்ளே வந்த பேரனைக் கண்ட செங்கமலம் பாட்டி… “ஈஸ்வரா… இவளை டயடீஷியன் கோர்ஸ் படிக்க வச்சாலும் படிக்கச் வச்ச… இவ என்னைச் சோதனை எலியா மாத்தி… அவ ஆராய்ச்சியை முடிச்சிக்கறா…  இவ கிட்டயிருந்து தயவு செய்து என்னை காப்பாத்து…” எனக் கெஞ்சுவதுபோல் கேட்கவும்…

அவனது ஒட்டுமொத்த உலகமாகவும் மாறிப்போயிருக்கும் அந்த மூன்று பெண்களையும்… பார்த்து சிரித்துக்கொண்டே… மாடியிலிக்கும் அவனது அறை நோக்கிப் போனான் ஈஸ்வர்…

காலை முதலே… பேரனின் முகத்தில் பூத்திருக்கும் முறுவலைப் பார்த்து… அந்த மூதாட்டியின் கண்கள் பணித்தது…

**********************

சூடாமணி… சூடாகக் கலந்து எடுத்துவந்த காபியை வாங்கிப் பருகியவாறே… எதோ யோசனையுடன் உட்கார்ந்திருந்த மலரிடம்… “கண்ணம்மா… பாட்டி போன் பண்ணியிருந்தாங்க… மாமாவுக்கு… ஆபீஸ்ல அதிக வேலையாம்… நாளைக்கு… உனக்கு டைம் இருந்தால்… தாத்தா பாட்டி ரெண்டுபேரையும்… இங்கே அழைச்சிட்டு வரியா?” சூடாமணி… கேட்கவும்… அதில் துள்ளிக் குதித்தவள்…

“ஆஹான்… நானே ராசாவையும்… ரோசாவையும் பார்க்கணும்னு நினைச்சேன்… நாளைக்குச் சாயங்காலமே… அவங்களை கூப்பிட்டுட்டு வந்துடறேன்… மா…” என்று சொல்லிவிட்டு… அவளது அறைக்குள் சென்று புகுந்துகொண்டாள் மலர்… 

சூடாமணியின் அப்பா… சுந்தராஜன்… அம்மா சரோஜா… மலருக்கு மட்டும் ராசா… ரோசா…

திருவண்ணாமலை மாவட்டத்தில்… செய்யார் தாலுகாவைச் சேர்ந்த… அளத்தரை… அவர்களது சொந்த ஊர்…

சூடாமணியின் தம்பி… அச்சுதனுக்கு… பள்ளி கல்வித் துறையில் வேலைக் கிடைக்க… பல வருடங்களுக்கு முன்பே… மகனுக்காக… கிராமத்தில்… சொத்துக்களை விற்றுவிட்டு… சென்னையிலேயே குடியேறிவிட்டனர் சுந்தராஜன்… சரோஜா தம்பதியர்…

அரசுப்பள்ளி ஆசிரியராக இருக்கும் வெங்கடேசனின் சொந்த ஊர்… திருநீர்மலை…

அவர்களது பூர்விக வீடு மற்றும் நிலங்கள்… வழக்கில் இருந்ததால்…  பிரபாகர் மற்றும் மலர் சிறுவர்களாக இருக்கும் பொழுதே… மாம்பலத்தில்… இரட்டைப் படுக்கை அரை கொண்ட  பிளாட் ஒன்றைச் சொந்தமாக வாங்கி… அங்கேயே குடியிருந்தனர்…

அங்கே பக்கத்து பிளாட்டில் வசிப்பவர்தான் சுசீலா மாமி… கோபாலன் மாமா குடும்பம்…

பிறகு நீதிமன்ற வழக்கில்… தீர்ப்பு வெங்கடேசனுக்கு சாதகமாய் வந்து… சொத்துக்கள் அனைத்தும் அவருக்கே கிடைத்துவிட… நிலத்தின் ஒரு பகுதியை விற்றுவிட்டு…  வீட்டையும் பெரியதாக கட்டிக்கொண்டு… அங்கேயே குடி வந்துவிட்டனர் வெங்கடேசன் குடும்பம்.

மாம்பலம் பிளாட்டை… IT கம்பெனியில் வேலை செய்யும் பெண்களுக்கு… வாடகைக்கு விட்டிருந்தனர்…

பிரபாகர்… மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு… திருமுடிவாக்கத்தில்… இரு சக்கர வாகனங்களுக்கு உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி… திறம்பட நடத்திக்கொண்டிருக்கிறான்…

மகன் தொழில் தொடங்கிய பிறகு… அவர்களது வாழ்க்கை நிலை… மேலும் மேம்பட்டிருந்தது…

மலர்… கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் முடித்து… மஹேந்திரா சிட்டியில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலையில் இருக்கிறாள்…

இடையில்… ஆன்சைட் என ஒரு மூன்று மாதங்கள்… அமெரிக்கா சென்றுவந்திருந்தாள்…

சூடாமணி மட்டுமே மலரைக் கண்டிக்க… வெங்கடேசன் மற்றும் பிரபாகர் இருவருமே அவளுக்கு முழுமையாக பரிந்துகொண்டு வருவார்கள்… அவளது எண்ணத்திற்கு மாறாக அங்கே எதுவுமே நடக்காது…

மேலும் அச்சுதனுக்கும் இரண்டு மகன்கள்… ஆக அணிமாமலர்… அவர்களுடைய ஒரே பேத்தி என்பதினால்… சுந்தரராஜன் மற்றும் சரோஜாவிற்கு அவள் மிகவும்… செல்லம்…

மகள்… பேத்தியை ஒரு வார்த்தை… திட்டினால் கூட பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் இருவரும்…

அனைத்தும் சேர்ந்து… அவளை… மிக மிகத் தன்னம்பிக்கையும்… தைரியமும் நிறைந்த பெண்ணாக… சுய சிந்தனை நிறைந்தவளாக… நினைத்ததை நடத்தி முடிக்கும் பிடிவாதக்காரியாக… வளர்த்திருந்தது…

******************

அன்னையிடம் சொன்னதுபோல்… அடுத்த நாள் மாலை… அண்ணனுடைய ஐ20  காரை எடுத்துக்கொண்டு… அவளுடைய ராசாவையும் ரோசாவையும் அழைத்துக்கொண்டு செல்லவென… மாம்பலத்தில் அச்சுதன் குடியிருக்கும் பிளாட்டிற்கு வந்திருந்தாள் மலர்…

நான்காவது தளத்திற்குச் செல்ல… மின்தூக்கியில் போய் அவள் ஏறவும்… அந்த லிப்ட் மூடிக்கொள்ளாமல் இருக்க… கையை நீட்டி… அதைத் தடுத்து… அணிமா மலரைப் பார்த்துக்கொண்டே… “ஹாய்!” என்றவாறு அதனுள் நுழைந்தான் ஜெய் கிருஷ்ணா…

அடுத்த நொடியே… அவளது கையில் வைத்திருந்த அவளுடைய கைப்பையைக் கொண்டு… அவனைச் சரமாரியாக அடிக்கத் தொடங்கியிருந்தாள் அணிமா மலர்…

 

 

error: Content is protected !!