காலம் யாவும் அன்பே 33
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நிற்க, இயலுக்கு அவன் அருகாமை பதட்டத்தை உண்டாக்கியது. அவள் எப்போதும் ரசிக்கும் அவனது முறுக்கேறிய கைகள் இன்று பாரபட்சமில்லாமல் அவள் கண்களுக்கு முழுதாக விருந்தானது.
அதைப் பார்த்ததும் தலை குனிந்து கொண்டாள். அவள் பார்வை சென்ற விதத்தைக் கண்டவன் அவள் மனதை அறிந்து கொண்டான்.
வேண்டுமென்றே அவளைத் தன்னை மீண்டும் பார்க்க வைத்தான்.
“இயல்”
“ம்ம்ம்….” மெல்ல நிமிர்ந்து அவனைப் பார்க்க,
கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக் கொள்ள , அவனது ஆளுமை விரிவடைய .. அவளுக்குத் தான் மூச்சு முட்டியது.
‘வாடி வா… பீலிங்க்ஸ கண்ட்ரோல் பண்றியா.. அதுவும் என்கிட்டயே…விடுவேனா…’ மனதில் நினைத்தபடியே
“எதுக்கு இந்த நேரத்துல என் ரூமுக்கு வந்த, வந்ததும் கதவை வேற சாத்திட்ட… என்ன வேணும்?” சற்று கடுப்புடனே கேட்டான்.
காலையில் தன் உணர்வுகளை மதிக்காமல் அவள் பேசியதற்கு பதிலடி கொடுக்க..
“அது… .. வந்து… உங்க கிட்ட” இயல் சற்று இடைவெளி விட,
“என்ன என்கிட்ட…??!” ஒற்றைப் புருவத்தை ஏற்றி அவளைக் கூர்மையாகப் பார்க்க,
அவளுக்கு சொல்ல வந்தது கூட தொண்டைக் குழியில் நின்றது.
‘சொல்ல வந்ததைக் கூட சொல்ல விடாம பண்ண இவனால தான் முடியும்’
அவனது ஆறடிக்கு நிமிர்ந்து நின்று கீழ்க்கண்ணால் அவளை பார்க்க, அவளோ அசையாமல் கண்களுக்கு நேராகத் தெரியும்அவனது மார்பை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள் .
“இன்னும் எவ்ளோ நேரம் அங்கேயே பார்த்துட்டு இருப்ப… எதுக்கு வந்தன்னு சொல்லிட்டு கெளம்பு.. அப்புறம் ரதி யா நினைக்கறேன்வர்மா வா மாறிட்டேனு எரிச்சலை கிளப்பாத.. ” காலையில் அவள் சொன்னதைக் குத்திக்காட்ட,
அவளுக்கும் உடனே உரைத்தது. உடனே வாய் திறந்து சொல்லிவிட்டாள்.
” நான் அப்டி பேசினது தப்பு தான். நீங்க அப்படி நினைக்கலன்னு புரிஞ்சுக்கிட்டேன். அவனை நிமிர்ந்து பார்த்துச் சொல்ல,
“ஓ! இப்போ மட்டும் உனக்கு எப்படி புரிஞ்சுச்சு !? ” கட்டி இருந்த கையை நீட்டி ஷார்ட்ஸ் பாக்கெட்டுக்குள் விட்டுக் கொள்ள , இரண்டடி பின்னால் நகர்ந்தாள்.
“அட.. பயமா … உனக்கா!” அவளின் அதிர்வைக் கண்டு நக்கல் செய்ய,
‘வாயே திறக்காம இருந்தான்.. இப்போ பாரு நக்கல…’ மனதில் நினைத்துக் கொள்ள ,
“ம்ம் அதெல்லாம் இல்லை.. காலைல நீங்க சொன்னப்பவே புரிஞ்சுடுகிச்சு .. அப்போவே சாரி சொல்ல உங்க பின்னால வந்தேன். ஆனா நீங்க அதுக்குள்ள போயிட்டீங்க.. ” பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல,
அவனுக்கும் சற்று பாவமாகத் தான் தோன்றியது.
சிறிது நேரம் மௌனத்திற்குப் பிறகு…
“சோ உனக்கு நான் உன்னை இயலா தான் நினைக்கறேன்னு புரியுது.. அப்படித் தானே.. “
அவளை நெருங்கி வர,
” ம்ம்ம்… ” தலை குனிந்த படியே நின்றாள்.
“சோ .. அப்புறம்.. “
“அப்புறம்..”?” அவளும் இழுக்க ,
“இதுனால நீ என்ன சொல்ல வர …” குனிந்து அவள் காதருகில் கேட்க ,
இப்போதாவது தன்னை விரும்புவதை சொல்லிவிட மாட்டாளா என எதிர்ப்பாக்க,
அவளும் விரும்புகிறேன் என சொல்ல துடித்துக் கொண்டிருந்தாள் தான். ஆனால் நேருக்கு நேர் இப்படி நிற்க வைத்துக்கேட்பவனிடம் என்ன சொல்வது.
அவனின் எதிர்ப்பார்ப்பும் புரியாமல் இல்லை…
இயற்கையாக வர வேண்டிய ஒன்று.. சொல்லத் தான் வந்தாள் ஆனால் அனைத்தும் இப்போது தொண்டைக் குழியில் நின்றது.
காதருகில் அவன் மூச்சு வேறு இம்சை செய்ய,
” நான் உங்களை வாகி யா தான் நினைக்கறேன், நீங்களும் என்னை இயலா தான் நினைக்கறீங்க..காலைல நான் அப்டிபேசினதுக்கு மன்னிச்சிடுங்க … அது தான் சொல் வந்தேன் வேற ஒன்னும் மில்ல. ” அவன் எதற்க்காக காத்திருந்தானோ அதனைசொல்லாமல் தவிர்க்க,
” அது மட்டும் தானா.. ” அலுத்த குரலில் கேட்டான். அவனுக்கும் எரிச்சல் மூண்டது.
‘அதான் இவ்ளோ தூரம் வந்துட்டியே… சொல்லித் தொலையேன் டி.. காக்க வைக்கறதுல ஒரு அல்ப சந்தோஷம்… ம்ம்ம்ம் சொல்லவைக்கறேன் டி ‘ அவனது அடமென்ட் குணம் எட்டிப் பார்த்தது.
அவள் ஆம் என தலையை மட்டும் அசைக்க,
“ம்ம் சரி.. எனக்கும் அது தான் வேணும். .. உன்னோட அப்பாலஜி அக்செப்ட்ட் சரி கிளம்பு .. ஒருத்தன் நைட்ல ரூம்ல எப்படிஇருப்பான்னு கொஞ்சம் கூட யோசிக்காம இனிமே இப்படி வராத.. எதுவா இருந்தாலும் காலைல சொல்லு. யு மே கோ..!!” விரட்டாதகுறை தான்.
அவளுக்குத் தான் அவன் வார்த்தைகள் சுட்டது.
ச்சே! என்ன இப்படி சொல்லிட்டான். நான் இவன் ரூமுக்குள்ள சொல்லாம வரக்கூடாதா.. வேற எவ வருவா ! அவளுக்கு அழுகையேவரும் போல ஆகிவிட்டது.
அடக்கிக் கொண்டு “தேங்க்ஸ் ” என்றுவிட்டு கிளம்பினாள்.
அவனும் அவளை விட்டு விலகி வழி கொடுக்க, திரும்பி கதவைத் திறந்தாள்.
” ஒரு நிமிஷம் ..” அவன் வார்தைகள் தடுக்க மீண்டும் திரும்பிப் பார்த்தாள்.
” உனக்கு என் மேல நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனா நாம பார்த்த வர்மாவும் ரதியும் நிஜம். அவங்க இன்னும் அந்த காலச்சுழல்ல மாட்டிகிட்டுத் தவிக்கறாங்க,
சேனா சித்தர் நாம தான் அவங்களுக்கு உதவனும்னு சொல்லியிருக்காரு. அவர் நம்மள உருவாக்கினதே அவங்களுக்காகத் தான்.
(தாங்கள் பிறந்த முறையைப் பற்றி சேனா சொன்னதை அவளிடம் கூறினான் ).
அட்லீஸ்ட் அவர் மேல உனக்கு நம்பிக்கை இருக்கும் னு நினைக்கறேன்.
அவரோட முயற்சிக்கு நாம உதவரோம்னு அவர் கிட்ட சொல்லிட்டேன்.
அதுக்காக சில பரிகாரம் எல்லாம் பண்ணனும். அவங்கள காப்பாத்தற வரைக்கும் நீ என்கூட இருக்கணும்.
அதுக்கு பிறகு உன் வாழ்க்கைல நான் வர மாட்டேன்.
அது வரை இருப்பன்னு நம்பறேன்.
குட் நைட்.
அது வரை அவன் தன்னையும் சேர்த்து உதவுவதாக சேனாவிடம் சொன்ன வரை அவளுக்கு இனிப்பாகவே இருந்தது. கடைசியாகக்கூறிய வார்த்தைகள் ஏற்கனவே காயம் பட்ட மனதை மீண்டும் குத்திக் கிழித்தது.
அவள் வெளியே சென்றதும் கதைச் சாத்திக் கொண்டு விட்டான்.
‘எனக்குப் பேச இடம் கொடுக்காமல் அவனே பேசி முடித்து விட்டு , இப்போது வாழ்க்கைல வர மாட்டானாமே … திமிர் .. காலைலஇயல் எப்படி டா இருக்கன்னு கேட்டான்… இப்போ அந்நியமாயிட்டேனா …!’ கண்களில் நீர்த்த துளிர்த்தது.
‘ காலையில் அவன் சொன்னது போல நீயும் இப்போது அவனை விரும்பறேன்னு சொல்ல வேடனடியாது தான.. அதுக்குத் தானே வந்த…அதை ஏன் நீ சொல்லல…’ என்று அவள் மனம்.
‘அதான் அவன் சொல்ல விடாம பண்ணிட்டானே….!’ கண்ணீர் கோடாக வழிய தன் அறைக்குச் சென்றாள்.
கதவை சாத்திவிட்டானே தவிர அவன் அங்கேயே தான் நின்றான். அவளை வேண்டுமென்றே காயப்படுத்த அவன் விரும்பவில்லை. இருந்தாலும் அவன் சொன்ன வார்த்தைக்கு , ‘நம்ம ரெண்டுபேரோட வாழ்வும் ஒன்னு தான் ‘ என அவள் கூற வேண்டும் என்று தான்அவன் அப்படி பேசியதே!
விரும்புகிறேன் என்ற ஒற்றை வார்த்தைக்குத் தான் அவன் மனம் ஏங்கியது.
இவன் சொல்லிவிட்டுத் தவிக்க, அவளோ சொல்லத் தவித்தாள்.
மனம் கனக்க இருவரும் படுக்கையில் விழுந்தனர்.
இருவரையும் மணக்க களைப்பும் உடல் களைப்பும் அழுத்த உறங்கிப் போயினர்.
காலையில் சேனா அவர்களை கோவிலுக்கு வரச் சொல்ல, இருவரும் அங்கே சென்றனர்.
கூடவே வந்தனாவுக்கு ஆகாஷும் வர, அவர்களுக்குள் இருந்த பூசல் உள்ளேயே இருந்தது. வெளிக்காட்ட இருவரும் விரும்பவில்லை.
ஊர் எல்லையைத் தாண்டியதும் வரும் ஒத்தையடிப் பாதையில் நடந்து செல்ல, அங்கேயே அவர்களை வழி மறித்தார் சேனா.
” வாங்க .. நாம இங்கேயே உட்கார்ந்து பேசுவோம். இது வெளில யாருக்கும் தெரியாக் கூடாது” அவர்களை ஆள் நடமாட்டமில்லாதஅந்த இடத்தில் ஒரு மண் மேட்டில் அமரச் சொன்னார்.
இருவரும் அருகே அமராமல் எதிரெதிரே அமர்ந்தனர்.
அதிலேயே இவர்கள் இன்னும் எலியும் பூனையுமாகத் தான் இருக்கிறார்கள் என்று விளங்க,
இதை சரி செய்யவே பரிகாரம் இன்னும் பலமாக மாற்ற நினைத்தார்.
“ரெண்டு பெரும் நான் சொல்வதை கவனமா கேளுங்க.. இது உங்க ரெண்டு பேர் சம்மந்தப் பட்ட விஷயம் இல்ல. என்னுடையஉயிருக்கு உயிரான தோழன் வர்மாவின் வாழ்வு.
அதனால் இனி செய்யப் போகும் பரிகாரங்களில் நீங்கள் இருவரும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வாழ்வின் நோக்கமேஅது தான்.
இன்றிலிருந்து சரியாக முப்பதாவது நாள் திருவாதிரை நட்சத்திரம் வர உள்ளது. அன்று தான் என் நண்பனை நான் மீண்டும்உயிருடன் பார்த்து அவனை காட்டித் தழுவப் போகும் நாள். வர்மாவும் ரதியும் மீண்டும் இந்த உலகுக்குத் திரும்பப் போகும் சுபநாள். இதற்காகத் தான் இத்தனை காலங்கள் தவ வாழ்வு வாழ்ந்தேன்.
இதில் நீங்கள் இருவரும் சிறு பிழையும் செய்யக் கூடாது. எனக்கு வாக்கு கொடுங்கள்” சேனா காய் நீட்ட,
இருவருக்குமே சொந்த விருப்பு வெறுப்புகளைத் தாண்டி அவர்களை காக்க வேண்டும் என்ற ஆணித்தரமான உள்ளுணர்வு இருந்துகொண்டே தான் இருந்தது.
அது தங்களின் ரத்த சம்மந்தத்தால் வந்ததோ அல்லது அவர்களோடே இத்தனை நாள் காலப் பயணம் செய்ததால் வந்ததோ! ஆனால் அவர்களை மீண்டும் மீட்பதில் இருவரும் உறுதியாக இருந்தனர்.
இருவரும் ஒரு சேர சேனா வின் கை மீது சத்தியம் செய்தனர்.
“நல்லது. முதல் கட்டமா நீங்க ரெண்டு பேரும்..இனிமே ஒரே அறையில தான் தங்கனும். ஒரே அறையில தான் தூங்கனும்.
ஒரே தட்டில் சாப்பிடனும்…
இரவு தூங்கும் முன்பு இருவரும் ஒரே தம்ளரில் பால் அருந்த வேண்டும்..”
“என்ன…!?” இருவரும் ஒரு சேர அதிர்ந்து பார்த்துக் கொள்ள,
‘மாட்டுனியா மங்குனி … இது போதுமே எனக்கு… உன்ன வெச்சு செய்யறேன்’ உள்ளே குதூகலமாக இருந்தான் வாகி… ஆனாலும் வெளியே அதிர்வைக் காட்டினான்.
இயல் உள்ளுக்குளே நடுங்கிப் போனாள். ‘இவன் பேசாம இருந்தா கூட பரவால்ல.. இப்போ கொஞ்சம் பேச வேற ஆரம்பிச்சுட்டான்… இனி கை பட்டா குத்தம் கால் பட்டா குத்தம் தான்.கடவுளே என்னை நீ தான் காக்கணும்…’ மனதில் வேண்டுதல் வைத்தாள் இயல்.
“ஐய்…. இனிமே வீட்டுல செம சீன் தான்…” வந்தனா ஆகாஷின் காதைக் கடிக்க,
“ நாம பேபி?? நாமளும் ஃபாலோ பண்ணுவோமா இதை?” ஆகாஷும் மெலிதாகக் கேட்டான்..
“ஐய… அலையாத.. நாம ஏற்கனவே ஒண்ணா தான் இருக்கோம். அவங்க தான் கோல்ட் வார் நடத்திட்டு இருக்காங்க..” வந்தனா சீற,
“ஈஈஈஈ…” என்றான்.
“வர்மா ரதியா நீங்க உங்கள கொஞ்சம் கொஞ்சமா மாத்திக்கணும்… அதுக்குத் தான் இது…” சேனா உள்ளர்த்தம் கொண்டு பேசினார்.
வாகி இதை ஏற்க்கனவே அறிந்ததால் அவனுக்கு தெளிவாகவே புரிந்தது. இயல் முகத்தில் தான் குழப்ப ரேகைகள் ஓடியது.
‘சுயத்தை தொலைத்து இன்னொருவராக மாறுவது எப்படி சாத்தியம்.’
சேனா அவளிடம் புரியும்படி எடுத்துக் கூறினார்.
“இயல்.. நீ நினைக்கறது எனக்குப் புரியுதுமா.. நீ எப்போதும் இயல் தான். அதில் மாற்றமில்லை.
இது ரதிக்காக நீ செய்யவேண்டிய ஒன்று. உன்னுடைய கடமை.
அவர்களை வெளியே கொண்டு வரும்வரை நீங்கள் அவர்களாக உங்களை நினைத்து உருவகப் படுத்திக் கொள்ள வேண்டும்.
நீங்கள் நால்வரும் நல்ல படியாக இந்த உலகில் வாழவே நான் வழி செய்கிறேன்.
அவர்களை அந்த சுழலிலிருந்து வெளியே கொண்டுவர வேறு வழியே இல்லை.
இதை நான் செய்வதற்குக் காரணம் உண்டு. இது இயற்கையை ஏமாற்றும் ஒரு வழி தான்.
வர்மாவும் ரதியும் இந்த உலகத்தில் இருப்பதாக நாம் நம்ப வைக்க வேண்டும். அதாவது உங்களைக் காட்டித் தான் வர்மா ரதியென்று நம்ப வைக்க வேண்டும்.
இரண்டு இடத்தில் ஒருவர் வாழ முடியாது என்பது தான் நியதி.
அப்போது அங்கிருப்பவர்களையோ அல்லது இங்கிருப்பவர்களையோ இயற்கை தன்னுடன் சேர்த்துக் கொள்ளப் பார்க்கும்.
அப்போது தான் என் இறைவன் மூன்றாவதாக தோன்றப் போகிறான். உங்கள் நால்வரையும் அதை வைத்துத் தான் இவ்வுலகில் தக்க வைக்கப் போகிறேன்.. அதை நான் பார்த்துக் கொள்கிறேன்.
உங்கள் நால்வரையும் காக்கும் பொறுப்பு என்னுடையது.
நீங்கள் நான் சொல்வதை மட்டும் செய்தால் போதும்.
செய்வாயாம்மா…??”
பெரிய விஷயத்தை சர்வ சாதரணமாக சொல்லி விட்டு அவளைப் பார்க்க,
அவளும் ரதி வர்மாவைக் காக்கும் பொறுப்பு தன்னுடையாதாக ஏற்று அனைத்திற்கும் சம்மதித்தாள்.
ஆகாஷும் வந்தாவும் அதிர்ந்தனர்.
ஆகாஷ் , “இது விதியையே மாத்தற விஷயம் இல்லையா…?” என வியக்க,
அவனை மட்டும் தனியே அழைத்தார். சற்று தூரம் நடந்து சென்று
“ ஆகாஷ்.. இதுக்காக நான் இரண்டாயிரம் வருஷம் போராடியிருக்கேன்.. நான் செய்வது எனக்கு நன்றாகத் தெரியும்.
இவங்க ரெண்டு பேரும் வீம்பு பண்ணிக்கிட்டு இன்னும் சேராம இருக்காங்க.. அவங்கள கணவன் மனைவியா மாத்த நீயும் வந்தனாவும் கூட எனக்கு உதவனும். ஏன்னா நீங்க தான் அவங்க கூடவே இருக்கீங்க..
நான் சொல்றது புரியுதா…” கிசுகிசுப்பாக பேச…
“ அட.. இதுல எல்லாம் நான் பெரியாளு… நீங்க கவலைய விடுங்க…
ரெண்டு பேரையும் ஒரு வழி பண்ணிடறோம்…” தெம்பாக பதில் சொன்னான் ஆகாஷ்.
வேலை சுலபமானதாகவே உணர்ந்தார் சேனா.
இனி தான் காதல் காலம் ஆரம்பம்…