imk-final

(35)௩௫

இறுதிக்கட்டம்

நாடே ஸ்தம்பித்தது. தொலைக்காட்சிகள் எல்லாம் ஓயாமல் ஒரே செய்தியை அலறிக் கொண்டிருந்தன. ஒரு பெரும் கலவரத்தைத் தடுக்க நாடு முழுக்க உள்ள காவல் துறைப் பாதுகாப்புப் படைகள் மற்றும் ராணுவ வீரர்கள் எல்லோரும் தயார் நிலையில் தங்கள் கடமைகளை ஆற்ற காத்திருந்தனர். பதட்டமான பகுதிகளில் காவல் துறையும் ராணுவ வீரர்களும் அதிகமாகக் குவிக்கப்பட்டனர்.

இன்னொரு புறம் இந்த செய்தியை கேட்ட எஸ்.பி கட்சித் தொண்டர்கள் கொந்தளிப்பில் இருந்தனர். தேர்தல் நேரத்தில் யாரும் அப்படி ஒரு விபரீதம் நடக்குமென்று எதிர்பார்க்கவில்லை. கிட்டதட்ட இருபது வருடங்களுக்கு முன்னதாக ராய் குடும்பத்தில் இதே போல ஒரு கொடூர விபத்து அரங்கேறியது. ஆனால் அது திட்டமிட்டு அரங்கற்றப்பட்டது என்று இன்றுவரை யாருக்குமே தெரியாது.

சிம்மாவின் மனம் யாருக்கும் எந்தவித ஆபத்தும் வந்துவிடக் கூடாதே என்ற எண்ணத்தை வேண்டுதலாய் அந்த நடராஜனிடம் வைத்துக் கொண்டிருந்த அதே நேரம், விக்ரம் ஒரு அரசியல்வாதியாக செயல்படத் தொடங்கினான்.

அவனின் பேசியில் உள்ள முகநூல் மற்றும் வாட்ஸ் அப் குழுவில் அவர்கள் கட்சியின் தொண்டர்கள் தலைவர்கள் என்று எல்லோரும் இருந்தனர். முகநூலில் ஒரு லைவ் வீடியோவை பதிப்பித்தான்.

“மாதாஜிக்கு இப்படி நடந்தது உண்மையிலேயே ரொம்ப வேதனையா இருக்கு. ஆனா இதுக்காக கலவரத்தை ஏற்படுத்துறது பொது சொத்திற்கோ அல்லது அப்பாவி மக்களுக்கோ தீங்கு விளைவிக்கும்  கேவலமான காரியத்தை ஒரு நல்ல எஸ்.பி கட்சித் தொண்டன் செய்ய மாட்டான்.

அதையும் மீறி யாராச்சும் கலவரத்தை ஏற்படுத்தினா அவங்க எஸ்.பி கட்சி அடிப்படை உறுப்பினர் பதிவியில் இருந்து நீக்கப்படுவாங்க…  அவர்களுக்கு எஸ்.பி கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிடும் உரிமையும் நீக்கப்படும்.

இதை  தமிழக எஸ்.பி கட்சியின் தலைவர் மனோகர் ஐயா அறிவிக்க சொன்னார். மாதாஜி இறப்பு செய்தியைக் கேட்டதுல ஐயாவோட பிபி வேற ஏறிடுச்சு… அதனால்தான் அவர் சார்பாக எஸ். பி கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளரா நான் உங்ககிட்ட பேசுறேன்…  நான் திரும்பவும் சொல்றேன்…

நடந்த விபத்திற்கு எந்த விதத்திலும் மக்கள் பொறுப்பில்லை… அவங்களுக்கு ஆபத்து விளைவிக்கிறவன் எவனும் மாதாஜிக்கும் எஸ்.பி கட்சிக்கும் ஒரு உண்மையான தொண்டனா இருக்க முடியாது. அப்படி யாரவது ரவுடியிஸம் பண்ணா மக்கள் உடனே அவங்களை செல்போனில் வீடியோ எடுத்து இந்த நம்பருக்கு அனுப்புங்க” என்று சொல்லி ஒரு அலைபேசி எண்ணை வேறு தந்தான்.

அதோடு அவன் ஆங்கிலம் ஹிந்தியிலும் பேசி போஸ்ட் செய்து அதை அனைத்து சமூக வலைதளங்களிலும் பரப்பிவிட்டான். அவனால் முடிந்ததை செய்துவிட்டான். இனி எல்லாம் விதிப்படி என்று அவன் எண்ணிக் கொள்ள, அவனின் அந்த இரண்டு நிமிட வீடியோ வெகு சில நிமிடங்களில் பல லைக்ஸ் ஷேர்ஸ்கள் என்று மக்களிடம்  வைரலாக பரவிய அதே நேரம் தொலைகாட்சியிலும் ஒளிபரப்பானது.

இதைப் பார்த்த மனோகரன் கொதித்துப் போனார். “எனக்கு எப்படா பிபி ஏறுச்சு… இவன் என்னடா உளறிட்டு இருக்கான்” என்று சொல்ல,

“ஆமா ண்ணா… சும்மாவே நம்ம மக்கள் விடமாட்டாங்க… இதுல வீடியோ வேற எடுக்க சொல்லி ஐடியா குடுக்குறான்… அடிப்படை உறுப்பினர் பதவில இருந்து வேற தூக்கிடுவேன்… அப்படி இப்படின்னு உங்க பேரை வேற சொல்லி மிரட்டுறான் … இப்ப இன்னா பண்றதுன்னு… ஒன்னும் புரியல” என்று சொல்ல,

“இனிமே ஒன்னும் பண்ண முடியாது… பண்ணவும் கூடாது… அப்புறம் எல்லாம் தப்பாயிடும்… என் பேரை வேற இழுத்து விட்டிருக்கான்… அதனால இப்போதைக்கு கம்முன்னு இருங்க… எல்லா மாவட்டத்திலயும் கப்சிப்புன்னு இருக்க சொல்லுங்க” என்று மனோகரன் உரைக்க அதுபடியே அவருடன் இருந்த அடியாட்களும் தகவல்களை தமிழ்நாடு முழுக்கப் பரப்பினர்.

எதிர்கட்சிகளும் கூட விக்ரமின் பேச்சில் அதிசயித்துவிட்டனர். “யாருடா இவன்?” என்று கேட்குமளவுக்கு!

நாடு முழுக்க விக்ரமின் பேச்சு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோ தெரியாது. ஆனால் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இப்படியாக எல்லோரும் தங்கள் தங்கள் வழிகளில் இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்கப் போராடிக் கொண்டிருந்தனர்.

ஆனால் சைதன்யாவோ சந்தோஷக் களிப்பில் இருந்தார். அவர் எதிர்பார்த்தது இந்நேரம் நடந்தேறி இருக்கும். தன் மகனை மருமகனாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொன்ன அன்றே சம்யுக்தாவிற்கு கட்டம்கட்டத் தொடங்கியிருந்தார். அதுவும் விக்ரமை அமிர்தா திருமணம் செய்து கொள்ளப் போவதாக பரவிய தகவல் அவரை வெறிகொள்ள செய்தது.

இனி சம்யுக்தா இருந்தால் தான் நினைத்ததை நடத்த முடியாது என்ற முடிவுக்கு வந்தவர் அதற்கான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்த தயார் நிலையில் வைத்துவிட்டு தான் டில்லிக்கே வந்து இறங்கினார். அதுவும் முக்கியமாக அந்த சிலையைப் பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணமே பிரதானமாய் இருந்தது.

சம்யுக்தா திருமணத்திற்கும் சம்மதிக்காமல் சிலையும் தரமாட்டேன் என்று சொன்ன மறுகணம் அவரின் பொறுமை தகர்ந்து போனது. உள்ளுக்குள் கோபம் எரிமலையாய் வெடித்தது.

இங்கேதான்  சம்யுக்தா பெரிய தவறை இழைத்துவிட்டார். அவர் கூடவே இருந்த சைதன்யாவின் வஞ்சக புத்தியைப் புரிந்துக் கொள்ளவில்லை. சைதன்யா சம்யுக்தாவை சுற்றிலும் உள்ள ஐ ஏ எஸ், ஐ பி எஸ் அதிகாரிகள் தொடங்கி அவரின் பிரத்யேக பாதுகாப்புப் படையான எஸ்.பி.ஜி ஆட்கள் வரை தனக்கான விசுவாசிகளையே பணியமர்த்தி வைத்திருந்தார்.

துரோகிகளை சுற்றித் துரோகிகள் தானே இருக்க முடியும். ஒரு தீயவனின் ஆட்சியில் லஞ்சவாதியும் ஊழல் செய்பவனும் தான் உயர் பதவி வகிக்க முடியும். அதுதான் அவர்கள் விதைத்த வினைகள். இப்படியிருக்க சம்யுக்தா சைதன்யாவின் குரூர திட்டத்தை உணராமல் அந்த நடராஜர் சிலையை எடுத்துக் கொண்டு பிரான்ஸ் போக முடிவெடுத்தார்.

இதை சைதன்யா தம் உளவாளிகள் மூலமாக அறிந்து கொண்டார். அவரின் இந்த முடிவு அவர் ஏற்கனவே போட்டு வைத்திருந்த திட்டத்திற்கு ஏதுவாக இருந்தது. அந்த நடராஜர் சிலையை விமானத்தில் ஏற்ற பேக் செய்த சம்யுக்தாவின் தனிப்பட்ட ஊழியனோ சைதன்யாவின் விசுவாசி.

அவன் அந்த சிலையை அங்கிருந்த அவனுடைய ஆட்கள் மூலமாக வெளியேற்றிவிட்டு உள்ளே அதே அளவுக்கு கணம் கொண்ட பொருளை வைத்து அதனோடு பிளாஸ்டிக் எக்ஸ்ப்லோஸிவ் வகையை சேர்ந்த மிகவும் சக்தி வாய்ந்த பி.இ.டி.என் (PETN) என்ற வெடிகுண்டை உள்ளே வைத்தான்.

PETN பிளாஸ்டிக் என்பதால் மெட்டல் டிடெக்டர்சையும் செக்யூரிட்டி செக் பாயிண்ட்சையும் சுலபமாக கடந்து வந்துவிட முடியுமென்பதுதான்  அதன் வடிவமைப்பின் சிறப்பு. ஏன்? எக்ஸ் ரே இயந்திரங்கள் கூட அவற்றை கண்டுபிடிக்க முடியாது. அவற்றில் அழுத்தமான மூலக்கூறுகள் இருப்பதால் பயற்சி தரப்பட்ட காவல் நாய்கள் கூட அந்த வகையான வெடிகுண்டை மோப்பம் பிடித்துக் கண்டறிவது அசாத்தியம்தான்.

ஆனால் இந்தளவுக்கான சிரமமே தேவையில்லை. சம்யுக்தாவின் பெட்டி என்பதால் அது அத்தகைய செக்யூரிட்டி செக்குகள் இல்லாமலே உள்ளே சென்றுவிடும். இதற்குப் பெயர்தான் விதி என்பது. அவனவன் தலையெழுத்தை அவனவனே எழுதிக் கொள்கிறான்.

இது ஒருபுறம் எனில் சைதன்யாவின் மற்றொரு திட்டம் அந்த சிலையைக் கைப்பற்றுவது. டில்லியில் இருந்து அந்த சிலையை சாலை மார்க்கமாக மும்பை கொண்டுவந்து அவனுடைய ஆட்கள் மூலமாக அங்கிருந்து கப்பல் வழியாக நியூயார்க் எடுத்து செல்வது.

‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை’ என்று  கவியரசர் கண்ணதாசன் அன்றே பாடிவிட்டார். நடராஜர் சிலையைக் கடத்தும் சைதன்யாவின் திட்டம் விக்ரம், சிம்மாவின் புத்தி சாதுரியத்தால் முறியடிக்கப்பட்ட அதேநேரம் சம்யுக்தாவைக் கொல்லும் திட்டமும் முறியடிக்கப்பட்டது.

நாம் மட்டும் நினைத்தால் போதுமா? அந்த ஆடலரசன் நினைக்க வேண்டாமா? அவர் திட்டமே வேறாக இருந்தது. கடைசி நேரத்தில்தான் சைதன்யா கைது ஆகப் போகும் தகவல் சம்யுக்தாவின் காதுக்கு எட்டியது

அவர் போக இருந்த பயணத்தைத் தனக்குப் பதிலாக அமிர்தாவை அனுப்பி வைத்தார். அமிர்தா முதலில் முடியாது என்று மறுத்தாலும் பின் தன் அம்மாவின் வார்த்தைக்கு மறுப்பு கூற முடியாமல் புறப்பட, அவள் சென்ற அந்த விமானம் வானில் உயர எழும்பிய சில நொடிகளிலேயே வெடித்து சிதறியது.

அதேநேரம் சம்யுக்தா அவரின் பூர்வீக பங்களாவில் இருந்தார். சிலைக் கடத்தல் குறித்த ரகசியமான ஆவணங்கள் மற்றும் அவருக்கு சொந்தமான பிரான்ஸ் அருங்காட்சியகம் பற்றிய முக்கிய ஆதாரங்களையும் அங்கேதான் ஒரு ரகசிய அறையில் வைத்திருந்தார். அதனை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என்ற முடிவில் அவர் அங்கே வந்திருந்தார். ஒரு சில பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் தன் காரியதரிசி தவிர வேறு யாரையும் உடன் அழைத்து வரவில்லை.

அவர் இருந்த ரகசிய அறைக்குள் யாருக்கும் அனுமதி இல்லை. அவர் இங்கே இருப்பது யாருக்கும் தெரியக் கூடாதென்று தன் பேசியைக் கூட சில நிமிடங்கள் உபயோகிக்காமல் விட்டார். அந்த சமயத்தில்தான் அமிர்தா சென்ற விமானம் வெடித்தது. சரியாக விஷயம் தெரியாத பலர் அமிர்தா சென்ற விமானத்தில் சம்யுக்தாதான் சென்றார் என்ற செய்தியைப் பரப்பிவிட, ஊடகங்கள் காட்டுத் தீயாய் அந்தத் தகவலை நாடு முழுக்கவும் பரப்பியது.

தன் வேலைகளை முடித்து வெளிவந்த சம்யுக்தாவிற்கு தன் மகளின் மரணம் குறித்த விஷயம் அப்போதே தெரிந்தது. பூமியே வெடித்து சிதறி அவரை உள்ளிழுத்துக் கொண்டது போன்ற பிரமை. இடிந்து போனவருக்கு உடல், மூளை என்று எல்லாவித பாகங்களும் தம் இயக்கங்களை நிறுத்திவிட்டது போலிருந்தது. தன் ஆருயிர் மகளுக்கு இப்படி ஒரு கொடூரமான மரணம் நிகழும் என்று அவர் கனவிலும் எண்ணியதில்லை.

இவர் இப்படி அதிர்ச்சியில் உறைந்திருக்க மற்றொரு புறம் சம்யுக்தாவின் காரியதரிசி பரவிக் கொண்டிருந்த தகவல் பொய்யானது என்று ஊடகங்களுக்குப் புரிய வைக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தார். மீடியாக்கள் அவசர அவசரமாய் ஒரு தகவலைப் பரவ செய்துவிட்டார்கள். அதுவுமில்லாமல் இப்போது சம்யுக்தா எங்கே என்ற கேள்வி வேறு எழும். பொய் சுலபமாய் சென்றுவிடுவது போல் உண்மைகள் ஆதாரங்கள் இன்றி நம்பப்படுவதில்லை.

ஊடகங்கள் தாங்கள் சொன்ன தகவல் பொய்யென்று பின்வாங்குவது அவர்களுக்கே சிரமம். அதை மீண்டும் பின்வாங்க பலமான ஆதாரத்தைக் காட்ட வேண்டும். அதற்கு சம்யுக்தா மக்களிடம் பேச வேண்டும். அவரோ தன் மகளுக்கு நேர்ந்த கெதியை நம்ப முடியாமல் உலகமே இருண்ட நிலையில் தன் எதிர்காலத்தையே தொலைத்துவிட்டு அமர்ந்திருந்தார்.

அப்போது அவரின் காரியதரிசி பேசிய எதுவும் அவர் செவியை எட்டவில்லை.

“மேடம்… லைன்ல பிரசிடென்ட்” என்று அவர் அழுத்தி சொன்ன போதே சம்யுக்தா சுயநினைவுக்கு வந்து பேசியைக் காதில் வாங்கி வைக்க,

“உங்க கஷ்டமும் வேதனையும் எனக்கு புரியுது சம்யுக்தா… ஆனா வேறு வழியில்லை… நீங்க உடனே ஒரு லைவ் வீடியோ பேசணும். மீடியாக்கள் நீங்களே இறந்து போனதா ஒரு தவறான வதந்தியை பரப்பிட்டாங்க… இறந்து போனது நீங்க இல்லை… உங்க மகள்னு தெரியப்படுத்துங்க. நீங்க பேசுனாதான் மக்களுக்கு நம்பிக்கை வரும்… அமைதியாவங்க… இல்லைனா நாம் நினைச்சுப் பார்க்க முடியாதளவுக்கு பெரிய பெரிய விளைவுகள் உண்டாகும்…” என்று அவர் சொன்னதை மெளனமாகக் காதில் வாங்கிக் கொண்டார்.

“இப்ப நான் இருக்கிற மனநிலையில்” சம்யுக்தாவின் விழிகளில் கண்ணீர் தாரை தாரையாகப் பெருக,

“நீங்க ஒரு சாதரணமான பெண்மணி இல்ல… இந்த நாட்டோட பிரதமர்” என்ற வார்த்தை ஆயிரம் ஊசிகளால் அவர் தேகம் முழுக்க குத்தியது போல் இருந்தது. அந்தப் பதவிக்காக வேண்டிதானே இத்தனையும் செய்தார். ஆனால் அந்தப் பேராசை இன்று அவரை நிர்கதியாய் நிற்கவைத்துவிட்டது.

சம்யுக்தா தன் சோகங்களை எல்லாம் விழுங்கிக் கொண்டு குடியரசுத் தலைவர் வார்த்தைக்கு ஏற்ப மக்களிடத்தில் வீடியோ மூலமாகப் பேசினார். இரண்டு வார்த்தைகள் மேல் பேச முடியாமல் அவர் தடுமாற, அந்த வீடியோ ஊடகங்களில் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்பட்டு சம்யுக்தா உயிருடன்தான் இருக்கிறார் என்பதை புரியவைத்தது. ஒரு வழியாக சூழ்நிலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனால் நாடு முழுவதும் பதட்டம் நிலுவியது. மக்கள் வருத்தத்தில் மூழ்கினர்.

சிம்மாவின் வேண்டுதல் ஓரளவில் பலித்தது. நல்லவர்களைக் காப்பாற்றித் தீயவர்களை அழிக்கும் சக்தி என்பதை நடராஜன் நிருபித்துவிட்டான். நாட்டில் அந்தளவுக்காய் பேரபாயங்கள் ஒன்றும் நிகழவில்லை. அதேநேரம் தமிழச்சியின் அறிவுரைப்படி சிம்மாவும் விக்ரமும் அருகிலிருந்த காவல் நிலையத்தில் அந்த நடராஜர் சிலையை சேர்ப்பித்தனர்.

சைதன்யாவிற்கு நடந்த விஷயங்கள் தெரியவந்த போது அதிர்ச்சியோ அதிர்ச்சி. அவர் நினைத்தது எதுவுமே சரியாக நடக்கவில்லை.

அதேநேரம் சைதன்யாவைக் கைது செய்ய எதிர்கட்சிகள் போட்ட திட்டமும் நிர்மூலமானது.  மக்களுக்கு இப்போது சம்யுக்தா மீது பெரிய பரிதாப அலை உண்டாகியிருக்கும் சூழ்நிலையில் அவர் மீது எந்தக் குற்றத்தை சொன்னாலும் அது தங்களுக்கு எதிராகவே திரும்பிவிடும் என்று அமைதி காத்தனர்.

இப்படியான சூழ்நிலையில் சைதன்யாவும் ஒரு நாட்டின் பிரதமர் மேல் குற்றம் சாட்டி நிரூபிப்பது கடினம். அது அவருக்கே எதிர்வினையாகத்தான் முடியும். யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொண்ட கதைதான்.

தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தைப் பொய்யென்று நிரூபிக்கவே சைதன்யா முயன்று கொண்டிருந்தார். ஆனால் அந்த எண்ணத்தில்தான்  இவான் ஒரு பெரிய கல்லாய் தூக்கிப் போட்டான்.

நியூயார்க்கில் அவருடைய கேலரி மூடப்பட்டது. அவரின் சொத்துக்கள் முடக்கப்பட்டன. அதோடு சைதன்யா ‘உலகின் மிகப் பெரிய சிலைத் திருடன்’ என்று அறிவிக்கப்பட்டார். மற்ற நாடுகளிலும் உள்ள அவருடைய நெட்வொர்க் ஆட்களையும்  இவான் கைது செய்தான்.

சைதன்யா ரகசியமாக வைத்திருந்த சிலை குடோனில் இருந்த மற்ற நாட்டுத் தொல்லியல் பொருட்களோடு பல தமிழ்நாட்டின் சிலைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்திய சட்டத்திலிருந்து தப்பித்தாலும் இனி அவரின் கைவரிசை எங்கேயும் எடுபடாது.

சைதன்யாவின் முகத்திரையை எப். பி. ஐ உலக நாடுகள் முன்னிலையில் கிழித்தெறிந்தது. இவரிடம் சிலை வாங்கிய உலக நாடுகள் முழுக்க உள்ள கேலரிகள் மற்றும் பெரிய பணமுதலைகள் கத்திமுனையில் நின்று கொண்டிருந்தன. அவரிடம் பெரியளவிலான தொகை கொடுத்துப் பெற்ற பொக்கிஷங்களைத் திருப்பிக் கொடுக்க நேர்ந்தால் அதில் பெரியலவிளான நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்ற பயம்தான்.

அவர்களின் அச்சத்திற்கு ஏற்றார் போலவே சிம்மா திருடப்பட்ட சிலைகள் குறித்து இத்தனை நாளாக சேகரித்த தகவல்களை வைத்துப் பல நாட்டு அருங்காட்சியகங்களிலும் உள்ள பழமையான சிலைகள் தங்கள் நாட்டுக்கு சொந்தமானது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கத் தொடங்கினான்.

முதலில் இல்லையென்று மறுப்புத் தெரிவித்த  அந்த அருங்காட்சியகங்கள் பின் அவன் காட்டிய ஆதாரத்திற்கும் இந்திய அரசாங்கத்தின் நெருக்கடிக்கும் அடிபணிய நேரிட்டது. இப்படி ஒரு வருடத்தில் பல கோடிகள் மதிப்பிலான சிலைகள் தங்கள் தாய்தேசம் வந்தடைந்தன.

ஆனால் இந்த ஒரு வருடத்தில் பெரிய அரசியல் நிகழ்வுகளும் நடந்தேறின. அமிர்தாவின் மரணத்தில் மொத்தமாய் உடைந்து போனார் சம்யுக்தா. அதேநேரம் அந்த நடராஜர் சிலை மீட்கப்பட்ட தகவல் அவருக்குப் பேரதிர்ச்சி!

அந்த சிலையை நாட்டை விட்டு எடுத்து செல்லத்தான் இத்தனை களேபரங்களும். ஆனால் அந்த சிலை முழுதாய் எந்தவித பாதிப்பும் இன்றி இருந்தது. அங்கேதான் கடவுளின் சக்தி அவருக்குப் புரிந்தது. இறைவன் சிலைகளைக் கடத்திய தன் மோசமான பாவத்திற்கு  தனக்குக் கிடைத்த தண்டனை  இது என்பதை உணர்ந்து கொண்டார்.

அதேநேரம் விமான விபத்து சைதன்யாவின் வேலைதான் என்பது அவருக்குத் தெரியாமல் இல்லை.  ஆனால் இதை அவர் நிரூபிக்க முற்பட்டால் அவருக்கே ஆபத்தாக முடிந்துவிடும். ஏற்கனவே அவர் செய்த குற்றங்கள் யாவும் ஒன்றன் பின் ஒன்றாய் அம்பலமாகிவிடும்.

சம்யுக்தான் தன் உடன்  இருந்தே குழிபறித்த அதிகாரிகள் அனைவரையும் கண்டுபிடித்த போதுதான் தன் தமையனுக்கும் கணவனுக்கும் தான் இப்படிதான் நம்பவைத்துத் துரோகம் செய்தோம் என்ற குற்றவுணர்வு பிறந்தது.

செய்யும் பாவங்கள் என்பது பூமரேங் போல. அது தமக்கே திரும்ப வரும் என்பதைப் பலரும் மறந்து விடுகிறார்கள். இதற்கிடையில் இந்த அப்பாவி மக்கள் தேர்தலில் பரிதாபம் பார்த்து சம்யுக்தாவின் கட்சியைப் பெருவாரியான தொகுதிகளில் ஜெயிக்க வைத்தார்கள் எனில் மக்களின் அறியாமையை என்னவென்று சொல்வது.

சம்யுக்தாவிற்கு அந்தப் பதவியை ஏற்க மனமே இல்லை. நெருஞ்சி முள்ளாக செய்த பாவங்கள் உள்ளூர குத்திக் கொண்டிருந்தது. ஆனால் அரசியல் என்பது புலிவாலைப் பிடித்த கதை. அதை விட்டால் அது நம்மையே அடித்து கொன்றுவிடும்.

எஸ்.பி கட்சிக்கு அவர் தேவை இருந்தது. அவர் சாகும்வரை அந்தக் கூட்டம் அவரை விடாது. வேறு வழியில்லாமல் சம்யுக்தாவே பிரதமராகப் பதவியேற்றார். அந்தப் பதவியே அவருக்கு தண்டனை. பழைய நிமிர்வும் கம்பீரமும் எங்கோ தொலைந்து போனது சம்யுக்தாவிடம். மகளின் இழப்பு அவரை பெரிதும் பாதித்திருந்தது. சிலருக்கு மரணம் தண்டனை. அவருக்கு இன்று வாழ்வதே பெரும் தண்டனை. பிரான்சில் உள்ள தன் அருங்காட்சியகத்தை சம்யுக்தா மூடிவிட்டார். அந்த சிலைகள் யாவும் இந்தியா வந்து சேர்வதற்கு மறைமுகமான ஏற்பாடுகளையும் செய்தார்.

மறுபுறம் தமிழ்நாட்டில் விக்ரம் நின்ற தொகுதியில் அவனுக்கு எதிராக நின்ற பெரிய கட்சி வேட்பாளர்கள் கூட டெபாசிட் இழந்தனர். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அவன் நடந்து கொண்ட விதம், பேசிய விதம் மக்களுக்கு அவன் மீதான நன்மதிப்பைக் கூட்டியது. எஸ்.பி கட்சியின் வேட்பாளன் என்பதைத் தாண்டி அவனுகென்று ஒரு தனி அங்கீகாரம் உருவாகியிருந்தது. தேர்தலில் வெற்றி பெற்ற அவனுக்கு கலாச்சாரம் மற்றும் சுற்றுலா துறையில் மத்திய இணை அமைச்சர் பதவி தரப்பட்டது.

ஆதியும் விஷ்வாவும் கூட அன்று அவன் பேசிய வீடியோவைக் கேட்டுப் பூரித்து போயினர். அந்த சூழ்நிலையில் விக்ரம் சமயோசிதமாய் நடந்து கொண்டதை எல்லோரும் பாராட்டித் தள்ள, அவர்களுக்கு நெகிழ்ந்து போனது. “உன் மகன்னு விக்ரம் நிருபிச்சிட்டான்… ஆதி” என்று விஷ்வா சொல்ல ஆதி மறுப்பாய் தலையசைத்து, “நம்ம மகன்” என்று கண்களில் நீர் தளும்ப உரைத்தார்.

சிலைக் கடத்தல் பிரிவில் தமிழச்சி திறம்பட செயல்பட்டதை  மக்கள் பத்திரிகையாளர்கள் அரசியல் தலைவர்கள் என்று எல்லோரும் புகழ, அவள் பின்னிருந்து இந்த விஷயத்தில் சிம்மா முன்னெடுத்த முயற்சிகளை மக்கள் முன்னிலையில் வெளிப்படுத்தினாள்.

அவனுக்கும் பாரட்டுக்கள் குவிந்த வண்ணம் இருந்தன. பல முன்னோடியான செய்தித்தாள்கள் அவனின் துணிச்சலைப் புகழ்ந்தும் அவனின் நுணுக்கனமான கலைநயம் பொருந்திய ஓவியங்களைப் பாராட்டியும் வெளியிட்ட கட்டுரை அவனை இன்னும் மக்களிடையில் அதிகப் பிரபலப்படுத்தியது.

இவை எல்லாவற்றிருக்கும் மேலாக அவன் நம் மொழி, கலச்சாரம், பாரம்பரியம் மீது கொண்ட பற்றுதலையும் தமிழ் இலக்கியங்கள் மற்றும் கோவில்கள் அவனுக்கு இருந்த அறிவையும் பாராட்டி ஒரு சமூக ஆர்வலர்கள் குழு விருது வழங்கி கௌரவித்தது.

அந்த விருது வழங்கும் விழாவிற்கு அவனுடைய முகநூல் குழிவிலிருந்த பலரும் வந்திருந்தனர்.  தன் மனைவியை அழைத்து வந்த ரவி, “இப்ப சொல்லு என் மருமகனுக்கு உன் பொண்ணைக் கொடுக்க சம்மதமா?” என்று கேட்க, அவர் என்ன பேசுவார். மகளுக்குக் கிடைக்க போகும் வாழ்க்கையை எண்ணி உள்ளம் சிலாகித்தார்.

அந்த விருது வழங்கும் மேடையில் சிம்மா தன் பெற்றோரையும் அருகில் அழைத்து நிறுத்திக் கொண்டான். அந்த விழாவிற்கு வந்த பெரும் இலக்கியவாதிகள் தொல்பொருள் ஆய்வாளர்கள் அவனை  சிம்மவர்மனின் வழித்தோன்றல் என்றனர். அவர் பெயரை அவன் நிலைநாட்டிவிட்டதாக மேடையில் நின்று அவர்கள் புகழ்ந்ததில் செந்தமிழுக்கு மகனை எண்ணிப் பெருமிதம் உண்டானது. அதே போல் வீரேந்திரனுக்கும்  மகனுக்கும் மகளுக்கும் கிடைத்த இந்தப் பாராட்டுக்களில் அளவில்லா கர்வம்!

இறுதியாக சிம்மா அந்த பிரமாண்டமான மேடையில் தன் கருத்தைப் பதிவிட்டான். “இத்தாலி, ரோம் போல பழமையான வராலாற்று நகரம்… பேரிஸ் ஈஃபில் டவர்… யூ எஸ் ல இருக்க ஸ்டேச்யு ஆப் லிபர்ட்டி… கொல்கத்தா விக்டோரியா பேலஸ்… அவுரா பிரிட்ஜ்… தாஜ் மஹால்… இப்படி பல லட்சம் மையில் தூரத்தில இருக்குற இடத்தோட வரலாற்றை நம்ம எல்லோரும் தெரிஞ்சு வைச்சிருக்கோம். ஆனா நம்ம சொந்த கிராமத்துல… இது எல்லாத்தையும் விட வரலாற்றுப் பழமையான கோவில் இருக்கும்…  அதைப் பற்றிக் கேட்டா நமக்குத் தெரியாது…  ஏன்னா அது நமக்கு அவசியம் இல்ல… அப்படித்தான் நம்ம நினைச்சிட்டு இருக்கோம்… ஆனா அதே கோவிலோட கற்சிற்பங்களைக் கூட… நம்ம அதிசயம்னு வியந்துட்டு இருக்க நாடுகள் கோடி கணக்கில வாங்க காத்துக்கிட்டு இருக்கு…  நம்ம பழமைன்னு ஒதுக்கிட்டு இருக்குற விஷயங்கள் உலக நாடுகள் பொக்கிஷமா பார்க்குது…

அதுதான் தமிழனோட வரலாற்றுச் சிறப்பு… அம்பது வருஷத்துக்கு முன்னாடி அடிமைத்தனத்தாலேயும் அறியாமையினாலேயும் தொலைச்சோம்… இன்னைக்கு அலட்சியத்தால… இப்படியே போன  நம்முடைய தெய்வதிருமேனிகளை அருங்கட்சியங்களை போய்தான் தரிசனம் செய்யணும். கைக்கு கிட்ட இருந்த விஷயத்தை லட்ச கணக்குல டிக்கட் வாங்கிப் போய் பார்க்கணும்.

வருங்காலத்தில இப்படி ஒரு விஷயம் நடக்காம தடுக்கணும்னா…  நம்ம ஊர் கோவில்களோட வரலாற்று  சிறப்பை நாம தெரிஞ்சு வைச்சிக்கணும். நம்ம சந்ததிகளுக்கு அதைப் பற்றி சொல்லணும். அதைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம்முடையதுன்னு நாம உணரனும்” என்று அவன் பேச அந்த அரங்கமே கரவொலிகளில் அதிர்ந்தது.

அவன் தன் பேச்சை முடித்து கீழே இறங்க, அவனை முதல் ஆளாய் முன்னே வந்து பாராட்டினாள் ஜெஸ்சிகா!

 

error: Content is protected !!