Aval throwpathi alla – 8

ரௌத்திரம்

எதிரிக்கு கூட இப்படி ஒரு கதி நேர்ந்துவிட கூடாது என்று நினைக்குமளவுக்காய் நிலைகுலைந்து போனது வீராவின் குடும்பமும் அவள் வீடும்!

எல்லோரும் ஆளுக்கு ஒரு மூலையில் அழுது வடிந்திருக்க, அக்கபக்கத்தினர்தான் அந்த பெண்களின் துயர் துடைக்க துணை நின்றனர்.

அவர்களுக்கு வேண்டிய உணவு உபகாரம் அனைத்தையும் அந்த குடித்தன வீட்டில் வசிப்பவர்கள் நான் நீ என்று போட்டி போட்டு கொண்டு செய்து கொடுக்க,

உண்மையிலேயே ஆச்சர்யம்தான்!!

இரத்த பந்தங்களுக்கு கூட இல்லாத துடிப்பும் பாசமும் அக்கபக்கத்தினருக்கு இருந்தது.

அதே நேரம் அங்கே வசிப்பவர்கள் எல்லோருமே அத்தியாவசிய தேவைக்காக அல்லாடி கொண்டிருக்கும் அடித்தட்டு மக்கள்!

என்னதான் சண்டை கூச்சல் கலாட்டா என்றிருந்தாலும்,

ஒருவருக்கு பிரச்சனை என்று வந்தால் முதலில் உதவும் கரம் நீட்டுபவர்களும் அவர்கள்தான்!

ஆனால் எத்தனை நாளைக்கு இந்த உபச்சாரங்களையும் சலுகைகளையும் பெற்று கொண்டிருக்க முடியும்?!

இந்த கேள்வி எழுந்த பின்னரே வீரா தன்னைத்தானே தேற்றி கொள்ள தொடங்கினாள். மீள முடியாத துயர்தான். ஆனால் அதிலிருந்து கரையேறியே ஆக வேண்டிய கட்டாயம் இருந்தது அவளுக்கு!

அவள் முதலில் கரையேறினால்தானே அந்த வேதனையிலிருந்து தன் தங்கைகளையும்  மீட்டெடுக்க முடியும்.

பொறுப்பாய் குடும்ப பாரத்தை சுமக்க வேண்டிய வீரய்யன் குடித்துவிட்டு வீழ்ந்து கிடக்க, நிச்சயம் அவரால் எந்தவித உபயோகமும் இல்லையென்பதை நன்கறிந்திருந்து கொண்டாள் வீரா!

இனி அவள் தலையெடுத்தால் மட்டுமே அவள் தங்கைகளை காப்பாற்ற முடியுமென்ற நிலையில் அவள் வயதுக்கு மீறிய பாரத்தை தன்னந்தனியே தூக்கி சுமக்க வேண்டிய கட்டாயம்!

அதுவே விதியின் தீர்மானமாகவும் இருந்தது.

சொர்ணம் இறந்து ஒரு மாதம் சர்வசாதாரணமாய் கடந்து போனது. வீரா எப்படியோ அன்று தன் தங்கைகளை சமாதானப்படுத்தி பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டாள். ஆனால் அவள் கல்லூரிக்கு புறப்படும் நிலையில் இல்லை.

அந்த நேரம் அவள் நெருங்கிய தோழி மலர்விழி அவளை தேடி கொண்டு வீட்டிற்கு வந்திருந்தாள்.

ஏற்கனவே சில நாட்கள் முன்பு சொர்ணத்தின் இறப்பு செய்தியறிந்து,
  தன் தோழிக்கு ஆறுதல் சொல்லி தேற்றிவிட்டுதான் போனாள். ஆனால் இன்று அவள் வந்தது அவள் தோழியை எப்படியாவது கல்லூரிக்கு அழைத்து போய்விடலாம் என்று முடிவோடு!

“இனிமே நான் காலேஜ் வர்றது கஷ்டம்தான்!” சுருக்கமாக தன் நிலைமையை வீரா எடுத்துரைக்க,

“அப்படின்னா?!” என்று அதிர்ந்து கேட்டாள் மலர்விழி!

“தங்கச்சிகளுக்கு வேண்டியதெல்லாம் செய்யனும்… அதுக்கு நான் வேலைக்கு போகனும்” வெறுமையான பார்வையோடு வீரா சொல்ல ஆழ்ந்து பார்த்த மலருக்கு பேச வார்த்தைகள் வராமல் தொண்டைக்குள்ளேயே திக்கி நின்றன.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமென பார்த்து ரசித்து தன் தோழியை இனி அப்படி பார்க்க முடியாது என்பதை மலாரால் தாங்கி கொள்ளவே முடியவில்லை. வீராவை அணைத்து கொண்டு மலர் விம்ம தொடங்க,

“வேணா மலர்!! என்னை அழ வைக்காதே… எனக்கு அழுதழுது வெறுத்து போச்சு… இனிமே அழுறதுக்கு என் உடம்பில தெம்பு இல்ல” மனநொந்து பேசிய தன் தோழியின் வேதனையை புரிந்து கொண்டவளாய்  கைக்குட்டை எடுத்து கண்ணீரை துடைத்து கொண்டு,

“என்னால தாங்க முடியலடி” என்று மலர் உரைக்க,

“ஆல் இஸ் வெல் சொல்லு…. எல்லா சரியாயிடும்” என்றாள் வீரா!

இது வழக்கமாய் கல்லூரியில் வரும் சின்ன சின்ன பிரச்சனைகள் டென்ஷன்ங்கள் மற்றும் தேர்வு நேரங்களில் அவர்கள் சொல்லி கொள்ளும்  வசனம்தான்.

மலர் அவளை வியப்பாய் பார்த்திருக்க,

“நீ பாட்டுக்கு ரொம்பெல்லாம் பீஃல் பண்ணாதே… நான் தலைகீழா நின்னாலும் அந்த சீ++ ஜாவாவும் என் மண்டையில ஏறாது… அதான் நைஸா நானே கையின்டுக்கிறேன்” என்று வீரா உரைக்கவும் மலரின் உதடுகளில் மெல்லிய புன்னகை எட்டி பார்த்தது.

“சரி! என்ன வேலைக்கு போக போற?”  மலர் ஆர்வமாய் கேட்க,

“அதான் தெரியல மச்சி… இத்தனை வருஷமா நானும் ஏதோ படிச்சேன்… ஆனா என்ன படிச்சேன்னு ஒரு கர்மமும் ஞாபகத்திற்கு வரல” என்று வீரா சொல்ல மலருக்கு சிரிப்பு தாங்கவில்லை.

“பேசாம ஏதாச்சும் கின்டர் கார்டன்ல டீச்சர் வேலைக்கு ட்ரை பண்ணேண்” என்று மலர் யோசனை சொல்ல,

“சேகர் செத்துருவான்” என்றாள்.

“ஏன்டி??”

“திரும்பியும் என்னால ஏ பி சீ டி யெல்லாம் முதல்ல இருந்து படிக்க முடியாது…அதை நினைச்சாலே பதறது… அதுவுமில்லாம அந்த குழந்தைங்களோட எதிர்காலம்… அத பத்தி நினைச்சி பார்த்தியா?!”

“கொஞ்சம் கஷ்டம்தான்”

“கொஞ்சமில்ல… ரொம்ப கஷ்டம்”

“பேசாம ஏதாச்சும் பிரவுஸிங் சென்டர்ல”

“அதுக்கு கம்பூயூட்டர்ல வேலை செய்யனுமே?!”

“நீ பீசிஏ ஸ்டூண்டட்டி எருமை” மலர் அழுத்தமாய் சொல்லி அவள் தலையில் இடிக்க,

“அப்படி ஒண்ணு இருக்கோ?!!” என்று வியப்பு கேட்டாள் வீரா.

“சுத்தம்” என்று மலர் சலித்து கொள்ள, வீரா அவளை கோபமாய் முறைத்து பார்த்து,

“ஏன்டி எனக்கு வர்றாததையே சொல்ற?” என்க,

“அப்போ உனக்கு என்ன வரும்னு சொல்லு… அதுக்கு ஏத்த மாறி ஏதாவது சொல்றேன்” என்று கேட்டாள் மலர்!

“இப்படி திடீர்னு கேட்டா… கொஞ்சம் யோசிக்க டைம் கொடு மச்சி” என்று வீரா மலரை பார்த்து சொல்ல,

“சத்தியமா உனக்கு எவனும் வேலை தரமாட்டேன் மச்சி… அப்படியே எவனாச்சும் தந்தான்னு வைச்சுக்க… அவன்தான் இந்த உலகத்தில கடைஞ்செடுத்த வடிக்கட்டின முட்டாளா இருப்பான்” என்றாள்.

“முட்டாளுக்கா இந்த உலகத்தில பஞ்சம்… எவனாச்சும் இருப்பான்… அவனை தேடி கண்டுபிடிப்போம்” என்று வீரா சுடுக்கிட்டு படுதீவிரமாய் சொல்ல,

“நீ உறுப்பிட மாட்டடி… இந்த ஜென்மத்தில உறுப்பிட மாட்ட” என்று மலர் சிரித்து கொண்டே சொன்னாள்.

“இதையேதான் எங்கம்மாவும் அடிக்கடிக்கு… ” என்று சொல்லும் போதே வீரா மேலே பேச முடியாமல் தடுமாறி,

“அ…ம்… மா” என்று கண்ணீர் வடிக்க ஆரம்பித்தாள்.

“வீரா” என்று மலர் அழைக்க

அந்த நொடி தன் தோழியை இறுக அணைத்து கொண்டவளுக்கு அதற்கு மேல் அவளின் உணர்வுகளை கட்டுக்குள் வைக்க முடியவில்லை. கண்ணீர் பிரவாகமாய் மாற,

வீரா தன் தோழியின் முகத்தை நிமிர்ந்து பார்த்து, “கடைசி கடைசியா என் பேரதான் கூப்பிட்டுட்டு போச்சு… நான் பாவி… அப்பவே அம்மான்னு ஒரு குரல் கொடுத்திருந்தன்னா… இப்படியெல்லாம் நடந்திருக்காது” என்றவள் சொல்லிவிட்டு உடைந்து அழுதாள்.

மலரால் அவளை எந்த வார்த்தை சொல்லியும் தேற்ற முடியவில்லை.

‘அம்மா’ என்ற ஒற்றை வார்த்தை வீராவின் அத்தனை பலத்தையும் தைரியத்தையும் சுக்குநூறாய் நொறுக்கியிருந்தது. அந்தளவுக்கு தன் அம்மாவின் மீது பற்று கொண்டிருந்தாள் வீரா!

ஆனால் அதே அம்மா என்ற வார்த்தையை அடியோடு வெறுத்தான் சாரதி!

அவனின் அலுவலகத்திற்கு வந்திருந்த முகம் தெரியாத நபரிடம்,

“என்ன விஷயமா வந்திருக்கீங்க? நீங்க யாரு?” என்றவன் விசாரித்து கொண்டே பைஃல்களை புரட்டினான்.

“என் பேர் தரூண்… கிறிஸ்டினா மேடமோட லாயர்” என்றவர் அறிமுகம் செய்து கொள்ள,

“யாரு கிறிஸ்டினா மேடம்?” வெகுசாதாரணமாய் அவன் கேள்வி எழுப்ப எதிரே அமர்ந்திருந்தவரின் முகத்தில் அதிர்ச்சி!

மீண்டும் அவன் யோசனைகுறியோடு, “யாரு அவங்க? ரொம்ப இம்பார்ட்டன்ட் பெர்ஸ்ஸனா? ஏதாச்சும் பிஸினஸ் டீலிங் விஷயமா பேசனுமா?!” என்றவன் வரிசையாய் கேள்விகளை அடுக்கினான்.

“சார்… அவங்க… உங்கம்மா” என்று தயக்கத்தோடு அந்த நபர் சொல்ல சாரதியின் முகத்தில் பல்வேறு உணர்ச்சிகள் மாறி மாறி தென்பட,

சில விநாடிகள் அந்த அறை நிசப்தமாய் மாறியது. பெற்ற எடுத்த தாயின் பெயரை கூட இன்னொருவன் ஞாபகப்படுத்தும் அவல நிலைமை!

சாரதி மற்ற உணர்ச்சிகளையெல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு ஏளன புன்னகையோடு,

“என்னோட அம்மா… ஹ்ம்ம்… சாரி… அப்படி ஒரு கேர்க்டரே என் வாழ்க்கையில இல்ல” என்று சொல்ல,

“சார்” என்று அந்த நபர் பேச யத்தனிக்க,

“ப்ளீஸ்” என்றவரை தடுத்து கதவின் புறம் கை காண்பித்தான். 

“இல்ல… நான் உங்ககிட்ட கொஞ்சம் முக்கியமா!” என்றவர் தொடர்ந்து பேசும் போது பேசியை எடுத்து காதில் வைத்து,

“கணேஷ்… உள்ளே வா” என்று அழைத்த மறுகணம் கணேஷ் முன் வந்து நின்றான்.

“சார் நான் பேசிறதை கொஞ்சம்” என்று அந்த நபர் சொல்ல,

“கணேஷ்! நீ இப்போ அவரை வெளியே அனுப்பிறியா இல்ல நான் உன்னை வெளியே அனுப்பவா?!” என்று கோபம் தெறிக்க கேட்டான்.

கணேஷ் அதிர்ந்து அந்த நபரை பார்க்க, அதற்கு மேல் அங்கே இருக்க முடியாமல் அவரே எழுந்து வெளியே சென்றுவிட்டார்.

சாரதி உக்கிரமான பார்வையோடு, “இனிமே இந்த ஆளு என் கண்ணு முன்னாடி வர கூடாது… அப்படி வந்தாரு!” என்றவன் நிறுத்தி அவனை முறைக்க,

“இல்ல சார்… வர மாட்டாரு நான் பார்த்துக்கிறேன்” என்றான் நடுக்கத்தோடு!

அந்த நபர் சென்ற பின்னும் கூட சாரதியால் இயல்பு நிலைக்கு திரும்ப முடியவில்லை.

அம்மா என்ற உறவுக்காக அவன் பலநாட்கள் ஏங்கி தவித்திருக்கிறான்.

ஆனால் அன்றெல்லாம் தனக்காக வராத இந்த அம்மா இன்று மட்டும் ஏன் வர வேண்டும்? எதற்காக யாருக்காக வர வேண்டும்?

இந்த கேள்விகளை மனதிற்குள்ளேயே ஆழமாய் கேட்டு கொண்ட சாரதிக்கு அந்த உறவை ஏற்று கொள்ள வேண்டிய அவசியமும் தேவையும் இப்போது இல்லை!

அப்படி அதற்கான தேவையும் அவசியமும் வருங்காலத்தில் ஏற்பட்டால் நிச்சயம் அவன் தன் மனதை மாற்றி கொள்ளவும் செய்யலாம்.

கோபத்தை விடவும்  லாபத்திற்கே அவனை பொறுத்தவரை முக்கியத்துவம் அதிகம்.

***********

ஒரு வாரமாய் வேலை தேடி வீரா சென்னையில் சுற்றாத இடம் இல்லை.

ஆனால் வேலை கிடைத்தபாடில்லை. சோர்வும் களைப்புமே மிச்சமாயிருந்தது.
மனநொந்து வீட்டிற்குள் அவள் நுழைய

“சொர்ணா… இப்படி என்னை விட்டு போயிட்டியே” என்று குடித்துவிட்டு புலம்பியபடி வீரய்யன் தரையில் கிடக்க, அவள் முகம் அருவருப்பாய் மாறியது.

கோபம் கொப்பளிக்க, “நதி” என்றவள் உரக்க அழைக்க,

“க்கா… என்ன க்கா? ரொம்ப அலைச்சலா?  டயர்டா இருக்கியா?” என்று தன் தமக்கையின் அலைந்து கறுத்திருந்த முகத்தை பார்த்து வினவினாள் நதியா!

“ப்ச்… அதை விடு… இந்த மனுஷனுக்கு குடிக்க ஏதுடி காசு?” என்று முறைப்பாய் அவள் கேட்க,

நதியா தயக்கமாய் தன் தமக்கையை பார்க்க அமலா முன்னே வந்து நின்று, “வீட்டு ஓனரம்மா… வந்தாங்க” என்றாள்.

“அய்யய்யோ… வாடகை கேட்டுச்சா அந்த கிழவி?” என்று வீரா அதிர்ந்து கேட்டாள். தன் தந்தையின் நிலையை விட அப்போது அந்த பிரச்சனை பெரிதாய் மாறியது.

“நாங்களும் அப்படி நினைச்சுதான் பயந்தோம்… ஆனா அந்த கிழவி நேரா வந்து செலவுக்கு வைச்சுக்கோங்கன்னு   ஒரு இருநூறு ரூவா கொடூத்துட்டு போச்சு” என்று அம்மு சொல்ல,

“நிஜமாவா?!” என்று ஆச்சரயமாய் கேட்டாள் வீரா!

“ஆமா… அந்த காசை இதோ இந்த நாதாரி பொறுப்பில்லாம அலமாரி மேலே வைச்சிடுச்சு” என்று அம்மு நதியாவை சுட்டி காட்டி குற்றம்சாட்ட,

“அதை இந்த நாதாரி எடுத்து குடிச்சிடுச்சு… அப்படிதானே?!” என்று வீரா தன் தந்தையை பார்த்து முறைப்பாய் கேட்டாள்.

“இல்ல க்கா… நீ வந்ததும் அந்த காசை கொடுக்கலான்னுதான்” என்று நதியா தவிப்பாய் சொல்ல,

வீரா அவளை கவனிக்காமல் தன் தந்தையை நோக்கி,

“மனிஷனாய்யா நீ… இங்க காசுக்காக நாங்க நாயா பேயா அல்லாடிட்டிருக்கோம்… நீ என்னடான்னா வந்த காசையும் குடிச்சி இப்படி கும்மாளிச்சிட்டு வந்திருக்க… அப்பன்னு பார்க்கிறேன்… இல்லன்னா அசிங்கம் அசிங்கமா ஏதாச்சும் சொல்லிவுட்டிருவேன்” என்றவள் சீற்றமாய் பேச,

“இல்ல வீரா… சொர்ணம் நியாபாகமாவே இருந்துச்சா?!” என்று போதை நிலையில் பதிலளித்தார் வீரய்யன்!

“ஆமா! பொண்டாட்டி மேல பாசம் இன்னைக்குதான் பொங்கி வழியாதாக்கும்… அந்த தண்ணி லாரி உன் மேல ஏறியிருந்தா நல்லா இருந்திருக்கும்” என்றவள் கடுகடுப்போடு சொல்ல,

“நீ வாக்கா… அந்த மனுஷன்கிட்ட எதுக்கு கத்தின்னு கிடக்க… அது புஃல் போதையில இருக்கு… இப்போதைக்கு தெளியாது” என்றாள் அம்மு!

“ஏன் நதி? காசை நீ கொஞ்சம் பத்திரமா வைச்சிருக்க கூடாதா?!” வீரா அமர்த்தலாகவே கேட்க,

“இதுவரைக்கும் இப்படியெல்லாம் அப்பா காசை எடுத்ததேயில்லையே” என்றாள் நதியா!

“அய்யாதான் வேலைக்கு போறதையே நிறுத்திட்டாரே… அதான் குடிக்க காசு இல்ல” என்று வீரா சொல்லி கொண்டே தரையில் அமர்ந்து கொள்ள,

“என்ன க்கா டயர்டா இருக்கு… இரு நான் போய் சாப்பாடு போட்டு எடுத்துட்டு வர்றேன்” என்று நதியா செல்ல,

“யாருடி சமைச்சது?” என்று வீரா கேள்வியாய் பார்க்க

“வேணி யக்கா குழம்பு கொடுத்தாங்க… நான் சாதம் மட்டும் வெடிச்சேன்” என்று சொல்லி கொண்டே நதியா அவளுக்கு பரிமாற,

“அந்த மனுஷனுக்கும் சோத்தை போடு” என்றாள் வீரா!

“அதெல்லாம் மொக்கிட்டாரு… அலைஞ்சி திரிஞ்சி வந்திருக்க… நீ சாப்பிடுக்கா” என்று நதியா சொல்ல

“நீங்களும் உட்காருங்க சாப்பிடலாம்” என்று அவர்களையும் அமர செய்தாள்.

“இன்டிர்வீயூ என்னாச்சு க்கா?” என்று அமலை சாப்பிட்டு கொண்டே கேட்க,

“மண்ணா போச்சு” என்று விரக்தியோடு உரைத்தாள் வீரா!

“ஏன்க்கா?”

“என்னை பார்த்து இங்கிலீஷ் பேசுன்னு சொல்லிட்டான்” வீரா அதிர்ச்சியோடு சொல்ல,

“அய்யய்யோ… நீ தப்பி தவறி இங்கிலீஷ் பேசிடலயே” என்று நதியாவும் அமலாவும் அதே அளவு அதிர்ச்சியோடு கேட்டனர்.

“நானாவது இங்கிலீஷ் பேசிறாதாவது?இங்கிலீஸ்… எனக்கு இங்கிலீஷ்லயே பிடிக்காத வார்த்தை… விஜயகாந்த் ஸ்டைல்ல சொன்னேன்”

அமலா, நதியாவும் சிரித்த மேனிக்கு

“செம காண்டாயிருப்பானே” என்க,

“ஹ்ம்ம்… கெட் அவுட்னு சொன்னான்… போயா நீயாச்சும் உன் வேலையாச்சுன்னு வந்துட்டேன்” என்றாள் வீரா!

“விடுக்கா… விடுக்கா இதெல்லாம் அரசியலில சகஜம்” என்று அமுதா சொல்ல மூவரும் தங்களை மறந்து சிரித்து கொண்டனர்.

சொர்ணத்தின் இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாதெனினும் அவர்களின் சகோதரத்துவத்திற்கு அந்த துன்பத்தை மறக்கடிக்கும் சக்தியிருந்தது.

எத்தனையோ துன்பங்களிலும் அவர்களின் ஒற்றுமைதான் பெரும் பலமாய் இருந்தது. அந்த சகோதிரிகள் இன்பத்தையும் துன்பத்தையும் சரிவிகிதமாய் பகிர்ந்து கொண்டனர்.

இந்த சூழ்நிலையில்தான் ஒருநாள் பக்கத்து வீட்டு கமலம் வீராவிடம்,

“நான் வேலை செய்ற வூட்டுல விசேஷம்… வேலைக்கு இன்னும் ஒரு ஆள் வர சொல்லி முதலாளியம்மா கேட்டாங்க… நீ வேணா வர்றியா வீரா? நான் முதலாளியம்மாகிட்ட பேசி காசு வாங்கி தந்திறேன்” என்க,

கொஞ்சம் தயக்கமாய் இருந்தாலும் வீரா இறுதியாய் சம்மதம் தெரிவித்துவிட்டாள். அவளுக்கு இருந்த பணத்தட்டுபாடிருக்கு ஏதோ கைக்கு ஓர் ஆயிரமோ ஐந்நூறோ வந்தாள் போதுமென்றிருந்தது.

சிரமமாயிருந்தாலும் அவளால் முடிந்தளவு கமலத்திற்கு உதவியாய் இருந்தவள் அன்று மாடிக்கு துணி உலர வைக்க சென்று,

அங்கே பெரிய  களேபரமே நிகழ்த்திவிட்டாள்.

“என்னாச்சு வீரா?!” என்று கமலம் அதிர்ந்து கேட்க,

“இந்த மாதிரி ரவுடி பொண்ணை எதுக்கு வேலைக்கு கூட்டிட்டு வந்த” என்று அந்த வீட்டுக்காரம்மா கோபமாய் பேசினார். அவள் அடித்த அடியில் அவர் மகனுக்கு இரத்த காயமே ஆகியிருந்தது. அந்த கொதிப்பில் அவர் பேச வீராவும் சீற்றத்தோடு,

“யாருங்க ரவுடி? உங்க பையன்தான் என்கிட்ட தப்பு தப்பா பேசி மேல கை வைக்க வந்தான்” எனறு வீரா சொல்ல  அந்த வீட்டுக்காரம்மா ரொம்பவும் சீற்றமானார்.

“சும்மா பொய் சொல்லாதே… என் பையன் அப்படி எல்லாம் பண்ண மாட்டான்”

“தம்பி அப்படியெல்லாம் செஞ்சிருக்காது… நீ ஏதோ தப்பா” என்று கமலமும் சேர்ந்து கொள்ள

“இல்லக்கா அவன்தான்” என்று வீரா ஏதோ சொல்ல யத்தனிக்க

“அந்த பொண்ணை ஒழுங்கா அனுப்பி வை கமலம்… இல்லன்னா உனக்கு இங்க வேலை கிடையாது” என்று கமலத்தை மிரட்டினார் அந்த பெண்மணி!

“வீரா நீ வீட்டுக்கு போ… மத்ததெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்” என்று கமலா  வீராவிடம் சற்று கடுமையாகவே சொல்ல,

அவள் மேலே எதுவும் பேச முடியாமல் விறுவிறுவென அந்த வீட்டை விட்டு வெளியேறினாள்.

அந்த சம்பவம் அவளை மனதளவில் ரொம்பவும் பாதித்திருக்க, இத்தனை நாள் இல்லாமல் இன்று தன் தாயின் அரவணைப்பை அதிகமாய் தேடியது அவள் மனம்!

சொர்ணத்தின் போட்டோ அருகில் அப்படியே தலைசாய்த்து அவள் படுத்து கொள்ள,

அந்த நொடி அவள் பலமும் தைரியமும் வடிந்து போன உணர்வு!

இந்த சமூகத்தில் பெண்ணாய் பிறப்பெடுப்பதே தவறு. அதுவும் ஏழையாய் பிறப்பது அதைவிட பெரிய தவறோ என்றவள் மனம் ஆதங்கம் கொள்ள,

இன்னும் எத்தகைய நிலையை தான் கடந்து வர நேரிடும் என்று எண்ணும் போதே உள்ளூர அச்சம் பரவியது அவளுக்கு!

நதியாவும் அமலாவும்  அவளை இயல்பு நிலைக்கு மாற்ற எவ்வளவோ முயற்ச்சித்து தோல்வியுற,

வீரா துவண்டு போய் தன் அம்மாவின் போட்டோ அருகிலேயே வலியோடும் வேதனையோடும் உறக்க நிலைக்கு சென்றிருந்தாள்.

என்னதான் அவள் தேகம் உறங்கினாலும் அவளின் மனம் அத்தகைய உறக்க நிலையை அடையவில்லை.

அப்போது அவள் தலையை ஓர் கரம் நிதானமாய் வருடி கொடுக்க,

அதனை உணர்ந்தவளுக்கு அந்த ஆறுதலான தொடுகை தேவையாயிருந்தது.

உண்மையிலேயே அவள் மனம் லேசாய் ஆறுதல் பெற்றிருக்க,

அந்த கரத்தின் தொடுகையை உணர்ந்தவாறு அறைகுறை உறக்க நிலையில் கிடந்தாள்.

ஆனால் அந்த கரம் மெல்ல மெல்ல அநாகரிகமாய் அவளின் அங்கங்களை தீண்ட,

அந்த நொடியே அவள் துணுக்குற்று அவசரமாய் விழித்தெழுந்தாள்.

அவள் கண்ட காட்சியில் உலகமே தலைகீழாய் சுழன்றது போலிருக்க,

ஏதோ அசிங்கத்தை தொட்டது போல் அசூயையாய் பார்த்தவள், “ஆ…ஆ..அ” என்று அலறி கொண்டு  நடுநடுங்கி  பின்னோடு நகர்ந்து வந்தாள்.

அவளுக்கு அப்போது மூச்சு மேலும் கீழுமாய் வாங்க ஆவேசயாய் கையில் கிடைத்த பொருளையெல்லாம் வெறி கொண்டு வீரய்யன் மீது வீசினாள்.

நதியாவும் அமலாவும் அந்த சத்தத்தில் உறக்கம் களைந்து எழுந்து கொள்ள, வீரா ரௌத்திரமான நிலையில் வீரய்யனை தாக்க, போதையின் நிலையில் கிடந்தவருக்கு அப்போதே லேசாய் தெளிவு பிறந்திருந்தது. 

“வேணா வீரா அடிக்காதே” என்றவர் கதற,

“சாவுடா செத்துபோ…நீயெல்லாம் உயிரோடவே இருக்க கூடாது” என்றவள் ஆக்ரோஷமாய் சொல்லி கொண்டே அவள் கையில் கிடைத்த பொருளையெல்லாம் சகட்டு மேனிக்கு தூக்கிவீசினாள்.

“ஏன்க்கா இப்படி பன்ற? வேணா விடுக்கா” என்று நதியாவும் அமலாவும் வீராவை தடுக்க முற்பட,

வீரா அடங்கா கோபத்தோடு அவர்கள் இருவரையும் உதறிதள்ளிவிட்டு விளக்குமாறை கையிலெடுத்தவள்

“சீ… என்ன பிறப்புயா நீ? போதையில இருந்தா கட்டின பொண்டாட்டிக்கும் பெத்த பொண்ணுக்கும் வித்தியாசம் தெரியாம போயிடுமாயா உனக்கு?!” என்று சொல்லி கொண்டே சரமாரியாய் அடிக்க ஆரம்பித்தாள்.

“தெரியாம பண்ணிட்டேன் வீரா” என்றவர் கெஞ்சி கதற,

“த்தூ… தேறி… தெரியாம பன்ற காரியமாயா இது… ” என்றவளுக்கு சீற்றம் குறையவே இல்லை. அவள் செங்குருதியெல்லாம் செந்தழல் பாய்ந்து கொண்டிருக்கும் உணர்வு!

எரிமலையாய் அவள் வெடித்து கொண்டிருக்க,

அதிர்ச்சியே ரூபமாய் பார்த்து கொண்டிருந்தனர் மற்ற இரு சகோதிரிகளும்.

வீரமாக்காளியாகவே அவள் உக்கிர கோலத்தில் நின்றிருக்க, “தப்பு பண்ணிட்ன்மா… தப்பு பண்ணிட்டேன்… போதையில” என்று தலையிலடித்து கொண்டு அழுதார் வீரய்யன்.

“அக்கா விட்டிருக்கா வேண்டாம்” என்று அமலாவும் நதியாவும் கூட அழுது கொண்டே கெஞ்ச,

அப்படியே அமைதி பெற்று தரையில் சரிந்தவளுக்கு தேகமெல்லாம் உதறலெடுத்து கொண்டிருந்தது.

தன்னைத்தானே நிதான நிலைக்கு கொண்டு வர முயன்று கொண்டிருந்தவள் உணர்ச்சி பொங்க சத்தமாய் அழ ஆரம்பித்தாள்.

அந்த அறை முழுக்கவும் அவளின் அழுகை சத்தமே எதிரொலிக்க,

“வீரா” என்று வீரய்யன் நிதானித்து குரல் கொடுத்தார்.

ஆக்ரோஷமாய் தலையை நிமிர்த்தியவள்,

“என் பேரை கூட சொல்லாதயா… அசிங்கமா இருக்கு” எனறவள் மேலும் கோபத்தோடு,

“உன்னை கொல்லனும்னு வெறில இருக்கேன்… மவனே இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்த சத்தியமா அது நடந்திரும்… ஒழுங்கா வெளியே போயிடு” என்று சொல்ல வீரய்யன் கெஞ்சலான பார்வையோடு,

“நான் எங்கம்மா போவேன்” என்று கேட்டார்.

“எங்கேயாச்சும் போ… இல்ல செத்து போ… ஆனா இனிமே இந்த வீட்டில நீ இருக்க கூடாது… இன்னிக்கு என்க்கிட்ட இப்படி நடந்துக்கனமாறி நாளைக்கு தங்கச்சிங்க கிட்டையும் நடந்துப்ப” என்று சீற்றமாய் அவள் சொல்ல,

“இல்ல வீரா இனிமே” என்று வீரய்யன் ஏதோ சொல்ல

“யோவ் போயிடு” என்று வீரா கோபவேசமாய் மீண்டும் எழுந்தாள்.

“அடிக்காதே நான் போயிடுறேன்” என்று மிரட்சியோடு கதவை திறந்து வீரய்யன் வெளியேற,

“இனிமே என் கண்ல பட்டிராதே… சாவடிச்சி போட்டிருவேன்” என்றவள்
தன் தங்கையிடம்,

“அம்மு போய் கதவைமூடு… திரும்பியும் அந்த ஆளு நம்ம வீட்டுப்பக்கமே வர கூடாது” என்றாள் தீர்க்கமாக!

அமலா சென்று கதவை மூடி தாளிட்டுவிட்டு திரும்ப,

அந்த நொடி வீரா தன் அம்மாவின் போட்டோவை மூச்சிறைக்க வெறியாய் பார்த்தவள்,

“அந்த புறபோக்குக்கு போய் எங்க மூணு பேரையும் பெத்து போட்டியே உன்னை சொல்லனும்டி… எல்லாத்துக்கும் காரணம் நீதான்… ” என்றவள் ஆவேசமாய் சொர்ணத்தின் போட்டோவை தூக்கி உடைக்கவே போய்விட்டாள். அவளால் தாங்க முடியவில்லை.

ஆனால் அமலாவும் நதியாவும் கூச்சலிட்டு, “அக்கா வேணாம் க்கா” என்று அவளை தடுக்க

வீரா மேலே அந்த செய்கையை செய்யாமல் நிறுத்தி கொண்டாள்.

மூச்சை இழுத்துவிட்டு கொண்டவள் அந்த போட்டோவை ஓரமாய் வைத்துவிட்டு விரக்தியான பார்வையோடு,

“சே! பொம்பள ஜென்மமா பிறக்கவே கூடாது… இப்படி ஒரு ஈனபிறப்பா வாழ்றதுக்கு செத்து போலாம்” என்று சொல்லி தலையிலடித்து கொண்டு அழ,

“ப்ளீஸ்க்கா… அழாதக்கா” என்று அமலாவும் நதியாவும் அவளுடன் சேர்ந்து அழுதனர்.

அவள் வேதனையோடு தன் தங்கைகளை சேர்த்து அணைத்து கொண்டவள்,

“உங்கிரண்டு பேரையும் நான் எப்படிறி பார்த்துக்க போறான்… பெத்த அப்பனே தப்பா பார்க்கிறான்… இதுல வேற யாரை நம்பி இந்த உலகத்தில நம்ம வாழ்றது” என்று வலியோடு கேட்டவளுக்கு அதற்கான வழி புலப்படவில்லை.

திக்கு தெரியாத காட்டில் மாட்டி கொண்டது போல் இருந்தது அவளுக்கு!

error: Content is protected !!