AOA-8

AOA-8

அவனின்றி ஓரணுவும்-8

ஈட்டியைத் தோளில் சுமந்தபடி குகையை விட்டு வெளியேறி காட்டு விலங்குகளை வேட்டையாடிய மனிதனுக்கும், சீரான உடையணிந்து நியூயார்க், லண்டன்  அல்லது டோக்கியோவில் கணிப்பொறியை கலந்தாலோசிக்க காரில் பயணம் செய்யும் தற்கால மனிதனுக்கும்

 இடையேயுள்ள வேறுப்பாட்டிற்கு உடல்ரீதியான முன்னேற்ற வளர்ச்சியோ மூளை வளர்ச்சியோ காரணமல்ல. முற்றிலும் புதியதொரு பரிணாம காரணியே இதற்கு காரணமாகும்.

சிலரை பார்க்கும் போது ரொம்பவும் நெருக்கமான உணர்வு ஏற்படுவது எல்லோருக்கும் இயல்பாக நடக்கும் ஒன்றுதான். ஆனால் பிரபஞ்சன் அதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் ஷெர்லியை  தன்னில் பாதியாகவே உணரந்தான்.

அதுவும் முதல் முறை அவள் கடலில் தத்தளிக்கும் போதே தோன்றிய உணர்வு அது. உயிரே போய்விடுமளவுக்கு அவன் மனம் துடித்த துடிப்பும், அவளை கரைக்கு கொண்ட வந்த போது மனம் அடைந்த நிம்மதியும் வெறும் இயல்பான ஒன்றாக அவனுக்கு தோன்றவில்லை. ஆனால் அந்த பதட்டத்தில் அவள் முகத்தை பார்க்கும் போது அதன் காரணம் புரியவில்லை.

நேற்று அவளை பார்த்தும் பேசாமல் போனாலும் பிரபஞ்சன் நினைவெல்லாம் அவளிடமே சிக்கி கொண்டது . பார்த்த முகம். ரொம்பவும் பழகிய முகம் என்ற எண்ணம் சுழன்று கொண்டே இருந்தது அவனுக்குள்.

ஆனால் அவள் இந்த நாட்டு பெண்ணே இல்லையெனும் போது அதெப்படி சாத்தியம்? காரணம் புரியாமல் அவன் அவள் விழிகளை ஊடுருவி பார்த்து கொண்டிருக்க அவள் தம் பூவிதழ்கள் விரிய, “ஹாய் பிரபஞ்சன்! ஐம் ஷெர்லி” என்று அறிமுகப்படலத்தோடு  தன் வலது கரத்தை நீட்டினாள்.

அவன் தன் கரங்களில் மண் ஒட்டியிருப்பதை பார்த்து தயக்கமாக அவளை நோக்க, அப்போது உள்ளிருந்த ஹரி, “பிரபா” என்று கோபத்தோடு சத்தமிட்டு கொண்டே வெளியே வந்தார்.  திரும்பி பார்த்த ஷெர்லி, “ஹாய் ஹரி” என்க, கோபமெல்லாம் மறைந்து பிரகமாசமாக மாறியது அவர் முகம்.

“ஏ பியிட்டி! வெல்கம்” என்றார் அவர்!

பிரபஞ்சன் அவர்கள் உரையாடலை வியப்புற பார்த்து கொண்டே அங்கிருந்த தண்ணீர் தொட்டியிலிருந்து தண்ணீர் எடுத்து தன் கை கால்களை அலம்பி கொள்ள, அதற்குள் ஹரி ஷெர்லியை உள்ளே அழைத்து கொண்டு சென்றுவிட்டார்.

ஷெர்லியும் ஹரியும் சோபாவில் அமர்ந்து பேசி கொண்டிருக்கும் போது பிரபஞ்சன் உள்ளே நுழைய ஷெர்லி அவனை பார்த்து,  “ஹான்ட் வாஷ் பண்ணிட்டீங்களா?  இப்போ ஹான்ட்  ஷேக் பண்ணிக்கலாமா?” என்று கேட்டு எழுந்து நின்று தன் கரத்தை அவன் புறம் நீட்டினாள்.

அவளின் இலகுவான பழகும்தன்மை பிரபஞ்சனை வெகுவாக கவர்ந்தது. அவனும் புன்னகைததும்ப அவள் கரத்தை பற்றி குலுக்கினான்.

அவள், “தேங்க் யு சோ மச்… என்னால இன்னும் நடந்ததை பிலீவ் பண்ணவே முடியல… நீங்க என்னை சேவ் பண்ணலன்னா” என்று அவள் நெகிழ்ச்சியோடு அவன் கரத்தை பற்றியபடி நீண்ட நெடிய நன்றியுரை வாசிக்க, அவன் அவள் கரத்துடன் கோர்த்திருந்த தன் கரத்தையே பார்த்திருந்தான். எப்போது கையை விடுவாள் என்று!

மிருதுவான அவள் கரத்தின் தொடுகை அவனை ஏதோ செய்து கொண்டிருந்தது. இப்படியெல்லாம் அவன் எந்த பெண்ணிடமும் உணர்ந்தே இல்லை. இதென்ன தன் கண்ணியத்திற்கு வந்த சோதனை என்று தவிப்போடு நின்றான்.

ஹரிஹரன் அடக்கப்பட்ட புன்னகையோடு பிரபஞ்சனின் சங்கடத்தை பார்த்து ரசித்து கொண்டிருக்க, அதனை கவனித்த பிரபா ஓரப்பார்வையால் அவரை முறைத்துவிட்டு,

பின் ஷெர்லியிடம் திரும்பி, “நீங்க இமோஷன் ஆகுற அளவுக்கெல்லாம் நான் எதுவும் செய்யலங்க… அந்த சூழ்நிலையில நான் உங்களை காப்பாத்தனும்னு இருக்கு… காப்பாத்தினேன் அவ்வளவுதான்” என்றான். அதோடு மெல்ல தன் கரத்தை அவளிடமிருந்து விடுவித்து கொண்டான்.

ஹரி கேலியான பாவனையோடு சிரித்தபடி நிற்க அவரை பார்வையாலேயே மிரட்டிவிட்டு,“நான் ப்ரேஷ் ஆகிட்டு வரேன்… நீங்க பேசிட்டு இருங்க”  என்று அவளிடம் சொல்ல,

“ஏ பிரபா! டிபன் சாப்பிட்டிட்டு போடா” என்று ஹரியின் அழைப்பிற்கு அவரை எரிச்சலாக பார்த்தான்.

“குளிச்சிட்டு வந்திடுறேன்” என்ற ஒரு காரணத்தை சொல்லி நழுவி கொண்டு  தன் அறைக்குள் நுழைந்துவிட்டான்.

‘பைய புள்ள  நார்மலா இல்லயே… எந்த பொண்ண பார்த்தாலும் ரியாக்ஷனே இல்லாம இருப்பான்… ஷெர்லியை பார்க்கும் போது மட்டும் ஏன் இப்படி தடுமாறுறான்?’ என்று சந்தேக பார்வையோடு அவன் சென்ற திசையை ஹரி பார்க்க,

அவர் எண்ணம் போலவேதான் பிரபாவின் மனமும் ஷெர்லியின் சந்திப்பில் தடுமாறி கொண்டிருந்தது. அவள் அருகில் தன் மனக்கடுப்பாடு தகர்ந்துவிடுவது போல் ஒரு உணர்வு! அதுவும் இரவு கண்ட கனவு வேறு அவளை பார்த்த நொடி மீண்டும் நினைவுக்கு வந்து தொலைந்தது. அதற்காகவே அவளை மீண்டும் பார்க்க கூடாது என்று எண்ணி கொண்டான். அவள் புறப்படும் வரை என்னவானாலும் தான் கீழே செல்ல கூடாது என்ற முடிவோடு இருந்தான்.

குளியலறைக்குள் சென்று குளித்து முடித்து உடை மாற்றி கொண்டிருந்தான் பிரபஞ்சன். அவர்கள் பேசி சிரிக்கும் சத்தம் மேல்தளத்திலிருந்த அவன் அறை வரை கேட்டது. இன்னும் அவள் புறப்படவில்லையா என்று அவனுக்குள் எரிச்சல் மிகுந்தது. அப்போது பார்த்து காலை உணவு உண்ணாத காரணத்தால் பயங்கரமாக பசிக்க வேறு செய்தது அவனுக்கு. ஆனாலும் அவள் இருக்கும்வரை கீழே செல்வதில்லை என்று உறுதியாக இருந்தான்.

ஆக்ரோஷமாக கொந்தளிக்கும் கடலை விட அவளை பார்க்கும் போது உள்ளுக்குள் கொந்தளிக்கும் அவன் ஹார்மோன்கள் அவனுக்கு அச்சமூட்டியது. அவன் வாழ்கையின் இலட்சியத்திற்கு வேண்டத்தகாத எண்ணங்களை ஒருநாளும் வளர்த்து கொள்ள கூடாது என்பதே அவன் எண்ணம்.  மனதையும் உணர்வுகளையும் கட்டுப்படுத்துவதில் அவன் வல்லவன்தான். இருப்பினும் அவள் அவன் எண்ணங்களுக்கு நேர்மறையாக செயலப்பட்டு அவனை சோதித்து கொண்டிருந்தாள்.

பிரபஞ்சன் இவ்விதம் தன்னறையிலேயே யோசனையோடு நடந்து கொண்டிருக்கும் போது மேஜையிலிருந்த ஷெர்லியின் செயின் அவன் கவனித்தை ஈர்த்தது. இம்முறையும் அதை கொடுக்க மறந்துவிட்டால் மீண்டும் அவளை பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்துவிடுமோ என்ற எண்ணம் தோன்ற, அந்த நொடியே அவள் செயினை எடுத்து கொண்டு கீழே சென்றான்.

ஷெர்லியும் ஹரியும் சுவாரசியமாக உரையாடி கொண்டிருந்தனர்.  ஹரி அப்போது ஷெர்லி உண்பதற்கு பலா சுளையை எடுத்து வந்தார். நேற்று அவள் பேசும் போதே அவளுக்கு அது ரொம்பவும் பிடிக்கும் என்பதை அறிந்து கொண்டிருந்தார்.

பிரபா கடுப்பாக அந்த காட்சியை பார்த்தான்.

‘இதென்ன அநியாயம்? நான் இங்க கொலை பசியில இருக்கேன்… என்னை கண்டுக்கா அந்த பொண்ணுக்கு மட்டும் பலா பழம்… காலையில அதான் பழத்தை வெட்டி மாஞ்சி மாஞ்சி சுளையை எடுத்துட்டு இருந்தாரோ? நான் கூட எனக்குன்னு நினைச்சேன்… இருக்கட்டும் இருக்கட்டும்’ என்று பிரபஞ்சன் தனக்குள்ளாகவே பொருமி கொண்டே இறங்கி வந்தான்.

ஹரி அப்போது, “நீ பார்க்க தமிழ் பொண்ணு மாதிரியே இருக்க பியுட்டி!” என்று கேட்டு கொண்டே தட்டில் பழங்களை எடுத்து வந்துஅவளிடம் கொடுக்க,

அவள் மெல்லிய புன்னகையோடு, “அது கொஞ்சம் உண்மைதான்” என்று சொல்லிவிட்டு அவற்றை எடுத்த உண்ண ஆரம்பித்தாள். அவள் அப்படி சொல்லும் போது பிரபஞ்சன் கீழே இறங்கி வந்திருந்தான். அவளின் அந்த பதில் அவனின் ஆர்வத்தை தூண்டியது. மேலே அவள் என்ன சொல்ல போகிறாள் என்ற எதிர்பார்போடு அவன் மௌனமாக அப்படியே நின்றுவிட,

அவள் பதிலை கேட்ட ஹரியும், “சீரியஸ்லி” என்று விழிகளை விரித்து வியப்பு குறியை காட்டினார்.

“ஹ்ம்ம் எஸ்… என் கிரேன்ட் மா தமிழ்… என் கிரேன்ட் பா அவங்கள லவ் பண்ணி மேரேஜ் பண்ணிகிட்டாரு” என்றதோடு அவள் பேச்சை நிறுத்தி கொண்டு பழங்களை ருசிப்பதில் ஆர்வமாகி,

“ரொம்ப சூப்பரா இருக்கு ஹரி” என்று பாராட்டுரை வாசிக்க தொடங்கினாள்.

பிரபஞ்சனுக்கு ஏனென்று தெரியாமல் லேசான ஏமாற்றம் தொற்றி கொண்டது.

சம்பந்தமே இல்லாத ஒரு பெண்ணை பற்றி தெரிந்து கொள்வதில் தனக்கென்ன இத்தனை ஆர்வம் என்று வியப்பாக இருந்த போதிலும் அதற்கான விடையை அவன் தேட விரும்பவில்லை.

ஷெர்லியின் முன்னே சென்று அவள் செயினை நீட்டினான்.

அவள் விழிகள் இருமடங்கு பெரிதாக,  “ஹே! இட்ஸ் மைன்”  என்று சந்தோஷத்துடன் குதுகலித்தாள்.

அதோடு அவள் துள்ளலாக எழுந்து நின்று பிரபஞ்சன் கைகளிலிருந்து அவள் செயினை பெற்று கொண்டு, “ஹவ் இஸ் இட் பாசிபிள்?!!!!!” என்று வியப்பின் விளிம்பில் சென்றவள்,  “எப்படி இந்த செயின் உங்ககிட்ட?” என்று குழப்பத்தோடு கேள்வியும் கேட்டாள்.

“இன்ஸ்பெக்டர் கொண்டு வந்து கொடுத்தாரு ஷெர்லி” என்று ஹரி காவலர் ஒருவர் அதனை அவர்களிடம் கொண்டு வந்து சேர்த்த கதையையும் அவர் தந்த விவரத்தையும் விளக்கினார்.

அதை கேட்ட நொடி அவள் இன்னும் குதூகலமானாள். தன்னிடம் தவறாக நடந்து கொண்ட கயவர்களுக்கு எந்த தண்டனையும் வாங்கி தர முடியவில்லையே என்ற கவலை மனதிலிருந்து நீங்கிவிட, அந்த செயினை தன் கரத்தில் மூடி கொண்டு, “தேங்க் காட்… இது என் கிரேன்ட் பா தந்தது… நான் மிஸ் பண்ணிட்டேனோன்னு நினைச்சேன்”  என்று அகமகிழ்ந்தாள்.

அவள் முகத்தில் வெளிப்பட்ட இன்ப உணர்வு பிரபஞ்சனையும் மகிழ்வித்தது. அவன் விலகலின் பின்னோடு ஒளிந்து கொண்டிருந்த அவள் மீதான ஈர்ப்பும் விருப்பமும் அப்பட்டமாக அப்போது வெளிப்பட்டுவிட்டது. ஹரி மூளை அதனை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க,

பிரபஞ்சன் ஒரு படி மேலாக சென்று அவளிடம் அக்கறையோடு, “இனிமே எங்கே போனாலும் தனியா போகாதீங்க… இங்க சரியான பாதுகாப்பு இல்லை” என்று தெரிவித்தான்.

“பார்றா?!” என்று ஹரி வாயிற்குள் சிரித்து கொள்ள,

“தனியா போக கூடாது… இந்த மாதிரியெல்லாம் டிரஸ் பண்ண கூடாது… இன்னும் என்னவெல்லாம் ரூல்ஸ் வெச்சிருக்கீங்க உங்க கன்ட்ரில… டேம் இட்” அவள் சுதந்திரமும் சுயமும் மொத்தமாக இங்கே பறிபோகிறது என்ற கோபம் அவள் வார்த்தைகளில் தெளிவாக வெளிப்படவும் பிரபஞ்சன் அவளை ஆழ்ந்து பார்த்தான்.

பிறரின் மனதை ஓரளவு படிக்க தெரிந்தவன். அவள் கோபம் வெறும் நடந்த மோசமான சம்பவத்தை குறித்தது மட்டுமல்ல என்பதை அறிந்து கொண்டவன்,

“உங்க டிரஸிங் பத்தி யாராச்சும் ஏதாசும் சொன்னாங்களா?” என்று அவள் கோபத்திற்கான காரணத்தை அவளிடம் நேரடியாகவே வினவினான்.

“ஹ்ம்ம்… சத்யா செட்… நான் டீசெண்டா டிரஸ் பண்ணலயாம்… அதனாலதான் அந்த ரேஸ்கல்ஸ் அப்படி என்கிட்ட நடந்துக்கிட்டாங்களாம்… நான்சென்ஸ்… ஏன் ?நான் அவன்  சிஸ்டர்  மாதிரி பெரிய பெட்ஷீட்டா வியர் பண்ணிகிட்டி இருந்தா அவங்க என்கிட்ட அப்படி நடந்துகிட்டு இருக்க மாட்டாங்களா?” என்று அவள் சொன்ன விதத்தில் ஹரிக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்துவிட்டது. பெருங்குரலெடுத்து சிரித்துவிட்டார்.

அவள் ‘பெட்ஷீட்’ என்று விவரித்தது புடவையைத்தான். “பெட்ஷீட்” என்று சொல்லி அவர் மேலும் சிரித்து கொண்டிருக்க, ஷெர்லி அவரை ஆழமாக பார்த்து கொண்டிருந்தாள்.

பிரபஞ்சன் உடனே, ‘போதும்’ என்று கை காட்டவும் அவர் தன் சிரிப்பை சிரம்மப்ட்டு அடக்கி கொள்ள அவள் முகத்தில் எந்தவித மாற்றமும் இல்லை.

அந்த சம்பவத்தின் நினைப்பு அவளை வேதனைக்குள்ளாக்கி இருக்க,

ஹரி அப்போது, “ஹே! பியுட்டி… ரிலெக்ஸ்… அந்த சத்யா ஒரு லூசு… அவன் ஃபேமிலி மாதிரி அவனும் கொஞ்சம் கட்டுப்பட்டித்தான்” என்றார் சிரித்தபடி!

பிரபஞ்சனுக்கு யாரை குறை சொன்னாலும் பிடிக்காது. “சார்” என்று அவரை அடக்கியவன் ஷெர்லியிடம் திரும்பி,

“உங்க பீலிங்க்ஸ் எனக்கு புரியுது… ஆனா சத்யா கண்டிப்பா உங்கள ஹார்ட் பண்ற நோக்கத்தோட அப்படி சொல்லி இருக்க மாட்டான்… இங்க நிலைமை அப்படி இருக்கு… அதுவும் எல்லோரோட எண்ணங்களும் ஒரே மாதிரி கோட்டில பயணிக்க முடியாதே” என்றான்.

“வாட் இஸ் இட் மீன்? நீங்களும் அப்போ சத்யா சொன்னதை சப்போர்ட் பண்றீங்களா?” என்று அவள் காட்டமாக கேட்க,

“நாட் அட் ஆல்… ஒரு பொண்ணோட ட்ரஸ் ஒரு ஆணுக்குள்ள செக்ஸுவல் பீலிங்கசை உருவாக்கிறது என்பதே என்னை பொறுத்த வரைக்கும் ஹும்பக்

அப்படி பார்த்தா ஆதி காலத்து மனுஷங்க யாரும் டிரஸ்சே போடல… அப்போ ஆணுக்குள்ள பீலிங்க்சை உருவாக்கினது எது?” என்று அவளிடமே கேள்வியை திருப்பினான்.

வியப்போடு அவன் கேட்ட கேள்வியின் சாரம்சத்தை அவள் யோசித்து கொண்டிருக்க அவன் மேலும்,

“ஒரு மனுஷனோட வக்கிரமான எண்ணமும் அதை உருவாக்கிற இந்த சமுதாயமும் அவன் சுற்றமும்தான் என்னை பொறுத்த வரைக்கும் இதற்கான அதிமுக்கியமான காரண கர்த்தா … இதுல ஆபோசிட் பார்ட்டியோட டிரஸ் வயசு பாலினம் எல்லாம் மேட்டரே இல்ல” என்று பிரபஞ்சன் சொல்ல, அவனின் தெளிவான சிந்தனை அவளை வசியம் செய்தது. அவள் அவன் விழிகளையே உள்புகுந்து பார்த்து கொண்டிருந்தாள்.

ஹரி அப்போது,  “செமயா சொன்ன பிரபா… ஆனா நம்ம நாட்டை பத்தி நாமலே இப்படி சொல்ல வேண்டிய நிலைமைலயிருக்கோமே” என்று வருத்தம் கொண்டார்.

ஷெர்லி அவர் சொன்னதை கேட்டு புன்னகைத்துவிட்டு, “சாரி… நான் சத்யா மேல இருந்த கோபத்துல அப்படி பேசிட்டேன் “ என்று சமாதானமாக இருவரையும் பார்க்க,

“நோ பியுட்டி! உன் கோபம் நியாமானது” என்றார் ஹரி!

பிரபா அவர் காதோடு, “போதும் போதும்… பியுட்டி பியுட்டின்னு ஓவராத்தான் போறீங்க… முதல அந்த பொண்ணை அனுப்பி விடுங்க” என்று ரகசியமாக உரைத்தான்.

ஷெர்லியே அதற்குள்ளாக அவர்களிடம் விடை பெற்று கொண்டு செல்ல எத்தனிக்க, “திரும்பியும் எப்போ மீட் பண்ணலாம் பியுட்டி” என்று பிரபாவை கடுப்பேற்ற வேண்டுமென்றே ஹரி கேட்க, பிரபஞ்சன் பார்வை அவரை சீற்றமாக முற்றுகையிட்டது. ஆனால் ஹரி அதை துளியும் கண்டுக்கொள்ளவில்லை. அவர் ஷெர்லியின் பதிலை எதிர்ப்பார்த்திருந்தார்.

“இல்ல… நான் சீக்கிரமே கலிபோர்னியா கிளம்பிடுவேன்” என்றாள் ஷெர்லி!

“ஒய் பியுட்டி? சத்யா மேரேஜ் இன்னும் ஓன் வீக் இருக்கே” என்று கேட்க,

“இல்ல ஹரி… சத்யா மேரேஜ்க்காக நான் இங்க வரல… என் மோடிவ் வேற… பட் அது நடக்கும்னு எனக்கு தோணல… இப்போ எனக்கு அந்த இன்டிரஸ்டும் இல்ல… ஸோ” என்று இழுத்துவிட்டு மேலே அவள் மனநிலையை விவரிக்க விரும்பாமல் சமிஞ்சையால் அவள் புறப்படுவதை உரைத்துவிட்டு வாசலை கடந்து சென்றுவிட ஹரியின் முகம் சோர்ந்து போனது. ஷெர்லியை எப்படியாவது பிரபஞ்சனோடு கோர்த்துவிடலாம் என்ற எண்ணம் நடக்காமல் போனதே!

ஹரியின் முகத்திலிருந்த சோக ரேகைகளை பார்த்த பிரபஞ்சன் கேலி தொனியில், “போச்சா போச்சா?” என்று கலாய்த்துவிட்டு, “கொஞ்சமாச்சும் பெரிய மனுஷத்தனமா நடந்துக்கோங்க சார்” என்று அவர் எண்ணத்தை கணித்து அவன் சொல்ல,

“யாருடா பெரிய மனுஷன்… ஐம் ஸ்டில் யங் மேன்” என்று அவர் எப்போதும் பேசும் வசனத்தை உரைத்தார்.  அதோடு அவர் இன்னும் பெருமை பொங்க, “என் பியுட்டி என்கிட்ட பேசுன விதத்தை பார்த்தியா?” என்று சொல்லவும்,

“பார்த்தேன் பார்த்தேன்… அதென்ன ஹரி ஹரின்னு கூப்பிட்டு பேசுது அந்த பொண்ணு” என்று கேட்டான்.

“என் பேர் அதானே டா… என்ன? உனக்கு பொறாமையில ஸ்டொமாக் எல்லாம் பர்ன் ஆகுதா?” என்று கேட்டுவிட்டு எள்ளி நகைத்தார்.

“ஐயோ! சத்தியமா பர்ன் ஆகுது… ஆனா பொறாமையில இல்ல… பசியில…முதல டிபன் சாப்பிடணும்” என்று சொல்லிவிட்டு அவசரமாக உணவு மேஜையிலிருந்த காலை உணவை தட்டில் வைத்து சாப்பிட ஆரம்பித்தான்.

“நீ சத்தியமா அதுக்கு சரி பட்டு வரமாட்ட” என்று ஹரி சொல்லிவிட்டு சமையலறைக்குள் செல்ல,

“எதுக்கு?” என்று பிரபஞ்சன் சாப்பிட்டு கொண்டே கேட்டான்.

“எதுக்குன்னு சொன்னா மட்டும்… அப்படி விளங்கிற போகுதாக்கும்” என்று சலிப்போடு அவனை பார்த்து தலையிலடித்து கொண்டார்.

எப்போதும் போல் இவர்களின் கிண்டலும் கேலியும் இயல்பாக அரங்கேறி கொண்டிருந்தது. அதேசமயம் சத்யாவின் தந்தை லோகநாதனுக்கு ஷெர்லி ஹரியின் வீட்டிற்கு சென்றுவிட்டு வந்த விஷயம் ஊர்காரர் ஒருவர் மூலமாக அவர் காதுக்கு எட்டியது. ஹரிஹரன் மீது ஏகபோகதிற்கு கோபத்திலும் கடுப்பிலும்  இருந்தவர் ஷெர்லியின் இந்த செய்கையால் இன்னும் சீற்றமானார்.

லோகநாதனின் பேச்சுக்கள் ஷெர்லிக்கு சரிவர புரியாவிட்டாலும் அவர் நடந்து கொள்ளும் விதத்தை வைத்து அவள் அவர் எண்ணத்தை கணித்துவிட சத்யா அப்போது அவளிடம் இறைஞ்சுதலாக, “இங்க பக்கத்துல ஒரு ஹோட்டல் இருக்கு… வசதியா இருக்கும்… நாம நாளைக்கு காலையில அங்கே போய்” என்று இழுத்த இழுவையில் அவள் நிலவரத்தை நன்றாகவே புரிந்து கொண்டாள்.

“தேங்க்ஸ் சத்யா… நானே நாளைக்கு மோர்னிங் போயிடுறேன்” என்று முடித்து கொண்டாள். மேலே சமாதானமாக பேச முயன்ற சத்யாவை அமைதியாக வெளியே அனுப்பிவிட்டாள் . சத்யாவின் மீதோ அல்லது அவர்கள் குடும்பத்தாரின் மீதோ கோபமோ வருத்தமோ அவளுக்கு இல்லை.

எப்படியும் போக போகிறோம். அது இரண்டு நாள் முன்பாக நடக்கிறது என்று இயல்பாக எடுத்து கொண்டாள். அதற்கேற்றார் போல அவள் விமான பயனச்சீட்டையும் முன்பதிவு செய்துவிட்டிருந்தாள். போக வேண்டுமென்ற முடிவில் அவள் தீர்க்கமாக இருந்தாள். ஆனால் விதியின் முடிவு அதுவாக இல்லை.

ஷெர்லியையும் பிரபஞ்சனையும் தொடர்புப்படுத்தும் விஷயம் ஒன்று இருவரையும் ஒரு புள்ளியில் இணைக்க காத்திருந்தது.

*          *          *          *          *          *          *          *          *          *          *

பொழுது புலர சில மணித்துளிகளே இருந்தன. அந்த இருளிலிருந்து ஒரு பயங்கர வெளிச்சம் மின்னலை விடவும் பல்லாயிரம் மடங்கு அதிவீரியமான சக்தியை கொண்ட ஒளி கீற்றுகளோடு கண்களை குருடாக்கிவிடுமளவுக்கு தோன்றி நொடி நேரத்தில் மறைந்தும் போனது. பின்னர் அந்த இடம் முழுக்க காரிருள் மயமாகியது.

யாரும் பார்க்க கூடாத, பார்க்க முடியாத அதிபயங்கரமான காட்சி அது. சில வினாடிகளில் அந்த இடம் முழுக்க அழுகைகள் . மரண ஓலங்கள். எங்குமெங்கும் சிவப்பு வண்ணமாக குருதிக் கோலங்கள்.

மயான பூமியாக என்றளவுக்கு. இல்லை! அதை விடவும் கொடூரமாக.

அவனை கடந்து செல்லும் ஒவ்வொருவரின் மூக்கிலும் வாயிலும் ரத்தம் குபீரென பெருகி வடிந்து கொண்டிருந்தது. அவர்கள் வலி பொறுக்காமல் “காப்பாற்றுங்கள்” என்று உதவி கேட்டு கதறியபடி தரையில் சரிந்தனர்.

தரையில் சரிந்தவர்கள் சில நொடிகள் வலியால் கதறி துடித்த பின் மடிந்தும் போயினர். அவர்கள் உயிர் ஒடுங்கியது. இப்படியாக பல்லாயிரம் பேர். அவன் கண் முன்னே!

அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மரணம் அவர்கள் வலிகளுக்கு விடுதலை தந்துவிட்டது என்று நிம்மதியடைய மட்டுமே முடிந்தது. ஆனால் ஏனிந்த மரணங்கள் நிகழ்கின்றன?

இறந்த உடல்களை பார்க்கும் போது நஞ்சுண்டு இறந்தவர்களை போன்ற எண்ணம் தோன்றியது. காற்றில் ஏதாவது நச்சு கலந்திருக்குமோ?!

அவன் தனக்குத்தானே கேட்டு கொண்டான்.

ஆனால் அதெப்படி? தனக்கு மட்டும் மயக்கம் வரவில்லை. அழுகை வரவில்லை. ஊமையாகி போனது போல தொண்டை குழியில் ஒலி எழும்பவில்லை.

அந்த கொடூரத்தை பார்க்க சக்தியின்றி அவன் ஓட எத்தனித்த போது அவன் கால்கள் அசையவில்லை.  அந்த மரண ஓலங்களை கேட்க வேண்டாமென எண்ணி காதுகளை மூட எண்ணிய போது அவன் கைகள் அவனுக்கு உதவவில்லை. அதுவுமே அசைய மறுத்தன.

எதுவுமே செய்யாமல் அந்த மரணங்களை இயலாமையோடு பார்த்து கொண்டிருப்பது கொடுமையிலும் கொடுமையாக இருந்தது. அவனுக்கு அந்த கணம் அதிபயங்கரமான ஒரு கற்பனை உதித்தது.

ஒரு வேளை…. ஒரு வேளை…  தானும் மரணித்துவிட்டோமோ?! இது நம்முடைய உடல் இல்லையோ? ஆன்மாவாக இருக்குமோ?

இல்லை! இல்லை! நிச்சயம் அப்படி இருக்காது…  இது கனவு! தான் விழித்து கொள்ள வேண்டும்… விழித்து கொள்ள வேண்டும்… விழித்து கொள்ள வேண்டும் என்று தொடர்ச்சியாக அவனுக்குள்ளிருந்து போராடியது அவன் ஆன்மா. ஆனால் அது முடியவில்லை. அந்த கோரமான காட்சிகளை அவன் மனம் தொடர்ச்சியாக காட்சிப்படுத்தி கொண்டேயிருந்தன.

error: Content is protected !!