Konjam vanjam kondenadi – 21

மதில் மேல் பூனை

ஷிவானி சமையல் செய்யும்  கண்கொள்ளா காட்சியை காண இரு கண்கள் போதாது. அந்தளவுக்கு  சுறுசுறுப்பாகவும் துறுதுறுப்பாகவும் இருக்கும் அவள் வேலைப்பாடு. 

அத்தனை வேகத்தில் அவள் எதை செய்கிறாள் எப்படி செய்கிறாள் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது.

ஆனால் அவள் எதையோ செய்து எப்படியோ முடித்துவிடுவாள் என்பது மட்டும் உண்மை. இதில் சற்றும் அனுபவமே இல்லாத அப்ரன்டிஸீகளாய் சேர்ந்த ராகினியும் ஐஸ்ஸும் அவளின் சமையல் கலைக்குள் மூழ்கி கரையேற முடியாமல் பெரும் பாடுப்பட்டு கொண்டிருந்தனர்.

முன்னே பின்னே அம்மாவிற்கு அடுக்களையில் உதவி செய்த அனுபவம் இருந்திலாவது அவள் எதை எதில் சேர்க்கிறாள் என்று புரியும் என அவர்கள் இருவரும் புலம்பி கொண்டனர்.

ஆனால் அந்த அப்ரிடீஸுகளுக்கு ஒரு உண்மை தெரியாது. அவர்கள் அப்படியே அவர்களின் அம்மாக்களுக்கு உதவி புரிந்திருந்தால் கூட ஷிவானியின் சமையல் சூட்சமங்கள் அவர்கள் மூளைக்கு எட்டுவதெல்லாம் அசாத்தியம்தான்.

அது அவளுக்கு மட்டுமே தெரிந்த ஆய கலைகளில் ஆறுபத்தி ஐந்தாவது.

அதோடு அவள் செய்த எல்லாவகை உணவிற்கும் அவள் ஒவ்வொரு பெயர் சொல்ல ராகினியும் ஐஸ்ஸும் தலையை பிய்த்து கொண்டனர்.

சமையலென்று வந்துவிட்டால் ஷிவானிக்கு சகலமும் மறந்து போகும். அவள் அத்தனை மும்முரமாய் சமைத்து கொண்டிருக்க, என்ன நடந்தாலும் சரி. நாங்கள் எடுத்த சபதம் முடிப்போமென அந்த அப்ரண்டீஸிகளோ அவர்களால் முடிந்தளவுக்கு அவள் சமையலை டேமேஜ் செய்து கொண்டிருந்தனர்.

எந்த ஒரு டிஷ்ஷையும் அவர்கள் பரிதாபம் பார்த்து விட்டு வைக்கவில்லை. பாராபட்சமே பார்க்காமல் எல்லாவற்றிலும் தங்கள் கைவரிசையை அவர்கள் காட்டியிருக்க,

அப்போது ஆர்வமாய் சாப்பிட அமர்ந்த ஆச்சி தாத்தா சித்தி சித்தாப்பா எல்லோரையும் பார்க்க அவர்களுக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

இதற்கிடையில் ஐஸ் ராகினியிடம், “மாமா மட்டும் மிஸ்ஸிங்” என்று சொல்ல,

“அவர்தானே நம்ம மெயின் டார்கெட்டே… மாமா வந்து ஷிவானி சமைச்சதை   சாப்பிடனும்… அத்தோட அவ பக்கம் அவர் தலை வைச்சே படுக்க கூடாது” என்று ராகினி குரூரமாய் சொல்ல ஐஸ்ஸுக்கும் அதுதான் சரியென்று பட்டது.

“ஆனா இப்பவே சாப்பாடு பரிமாறின்னா மாமா தப்பிச்சிடுவாகளே” என்று ஐஸ் சொல்லிக் கொண்டிருக்கும் போதே குரு வீட்டிற்குள் நுழைந்தான்.

“மாமாக்கு நூறு ஆயுசு” என்று ஐஸ் சொல்ல,

“இந்த சாப்பாடு சாப்பிட்ட பிறவுமா” என்று ராகினி உரைக்க இருவரும் சிரித்து கொண்டனர்.

“சரி போய் மாமாவை சாப்பிட கூப்பிடு… நான் சாப்பிட பரிமாற எல்லாத்தையும் ரெடி பன்றேன்” என்று அடுக்களைக்குள் சென்றாள்.

அப்போது ஐஸ் வேகவேகமாய் குருவை நெருங்கி, “அக்கா சமைச்சி முடிச்சி எம்புட்டு நேரம் காத்திட்டிருக்காக… வாங்க மாமா சாப்பிடலாம்” என்றவள் முந்திக் கொண்டு அழைக்கும் போதுதான் சுப்பு பின்னோடு வந்து உள்ளே நுழைந்தான்.

‘அட… இது நம்ம லிஸ்டலேயே இல்லயே… ஆடு தானாவே பலிக்கு வருது… விடக் கூடாது’ என்றவள் வஞ்சமாய் எண்ணி கொண்டு,

“நீங்களும் கண்டிப்பா சாப்பிட்டுதான் போகனும்… உள்ளே வாங்க… உள்ளே வாங்க” என்று குருவை கூட  இரண்டாம்பட்சமாய் ஒதுக்கிவிட்டு சுப்புவை அழைத்தாள் ஐஸ்.

சுப்புவிற்கு தலை முதல் கால் வரை ஜில்லென்று இருந்தது.

ஓரு ஐஸ்ஸே ஐஸ் வைக்கிறதே. அடஅடடடா ஆச்சிர்ய குறி!

ஆனால் அது எதற்கென்று சுப்புவுக்கு விளங்கவில்லையே. அதுதான் கேள்விக்குறி???

சுப்பு ஐஸ்ஸின் அழைப்பில் வானில் ஜெட் வேகத்தில் சிறகடித்து பறக்க, குரு அவன் முதுகை கிள்ளி படாரென கீழிறக்கி விட்டான்.

“என்னல… ஒரே இடத்தில ஆணி அடிச்ச மாறி நிக்குத?” என்றவன் கேட்க, அவன் கால்கள் மிதந்து பறந்து கொண்டிருந்ததை இவன் அறியானே!

‘சத்த நேரம்  நம்ம சந்தோஷமா இருந்தா இவனுக்கு பொறுக்காதே’ என்று சுப்பு மனதில் எண்ண,

அப்போது குரு அவனிடம்,

“வா ல… கை கால் அலம்பிவிட்டு வந்து சாப்பிடலாம்”  என்றழைத்தான்.

சுப்பு அப்போது ஆர்வகோளாறில்,

“நான் சாப்பிட்டு வந்து கை கால் அலம்பிக்கிறேனே” என்றவன் கண்ணிமைக்காமல் ஐஸ் சாப்பாடு பரிமாறுவதை பார்த்து கொண்டிருந்தான். 

“அடச்சீ வா” என்று குரு தலையில் அடித்து அவனை அழைத்து கொண்டு போனான்.

எல்லோரையும் வரிசையாய் ராகினி அமர வைத்து பரிமாறினாள். ஷிவானி தானும் பரிமாறுவதாக கூற அவள் வேலை செய்து களைத்திருப்பாள் என்று அவர்கள் அவளை ஓரமாய் நிற்க வைத்துவிட்டனர்.

ஷிவானிக்கு ஆரம்பத்திலிருந்தே இவர்களின் இந்த தீடீர் அன்பிற்கான காரணம் புரியவில்லை. இருப்பினும் அவளுக்கு அது இன்பகரமாய் இருந்தது.

பாவம்! இதற்கிடையில் வேதாதான் ரொம்பவும் தவிப்புக்குள்ளானார். எப்படியாவது மகளை சமைக்க விடாமல் தடுத்துவிட முயல,

அவரின் முயற்சிகள் ஒன்றும் பலிக்கவில்லை. மற்ற எல்லோரிடமும் கூட அவள் சமையல் பற்றி புரிய வைக்க அவர் முயல அதை யாரும் சரியான அர்த்தத்தில் புரிந்து கொள்ளவில்லையே. கடைசியில் விதியே என்று அவரும் சாப்பிட அமர்ந்தார்.

எல்லோருக்கும் ராகினியோடு சேர்ந்து ஐஸ்ஸும் பரிமாறினாள்.

அதே நேரம் ஐஸ் அவள் பரிமாறிய உணவு வகைகள் எல்லாவற்றையும் சுப்புவிற்கு மட்டும் இரண்டு மடங்காய் வைத்தாள்.

குரு அப்போது ஐஸ்ஸிடம், “என்னல நடக்குது இங்க… சுப்பு இலையில மட்டும் எல்லாத்தையும் இரண்டு இரண்டா வைக்குதீக” என்றவன் கேட்க,

“இல்லையே சரியாதான் வைக்குதேன்” என்று சமாளித்துவிட்டு ஓடிவிட்டாள் ஐஸ்.

“ஐஸ்ஸுக்கு என் மேல ஒரு இதுன்னு நான் சொன்னேனே கேட்டியா?”

“எதுல?” என்று குரு புரியாமல் குழம்பினான்.

“அதான்ல காதல்”

“த்தூ… வாயை மூடிட்டு சாப்பிடல”

“ஏன்ல இப்படி பொறாமையில பொங்குதே… உங்க அக்கா மவ என்னை பார்க்கிறது உன்னால பொறுத்துக்க முடியலயோ?!” என்க,

“சுப்பு வேணாம்” என்றவன் கர்ஜனனாய் ஒரு பார்வை பார்க்க அதற்கு மேல் மறுவார்த்தை பேசாமல் சுப்பு தலையிறங்கி சாப்பிட ஆரம்பித்தான்.

ஷிவானி எல்லோரின் பாராட்டுக்காகவும் ஆவலாய் எதிர்பார்த்திருக்க, ராகினியும் ஐஸ்ஸும் முற்றிலும் அவள் எதிர்பார்ப்பிற்கு நேர்மறையாய் எதிர்பார்த்திருந்தனர்.

இவர்களின் எதிர்பார்ப்பில் ஷிவானியின் எண்ணமே பலித்தது.

எல்லோருமே ஆ ஓஹோ என்று இவள் சமையலை பாராட்ட ராகினியும் ஐஸ்ஸும் ஸ்தம்பித்தனர்.

இது நிஜம்தானா? இப்படி கூட நிகழுமா? என்று இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து அதிர்ந்தனர்.

இப்போது ஷிவானி முந்தி கொண்டு, “ஐஸ்ஸும் ராகினியும் இல்லன்னா இவ்வளவு ஐட்டம்ஸும் செஞ்சிருக்க முடியாது” என்று அவர்களுக்கும் சேர்த்தே பாராட்டை பெற்று தந்தாள்.

கனகா தன் மகளை வியப்பாய் பார்த்து, “அதென்னடி வீட்டில ஒரு சுடுதண்ணி கூட காய வைச்சதில்ல… இங்க அக்காவுக்கு இம்புட்டு உதவி செஞ்சிருக்க” என்று கேட்க அசடு வழிந்த புன்னகையோடு,

“நான் எதுவும் பண்ணலாம்மா… எல்லா அக்காதான்” என்று ஐஸ்ஸும் ராகினியும் கோரஸாக சொல்ல குரு மட்டும் அவர்கள் இருவரையும் நம்பாமல் சந்தேக பார்வை பார்த்து கொண்டிருந்தான்.

இறுதியாய் உணவு முடிந்து எல்லோரும் கை அலம்பி கொண்டு செல்ல, சுப்பு கொள்ளை புறவாசலில் தன் நண்பனை தரதரவென இழுத்துவந்து கோபம் பொங்க,

“நண்பனால நீ… இப்படி என்னைய கூட்டிட்டு வந்து கொல்ல பார்க்கிறியே…  என் அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் நான்தான்ல ஒரே மவன்” என்றவன் பொறுமினான்.

குரு துணி துவைக்கும் கல்லில் அமர்ந்து கொண்டு, “எனக்கும் மட்டும் தெரியுமால… அவக இம்புட்டு கேவளமா சமைப்பாகன்னு” என்றான்.

“இருந்தாலும் உன் குடும்பத்தில இருக்கிறவங்க எல்லா ஒண்ணா சேர்ந்து இப்படி புளூக கூடாது”

“அதுக்கு பேர்தான்ல பாசம்”

“நீங்க பாசம் வைச்சி எப்படியோ நாசமா போங்கல… எதுக்குல என் உசிரை வாங்க பார்த்தீக… இந்த கன்னி பையன் சாபம் உங்களை அப்புறம் சும்மா விடாது” என்று சுப்பு நிறுத்தாமல் புலம்ப குரு உரக்க சிரிக்க,

“என் கஷ்டம் உனக்கு சிரிப்பா இருக்கா இல்ல” என்று சுப்பு கேட்டு கடுப்பானான்.

“ஏம்ல ஓவரா பேசுத… நானும் உம்மை பார்க்கத்துல உட்கார்ந்து… அதையே சாப்பாட்டாதான்ல சாப்பிட்டேன்”

“நீ அந்த மலேசியாகாரி களிமண்ணையே உருட்டி வைச்சாலும் சாப்பிட்டிருப்பீக, உனக்கு அம்புட்டு கிறக்கம் அவக மேல… எனக்கு ஏம்ல அந்த தலையெழுத்து”

“உனக்குதான் ஐஸ் இன்னைக்கு பாசத்தோட பரிமாறினாலே… அப்புறம் என்னல” என்றவன் சொல்லி சிரிக்க,

சுப்பு தவிப்பாய் பார்த்து, “இருந்தாலும் ஐஸ்ஸுக்கு இன்னிக்கு பார்த்து இம்புட்டு பாசம் வந்திருக்க வேண்டாம்”  என்றான்.

“இன்னுமால அத நீ பாசம்னு நம்பிட்டிருக்க… அம்புட்டும் வேசம்… அவக திட்டம் போட்டுதான் உனக்கு கட்டம் போட்டிருக்கா”

“அந்த சாப்பாடு நல்லா இல்லன்னு அவளுக்கு எப்படில தெரியும்”

“அங்கதான்ல எனக்கும் குழப்பம்… சாப்பாடு நல்லா இல்லன்னு முன்னமே அவளுக்கு தெரியுமா?… இல்ல
ராகினியும் ஐஸ்ஸும் சாப்பாட்டை நல்லா இல்லாம செஞ்சிருப்பாகளா?!” என்றவன் குழப்பமுற கேட்க,

“இருக்கும் குரு… உன் அக்கா மவளுங்க இதையும் செய்வாளுக… இதுக்கு மேலயும் செய்வாளுக” என்றான் சுப்பு அழுத்தமாக!

“அப்படிங்கிற”

“சத்தியமா செஞ்சிருப்பாளுக” என்றான். சுப்பு இத்தனை தீர்க்கமாய் சொல்வதற்கு காரணம் ஐஸ்ஸின் புதுவிதமான நடவடிக்கை இப்போது அவனுக்கு புரிந்திருந்தது.

அவள் இன்று செய்த வேலைக்கு தாங்க முடியாத கடுப்பில் இருந்தான் சுப்பு.

குரு ஆழ்ந்த யோசனையோடு, “இருக்கட்டும் அவளுங்களுக்கு வைச்சுக்கிறேன் கச்சேரி” என்றவன்

சுப்புவை அனுப்பிவிட்டு வீட்டிற்குள் ராகினியையும் ஐஸ்ஸையும் தேடி நுழைந்தான்.

அவர்கள் இருவரும் அப்போது சமையலறையில் ரகசிய கலந்தலோசனையில் இருந்தனர்.

“நான் இதுல உப்பு அள்ளி கொட்டினேனே” என்று ஐஸ் சொல்ல  ராகினி அதை வாயில் வைத்து பார்த்துவிட்டு,

“சீ… உவேக்” என்று முகத்தை சுளித்தாள்.

அவர்கள் எல்லாவற்றையும் வாயில் வைத்து பார்த்துவிட்டு சகியாமல்,

“என்னல?… இதையாம்ல அந்த பெரிசுங்கெல்லாம் இப்படி பாராட்டினாங்க” என்று ஐஸ் கடுப்படித்தாள்.

அப்போது ராகினி அவள் காதோரம், “ஏ ஐஸ்… மாமா” என்றவள் சொல்ல,

“ஆமால… மாமா கூட எதுவுமே சொல்லாம சாப்பிட்டாக” என்று ஐஸ் சொல்லவும் ராகினி அவள் கரத்தை கிள்ளிவிட்டாள்.

“இப்ப எதுக்கல கிள்ளின?” என்று ஐஸ் ராகினியை முறைக்கும் போது குரு அவர்கள் பின்னோடு நின்று கொண்டிருந்தான்.

ராகினி ஏற்கனவே பதட்டத்தில் நிற்க ஐஸ் எச்சிலை விழுங்கி கொண்டு அச்சப்பட்டு கொண்டிருந்தான்.

குரு உச்சபட்ச கோபத்தோடு அவர்கள் இருவரின் காதையும் பிடித்து திருகினான்.

“என்னல செஞ்சி வைச்சிருக்கீங்க?” என்றவன் கேட்டு கொண்டே அவர்கள் காதை பிடித்து வெளியே இழுத்து கொண்டு வர,

“மாமா மாமா விடுங்க மாமா” என்று கெஞ்சி கொண்டே வந்தனர்.

அப்போது அந்த காட்சியை பார்த்த முருகவேல்,

“ஏம்ல… பிள்ளைங்க காதை பிடிச்சிருக்க… வலிக்க போகுது… விடுல” என்று  குருவிடம் அவர் கோபம் கொள்ள

தன் தந்தையின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து குரு தன் கரத்தை எடுத்துவிட்டு,

“இவளுங்க இரண்டு பேரும் என்ன பண்ணாங்கன்னு கேளுங்க ஐயா” என்க,

“அது வந்து தாத்தா” என்று பம்மினார் இருவரும்.

குரு அப்போது எல்லோரையும் வெளியே அழைத்தவன் வேதாவிடம், “ஷிவானி எங்க?” என்று கேட்க,

“அவங்க அப்பா கூட போஃன்ல பேசிட்டிருக்கா” என்றார்.

குரு அப்போது ராகினியும் ஐஸ்ஸும் செய்த சேட்டைகளை கூற கனகம் ராகினியை முதுகிலேயே மொத்து மொத்தென்று மொத்துவிட்டாள். ஐஸ்ஸும் தன் தாயிடம் செம மாத்துவாங்க வேதாதான் இடைபுகுந்து அவர்களை காப்பாற்றினார்.

“ஏதோ தெரியாம பண்ணிட்டாங்க… விடுங்க” என்று சொல்ல,

தங்கம் கோபமாக, “பிள்ளை கஷ்டப்பட்டு சமைச்சாக… எல்லாத்தையும் கெடுத்துப்புட்டீகளே” என்று பொறும,

கனகா கோபமாக, “நம்மல வேற அந்த சாப்பாட சாப்பிட வைச்சிட்டாளுங்க” என்று கடிந்து கொள்ள மாறி மாறி எல்லோரும் ராகினியையும் ஐஸ்ஸையும் வறுத்தெடுத்தனர்.

வேதாவால் இதையெல்லாம் கேட்டு சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

அவர் புன்னகை ததும்ப, “அய்யோ நிறுத்துங்க எல்லோரும்… ராகினிக்கும் ஐஸ்ஸுக்கும் நீங்க தேங்க்ஸ்தான் சொல்லனும்… ஷிவானியே சமைச்சிருந்தா அதை நீங்க யாரும் வாயில கூட வைச்சிருக்க முடியாது… இவளுங்க செஞ்ச குளறுபடில ஏதோ ஷிவானி சமையலை  சாப்பிடவாச்சும் முடிஞ்சிடுச்சு…  இல்லன்னா” என்று சொல்லி அவர் மீண்டும் சிரிக்க,

எல்லோர் முகத்திலும் ஈயாடவில்லை.

ராகினி  அப்போது ஐஸ் காதோரம், “இதுவே பரவாயில்லன்னு பெரிம்மா சொல்றதை பார்த்தா… அப்போ  அக்காவே நேரடியா சமைச்சிருந்தா” என்று பீதிகலந்த பார்வையோடு சொல்ல,

“ஆத்தாடி” என்று ஐஸ் அதிர்வுற்றாள்.

மற்ற எல்லோரும் இதை கேட்டு குலுங்கி குலுங்கி சிரிக்க குரு என்ன மாதிரியாக உணர்ந்தான் என்று அவனுக்கு சொல்ல முடியவில்லை.

ஆனாலும் அவன் ராகினியையும் ஐஸ்ஸையும் மன்னிக்க மனமில்லாமல்,

“நீங்க இரண்டு பேர் செஞ்ச வேலைக்கு ஒழுங்கா எல்லாத்தையும் சாப்பிட்டு காலி பன்றீங்களாக்கும்” என்க, “மாமா” என்று இருவரும் அதிர்ந்தனர்.

“மாமா ஓமால்லாம் கிடையாது… பன்றீங்க சொல்லிப்புட்டேன்” என்று மிரட்டலாய் உரைக்க எல்லோருமே குருவின் பக்கமே பேசினர். வேதா மட்டும் ஐஸ்ஸிற்கும் ராகினிக்கும் பரிந்து பேசினாலும் அவர் வாதம் பலனளிக்கவில்லை.

அந்த தண்டனையை அவர்கள் அனுபவித்தே ஆக வேண்டும். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று சொல்லவார்களே.

அது அவர்கள் விஷயத்தில் சரியாய் போனது.

அதே நேரம் குரு ஷிவானியை தேடி போக அவள் தன் தந்தையோடு அளவளாவி கொண்டிருந்தாள்.

அவள் சமைத்த விஷயத்தையெல்லாம்  சபரியிடம் தெரிவிக்க அவருக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. அதே நேரம் எல்லோரும் தன் சமையலை பாராட்டியதாக ஷிவானி மேலும் சொல்ல அவருக்கு ஆச்சர்யமானது. உலக அதிசயம் ஏதோ நிகழ்ந்து தன் மகள் நன்றாக சமைத்துவிட்டாலோ என்று கற்பனை செய்து கொண்டார்.

இப்படியாக அவர்கள் இருவரும் உரையாடி முடித்திருந்தனர்.

ஷிவானி பேசியை அணைத்துவிட்டு ஏதோ யோசனையில் அப்படியே ஆழ்ந்தபடி வாசற் படிக்கெட்டில் அமர்ந்து கொண்டிருந்தாள்.

குரு வந்து நிற்பதை கூட அவள் உணராமல் இருக்க,

“ஷிவானி” என்றழைத்தான் குரு.

அவனை அவள் நிமிர்ந்து பார்க்க,

“சாப்பிட்டியா?” என்று கேள்வி எழுப்பினான் குரு.

“இல்ல… தோ போய் சாப்பிடனும்” என்றவள் எழுந்து கொள்ள,

“போய் சாப்பிடுங்க… அப்பதான் நீங்க எந்த லட்சணத்தில சமைக்கிறீங்கன்னு உங்களுக்கு தெரியும்” என்றான் கோபமாக!

“என்ன சொல்றீங்க மாம்ஸ்?” அவள் பார்வைகளை அகல விரித்தபடி கேட்க

“ஹ்ம்ம்… சுரக்காய்ல உப்பில்லைனு சொல்லுதேன்” என்றவன் எகத்தாளமாய் உரைத்தான்.

“நான்தான் சுரக்காயே சமைக்கிலையே மாம்ஸ்… அப்புறம் எப்படி?” என்றவள் சொல்லி தோள்களை குலுக்க கடுப்பேறியது அவனுக்கு.

குரு  தலையிலடித்து கொண்டு,

“ஏம்ல… உனக்கு நான் சொல்றது விளங்கிலயா இல்ல விளங்காத மாறியே நடிக்கிறீகளா?”

“என்ன்னு கொஞ்சம் புரியிற மாறி சொல்றீங்களா?” இப்போது அவள் பதிலுக்கு முறைத்தாள்.

“நீ படுகேவளமா சமைச்சிருக்கேன்னு சொல்லுதேன்… உன் மரமண்டையில உறைச்சிதா” என்றவன் முதத்திற்கு நேராய் தன் கரத்தை நீட்டி இடித்துரைக்க அவனை ஏற இறங்க பார்த்தவள் அலட்டிக் கொள்ளாத பார்வையோடு

“சும்மா என்ன டீஸ் பன்னனும் சொல்லாதீங்க… எல்லோரும் நல்லா இருக்குன்னுதானே சொன்னாங்க… ஏன் நீங்களும் உங்க ப்ரண்டும் கூடதான் சாப்பிடீங்க” என்றவள் கேட்க,

“சாப்பிட்டோமா?  செத்து பிழைச்சோம்ல… சமைக்க தெரியலன்னா ஏன்ல சமைக்குத… உன்னையெல்லாம் யாருல சமைக்க சொன்னா… நல்ல வேளை… அப்பத்தா இதெல்லாம் எனக்கு செரிமானம் ஆவாதுன்னு சாப்பிடில… இல்லன்னா அவக நிலைமை” என்று பொறிந்து தள்ளினான்.

“போங்க மாம்ஸ்… சும்மா ஓவரா கலாய்க்காதீங்க… நான் செஞ்சதெல்லாம் இன்டிர்நேஷனல் டிஷ்… உங்களுக்கு அதோட டேஸ்டு பிடிக்கலன்னு சொல்லிட்டு போங்க… ஆனா என் சமையலை பத்தி குறை சொல்லாதீங்க… சொல்லிட்டேன்” என்றவள் சொல்லிட்டு அவனை நிராகரித்து திரும்பி நடக்க,

“ஏ ஷிவானி” என்றவள் கரத்தை பிடித்து நிறுத்தி,

“உனக்குதான் எதுவும் உறுப்பிடியா வரலல… பேசாம என்னை கட்டிக்கிட்டு என்கூட இங்கனயே இருந்திருங்க ” என்றவன் சொல்ல  அவள் கோபமாய் அவன் கரத்தை உதறிவிட்டாள்.

“அதெல்லாம் முடியாது… என்னோட எய்ம் பெரிய பைஃவ் ஸ்டார் ஹோட்டலில் பெரிய சீஃப் குக்காகனும்… அப்புறம் ப்யூச்சர்ல பெரிய ஹோட்டல் நடத்தனும்” என்றவள் தன் லட்சியத்தை உரைக்க,

“விளங்கிடும்” என்றவன் அலுத்து கொண்டான்.

“என்ன சொன்னிங்க?” என்று அவள் முகம் கடுகடுக்க அவனை முறைக்க

“உன்னைய சீஃப் குக்கா போட்டா அந்த ஹோட்டல் விளங்கிடும்னு சொன்னேன்” என்றவன் அவளை பார்த்து எள்ளி நகைத்தான்.

“அதை பத்தி எல்லாம் நீங்க கவலைபடாதீங்க… ஓகே” என்று சொல்லிய மறுகணம்

அவள் கோபம் தாளாமல்  செல்ல பார்க்க மீண்டும் அவள் கரத்தை பிடித்து தன்னருகில் இழுத்தான்.

இம்முறை வெகுநெருக்கமாய் அவன் தேகத்தை அவள் உரசி நிற்க,

“மாம்ஸ்” என்றவள் திகைப்புற்றாள்.

“ஏன்ல என்னை போட்டு படுத்துத… உனக்கு என்னல வேணும்… பெரிய ஹோட்டல் கட்டனும்… அம்புட்டுதானே… செய்வோம்ல… நம்ம மெஸ்ஸை பெரிய ஹோட்டலா மாத்திடுவோம்… நீ அதுக்கு ஓனரா இருந்துட்டு போ… என்னையும் ஹோட்டலையும் நீ பார்த்துக்கிடு” என்று இறங்கிய தொனியில் சொல்லியபடி அவளை கிறக்கமாய் பார்த்தான்.

அவள் எந்தவித எதிர்வினையும் காட்டாமல் அவனை வெறுமையாய் பார்த்தவள்,

“நீங்க நினைச்சதெல்லாம் நடக்காது… அன் நான் நாளைக்கு சென்னைக்கு போறேன்…  அடுத்த நாள் காலையில மலேசியா ப்ளைட் ஏற போறேன்” என்று சாதாரணமாய் சொல்ல, குரு அதிர்ச்சியில் அவளை விட்டு விலகி வந்தான்.

ஷிவானி மேலும், “டேட் போஃன்ல அதை பத்திதான் சொல்லிட்டிருந்தாரு… டிக்கெட் கன்பாஃர்ம் ஆயிடுச்சான்… ஸோ… ” என்று இடைவெளி விட்டு அவனை பார்த்தவள்,

“ஐ ஹேவ் டூ கோ” என்றாள் அழுத்தமாக!

“என்கிட்ட ஒருவாரம் இருக்கேன்னு சொன்னிக… மறந்திட்டீகளா?!” என்று அவன் தவிப்பாய் வினவ அவள் வேதனையான பார்வையோடு,

“டிக்கெட் கன்பாஃர்ம் ஆன பிறகு நான் என்ன பண்ண முடியும் மாம்ஸ்?” என்றாள்.

“ப்ச்… நாளைக்கு சின்ன அக்கா மாமாவெல்லாம் உன்னைய பார்க்க வர்றாங்களே?” என்றவன் தெரிவிக்க, அது அவளை நிறுத்த முடியுமா என்று அவனுக்கு கிடைக்கபெற்ற ஒரு சின்ன காரணம்தான்.

“சீக்கிரம் வந்துட்டா… பார்த்துட்டு கிளம்பிறேன்… இல்லன்னா நெக்ஸ்ட் டைம்” என்றவள் தீர்க்கமாய் சொல்ல,

“அப்போ நாளைக்கு கண்டிப்பா புறப்படிறீக” அதிர்ச்சி மாறாமல் அவளை கேட்டான்.

அவள் தலையை கவிழ்ந்து கொண்டு, “ஹ்ம்ம்” என்றாள் எட்டி பார்த்த கண்ணீரை மறைத்து கொண்டு!

“அப்போ நீங்க சொன்ன மாறி என்னைய நோஸ் கட் பண்ணிட்டு போக போறீக” என்றவனின் உதட்டில் வலி மிகுந்த ஓர் நகைப்பு.

அந்த புன்னகை அவளை கூர்மையாய் குத்தி கிழிக்க அவள் எந்த வார்த்தையால் தன் மனநிலையை விளக்க முடியும் என்று  ஊமையாய் நின்றுவிட்டாள்.

குரு பொறுமையிழந்து சட்டென்று அவள் கன்னத்தை தன் கரங்களால் தாங்கி கொண்டவன்,

“உனக்கும் என்னைய கட்டிக்கனும் ஆசை இருக்குதானே?!” என்று கேள்வி எழுப்ப அவள் முகம் வெளிறி போனது.

இம்முறை இல்லையென்று பொய் சொல்ல அவள் மனம் ஓப்புக்கொள்ளவில்லை.

“டேட் சம்மதிச்சா” என்று மேலே சொல்ல முடியாமல் அவள் தடுமாறி நிறுத்த,

அவன் பட்டென தன் கரத்தை பின்வாங்கி கொண்டு வேகமாய் அந்த இடத்தை விட்டு அகன்றான்.

ஷிவானியின் மனம் இப்போதைக்கு எந்த முடிவையும் சரியாய் எடுக்க முடியாமல் மதில் மேல் பூனையாய் கிடந்து தவித்தது.

error: Content is protected !!