6(௬)
இவான் ஸ்மித்
“தேடிச் சோறு நிதம் தின்று
சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம்
வாடி துன்பம் மிக உழன்று பிறர்
வாட பல செயல்கள் புரிந்து நரை
கூடி கிழப் பருவமெய்தி கொடுங்
கூற்றுக்கு இரையெனப் பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நீ வீழ்ந்து விடுவாயோ!”
“நெவர்… உனக்கு எதுவும் ஆகாது தமிழ்… உன் மனோதிடத்துக்கு முன்னாடி இதெல்லாம் ஒன்னுமே இல்ல… நீ மீண்டு வருவ… எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு” என்று ஆதி தன் தோழியின் கரத்தை பற்றி அழுத்தமாக உரைத்தாள்.
டாக்டர் கொடுத்த கெடு முடிவடைந்த நிலையில் செந்தமிழை மீண்டும் மருத்துவர்கள் சோதித்து பார்த்துவிட்டு,“அவங்க இப்போ கோமா ஸ்டேஜூக்கு போயிட்டாங்க… எப்போ ரிகவர் அவாங்கன்னு சொல்றது கஷ்டம்” என்று சொல்ல அதனை கேட்ட எல்லோருக்குமே பேரதிர்ச்சி!
ஆதி அதன் காரணமாகத்தான் தன் தோழியின் நினைவுகள் திரும்ப… அவர் உயிராய் நேசிக்கும் பாரதியாரின் வரிகளை உத்வேகமாய் அவர் செவியில் விழும்படி உரைத்தார். அப்படியாவது அவரின் ஆழ் மனது நினைவுகள் துயில் எழும்பிவிடாதா என்ற சின்ன எதிர்பார்ப்புதான் ஆதிக்கு.
மருத்துவமும் மருத்துவர்களும் செய்ய முடியாததை நேர்மறை எண்ணங்களால் நிச்சயம் சாதிக்கமுடியும். ஏன்? மரணத்தில் இருந்து கூட மீட்டுக் கொண்டு வர முடியும். அது ஆதியின் அம்மா செல்லம்மா அவருக்கு புகுத்திய நம்பிக்கை. இன்று செல்லம்மா இல்லையெனினும் அவர் தன் மகளுக்கு நம்பிக்கை என்ற விலைமதிப்பில்லா சொத்தை தந்துவிட்டுச் சென்றிருக்கிறார்.
அதே அளவுக்கான நம்பிக்கையும் திடமும் வீரேந்திரனுக்கும் இருந்தது. நிச்சயம் தன் மனைவி இந்த இடர்களை எல்லாம் அசாதாரணமாய் நொறுக்கிவிட்டு மீண்டும் புதுப்பொலிவோடு உயிர்தெழுவார் என்று!
தமிழை பார்த்த பின் ஆதியும் விஷ்வாவும் வீருடன் பேசிக் கொண்டிருக்க, உடன் வந்த விக்ரம் தன் மாமியாரின் சிகிச்சை அறைக்குள் வந்து அவர் கரத்தை பிடித்துக் கொண்டு, “உங்களுக்கு எதுவும் ஆகாது ஆன்டி… அம்மா சொன்ன மாறி நீங்க சீக்கிரமே க்யூர் ஆயிடுவீங்க… எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கு” என்றான்.
இதை அறைவாசலில் நின்றிருந்த தமிழச்சி கவனிக்க, விக்ரம் அவளை பார்த்த மறுகணமே அவளை கவனியாதவன் போல அறையை விட்டு வெளியேறிவிட்டான். அவளை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தை விட அவளிடம் தான் சிக்கி கொள்ள கூடாது என்ற முன்னெச்சிரிக்கை உணர்வே அவனிடத்தில் மேலோங்கி இருந்ததை அவள் பார்வை ஒருவாறு குறித்து கொண்டது.
அப்போது ஆதி வீரிடம், “நீங்க ஒன்னும் கவலைபடாதீங்க… உங்க பொண்டாட்டியால ரொம்ப நாளைக்கு இப்படி படுத்திருக்க முடியாது… அதுவும் உங்க கூட சண்டை போடாம அவளால இருக்கவே முடியாது” என்றார். இதை கேட்டு வீரின் முகத்தில மெல்லிய கோடாய் புன்னகை அரும்பியது.
இறுதியாய் ஆதியும் விஷ்வாவும் வீரிடம் விடைபெற்றுக் கொண்டு மருத்துவமனையில் இருந்து புறப்பட, விக்ரமும் அவர்களோடு கிளம்பினான்.
அப்போது வீர் தன் கணீர் குரலால், “விக்ரம்” என்றழைக்க அவனுக்கு கிலி பற்றி கொண்டது. இயல்பாகவே வீரை கண்டால் அவனுக்கு பயம் கலந்த மரியாதை. ஆதலாலேயே அவரிடம் அவன் அதிகமாக பேச்சு வைத்துக்கொள்ளமாட்டான்.
வீரேந்திரனும் விக்ரமோடு அதிகம் பேச முற்பட்டதில்லை. இப்போது அவர் அழைக்கவும்,அவனுக்கு உள்ளுர நடுக்கம் உண்டானாலும் அதனைக் காட்டி கொள்ளாமல், “சொல்லுங்க அங்கிள்!”என்று கேட்டான்.
“சிம்மா இப்போ எங்க இருக்கான்?” என்று அவர் கேட்க விக்ரமின் மனம் லேசாய் தடதடத்தது.‘தெரியுமா?’ என்று கேட்காமல் அவர் நேரடியாய் எங்கே என்று வினவியதை வைத்தே அவர் தனக்கு சிம்மா இருக்கும் இடம் தெரிந்திருக்க கூடும் என்பதை கணித்துவிட்டார் என்பது அவனுக்கு புரிந்து போனது. இருந்தாலும் நண்பனிடம் கொடுத்த வாக்கை எப்படி மீறுவது என்ற எண்ணத்தோடு,
“சாரி அங்கிள்! எனக்கு தெரியாது… அப்படி தெரிஞ்சா நானே உங்ககிட்ட சொல்றேன்” என்றவன் மேலே அந்தப் பேச்சை வளர்க்காமல், “நான் கிளம்பிறேன் அங்கிள்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்துவிரைந்தான்.
வீரேந்திரனுக்கு விக்ரம் பொய்தான் சொல்கிறான் என்று தெள்ளத்தெளிவாய் தெரிந்தாலும் அவன் ஏன் அப்படி சொல்கிறான் என்ற கேள்வியும்… அம்மா இந்த நிலையில் இருப்பது தெரிந்தும் சிம்மா ஏன் வரவில்லை என்பதும்தான் அவரை நம்பமுடியாத அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
*********
தமிழ்நாட்டில் இயங்கும் சுதந்திர பாரத் கட்சி அலுவலகம்! தலைமை பொறுப்பில் இருக்கும் திரு.மனோகரன் அறை…
இருக்கையில் அமர்ந்திருந்த மனோகரனின் முகம் கடுகடுத்து கொண்டிருந்தது.
கட்சி கூட்டம் நடந்த அன்றே மனோகரன் விக்ரமை சந்தித்துப் பேச அழைத்திருக்க, அவன் துளியும் அவர் அழைப்புக்கு மதிப்பு கொடுக்காமல் சாவகாசமாய் இரண்டுநாள் கழித்துவந்து அவரை சந்தித்தான்.ஏற்கனவே அவனுக்கு சீட் கொடுத்ததில் அவருக்கு உடன்பாடில்லை. அதோடு இந்த அவமதிப்பு வேறு… இந்த எல்லாக் காரணங்களையும் மனதில் கொண்டு அவர் விக்ரமிடம் எரிமலை கணக்காய் கொதித்துக் கொண்டிருந்தார் .
போதா குறைக்கு மனோகரனின் அல்ல கை நொள்ள கை மற்றும் எல்லா கையுமாக இருக்கும் தாமு விக்ரமை நிற்க வைத்து கோபமாய் கடிந்து கொண்டிருந்தான். ஆனால் விக்ரமோ தாமுவின் வசைகளுக்கு சிறு சலனம் கூட இல்லாமல் சிரித்து முகமாகவே நின்றிருந்தான். எல்லாம் சிறு வயதிலிருந்து அவன் அம்மா ஆதி கொடுத்த ட்ரைனிங்காக இருக்குமோ?!
விக்ரமின் இந்த அலட்சியமான நடவடிக்கையைப் பார்த்து மனோகரனுக்கு தாறுமாறாய் பிபி ஏற,அவர் அதனை சீராக்க மாத்திரை எடுத்து போட்டு கொண்டார்.
விக்ரம் உடனே, “நீங்க இப்படி சத்தமா பேசினதாலதான் ஐயாவுக்கு பிபி ஏறிடுச்சு… இப்படியே போன ஐயா சி.எம் ஆகிறதுக்கு முன்னாடி சீக்கிரம் மேல போயிடுவாரு… அதனால இனிமே ஐயா பக்கத்தில வால்யுமை கொஞ்சம் குறைச்சி பேசுங்க ண்ணே!” என்று என்று தனக்கே உரிய நக்கல் பாணியில் தாமுவுக்கு அறிவுரை சொல்ல,
“டே!” என்று தாமு கத்த ஆரம்பிக்க, “சும்மா இரேன் டா… அவன்தான் எதுக்கும் மசிய மாட்டிறான் இல்ல” என்று அவனை அடக்கினார் மனோகரன்!
தாமு அதிர்ந்து போனான். விட்டால் தனக்கும் இல்லாத இரத்த கொதிப்பு இவன் வரவழைத்துவிடுவான் போலவே!
விக்ரம் அப்போதும் எதுவுமே நடக்காதவன் போல, “அப்போ நான் போகட்டுமா ஐயா?” என்று படுபவ்யமாக கேட்க,
அவனை கோபமாய் முறைத்தவர், “என்ன தம்பி! மேலிடத்தில இருந்து சிபாரிசு சீட்டு வாங்கிட்டங்கிற திமிரா? இத பாரு… டெல்லில உனக்கு பெரிசா சப்போர்ட் இருக்கலாம்… ஆனா இங்க எல்லாம் நான்தான்… என் ஆதரவு இல்லாம நீ இங்க ஒரு ஆணியும் புடுங்க முடியாது” என்றார்.
“ஆணிய புடுங்க கூட உங்க ஆதரவு வேணும்ங்களா ஐயா!” என்று விக்ரம் அதே பவ்யத்தோடு வினவ, “என்னடா திமிரா?!” என்று மனோகரன் சத்தமிட,
“ஐயா! கத்தாதீங்க… திரும்பியும் பிபி எகிறிட போகுது… அப்புறம் பிரச்சாரம் போகிற நேரத்தில ஹாஸ்பெட்டில் போய் படுத்திற போறீங்க” என்றான்.
“அடிங்க ஓவரா பேசிறா… உன்னை நேரடியா மார்சுவரிக்கு அனுபிடுவேன் பாத்துக்கோ”என்று தாமு கொதிப்போடு மிரட்ட விக்ரம் அப்போதும் தன் புன்னகை மாறாமல், “டென்ஷன் ஆகாதீங்க ண்ணா… ஒரு முக்கியமான விஷயம் ஐயா கிட்ட சொல்லிடுறேன்… அப்புறம் யார் எங்க போறதுன்னு முடிவு பண்ணிக்கலாம்” என்றான்.
மனோகரன் உடனே தாமுவை கையமர்த்திவிட்டு, “என்ன விஷயம்?” என்று விக்ரமை பார்த்து கேட்க,
“இல்லங்க ஐயா! போன தடவை ஒட்டுக்கு தலைக்கு இரண்டாயிரம் குடுத்ததா தலைமையில சொல்லிட்டு கட்சி நிதில பாதியை உங்க பாக்கெட்ல போட்டுட்ட்ட்… டீங்கன்னு” என்று அவன் இழுத்தபடி சொல்ல அவர் அதிர்ந்து நின்றார்.
“ஐயோ! இது என் சந்தேகம் இல்லைங்கய்யா… மேல மாதாஜிக்க்க்க்க்கு” என்றதும் அவர் ஆணிவேரே ஆடியது.
“என்னடா போட்டு வாங்குறியா?” என்றவர் முறைப்பாய் அவன் சட்டையை பிடிக்க, “ஐயா! பிபி ஏறிடுச்சுன்னா பிரச்சாரத்துக்கு போக முடியாது” என்றதும் அவர் முகம் மேலும் கடுகடுக்க,
“சும்மா கண்டமேனிக்கு யோசிக்காதீங்க… நான் ஒன்னும் மாதாஜிகிட்ட போட்டு கொடுக்கல… உங்க பக்கத்தில இருக்க எவனோதான் போட்டு கொடுத்திருக்கான்… இந்த தடவை எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க” என்றவன் எச்சரிக்கை தொனியில் குரலை தாழ்த்தி சொல்ல, அவருக்கு கதிகலங்கி போனது.
அதுவுமில்லாமல் விக்ரமுக்கு டெல்லிவரை பவர் இருக்கிறது என்பதை அவர் ஏற்கனவே அறிந்து கொண்டார். ஆதலால் இப்போது அவன் சொல்லும் விஷயத்தை அவரால் அசட்டையாய் விட முடியவில்லை. அவன் சொன்னதும் உண்மையானாலும் பொய்யானாலும் அது ஏதோ வரை வகையில் அவருக்கு ஆபத்துதான். ஆதலால் ஆழமாய் சிந்தித்தவர் விக்ரமை அருகில் அழைத்து, “நீ வீட்டுக்கு வா தம்பி… எல்லாம் விவரமா பேசிக்கலாம்” என்றார். இதற்கு பெயர்தான் அரசியல் சாணக்கியத்தனம்.
விக்ரம் சூசகமாய் சிரித்து தலையசைத்ததோடு அல்லாமல் தாமுவை பார்த்து வேண்டுமென்றே நக்கல் சிரிப்பு சிரித்துவிட்டு செல்ல… அவனுக்கு கோபம் ஏகபோகமாய் ஏறியது.
அரசியல் சூட்சமம் எல்லாம் விக்ரமுக்கு தண்ணிபட்ட பாடு. ஆனால் வீட்டையும் மனைவியும் சமாளிப்பதுதான் அவனுக்கு பெரும்பாடு. அப்படியாக அவனுக்கு அந்த நொடி வீட்டில் ஒரு சர்வதேச பிரச்சனை காத்திருந்தது.
அவன் வீட்டிற்குள் நுழைய அப்போது ஓர் அயல்நாட்டினன் அவன் அம்மா அப்பாவிடம் ரொம்பவும் தெரிந்தவன் போல பேசி கொண்டிருக்க, ‘யாராக இருக்கும்?’ என்ற குழப்பத்தோடு விக்ரம் அவன் முன்னே வந்து நின்றான்.
விக்ரமுக்கு அவன் நண்பன் சொன்னது மறந்திருக்கலாம். ஆனால் வாசகர்கள் மறந்திருக்க முடியாது. அவன்தான் தஞ்சை பெரிய கோவிலில் நாம் சந்தித்த வெளிநாட்டு நண்பன் இவான் ஸ்மித்!
விக்ரம் அவனை கூர்ந்து பார்த்து, ‘யாரிந்த ஒயிட் ஒட்டகம்… ஓவரா வளர்ந்திருக்கான்… ஒருவேளை அம்மாவை பார்க்க வந்திருப்பானோ?!’ என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே இவான் விக்ரமை ரொம்பவும் தெரிந்தவன் போல அவனை கட்டியணைத்து கொண்டு,
“ஹாய் விக்கி!” என்றான். அவனுக்கும் ஒன்றுமே விளங்கவில்லை. அதிர்ச்சியில் சில நொடிகள் அப்படியே நின்றவன் அவன் விக்கி என்றழைத்த விதத்தை வைத்தே அவன்தான் சிம்மா அனுப்பிய ஆள் என்று அறிந்து கொண்டான்.
ஆனால் அவன் பெயரென்ன என்று விக்ரம் மூளையை கசக்கி யோசிக்க… அப்போது ஆதி இவானிடம் ஆங்கிலத்தில், “நீ விக்ரமோடவே அவன் ரூம்ல தங்கிக்க இவான்… ஒன்னும் பிரச்சனையில்ல” என்றார்.
விக்ரமிற்கு நடப்பதையெல்லாம் பார்த்து அதிர்ச்சியாகதான் சரியாக இருந்தது.
‘இந்த இவான் நமக்கு மேல ஜகஜால கில்லாடியா இருப்பான் போல… அம்மாகிட்டேயே அப்ரூவல் வாங்கிட்டான்’ என்று அவன் மைன்ட் வாய்சில் நின்ற இடத்தில அப்படியே யோசித்துக் கொண்டிருக்கும் போதே இவான் அவன் அறைக்குள் ஐக்கியம் ஆகிவிட சென்றுவிட்டான்.
அவன் அதை உணர்ந்து அறை நோக்கி செல்ல இவான் அந்த அறையை அளவெடுத்தப்டி பார்த்து கொண்டிருந்தான்.
“மிஸ்டர். ஸ்மித்” என்று விக்ரம் அழைக்க,
“கால் மீ இவான்!” என்றான்.
“டூ யூ ஸ்பீக் தமிழ்?” என்று விக்ரம் கேட்க,
“நோ” என்றவன் விக்ரமின் புறம் திரும்பி, “யூ வில் ஸ்பீக் இங்கிலீஷ்… ரைட்” என்று அவன் தன் கேள்வியை சொல்லி தானே பதிலுரைத்து கொண்டான்.
விக்ரமுக்கு ஏனோ அவனை உடன் தங்க வைத்துக் கொள்ள துளியும் விருப்பமில்லை. இருப்பினும் தன் உயிர் நண்பன் சிம்மா சொன்ன வார்த்தைக்கு அவனால் மறுப்பு தெரிவிக்க முடியவில்லை. இன்னொரு புறம் இவானுக்கும் சிம்மாவுக்கும் எப்படி தொடர்பு என்று யோசித்தவன்,
“ஃபார் வாட் பர்பஸ் யூ வான்ட் டூ ஸ்டே இன் சென்னை?(என்ன காரணத்திற்காக நீ சென்னையில் தங்க இருக்கிறாய்?)” என்று அவன் வினவ, இவான் அவன் கேள்விக்கு தொடர்ச்சியாய் ஆங்கிலத்தில் பதிலளித்தான்.(இவான் பேசும் நீண்ட வசனங்கள் மற்றும் முக்கியமான வசனங்கள் புரிதலுக்காக வேண்டி தமிழிலேயே கொடுக்க படும்) அவன் சொன்னதாவது,
“நான் தமிழர்களோட கோவில்களையும் அதோட தொன்மையான வரலாற்றையும் சிற்பக்கலையையும் ஆராய்ச்சி செஞ்சி எங்க மொழியில் ஒரு புத்தகம் எழுதலாம்னு வந்திருக்கேன்”என்க,
விக்ரமுக்கு இப்போது புரிந்தது. எப்படி தன் அம்மாவிற்கு இவானை பிடித்திருக்க கூடும் என்று!
விக்ரம் சிந்தனையில் இருக்கும் போதே இவான் தன் உரையை தொடர்ந்து கொண்டிருந்தான்.
“எனக்கு இன்னும் ஒரு ஆசை… அழகான ஒரு தமிழ் பெண்ணாக பார்த்து திருமணம் பண்ணிக்கணும்” என்றான். விக்ரம் புருவங்கள் நெறிய அவனை பார்க்கும் போதே இவான் அடுத்த படிநிலைக்கு போய்,
“விக்கி… டூ யூ ஹவ் சிஸ்டர்ஸ்?” என்று கேட்க,
‘அடப்பாவி! அடி மடியில கை வைக்கிறான்’ என்று கடுப்பான விக்ரம்,
“நோ சிஸ்டர்ஸ்… ஒன்லி மதர் அன் ஃபாதர்” என்றவன், “என் ஒருத்தனை வைச்சி சமாளிக்கவே அவங்களால முடியலயாம்… இதுல அடிஷ்னல் வேற” என்றான்.
இவான் பார்வை அப்போது அந்த அறையில் இருந்த ஒரு பொருளின் மீது நிலைகொண்டுவிட விக்ரமுக்கு அவன் பார்வை சென்ற திசையை பார்த்து பகீரென்றது.
இவான் பார்த்து கொண்டிருந்தது மேஜை மீதிருந்த தமிழச்சியின் புகைப்படம். அதனை வேகமாக விக்ரம் கைப்பற்றி கொள்ள, “சம்வேர் ஐ சீன் திஸ் கேர்ள்” என்று இவான் சொல்லிவிட்டு யோசிக்க,
“நோ சான்ஸ்… ஷி இஸ் மை வொய்ஃப் தமிழச்சி” என்றான் அழுத்தமாக!
“ஒ ரைட்! சிம்மாஸ் சிஸ்டர்” என்று இவான் குதுகலமாய் கேட்க, எல்லாம் தெரிந்துதான் இவன் கேட்கிறானா என்றவன் அவனை ஏறஇறங்க பார்த்தபடி, சிம்மாவின் தங்கைதான் தன்னுடைய மனைவி என்று அழுத்தம் திருத்தமாய் அவனுக்கு அப்போது தெரிவித்தான்.
“ஐ நோ… நீங்க ரெண்டு பேரும் மிஸ்அண்டர்ஸ்டான்டிங்ல இப்போ பிரிஞ்சிருக்கிறீங்க… அதுவும் எனக்கு தெரியும்” என்ற இவான் மேலும், “டிவோர்ஸ்க்கு அப்ளை பண்ணிடீங்களா?” என்று தடாலடியாய் அடுத்த கேள்வியை கேட்க விக்ரம் அப்படியே ஆடி போய்விட்டான்.
பின் ஒருவாறு தன்னிலை மீட்டு கொண்டவன், “தட்ஸ் நன் ஆஃப் யுவர் பிஸ்னஸ்” என்று கூறி நீ வந்த வேலையை மட்டும் பாரு என்று காரசாரமாய் சொல்லிவிட்டு அகன்றான்.
இவான் அப்போதும் தன் புன்னகை மாறாமல் நின்றான். விக்ரமுக்கு தெரியாது. அவன் வந்த வேலையே தமிழச்சியை சந்திக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
விக்ரம் அங்கிருந்த அவளின் ஒரு புகைப்படத்தை மறைத்து வைத்துவிட்டான். எனினும் அவன் அந்த அறை முழுக்கவும் அவளின் வெவ்வேறு வயதுடைய புகைப்படங்களால் நிறைத்திருக்கிறான் என்பதை கவினிக்க மறந்தான். அதெல்லாம் இவானின் பார்வையில் எப்போதோ அகப்பட்டுவிட்டது. அதோடு அவர்களின் திருமண புகைப்படமும் இவானின் கூரிய விழிகளிலிருந்து தப்பவில்லை.
கொஞ்ச நேரம் அந்தப் புகைப்படங்களை பார்த்து யோசித்துக் கொண்டிருந்தவன் பின் தன் பேகை திறந்து ஒரு துண்டையும் ஷார்ட்சையும் எடுத்துக் கொண்டு அந்த அறைக்குள்ளேயே இணைக்கப்பட்டு இருந்த குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
சரியாய் அந்தச் சமயம் விக்ரம் வீட்டின் தெருமுனையில் நின்ற தன் காரில் காத்திருந்த தமிழச்சி,அவன் வெளியேறுவதை பார்த்துவிட்டு அதிரடியாய் வீட்டிற்குள் நுழைந்தாள்.
அவளின் வலது கை தோளோடு ஒரு பெல்டால் கட்டப்பட்டு தொங்கி கொண்டிருக்க, அந்த காயமெல்லாம் அப்போது அவளுக்கு பெரிதாக தெரியவில்லை. வீட்டின் முகப்பறையில் யாரும் இல்லை என்பதை கண்டவள் அதனால் ஒன்றும் பாதகம் இல்லை என்று எண்ணி விரைவாய் தன் கணவன் அறைக்குள் நுழைந்தாள். அவள் அவசரமாய் எதையோ தேடி கொண்டிருக்க, அப்போது மேஜை மீதிருந்த ஒரு கைபேசி அவள் கண்ணில் பட்டது.
‘இது யாரோட ஃபோன்… ரொம்ப காஸ்ட்லி மாடலா இருக்கு… இது விக்ரம் வைச்சிருக்க பிரன்ட் இல்லையே… ஃபிராடு… சீக்ரட்டா பேச இன்னொரு போன் வைச்சிருக்கான் போல… அண்ணா கிட்ட இதுல இருந்துதான் பேசுவானோ!’ என்ற எண்ணத்தோடு அந்த பேசியை கையிலெடுத்து அவள் இயக்க, தஞ்சை ராஜ கோபுரம் மிளிர்ந்தது அதன் திரையில்!
அதனை அதிசயித்து பார்த்தவளுக்கு அந்த பேசியை மேலும் இயக்க முடியவில்லை. அது தன் உரிமையாளனின் கைரேகை இல்லாமல் வேலை செய்ய மாட்டேன் என்று அடம்பிடிக்க,
அவள் உடனடியாக அந்த பேசியின் பின் உரையை பிரித்து அதன் சிம் கார்டை எடுக்க முயன்று கொண்டிருக்கும் போது குளியலறை கதவு திறக்கும் சத்தம் கேட்டு, ‘விக்ரம்தான் வெளியே போயிட்டானே… இது யாரு?!’ என்ற யோசனையோடு அவள் திரும்ப இவான் குளித்து முடித்துவிட்டு தலையை துண்டால் துவட்டி கொண்டேவெளியே வந்தான்.
இவானை அவள் பார்த்த அதே சமயத்தில்… இவளும் அவனைப் பார்த்துவிட வித்தியாசமான அந்த இருவிழிகளும் ஒன்றோடு ஒன்று முதல்முறையாய் சந்தித்து கொண்டன.