Avan aval 3

கல்லூரியிலிருந்து வீடு நோக்கி கிளம்பிய மூவர் படை சிலபல கெஞ்சல் கொஞ்சல்கள் சமாதானப் படலம் சேட்டை அரட்டை என அவர்களின் தினசரி அடாவடித்தனங்கள் உடன் நடந்தவாறு கல்லூரிக்கு சற்று அருகில் அமைந்திருந்த மித்ரனின் வீட்டில் சென்று தஞ்சம் அடைந்தனர்.

மித்ரனின் இல்லம் கல்லூரியில் இருந்து சற்று அருகில் அமைந்திருந்தமையால் இவர்கள் மூவரும் கல்லூரி முடிந்தவுடன் சங்கமிக்கும் இடம் சங்கமித்ரனின் இல்லமே.

வழமை தவறாமல் அன்றும் மித்து ம்மா அவர்களின் செல்ல வானர பிள்ளைகளுக்கு பசி தீர்க்கும் பொருட்டு உணவு பண்டங்களை சமைத்து வீட்டின் நடுக்கூடத்தில் வைத்துவிட்டு இவர்களுக்காக காத்திருந்தார்.

தெருமுனையில் வரும்பொழுதே அன்னையின் மீன் குழம்பு வாசம் மூக்கைத் துளைக்க, விவு மற்றும் மித்ரனை இடித்து தள்ளி விட்டு. தென்றல் அவர்களுக்கு முன் சென்று மித்ராவதியின் மடியில் தஞ்சம் புகுந்து கொண்டாள்.

தென்றல் தள்ளிய நொடியில் சற்று தள்ளாடிய மித்ரன் நிதானித்து பிறகு தென்றலை அர்சித்தவாறு வீட்டிற்குள் நுழைந்தவன் அன்னையின் மற்றொரு மடியில் தலை சாய்த்து படுத்துக் கொண்டான்.

விவேகனோ அவனுக்கும் அந்த வீட்டிற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்பது போல் அவன் தங்கியிருக்கும் அறையில் சென்று கதவை தாழிட்டுக் கொண்டான்.

அவனின் நடவடிக்கையைக் கண்ட மித்ராவதியின் முகம் வாட அதனைப் பொறுத்துக் கொள்ள இயலாத தென்றல் அன்னையை சமாதானம் செய்யுமாறு மித்ரனிடம் கண் ஜாடை காட்டி விட்டு  விவேகனின் அறை நோக்கி சென்றவள் கதவை தட்டாமல் இரு கைகளையும் குறுக்காக கட்டிக் கொண்டு அமைதியாக நின்றாள்.

அவள் சென்று நின்ற ஐந்தாவது நொடி தாழிடப்பட்ட கதவு தட்ட படாமலே திறக்கப்பட்டது இதனை கண்ட மித்ராவதிக்கு ஆச்சரியமே.

கதவை திறந்து கொண்டு வெளியே வந்தவனின் கண்கள் தென்றலின் கண்களை நேருக்கு நேர் காண தயங்கின.

அவனின் நிலையை அறிந்தவளோ மித்ரனை திரும்பிப் பார்க்க, அவள் பார்வையின் அர்த்தம் புரிந்தவன். அவர்கள் வீட்டில் இருந்த இரண்டு அடி உயரமுள்ள மனை கட்டையைக் கொண்டு வந்தவன், தென்றலின் காலுக்கு அடியில் வைத்து விட்டு நகர்ந்து சென்று அன்னையின் அருகில் நின்று கொண்டான். நடக்கப்போகும் காமெடியை பார் என்பது போல்.

மித்ரன் நகர்ந்து சென்றதும் மனையின் மீது ஏறி நின்று கொண்டாள் தென்றல் இதனை கண்ட மித்ராவதியின் மனக்கலக்கம் தகர்ந்து வாயை பொத்திக்கொண்டு சிரிப்பை அடக்க மிகவும் சிரமப்பட்டார்.

மனையின் மீது ஏறி நின்றவளோ விவேகனின் முகத்தை ஒற்றை விரலால் நிமிர்த்தி அவன் கண்ணோடு கண் நோக்க அவனின் வாய்மொழி கூறாத அவனின் 20 வருட மன வலியை அவனுடைய கண்மணிகளின் துடிப்பை வைத்து உணர்ந்து கொண்டாள் அவனின் கண்மணி.

இருவரின் கண்களும் சிறிது நேரம் மௌன மொழி பேசிக் கொள்ள முதலில் மௌனம் கலைந்தது மித்ரனே,

“அடேய் அடேய் போதும்டா நீங்க காட்டுனா படம் இதுக்கு மேல முடியாது பசியில வயித்துக்குள்ள தென்றல் ஓடிட்டு இருக்கா வாடா சாப்பிடலாம்” என கூற,

அவன் கூறியதைக் கேட்ட தென்றல் இரண்டடி மனையிலிருந்து எகிறி குதித்து அவனை அடிக்க துரத்திக் கொண்டு வீட்டை சுற்றி சுற்றி ஓட,

இந்த இரண்டு ஜந்துக்களும் சேர்ந்து அந்த இடத்தில் குடிகொண்டிருந்த இறுக்கத்தை தளர செய்து சகஜ நிலைக்கு திரும்பினர்.

பிறகு நால்வரும் உணவருந்த அமர விவேகன் மித்ராவதிடம் பேசத் துவங்கினான்.

“மித்துமா ஐம் ரியலி வெரி சாரி உங்களுக்கே புரியும்னு  நினைக்கிறேன் இனிமே இப்படி நடக்காம இருக்க முயற்சி பண்றேன் என்ன மன்னிச்சிடுங்க மித்துமா” என மனதார மன்னிப்பு கோரினான்.

“எனக்கு புரியுதுடா கண்ணா உனக்கா மனசு வந்து நீ எப்போ என்ன மித்துமானு கூப்பிடாம அம்மான்னு கூப்பிட போறேனு நானும் காத்துகிட்டு இருப்பேன்” என்று அவனின் மன்னிப்பையும் ஏற்றுக்கொண்டவர் அவரின் கோரிக்கையையும் முன்வைத்தார்.

பிறகு மூவரும் சேர்ந்து மித்துமாவின் மீன் குழம்பை ஒரு பிடி பிடித்தனர். மூவரும் உண்டு முடித்த பின்னர் அன்னைக்கும் சாப்பாடு பரிமாறி ஆளுக்கு ஒரு வாய் என அவருக்கு ஊட்டிவிட்டு அவரையும் சாப்பிட வைத்த பின்னர்,

தென்றலை அவளின் வீட்டில் விட்டு வருவதற்காக கிளம்பினர்.

மித்ரனின் வீட்டிலிருந்து தென்றலின் வீட்டிற்கு செல்ல 20 நிமிடம் பேருந்தில் பயணிக்க வேண்டும்.

மித்துமாவிடம் விடைபெற்றுக்கொண்டு பேருந்து நிலையம் வந்தடைந்ததும், தென்றலின் தலையில் மீண்டும் கேரட் அல்வா வீசப்பட்டது அவளின் விவுவினால்.

“என்ன விவு சொல்ற இங்கே இருந்து நான் தனியா போகணுமா வீட்டுக்கு அதுவும் பஸ்ல டைம் என்னன்னு பாத்தியா ஆறு ஆஃபிஸ்,காலேஜ் ஸ்கூல் ஸ்பெஷல் கிளாஸ், எல்லாம் விடற டைம்  இந்த டைம்ல லேடீஸ் ஸ்பெஷல் கூட  வராது. இப்ப போய் என்னை தனியா போக சொன்னா எப்படி? எனக்கு தனியா போறதுன பயம். உனக்கு தெரியாதா டிக்கெட் கூட எனக்கு கேட்டு வாங்க தெரியாதே அதுக்கு கூட பயம் தான் அதுவுமில்லாமல் பஸ்ஸா விட்டு இறங்கி நான் ரோடு கிராஸ் பண்ணும்போது சைக்கிள் இடிச்சு நான் செத்துட்டா என்ன பண்ணுவ”

என ஏக வசனத்தில் பேசிக் கொண்டிருந்தவளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இருவரும்.

அவள் இறுதியாய் சொன்னதைக் கேட்டு சிரித்து விட்டனர் அவங்க மட்டும் இல்ல அந்த பஸ் ஸ்டாப்பில் இருந்த அத்தனைபேரும் இவ பேசினது கேட்டு சிரிச்சிட்டாங்க.

அவளின் தலையில் செல்லமாய் தட்டிய மித்ரன் “ஏய் முட்டை போண்டா சைக்கிள் இடிச்சி நீ செத்துருவியா இது உனக்கே ஓவரா இல்லையா”  எனக் கூறி மேலும் சிரிக்க.

அவனின் வயிற்றில் வேகமாய் குத்தியவள் “யார பார்த்து முட்டை போண்டான  நீதாண்டா முட்டை கோஸ் போண்டா போடா டேய்” என திட்டி விட்டு அவள் மீண்டும் அவளின் விவுவிடம் திரும்பி.

“விவு ப்ளீஸ் நீ வரலைன்னா அப்பாவ ஆச்சும் வந்து கூட்டிட்டு போக சொல்லு அதுவும் முடியாதா, இந்த முட்டைகோஸ் போண்டாவ கூட அனுப்பு”

என எவ்வளவு கெஞ்சியும் அவளின் விவு அவளின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை.

“உன் கிட்ட பேசவே மாட்டேன் போ” என கோபித்து கொண்டவளின் கண்கள் கலங்கி குளமாகி இருந்தன.

மித்ரன் அவளை கண்டு மனம் வருந்த “நான் போறேன் டா அவ கூட”

என சொல்ல வாயெடுத்தவனின் வாயில் விவேகன் தன் பின் கை முட்டியால் ஒரு இடி இடிக்க மித்ரன் வாயை மூடிக்கொண்டான்.

‘இவளை பார்க்கக்கூடாது இல்லன்னா கண்ணாலேயே கெஞ்சி ஆள கவுத்திடுவா அப்புறம் இந்த இடி மாட்டிக்கிட்ட யார் அடி வாங்குவது’ என மனதில் நினைத்த மித்ரன் தென்றலின் முகத்தை காண்பதையும் தவிர்த்தான்.

சிறிது நேரத்தில் தென்றல் செல்ல வேண்டிய பேருந்து வர அவளின் கையைப் பற்றிய விவேகன் “நீ டிக்கெட் கேட்க வேண்டாம் 20 ரூபாய் மட்டும் கொடு அவரே டிக்கெட் கொடுத்து விடுவார்” என கூறியவன் 20 ரூபாய் தாளை அவள் கையில் திணித்தான்.

அவளை கைப்பற்றி இழுத்து சென்று படிக்கட்டில் முன் வழியில் படியில் தூக்கிவிட்டான்.(இல்லன்னா ஹைட் எட்டாதே அதான் )

பேருந்து வரவும் விவேகன் அவளின் கையை பற்ற கூட வரப் போகிறான் என மனம் மகிழ்ந்தவள் அவன் கையில் பணத்தை திணித்து வண்டியில் தூக்கிப் விடவும் மீண்டும் கண்கள் கலங்கி குளமாகின பயத்திலும் கோபத்திலும்.

அவளை முன் வழியில் ஏற்றிவிட்ட விவேகன் பஸ் கிளம்பியதும் ஓடி சென்று பின்பக்க வழியில் ஏறிக் கொண்டான். அவன் செய்த எதுவும் புரியாத மித்ரனும் அவனுடன் ஓடி வந்து ஏறிக் கொண்டான். சிறிது நேரம், ஓடி வந்ததினால் மூச்சு வாங்கியவன். “ஏண்டா இப்படி அவ கூட போறதுக்கு முன்னாடியே அவ கிட்ட சொல்லி இருக்கலாம்ல அழுகாம ஆச்சும் இருந்திருப்பா” என வருந்தினான்.

“பேசாம வாடா இப்போ நான் வேகமாக மூச்சு விட்டால் கூட நான் பஸ்ல வரேன்னு கிராதகி கண்டுபிடிச்சிடுவா” என அவனை அடக்கினான் விவேகன்.

பிறகு இருவரும் பேசிக்கொள்ளாமல் தென்றலை கண்காணித்தவாறு பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தனர்.

விவேகனையும் மித்ரனையும் வாய்க்குள் நுழையும் வார்த்தை நுழையாத வார்த்தை என கண்ட வார்த்தையிலும் திட்டியவாறு பேருந்தில் ஏறிய தென்றலின் கெட்ட நேரம் பேருந்தில் அமர இடம் கிடைக்கவில்லை மேலும் பயந்தவள் பெண்கள் இருக்கையில் இரு பெண்கள் பூ கட்டிக் கொண்டிருக்க அவர்களின் அருகில் சென்று நின்று கொண்டாள்.

பிறகு விவேகன் கூறியவாறு கண்டக்டரிடம் 20 ரூபாய் தாளை நீட்டியவுடன் அவரும் அவள் செல்ல வேண்டிய இடத்திற்கு டிக்கெட்டை கிழித்து கொடுத்தார்.

“ஆக பக்கி முன்னாடியே பிளான் பண்ணி தான் நம்மல தனியா அனுபியிருக்கான்” என மனதில் நினைத்தவள் மேலும் விவேகனை மட்டும் நான்கு நல்ல வார்த்தைகள் கூறி அர்ச்சித்தாள்.

இவர்கள் பேருந்தில் ஏறிய முதல் ஐந்து நிமிடம் எந்த பிரச்சனையும் இல்லாமல்  சுமூகமாக சென்றது அந்த பயணம்.

அதற்கு அடுத்து வந்த நிமிடங்கள் தென்றலுக்கு சோதனை காலமாக அமைந்தது.

தென்றலுக்கு பின் பொது இருக்கையின் அருகில் நின்றிருந்த 50 வயது மதிக்கத்தக்க ஆடவர் தென்றலிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் தென்றலுக்கு பயத்தில் கை கால்கள் நடுங்க தலையை சுற்றிக் கொண்டு வந்தது,

அவ என்னதான் செய்யறா பார்க்கலாம் என மித்ரன் மட்டும் விவேகன் பார்வையாளர்கள் ஆயினர்.

சிறிது நேரத்திற்கு மேல் பயம் தென்றலை முழுவதும் ஆட்கொள்ள

“உன்னோட பயம் தான் உனக்கு பலம் பலவீனம் இரண்டுமே அதை நீ எங்க எப்படி பயன்படுத்துகிறாயோ அதை பொறுத்துதான் உன்னோட பலம்  பலவீனம் இரண்டுமே உன்னால் தீர்மானிக்கப்படும்” என்ற அவளின் விவுவின் வார்த்தைகள் மூளையில் மின்னலென வெட்டின.

சற்று தன்னை திடப்படுத்திக் கொண்டவள் அங்கிள் தள்ளி நில்லுங்க என எச்சரிக்க.

அந்த ஆடவர் “ஏம்மா கோபப்படுற உனக்குலாம்‌ வயசுப்பையன் இடிச்சா இனிக்கும் என்ன மாதிரி வயசானவன் இடிச்சா கசக்குமா?” என கேட்க.

தென்றலின் பயம் காற்றோடு காற்றாக பறந்தது.

அந்த ஆளின் சட்டையை கொத்தாக பிடித்து “யார பார்த்து என்ன சொன்னயா” என பளார் பளார் என நாலு சாத்து சாத்தியவள்

“உன் வீட்டு பொம்பளைங்கல  கூட்டிட்டு வந்து நிக்க வச்சு இப்படி இடிச்சிட்டு நில்லு அவங்கள எந்த வார்த்தை சொல்லி வேணும்னாலும் திட்டு ஆனால் என்னை அந்த வார்த்தை சொல்வதற்கான தகுதியோ, அருகதையோ, உரிமையோ உனக்கு இல்லை.  இன்னொரு முறை உன்னை நான் இந்த பஸ்ல பார்த்தேன் அடுத்த வார்த்தை பேசுறதுக்கு உனக்கு நாக்கு இல்லாம பண்ணிடுவேன்” என சத்தமாக கத்தியவள்.

வண்டியை நிறுத்த கூறிவிட்டு அந்த கூட்டத்திலும் அவரை இழுத்துச் சென்று பேருந்தின் மேல் படியில் இருந்து கீழே தள்ளி விட்டு ஒரு விரல் நீட்டி  தீ பார்வை பார்த்தவள் அவரை எச்சரித்து விட்டு மீண்டும் அவள் இடத்திற்கு வரவும் பேருந்து கிளம்பியது.

பேருந்து கிளம்பியதும் மித்ரனும் விவேகனும் பேருந்தில் இருந்து இறங்கி அந்த ஆடவனை துரத்திச் சென்றனர்.அந்த ஆடவரை ஓடி சென்று பிடித்த விவேகன் அவரை போட்டு அடி வெளுத்து விட இதற்கு மேல் போனால் இறந்துவிடுவார் என பயந்த மித்ரன் அவனை அழைத்துச் சென்று ஒரு டீ கடையில் தண்ணீர் வாங்கிக் கொடுத்து சற்று நிதான படுத்தி கொண்டு இருந்தான்.

பேருந்தில் மீண்டும் அவள் இடத்திற்கு வந்த தென்றலிடம் அருகில் பூ கட்டிக் கொண்டிருந்த பெண்கள் +நல்ல வேலை பண்ணமா இவன மாதிரி பொறுக்கி எல்லாம் இப்படித்தான் பண்ணனும்” எனக் கூற தென்றலுக்கு இறங்கிய கோபம் மேலும் ஏறியது.

“ஏன் ம்மா அந்த ஆளு என்னை பண்ண எல்லாம் சிலுமிஷத்தையும் நீங்களும் பாத்துட்டுதான இருந்தீங்க என் இடத்துல உங்க பொண்ணோ இல்ல அந்த ஆளு இடத்துல உங்க புருஷனோ  இல்ல அண்ணன் தம்பியோ இருந்தா இப்படித்தான் அமுக்குனி மாதிரி உட்கார்ந்துகிட்டு பூ கட்டிகிட்டு பூ விலை ஏரி போச்சுன்னு பேசிகிட்டு வருவீங்களா  அப்போ எப்படி மூடிட்டு இருந்தீர்களோ இப்பவும் அதே மாதிரி மூடிட்டு இருங்க எனக்கு அட்வைஸ் பண்ற வேளை உங்களுக்கு வேண்டாம்” என அவர்களையும் ஒரு பிடி பிடித்தவள்.

வேறு இடத்திற்கு சென்று நின்று கொண்டாள்.

இப்போது தனது ராட்சசியின் சுபாவத்தை மாற்றி விட்டோமா என்ற கேள்வியுடன் விவேகனும், அவன் செயலின் அர்த்தம் புரியாத  குழப்பமான முகபாவத்துடன் மித்ரனும் டீ கடையில் நிற்க.

தனது நிறுத்தம் வர பேருந்தில் இருந்து இறங்கிய தென்றல், அவளை இப்படி தனியாக தவிக்கவிட்டார்கள் என்று அவளின் விவு மற்றும் முட்டை கோஸ் போண்டா வின் மீது கோபமான முகத்துடன் சாலையை கடக்க நின்று கொண்டிருந்தாள்…

(தொடரும்…)