imk-26

imk-26

27(௨௭)

பாச போராட்டம்

(பின்குறிப்பு: கடந்த ஆறு பதிவுகளும் ஒரே நாளில் ஒரு சில மணிநேர இடைவெளியில் நடந்தது. ஆதலாலேயே எல்லா காட்சிகளையும் மாறி மாறி காட்டியிருப்பேன். அதாவது தமிழச்சி இவானுடன்  கோவிலுக்கு சென்றது, விக்ரம் டில்லியில் அமிர்த்தாவை சந்தித்தது, செந்தமிழ் விழித்து கொண்ட பின்னர் மகனிடம்  கிரீடத்தை பற்றி பேசியது… ஆனால் இதில் குழப்பம் எங்கே பிறந்தது என்று புரியவில்லை. வாசகர்களின் கருத்து பகிர்வில் இதெல்லாம் வெவ்வேறு நாளில் நடந்தது போல் சொன்னதற்கு விளக்கம் கொடுக்கவே இந்த குறிப்பு. புத்தகமாக வெளியிடும் போது இந்த பதிவுகளுக்கு மட்டும் நேரம் போடலாம் என்று முடிவெடுத்துள்ளேன்)

நான்கு நாட்கள் அசாதாரணமாய் கடந்து சென்றது.

அன்று மதியழகி தன் பிம்பத்தை கண்ணாடியில் எத்தனையாவது முறையாக பார்த்தாலோ? அது அவளுக்கே தெரியாது. அவள் பார்க்க அழகு ஓவியம்தான் எனினும் ஏனோ அவளுக்கு அது போதவில்லை.

விடிந்ததிலிருந்து கண்ணாடியே கெதியாக கிடக்கிறாள். அதுவும் அவளது விடியல் நடுநிசியிலேயே தொடங்கிவிட்டது. சிம்மா வர போகிறான் என்ற தகவலை அறிந்ததில் இருந்து அவள் கால்கள் தரையில் நிற்கவில்லை. அவனையன்றி அவள் எண்ணத்தில் வேறு எதுவும் ஓடவுமில்லை.

ஏன்?… அவள் இந்த பூலோகத்தில்தான் இருக்கிறாளா என்பது கூட சந்தேகம்தான். அவள் நினைவு முழுக்க அவன் மட்டுமே பிரதானமாய்!

வெகுநாட்களுக்கு பிறகு தன் மனம் கவர்ந்தவனை பார்க்க போகிறோம் என்ற பரபரப்பு. அது அப்பட்டமாய் அவள் செயல்களிலும் முகத்திலும் பிரதிபலித்தது. அவனுக்காக வேண்டி பார்த்து பார்த்து உடையணிந்து கொண்டு கொஞ்சம் இயல்பைவிட அதிகமாய் ஒப்பனை செய்து கொண்ட போதும், ஏனோ அவளுக்கு  திருப்தி ஏற்படவில்லை.

மகள் செய்து கொண்டிருக்கும் அளப்பரைகளை ஒரு ஓரமாய் கண்டுகளித்துவிட்டு  ரவி முகப்பறைக்கு சென்று நின்றவர்தான். மருமகன் எப்போது வருவான் என்ற காத்திருப்பில் அவரும் தவிப்பில் கிடக்க,

“சிம்மா இன்னும் வரலையா?” என்று கேட்டு கொண்டே மகேந்திரபூபதி அங்கே வந்து நின்றார்.

“வந்திருவான் மாமா… ஃப்ளைட் அஞ்சு மணிக்கே லேன்ட் ஆகியிருக்கும்… அனேகமா பக்கத்தில வந்திருப்பான்” என்று ரவி சொல்ல,

“ஃபோன் பண்ணி பாரு ரவி” என்று பேரனை பார்க்கும் ஆர்வத்தில் கேட்டார்.

“ட்ரை பண்ணேன்… லைன் போகல… ம்ப்ச்… நானே ஏர்போர்ட் வர்றேன்னு சொன்னேன்… வேணாம்ட்டான்” என்று தன் தவிப்பை ஆதங்கமாய் கொட்டி கொண்டிருந்தார் ரவி.

இவர்களின் உரையாடல் இப்படி நடந்து கொண்டிருக்கும் போதே வாசலில் கார் நுழையும் சத்தம் கேட், ரவி அவசரம் அவசரமாய் வெளிவாயிலுக்கு சென்றார். அந்தளவுக்காய் பேரனை பார்க்கும் வேகம் மனதிற்குள் இருந்தாலும் மகேந்திரபூபதியால் ஓட முடியவில்லை. பேரன் வருவான் என்று நின்ற இடத்திலேயே நின்றபடி ஆவல் ததும்ப காத்திருந்தார்.

காரிலிருந்து இறங்கி வந்த சிம்மா தனியாக வரவில்லை. உடன் ஜெஸ்சியும் வந்திருந்தாள். ரவி அவர்கள் இருவரையும் ஒன்றாய் பார்த்த நொடி தயங்கி நின்றுவிட்டார்.

“மாமா!” என்று சிம்மா ரவியை பார்த்து அழைத்து கொண்டே அருகில் வந்து அணைத்து கொள், அவர் தன் எண்ணங்களை  மறைத்து கொண்டு மருமகனை அன்போடு கட்டி கொண்டார்.

ஆனால் ஜெஸ்சியை மட்டும் அவர் விழிகள் கேள்வியாய் பார்த்தது. இருப்பினும் அது குறித்து எதுவும் வினவாமல் வேலையாட்களை அழைத்து அவர்கள் பெட்டியை உள்ளே எடுத்து போக உரைத்தார்.

சிம்மாவிற்கோ எப்போது தன் அம்மாவை பார்ப்போம் என்ற தவிப்பு. ஆதலால் தன் மாமாவிடம் சொல்லிவிட்டு வேகமாய் வீட்டிற்குள் ஜெஸிக்காவை உள்ளே அழைத்து சென்றான்.

அப்போது மகேந்திரபூபதி, “சொல்லாம கொள்ளாம இத்தனை நாளா எங்கடா போன?” என்று கோபம் பொங்க கேட்டாலும் அதில் பேரன் மீதான பாசமே அதீதமாய் இருந்தது.

“தப்புதான் தாத்தா… இனிமே இப்படி செய்ய மாட்டேன்… இந்த ஒரு தடவை மன்னிச்சிடுங்க” என்று கெஞ்சலாய் அவன் சொன்ன ஒரு சில வார்த்தைகளில் தன் தாத்தாவின் கோபத்தை இல்லாமல் செய்தான்.

ஜெஸ்ஸிகாவும் தன் பங்குக்கு, “எப்படி இருக்கீங்க தாத்தா?” என்று அக்கறையாய்  மகேந்தரனின் நலம் குறித்து விசாரிக்க, அவள் பேசிய கொஞ்சும் தமிழில் அவர் முகம் மலர்ந்தது. அதேநேரம் அவளை எங்கோ எப்போதோ பார்த்த நினைவு மட்டுமே இருந்ததே ஒழிய ஆழமாய் அந்த சந்திப்பு பதியவில்லை.

அவர் அவளுக்கு பதிலுரைக்க அதன்பின் சிம்மா, “தாத்தா… நான் போய் அம்மாவை பார்த்துட்டு வந்திடுறேன்… அப்புறம் வந்து உங்ககிட்ட பேசுறேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே செல்ல, “ஆமா ஆமா… நானும் தாத்தா” என்று சொல்லி ஜெஸ்ஸிகாவும் அவனை பின்தொடர்ந்தாள்.

ரவி அப்போது மகேந்திரன் அருகில் வந்து, “யாரு அந்த வெள்ளைக்கார பொண்ணு?” என்று கேட்க,

“அது… அவன் ஃப்ரெண்ட்தான் போல… எப்பவோ வீட்டுக்கு வந்து பார்த்த மாறி” என்று அவர் நினைவுக்கு வந்தவரை அரைகுறையாக சொல்ல ரவிக்கு லேசாய் மனதில் குறுகுறுத்தது.

அதே சமயம் மதியழகியும் கார் வந்த ஓசையை கேட்டுவிட்டு மீண்டும் தன் அலங்காரங்களை சரி செய்து கொண்டு தன் அறையை விட்டு வெளியே வந்தாள்.

அப்போது சிம்மாவோ  தன் அம்மாவின் அறைக்குள் நுழைய வீர் அப்போதுதான் தன் மனைவிக்கு காலை உணவை கொடுத்து கொண்டிருந்தார்.

“போதும் வீர்” என்று செந்தமிழ் சொல்ல,

அவர் தன் மனைவியின் வார்த்தைகளை காதில் வாங்காமல் கட்டாயப்படுத்தி உணவை முழுவதுமாய் ஊட்டி முடித்து உதட்டை துடைத்துவிட்டு கொண்டிருந்த சமயம், “அம்மா” என்று உணர்வு பொங்க சிம்மா அழைத்து கொண்டு அறைக்குள் நுழைந்தான்.

அந்த குரலை கேட்டு செந்தமிழின் முகம் பிரகாசிக்க, வீர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. ஆனால் அந்த கோபத்தை இப்போதைக்கு காட்டுவது சரியில்லை என்று எண்ணியவர், “எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு” என்று மனைவியிடம் சூசகமாய் சொல்ல, “வீர்” என்று தன் மனைவியின் அழைப்பை கவனியாமல் அந்த அறையை விட்டு வெளியேறினார்.

வழியில் நின்ற மகனை அவர் விழி ஏறெடுத்தும் பார்க்கவில்லை. “அப்பா” என்ற அவன் அழைப்பை முடிப்பதற்கு முன்னதாகவே அவர் அறையை விட்டு வெளியேற வாசலில் நின்ற ஜெஸிக்கா, “அங்கிள்” என்று அழைக்கவும் அவர் அவளை மட்டும் திரும்பி நோக்கி நலம் விசாரித்தார்.

அவள் ஒருமுறை வீட்டிற்கு வந்தது வீரேந்திரனுக்கு நன்றாய் நினைவிருந்தது. ஆதலால் அவளிடம் மட்டும் பேசிவிட்டு அகன்றுவிட சிம்மாவின் விழிகளில் நீர் கோர்த்தது.

மகனின் வலியை அறிந்த தாயாக, “சிம்மா” என்று செந்தமிழ் குரல் கொடுக்க, “அம்மா” என்று சொல்லி சிம்மா தன் தாயிடம் சரண்புகுந்தான். அவன் கரங்கள் தன் தாயின் கரங்களை பற்றி கொண்டு கண்ணீரால் நனைத்தது.

“என்னை மன்னிச்சிடுங்க ம்மா… உங்களுக்கும் தங்கச்சிக்கும் இப்படி ஆகி இருக்கும் போது” என்று அவன் பேசும் போதே, “என் மகனை பத்தி எனக்கு தெரியாதா? தப்பு செஞ்சாதான் மன்னிப்பு கேட்கணும்” என்று தீர்க்கமாய் சொல்லி  அவன் விழியில் வழிந்த  நீரை துடைத்துவிட்டார்.

இந்த காட்சியை மௌனமாய் பார்த்து பூரித்து கொண்டிருந்தாள் ஜெஸ்ஸிகா. சில நிமிடங்கள் அம்மா மகனின் பாச போராட்டம் நடந்து முடிய சிம்மா இறுதியாய் தன் அம்மாவிடம், “நம்ம கிரீடத்தை தூக்கினாலும் அது நம்ம கைக்கே திரும்ப வந்திருச்சு…பார்த்தீங்களா ம்மா?” என்று பெருமிதமாய் சொல்ல,

செந்தமிழ் முகத்திலும் அதற்கு உண்டான சந்தோஷமும் நிம்மதியும் பிரதிபலித்தது.

இருந்தாலும் அவர் எச்சிரிக்கை உணர்வோடு, “ஆனாலும் நம்ம ஜாக்கிரதையா இருக்கணும்… அதுவும் உன் தங்கச்சியை நினைச்சா எனக்கு கவலையா இருக்கு… அவ இந்த விஷயத்தில் ரொம்பவும் தீவிரமா இறங்கிட்டா” என்றார்.

அவன் மனதிலும் அதே எண்ணம்தான். அவள் தைரியமானவள் எனினும் அவளுக்கு இதனால் எந்தவித ஆபத்தும் நேர்ந்துவிட கூடாது என்று கவலை அவனுக்கும் இருந்தது. இப்படியாக பேசி கொண்டிருக்கும் போது செந்தமிழ் ஜெஸ்ஸிகாவின் வருகை குறித்து விசாரிக்க,

“நான் ரொம்ப நல்லா இருக்கேன் ஆன்ட்டி… உங்களுக்கு இப்படியானது பத்தி சிம்மா சொல்லவும் உடனே உங்களை பார்க்கணும் சிம்மா கூட கிளம்பி வந்துட்டேன்?” என்றாள்.

“ஆமா ம்மா… சொல்ல சொல்ல… கேட்கவே இல்லை… அம்மாவை பார்க்கணும்… நான் கூட வந்தே தீருவேன்னு ஒரே அடம்” என்றான்.

செந்தமிழ் முகம் மலர ஜெஸ்சியை தன்னருகில் அழைத்து உச்சிமுகர்ந்து தலையை தடவிவிட சிம்மா மேலும், “ஜெஸ்சி கூட நான் தங்கியிருந்த போது… அவ என்னை அவ்வளவு அக்கறையா பார்த்துக்கிட்டா… சான்சே இல்ல” என்று சொல்ல, அந்த சமயம் வாயிலில் தயங்கி நின்றிருந்த மதியழகியின் மனம் அந்த வார்த்தைகளை கேட்டு உடைந்து நொறுங்கியது.

சிம்மாவும் அதோடு நிறுத்தவில்லை. ஜெஸ்ஸியின் புகுழுரைகளை பக்கம் பக்கமாய் தன் தாயிடம் வாசிக்க தொடங்கியிருந்தான். அதுவும் அவளின் தமிழ் ஆர்வத்தை குறித்து அவன் பாராட்டி தள்ள, மதியழகியின் மனம் சுக்குநூறானது. அதற்கு மேல் அங்கே நிற்கவும் விருப்பமின்றி தன் அறைக்கு சென்றுவிட்டாள்.

சிம்மா யாரிடமும் அதிகம் நெருங்கி பழகாதவன் என்ற பட்சத்தில் ஏனோ அவனின் இந்த நட்பையும் அவனின் பாராட்டுரையையும் இயல்பாக அவளால் ஏற்கமுடியவில்லை. கண்ணீர் பெருகி அவள் ஒப்பனைகள் யாவும் கரைந்து வடிந்து போனது. முகத்தை மூடி கொண்டு அவள் பாட்டுக்கு அழுது கொண்டிருக்க, அப்போது கதவு தட்டும் ஓசை கேட்கவும் அவள் துணுக்குற்றாள்.

அவசரஅவசமாய் குளியலறை சென்று தன் முகத்தை நீர் கொண்டு கழுவிவிட்டு அவள் கதவை திறக்க, சிம்மாதான் நின்றிருந்தான். அவனை பார்த்ததும் ஒருவித பதட்டம் அவளை ஆட்கொள்ள என்ன பேசுவதென்று புரியாமல் மௌனியாக நின்றாள்.

“எப்படி இருக்க மதி?” என்று சிம்மா இயல்பாய் கேட்க, “ஆன் நல்ல இருக்கேன்… நீங்க… நீங்க எப்போ வந்தீங்க?” என்று அவன் வந்ததை கவனியாதவள் போல தட்டுதடுமாறி கேட்டாள்.

“வந்து கொஞ்ச நேரமாச்சு…அப்புறம்… அம்மா சொன்னாங்க… நீதான்  அவங்க பக்கத்திலேயே இருந்து பார்த்துக்கிட்டேனு… எனக்கு என்ன சொல்லறதுனே தெரியல…. ரொம்ப தேங்க்ஸ்” என்று அவன் உணர்வுபூர்வமாய் சொல்ல,

‘தேங்க்ஸ் சொல்ற அளவுக்கு நான் வேற ஆளா போயிட்டனா நான்?’ வாய்வழியாக சொல்லாமல் மனதிற்குள்ளேயே பொருமி கொண்டாள்.

சிம்மா அப்போது களையிழந்து காணப்பட்ட அவள் முகத்தை உற்று பார்த்து, “ஏன்? ஒரு மாறி டல்லா இருக்க மதி?” என்று கேட்கவும்,

“அதெல்லாம் இல்லயே” என்று அவள் சமாளித்தாலும் அவள் முகம் தன் தவிப்பையும் வேதனையெயும் அவனிடம் காட்டிவிட்டது.

அவளிடம் ஏதோ சரியில்லையே என்பதை கூர்ந்து கவனித்த சிம்மா மேலே அது பற்றி அவளிடம் கேட்காமல், “என் கூட என் ஃப்ரண்டும் வந்திருக்காங்க” என்று உரைத்து, “ஜெஸ்சி” என்று அழைக்க, மதியழகிக்கு கோபம் ஏகபோகமாய் ஏறியது.

இருந்தும் அதனை காட்டி கொள்ள முடியாத நிலையில் அவள் நின்றிருக்க,  ஜெஸ்சி சிம்மாவின் அழைப்பை கேட்டு அவன் அருகில் வந்து நின்றாள்.

“மதியழகி… என்னோட அங்கிள் டாட்டர்… வெளியே பார்த்தோமே?” என்று சிம்மா ஜெஸ்சியிடம் மதியை காட்டி அறிமுகம் செய்விக்க, “ஹாய் மதியழகி” என்று சொல்லி புன்னகை முகத்தோடு தன் கரங்களை நீட்டினாள் ஜெஸ்சி!

உள்ளுக்குள் எரிமலையே குமிறி கொண்டிருக்க அந்த உணர்வை காட்ட முடியாத தவிப்போடு கை குலுக்கிய மதியழகியிடம், “இவங்கதான் ஜெஸ்சி…” என்று அவன் சொல்ல ஆரம்பிக்கும் போதே,

“நான் இவங்களை எங்கயோ பார்த்திருக்கேன் சிம்மா” என்றாள் ஜெஸ்சி!

“அதுக்கெல்லாம் சான்சே இல்லயே” என்று சிம்மா எதார்த்தமாக சொல்ல, “நோ… நோ… ஐ சீன் ஹெர்… தி சேம் ஃபேஸ்” என்று ஆழ்ந்த யோசனைக்குள் போக சிம்மாவை பதட்டம் தொற்றி கொண்டது. அவள் ஒருவேளை அந்த சிலை ஓவியத்தை வைத்து சொல்கிறாளோ?

அந்த சிந்தனையோடு சிம்மா தவிப்பாய் மதியை பார்க்க ஜெஸ்சி நினைவு வந்தவளாய், “யா யா… ஐ காட் இட்… அந்த ஸ்டேச்யு பெய்டிங்” என்றதும் அவன் பதறி போனான்.

சிம்மா உடனடியாய் ஜெஸ்ஸியின் கரத்தை பற்றி தரதரவென அங்கிருந்து இழுத்து கொண்டு சென்றுவிட்டான். எங்கே அவள் தான் வரைந்த ஓவியத்தை பற்றி மதியிடம் சொல்லிவிட போகிறாளோ என்று!

அவர்களின் செயல்களின் பின்புலம் அறியாத மதியழகிக்கு உள்ளுர கொதித்து போனது. இனி தான் இங்கே இருக்கவே கூடாது என்ற முடிவோடு அவள் தன் பெட்டியை எடுத்து துணிமணிகளை அடுக்கினாள்.

 

 

 

error: Content is protected !!