Eedilla Istangal – 21.2

Eedilla Istangal – 21.2

அடுத்த நாள் காலை…

சரத் சொன்னபடி, மூன்று பேரும் வெளியே சென்றார்கள். தாரா கேட்டதை எல்லாம் சரத் வாங்கித் தந்தான்.  

முதலில், இருவருக்குள்ளும் ஒரு தயக்கம் இருந்தது.

ஆனால் அன்று மருத்துவமனையில், இருவரும் பேசிக் கொண்டது… ஜெகன், சரத்திடம் பேசினது…

தேவா, தாராவிடம் சொன்னது… _இப்படிப்பட்ட நிகழ்வுகளால், தங்களுக்குள் இருந்த கசப்பான நினைவுகளை இருவரும் கடந்திருந்தனர்.

சற்று நேரத்தில், தாரா ‘அது வேண்டும்… இது வேண்டும்’ என்று இருப்பதை எல்லாம் கேட்க கேட்க… ‘ஏன்டா சொன்னோம்?’ என்ற சந்தோஷச் சலிப்பு வந்தது, சரத்திற்கு!

அடுத்தடுத்து வந்த நாட்காட்டியின் நாட்கள்…

சரத் மற்றும் ராஜசேகர், தேவாவின் அண்ணன் வீட்டிற்குச் சென்று வந்தனர். தேவாவின் அண்ணன்-அண்ணி பெரிய ஈடுபாடு காட்டவில்லை.

ஆனால், ஹேமா துள்ளிக் குதிக்காத குறைதான். அவ்வளவு சநதோஷம் அவளிடத்தில்!

அவள் சந்தோஷத்தின் மற்றுமொரு காரணம், அவள் கணவன் வந்திருந்தான். குழந்தைப் பிறக்கப் போகும் நாள் நெருங்கி வருவதால், அவன் வந்திருந்தான்.

எல்லோரும் சேர்ந்து, திருமணத் தேதியைக் குறித்தனர்.

ராஜசேகர், அவர்கள் அனைவரையும் வீட்டிற்கு வரும்படி அழைத்தார்.

இதன் பின், ஒரு நாள் தேவாவும் சரத்தும் சந்தித்துக் கொண்டனர். திருமணத்திற்குத் தேவையான விடயங்கள் பற்றிப் பேசினர்.

சரத், திருமணத்திற்குப் பின் ஒரு பெரிய வரவேற்பு வைக்கப் போவதாகச் சொன்னான்.

அதில், தனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை என்று தேவா சொல்லிவிட்டான்.

ராஜசேகர் அழைத்திருந்தபடி, தேவா வீட்டிலிருந்து ஹேமாவும், அவள் கணவரும் சென்று வந்தனர்.

கீதாவைப் பார்க்கும் பொழுது ஹேமாவிற்கு எங்கேயோ பார்த்த நியாபகம் இருந்தது.

ஆனால், அவள் அதற்கு மேல் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கவில்லை.

கீதாவும், தேவாவும் சந்தித்துக் கொள்ள வாய்ப்பே இல்லாமல் நாட்கள் நகர்ந்தன.

கீதா, அறிந்தே தவிர்த்து வந்தார்.

தேவாவிற்கு, ‘அக்கா சந்தித்தாயிற்று’ என்பதே போதுமானதாக இருந்தது.

தனக்குப் பிடிக்காத திருமணம் என்றாலும், தாராவிற்குப் பிடித்தமான வாழ்க்கை என்ற புள்ளியில் திருப்தி அடைந்தார், கீதா!

இதோ அதோ என்று… திருமண நாள் வந்தது.

ராஜசேகர் வீடு – காலை வேளை

தாரா, ஜெகன், சரத்… மூவரும், கீதாவின் வரவிற்காக வரவேற்பரையில் காத்திருந்தனர்.

கீதாவும் ராஜசேகரும்…

“இது தப்பு கீதா. ரொம்பத் தப்பு. நீ செய்றது நியாயமே இல்லை”

“நான் வரலை ராஜ். என்னைக் கம்பெல் பண்ணாதீங்க” என்று மறுத்துக் கொண்டே இருந்தார்.

வெகுநேரமாக, ‘வர மாட்டேன்’ என்று சொல்லும் கீதாவைச் சமாதானப் படுத்தி அழைத்துச் செல்ல முயற்சி செய்து கொண்டிருக்கிறார், ராஜசேகர்!

இது, வெளியே காத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் தெரியும்!!

“தாராவைப் பத்தி கொஞ்சமாவது யோசிச்சுப் பார்த்தியா?”

கீதா அமைதியாக இருந்தார்.

“நான் போய், சரத்தை வரச் சொல்றேன். அவன் சொன்னாதான் நீ கேட்ப” என்று வெளியே சென்றுவிட்டார்.

அவர் சென்றதும்,

‘தான் ஏன் மறுக்கிறோம்?’ என்று எண்ணுகையில் கண் கலங்கியது.

ஒரே பெண்! அவளது கல்யாணத்திற்குச் செல்ல கோடி ஆசை இருக்கிறது.

ஆனால், தேவாவை எதிர்கொள்ளும் தைரியம் கிஞ்சித்தும் இல்லை.

இத்தனை நாட்களும் இல்லை! இன்றைய நாளில், நிச்சயம் இல்லை!!

மற்றுமொன்று, தான் திருமணத்திற்குச் சென்றால், தேவாவிற்கு உண்மை தெரிய வரும்.

தன் மீதான கோபத்தில், தேவா திருமணத்தை நிறுத்தி விட்டால்?!

தாராவால் தாங்கிக் கொள்ள இயலுமா?? 

ஆதலால், திருமணத்தைத் தவிர்க்கிறார்.

இந்த நிகழ்வில் மகளுடன் நிற்க முடியாத தன் நிலையை எண்ணி… வருத்தம், கவலை, நிம்மதியின்மை என்ற உணர்வுகளில் உழன்று கொண்டு வந்தார்.

எனினும், தன் முடிவில் மாற்றமில்லை என்று உறுதியாக இருக்கிறார்.

ஏனென்றால், தன் நிலைமைக்குக் காரணம் ‘தானே தான்’ என்று உணர்ந்திருந்தார்.

இதுவரைச் செய்தது எப்படியோ, ஆனால் இன்று மகளுக்குச் செய்வது நியாயம் கணக்கில் வராது என்று புரிந்து, புழங்காகிதம் அடைந்தார்!

மொத்தத்தில், தாரா விருப்பப்படி திருமணம் நடக்க வேண்டும்! அதன் பிறகுதான், தேவாவிற்கு எல்லா உண்மையும் தெரிய வர வேண்டும் என்ற எண்ணம் கொண்டார்.

இப்படி நினைத்துக் கொண்டிருக்கும் போது, சரத் உள்ளே வந்தான்.

அவன் உள்ளே வருகிறான் என்று தெரிந்ததும், தன்னை சரிப்படுத்திக் கொண்டார்.

“ம்மா, கிளம்பலையா? என்று கேட்டுக் கொண்டு, கீதா முன்னே வந்து நின்றான்.

அவர் முகத்தில் தெரிந்த பயம், கவலை, நிம்மதியின்மை என எல்லாவற்றையும் படித்தவன், “என்னாச்சு-ம்மா?” என்றான்.

“சரத், நான் வரலை. நீங்க போயிட்டு வாங்க. நான் வந்தா… நான் வந்தா…” என்று தடுமாறினார்.

“என்னம்மா உங்க பிரச்சனை? தாராவை நினைச்சுப் பார்த்தீங்களா?”

“சரத், இப்பவும் அவளுக்காகதான் இந்த முடிவு. நீயாவது அம்மாவைப் புரிஞ்சிக்கோ-டா” என்று கண் கலங்கினார்.

“இப்படியே சொல்லிச் சொல்லி தப்பான முடிவு எடுக்கிறீங்க!”

“தப்புதான். ரொம்பத் தப்புதான். ஆனால், இந்த நேரத்தில இதுதான் சரி”

“ம்மா… உங்க மூணு பேருக்குள்ள என்னவோ இருக்கு” என்று யோசித்தவன், “நீங்க தேவாகிட்ட ஏற்கனவே பேசியிருக்கீங்களா?” என்று கேட்டான்.

“ம்ம்ம், அவன் பார்க்கிற வேலையை வச்சுத் திட்டிருக்கேன். அவன் கஷ்டப்படுற மாதிரி பேசிருக்கேன்” என்று உண்மையை ஒத்துக் கொண்டவர், ஓரிரு கண்ணீர் துளிகள் சிந்தினார்.

“ம்மா அழாதீங்க” என்று பதறிக் கண்ணீர் துளியைத் துடைத்தான்.

மேலும், “முன்னாடியே சொல்லியிருக்கலாமே-ம்மா. இப்போ என்ன செய்ய முடியும்??” என்றான்.

“எதுவும் செய்ய வேண்டாம். தாரா-க்காக இந்தக் கல்யாணம் கண்டிப்பா நடக்கணும்” என்று அழுதார்.

“கண்டிப்பா நடக்கும். நான் நடத்தி வைப்பேன். சரியா? நீங்க நிம்மதியா இருங்க” என்று அவரைத் தேற்றினான்.

சற்று நேரம் அலைபேசியில் பேசினான்.

“என்னடா போகலையா?” என்று கேட்டவரிடம்,

“ம்மா, உங்களைப் பார்த்துக்க ஒரு நர்ஸ் வருவாங்க”

“எதுக்கு சரத்?”

“உங்களைத் தனியா விட்டுப் போக முடியாது. நான் மேரேஜ் முடிஞ்சதும் வந்துருவேன். சரியா? அதுவரைக்கும் டென்ஷனாகாம இருங்க”

“ம்ம்ம்” என்று தலையாட்டினார்.

“மேரேஜ் முடிஞ்சதும், இங்க கூட்டிட்டு வர நினைச்சேன். ஆனா தாரா, அவ வாங்கியிருக்க வீட்டுக்குப் போகணும்னு சொல்றா” என்று பேசியபடியே விரிப்புகளைச் சரி செய்தான்.

“போகட்டும் சரத். விட்டுடு… அவங்க ரெண்டு பேரும் பேசட்டும். பேசணும்! பேசினாதான் நல்லது” என்றார் பூடகமாக!

இருவருக்கும் புரிந்தது! தாரா, தன் தந்தை பற்றிப் பேசப் போகிறாள் என்று!

தாரா, அதிபன் மகளென்று தெரிந்தால், தேவா எப்படி எதிர்வினை புரிவான்?? அதைத் தாரா எப்படி எடுத்துக் கொள்வாள்??_என்று கீதா கவலைப்பட்டார்.

ஆனால், இதுவரை இருவருக்கும் இடையே இருந்து சேர விடாமல் தடுத்தாயிற்று! இனி விலகி நிற்பதே உகந்தது! _என்று கீதா மனதைத் தேற்றிக் கொண்டார்.

கீதாவைப் பார்த்தவன், “ம்மா, நீங்க…” என்று தொடங்கியவனிடம்,

“நான் என்னைப் பார்த்துக்கிடுவேன்! நீ அவளைப் பாருடா” என்றார்.

“நான் பார்த்துப்பேன். ஆனா அவ உங்களைத் தேட மாட்டாளா?”

நிச்சயம், ‘தான் கூட நிற்க வேண்டும்’ என்று ஆசைப்படுவாள். ஆனால் தன்னிலமை? மீண்டும் முகத்தில் கலக்கம் தெரிந்தது.

அதைக் கண்டவன், “ம்மா, நீங்க ரெஸ்ட் எடுங்க. நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்” என்று அவருக்கு ஆறுதல் சொன்னான்.

அதற்கு மேல், சரத்தால் கீதாவை வற்புறுத்த முடியாது! வற்புறுத்தவும் மாட்டான்!!

உள்ளத்தின் குற்ற உணர்வால், கீதா உடலைக் குறுக்கிக் படுத்துக் கொண்டார். 

“இப்போ கவலைப்படாம இருங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும்” என்று, அவர் தலைகோதி சொல்லிவிட்டு, சரத் வெளியே வந்தான்.

வரவேற்பறையில்… 

வெளியே வந்தவன் கண்களில், தாரா விழுந்தாள்.

‘அம்மா, ஏன் இப்படி நடந்து கொள்கிறார்?’ என்ற ரீதியில் நின்றிருந்த தாராவைப் பார்த்தான்.

‘இவளுக்கு என்ன ஆறுதல் சொல்ல?’ என்று நினைத்தவன் மனம் சுணக்கம் கொண்டது.

“என்னடா அம்மா வரலையா?” என்று ராஜசேகர் கேட்டார்.

‘இல்லை’ என்று தலையசைத்தான்.

தாரா எதுவும் கேட்கவில்லை.

அவளை நோக்கி வந்த சரத், “ஒண்ணுமில்லை தாரா! அம்மா கொஞ்சம் ரெஸ்ட்லெஸ்ஸா பீல் பண்றாங்க. ஸோ வீட்ல ரெஸ்ட் எடுக்கட்டும்” என்றான்.

“நான் பேசிப் பார்க்கவா சரத்?” என்று நம்பிக்கை இல்லா குரலில் கேட்டுப் பார்த்தாள்.

நம்பிக்கை இல்லாத குரல்தான்!

ஏன்?

சரத் பேசியே வராதவர், தான் பேசியா வந்து விடப்போகிறார்! என்ற காரணத்தால்!

“வேண்டாம் விட்டுடு! இந்த நேரத்தில எதுவும் பேச வேண்டாம்” என்று சமாதானம் கூறினான்.

அவள் எப்படிச் சமாதானம் அடைவாள்? அப்படியே நின்றுகொண்டிருந்தாள்.

“தாரா… நான் இருக்கேன்! ஜெகன்… அப்பா…” என்று சரத் சொல்லும் போதே,

தாராவின் பார்வைக் கீதாவின் அறை நோக்கிச் சென்றிருந்தது.

சரத், அதற்கு மேல் பேச முடியாமல் நின்றுவிட்டான். அவள் முகத்தைப் பார்க்கும் பொழுது, அவனால் எதுவும் பேச இயலவில்லை.

அவனுக்கு மட்டுமல்ல! ராஜசேகரும் ‘என்ன செய்ய?’ என்று தெரியாமல் நின்றார்.

ஜெகன் மூவரையும் பார்த்தான். பின்,

“அக்கா” என்று அழைத்தான்.

ஜெகன் அழைத்ததும், தாரா அவன் அருகில் சென்று நின்று கொண்டு, “ஜெகன், நீ அம்மாகிட்ட சொல்லேன்” என்று கேட்டுப் பார்த்தாள்.

“எதுக்குச் சொல்லணும்? என்ன சொல்லணும்? கல்யாணம்-னா வரத் தெரியாதா?” என்று கோபப்பட்டான்.

சரத், எதுவும் பேசாமல் அமைதியாக நின்றான்.

இன்னும் சமாதானம் அடைய முடியாமல் நின்று கொண்டிருப்பவளைப் பார்த்து, “போகலாம்-க்கா லேட்டாகுது. தேவாவைப் பார்த்தா… நீ சரியாடுவ… வா” என்று சமாதானப் படுத்தினான்.

தேவா என்ற வார்த்தை, அவளைக் கொஞ்சம் வழிக்கு கொண்டு வந்தது.

பின்னால் நின்று கொண்டிருந்த சரத்தையும் ராஜசேகரையும், கண் அசைவால் ‘வாங்க’ என்று ஜெகன் அழைத்தான்.

பின், தாராவின் கைப்பிடித்துக் கொண்டு ஜெகன் கிளம்பிவிட்டான்.

அவர்கள் சென்றதும்,

கீதாவின் அறையைப் பார்த்து நின்ற ராஜசேகரிடம், “வாங்கப்பா” என்றான், சரத்.

“ஏன் அம்மா இப்படி?” என்று வருந்தினார்.

“ரீஸன் இருக்கு போல! வந்து பேசலாம்-ப்பா”

“அம்மா ஹெல்த்துக்கு எதுவும்… ??”

“இல்லைப்பா. பட், நர்ஸ் அரேஞ்ச் பண்ணிருக்கேன். இப்ப வந்திருவாங்க. நீங்க வாங்க” என்று சொல்லி, அவர்களும் கிளம்பிவிட்டார்கள்.

சார் பதிவாளர் அலுவலகம்

சரத், தாரா, ஜெகன் மற்றும் ராஜசேகர்… நால்வரும் வந்திருந்தனர்.

சரத்தும், ராஜசேகரும் தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர்.

தாராவும் ஜெகனும், ஒரு ஓரமாக மர நிழலில் நின்று கொண்டிருந்தனர்.

ஜெகன், தாராவைப் பார்த்துக் கொண்டே நின்றான். ‘என்ன சொல்லி அவளைத் தேற்ற?’ என்று அவனுக்குத் தெரியவில்லை.

தாரா…

இக்கணம், அப்பா இல்லாதது பெரும் குறையாகத் தெரிந்தது!

இங்கேயே இருந்து கொண்டு, அம்மா வராதது பெரும் வேதனையாக இருந்தது! 

தேவாவிடம் உண்மை சொன்னால், எப்படி எடுத்துக் கொள்வான் என நினைத்து பெரும் பயம் வந்தது!

_இதுதான் தாராவின் மனநிலை!

சற்று நேரத்தில், தேவா மற்றும் அவனைச் சார்ந்தோர் வந்திருந்தனர். பாபி, சாரு, மாலி… தேவா அண்ணன் அண்ணி குழந்தைகள்… மிஸ்டர் அண்ட் மிஸஸ் பாஸ்கர்… ஹேமா மற்றும் அவள் கணவன்…

ராஜசேகர் மற்றும் சரத்… இருவரும் சென்று அவர்களை வரவேற்றனர்.

வந்தவர்கள், ஒருவருக்கு ஒருவர் பேச ஆரம்பித்தனர்.

சற்று நேரம் பேசியபின், தேவா தாராவை நோக்கி வந்தான்.

“அக்கா… தேவா வர்ராரு” என்று ஜெகன் சொன்ன பிறகே தாரா நிமிர்ந்து பார்த்தாள்.

தேவா அருகில் வந்ததும், ஜெகன் “ஹலோ தேவா” என்று ஒரு புன்னகைத் தந்துவிட்டு நகர்ந்தான்.

தேவா தாராவைப் பார்த்தான். அவள் முகத்தில் வாட்டம் இருந்தது.

“என்ன ஃபேஸ் டல்லா இருக்கு?” என்றான் அக்கறையாக!

அமைதியாக நின்றாள்!!

“அம்மா வரலைன்னு கஷ்டமா இருக்கா??” என்றான் பரிவாக!

பதிலேதும் இன்றி பரிதவித்தாள்!!

“இப்போதான் உங்க அப்பா சொன்னாங்க. ம்ம்ம், டோன்ட் வொரி. இதெல்லாம் லவ் மேரேஜ்-ல நடக்கிறதான்” என்றான் இதமாக!

இம்மியளவும் இதமாக உணர இயலாமல், இன்னல் கொண்டாள்!!

“அப்புறமா, அவங்களைப் போய் பார்க்கலாம். சரியா?” என்றான் ஆறுதலாக!

ஆறுதல் வார்த்தைகள் கூறியும், மன ஆற மறுத்தது!!

சற்று நேரம் சூழலில் பார்வையைச் செலுத்தியிருந்தவனை, “தேவா” என்று அழைத்தாள்.

“ம்ம்ம், என்ன தாரா?”

“உங்களைக் ஹக் பண்ணி அழணும் போல இருக்கு” என்றாள், உயிரின் ஒவ்வொரு அணுவும் அலைப்புறும் குரலில்!

“இன்னும் கொஞ்ச நேரத்தில… மேரேஜ் முடிஞ்சிரும்… அப்புறமா?!” என்றான், அவள் குரலை உணர்ந்து! புரிந்து!! தெரிந்து!!

மேலும், “ஆனா, அழக் கூடாது. இது லைஃப் ஸ்டார்டிங் டே, ஸோ ஹேப்பியா இருக்கணும்” என்றான்.

“ம்ம்ம்” என்றாள், சந்தோஷமே இல்லாமல்!

“பட், நான் சொன்னேன்ல தாரா! யாரையும் கன்வீன்ஸ் பண்ண, முடியலைன்னா… நான் வந்து கன்வின்ஸ் பன்றேன்னு. என்கிட்ட சொல்லியிருக்காலாமே??” என்று குறைபட்டுக் கொண்டான்.

“இல்லை தேவா… அது வந்து…” என்று விளக்கம் கொடுக்கப் போனவளை,

“ஹே நத்திங்க் ராங். லீவ் இட்” என்று நிறுத்திவிட்டான்.

‘இதற்கே இப்படி என்றால்… இன்னும் என்னென்ன இருக்கிறது?’ என்று தாராவிற்குப் பதற ஆரம்பித்தது.

“தேவா”

“ம்ம்ம்”

“நான் ஏதாவது தப்பு பண்ணியிருந்து, ஸாரி கேட்டா மன்னிச்சிருவீங்களா?”

“அதெப்படி மன்னிக்க முடியும். கண்டிப்பா முடியாது” என்றான் விளையாட்டாய்!

அவன் விளையாட்டை ரசிக்க முடியாமல் தவித்தாள், தாரா.

லேசாகச் சிரித்துக் கொண்டே, “டசன் டைம்ஸ் ஸாரி-ன்னு கேட்கணும்” என்றான் விருப்பமாக!

தாராவால் சிரிக்க இயலவில்லை.

தேவாவும், அவளின் நிலை அறிந்து கொண்டான்.

ஆனால், அவளது அம்மாவை நினைத்துக் கலங்குகிறாள் என்று அர்த்தம் கொண்டான்.

சற்று நேரத்தில்…

வாழ்நாள் முழுவதும் வாழப் போகும் வாழ்வை, கையெழுத்து இட்டு வரவேற்றனர்.

மற்ற நடைமுறைகளை முடித்துவிட்டு, வெளியே வந்தனர்.

சில நிமிடங்களுக்குப் பிறகு,

தேவாவின் அக்காவிற்கு ஒரு எண்ணம், தாராவின் அம்மாவைச் சென்று பார்த்துவிடலாம் என்று!

ராஜசேகரிடம் சொல்லிப் பார்த்தாள். அவருக்கும் அது சரியென்று தோன்றியது.

ஆனால், தாராவின் விருப்பம் என்ன என்று நினைத்து, ராஜசேகர் அவளைப் பார்த்தார்.

‘முடியாது’ என்று தாரா தலையசைத்தாள்.

அவளுக்குத் தேவாவிடம் பேசியே ஆக வேண்டும்! இதற்கு மேல் உண்மையை தள்ளிப் போட முடியாது என்று எண்ணினாள்!

சரத், ஜெகன், தேவா… மூவரும் அவளிடம் கேட்டுப் பார்த்தனர்.

யார் சொல்வதையும் அவள் கேட்கவில்லை. கேட்கும் நிலையில் அவள் மனநிலை இல்லை.

தேவா, கொஞ்சம் ஒரு மாதிரி உணர்ந்தான். ‘ஏன் இந்த அடம்?’ என்று ஒரு சிறு கோபம் கூட வந்தது!

சில நிமிடங்களுக்குப் பின்,

தாராவின் மறுப்பினால், அனைவரும் கிளம்பத் தயாரானாகினர்.

தேவாவின் அண்ணன் மற்றும் அண்ணி, மிஸ்டர் அண்ட் மிஸஸ் பாஸ்கர்… ராஜசேகர் மற்றும் தேவாவிடம் சொல்லிவிட்டு விடைபெற்றனர்.

ராஜசேகரிடம் சொல்லிவிட்டு, ஹேமா தேவாவிடம் வந்து நின்றார்.

“நானும் அவரும், என் மாமியார் வீட்டுக்குப் போறோம்” என்றாள்.

“ம்ம்ம்”

“தேவா, இன்னொரு நாள் போய் அவங்க அம்மாவைப் பார்த்திடு. சரியா??”

“ம்ம்ம், சரி-க்கா”

“உனக்கு கல்யாணம் நடந்ததே எனக்குச் சந்தோஷம். வேற எதையும் நான் யோசிக்கலை. நீயும் யோசிக்காத. சந்தோஷமா இரு??” என்றவள், மேலும் சில அறிவுரைகள் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாள்.

பாபியும், சாருவும்… இருவருக்கும் வாழ்த்துச் சொல்லி விடைபெற்றனர்.

சில நிமிடங்களுக்குப் பிறகு,

தாரா, சரத், ஜெகன்… மூவரும் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

மறுபக்கம், ராஜசேகரும் தேவாவும்!

ராஜசேகரின் முகத்தில் ஒரு நிம்மதியின்மை பரவிக் கிடந்தது.

அதைப் படித்தவன், “என்னாச்சு மாமா?” என்று கேட்டுவிட்டான்.

அவன் விளிக்கும் விதமே, அவரின் நிம்மதியின்மையைப் பாதியளவு விரட்டி விட்டது.

“தப்பா எடுத்துக்காதீங்க. தாரா ஏதோ உங்ககிட்ட பேசணும்னு நினைக்கிறா போல! அதான் இப்படி!”

“பரவால்ல மாமா”

“ரிசப்ஷன் வைக்கிறப்போ, இந்த மாதிரி சின்னச் சின்ன குறையெல்லாம் இல்லாம பார்த்துக்கிறேன்”

“இதுல குறை என்ன இருக்கு மாமா? அத்தையைப் போய் பார்க்காம இருக்கிறது, மரியாதையா இருக்காதுன்னு நினைச்சேன். அவ்வளவுதான்!”

இவர் இப்படி யோசிக்கிறார். ஆனால், இவரைக் கீதா எப்படிப் பார்க்கிறார் என்று நினைக்கையில் ஒரு மாதிரி இருந்தது, ராஜசேகருக்கு!

“நீங்க ஏன் இவ்வளவு யோசிக்கிறீங்க மாமா?”

“வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிருந்தா, மேரேஜ் கம்பிளிட் ஆன பீல் கிடைச்சிருக்கும். யாரையும் சரியா கவனிக்க முடியலைன்னு ஒரு வருத்தம். அதான்”

“ஓ!”

“உங்க அண்ணா-அண்ணி எதுவும் நினைப்பாங்களா?”

“அவங்க இதெல்லாம் எதிர்ப்பார்க்க மாட்டாங்க மாமா”

“உங்க அக்கா…”

“அக்கா ஹெல்த் கன்டிஷனக்கு, அவ ரெஸ்ட் எடுக்கிறதுதான் நல்லது”

“பாஸ்கர் பேமிலி??”

“அங்கிள் ஆன்ட்டி, என்னைக்குமே என்னோட பெர்ஷனல்ல தலையிட மாட்டாங்க மாமா”

அடுத்த கேள்வி ராஜசேகர் கேட்கும் முன்,

“பாபி-சாரு புரிஞ்சிப்பாங்க. விடுங்க மாமா” என்று சிரித்தான்.

ராஜசேகரும் சிரித்துவிட்டு, ‘வேறு யாரையும் விட்டு விட்டோமா?’ என யோசித்தார்.

“மிச்ச இருக்கிறது நான் மட்டும்தான் மாமா” என்றான்.

மேலும் சிரித்தார்.

என்றுமே மற்றவர்களுக்காகப் பேசிப் பழகியவருக்கு, தனக்காக ஒருவன் பேசுவது… சந்தோஷத்தை தந்தது.

“மாப்பிள்ளை” என்றார் மனதார! மனது ஆற!!

“ஐயோ மாமா. இப்படிக் கூப்பிடாதீங்க. ரொம்ப வியர்டா இருக்கு” என்று கூச்சப்பட்டான்.

“எனக்கும் இப்படிக் கூப்பிடறது ஒரு மாதிரி இருக்கு. ஆனா, உங்களை இப்படிக் கூப்பிடத் தோணுது. ஏதோ ஒரு திருப்தி மாப்பிள்ளை”

“ஜெகனே பேர் சொல்லிதான் கூப்பிடுறாரு… நீங்க போய்… “

“அவன் எப்படியும் கூப்பிட்டுப் போறான். எனக்கு இப்படிக் கூப்பிடறதுதான், பிடிச்சிருக்கு. இது ஒரு ஆசைன்னு கூட வச்சிக்கோங்க”

“சரி, உங்க இஷ்டம் மாமா. ஆனா இதுல ஆசைப்படற அளவுக்கு என்ன இருக்கு??”

“உங்களுக்கு அது புரியாது. கூடிய சீக்கிரம் புரியலாம். புரிஞ்ச பின்னாடி, நீங்க மாறினாலும்… நான் மாற மாட்டேன் மாப்பிள்ளை” என்றார் உண்மைக்கு அந்தப் பக்கம் நின்று கொண்டு!

“நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியலை மாமா?” என்றான் உண்மைக்கு இந்தப் பக்கம் நின்று கொண்டு!

“விடுங்க மாப்பிள்ளை. தாரா வெயிட் பண்றா. ரெண்டு பேரும் கிளம்புங்க” என்றார் சகஜமாக!

சரியெனத் தலையாட்டினான்.

அதன் பின், தாராவும் தேவாவும்… சரத் ஜெகன் மற்றும் ராஜசேகரிடம் விடைபெற்றுச் சென்றனர்.

அவர்கள் சென்றதும், மற்ற மூன்று பேரும் கீதாவைப் பார்க்க கிளம்பிவிட்டனர்.

தாரா வீடு

அது, அடுக்குமாடிக் குடியிருப்பு!

வீடு வரும் வரை, இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

வீடு வந்து, உள்ளே நுழைந்ததும்…

“ஏன் தாரா இப்படி?” என்று கேட்டான்.

“ஏற்கனவே சொல்லியிருந்தேனே தேவா”

“கரெக்ட்தான். பட், மாமா எல்லார்கிட்டேயும் எக்ஸ்பிளேன் பண்ணிக்கிட்டு, பீல் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. அதான் கேட்டேன்”

ராஜசேகரை, தேவா அழைக்கும் விதம் தந்த அசௌகரிய அமைதி, தாராவிடம்!

“இப்போ இங்க வர்றது அவ்ளோ அவசியமா?” என்று கேட்டான்.

‘ஆம்’ என்று தலையாட்டினாள்.

“அப்படி என்ன அவசியம்?”

“ஏன்னா எனக்கு என் அப்பாகூட இருக்கணும்னு தோணிச்சு. அதான்” என்றாள், அழுத்தமாக!

“அப்பா-வா? அப்படின்னா நீ மாமா கூட… ” என்று தேவா ஆரம்பிக்கும் போதே,

“அவர் என் அப்பா இல்லை” என்றாள்! இத்தனை நாள் அழுத்திய உண்மையை, அவனிடம், அழும் குரலில்!

புரியாமல் நின்றான்.

“ஒரு நிமிஷம் வாங்க” என்றாள், தன்னைச் சமன் படுத்திக் கொண்டு!

அவனும், அவள் பின்னே சென்றான்.

வரவேற்பறையில் இருந்த அதிபன் புகைப்படத்திற்கு முன்னே சென்று நின்றாள்.

அவனும் நின்றான்.

“இவர்தான் என் அப்பா” என்று புகைப்படம் நோக்கி கை காட்டினாள்.

தாரா கை காட்டிய திசை நோக்கி, தேவாவின் பார்வைச் சென்றது.

அங்கே அதிபன்! அவனின் அதிபன் ஐயா புகைப்படம்!!

அதைப் பார்த்ததும்,

பகீரென்று உணர்ந்தான்! கோபம் கொண்டான்! திக்கென்று இருந்தது! திகைத்து நின்றான்!

புரியாமல் இருந்த ராஜசேகரின் வார்த்தைகள் புரிய ஆரம்பித்தன.

மன்னிப்பு பற்றிய தாராவின் பேச்சு எதற்கு என்று தெரிந்தது. 

ஒரு சில நிமிடங்களில், தன்னை மீட்டுக் கொண்டான்.

சற்று நேரம் அமைதியாக நின்றான்.

பின் சிரித்துக் கொண்டான்.

“ஏன் சிரிக்கிறீங்க?” என்று எதுவும் அறியாமல் கேட்டாள்.

“உன் அம்மா கல்யாணத்துக்கு ஏன் வரலைன்னு இப்போ புரியுது” என்றான் அலட்சியமாக!

அம்மா ஏன் வரவில்லை? என்று தனக்கே புரியவில்லை. இவனுக்கு என்ன புரிந்தது?? என்ற குழப்பத்துடன் தாரா நின்றாள்.

“உன்கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லிட்டாங்களா?” என்றான், அவளைப் புரியாமல்!

“என்ன விஷயம் தேவா?” என்றாள் ஏதும் புரியாமல் தெரியாமல்!

“சரி, அதை விடு. நீ ஏன், அதிபன் ஐயா பொண்ணுன்னு என்கிட்ட சொல்லலை?” என்றவன் கண்களில் ஏக்கர் கணக்கில் ஏமாற்றம் கொட்டிக் கிடந்தது.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!