Aval throwpathi alla – 11

Aval throwpathi alla – 11

11

அந்த இடம் முழுவதுமாய் இருளில்  மூழ்கிய வண்ணம் இருக்க,

“எதுக்கு இப்ப என்னை மாடிக்கு கூட்டின்னு போற?” சலித்து கொண்டே நதியாவிடம் கேட்டாள் அம்மு!

“சொல்றேன் வா” நதியா சொல்லிவிட்டு முன்னே சொல்ல,

“மேக்ஸ் அசைன்மேன்ட் வேற எழுதனும் நதி… இல்லாட்டி அந்த ஷியாமா என்னை ஒரு வழி பண்ணிடும்” என்று அமலா புலம்பி கொண்டே மாடிக்கு ஏறி வந்தாள்.

அந்த இடம் முழுவதும் அவள் சற்றும் எதிர்பாரா வண்ணம் மெழுகுவர்த்திகளால் ஒளிவீசி கொண்டிருக்க, அமலா அப்படியே ஆச்சர்யத்தில் உறைந்து நின்றுவிட்டாள்.

அப்போது அங்கே வசிக்கும் சிறுவர்கள் எல்லோரும் மொத்தமாய் ஒன்று கூடி  ஓரே நேரத்தில்,

“ஹாப்பி பார்த்டே டூ யூ … ஹாப்பி பர்த்டே டூ அம்மு… மே காட் பிளஸ் யூ டியர்… ஹாப்பி பார்த்டே டூ அம்மு” என்று பாடி கைத்தட்டி ஆரவாரித்தனர்.

வீரா அவர்களுக்கு இடையில் நின்றிருக்க அவள் அருகாமையில் இருந்த மேஜை மீது சிறிய கேக்கும் அதன் மீது ஓர் சிறிய மெழுகுவர்த்தியும் அழகாய் ஒளிர்ந்து கொண்டிருந்தன.

அமுலாவிற்கோ அவள் காணும் காட்சியை நம்பவே முடியவில்லை. பள்ளி தோழிகளின் பிறந்த நாள் கொண்டாடங்ளையெல்லாம் பார்த்துவிட்டு அவள் பல நேரங்களில் தன் தமக்கைகளிடம் ஏக்கமாய் பொறுமி இருந்திருக்கிறாள்.

ஒரு முறை இதை போல் பிறந்த நாள் கொண்டாட வேண்டும் என்று தன் அம்மாவிடம் கூட சொல்லி வசமாய் வாங்கி கட்டி கொண்டும் இருந்திருக்கிறாளே!

“நூறு இருநூறு ரூபாய்க்கு கேக் வாங்கி அதை ஓரே நாளில துன்னு தீர்க்கமானாக்கும்… மூணு பேரோட புறந்த நாளுக்கும் எப்படியோ அங்கே இங்கன்னு காசை புரட்டி புது துணி வாங்கிறதுக்குள்ளயே எனக்கு நாக்கை தள்ளுது… இதுல கேக்கு வோணும் அது வோணும்னு கேட்டு… இப்படி என் இரத்தத்தை உறியிறீங்களேடி” என்று சொர்ணம் கோபமாய் பொறிய,

“இப்ப என்ன அவ தப்பா கேட்டுட்டா?” வீரா அமலாவிற்காக பரிந்து கொண்டு வந்தாள்.

“ஆமான்டி… இப்ப நான் எது சொல்லிக்கினாலும் அது உங்களுக்கு தப்பாதான்டி தெரியும்… ஏன்? இதெல்லாம் போய் உங்க குடிகார அப்பன்கிட்ட  கேட்கிறதுதானே” என்று அன்று பூராவும் சொர்ணம் இது குறித்து புலம்பி தீர்க்க, அம்முவிற்கு கேக் வெட்டும் ஆசையே அன்றோடு விட்டு போயிருந்தது.

ஆதலாலயே அமலாவிற்கு இன்று  அவள் பார்ப்பவையெல்லாம் நிஜம்தானா என்று  நம்புவதற்கே சில நேரங்கள் பிடித்தன.

அவள் விழியெல்லாம் நெகிழ்ச்சியில் நீர் நிரம்பி ஊற்ற,

“அக்கா” என்று தழுதழுத்த குரலில் நதியாவும் வீராவையும் மாறி மாறி பார்த்தாள் அமலா!

வீரா அவளின் கண்ணீரை துடைத்துவிட்டு, 

“புறந்த நாளன்னைக்கு எதுக்கு இப்ப அழுவுற… வா… வந்து கேக்கை வெட்டு” என்று  தன் தங்கையின் கரத்தை பிடித்து அழைத்து சென்றதும்

“ஏது க்கா உனக்கு கேக் வாங்க காசு?” அமலா சந்தேகித்து வினவினாள்.

“அதல்லாம் அப்புறம் பேசிக்கலாம்” என்று சொல்லி வீரா அவளை கேக் முன்னே அழைத்து சென்று நிறுத்தி,

“ஹ்ம்ம்… ஊது” என்க,

அமலா பெருமிதத்தோடு எல்லோரையும் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியை ஊதி அணைக்க,

அங்கிருந்தவர்கள் அனைவரும் கரவொலி எழுப்பி ஹாப்பி பர்த்தேடே பாடலை மீண்டும் பாடினர்.

பின்னர் அமலா கேக்கை வெட்டி அதனை தன் தமக்கைக்கு ஊட்ட வர,

வீராவோ அதனை வாங்கி தன் தங்கைக்கு ஊட்டி விட்டாள்.

“முதல்ல கேக்கையும் சாக்லேட்டையும்
பசங்களுக்கும் கொடு அம்மு” என்று சின்னதாய் சாக்லேட் பாக்ஸ் ஒன்றையும் அவளிடம் நீட்ட,

அமலாவிற்கு இதெல்லாம் எப்படி நடக்கிறதென்று புரியாத பார்வையோடு தன் தமக்கையை கேள்வியாய் பார்க்க,

“என்னடி பார்த்துனு இருக்க… குடு” என்று வீரா சொல்ல

அமலா அந்த இனிப்புகளை  எல்லோருக்கும் பகிர்ந்து வழங்கினாள்.

அந்த சிறுவர்கள் கூட்டமும் சந்தோஷமாக அதனை ஆவல் ததும்ப   பெற்று கொண்டு உண்ண ஆரம்பித்தனர்.

அன்றாட உணவுக்கே அல்லல்படும் அந்த சிறுவர்களுக்கு இந்த மாதிரியான உணவுபண்டங்கள் அவர்களின் தேவைகளுக்கெல்லாம் அப்பார்ப்பட்ட ஒன்றுதான்!

ஆதலாலயே எல்லோரும் அந்த இனிப்புகளை அத்தனை ஆர்வமாய் ருசி பார்த்து உண்ண,

வீராவிற்கு அதனை பார்க்க பெருத்த மகிழ்ச்சி!

அமலா எல்லோருக்கும் பங்கிட்டுவிட்டு கடைசியாய் மீதம் இருந்த துண்டை தன் தமக்கைகளுக்கு ஊட்டிவிட்டு அவர்களை கட்டி கொண்டு வார்த்தைகளின்றி கண்கலங்கினாள்!

அந்த தருணம் ரொம்பவும் நெகிழிச்சியாய் மாறியிருக்க, அந்த சகோதிரிகளின் பிணைப்பும் அன்பும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதளவுக்கு அத்தனை உணர்ச்சிபூர்வமாய் இருந்தது.

அதே நேரம் எளிமையாய் நடைப்பெற்றாலும் அமலாவின் பிறந்த நாள் கொண்டாட்டம் அழகாக நடைப்பெற்று முடிவுபெற,

சகோதிரிகள் மூவரும் அதன் பின்னர் தங்கள் வீட்டிற்கு திரும்பினர்.

“சந்தோசமா அம்மு… எப்ப பாரு… கேக் வெட்டி புறந்த நாள் கொண்டாடனும்னு கேட்டுன்னே கிடப்ப… இன்னைக்கு வீராக்காவால நீ நினைச்சது நடந்துச்சு?” என்று நதியா அமர்ந்து கொண்டு வினவ,

அமலா தன் இரு சகோதிரிகளையும் மாறி மாறி பார்த்து, “எனக்கோசரம் இன்னாத்துக்கு இவ்வளவு செலவு? அம்மாதான் இதெல்லாம் வீண் செலவுன்னு சொல்லிருக்கில்ல” என்றாள்.

“அது சரிதான்… ஆனா நீ இப்படி கொண்டாடனும்னு ஆசைப்பட்டல… அதுவுமில்லாம உனக்கு புதுதுணி வாங்கிறளவுக்கு அக்காகிட்ட காசில்லடா… அதான் கேக் வாங்கிக்கினே” என்று வீரா சொல்ல அமலா கண்களில் நீர் மல்க,

“ரொம்ப தேங்க்ஸு கா” என்று அவள் தன் தமக்கையினை இறுக்கமாய்  அணைத்து கொள்ள,

“நானு” என்று நதியாவும் அவர்களோடு வந்து ஒண்டி கொண்டாள்.

உணர்ச்சிவசமாய் தன் அணைப்பில் கிடந்த இரு சகோதிரிகளையும் வீரா முத்தமிட அமலா உடனே தலையை நிமிர்த்தி,

“ஏன்க்கா… உனக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னா எங்களை விட்டு போயிடுவியா?!” என்று ஏக்கமாய் கேட்க

அத்தனை நேரம் வீராவின் முகத்திலிருந்த சந்தோஷமெல்லாம் அப்போதே மொத்தம் பறிபோயிருந்தது.

சலிப்பான பார்வையோடு,

“நீ என்ன லூசா… இங்க நமக்கு தினம் சோத்துக்கே திண்டாட்டம்.. இதுல கல்யாணம் கன்றாவின்னு” என்று முகத்தை சுருக்கினாள்.

“இப்ப இல்லன்னாலும்… அப்புறமா பண்ணிப்ப இல்ல” இப்போது நதியா கேள்வி எழுப்ப,

“ஏன்டி இப்படி லூசாட்டும் பேசிட்டிருக்கீங்க” என்று கோபமாய் பேசிவிட்டு எழுந்து சென்றாள்.

“அப்போ கல்யாணமே பண்ணிக்க மாட்டியா க்கா?” என்று அமலா கேட்க,

“இப்ப அது ரொம்ப முக்கியமா?! உங்க இரண்டு பேருக்கும் படிக்கிற வேலை ஒண்ணும் இல்லையா?” என்று வீரா முறைப்பாய் கேட்க,

“படிக்கிறோம் க்கா? ஆனா ஒண்ணே ஒண்ணும் மட்டும் சொல்லேன்” என்று நதியா ஆர்வமாய் கேட்க புருவங்கள் சுருங்க இருவரையும் அவன் மௌனமாய் பார்த்தார்.

“ஏன்க்கா… அன்னைக்கு ஒருத்தன்… நம்ம வூட்டுக்கு வந்து உனக்கு பூவெல்லாம் கொடுத்து சும்மா ஹீரோ கணக்கா ஐ லவ் யூவெல்லாம் சொன்னானே!” என்று கேட்கவும்

வீரா சீற்றமாய்,

“இப்ப இன்னாத்துக்குடி அவனை பத்தி பேசிறீங்க” என்றாள்.

“இல்ல… உனக்கு அவனை பிடிக்குமான்னு” நதியா தயக்கமாய் கேட்டு வைத்தாள்.

“அவனெல்லாம் பணக்காரன் வூட்டு பையன் நதி… காதலிக்கிறேன்னு பின்னாடியே சுத்துவானுங்க… அப்புறம் அவங்க தேவையெல்லாம் தீர்ந்ததும் உட்டு போயின்னே இருப்பானுங்க… அம்மா எத்தனை தடவை சொல்லிருக்கு… பணம் பந்தோபஸ்துன்னு இருக்கிறவனுங்கெல்லாம் நமக்கு செட்டாவாது… எனக்குன்னு எவனாவது ஓர் இளிச்சவாயன் பிறக்காமல போயிருப்பான்… அவனா வருவான்…  எதுக்கு இந்த காதல் கன்றாவி எல்லாம் நமக்கு” என்று தங்கைகளிடம் வீரா சொல்ல அமலா மறுப்பாய் தலையசைத்து,

“போக்கா… அப்படியெல்லாம் இல்ல… உன் அழுகுக்கும் கெத்துக்கும் செம சூப்பரா ஒருத்தன் வருவான் பாரேன்”  என்று அமலா சொல்ல,

வீரா பெருமூச்செறிந்து,

“அழகு பார்த்தெல்லாம் வர கூடாது அம்மு… நம்ம மனசை பார்த்து வரனும்”  இவ்விதம் தன் சகோதிரிகளிடம் நிதானித்து உரைத்தவளுக்கு அந்த எண்ணம் அத்தனை ஆழமாய் பதிவாகியிருந்தது… அதுவும் சொல்லிலடங்கா வலியோடு!

அடுத்த நாள் காலை சகோதிரிகள் இருவரும் பள்ளிக்கு புறப்பட்டுவிட்ட நிலையில்,

வீராவும் வீட்டை பூட்டி கொண்டு வேலை தேடி வெளியே சென்று கொண்டிருந்தவள் சுகுமாரின் வீட்டு கதவை திறந்திருப்பதை பார்த்து,

“சுகுமார்ர்ர்ர்ர்ர்ரு” என்று அழைத்து கொண்டே உள்ளே எட்டி பார்த்தாள்.

“ஏய் ஏய் … நீயே ஏன் வந்த… ஒழுங்கா போயிரு சொல்லிட்டேன்” என்று பதறி கொண்டே சுகுமார் கதவை மூட வர,

அவளோ அதற்குள் உள்ளே நுழைந்து, “இப்ப இன்னாத்துக்கு நீ டென்ஷனாவுற?!” என்று கேட்டாள்.

“ஏய்… வெளியே போ… உன் சங்காத்தமே எனக்கு வோணாம் சாமி” என்று சுகுமார் கையெடுத்து கும்பிட,

“இன்னா சுகுமார் இப்படி சொல்ற… நம்ம என்ன அப்படியா பழகினோம்?!” என்று கேட்டு நமட்டு சிரிப்போடு நின்றவளை கோபம் பொங்க முறைத்தான்.

அவள் மேலும், “அந்த மேட்டரை விடு சுகுமாரு… நான் வந்ததே உனக்கு தேங்க்ஸ் சொல்லத்தான்” என்றவள் சொல்லவும்,

“இன்னாத்துக்கு தேங்க்ஸ்… செய்றதெல்லாம் செஞ்சிட்டு… உன்னால என் போஃனு கூட தொலஞ்சி போச்சு… தெரியுமா?!” என்றவன் வேதனையோடு தெரிவிக்க,

“நான் உன் போஃனை தொலைச்சேனா… அது எப்போ?!” அதிர்ந்தாள் வீரா!

“அன்னைக்குதான்… எவனோ ஒரு பன்னாடையை காப்பாத்திறேன்னு என் போஃனை தூக்கின்னு ஓடினியே மறந்திட்டியா?!” அவன் சொல்லி முடிக்க வீரா உதட்டை கடித்து கொண்டு

“ஸ்ஸ்ஸ்… ஆமா இல்ல” என்று வருத்தப்பட,

சுகுமார் அவளை கடுப்பாய் பார்த்தான்.

“செய்றதெல்லாம் செஞ்சிட்டு இன்னா பீஃல்ங்கு உனக்கு? எனக்குதான் பீஃலிங்” என்றதும் அவள் பதிலுரைக்காமல் அவனை மௌனமாய் பார்க்க,

“இன்னும் இன்னாத்துக்கு இங்க நிற்கிற… போ…” என்று அவளை அவன் துரத்த,

அவள் முகத்தை சுளிக்கி கொண்டு வெளியே வந்தவள்,

“ரொம்ப சீன போடாதே… அந்த போஃன் என்ன… உன் சொந்த போஃனா… எவன்டியோ இருந்து நீ ஆட்டையை  போட்டதுதானே” என்றாள்.

“ஏய்… அதெப்படி உனக்கு தெரியும்?” அவன் பதட்டம் கொள்ள,

“அப்போ அப்படிதானா சுகுமாரு?!” என்று அதிர்ச்சியோடு கேட்டாள். 

‘அய்யோ! போயும் போயும் இவ கிட்ட போய் உளறி வைச்சிட்டோமே… இவ ஒருத்தர்  உடாம தண்டோரா போட்டிருவாளே!’ என்று அவன் மனதில் எண்ணி கொள்ள,

“ப்ரீயா வுடு… நான் யார்கிட்டயும் இதபத்தி சொல்லமாட்டேன்” என்று அவன் மன எண்ணத்தை படித்தவள் போல சொல்ல

எரிச்சலோடு அவளை பார்த்தவன்

“உன்கிட்ட போய் வாய கொடுத்தேன் பாரு… என்னை பிஞ்ச செருப்பாலேயே அடிச்சுக்கனும்” என்றவன் கடுப்படித்தான்.

“அடிச்சிக்கனும்னு சொல்றியே தவிர செய்ய மாட்டிறியே சுகுமார்” என்று கேட்டதும் அவளை ஏற இறங்க பார்த்தவன்,

“அம்மா தாயே… உன் காலில் வோணா வுழறேன்… போய் தொலை” என்று அழமாட்டாத குறையாய் உரைத்தான்.

“இப்போ போறேன்… ஆனா திரும்பி”

“ஏய்ய்ய்ய்” சுகுமார் ஆவேசமாக,

“திரும்பி வரமாட்டேன்னு சொல்ல வந்தேன்” என்றதும்

அவன் விரைவாய் உள்ளே சென்று கதவை படாரென மூடி கொண்டான்.

******
மருத்துவமனை!

எப்போதும் துறுதுப்பாய் கால்களில் சக்கரம் கட்டி பறந்து கொண்டிருந்த சாரதிக்கு,

இந்த நான்கு ஐந்து நாட்களாய் மருத்துவமனையில் கட்டுண்டுது போல் படுத்து கிடப்பது அத்தனை எரிச்சலாய் இருந்தது.

அதுவும் அவன் கால் கைகளில் எல்லாம் அடிப்பட்ட உள்காயங்கள் ஆழமாய் இருப்பதால் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் இன்னும் இரண்டு  நாட்கள் அங்கேயே இருக்க வேண்டிய நிலை!

ஆதலால் அவனும் வேறு வழியின்றி அங்கே இருக்க வேண்டிய சூழ்நிலை!

ஆனால் அந்த நிலைமையிலும் அவனின் வியாபாரத்திற்கும் ஆலுவலக வேலைகளுக்கும் அவன் ஓய்வு கொடுக்க தயாராக இல்லை!

அங்கிருந்தபடியே அவற்றையெல்லாம்  அவன் கவனித்து கொண்டுதான் இருந்தான்.

அவனின் உடல் நலம் ஒருவாறு மூன்னேற்றம் அடைந்திருக்க அன்றோடு மருத்துவமனை வாசத்திற்கு முடிவுகட்டிவிட்டு புறப்பட்டவன்,

இன்னும் தன் வலது காலின் காயத்தினால் அழுந்தி ஊன்றி நடக்க முடியாமல் ஸ்டிக்கை பிடித்து கொண்டு நடந்து வர அவன் லேசாய்  தடுமாறிய சமயம்,

“ஸார்” என்று பதறி கொண்டு கணேஷ் அவனை பிடிக்க போக,

“நோ… ஐ கேன்” என்று சாரதி கணேஷிடம்  கைகாட்டி நிறுத்திவிட்டு

வலியாயிருந்தாலும் சுதாரித்து கொண்டே அவனே நடந்து வந்தான்.

எத்தனை இடர்கள் வந்தாலும் சுயமாய் அவன் தனித்து சமாளித்தே பழக்கப்பட்டவன். வேறு யாரையும் இன்றும் என்றும் அவன் நம்பும் வழக்கமில்லை. அவன் கூடவே நிழல் போல் இருந்தாலும் கணேஷிற்கும் அது பொருந்தும்.

“ஆமா… போலீஸ்கிட்ட நடந்தது ஆக்ஸிடென்ட்தானு ரெகார்ட் பண்ண சொன்னனே… பண்ணிட்டியா ?!” என்றவன் கேட்க,

“எஸ் சார்” என்று பதிலுரைத்தபடி தன் பாஸின் நடைக்கு ஈடுகொடுத்தபடி பின்னோடு நடந்து வந்தான் கணேஷ்!

“சைமன்கிட்ட நான் விசாரிக்க சொன்ன விஷயம் என்னாச்சு?”

“சார்” என்று கணேஷ் தயங்கி பேச முடியாமல் மௌனம் சாதிக்க,

அப்போது இருவரும் பேசி கொண்டே கார் நிறுத்தத்தை அடைந்தனர்.

சாரதி காரின் மீது சாய்ந்து நின்று கொண்டு,

“ஏன் தயங்கிற?…  என்ன சொன்னான் சைமன்?!” என்று கேட்க,

“அது… உங்களை அடிச்ச அந்த ரவுடி…” இடைவெளி விட்டவன் “நார்த் மெட்ராஸையே  கலக்கிட்டிருக்க பெரிய ரவுடியால்… நம்ம சைமனே… இந்த விஷயத்தில் தலையிட கொஞ்சம் பயப்படிறான்” என்று தயங்கி தயங்கி சொல்லி முடித்தான் கணேஷ்!

இதனை கேட்ட மறுகணம் மறுவார்த்தை எதுவும் பேசாமல் சாரதி ஆழ்ந்த சிந்தனையோடு காரில் ஏறி அமர,

அதற்கு பிறகு கணேஷ்  காரை திறந்து விட்டு அவனும் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து கொண்டு காரை இயக்கினான்.

சாரதி தாடையை தடவி கொடுத்தபடி தீவிரமாய் யோசித்து கொண்டே வந்தவன்,

“கணேஷ்” என்றழைக்க,

“சொல்லுங்க சார்” என்றான்.

“அந்த ரவுடியை நான் நேர்ல மீட் பன்றதுக்கு அரேஞ்ச் பண்ணு” என்றவன் தீர்க்கமாய் சொல்ல,

“சார்… திரும்ப அவன் உங்களை ஏதாச்சும்” என்று அதிர்ச்சியயில் பிரேக்கில் காலை பதித்து வண்டியை நிறுத்தினான் கணேஷ்!

“ப்ச்… ஏன் இப்போ ஷாக்காகிற?… காரை மூவ் பண்ணு” என்று சாரதி இயல்பாய் சொல்லிவிட்டு மேலே தொடர்ந்தான்.

“அந்த ரவுடியோட  மோட்டிவ் நான் இல்ல கணேஷ்… அவன் பணத்துக்காகதான் என்னை கொல்ல பார்த்தான்… ஸோ அவன் மோட்டிவ் பணம்தான்… அதை நான் அவனுக்கு தர்றேன் சொல்லுங்க… அதுவும் அவன் என்னை கொலை பண்ண வாங்கினதுக்கு இரண்டு மடங்கா தர்றேன்” என்று சாரதி தெரிவிக்க, கணேஷிற்குதான் பதட்டம் அதிகரித்தது.

“சார் இது சரியா வருமா?!”

“வரும்… யாருக்கு என்ன தேவையோ அதை நம்ம கொடுத்திட்டா… எல்லா சரியா வரும்” என்றவன் மீண்டும்,

“ஆமா… என்னை காப்பாத்தின அந்த இரண்டு பேரை பத்தி விசாரிக்க சொன்னேனே என்னாச்சு கணேஷ்?!”  எதிர்பார்ப்பாய் வினவ,

“சாரி சார்… அவங்களை பத்தி எந்த க்ளுவும் கிடைக்கலன்னு சைமன் சொன்னான்” என்றதும் சாரதி சீற்றமானான்.

முகத்தில் கோபம் கொப்பளிக்க,

“அதை எப்படி கிடைக்காம போகும்… அந்த இடியட் சைமன் வேலைதான் செய்யறன்னா… இல்ல நான் கொடுக்கிற காசில தின்னுட்டு தின்னுட்டு தூங்கிட்டிருக்கானாம்” என்று பொறிந்து தள்ளியவன்

“அவனை வந்து என்னை மீட் பண்ண சொல்லு… அவனுக்கு இருக்கு” என்றான்.

அவன் கோபத்தை பார்த்து மிரண்ட கணேஷ்” ஒகே சார்” என்று குரல்கள் தடதடக்க சொல்லியவன் மேலே எதை பற்றியும் பேச்சு கொடுத்து அவன் கோபத்தை தூண்டாமல் மௌனமாய் வந்தான்.

அந்த கார் வீட்டிற்குள் நுழைந்ததும் அவன் இல்லாமல் அத்தனை நாட்கள் நிம்மதியாய் இருந்த அந்த வீட்டு பிரஜைகள் எல்லாம் பயபக்தியோடு  தங்கள் தங்கள் வேலைகளில் ஈடுபடுவது போல் காட்டி கொண்டனர்.

காரிலிருந்து இறங்கியவன் வேலையாட்கள் மீது இறுக்கமாய் தன் பார்வையை சுழற்றிவிட்டு ஸ்டிக்கை ஊன்றி கொண்டு நடக்க,

தெய்வானை அப்போது அவுட் ஹவுஸில் நின்றபடி அவனை பார்த்தவர்,

“கடவுள் எல்லாத்தையும் பார்த்திட்டிருக்கான்… அதான் நீ செஞ்ச பாவத்துக்கு நன்னா உனக்கு தண்டனை கொடுத்துட்டான் ?!” என்று சத்தமாய் உரைக்க,

“ஏன்டி அவனான்டா போய் வாய கொடுக்கிற” என்று மனைவியை அடக்க முற்பட்டார் சாரங்கபாணி!

இந்த வார்த்தைகளை காதில் வாங்கி கொண்ட சாரதி வீட்டிற்குள் போகாமல் அப்படியே  திரும்பி அவர்களை நோக்கி வர,

“வேலில போற ஓணாண் வேட்டிக்குள்ள விட்ட கதையா… இப்ப அவன் நம்பளான்டதான் வர்றான்” என்று சாரங்கபாணி அச்சம் கொள்ள,

“வரட்டுமே… நேக்கு ஒண்ணும் பயமில்ல” என்று சொல்லும் போதே தெய்வானைக்கும் அச்சம் தொற்றி கொண்டது.

சாரதி நெருங்கி வர,

“அடுப்பில உலை கொதிக்குது… நான் போய் அரசி போடனும்” என்றபடி தெய்வானை வேகமாய் உள்ளே செல்ல பார்க்க,

“சித்தி நில்லுங்க” அதிகார தொனியில் அழைத்தான். 

தெய்வானை உள்ளே செல்லாமல் அப்படியே கையை பிசைந்து கொண்டு நிற்க,

“நீங்க சொன்னது  கரெக்ட் சித்தி… நான் பெரிய பாவம்தான் செஞ்சிட்டேன்” என்றதும் தெய்வானையும் சாரங்கபாணியும் குழப்பமாய் அவனை ஏறிட்டனர்.

அவன் மேலும், “பாவம் பார்த்து உங்க இரண்டு பேரையும் இங்க தங்க வைச்சிருக்கேன் பாருங்க… அதான்… அதான் நான் செஞ்ச பெரிய பாவம்… அதுக்கு எனக்கு இந்த தண்டனை தேவைதான்” என்றவன் எகத்தாளமாய் சொல்ல,

“நீ பேசிறது சரியில்ல சாரதி” என்று சாரங்கபாணி முறைத்து கொண்டு நின்றார்.

“நான் பேசிறது சரியில்ல… உங்க ஆம்படையாள் பேசிறது மட்டும் சரியோ?!… இப்படி நான் போகும் போது வரும் போதும்… இவா வாசலில் நின்னு என்னை இப்படி சபிச்சிட்டே இருந்தே… நான் போற காரியம் விளங்கமோ… அதான் நேக்கு இப்படியாயிடுத்து… எல்லா உங்க ஆத்துக்காரியாலதான்” என்று அவன் நக்கலாக சொல்ல,

‘அடப்பாவி… இப்படி பிளேட்டே என்பக்கமே திருப்பிவிட்டானே… ‘ என்று தெய்வானையில் வாய்க்குள்ளேயே முனகி கொண்டார்.

சாரதி நிறுத்தாமல் சாரங்கபாணியிடம்,

“இப்படியே உங்க ஆத்துகாரி பேசிட்டிருந்தான்னு வைச்சுக்கோங்கோ… அப்புறம் அவுட் ஹாஸ்ல இருக்க முடியாது… அவுட் ஆஃப் ஹவுஸ்தான்… சொல்லிட்டேன்… பார்த்துக்கோங்கோ” என்று சாரதி எள்ளல் புன்னகையோடு அவர்களை பார்த்து சொல்லிவிட்டு அகன்றான்.

அவன் தலையை கண்களை விட்டு மறைந்ததும் தெய்வானை தன் கணவனிடம்,

“பார்த்திங்களான்னா என்ன பேச்சு பேசிட்டு போறான்னு” என்று கோபமாய் பொறுமினார்.

“நீ சத்த வாய மூடிட்டு உள்ளே போறியா…
… இப்படியே பேசி பேசி என்னை நடுதெருவில கொண்டு வந்து நிறுத்திடாதுடி… நோக்கு புண்ணியமா போவட்டும்” என்று சாரங்கபாணி கெஞ்சலாய் உரைக்க,

“ம்க்கும்” என்று நொடித்து கொண்டு உள்ளே சென்றார் தெய்வானை!

சாரதி வீட்டிற்குள் சென்று சோபாவில் அமர்ந்த சமயம் கணேஷ் அவன் பின்னோடு வந்து,

“சார்” என்று அவசரமாய் அழைத்து,

“நாம் கார் டிரைவிங் சீட் கீழே… இந்த போஃன் கிடந்துச்சு சார்” என்றான்.

சாரதி அதனை ஆர்வமாய் வாங்கி பார்த்து யோசித்தவன்,

“என்னை ஹாஸ்பெட்ல சேர்த்த இரண்டு பேர்ல… யாராச்சும் ஒருத்தர்தா இருக்குமோ?!” என்றதும் கணேஷும் ஆமோதித்து,

“ஆமா சார்… நானும் அதான் நினைக்கிறேன்” என்க,

அந்த பேசியை இயக்க பார்த்தவன், “போஃன் சார்ஜில்லாம ஸ்விட்ச்ட் ஆஃப்ல இருக்கு… சார்ஜ் போடு… பேசி பார்க்கலாம்” என்றான்.

கணேஷ் துரதிதமாய் அந்த கைப்பேசியை சார்ஜ் போட்டு இயக்கியவன் அதில் கடைசியாய் பேசிய எண்களுக்கு எல்லாம் அழைப்பு விடுத்து அது யாருடைய பேசி என்பதை அறிந்து கொண்டு,

மறுகணமே சுகுமாரிடம் பேசுவதற்காக அவன் வீட்டின் அருகாமையில் இருந்த ஒருவனின் எண்ணை பெற்று அழைத்தனர்.

****
சுகுமாரின் வீடு!

“ஏ சுகுமாரு… உன்கிட்ட யாரோ முக்கியமா பேசனுமா… சீக்கிரம் பேசிட்டு கொடு” என்று வீட்டின் அருகிலிருந்த குடித்தனக்காரர் தன் பேசியை கொடுத்துவிட்டு செல்ல,

‘யாரா இருக்கும்?!’ என்று கேட்டு கொண்டு அந்த பேசியை காதில் நுழைத்து,

“யாருங்க?” என்று வினவ,

“ஒரு நாலு நாளைக்கு முன்னாடி ரவுடிங்க கிட்ட இருந்த ஒருத்தரை காப்பாத்தி” என்று கணேஷ் ஆரம்பிக்கும் போதே,

“அய்யோ நான் இல்ல” என்று பதட்டமடைந்தான் சுகுமார்!

“நீங்க இல்லன்னா… அப்ப வேற யாரு அவரை காப்பாத்தி ஹாஸ்பெட்ல சேர்த்தது”

“எனக்கு தெரியாது… என்னை உட்ருங்க” என்று சுகுமார் பதற,

“அப்போ உங்க போஃன்” என்று கணேஷ் கேட்ட மறுகணம் சுகுமாருக்கு சில நொடிகள் பேச்சே வரவில்லை.

அவன் மௌனமாகிட,

“நாங்க போலீஸ் ஸ்டேஷ்னல இருந்து பேசிறோம்… ஒழுங்கா உண்மையா சொல்ல போறீங்களா?!” இவ்விதம் பேசியது சாரதிதான்!

“அய்யோ சார்… இதுக்கு எனக்கும் சம்பந்தமில்ல… நான் நடந்ததை எல்லாத்தையும் சொல்லிடுறேன்” என்று நடந்த சம்பவத்தை தட்டு தடுமாறி சொல்லி முடித்தவன்,

“வீராதான் காரை ஓட்டினுவந்து ஹாஸ்பெட்ல வுட்டது… அப்புறம் நாங்க இரண்டுபேரும் ஓடிட்டோம்… இல்லாட்டி போனா அந்த ரவுடிங்க எங்களை கைம்மா பண்ணியிருப்பாங்க” என்றான்.

சாரதிக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. யார் இந்த வீரா? இந்த கேள்வியை மனதிற்குள்ளேயே எழுப்பியவன் சில நொடிகள் மௌனனாய் யோசித்துவிட்டு,

“உன்னையும் அந்த வீராவையும் நான் பார்க்கனும்” என்க,

“அய்யோ சார்… நாங்கெல்லாம் ரொம்ப கஷ்டபடிற குடும்பம்… போலீஸ் ஸ்டேஷுனுக்கெல்லாம்” என்றவன் இழுக்கவும்

“போலீஸ் ஸ்டேஷுனுக்கில்ல… என் வீட்டுக்கு… அன்…  நான் போலீஸெல்லாம் இல்ல… என் பேர் சாரதி… என் உயிரதான் நீங்க காப்பாத்தினீங்க” என்றான்.

சுகுமார் அதிர்ச்சியடைந்தவன் பின்னர் மூச்சை இழுத்துவிட்டு கொண்டு,

“என்ன சார்? இதை முதல்லயே சொல்லி இருக்கலாம்ல… நான் ரொம்ப பேஜாராயிட்டேன்” என்றதும்

“என்னை காப்பாத்தினது நீங்கதானான்னு கன்பாஃரமா தெரிஞ்சிக்கிறதுதான் அப்படி சொன்னேன்…”

“அய்யோ சார்… எனக்கு அதுக்குள்ள அல்லு வுட்டிருச்சு”

“சரி… நீயும் வீராவும் என் வீட்டுக்கு வாங்க… நான் உங்களை பார்க்கனும்…நீங்க எனக்கு செஞ்சதுக்கு நானும் பதிலுக்கு உங்களுக்கு ஏதாவது செய்யனும்னு ஆசை படிறேன்” என்று சாரதி சொல்ல,

இந்த வார்த்தைகளை கேட்டு சுகுமாருக்கு அளவில்லா ஆனந்தம்! கை கால் ஓடவில்லை.

“சார்…  பெரிசா ஏதாச்சும் செய்யுங்க… நானும் வீராவும் ரொம்ப ரிஸ்க் எடுத்திருக்கோம்” என்றவன் சொல்ல

சாரதி புன்னகையித்து

“செய்றேன் சுகுமாரு… நீ அந்த வீராவையும் கூட்டிட்டு வா” என்றான்.

“அட்ரெஸ் மட்டும் சொல்லுங்க சார்… வந்திடுறோம்” என்று சுகுமார் ஆவல் ததும்ப கேட்க

சாரதி அலைபேசியை கணேஷிடம் கொடுத்து விலாசத்தை உரைக்க சொன்னான்.

சுகுமாரும் கணேஷ் சொன்ன விலாசத்தை குறித்து கொண்டவன் அன்றே இது பற்றி வீராவிடம் பேச சென்றான்.

error: Content is protected !!