Eppothu vilaguvaai anbe 5

Eppothu vilaguvaai anbe 5

5

ராம் வீட்டினுள் நுழைந்து தண்ணீர் பிடித்துக்கொண்டு இருந்தான் குடிப்பதற்காக.. அதற்குள் “ராம் அண்ணா” என்ற பயங்கர சத்தத்தில் பயந்து தண்ணீர் பாட்டிலை அப்படியே வைத்து விட்டு ஹாலுக்கு ஓடினான்..

“ராம் அண்ணா”….

“ஏய் ச்சீ.. கத்தாதே.. எனக்கு காது நல்லாவே கேக்கும்.. எதுக்கு கத்தினே??”

“வீட்டுக்கு வந்திருக்கோம்.. பாலும் பழமும் குடுக்க வேணாம்.. தண்ணியாச்சும் குடுங்களேன்.. நாங்களும் தமிழ் காரங்க.. நீங்களும் தமிழ்க்காரங்க தான்.. தண்ணீ கொடுக்கலாம்ல..”

“ஏம்மா ஜெனி.. அதை என் பெயரை ஏலம் விடுறதுக்கு பதிலா தண்ணீ கொண்டு வாங்கனு சொல்லிருக்கனும்.. என்னையும் தண்ணீ குடிக்க விடாம.. கடவுளே… மச்சி உன் பாடு கஷ்டம் தான்.. இது கூடலாம் எப்படித்தான் காலம் தள்ளப் போறியோ??”

“டேய் புலம்பாம தண்ணீ கொண்டு வந்து கொடுடா” என மதி கூறவும்,

‘சேந்துட்டாங்கடா.. இனி நம்ம பாடு தான் கஷ்டம்’ என்றவாறு உள்ளே வந்த ராம்,

அங்கே தண்ணீர் பாட்டிலில் தண்ணீர் இல்லாமல் காலியாக மூடி இருப்பதைப் பார்த்தவன் குழம்பினான்..

‘பாட்டில்ல தண்ணீ புடிச்சேன்.. அதுக்குள்ள தங்கச்சி கத்திச்சு.. ஓடிப் போயிட்டேன்.. நான் குடிக்கவே இல்லையே.. அப்படியே குடிச்சாலும் நான் மூடி வைச்சிட்டா ஓடினேன்.. இன்னும் தண்ணீ குடிச்ச மாதிரியே இல்லை.. அப்போ என் தண்ணீ எங்கே?? ‘

“ராம்.. இன்னும் என்னடா பண்றே?? தண்ணீ எங்கேடா??”

உடனே மூடிய பாட்டிலோடு வெளியே வந்த ராம்,

“பாட்டில்ல தண்ணீ புடிச்சேன்.. அதுக்குள்ள தங்கச்சி கத்திச்சு.. ஓடி வந்தேன்.. நான் குடிக்கவே இல்லையே.. அப்படியே குடிச்சாலும் நான் மூடி வைச்சிட்டா ஓடினேன்.. அப்போ என் தண்ணீ எங்கே??” என புலம்ப,

“என்னடா ஆச்சு??” என மதி கேட்கவும்,

திரும்பவும், “பாட்டில்ல தண்ணீ புடிச்சேன்.. அதுக்குள்ள தங்கச்சி கத்திச்சு.. ஓடி வந்தேன்.. நான் குடிக்கவே இல்லையே.. அப்படியே குடிச்சாலும் நான் மூடி வைச்சிட்டா ஓடினேன்.. அப்போ என் தண்ணீ எங்கே??”

“கன்ஃபார்ம்.. முத்திச்சு.. இதெல்லாம் டாக்டராமா?.” என்றவாறு அவன் கையில் உள்ள பாட்டிலை பிடுங்கிய ஜெனி, உள்ளே சென்று தண்ணீர் குடித்து விட்டு மீண்டும் ஒரு பாட்டிலை பிடித்துக்கொண்டு வெளியே வந்தவள் மீண்டும் ராம் அதையேக் கூறவும்,

“ராம் அண்ணா, தண்ணீ இந்தா வந்துச்சு.. சரியா?? அழக்கூடாது.. சீக்கிரம் குடிச்சுட்டு வாங்க.. வந்து வீட்டைக் காமிங்க..” எனக் கூறவும்

ஏதோ முடிவுக்கு வந்தவன், தன்னை நொந்த படியே, ஜெனி கொடுத்த தண்ணீரைக் குடித்துவிட்டு, அவர்களை மாடிப்போர்ஷனுக்கு அழைத்து வந்தான்..

இரண்டு பெட்ரூம் இருந்த வீட்டைப் பார்த்தவள், “எனக்கு வீடு ஓகே.. நான் இந்த ரூம் எடுத்துக்கிறேன்.. உங்க பிரெண்டு அந்த ரூம்ல இருக்கட்டும்.. நான் குளிச்சிட்டு ஃபிரெஷ் ஆகி வந்துடுறேன்.. பிரியாணி வாங்கி வைச்சிடுங்க” என்றவாறே தனது பேக்கை இழுத்துக்கொண்டு தனது அறைக்குள் நுழைந்தாள்..

“என்னடா.. இவ்வளவு கேஷூவலா இருக்கிறா.. காலைல கல்யாணமே வேணாம்னு சொன்னா.. இப்போ பிரியாணி கேக்கிறா..” எனக் கேட்ட ராமிடம்,

“அவ உலகத்துல எந்த மூலைல இருந்தாலும் சந்தோஷமா இருப்பாடா, கூட நான் ஒருத்தன் மட்டும் இருந்தா போதும்.. என்னை அவளுக்கு புடிக்கும்.. அதைத்தாண்டி காதல்னு ஒன்னு அவ மனசில இல்லைடா.. நானே இன்னைக்கு மார்னிங் தான் அவ மேல வைச்சிருக்கிற லவ்வ ஃபீல் பண்ணேன்.. அவளும் ஃபீல் பண்ணுவாடா.. அன்னைக்கு என்னைத் தேடி வந்து எல்லா உண்மையும் சொல்லுவா.. அந்த நாளுக்காக நான் தான் காத்திருக்கனும்டா..” என மதி பேசிக்கொண்டு இருக்க,

“இவன்வேற ஒருத்தன்.. லவ், ஃபீலிங்ஸ் னு என்னென்னவோ சொல்றான்.. எனக்கே என் தண்ணீ எங்கே போச்சுன்னு தெரிலன்னு கடுப்பா இருக்கேன்” என ராம் யோசிக்க,

மதி பேசியதைக் கேட்ட ஜெனி, தன் அறையில் இருந்தே, “இது போதும்டா.. என் மேல இவ்ளோ நம்பிக்கை வைச்சிருக்கல.. இது போதும்டா.. காலைல என்ன நடந்ததுன்னு மட்டும் சொல்ல மாட்டேன்.. ஆனா நாம சந்தோஷமா நம்ம குழந்தைங்க கூட வாழலாம்டா.. எனக்கு நம்பிக்கை வந்துச்சு.. லவ் யூ சோ மச் மதி” என்றவாறே குளிக்கச் சென்றாள்..

ராமும் தன் வீட்டுக்கு சென்றவன், ‘தன் தண்ணீர் எங்கே சென்று இருக்கும்??’ என்ற யோசனையோடு படுத்து இருந்தவன் தன்னை அறியாமல் கண் மூடி உறங்கினான்..

“டேய் இடியட்.. உட்கார சேர் கூட இல்லை.. ஒழுங்கா எந்திச்சு என்கூட ஷாப்பிங் வா.. வீட்டுக்கு தேவையானத வாங்கனும்” மதி கத்தவும்,

“மச்சி.. நாம ரெண்டு பேர் மட்டுமா?? இல்லை அந்த குட்டி பிசாசும் வருமா??” ராம் கேட்க,

“டேய் ராமண்ணா.. யாருடா குட்டிப்பிசாசு?? நீ தான் உன் வீட்ல பேய் கூட குடும்பம் நடத்துறே.. அது உன் தண்ணிய எல்லாம் குடிக்குது.. இவரு எங்களை சொல்றாரு” என்றவாறே அவன் தலையில் ஜெனி பத்து பதினைந்து குட்டுகளைக் கொட்ட,

“டேய் நல்லவனே?? வேற பொண்ணே கிடைக்கலையா உனக்கு?? நீங்க என்ன சீன் போடுறீங்கனு எனக்கு புரியலைடா.. நியாயமா நீ அவ மேல கோவத்துல இருக்கனும்.. இங்கே என்ன நடக்குன்னே தெரிலயே” என ராம் புலம்ப,

“நீ வர்றியா, இல்லை நான் கிளம்பவா??” எனக் கேட்டு அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் மதி…

“ராமண்ணா.. அதுக்கு முன்னே பிரியாணி ப்ளீஸ்” என ஜெனிக் கேட்கவும்

“இந்தா பாய்.. எடுத்துட்டு உன் வீட்டுக்கு போ.. மதி இந்த ரெண்டு சேரும் உன் வீட்ல இருக்கட்டும்.. எங்க வீட்ல தான் சோஃபா இருக்குல்ல.. நீங்க போய் அரேன்ஜ் பண்ணுங்க.. நான் பிரியாணி வாங்கி வர்றேன்” என்றவாறு ராம் வெளியே செல்ல,

பாயைக் கையில் வைத்திருந்த ஜெனியின் பார்வையும் மதியின் பார்வையும் ஒன்றையொன்று நேருக்கு நேர் சந்தித்து விழிகள் தடுமாற அங்கு ஒரு மௌன காதல் யுத்தம் நடைபெற்றது..

‘உன்னால முடியாது செல்லம்.. நம்ம லவ்வை நாம உணர்ந்துட்டோம்.. இனிமே ஈகோக்கு எல்லாம் இங்கே வேலையே இல்லை.. நீ சீக்கிரம் பேசிடுவே மதி.. நானா உன்கிட்ட பேசினா தான் நீ கண்டதையும் கேட்டு டார்ச்சர் பண்ணுவே.. சோ நீயாவே பேசிடு.. ரொம்ப வெயிட் பண்ண வைக்காதே.. உன் ஜெனி பாவம்’ என மனதுக்குள் பேசிக் கொண்டாள் ஜெனி..

error: Content is protected !!