கண்மணி 23(2)
வேதா , சென்று கார் சத்தம் கேட்டதும் முகத்தை தூக்கி வைத்திருந்த ஆராவிடம் சென்று,
“லட்டு , சிரிச்ச மாதிரி இருக்கணும், வந்தவங்க கிட்ட பார்த்து பேசணும். மூஞ்சில அடிச்ச மாதிரி பேசக் கூடாது, டேய் கிருஷ் , உனக்கும் தான் சொல்றேன். குஷ்டம் வந்த குரங்கு போல மூஞ்சிய வச்சுக்காத கொஞ்சம் சிரி,”
“என்னைய மாப்பிள்ளையா பார்க்க வர்றாங்க, சிரி சிரின்னு உயிர் எடுக்குற, ஈ…. ஈ இது போதுமா…? கிருஷ் இளித்துக் காட்ட,
“யம்மாடியோ, மாதாஜி எனக்கு பயம்மா இருக்கு,” வேதாவிடம் பதுங்கிக் கொண்டு ஆரா சொல்ல,
“ஏன்டா லட்ட பயமுறுத்துற, இப்படியே இளிச்சு வந்தவங்கள வாசலோட துரத்திடாத,” இளா ,சிரித்தபடி சொல்ல,
“நான் இன்னைக்கு மவுன விரதங்கிறதால எல்லாரும் தப்பிச்சிங்க,”
சொல்லி விட்டு கிருஷ் செல்ல, அவனோடயே வாசலுக்கு சென்றனர் அனைவரும்.
வேதா சென்று இளாவின் கைகளைப் பிடித்துக் கொண்டார்.
“டாலி, நான் பார்த்துக்கிறேன். பயப்படாதீங்க… லவ் யூ…” காதில் சொல்ல,
வேதாவிடம் சிறிய நெகிழ்ச்சி.
“ஒரு பேச்சுக்கு வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிட்டா, சோத்துக்கு செத்த மாதிரி, கப்பித்தனமா , இருக்கிற கார் பூரா ஆளுங்களை ஏத்தி கூட்டிட்டு வர்றாங்க, ஹி ஹி ஹி” சிரித்து வைக்க,
ஆராவும் ஹய்ஃபை கொடுத்து சிரிக்க,
ரோஜா ரெண்டு பேருக்கும் கிள்ளு வைத்து.
“ரெண்டு பேரும் அவங்க போகிற வரை எல்லா டோரையும் பொத்திட்டு இருக்கணும். மீறி ஏதாவது கூட்டணி போட்டு கலவரம் பண்ண பார்த்தீங்கன்னா, கிருஷ் ஆண்டியாகிடுவான் , லட்டு பூந்தியாகிடும், ஜாக்கிரதை…” மிரட்டினாள்.
வேதாவும் இளாவும் சிரித்து கொண்டனர்.
தனம் குடும்பத்தோடு வந்திறங்க,
வேதா சென்று அவரை வரவேற்று கைபிடித்து உள்ளே அழைத்து சென்றார்,
இளாவும் ரோஜாவும் எல்லாரும் வாங்க, வரவேற்க,
கிருஷ்ஷும் ஆராவும் சிரித்து வைத்தனர்.
அனைவரும் உள்ளே சென்று அமர,
ஆராவை தன்னருகே கூப்பிட்டு அமர்த்திகொண்டு கையை பிடித்து கொண்டார், தனம்.
ஆரா, இளாவினை பார்க்க, நானிருக்கென், கண்ணசைவில், கூறி போ, சமாளித்தான்.
ஜெயக்கொடி எழுந்து அனைவரையும் அறிமுகப்படுத்தினார்.
“இவங்க எங்கம்மா தனஞ்ஜெயம். அப்பா, கண்டராதித்யர், பேக்டரியில் சின்ன வேலை வரல.”
இதை சொல்லும்போது, தனத்தின் முகம் சற்று சுருங்கியதை இளா கண்டுகொண்டான்.
“எங்க வீட்டில் மூத்தவர் அண்ணா , விமலனாதித்யர் பக்கத்தில் தெரிஞ்சவங்க வீட்டுல விசேஷம் கலந்துக்கிட்டு, அரை மணி நேரத்தில் இங்க வந்துடுவார். இவங்க அண்ணி ஷீலா, அவர் எழுந்து வணக்கம் வைத்தார். இவன் அவங்க மகன் குமராதித்யன், “
அவன் இளா, கிருஷ் வயதை ஒத்திருந்தான்.
“இவ அண்ணன் மக கிருத்திகா, அடுத்த மாசம் கல்யாணம் வச்சுருக்கொம்.”
“நான் ஜெயக்கொடி அண்ணாக்கு அடுத்த பிறப்பு, இவர் என் வீட்டுக்காரர், மகேஷ்வரன்,” அவர் புன்னகைக்க, அவரது மகன் கனிஷ்கன் , மகள், ஸ்வேதாவை அறிமுகப் படுத்தினார். ஆராவின் வயதொத்தி இருந்தாள்.
அதற்குள் விமலனாதித்யர், வெள்ளை சட்டை, வெள்ளை வேஷ்டியில் பிரசன்னமாக, அனைவருக்கும் வணக்கம் வைத்தவர், தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, “அப்பா வேலையா வெளியூர் போயிருக்காங்க,” சொல்ல,
அனைவரும் அவரையே பார்த்தனர்.
ஜெயக்கொடி, “கோயம்புத்தூரில் இருக்கிற ஃபேக்டரிக்கு போயிருக்காங்க,” சமாளித்தார். இளாவிற்கு புரிந்து போனது.
அவரது தங்கை தனக்கொடி ,அவரது கணவர் சத்யமூர்த்தி, அவரது இரு மகள்கள், பாகீரதி, நிவேதா அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு,
“எங்க வீட்டு கடைக்குட்டி தான் பொற்கொடி ,ரொம்ப செல்லம்,””சொல்லி பெருமூச்சு வாங்கி ஜெயக்கொடி நிறுத்த,
இளா, கம்பீரமாய் முன்னே வந்து நின்று ஆரம்பித்தான்,
“பொற்கொடி என் அத்தை தான், அவங்க கணவர், எங்க மாமா ராமச்சந்திரன், ஆசிர்வாத் குரூப்ஸ்சோட ஒன் ஆப் தி ஃபவுண்டர்.”
இங்க வா, கண்ணாலேயே அழைக்க,
எப்படா கூப்பிடுவான்னு இளாவையே பார்த்திருந்த ஆரா குடு குடுவென்று ஓடி வந்து அவனருகில் நின்று கொண்டாள். அவள் தோள் பற்றி அவர்கள் புறம் திரும்பி நிறுத்தி,
“இவ அவுங்க பொண்ணு, மிஸ் ஆராதனா ராமச்சந்திரன், ஆசிர்வாத்த்தோட மேஜர் ஷேர் ஹோல்டர், இன்னும் கொஞ்ச மாசத்தில் ஆசீர்வாத் குரூப்ஸ்ஸின் மெனேஜிங் டைரக்டர் ஆகப் போறாங்க. இப்போதைக்கு ஆராஸ் டிசைனர் பொட்டிக் பவுண்டர், அப்கமிங் ஃபேஷன் டிசைனர். எங்க வீட்டு இளவரசி, என் தேவதை .” பெருமையோடு அறிமுகப் படுத்த,
ஆராவிற்கு ஒரே குதூகலம். இளாவின் முகத்தினையே பார்த்து கொண்டிருந்தாள்.
அவளை பார்த்து, சிறு புன்னகையுடன், கண்ணை சிமிட்டி, அங்க வந்தவங்களை பாரு, அவன் கண்ணைக் காட்ட, அதிலிருந்த உற்சாகம், ஆராவிர்க்கு மட்டுமல்ல வேதா ,கிருஷ் , ரோஜாவிற்கும் தொற்றியது.
ஆராவும் ஹாப்பி மோடில் வந்தவர்களை தைரியமாய் எதிர்கொண்டாள்.
இளா ஆராவிற்கு தந்த அறிமுகம், அவர்களின் நெருக்கம், வந்தவர்களுக்கு சிறு சுணக்கத்தை ஏற்படுத்தியது நிஜம்.
மேலே தொடர்ந்தவன்,
“நான் இளமாறன், ஆசிர்வாத்தோட, இப்போதைய மேனேஜிங் டைரக்டர், ஆரா அப்பா, ராமு மாமாவோட, தங்கச்சி இளவரசி, அவரோட க்ளோஸ் பிரென்ட் டும், ஆசிர்வாத் கோ ஃபவுண்டர் சுகுமாறன் உடைய ஒரே மகன். “
“இவங்க மிஸஸ். வேதவல்லி கோதண்டம் ,என் அப்பா கூடப் பிறவா தங்கை, என் அத்தை, அதோட, பொற்கொடி அத்தைக்கு இவங்க தான் இங்க ப்ரெண்ட். கோதண்டம் மாமா தவறிட்டார்.”
“இவன் கிருஷ்ணா கோதண்டம், வேதாஸ் டெக்ஸ்டைல்ஸ் ஓனர். புதுசா லான்ச் பண்ணப்போற, லாஹிருஷ் பிராண்ட் வேர்ஸ்ல, என்னோட பார்ட்னர், என்னோட உயிர் நண்பன்.”
“இவங்க மிஸஸ் ரோஜா கிருஷ்ணா, கிருஷ் ஒயிஃப், என் உடன் பிறவா தங்கை. எங்க ஆரா போல, இன்னொரு குட்டி தேவதையை கூடிய சீக்கிரம் எங்க ஃபேமிலிக்கு தரப்பொறாங்க.”
“அவளோதான் எங்க அழகான சின்ன கூடு.”
“என்னடா இவன் கூடப் பிறக்காதவங்களை உறவுன்னு சொல்லிக்கிறான்…?ன்னு ஒரு கேள்வி வரலாம், அத்தை மாமா, இறந்த அதே விபத்துல தான் என் அப்பா அம்மாவும் இறந்தாங்க. அதிலிருந்து, நானும் ஆராவும் தனியாகிட்டோம்,”
“எங்கத்தை வேதாவும் மாமாவும் தான் துணையா இருந்தாங்க, ஆராவையும் என்னையும் பெத்த புள்ளைங்களா வளர்த்தாங்க. என் சொந்த அத்தைன்னு சொல்லியிருந்தா உங்களுக்கும் இவங்களை ரொம்ப தெரியாம போயிருக்கும், ஆனா இவங்க செஞ்ச தியாகத்தையும், எங்க மேல, முக்கியமா ஆரா மேல வச்சுருக்க அன்பையும் நீங்க தெரிஞ்சுக்கணும்னு நினைச்சேன். அதான் அப்படி சொன்னேன்.”
அனைவரும் அதிர்ந்து விலுக்கென்று நிமிர்ந்து பார்க்க,
தனம் தனது மகனை, அர்த்ததோடு, கலங்கியபடி பார்த்து வைத்தார்.
இடையில் குறுக்கிட்ட வேதா,
“சபையில் குறுக்கிடரத்துக்கு மன்னிக்கணும்.” உரிமையில்லாத தான் பேசலாமா, என்ற தயக்கத்துடன் நிற்க,
“பேசுங்க , டாலி , எங்களுக்கு நீங்கதானே எல்லாம்,” இளா ஊக்குவிக்க,
“என்னத் தயக்கம் ராஜமாதா, உத்தரவிடுங்கள், வெட்டிட்டு வாங்கள் என்று சொன்னால், கட்டிக்கொண்டு வருவதற்கு காத்திருக்கிறேன்,” ஆரா,
“ஆமா சொன்னதை எப்பவும் செய்யமாட்டா, அவளா ஒன்னு செய்வா,” கிருஷ் கவுண்டருக்கு,
ஆராவும் பழிப்பு காட்டி, அவன் மண்டையில் கொட்டி விட்டு, வேதாவை சலுகையாக கட்டிக்கொள்ள,
வேதா,
“தப்பா நினைச்சுக்காதிங்க, லட்டு எங்களுக்கு ரொம்ப செல்லம், அப்பப்போ ஏதாவது குறும்பு செஞ்சுட்டே இருக்கும்.”
வளர்ப்பை தவறாக நினைத்துவிட கூடாது என்ற பயத்தில் விளக்கம் தந்துவிட்டு,
“இளா, ரொம்ப அதிகமாவே எங்களை பத்தி சொல்லிட்டான். அவன்தான் ஆராவுக்கு எல்லாம் எப்பவுமே. அவன் கிட்ட தான் பொற்கொடி ஆராவ ஒப்படைச்சா பார்த்துக்க சொல்லி,
பத்து பதினோரு வயசிருக்கும், அப்போ. வரிசையா அப்பா அம்மா மாமான்னு விட்டுட்டு போக போக, எங்க இளா தனியா கலங்கி நின்னான்.”
” உறவுன்னு சாய்ஞ்சுக்க யாருமில்லை, நாங்க தோள் மட்டும் தான் கொடுக்க முடிஞ்சது, அவனுக்கிருந்த ஒரே பற்று, ஆராவும் அவ அம்மாவும் தான். அவங்க பொழைச்சு வர , ஐ சீ யூ வாசல்லயே தவமிருந்தான், ஆரா பாதி உசுரு மீண்டப்போ, அவ அம்மா உடம்பு ரொம்ப மோசமாச்சு, அப்போதான் தகவல் டாலி விட்டோம். அடுத்த நாள் ஆராவை இளா கையில் கொடுத்திட்டு , அவனோட நெத்தியில் கடைசியா வச்ச முத்ததோடயே உங்க வீட்டு பொண்ணு பொற்கொடி உசுரு, கரைஞ்சு காணாம போச்சு.”
வேதா சொல்லி முடிப்பதற்குள் தனம் ஓடி வந்து, இளாவின் நெற்றியை தடவி விட்டு, அவனைக் கட்டிக் கொண்டு அழ,
இளா அதிர்ந்து நிற்க,
ஜெயகொடியும் , தனக்கொடி ,அவரது அண்ணன் என அனைவரும் சமாதானப்படுத்த,
அவர் , “இப்படி எதுவும் ஆகிடக்கூடாதுன்னு தானே உங்கப்பா காலை பிடிச்சு கதறி அழுதேன். அன்னைக்கு கேட்டுருந்தா, இந்த புள்ளைங்க தனியா இப்படி நின்னுருக்குமா..?” கேட்டுக்கொண்டு அழ,
இளாவிற்கு தர்ம சங்கடமாக போனது. அவரை என்னவென்று அழைத்து சமாதானப்படுத்துவது என்று கூட தெரியாமல் தடுமாறினான்.
ஜெயம் தான் மேற்கொண்டு பேசினார்,
“தப்பா நினைச்சுக்காதீங்க தம்பி, எங்க வீட்டு பொண்ணு சீரியஸா இருக்குன்னு சொன்னப்போ, அப்பாவுக்கு கோபம் போகாம , அப்படி யாரும் தெரியாது சொல்லி அனுப்பிட்டார். ஆனா அம்மா ரொம்ப கெஞ்சி அழுது பார்த்தாங்க, அவர் விடலை. அண்ணாவை, அம்மா பேசி அனுப்ப பார்த்தப்பவும் , அப்பா நான் செத்ததுக்கு அப்புறம் யார் வேணும்னா போங்க., அவுங்க குடும்பத்தோட உறவு கொண்டாடுங்கன்னு கோபப்பட்டுட்டார். அவரை மீறி யாரும் போகவும் முடியாம, நாங்க கலங்கி நின்னப்போ, மறுபடியும் பொன்னு போயிட்டா, இந்த உலகத்தை விட்டுன்னு சேதி வந்தது.”
“அன்னைக்கப்புறம் இத்தனை வருஷமா, அம்மா எங்கப்பா கூட பேசுறதையே நிப்பாட்டிட்டாங்க. யார் வீட்டு கல்யாணம் காட்சின்னு துக்க வீட்டுக்கும் கூட போக மாட்டாங்க. பொற்கொடிக்கு நல்லது கேட்டதுன்னு, எதுலயும் கலந்துக்காம போயிட்டோம்ன்கிற குற்ற உணர்ச்சியிலெயே வீட்டோட நின்னுட்டாங்க. இப்போ அவங்களை கட்டுப்படுத்திக்க முடியல, அதான் இப்படி சாரி,”
அவர் விளக்கத்தில் எல்லாருக்கும் மூச்சடைத்தது.
சாஷா…