imk- 24

imk- 24

௨௫(25)

சூட்சும வளையம்

அரண்மனை அருகில் தனியே அமைந்திருந்த பெரிய விசாலமான சமையல் கூடம் அது. ஆனால் இப்போது அந்த இடம் உபயோகத்திற்கு இல்லாமல் போனாதால் அது சில பழைய பொருட்களின் சேகரிப்புக் கூடமாய் மாறியிருந்தது.

இவானின் கால் தடத்தைப் பின் தொடர்ந்து வந்தவள் சில தூரம் சென்றதும் அலுத்துப் போய் தான் வந்த இடத்தை சுற்றும் முற்றும் பார்க்க அவர்களின் அரண்மனையின் பின்புறம் பிரம்மாண்டமாய் காட்சி தந்தது.

இவான் குமாரைத் துரத்திக் கொண்டு இங்கே வந்திருக்கக் கூடுமா? என்று அவள் சிந்திக்கும் போதே பின்னிருந்து ஒரு கரம் அவளை வளைத்துப் பிடிக்க, அவள் சுதாரிப்பதற்கு முன்னதாக ஐந்து ஆறு பேர் கத்தியோடு அவளை சூழ்ந்து கொண்டு தூக்கி வந்துவிட்டனர்.

சில நிமிடப் போராட்டத்திற்குப் பின் அவள் அங்கிருந்த தூணில் கட்டிப்போடப்படிருந்தாள்.  தமிழச்சி பார்த்த மாத்திரத்தில் அந்த இடத்தை அடையாளம் கண்டுகொண்டாள். 

இருபத்திரண்டு வருடத்திற்கு முன்னதாக அவர்களின் அரண்மனை தொல்லியல் துறைக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது. செந்தமிழ் அந்த அரண்மனையை பாதுகாக்கும் நோக்கத்தோடே அவ்வாறு செய்தாள்.

அதன் பின் அந்த அரண்மனை சிம்மவாசலின் பொக்கிஷமாய் மாறி சிம்மாவின் காலத்தைப் பறைசாற்றும் வகையில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. ராஜசிம்மன் அவர்கள் வழிவந்த சந்ததிகள் காலத்துப் பொருட்கள், ஓவியங்கள் என அந்த இடமே அருங்காட்சியகம் போல் மாற்றப்பட்டு மக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டது. ஆனால் ஒரு வருடம் முன்பாக அரண்மனை சுவர் பழுதடைந்ததாக சொல்லி மக்களின் பாதுக்காப்புக் கருதித் தொல்லியல் துறை அரண்மனையை மூடியது. 

அதேநேரம் அதிகாரிகள் அரண்மனையில் சீரமைக்கும் பணி நடப்பதாக ஒரு அறிவிப்பைப் போட்டுவிட்டு அந்த வேலையை செய்யாமல் கிடப்பில் போட்டிருந்தனர் என்பது வருத்தத்திற்கு உரிய விஷயம்.

 பூட்டி பாதுக்காப்பில்லாதிருக்கும் இடங்கள் சமூக விரோதிகளின் கூடாரமாய் மாறிவிடுகிறது.

ஒரு வகையில் அப்படி  இவர்கள் அரண்மனையை ஆக்கிரமித்திருப்பார்களோ? என்று தமிழச்சியின் மூளை ஆழ்ந்த யோசனைக்குள் மூழ்க அப்போது அவள் அருகில் நின்றவன்,

“என்னடி யோசிச்சுட்டு இருக்க? கிரீடம் எங்கன்னு வாயைத் திறந்து சொல்லு… இல்லன்னு வைச்சுக்கோ… உன் மானம்… உயிர் ரெண்டுமே உன்கிட்ட இருக்காது… உன் கதையை முடிச்சு உன்னை சாம்பலாக்கிட்டு போயிடுவோம்… சொல்லிட்டேன்” என்று பயங்கரமாய் தன் மிரட்டலை விடுத்துக் கொண்டிருந்த சில நொடிகளில் அவளின் மூளை பலமாய் தப்பிக்கும் உபாயத்தை யோசிக்கத் தொடங்கியது. 

அவனோ திரும்பத் திரும்பக் கிரீடத்தைப் பற்றியே கேட்டுக் கொண்டிருக்க அவள் முறைத்து, “கிரீடம் இருக்க வேண்டிய இடத்துல இருக்கு… அது என்னைக்கும் உங்க கைக்குக் கிடைக்காது… கிடைக்கவும் விடமாட்டேன்” என்று பதிலளித்துவிட்டாள்.

“என்னடி சொன்னே?” என்றவன் தீவிரமாய் அவளை அடிக்க கை ஓங்கிக் கொண்டு வர அவள் உடனே, “இந்த இடத்தை இந்த நேரத்துக்குப் போலீஸ் ரவுண்ட அப் பண்ணியிருக்கும்” என்றாள்.

அவன் கரம் அந்த நொடி அவளை அடிக்காமல் அந்தரத்தில் தொங்க சுற்றியிருந்தவர்கள் முகத்தில் பீதி படர்ந்தது. அதிலும் குமார் நடுங்கத் தொடங்கியிருந்தான்.

தமிழச்சி எல்லோரின் முகத்தையும் தன் பார்வையால் அளந்துவிட்டு, 

“என்னை பார்த்தா எப்படி தெரியுது உங்களுக்கு…  கொஞ்சம் கூட யோசிக்காம உங்க கிட்ட வந்து சிக்கிக்க நான் என்ன முட்டாளா?” என்று கேட்டு அவள் சிரிக்க அவர்கள் எல்லோரையும் அச்சம் தொற்றிக் கொண்டது.

“என்னடி சொல்ற?” என்று அவள் எதிரே இருந்தவன் சீற்றமாய் கேட்க, 

“கிரீடத்தைத் திருடி இருக்கீங்கன்னு தெரிஞ்ச பிறகு கூட எப்படி நான் கேஷுவலா கோவிலுக்கு வருவேன்னு நினைச்சீங்க” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அதிர்ச்சியில் அவர்கள் வாயடைத்துப் போய் நின்றனர்.

“இதெல்லாம் உங்களைப் பிடிக்க நான் போட்ட ப்ளான்… எல்லோரும் வசமா வந்து சிக்கிட்டீங்க” என்று அவள் அலட்சியமாய் புன்னகைத்த விதத்தில் அந்த கூட்டத்தின் தலைவனே அரண்டு போனான்.

குமார் ஓடிவிடலாமா என்று அப்படியும் இப்படியும் சுற்றிப் பார்த்தான்.

அவள் அப்போது, “நீ என்கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது குமாரு… பணத்துக்காக எங்க சாமி கிரீடத்தையே தூக்குவியா நீ… உன்னை நான் சும்மா விடமாட்டேன்” என்றவள் சூளுரைக்க, 

“போலீஸ்கிட்ட மாட்டினா என் நிலைமை அவ்வளவுதான்” என்று குமார் அஞ்சத்தொடங்கினான்.

“சீ… வாயை மூடு… அவ சொன்னது உண்மையா இல்லையான்னு முதல்ல தெரிஞ்சுக்கலாம்” என்றான் அந்தக் கூட்டத்தின் தலைவன்.

 “ஹலோ… போய் வெளிய பாருங்க… அரண்மனை சுற்றியும் போலீஸ் ஃபோர்ஸ் நிற்கும்… யாராச்சும் வெளிய போனீங்க மண்டை சிதறி சாவீங்க” என்று அவள் மிரட்டிய நொடியில் அங்கு உள்ள எல்லோருக்குமே திகிலாய் இருந்தது.

‘எந்த தைரியத்துல நீ இப்படி பொய்யா சொல்ற தமிழச்சி’ என்றவள் மனசாட்சி அச்சப்பட்டாலும் அதை காட்டிக் கொள்ளாமல் அவர்களின் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று ஆராய்ந்தாள்.

அப்போது அந்தக்கூட்டத்தின் தலைவன், “இவ எதோ உடான்ஸ் உட்ரா… சாமுவல் வாசல்ல தானே இருக்கான்… அவனுக்கு ஃபோன் போடு வேலு” என்றதும் வேலன் அழைக்க பேசியில் அவனின் அழைப்பு எதிர்புறத்தில் ஏற்கப்படவில்லை. அவனுக்குப் பதட்டமானது.

“ஃபோனை எடுக்க மாட்டேங்குறான் தலைவா! போலீஸ்கிட்ட மாட்டி இருப்பானோ?” என்று அச்சத்தோடு கேட்க,

அவள் எகத்தாளமாக சிரித்து, “அவனுங்க மட்டும் இல்ல… நீங்களும்தான் மாட்டப் போறீங்க கண்ணுங்களா” என்றாள். கட்டிப்போடப் பட்டிருந்தாலும் அவளின் உறுதி அங்கிருந்தவர்களின் துணிச்சலை ஆட்டம் கண்டிட செய்தது.

அந்தக் கூட்டத்தின் தலைவன் மனநிலையும் அதேதான். அவனுக்கும் உள்ளூர நடுக்கம். ஆழம் தெரியாம அவசரப்பட்டு காலை விட்டோமோ? என்றவன் யோசிக்கும் போதே, “ஆழம் தெரியாம காலை விட்டோமோன்னு யோசிக்கிறியா?” என்று அவன் மனதைப் படித்தது போல் அவள் சொல்ல அவன் முகம் வெளிறிப் போனது.

அவள் கற்ற பாடங்களில் எதிராளியின் உளவியலை அறிந்து செயல்படுவதும் ஒன்று. அதை சரியான நேரத்தில் பயன்படுத்திக் கொண்டாள். 

ஏற்கனவே அந்தத் தலைவனின் கோபம் எல்லையை மீற அவன் அவளை முறைத்துக் கொண்டே, “வெளியே இவ சொன்ன மாதிரி போலீஸ் வந்திருக்காங்களான்னு நீ போய் பார்த்துட்டு வா வேலு” என்க,

“நான் மட்டுமா?” என்று வேலு பதறவும்,

“தடிமாடு மாதிரி வளர்ந்திருக்க … ஆனா ஒன்னுக்கும் பிரயோஜனம் இல்ல” என்று கடிந்து கொண்டான். மாட்டிக் கொண்டு விடுவோமோ என்ற பயம்தான் அவனுக்குக் கோபமாய் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. அது அடுத்த படிநிலைக்கு சென்று வெறியாகவும் மாறி கொண்டிருந்ததை அவள் கவனித்துக் கொண்டிருக்கும் போதே அவன் தன் கூட்டத்தில் ஒரு மூன்று பேரை சுட்டிக்காட்டி வெளியே போய் பார்த்துவிட்டு வர சொன்னான்.

“நாம கண்டிப்பா மாட்டிக்கப் போறோம்னுதான் தோணுது” என்று அந்த நொடி குமார் வேறு புலம்ப, “அதுல உனக்கு என்ன டௌட்” என்று சிரித்த மேனிக்கு உரைத்தாள் தமிழச்சி!

அப்போது அந்த தலைவனுக்கு எல்லை மீறிக் கோபம் கொந்தளிக்க, 

“மவளே! ஓவரா பேசிட்டு இருக்க… நாங்க மாட்டினா நீ உயிரோட போக மாட்ட… உன்னை கொல்லணும்னுதான் நாங்க வந்தோம்… கிரீடத்தை எப்படி எங்க கைக்குக் கொண்டு வரணும்னு எங்களுக்குத் தெரியும்… நீ சாவுடி” என்று சொல்லி அவன் தமிழச்சியின் கழுத்தை இறுக்க, 

‘டே! இவான்… எங்கடா இருக்க? இவனை நம்பி இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்திருக்கக் கூடாதோ?!’ என்று அவள் உள்ளம் எண்ணி கொண்டிருக்கும் போதே அவளின் தொண்டைக் குழி அமுங்கி மூச்சு முட்டியது. விழி பிதுங்கியது.

அவள் உயிர் அவளிடம் இல்லை. இறப்பைக் கண்ணெதிரே அவள் கண்டுவிட்ட தருணம் அது. அந்த சிலவிநாடிகள் யுகங்களாய் தோன்ற மரண தருவாயை அவள் நெருங்கிவிட்டிருந்தாள். 

 ‘சிம்மா தாத்தா! சேவ் மீ… அம்மாவுக்கு மட்டும்தான் ஹெல்ப் பண்ணுவீங்களா? எனக்கு பண்ண மாட்டீங்களா?’ நம்முடைய எல்லா யுக்தியும் செயல்பாடமல் போகும் போது நமக்கு மீறிய ஒரு அப்பாற்ப்பட்ட சக்தியைப் பற்றி நம் மனம் யோசிக்கும். அவளும் அதேதான் செய்தாள்.

அத்தகைய சக்தி நம்மைக் காக்கவும் செய்யும். பிரச்சனையில் சிக்க வைக்கவும் செய்யும். அந்த சக்தி விக்ரமை பிரச்சனையில் சிக்க வைத்திருந்தது. 

நடராஜர் சிலையை அந்த அறைக்கதவின் கண்ணாடி உடைந்த துவாரத்தின் வழியாகப் பார்த்த போது அவனை ஏதோ ஒரு சக்தி கட்டிப்போட்டது போன்ற உணர்வு. இருக்கும் இடம், நிலை எல்லாம் மறந்து அவன் சிந்தனை செயல் எல்லாம் ஒரு புள்ளிக்குள் சங்கமித்தது. புள்ளியாய் தெரிந்த அந்த சிலை வடிவத்திற்குள்!

விக்ரம் அப்படியே அந்த நடராஜர் சிலையைப் பார்த்தபடி நிற்க, அமிர்தாவோ அந்த நொடி அவனைப் பின்னிருந்து கட்டிக்கொண்டாள். 

அவள் தொடுகையில் நெருப்பைத் தொட்ட பிள்ளை போல தன்னிலை உணர்ந்து அவன் அவளை விலக்கித் தள்ளி,

 “ஏன் இப்படியெல்லாம் நடந்துக்குறீங்க அமிர்தா… ஆர் யு மேட் ஆர் வாட்?” என்றவன் கோபம் பொங்கக் கேட்க, “எஸ் ஐம் மேட்… ஐம் மேட் ஆன் யு” என்றவள் அவன் கழுத்தை மீண்டும் இறுகக் கட்டிக்கொண்டாள்.

அந்த நொடி வெறுப்பின் உச்சத்தைத் தொட்டிருந்தான். அவள் முகத்தை ஆழ்ந்து பார்த்தான். அவன் மீது அளவுக்கடந்த ஈர்ப்பில் இருந்தாள் என்று ஓரளவு புரிந்தது. 

ஏன் எதற்கு என்றெல்லாம் தெரியமல் அவளுக்கு எப்படி தன் மீது இந்தளவுக்கு ஈர்ப்பு வந்தது என்றுதான் அவனுக்குப் பிடிப்படவில்லை. அவளிடம் கோபமாய் பேசினால் பாதிப்பு நமக்குத்தான் என்ற எண்ணியவன் நிதானமான மனநிலையோடு,

அவளை மீண்டும் விலக்கி நிறுத்தி, “இதைப் பத்தி நம்ம பேசி முடிவெடுப்போம்” என்று சொல்லி, அங்கிருந்த இருக்கையில் அமரச் சொல்லி அவளிடம் கை காண்பிக்க, “என்னை கவ்வின்ஸ் பண்ண பார்க்காதீங்க… யு கான்ட்” என்றாள்.

அவனுக்குத் தலையில் அடித்துக் கொள்ளலாமா என்று இருந்தது.

“அதெல்லாம் இல்ல… நீங்க உட்காருங்க முதல்ல… பேசுவோம்” என்றான்.

“அப்படின்னா… என்னை நீங்க வாங்கன்னு மரியாதையா  பேசாதீங்க… எனக்குப் பிடிக்கல” 

“சரி” என்று அவன் வேண்டா வெறுப்பாய் தலையசைக்க அவள் அமர்ந்து கொண்டாள்.

அவள் எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தவன், “இத பாருங்க அமிர்தா” என்று ஆரம்பிக்க அவள் கோபமாய் முறைத்தாள்.

“ஓகே ஓகே… இத பாரு அமிர்தா” என்று தன் பேசும் தோரணையை மாற்றி, “நான் என்ன சொல்ல வரேன்னா… உன் லெவல் வேற… என் லெவல் வேற… இப்போ நீ பேசறது மட்டும் மாதாஜி க்கு தெரிஞ்சுது” என்று அவன் அந்த வார்த்தையில் அதிக அழுத்தம் கொடுக்க,

“தெரியாம் இருக்குமா ஆதி… தெரியும்” என்று சுலபமாய் சொல்லிவிட்டாள். அவன் அதிர்ந்து பார்க்க அவள் மேலும், “இதைப் பத்தி கேட்டாங்க… நான் சொன்னனே” என்றவள் சொல்லவும் இடைநிறுத்தி,

“என்னன்னு சொன்ன?” என்று கேட்டான்.

“ஐம் இன் லவ் வித் ஆதி” என்றாள். அவனுக்கு உள்ளுக்குள் ஜெர்காக அவள் சிரித்த முகத்தோடு, “பெருசா ஒன்னும் ரியாக்ட் பண்ணிக்கல… ஆதி  மேரிட்…  நீ யோசிச்சுக்கோன்னு சொன்னாங்க… நான் டிசைட் பண்ணிட்டேன்னு சொன்னேன்” என்றாள்.

இதற்கு மேல் அதிர்ச்சியை தாங்குமளவுக்காய் அவன் இதயத்திற்கு சக்தி இல்லை என்ற நிலையில் அவன் அமர்ந்திருக்க, “மாம் எதுவும் சொல்லலைன்னா என்ன அர்த்தம்?” என்றவள் அவனிடம் கேள்வியாய் நிறுத்தினாள்.

‘ஹ்ம்ம்… எனக்கு சைலண்டா  சமாதி கட்ட போறாங்கன்னு அர்த்தம்’ என்று வாய்க்குள் அவன் முனக அவளோ, “அவங்களுக்கு சம்மதம்னு அர்த்தம்” என்று பதில் கூறினாள்.

“அமிர்தா…” என்றவன் பேச ஆரம்பிக்க, “ப்ளீஸ் அகைன் கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொல்லாதீங்க ஆதி… அந்த தமிழச்சி உங்களுக்குப் பொருத்தமே இல்லாதவ… அதுவும் இல்லாம அவ நேத்து பத்திரிக்கைகாரங்க கிட்ட சொன்னதை வைச்சுதான் நான் உங்ககிட்ட இன்னைக்கு இதைப் பத்தி பேசணும்னே முடிவு பண்ணேன்” என்றாள்.

‘தமிழச்சி! உன்னால நான் எவ்வளவு பெரிய சிக்கலில் மாட்டிக்கிட்டேன் பாரு’ என்றவன் மைன்ட் வாய்சில் தன் மனைவியைத் திட்டித் தீர்க்க அமிர்தா அந்த நொடி தன் இருக்கையில் இருந்து எழுந்து அவன் இருக்கையின் கைபிடியில் வந்து அமர்ந்து கொள்ள, ‘ஐயோ! இவ என்ன இப்படி பண்றா’ என்று தவிப்புகுள்ளாகி அவன் எழுந்து கொள்ள பார்க்க அவள் அவனை விடாமல்,

“இருங்க ஆதி! நான் சொல்றதைக் கேளுங்க… அம்மா கூடிய சீக்கிரம் என்னை அவங்க அரசியல் வாரிசா அறிவிக்கப் போறாங்க” என்றாள்.

 ‘நம்ம நாட்டோட எதிர்காலம் என் எதிர்காலத்தை விட மோசமா இருக்கும் போலயே’ என்று எண்ணிக்கொண்டே பரிதாபமாய் அவளை அவன் பார்க்க, “எனக்கு அதுல எல்லாம் இண்டரஸ்ட் இல்ல…  ஆனா நீங்க நினைச்சா அந்த இடத்துக்கு வரலாம்… வருங்கால பி.எம் ஆக கூட” என்ற போது முன்பு சுற்றியதை விட உலகம் இப்போது அதிவேகமாய் சுழல ஆரம்பிக்கிறது ஆதி என்கிற விக்ரமிற்கு. 

வார்த்தைக்காக தன் நண்பனிடம் பிரதமர் அது இது என்று அவன் சாவல் விட்டிருக்கலாம். ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு அவனைத் தேடி வரும் என்றெல்லாம் அவன் கனவிலும் நினைத்தது இல்லை. 

 நாம் எதிர்பாராத ஒன்றை எதிர்பாராத நேரத்தில் கொடுப்பதே கடவுளின் லீலை. எல்லோருமே அவனின் சூட்சும வளையத்திற்குள்தான்…

 

error: Content is protected !!