anima34

anima34

ஒரு வருடத்திற்கு முன்…

மல்லிகார்ஜூன், மும்பையில் இருக்கும் பிரபல க்ளப் ஒன்றில் பார் பவுன்சராக வேலை செய்துகொண்டிருந்த சமயம், அவனை கைப்பேசியில் அழைத்த சோமய்யா, டிப்பு காணாமற்போன செய்தியை, பதட்டத்துடன் அவனிடம் தெரிவித்தான்.

பதறிய மல்லிக் உடனே காவல் நிலையம் சென்று புகார் அளிக்குமாறு சோமய்யாவிடம் சொல்லவும், அவன் அதற்கு பயந்து தயங்க, அவனை மிகவும் வற்புறுத்தி புகார் அளிக்க வைத்தான்.

அதன் பின் அங்கிருந்து ஸ்ரீபுரம் வந்து சேரவே இரண்டு தினங்கள் பிடித்தது மல்லிக்கிற்கு.

காவல்துறை விரைந்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதில் சற்று எரிச்சலுற்றவன், ஊர் காரர்கள் சிலரைச் சேர்த்துக்கொண்டு, சுற்றிலும் உள்ள சிறிய டவுன்கள் மற்றும் கிராமங்களில் தானே டிப்புவை தேடிச்சென்றான் அவன்.

ஆனால் எங்கேயும் அவன் கிடைக்காமல் போகவே, விரக்தியுடன் வீட்டில் வந்து உட்கார்ந்தான் மல்லிக்.

ஏதோ ஒரு போட்டிக்காகச் சுற்றி உள்ள கிராமங்களில் புகைப்படம் எடுக்கவென, சந்தோஷ் என்பவன் அந்த ஊரில் சில நாட்களாகத் தங்கி இருந்ததும், டிப்பு அவனுடன் நெருங்கிப் பழகியதும் பிறகுதான், சக்ரேஸ்வரி மூலமாக அவனுக்குத் தெரியவந்தது.

அவனைப் பற்றி அறிந்து கொள்ளும் பொருட்டு, அந்த சந்தோஷ் தங்கி இருந்த வீட்டிற்கு அருகில் சென்று மல்லிக் விசாரிக்கவும், ஒருவர் வைத்திருந்த கைப்பேசியில் அவனுடைய முகம் தெளிவாகப் பதிவாகி இருந்தது.

அந்த கைப்பேசியுடன் காவல் நிலையம் சென்று, அந்த தகவலைத் தெரியப் படுத்தினான் மல்லிக். ஆனால் அங்கே அவர்கள் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை என்பதை உணர்ந்து கோபத்தின் உச்சிக்கே சென்றான் அவன்.

ஒரே மகனைப் பிரிந்த ஏக்கம், பெற்றோர் இருவரையும் தாக்க, பித்துப் பிடித்த நிலையிலிருந்தனர் இருவரும்.

நாள் முழுதும் காவல் நிலையத்தின் வாயிலிலேயே பழியாய் கிடந்த சக்ரேஸ்வரி, ஒரு நிலையில் துயர் தாங்காமல், உடலில் தீ வைத்துக்கொள்ள, உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவளைக் காப்பாற்றி, மருத்துவமனையில் சேர்த்தனர்.

அப்படி ஒரு அசம்பாவிதம் நடந்ததே, வெளி உலகம் அறியாது, அதிகார பலத்தினால் சுலபமாக மூடி மறைக்கப்பட்டது அங்கே.

இடது புறமாகக் கழுத்து, தோள், வயிறு மற்றும் இடை எனத் தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தது சக்ரேஸ்வரிக்கு. அவளுக்கு அதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

செய்வதறியாமல், மகன் மனைவி இருவரை பற்றிய கவலையில் உழன்றவாறே சோமய்யா மருத்துவமனையில் அவளுடன் இருக்க, அன்னையைப் போன்று தன்னிடம் கரிசனம் காண்பிக்கும் அண்ணி, மனதாலும், உடலாலும் அனுபவிக்கும் வேதனையை நேரில் பார்க்கவும், அது கொடுத்த வலியில் அனைத்திற்கும் காரணமானவன் கையில் கிடைத்தால், அவனைக் கொன்று புதைக்கும் கோபத்திலிருந்தான் மல்லிக்.

ஒரு மாதம் கடந்திருந்த நிலையில், அப்படி ஒரு வாய்ப்பு சுலபமாகக் கிடைத்தது, அவனுக்கு, ஆனால் ஒரு வேதனையான சூழ்நிலையில்!

அவனுடைய நண்பன் ஒருவன் இறந்த செய்தி அறிந்து, மனம் வருந்தியவனாக, அவர்களுடைய ஊருக்கு அருகில் உள்ள நர்சாபுரம் என்ற கிராமத்தில் வசிக்கும் அந்த நண்பனுடைய குடும்பத்தைச் சந்திக்க அங்கே சென்றான் மல்லிக்.

ஒரு இடத்தில் இல்லாமல், டிப்புவை தேடி, சுற்றிக்கொண்டே இருந்த காரணத்தால், அவன் இறந்து ஒரு மாதம் கழித்தே அந்த செய்தி அவனுக்குக் கிடைத்தது.

அங்கே அவனுடைய மனைவி மற்றும் வயதான அவனுடைய பெற்றோர்களைச் சந்தித்து ஆறுதல் கூறியவன், அந்த நண்பனின் பிள்ளைகளைப் பற்றி விசாரிக்கவும், புடவை முந்தானையை வாயில் வைத்துப் பொத்தியவாறு அழத்தொடங்கினாள் அவனுடைய மனைவி.

ஏதோ சரியில்லை என்பது புரிய, அவன் அவர்களிடம் வற்புறுத்திக் கேட்கவும், தயங்கியவாறே பயங்கரமான ஒரு செய்தியைச் சொன்னார் அந்த பெண்மணி.

அவளுடைய கணவர் திடீரென்று விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட, மருத்துவமனையிலிருந்து அவருடைய உடலை வீட்டிற்கு எடுத்துச்செல்லக் கூட கையில் பணமில்லாமல், செய்வதறியாது அவர்கள் திகைத்திருந்த சமயம், அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒருவன் அவர்களுடைய நிலையை உணர்ந்து, பணம் கொடுத்து உதவ முன் வந்தான்.

ஆனால் அதற்காக அவன் முன் வைத்த நிபந்தனைதான் மிகவும் கொடியதாக இருந்தது. இருந்தாலும் அதை செய்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை அவர்களுக்கு.

அவருடைய இறுதிச் சடங்குகளைச் செய்ய வேறு பணம் தேவைப்படவும், பத்தாயிரம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு, பத்து வயதே ஆன அவர்களுடைய இரண்டாவது மகனை, அந்த நபரிடம் விற்றுவிட்டதாகச் சொன்னார் அவர்.

கதி கலங்கித்தான் போனான் மல்லிக்!

மேற்கொண்டு, யாரிடம் அவனை விற்றார்கள் என்ற கேள்வியை அவன் கேட்கவும், லட்சுமணா என்ற அவனது பெயரைத் தவிர அவனை பற்றி வேறெந்த தகவலும் தெரியவில்லை அவர்களுக்கு. பணத்தை கொடுத்து, பிள்ளையை தன்னுடன் அழைத்துச்சென்ற பிறகு, அவனை மற்றொரு முறை பார்க்கக்கூட இல்லை அவர்கள்.

அவர்களை எண்ணிக் கோபப்படுவதா இல்லை இரக்கப்படுவதா என்பது கூட புரியவில்லை மல்லிக்கிற்கு.

நான்கில் ஒன்று போனால் என்ன? அந்த நிலையைக் கடந்து வந்ததே பெரிது! என்ற ரீதியில்தான் அவனுடைய நண்பனின் தந்தை இருந்தார்.

ஆனால் அதுபோன்ற மனநிலையிலெல்லாம் இல்லை அந்த பிள்ளையைப் பெற்றவள். எதிர்பாராமல் மரணத்திடம் கணவரைப் பறிகொடுத்த துயரத்தைக் காட்டிலும், தெரிந்தே உயிருடன் மகனைப் பறிகொடுத்த துயரம் அதிகம் தெரிந்தது அந்த பெண்மணியிடம்.

சக்ரேஸ்வரியின் நிலையில் அவளைப் பொருத்திப்பார்த்து, மனதிற்குள் மிகவும் வருந்தினான் மல்லிக்.

அந்த கணம் மனதில் ஒரு எண்ணம் பொறி தட்டவும், அவன் பிரதி எடுத்து வைத்திருந்த சந்தோஷ் என்பவனின் புகைப் படத்தை அவர்களிடம் காண்பிக்கவும், அதைப் பார்த்து அதிர்ந்தவாறு, அவன்தான் அந்த லட்சுமணா என அடித்துக் கூறினார் அவனுடைய நண்பனின் தந்தை.

அவன் இதையே பிழைப்பாய் வைத்துக்கொண்டு அந்த பகுதியில் சுற்றிக்கொண்டிருப்பது புரிந்தது மல்லிக்கிற்கு. அவன் மீதான வன்மமும் கூடிக்கொண்டே போனது.

இந்த நிலையில்தான் ஒருசமயம், அவர்கள் ஊருக்கு அருகில் இருக்கும் சுற்றுலாத்தலமான மாரேடுமில்லி என்ற சிறிய நகரத்தில், அந்த புகைப்படத்தில் இருப்பவனைப் பார்த்ததாக அவனுடைய நண்பன் ஒருவன் சொல்லவும், ஒரு நாள் முழுதும் அங்கே வலைவீசி, அவனைக் கண்டுபிடித்தான் மல்லிக்.

அங்கே இருந்த சிறிய தங்கும் விடுதி ஒன்றில் தங்கியிருந்தான் சந்தோஷ், லட்சுமணா எனப் பலபெயர்களை தனக்குச் சூட்டிக்கொண்டு, பிள்ளைகளைக் கடத்தும் சந்தீப் என்பவன்.

இரவு நேரம் யாரும் அறியாமல், அந்த விடுதிக்குள் நுழைந்த மல்லிக், அவன் தங்கியிருந்த அறையின் கதவைத் தட்டவும், அந்த சந்தீப் தயக்கத்துடன் கதவைத் திறக்க, அடுத்த நொடி அவனைத் தள்ளிக்கொண்டு அதிரடியாக அறைக்குள் புகுந்து கதவை தாளிட்டான்.

நடப்பதை அவன் உணர்வதற்குள்ளாகவே, கையில் வைத்திருந்த துணியால் அவனுடைய வாயைப் பொத்தி, சரமாரியாக அவனை வெளுத்து எடுத்தான் மல்லிக்.

ஒருகட்டத்தில். அவன் சோர்ந்துபோய், கீழே விழ, அவன் வாயில் அடைத்திருந்த துணியை நீக்கி, “குக்கா! செப்பு… நீ பேரு ஏமி?” என்று அவன் கேட்க, நடுங்கிய குரலில், “சந்தோஷ்!” என்றான் அவன். ‘உண்மையான பெயரைச் சொல்!’ என்பதுபோல், அவனுடைய கைகள், மற்றவனைப் பதம் பார்க்க, “விட்டுரு! விட்டுரு! சொல்லிடறேன்!” என்றவன், “சந்தீப்! அதுதான் என்னோட உண்மையான பேரு!” என்றான் அவன்.

“சந்தீப் நா கொடுக்கா… செப்புறா! நா பிட்டா… நா டிப்பு இப்புடு எக்கட உன்னாடு?” (இப்ப டிப்பு எங்க இருக்கான் சொல்லுடா!) என்று மல்லிக் உறும…

அதில் நிலை குலைந்தவன், “நான் எட்டு பேருக்கு வேலை செஞ்சிட்டு இருக்கேன்! நான் பிள்ளைங்கள பிடிச்சி, அந்த ஏஜென்ட் கிட்ட ஒப்படைச்சிடுவேன். பசங்கள அவங்க எங்க அனுப்புவாங்கன்னு எல்லாம் எனக்குத் தெரியாது!

ஆனா இந்த ஸ்டேட்லேயே இருக்கமாட்டாங்க… அதுமட்டும் தெரியும்!

மத்தபடி இந்தியால எங்கேயாவது கடத்தி இருபாங்க. இல்லனா வேற நாட்டுக்குக்கூட கடத்தியிருப்பாங்க!” எனத் தமிழிலேயே சொல்லிமுடித்தான் அந்த சந்தீப்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, என அனைத்து மொழிகளிலும் வாயில் வந்த கெட்ட வார்த்தைகள் அனைத்திலும் அவனைத் திட்டி தீர்த்த மல்லிக், கீழே விழுந்து கிடந்த அவனைக் காலால் உதைத்தவரே, “டிப்புவோ எந்த ஏஜெண்டுக்கு விக்கறே?” என்று கேட்கவும்,

“அந்த ஏஜென்ட் பேரு, சங்கரைய்யா! அவன் இப்ப எங்க இருக்கான்னு எனக்கு தெரியாது!” என உயிர் பயம் கண்ணில் தெரிய அவன் சொல்லவும், மேலும் அவனை இரண்டு மிதி மிதித்தவன், தனது நண்பனின் மகனைப் பற்றிக் கேட்க, அவனையும் அந்த சங்கரய்யாவிடம்தான் விற்றதாகச் சொன்னான் அந்த சந்தீப்.

அவனுடைய நவீனரக கைப்பேசியைப் பறித்து, தனது சட்டைப் பையில் போட்டுக்கொண்டு, பின்பு அவன் குற்றுயிர் ஆகும் வரை அவனை அடித்து நொறுக்கிய மல்லிக், கையோடு எடுத்துவந்திருந்த பெட்ரோலை ஊற்றித் தீயிட்டு அவனைக் கொளுத்திவிட்டு, அங்கிருந்த ஜன்னல் வழியாக வெளியில் குதித்து, அங்கிருந்து தப்பினான்.

தன்னை பற்றி பொய்யான தகவல்களைக் கொடுத்து சந்தீப் அந்த விடுதியில் தங்கியிருந்த காரணத்தால், அவன் இறந்த செய்தி அவனுடன் தொழில் ரீதியான இணைப்பிலிருந்த ஒருவருக்கும் தெரியாமலே போனது.

அவனுடைய கைப்பேசியை எடுத்துவந்த மல்லிக், அதை இயக்கும் முறை பிடிபடாமல் மிகவும் தவித்துப் போனான். அதனைப் பற்றி வேறு யாரிடமும் கேட்க இயலாத நிலையில், கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் முயன்று, அவனுடைய பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் பள்ளி இறுதி வகுப்பில் படிக்கும் ஒரு பையனுடைய துணையுடன், அதனை இயக்க கற்றுக்கொண்டான் மல்லிக்.

ஓரளவிற்குத் தட்டுத்தடுமாறி, ஆங்கிலத்தை எழுத்துக்கூட்டிப் படிக்கத் தெரிந்த காரணத்தால், அதில் அவன் பதிவு செய்து வைத்திருந்த சில ஏஜெண்ட்களின் பெயர்களையும் அவர்களுடைய தொடர்பு எண்களையும் குறித்து வைத்துக்கொண்டு, , அவர்களுடைய புகைப் படங்களைப் பார்த்து அவர்களுடைய அடையாளத்தை மனதில் பதியவைத்துக்கொண்டு அந்த கைப்பேசியை அழித்துவிட்டான் அவன்.

அவர்களில் இருவரைத் தவிர மீதம் இருப்பவர்கள் எல்லோருமே சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது மட்டும் அவனுக்குத் தெரியவந்தது.

ஆனால் அதில் சந்தீப் குறிப்பிட்ட அந்த சங்கரய்யா பற்றிய விவரங்கள் மட்டும் இருக்கவில்லை.

முதலில் அதன் காரணம் புரியாமல் போனாலும், அந்த கைப்பேசியை இயக்க தெரியாமல் தானே சில தகவல்களை அழித்திருக்கக்கூடும் என்பதைத் தொடர்ந்த நாட்களில் அவன் உணர்ந்துகொண்டான் மல்லிக்.

சென்னைக்குச் சென்றால்தான் டிப்புவை கண்டுபிடிக்க முடியும் என்ற எண்ணம் அவன் மனதில் ஆழமாகத் தோன்றவும், சென்னைக்கு வந்தவன், அவனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ள, நிரந்தரமாக ஒரு வேலை தேவை என்ற காரணத்தால், அது வரை எந்த ஒரு சுய லாபத்திற்காகவும், ஈஸ்வரைத் தேடிச்செல்லாதவன், அவனிடம் உதவி கேட்டு வந்தான்.

கொஞ்சமும் யோசிக்காமல், ஈஸ்வர் அவனை வேலையில் சேர்த்துக்கொள்ளவும், அவனிடம் பௌன்சராக வேலை செய்யத்தொடங்கினான் மல்லிக்.

அவனுடன் வேலை செய்பவர்கள், அவனை வடநாட்டை சேர்ந்தவன் என்று நினைத்து, மல்லிக் என்ற பெயரை மாலிக் என்று அழைக்கத்தொடங்கினர்.

முதலில் அதை மறுத்துப்பேசி மாற்ற முயன்றவன், ஒரு கட்டத்தில் அப்படியே விட்டுவிட்டான். அதனால் ஈஸ்வரைத் தவிர அனைவருமே அவனை மாலிக் என்றே அழைத்தனர்.

சில தினங்களில், கிடைத்த இடைவெளியில், ஊருக்குச் சென்று, அவனுடைய அண்ணன் மற்றும் அண்ணி இருவரையும் சென்னைக்கே அழைத்துவந்து, அவனது நிலைக்குத் தகுந்தாற்போன்று ஒரு வீட்டை எடுத்து, அங்கே அவர்களைத் தங்கவைத்தான் மல்லிக்.

சக்ரேஸ்வரியின் உடல் நிலையில் முன்னேற்றம் இருந்த பொழுதிலும், தீக்காயமும் முற்றிலும் ஆறவில்லை, தீயினால் உண்டான நுரை ஈரல் பாதிப்பும் சுலபத்தில் சரியாகவில்லை. இந்த நிலையில்தான் மல்லிக் அவளைச் சென்னைக்கு அழைத்து வந்தது.

கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அவளைக் காண்பித்து, முறையான மருத்துவம் செய்து ஓரளவிற்கு அவளை மீட்டுவந்தான் அவன். ஆனால் அதற்குள்ளாக, சோமய்யாவின் மனநிலை மோசமான பாதிப்பிற்குள்ளாகி இருந்தது.

அவன் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் வாயிலில் தவம் கிடப்பதன் காரணம் புரியாமல் குழம்பினான் மல்லிக்.

இத்தனை மெனக்கெடல்களுக்கிடையில், அவனது வேட்டையைத் தொடங்கியிருந்தான் அவன்.

முதன்முதலாக அவன் குறித்து வைத்திருந்த ஏஜென்ட்களின் பட்டியலிலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்து, சந்தீப்பின் பெயரைச் சொல்லி அவளை மிரட்டி, நள்ளிரவு நேரத்தில், தாம்பரம் புறவழிச்சாலைக்கு வரச்சொன்னான்.

அவள் ஒரு பெண் என்பதுகூட அவன் மனதை இளக்கவில்லை. மாறாகத் தாய்மை உணர்வுடன் இருக்க வேண்டிய ஒரு பெண் இது போன்ற ஒரு கேவலமான மோசடியில் ஈடுபட்டது, அவனது கோபத்தை அதிகரிக்கவே செய்தது. கொஞ்சமும் தயங்காமல் அவளை எரித்துக் கொன்றான் மல்லிக்.

அவள் இறப்பதற்கு முன்பாக டிப்புவை பற்றி அவன் அவளிடம் விசாரிக்க, அவளிடமிருந்து உருப்படியாக எந்த தகவலும் கிடைக்கவில்லை.

அண்ணன் மகனைக் கண்டுபிடிக்கும் வழி தெரியாமல், அவனைப் பெற்றவர்கள் இருவரையும் பார்த்து, பார்த்து நொந்தவன், தன்னுடைய இயலாமையை வெறுத்தவனாக, தொடர்ந்து ஒவ்வொரு ஏஜெண்டாக கொன்று மனதில் எரியும் தீயை அணைக்க முயன்றுகொண்டிருக்கிறான்.

அப்படிதான் அந்த மகாபலிபுரம் விடுதியில், அந்த பெண்களை அவன் கொன்றதும் கூட.

ஆனால் அன்றைய தினத்தில் அந்த பெண்கள் மலரைக் கடத்த முயன்றதையோ, அந்த கொலைகளில் அவள் சிக்கி இருந்ததையோ, அறிந்திருக்கவில்லை அவன்.

தற்செயலாக ஒருநாள் சோமய்யாவை அழைத்துவர, அவன் வழக்கமாகப் படுத்துக் கிடக்கும் இடத்திற்கு மல்லிக் செல்லவும், அங்கே மாமா, மாமி இருவரிடமும் மலர் பேசிக்கொண்டிருப்பதை அவன் கேட்க நேர்ந்தது.

அவன் செய்யும் கொலைகளில் அவள் சிக்கி இருப்பதை அப்பொழுதுதான் அறிந்துகொண்டான் மல்லிக்.

சோமய்யாவிற்கு உணவளித்து, அவள் அவனிடம் கரிசனத்துடன் நடந்துகொள்வதை அவ்வப்பொழுது பார்த்திருக்கிறான் அவன். அதனால் அவளிடம் ஒரு நன்மதிப்பு உருவாகி இருந்தது அவனுக்கு.

மேலும் ஜீவிதாவின் நாத்தனார் என்ற முறையில் அவளை நன்றாகவே அவனுக்குத் தெரியும்.

அதுமட்டும் இல்லாமல் மல்லிக், ஈஸ்வருடன் நெருங்கிப் பழகும் காரணத்தால், ஈஸ்வர் மலரை விரும்புவது, அவனுக்கு அரசல்புரசலாக தெரிந்துதான் இருந்தது.

எனவே மலரை அந்த சிக்கலிலிருந்து காப்பாற்றும் பொருட்டு, அந்த ஒலிப்பதிவைப் போலீசுக்கு கிடைக்கும்படி செய்திருந்தான் அவன்.

அதே நேரம், கடத்தப்பட்ட சிறுவன் ஒருவன், அந்த ஏஜென்ட் வந்த வாகனத்துக்குள் இருந்ததால், அதிர்ஷ்ட வசமாக அவனைக் காப்பாற்றும் வாய்ப்பும் அன்று அவனுக்குக் கிடைத்தது. கூடவே அன்று அவனால் கொலை செய்யப்பட்டவன் மூலமாக, அந்த சிறுவனை அவன் வேதா என்பவனிடம் ஒப்படைக்க இருந்ததும் தெரிய வந்தது.

அந்த வேதாவை கண்டுபிடிக்கும் முயற்சியில் அவன் இறங்க, ஜீவன் கடத்தப்பட்ட அன்றுதான் அவனை நெருங்கியிருந்தான் மல்லிக். அவன் அந்த இடத்திற்கு வந்த நேரம், ஈஸ்வர் எல்லா குழந்தைகளையும் ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டிருந்தான்.

அதில் அவன் மனதில் நிம்மதி படரவும், அங்கே தனக்கு எந்த வேலையும் இல்லை என்பதை உணர்ந்தவன், அங்கேயே மறைவான இடத்தில் நின்றவாறு, வேதாவிற்காகக் காத்திருந்தான்.

அவன் எதிர்பார்த்தது போலவே, அங்கே நடந்த எதையும் அறியாத வேதா அங்கே வந்து, அந்த சூழ்நிலையைக் கண்டு பயந்து அங்கிருந்து நழுவி செல்லவும், அவனைப் பின்தொடர்ந்தவன், அவனையும் அவனுடன் இருந்த மற்றொருவனையும் கொன்று எரித்தான்.

அந்த பிணங்களை அடையாளம் காட்ட ஈஸ்வருடன் மலர் சென்ற பொழுதும் கூட, அந்த இடத்திற்கு அவர்களுடன் வந்த மல்லிக், அந்த கயவர்களை எண்ணி மனதிற்குள் நகைத்துக்கொண்டான்.

***

மல்லிக்கிடம் சொன்னதுபோல் அடுத்த நாள் சக்ரேஸ்வரியை, நேரில் பார்த்து ஆறுதல் சொல்ல அவர்களுடைய வீட்டிற்கு வந்திருந்த ஈஸ்வரிடம் அனைத்தையும் சொல்லி முடித்தான் மல்லிக்.

அவன் சொன்ன அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டான் ஈஸ்வர்,

“நீ இதை அப்பவே என்கிட்ட சொல்லியிருக்கலாமே!” என நடந்தவற்றைக் குறித்து ஆதங்கப்பட மட்டுமே முடிந்தது அவனால்.

பின்பு நினைவு வந்தவனாக, “மலரோட டீடெயில்ஸ் எல்லாம் செத்துப்போனவங்க கிட்ட இருந்ததே, அது எப்படி?” என்று ஈஸ்வர் கேட்கவும்,

அந்த செய்தி அவனுக்குப் புதிது, எனவே “அவுனா?!” என்று அதிர்ந்த மல்லிக், “நாக்கு தானி குறிஞ்சி ஏமி தெல்லேதே அண்ணையா!” (எனக்கு அதுபற்றி எதுவும் தெரியாதே அண்ணா) என்றான் குழப்பத்துடன்.

அதே நேரம், சுசீலா மாமி குடி இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் நுழை வாயிலில் நின்றிருந்த ஆம்புலன்சில், சோமய்யாவை ஏற்ற முயன்றுகொண்டிருந்தனர் சிலர். உடல் விறைத்து, அதில் ஏற அவன் முரண்டு பிடிக்கவும், “அண்ணா ப்ளீஸ்! எனக்காக இந்த வண்டில ஏறுங்க! உங்களுக்கு நல்லதுதான் செய்ய நினைக்கிறோம்!” என்று மலர் சொல்லவும், அதில் அவன் கொஞ்சம் இளகவும், அவனது முகத்தில் படர்ந்த ஏமாற்றத்தைக் கவனித்தவள், “ப்ளீஸ் அண்ணா என்னை நம்புங்க, உங்களுக்கு எந்த கெடுதலும் வராது!” என்றாள் மலர் கனிவுடன்.

அவளது வார்த்தைகளுக்கு மறுப்பின்றி, ஆம்புலன்சில் ஏறப்போனவன், ஒரு நொடி தயங்கி நின்று, அந்த பிளாட்டின் முதல் தளத்தில் இருக்கும் வீட்டின் ஜன்னலை வெறித்தவாறு, ஏதோ முணுமுணுக்கவும், அதை மலர் உற்றுக் கவனிக்க அதில் “சங்கரய்யா!” என்ற வார்த்தை மட்டுமே அவளுக்குப் புரிந்தது.

error: Content is protected !!