Aval throwpathi alla – 13

Aval throwpathi alla – 13

 

13

சாரதி அவளை ஓட்டுநராய் வேலைக்கு சேர்ந்து கொள்ள சொன்னதற்கு,

வீரா கொஞ்சமும் யோசிக்காமல் தன் சம்மதத்தை தெரிவித்ததை என்னவென்று விவரிப்பது?

உச்சபட்ச முட்டாள்தனமென்றா அல்லது அசட்டு துணிச்சலெனவா  ?

அவள் செய்கையில் கிட்டதட்ட இரண்டுமே இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

அவள் ‘அவளாக’ இருப்பதாலேயே இழிவாய் பார்க்கும் இந்த சமூகத்தில் அவனாக தான் மாறினால் என்ன என்ற அசட்டு துணிச்சல்!

முழுமையாக ஆணாய் மாறி நிற்கும் போதுதான் அவள் சமாளிக்க வேண்டிய சவால்கள் இன்னும் அதிகம் என்பதை உணராத அவளின் உச்சபட்ச முட்டாள்தனம்!

அவள் கடந்து வந்த பாதை அவளுக்கு போதித்த பாடங்கள் அது!

இந்த சமூகத்தின் வக்கிரமான ஒரு பாதி பெண்ணினங்களை வெறும் சதைபிண்டமாகவே பார்க்கும் போது அவளும் என்ன செய்வாள்? 

பிணந்தின்னும் கழுகுகளாக அவளை சுற்றி வரும் சில வக்கிரமான  வன்மம் நிறைந்த பார்வைகளில் இருந்து தப்பி கொள்ள கிடைத்த அரிய வாய்ப்பாகவே அவள் அதை பார்த்தாள்!

அவளுக்கு தேவையான பணமும் பாதுகாப்பும் ஒரு சேர கிடைக்க போகிறதெனும் போது வேறெதையும் அவள் மூளை சிந்திக்கவில்லை.

ஆனால் அவள் முடிவை கேட்ட சுகுமாருக்கோ அடங்காத அதிர்ச்சி!

அந்த வேலையில் நடைமுறையில் இருக்கும் இடர்களை ஒரு ஆணாய் அவனுக்கு தெரிந்தளவுக்கு  அவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அவனுக்கு ஏற்பட்ட பதட்டத்தில் பாதியளவு கூட அவளுக்கில்லை. யோசித்துதான் அவள் இந்த முடிவை எடுத்தாளா என்றவன் நம்ப முடியாமல் வாயடைத்து போய் அவளையே பார்த்திருந்தான்.

அவள் எதையும் செய்ய கூடியவள்தான்.

ஆண் வேடமிட்டு ஆண்கள் கூட்டம் நிரம்பிய அவையில் அசாதாரணமாய் அமர்ந்து கொண்டு அவள் செய்த அலப்பறையாகட்டும்!

தலைவரை அவள் சமாளித்த விதமாகட்டும்!

யார் என்னவென்று தெரியாதவனை காப்பாற்ற அதிபயங்கரமான ரவுடிகளுக்கு இடையில் அவள் கையாண்ட யுக்தியாகட்டும்!

எல்லாமே சரிதான்!

ஆனால் இப்போது அவள் செய்ய நினைப்பது முற்றிலும் யதார்த்தத்திற்கு அப்பாற்ப்பட்ட விஷயமாயிற்றே!

அவன் எப்படி அவற்றையெல்லாம் அவளிடம் சொல்லி புரிய வைப்பதென தவிப்பில் கிடக்க, சாரதி தன் பேச்சு வார்த்தைகளை முடித்து இறுதிகட்டத்திற்கு வந்தவன் கணேஷிடம் சொல்லி இருவருக்கும் ஆளுக்கு ஐயாயிரம் ரூபாய் பணம் கொடுக்க சொல்லியிருந்தான்.

முதலில் பணம் வாங்க இருவரும் தயங்க, பின்னர்  சாரதியின் கட்டளையின் பேர் அதனை பெற்று கொண்டனர்.

ஒரே நாளில் சாரதியின் செயல்பாடுகள் வீராவை கொஞ்சம் மூச்சு முட்ட வைத்துவிட்டது.

உபசரித்த விதத்தில்… வேலையாளை மிரட்டிய விதத்தில்… கேட்காமலே அவர்கள் இருவருக்கும் வேலை கொடுத்த விதத்தில்… இப்போது பணம் கொடுத்து வழியனுப்புவதில் முடிய அவன் அவளை மொத்தமாய் பிரமிப்பில் ஆழ்த்தினான்.

அதே நேரம் நடப்பவையெல்லாம் கனவாகி விடுமோ என்ற லேசான அச்சமும் அவளுக்குள்!

ஆனால் எல்லாம் நல்ல விதமாக நடந்தேறி இருவரும் அங்கிருந்து புறப்பட்டு விட,

சாரதி ஆழ்ந்த சிந்தனையோடு மௌனமாய் சோபாவில் அமர்ந்து கொண்டிருந்தான்.

“சார்” என்று பின்னோடு நின்று கணேஷ் அழைக்க,

“ஹ்ம்ம்ம்” என்றான் சிரத்தையின்றி!

“சொல்றனேனே தப்பா எடுத்துக்காதீங்க சார்… அந்த பசங்களுக்கு பணம் கொடுத்தவரைக்கும் ஒகே… ஆனால் வேலை கொடுத்ததெல்லாம்… அதுவும் டிரைவர் வேலை… லோக்கல் பசங்க… ரொம்ப ரிஸ்க்” என்று கணேஷ் தன் எண்ணத்தை தயங்கி தயங்கி உரைக்க,

சாரதியின் பார்வை அவனை கூர்மையாய் தாக்கியது.

“அப்போ என் டெசிஷன் தப்புன்னு சொல்ல வர்றியோ?!” ஒற்றை புருவத்தை ஏற்றி அவன் எகத்தாளமாய் கேட்ட விதத்தில் கணேஷ் விதிர்விதிர்த்தான்.

“அய்யோ ஸார்… நான் அப்படி சொல்லல… உங்கள காப்பாத்தின பசங்கன்னு நீங்க கொஞ்சம் இமோஷன்லா முடிவெடுத்திட்டீங்களோன்னு தோணுச்சு… அதான்” என்றவன் பதட்டத்தோடு ஆரம்பித்து தயக்கத்தோடு முடிக்க,

சாரதி எள்ளலாய் ஒரு பார்வை பார்த்து புன்னகையித்தவன், “இமோஷன்லா இந்த சாரதி முடிவெடுக்கிறதா… நெவர் அட் ஆல்?!” என்றவன் சொல்லிவிட்டு கணேஷை ஆழ்ந்து பார்த்தவன்,

“ஏன் கணேஷ்?… நீ சொன்னியே… இந்த லோக்கல் பசங்க… இவங்க இரண்டு பேரும்… என்னை அன்னைக்கு ஹாஸ்பெட்டில கொண்டு வந்து சேர்க்கிறதுக்கு பதிலா எங்கேயாச்சும் கூட்டிட்டு போய்… என் பர்ஸல இருக்கிற பணம்… கார்ட் அன்… நான் போட்டிருந்த சையின் மோதிரத்தை எல்லாம் உருவி நடுரோட்ல விட்டுட்டு போயிருந்தா… ஆர் எல்ஸ் என்னை கொன்னு தூக்கி போட்டு காரோட எஸ்கேப் ஆயிருந்தா” என்றவன் வெகு இயல்பாக சொல்ல,

கணேஷிற்கு உள்ளூர நடுங்கியது அவற்றை எல்லாம் கேட்ட மாத்திரத்தில்!

அவன் பதறி கொண்டு, “ஸார்” என்க,

“என்ன கணேஷ்? இப்படியெல்லாம் செஞ்சிருக்க முடியாதா?” என்று கூர்மையான பார்வையோடு கேட்டான் சாரதி!

“செஞ்சிருக்கலாம்” என்று கணேஷ் தயக்கமாய் சொல்ல,

“ஏன் செய்யல?” அடுத்த கேள்வியை சாரதி கேட்க,

“அது” என்று பதில் சொல்ல முடியாமல் திணறினான் கணேஷ்!

“கணேஷ்… வாய்ப்பு கிடைச்சும் ஒருத்தன் தப்பு செய்யலன்னு வைச்சுக்கோ… அவன் முட்டாள்… இல்லன்னா ரொம்ப நல்லவன்…  என்னை பொறுத்த வரை இவங்க இரண்டு பேரும்  நிச்சயம் முட்டாள் இல்ல… நல்லவனுங்க… இந்த மாதிரி நல்லவனுங்க எல்லாம் கிடைக்கிறது ரொம்ப ரேர்… கொடுக்கிற சம்பளத்துக்கு நாணயமா வேலை பார்ப்பாங்க… இவங்கள மாறி ஆட்களை கூட வைச்சிருக்கிறது நமக்கு சேஃப்டி… நமக்கெதிரா போக மாட்டாங்க… அதே நேரத்தில ஒரு பிரச்சனைன்னா விட்டுட்டு ஓடவும் மாட்டாங்க… நம்ம மேல விழற அடியை முன்ன நின்னு அவங்க வாங்குவங்க… ஷார்டா சொல்லனும்னா சீப் அன் பெஸ்ட்… தட்ஸ் இட்… நத்திங் இமோஷ்னல் ஹியர்… எவ்ரித்திங் இஸ் பிஸினஸ் மேன்” என்றவன் முடிக்க,

‘அதானே’ என்று கணேஷ் மனதில் எண்ணி கொண்டு மௌனமாய் நின்றான்.

அவன் எப்போதும் எந்நிலையிலும் வியாபாரிதான்!

அதுவும் மற்றவர்களின் தேவையை பூர்த்தி செய்வது போல் காட்டி… தன் தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் கை தேர்ந்த வியாபாரி!

அவன் மூளையை கூட அவன் அவ்விதம் சிந்திக்க வைத்தே  பழக்க்கப்படுத்தியிருக்கிறான். அது ஒரு நாளும் மனிதத்தோடும் மனிததன்மையோடும் சிந்திப்பதெல்லாம் சாத்தியமே இல்லை!

இங்கே நிலவரம் இப்படியிருக்க அங்கிருந்த புறப்பட்ட மறுகணமே சுகுமார் வீராவிடம், “ஏன் வீரா இப்படி பண்ண? உனக்கு என்ன பைத்தியமா ?!” என்றவன் பல்லை கடித்து கொண்டே கேட்க,

“நீ ஒண்ணியம் பேச வோணாம்… கம்முன்னு வா” என்றவனை அடக்கிவிட்டு முன்னே நடந்தாள்.

அவன் அவளிடம் பேச யத்தனிக்கும் போதெல்லாம் அவன் சொல்வதை கேட்காமல் அவனை அவள் அடக்கி கொண்டே வர,

அவளிடம் பேசுவது வீணென்று தன் முயற்சியை கைவிட்டவன் வீட்டை அடைந்ததும் அவளிடம்,

“வேணா வீரா! இப்ப கூட ஒண்ணும் பிரச்சனையில்ல… அந்த ஆள்கிட்ட உண்மையை சொல்லி வேறெதாச்சும் வேலை கேட்டுக்கலாம்… லூசாட்டும் பண்ணாதே” என்றவன் சொல்ல,

“உண்மை சொல்றேன்ன.. வாய கீச்சிருவேன்… உனக்கு கொடுத்து வேலையை மட்டும் நீ செய்… என் வேலையை எப்படி செய்யனும்னு எனக்கு தெரியும்” என்று சீற்றமாய் முறைத்து கொண்டு அவள் சொல்லவும்,

“சொல்றது கேளு வீரா… மாட்டினா உனக்கு சங்குதான்” என்றவன் இறங்கிய தொனியில் எச்சரிக்க,

வீரா இறுகிய பார்வையோடு, “ஏய்… இப்ப  நான் இன்னா கொலை குத்தமா பண்ண போறன்… ஒவரா பேசிற… அல்லாம் எனக்கு தெரியும்… என்னை கடுப்பேத்தாம ஒழுங்கா போயிரு சொல்லிட்டேன்” என்றாள்.

“உனக்கு புத்தி சொன்னதுக்கு”

“செருப்பாலயே அடிச்சிக்கனும்… அதானே… போய் நல்லா அடிச்சிக்கோ” என்று சொல்லிவிட்டு அவள் தன்
  வீட்டிற்குள் நுழைய,

அவர்கள் இருவரின் உரையாடல்கள் நதியா அமலாவின் காதிலும் விழுந்தது. அதே நேரம் அக்காவை பார்த்ததில் இருவரும் குதுகலத்தோடு,

“அய்!! அக்கா வந்திருச்சு” என்று ஆர்வமாய் ஓடி வர,

வீரா அவர்களை கவனியாதவளாய் உள்ளே நுழைந்தாள். 

நதியாவும் அமலாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து, “இன்னாச்சு” என்று கேட்டு கொண்டு உதட்டை பிதுக்கி கொள்ள,

வீராவோ சுவற்றோரம் யோசனையோடு சாய்ந்தமர்ந்து கொண்டாள். அவளை பொறுத்த வரை ஒரு முடிவை எடுத்த பின் அதை குறித்து விவாதங்கள் செய்வது வீண்!

இப்போதைக்கு அவளின் எண்ணமெல்லாம் தான் ஏற்று கொண்ட வேலையை எப்படி செய்ய போகிறோம் என்பதுதான்!

அப்போது அமலா, “யக்கோவ்” என்று அவள் தோள்களை குலுக்கிவிட தங்கைகளை நிமிர்ந்து பார்த்தவள்,

“இன்னாங்கடி” என்று சிரத்தையின்றி கேட்டாள்.

“ஆமா… அந்த அரை லூசு ஏன் உன்னான்ட சண்டை போட்டுக்குன்னு போறான்… இன்னா பிரச்சனை உங்க இரண்டு பேருக்கும்” என்று நதியா கேட்க,

அமலாவும் அவளோடு சேர்ந்து கொண்டு, “நீ முதல்ல இன்னாத்துக்கு க்கா அவன் கூட போன” என்று கேள்வி எழுப்பினாள்.

வீரா இருவரையும் மாறி மாறி பார்த்துவிட்டு,

“முதல்ல இரண்டு பேரும் உட்காருங்க… மேட்டர் என்னன்னு சொல்றேன்” என்க,

அமலாவும் நதியாவும் தன் தமக்கையின் அருகில் அமைதியாய் அமர்ந்தனர்.

வீரா விபத்து நடந்த கதையில் ஆரம்பித்து இன்று சாரதியை சந்தித்து பேசிய வரை ஒன்று விடாமல் முழுவதுமாய் கூறி முடித்துவிட்டு தன் தங்கைகளை ஏறிட்டு பார்க்க,

அவர்கள் இருவரும் அதிர்ச்சியே ரூபமாய் அவளை பார்த்திருந்தனர்.

“இன்னாத்துக்குடி இப்படி பார்க்கிறீங்க… எதனாச்சும் சொல்லுங்கடி” என்று வீரா அச்சம் மேலிட கேட்க,

அமலா முதலில் இயல்புநிலைக்கு வந்து, “உனக்கு தில்லுன்னா தில்லு க்கா” என்றாள் வியப்போடு!

“அதல்லாம் சரிதான்… ஆனா டிரைவர் வேலைக்கு ஆம்பிள வேஷத்தில… எப்படி க்கா?” என்று நதியா குழப்பமுற வினவ,

“தெரியல நதி… ஒத்துக்கனும்னு தோணுச்சு… ஒத்துக்கிட்டேன்” என்றாள் வீரா யோசனையோடு!

“இருந்தாலும் இது ரொம்ப ரிஸ்க்கு க்கா” என்று நதியா சொல்ல,

“ரிஸ்கெல்லாம் அக்காவுக்கு ரஸ்கு சாப்பிடிற மாறி” என்றாள் அம்மு!

“பிரச்சனை என்னன்னு புரியாம நீ லூசாட்டும் பேசாத அம்மு” என்று நதியா கோபப்பட,

“நான் ஒண்ணும் லூசட்டும் பேசல… நீதான் லூசாட்டும் பேசிற” என்று அம்மு பதிலடி கொடுத்தாள்.

“நீ கொஞ்சம் வாய மூடிறியா? நான் அக்காகிட்ட பேசனும்” நதியா முறைக்க,

“நீ மூடு வாயை” என்று அமலா பதிலுக்கு முறைத்தாள்.

“அய்யோ! இரண்டு பேரும் கொஞ்சம் வாய மூடிறீங்களா?!” வீரா கோபமாய் தன் தங்கைகளை முறைக்க

அவர்கள் இருவரும் அப்போது சமிஞ்சையாலயே ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து  உதட்டை சுளித்து கொண்டனர்.

அந்த இடம் நிசப்தமாய் மாற வீரா நதியாவிடம் திரும்பி, “சரி இப்ப… நீ இன்னாதான் சொல்ல வர்ற?” என்று தீவிரமான முகப்பாவனையோடு கேட்க,

“நீ எடுத்துக்குன்ன முடிவு ரொம்ப ரிஸ்குக்ன்னு தோணுது” என்று நதியா தயக்கத்தோடு உரைத்தாள்.

வீரா பெருமூச்செறிந்து தன் தங்கையை ஆழ்நது பார்த்தவள்,

“ரிஸ்கில்லாத வேலைன்னு எதனாச்சும் இருக்கா நதி” என்றவள் கேட்க,

“அக்கா” என்று நதியா பேச யத்தனிக்க அவளை கையமர்த்திவிட்டு வீரா மேலும் தொடர்ந்தாள்.

“உனக்கு தெரியாது நதி… கூட்டி பெருக்க வூட்டு வேலைக்கு போனா கூட ரிஸ்க்குதான்… இன்னும் கேட்டா பொம்பளயே புறப்பு எடுத்து… வாழ்றதே…  ரிஸ்குதான்… அம்மா அடிக்கடி ஒரு வார்த்தை  சொல்லும்… ஞாபகமா இருக்கா… விளக்கமாத்துக்கு புடவையை கட்டினா கூட… வுட மாட்டானுங்க… பேமானி பசங்… அதான்! புடவையை கட்டிக்கின்னாதானே பின்னாடியே வருவானுங்க…  பேன்ட் சட்டையை போட்டுக்குன்னா… எவனும் நம்மல திரும்பி கூட பார்க்க மாட்டான்ல”

இறுக்கத்தோடும் கோபத்தோடு அவள் வார்த்தைகளை அழுத்தமாய் உச்சரிக்க, நதியாவும் அமலாவும் தன் தமக்கையை விழி எடுக்காமல் பார்த்திருந்தனர்.

வீரா கம்மிய குரலில், “அன்னைக்கு கமலா க்கா என்னை வேலைக்கு கூட்டின்னு போன இடத்தில ஒரு விஷயம் நடந்துச்சு… நான் உங்ககிட்ட சொல்லல”

“இன்னாதுக்கா?” இருவரும் அதிர்ந்து கேட்க,

“அந்த ஓனரம்மாவோட பையன்… பரதேசி… கன்னாபின்னாம பேசிக்கின்னு என் பக்கத்தில வந்து மேலே எல்லாம் கை வைச்சி… எனக்கு அப்படியே அசிங்கமா போச்சு…. அவன் மூஞ்சிலயே ஒரு குத்து குத்துனேன்… மூக்கு பிளந்துக்குன்னு ரத்தம் வந்திருச்சு… அதுக்கு அந்த வீட்டம்மா… அவன் பையன் செஞ்ச தப்பை கேட்காம நான்தான் தப்பு செஞ்சன்னு இன்னா பேச்சு பேசிச்சு தெரியுமா… ?!” என்று சொல்லி கொண்டிருக்கும் போதே அவள் உதடுகள் நடுங்க மெல்ல தன்னிலைப்படுத்தி கொண்டவள் மேலும் தொடர்ந்தாள்.

“அதுமட்டுமில்ல… இன்டர்வீயூ போன இடத்தில எல்லாம் லோ கிளாசுன்னா மேலே இருந்து கீழ வரைக்கும் ஒரு பார்வை பார்க்கிறனுங்க பாரு… அப்பெல்லாம் ஏன்டா பொம்பளய பிறந்து தொலைச்சோம்னு எனக்கு பத்திக்கின்னு வரும்… அதான் அந்த ஆளு டிரைவர் வேலைக்கு கூப்பிட்டதும் உடனே சரின்னு சொல்லிக்கினே” என்றாள்.

“சரிக்கா… போற இடத்தில உனக்கு எதனாச்சும் பிரச்சனை வந்தா” நதியா பதட்டத்தோடு வினவ,

வீரா ஆவேசமானாள்.

“பிரச்சனை எங்கதான்டி வர்ல… ஹ்ம்ம்… சொந்த வூட்ல படுத்திருக்கும் போதே… பெத்த…” என்றவள் மேலே பேச முடியாமல் உடைந்து அழ,

“அக்கா” என்று அமலாவும் நதியாவும் சேர்ந்து அவள் கண்ணீரை துடைத்துவிட்டனர். அந்த நொடி அவர்களுக்குமே கண்ணீர் பெருகிற்று.

“நீ இன்னா செய்யனும்னு நினைக்கிறியோ அதை செய் க்கா… ஆனா அழ மட்டும் செய்யாதக்கா… எங்களுக்கு ரொம்ப கஷ்டமாக்குது” என்று நதியா அழுது கொண்டே சொல்ல,

“ஆமா க்கா… அழாதக்கா” என்றாள் அமலா!

வீரா தன் கண்ணீரை துடைத்து கொண்டு, “இல்ல நான் அழல” என்று உரைத்தவள் ஒரு வித யோசனையோடு மௌனமாய் அமர்ந்திருக்க,

“இன்னும் என்னக்கா யோசிக்கிற? வேற எதனாச்சும் பிரச்சனையா?” என்று நதியா வினவ,

“ஹ்ம்ம்… டிரைவிங் லைசன்ஸ்… இன்னும் பத்து நாள்ல லைசன்ஸோட வந்து வேலைக்கு சேர்ந்துக்கிறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்… ஆனா எப்படி லைஸன்ஸ் வாங்கிறது… அதுவும் வீராங்கிற பேர்ல… அதான் ஓரே குழப்பமா இருக்கு” என்றாள் வீரா!

“இது பெரிய பிரச்சனையாச்சே க்கா” என்று நதியா சொல்ல,

“அது எனக்கு தெரியாதா? … எதனாச்சும் யோசனை சொல்வீங்களா?” என்று வீரா கேட்க,

மூவரும் தீவிரமாய் விதவிதமான பாவனையில் யோசிக்க ஆரம்பித்தனர். சில நிமிடங்கள் மௌனமாய் கடந்து விட, அப்போது நதியா அவசரமாய் எழுந்து,

கையில் ஒரு கார்டை எடுத்து கொண்டு வந்து நீட்டினாள். அதை பார்த்ததும் வீரா ஆவேசமாக அதனை தூர எறிந்துவிட்டு,

“இது இன்னாத்துக்குடி என் கையில கொண்டாந்து கொடுக்கிற… தூக்கி குப்பையில போடு” என்றாள். அவள் தூக்கியெறிந்தது வீரய்யனின் லைஸன்ஸ்தான்!

“அய்யோ க்கா… அந்த ஆள விடு… அந்த லைஸன்ஸ் நமக்கு உதவும்”

“அதெப்படிறி ?”

“அந்த லைசன்ஸ்ல ஸ்கேன் பண்ணி கம்பூயூட்டர்ல போட்டு… அதுல இருக்கிற போட்டோ… வருஷத்தை மட்டும் மாத்தி அதை ப்ரின்ட் அவுட் எடுத்து லேமினேட் பண்ணி வைச்சுக்கோ… அவ்வளவு சீக்கிரம் எவனும் கண்டுபிடிக்க முடியாது” என்றுரைக்க வீரா குழப்பமாக,

“நீ சொல்றது சரியா வருமா நதி?” என்றாள்.

“கம்பூயூட்டர்ல அல்லாமே செய்யலாக்கா… அன்னைக்கு கம்பூயூட்டர் கிளாஸ்ல புதுசா ஏதோ சொல்லி தர்றேன்னு… போட்டோஷாப் சாஃப்ட் வேர் வைச்சி சொல்லி கொடுத்தாரு”

“அது சரி… இதை யாருடி பன்றது?” வீரா குழப்பமாய் கேட்க,

“நான் பண்ணி கொடுக்கிறேன் க்கா… ப்ரண்ட் வீட்ல கம்பூயூட்டர் ஸ்கேனர்லாம் இருக்கு… அங்க போய் பண்ணிக்கலாம்… நீ கவலை படாதே… அப்புறம் அதை லைசன்ஸ் கார்டா மாத்திறதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல”

வீரா அவள் சொல்வதை கேட்டு பூரித்து  போனவள் கண்ணீர் மல்க தன் தங்கையை அருகில் அழைத்து,

“நதி… நீ என்ன மாறி இல்லாம நல்லா படிச்சி அம்மா ஆசை பட்ட மாறி பெரிசா வருவடி” என்று அவள் முகவாயை தடவி பெருமிதமாய் நெற்றியில் முத்தமிட்டாள்.

அமலா புன்னகைததும்ப, “நீ எங்கேயோ போயிட்டக்கா” என்று அவளும் சேர்ந்து நதியாவை புகழ, அப்போதைக்கான அந்த பிரச்சனைக்கு விடை கிட்டிய திருப்தியில் வீரா பெருமூச்செறிந்தாள்.

“அக்கா இன்னொரு மேட்டர்” என்று நதியா உரைக்க,

“இன்னாடி?” என்று கேட்டாள் வீரா!

“நீ எதுக்கும் ஒரு ஒரிஜ்னல் லைசன்ஸை எடுத்து வைச்சுக்கோ க்கா” என்றவள் சொல்ல வீரா குறும்பாக தலையசத்துவிட்டு,

“எவ்வளவோ செய்றோம்… இதை செய்ய மாட்டோமா?!” என்று விஜய் குரலில் தோரணையோடு பேச மூவரும் சிரித்து கொண்டனர்.

அதன் பிறகு சாரதி கொடுத்த பணத்தை வீரா நதியாவிடம் கொடுத்து, “வீட்டு ஒனரம்மாவுக்கும்… கமலா க்காவுக்கு கொடுக்க வேண்டிய காசையெல்லாம் கொடுத்திட்டு மிச்சத்தை பத்திரமா எடுத்து வை” என்றதும் அமலா தன் தமக்கையின் தோளை சுரண்டி,

“அக்கா” என்றழைத்தவள் மேலும்

“உனக்கு வேலை கிடைச்சதுக்கு எனக்கு ஒண்ணும் இல்லையா?!”
என்று கேட்டாள்.

“உனக்கு இன்னா வேணும்னு சொல்லு அம்மு”

“பிரியாணி சாப்பிடலாமா?!” அமலா ஏக்கமாய் கேட்க,

நதியா முறைப்போடு, “இப்ப நாம இருக்கிற நிலையையில காசு செலவு பண்ணி பிரியாணி துன்னே ஆவனுமா?” என்க, அமலாவின் முகம் சுருங்கி போனது.

“வாய மூடு நதி… கஷ்டம் நஷ்டமெல்லாம் எப்பவும் வந்துன்னுதான் இருக்கும்… அதுக்காக சின்ன சின்ன ஆசையை கூட அனுபவிக்காம… அப்புறம் என்னத்துக்கு அந்த துட்டு… நீ வா அம்மு… நம்ம கடைக்கு போய் வாங்கின்னு வரலாம்… நதிக்கு கிடையாது” என்றதும் அமலா புன்னகையோடு, “ஒகே ஒகே” என்றாள்.

“அக்கா” என்று நதியா இழுக்க வீராவும் அமலாவும் அவளை பார்த்து நக்கலடித்து சிரித்தனர்.

இதை போன்ற சின்ன சின்ன சந்தோஷங்களில்தான் அவர்கள்  வாழ்கையில் நடந்த துயரங்களை அவ்வப்போது மறக்கடித்துவிடுகிறது.

*******
அன்று வீரா வேலைக்கு முதல் நாள் செல்ல போகின்ற காரணத்தால் ரொம்பவும் பதட்டமாய் காணப்பட்டாள். தொண்டை குழியிலிருந்து வயிறு வரை ஜிவ்வென்று ஒரு உணர்வு மேலும் கீழுமாய் இறங்க,

எத்தனையாவது முறையாக என்று தெரியாது!

கண்ணாடியில் அவள் உடையை சரி பார்த்து கொண்டு நின்றாள்.

அவளின் உடலமைப்பை காட்டாத வண்ணம் சற்றே லூசான முழுக்கை சட்டை. சட்டையின் முழங்கையை சில ஜான்கள் மடித்துவிட்டவள், கழுத்து ஒட்டியது போல ஒரு டீஷர்ட்டை உள்ளே அணிந்திருந்தாள். அவள் ஓட்டியிருந்த மீசையை உருத்து பார்த்தவள்,

எந்த வகையிலாவது தான் பெண்ணாக தெரிகிறோமா என ஆழ்ந்து பார்த்து கொண்டிருந்தாள்.

“டேன் டன் டேன் டன் டேன் டன் டாடடாடன்…. டேன் டன் டேன் டன் டேன் டன் டாடடாடன்…. ”

பின்னிருந்து அமலாவும் நதியாவும் தன் வாயலேயே இசையமைக்க,

“இன்னாங்கடி பன்றீங்க?”

வீரா கடுப்பாய் திரும்பினாள்.

“அவ்வை சண்முகி பட மீயூசிக் க்கா… கமல் ஆள்மாறாட்டம் பண்ற சீன் வரும் போது இப்படிதான் மீயூசிக் போடுவாங்க… மறந்திட்டியா?!” என்று அமலா சொல்ல

மீண்டும் அவர்கள் இருவரும் “டேன் டன் டேன் டன் டேன் டன் டாடடாடன்…. டேன் டன் டேன் டன் டேன் டன் டாடடாடன்…. ” என்க,

“சீ நிறுத்துங்கடி” என்று கோபமானாள்.

வீரா மேலும், “இங்க எனக்கு அந்த சாரதியை நினைச்சா அல்லு உடுது… நீங்க இன்னடான்னா காமெடி பன்றீங்களாடி” என்றவள் முறைக்க,

“இன்னாத்துக்குக்கா டென்ஷன்… நீ எல்லாம் அசால்ட்டு பன்னிடுவ” என்று நதியா சொல்லவும்,

“யூ ஒய் வொர்ரி… சாரதி ஒன்லி வொர்ரி” என்றாள் அமலா!

“ஏன்டி?” என்று வீரா புரியாமல் கேட்க,

“நீ டிரைவ் பண்ணி அந்த மனுஷன் பாவம்… அந்த பரிசுத்த ஆவியை கடவுள் ஆசிர்வதீப்பாராக… காட் பிளஸ் ஹிம்” என்று அமலா சிலுவையை கையால் வரைந்து மேலே கை காண்பிக்க,

“அடிங்க” என்று வீரா அமலாவை முறைத்துவிட்டு,

மீண்டும் திரும்பி தன் உடையை அவள் சரிபார்த்தாள்.

“திரும்பியும் முதலில இருந்தா” என்று நதியாவும் அமலாவும் வெறுத்து போய் தலையிலடித்து கொள்ள,

வீரா அவற்றை பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் தன் நடை உடை பாவனையெல்லாம் துளியளவும் சந்தேகமில்லாமல் ஒரு ஆணை போலவே இருக்கிறதா என்று செய்கையில் செய்து பார்த்து கொண்டாள்.

வீரா நடிப்பில் கைதேர்ந்தவள்தான். ஆனால் அது எந்தளவுக்கு சாரதியிடம் செல்லுபடியாக போகிறதென்பதுதான் இனி வரும் பதிவுகளின் உச்சபட்ச சுவாரஸ்யமே!

error: Content is protected !!