மிருதனின் கவிதை இவள் 19.2
அக்னி தீரன் தன்னிடம் அன்று மிரட்டியது போலவே போலவே நடந்து கொண்டான் , என்று தவறாய் புரிந்து கொண்ட மேகா மிகவும் வேதனைக்கு ஆளானாள்.
அவளால் இதை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை ,உடனே அறையின் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தவள் , அக்னியை தான் தேடினாள் . ஆனால் எங்கு தேடியும் அவன் கிடைக்காததும் நேராக அஷோக்கிடம் வந்தவள் , அக்னியை பற்றி கேட்க , அவனோ கண்ணீரும் கம்பலையுமாக தன் முன்னே நிற்கும் மேகாவை பார்த்து ஒரு கணம் திகைத்தவன் பின்பு ,
” அவன் ஒரு வேலையா வெளியே போயிருக்கான் ” என்றான் .
ஆனால் மேகாவுக்கோ காத்திருக்கும் பொறுமை கொஞ்சமும் இல்லை ,
” எங்க போயிருக்கார் ? எப்போ வருவார் ?”என தொடர் கேள்விகளால் அவனை அவள் துளைத்தெடுக்க ,
“என்னாச்சு மா ஏதும் முக்கியமான விஷயமா ?” என கேட்டான் அஷோக் .
அவளோ ,”ஒன்னும் இல்ல அக்னி வந்ததும் சொல்லுங்க ” என கூறி கொண்டிருக்கும் பொழுதே , மயூரி தன் முகத்தை துடைத்தபடி இஷிதாவுடன் வேகமாக நடந்து வந்துகொண்டிருந்தாள் .
” எங்க போயிருந்த ?” தங்கையின் பதற்றம் நிறைந்த முகம் கண்டு வினவினாள் மேகா .
” அக்கா அது ” என ஆரம்பிக்கும் பொழுதே ,மயூரிக்கு கண்கள் கலங்கி கொண்டு வர , இஷிதா மயூரியின் கரத்தை இறுக்கமாக பிடித்து கொள்ள , சொல்ல வந்ததை சொல்லாமல் , வேகமாக தன் அக்காவை கட்டி கொண்ட மயூரிக்கு , தந்தையின் நிலைமையை எண்ணிய பயமும் , வேலனிடம் இதுவரை சிறைப்பட்டு கிடந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலும் சேர்ந்து அழுகையாக மாறியது .
” அழாத மயூரி நீ ரொம்ப தைரியமான பொண்ணு , நீ தான் என்னோட பலமே ப்ளீஸ் அழாத , அப்பாக்கு ஒன்னும் இல்லை ” என உண்மை நிலவரம் அறியாத மேகவோ தங்கையின் கண்ணீரை துடைத்து , அவளை ஆறுதல் படுத்தி , தாயின் அருகே இருக்குமாறு கூறியவள் , இஷிதாவை தனியே அழைத்ததும் தான் தாமதம் , அந்த நீண்ட காரிடாரில் அவசர நடையில் மேகாவை பார்த்தபடி வந்து கொண்டிருந்தான் தீரன் .
தொலைவிலே அவனை கண்டு கொண்ட மேகாவுக்கு ஆத்திரம் பொங்கி கொண்டு வர ,
“மேகா ” என அழைத்த இஷிதாவிடம் ,
” இஷு அம்மா , தம்பி , தங்கச்சி கூடவே இரு அவங்கள பத்திரமா பார்த்துக்கோ , நான் இப்போ வந்திர்றேன் ” என்று இஷிதாவின் அழைப்பை தவிர்த்து விட்டு, செய்தியை மட்டும் சொல்லிய மேகா ,அவசரமாக தீரனை நோக்கி நடக்க , அவனும் மேகாவை பார்த்தபடி அவளை நோக்கி வந்தான் .
‘மேகா உன்னை தேடினாள்’ என்பதை கேட்ட மறு வினாடி, மனதிற்குள் ஒருவித பரவசம் , ஆனாலும் எந்த உணர்வுகளையும் வெளிகாட்டிக்கொள்ளாமல் நிர்மலமாக இருந்தது அவனது முகம் .
காலை துவங்கி, அவளது தந்தையை அட்மிட் செய்து , வேலனை விளாசி எடுத்தது வரை என தொடர்ந்து அலைந்து கொண்டிருந்தாலும், எந்த சோர்வையும் அவன் காட்டிக்கொள்ளவில்லை . மேகா தன்னை தேடினாள் என கேட்டதுமே அவனால் அமைதியாக இருக்க முடியவில்லை , தனது காரை கூட பார்க்கிங் செய்யமல் அப்படியே அவளை காண வந்துவிட்டான் .
எதிர் எதிரே அவளும் அவனும் ! காதலோடு இரு விழிகள் ! கோபமாக அவள் வழிகள் ! கலங்க கலங்க தன் முன்னே வியர்வை வழிய நிற்கும் தன்னவளை கண்ட அக்னி ,அவளது கவலையை உள்வாங்கி கொண்டு,
” நான் இருக்கேன் டி ” என்றான் .மூன்றே வார்த்தையில் சர்வமும் அடங்கியிருக்க ,அதை ஆராய்ந்து ரசிக்கும் நிலையில் அவள் தான் இல்லை .
மூச்சு வாங்க அவனையே சற்று நேரம் பார்த்து கொண்டிருந்த மேகாவின் குரல் ,
“எதுக்கு ? என் மொத்த குடும்பத்தையும் பழி தீர்க்கவா ” என ஓங்கி ஒலித்தது .
” என்ன பழி தீர்க்கணுமா ?” என புருவம் சுருகியவனுக்கு உண்மையில் புரியவில்லை .
எப்பொழுதும் தீரனின் விழிகளில் பறக்கும் நெருப்பு அந்த நொடி மேகாவின் விழிகளில் தெரிந்தது , அவளுடைய ஆவேசம் கண்டு யோசனையில் நெற்றியை நீவியவன் ,
” என்னாச்சு ? ” என கேட்டான்.
” சொன்ன மாதிரியே செஞ்சிட்டிங்கள்ல , யு ஆர் டிஸ்கஸ்டிங் தீரன் ” என்றாள் முகத்தை சுளித்தபடி .
” ஹவ் டேர் யு? என்ன தைரியம் ,இருந்தா என்கிட்ட இப்படி பேசுவ ?” என அவனுக்குள் இருந்த மிருதன் உறுமினான் , அவனது சீற்றத்தில் அவளது ஆவேசப் பேச்சு தடைபட்டது. தீரன் இயற்கையாகவே கோபக்காரன், இதில் அவனை பார்த்து முகத்தை சுளித்தபடி ‘நீ அருவருப்பானவன் ‘ என்றால் விட்டுவிடுவானா அவன் ?p
காட்டு தீ போல அவனுக்குள் இருந்த கோபம் ,அவனது உடலெங்கும் பரவி , அவன் இதயத்தில் பற்றி எரிந்து கொண்டிருந்தது , ஆனால் மேகாவின் சோர்வான முகத்தை கண்ட தீரனுக்கு அவளிடம் தன் கோபத்தை காட்ட விருப்பம் இல்லை எனவே அவன் தனது கோபத்தை கட்டுப்படுத்தி ,
” என்ன பிரச்சனைன்னு தெளிவா சொல்லு ?இல்லைன்னா வழிய விடு ” என்றான் . அவள் மீது கோபம் தான் இருந்தும் அடக்கிக்கொண்டான்.
“புரியாதவங்களுக்கு தான் தெளிவு படுத்த முடியும் , ஆனா உங்கள மாதிரி நடிக்கிறவங்களுக்கு எப்படி தெளிவு படுத்த முடியும் ?”என்றாள் பற்களை கடித்தபடி .ஓங்கி அறைய கரங்கள் பரபரத்தது .ஒரே ஒரு அறை போதும் , தாங்க மாட்டாள் ! உடம்பில் சுத்தமாக தெம்பில்லை ! இதோ இப்பொழுதே விழுந்துவிடுவேன் என்பது போல இருந்து கொண்டு பல்லை படித்தபடி அவள் பேசும் பேச்சு அவனுக்கே வியப்பாய் இருந்தது .
” தீரன் சொன்னா அது நடக்கணும், இல்லைன்னா இப்படி தான் அரக்கன் மாதிரி நடந்துக்குவீங்க . நல்லா இருந்த என் அப்பாவை படுக்க வச்சிடீங்க, இன்னும் என் குடும்பத்தை எப்படியெல்லாம் பழி வாங்க போறீங்க ? எப்போ தான் மனுஷனா மாறுவீங்க தீரன் ?என்ன செஞ்சா இந்த வெறி அடங்கும் ?” குரல் சோர்ந்திருந்தாலும், படபடப்பு குறையாமல் மேல் மூச்சு வாங்க கத்தினாள் .
விஐபி வார்டு என்பதால் கூட்டம் இல்லை , எனினும் அவர்களை கடந்து சென்ற செவிலியர்கள் , அக்னியையும் மேகாவையும் திரும்பி திரும்பிபார்த்தபடி சென்றனர் . ஆனால் தீரனின் பார்வையோ மேகாவின் விழிகளை மட்டுமே தீர்க்கமாக மையம் கொண்டிருந்தது .
” நான் உன் அப்பாவை ஏதாவது செஞ்சிருப்பேன்னு நம்புறியா மேகா ?”அவளது விழிகளை பார்த்து கொண்டே கேட்டான் தீரன் .
” கண்டிப்பா ! அதான் அன்னைக்கே சொன்னீங்களே , உங்க விருப்பத்துக்கு யார் தடையா வந்தாலும் , அவங்களை அழிச்சிருவேன்னு , இதோ ஆரம்பிச்சிடீங்க ” என்றாள் கைகளை அசைத்தபடி ஆவேசமாக ! காதல் தான் இல்லை, நம்பிக்கையுமா இல்லை, மலர்ந்திருந்த அவனது இதயம் சட்டென்று வாடியது .
” ————— “உணர்வுகளை வெளிக்காட்டாமல் ,கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு மெளனமாக நின்றான் தீரன் .
” ஒரு விஷயம் சொல்றேன் கேட்டுக்கோங்க , என்னை , என் குடும்பத்தை தயவு செஞ்சி விட்ருங்க . இது காதல் கிடையாது தீரன் , காதல் இப்படி இருக்காது ,நீங்க என்ன செஞ்சாலும் எனக்கு உங்க மேல காதல் வராது . நான் வேற ஒருத்தருக்கு நிச்சயம் செய்யப்பட்ட பொண்ணு , என் மேல நீங்க ஆசை படாதீங்க ,உங்க எண்ணத்தை மாத்திக்கோங்க ” என்றவளின் பேச்சு ,” மேகா “என்னும் ரிதுராஜின் அழைப்பால் தடைபட ,கண்களை துடைத்து கொண்டாள் .
வேகமாக அவர்கள் அருகில் வந்த ரிதுராஜ் ,” ஹெலோ அக்னி சார் “என்றவன் , மேகாவை பார்த்து ,” டாக்டர் வந்துட்டாங்க மேகா, உன்னை கூப்பிடுறாங்க வா சீக்கிரம் ” என ரிதுராஜ் மேகாவின் கரம் பிடித்து அழைத்து செல்ல , இருவரின் பிணைந்திருந்த கரத்தை பார்த்தபடி அமைதியாக நின்றிருந்தான் தீரன் .
தீரன் மோசமானவன் தான் ! தொழிலில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு இரக்கமற்று நடந்திருக்கின்றான் தான் ! ஆனால் அதெல்லாம் அவனை சீண்டி பார்ப்பவர்களிடம் மட்டுமே . மற்றபடி ஒரு அப்பாவியை வஞ்சித்து , திட்டம் தீட்டி , இப்படி ஒரு வேதனையில் தள்ளி சுகம் காணும் அளவிற்கு அவன் ஒன்றும் கொடூரமானவன் கிடையாது .
இப்பொழுது இந்த நொடி தீரன் நினைத்தால் மேகாவை மணந்து கொள்ள முடியும் . அதே எண்ணத்துடன் தான் அவனும் இங்கே வந்தான் . ஆனால் அவளது குடும்பத்தையும், அவர்களுக்குள் இருக்கும் பிணைப்பையும் கண்ட தீரனால் , ஏனோ மேகாவை வலுக்கட்டாயமாக அவளது குடும்பத்தினரிடம் இருந்து பிரித்து , அவர்களை துன்பப்படுத்த அவனுக்கு விருப்பமில்லை .
முக்கியமாக அவளது தந்தை கோபால கிருஷ்ணனை காண காண தீரனின் மனதில் ஒருவித ஏக்கம் . ஆக அந்த நொடியே அவன் தன் முடிவை மாற்றி கொண்டான் . மேகா மட்டும் போதும் என்று இருந்தவன் , அவளுடன் சேர்த்து அவளது குடும்பத்தையும் தன்னுடைய குடும்பமாக பாவித்து அவர்களை நேசிக்க துவங்கினான் . அதன் காரணமாக மட்டுமே தன் ஆடம்பரமான சொகுசு வாழ்க்கையை விடுத்து, இங்கே இவர்களுடன் தங்கி, தனது இயல்பை தாண்டி பொறுமையாகவும் , பண்பாகவும் அவர்களுடன் பழக ஆரம்பித்தான் .
தீரனை பொறுத்தவரை தனக்கும் மேகாவுக்கும் இடையே இருக்கும் ரிதுராஜை அகற்ற வேண்டும் , அது மட்டும் தான் அவனின் குறிக்கோள் . அதற்காக தேவையில்லாமல் சினிமா பாணியில் அவளது தந்தைக்கு பணம் கொடுத்தவனை தேடி பிடித்து , அவன் மூலமாக இவருக்கு குடைச்சல் கொடுப்பதற்கும் , இவளது தங்கையை கடத்துவதற்கும் , அவரை மிரட்டி உடம்புக்கு முடியாமல் படுக்க வைப்பதற்கும் தீரன் என்ன முட்டாளா ?இல்லை இதை தாண்டி அவனுக்கு வேறு வேலை தான் இல்லையா ?
அவன் தொழிலென்ன ! அவனின் ஆதிக்கம் என்ன ! அவனது செல்வாக்கு என்ன ! ஆனால் அதையெல்லாம் விடுத்து இவர்கள் பின்னால் சுத்திக்கொண்டிருக்கிறான் ! எல்லாம் எதற்காக? மேகாவின் மகிழ்ச்சிக்காக ! மேகா மட்டும் போதும் என்று தீரன் எண்ணியிருந்தால் , அடுத்த நொடியே அவள் அவன் வீட்டில் அவனவளாக ! ஆனால் அவளுடன் சேர்த்து அவர்களையும் அவன் நேசிக்கிறான் அதற்காக மட்டுமே இவ்வளவும் ! மேகா மீது ஆயிரம் கோபம் இருக்கிறது , நிராகரிப்பின் வலியை அவளுக்கு புரிய வைக்க வேண்டும் , அவள் தனக்கு கொடுத்த வலியை அவளுக்கு திரும்பி கொடுக்க வேண்டும் , கொடுக்க தான் போகிறான் ! ஆனால் அதை காரணமாக வைத்து அவளது குடும்பத்தை அவனால் என்றுமே காயப்படுத்த முடியாது .
மேகாவின் தந்தையின் இந்த நிலைமைக்கு தீரன் காரணம் கிடையாது . அவர் வாங்கிய கடன் , கடன் பெற்றவன் மீதே அவர் கொடுத்த புகார் என அவர் இழுத்து கொண்ட சிக்கலில் அவரே பலியாடாக ஆக்கப்பட்டுவிட்டார் .
இதற்கு ஏற்றது போல தீரனும்’ உன்னை அடைய எதையும் செய்வேன் ,குறுக்கே வருவது யாராக இருந்தாலும் விடமாட்டேன் ‘ என மேகாவிடம் வார்த்தைகளை விட , இவன் எதுவும் செய்வில்லை என்றால் இவனை பற்றி தெரிந்த யாருமே நம்ப மாட்டார்கள், அப்படி இருக்க மேகா நம்பிவிடுவாளா ?தொடர்ந்து தவறு செய்பவன் என்றாவது ஒருநாள் தான் செய்யாத தவறுக்கு மாட்டிக்கொள்வான் ,அப்படி தான் தீரனின் நிலையும் ஆனது .
” ஹலோ அக்னி ஜி ” மரியாதையுடன் கை குலுக்கினார் மருத்துவமனையின் சீஃப் டாக்டர் கம் ஜாயிண்ட் மேனேஜிங் டிராக்டர் வைசாக் ரெட்டி.
” ஹலோ ரெட்டி காரு , அங்கிள் இப்போ எப்படி இருக்காங்க “என கேட்டான் தீரன் .
” நான் எஸ்டி எலிவேஷன் மயோகார்டியல் இன்ஃபார்க்ஷ்ன் ஜி , க்ரிட்டிக்கல் இல்லை தான், ஆனா ஸ்ட்ரோக் வர்றதுக்கான சான்சஸ் இருக்கு , அடுத்த அட்டாக் வராம பார்த்துக்கணும் ” கோபால கிருஷ்ணனின் உடல் நிலையை விளக்கினார் சீஃப் டாக்டர்.
“டாகடர் ராம் பிரசாத் “என தீரன் கேட்கவும் ,
” வந்துட்டாரு ஜி , ட்ரீட்மென்ட் குடுத்துட்டு இருக்காரு , வொரி பண்ணிக்காதீங்க , சரி பண்ணிரலாம் , பேஷண்ட் ஹிஸ்ட்ரி படிச்சேன் , நல்லா ஃபிட்டா இருக்காரு சீக்கிரமா சரி பண்ணிடலாம் , ட்வென்டி பார் செவென் டாக்டர்ஸ் பெசிலிட்டிக்கு ஏற்பாடு பண்ணியாச்சு, தேவை பட்டா ஸ்பெஷல் டீம் ஆஃப் டாக்டர்ஸ்க்கு கூட ஏற்பாடு பண்ணிரலாம் ஜி ” என ரெட்டி சொல்லி கொண்டிருக்கும் பொழுதே ,வேகமாக ரிதுராஜுடன் அங்கே வந்த மேகா ,
” அப்பாவை வேற ஹாஸ்பிடல் ஷிப்ட் பண்ணனும் டாக்டர் ” அக்னியின் முகத்தை ஒரு கணம் கூட பார்க்காமல் கூறினாள் . அதை கேட்டு ரிதுராஜ் அதிர்ச்சியுடன் ,
” ஏன் மேகா இங்க நல்லா தான பாக்குறாங்க “என கேட்க
” ஷிப்ட் பண்ணனும் அவ்வளவு தான் ” என்றாள் அழுத்தமாக . தவறி கூட அவளது பார்வை அக்னி மீது பட வில்லை . ஆனால் அவளை பார்த்தபடியே கைகளை பேண்டின் பாக்கெட்டிற்குள் விட்ருந்த அக்னி, அப்பொழுதும் மௌனமாகவே இருந்தான் .
” உங்க அப்பாவோட ஹெல்த் கண்டிஷன்ஸ் பார்த்திருப்பீங்களே, அப்புறமும் இந்த ரிஸ்க் தேவையா ? நீங்களே ஒரு டாக்டர் , இதை நான் உங்களுக்கு சொல்லணும்ன்னு அவசியம் இல்லை . உங்க அப்பாக்கு பெஸ்ட் ட்ரீட்மென்ட் போய்ட்டு இருக்கு , பயப்படாதீங்க, ரிலாக்ஸ்சா இருங்க , தீரன் ஜி எடுத்து சொல்லுங்க ” என்றவர் தீரனிடம் விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து செல்ல ,
” டாக்டர் சரியா சொல்றாங்க மேகா, இப்போதைக்கு ரிஸ்க் வேண்டாம் ” என ரிதுராஜும் சொல்ல , தந்தையின் உடல் நிலையை கருத்தில் கொண்ட மேகா ,மௌனமாக சென்று அமர்ந்து கொண்டாள் .
அதே அமைதியுடன் மேகாவை பார்த்துவிட்டு ,அவள் அருகில் அமர்ந்திருந்த ரிதுராஜை பார்த்தான் தீரன் .
” மேகா ” என ரிதுராஜ் அழைத்ததும்,
“அப்பாவை இப்படி பார்க்க முடியல ரிதுராஜ் ” அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் உடைந்து கதற ஆரம்பித்தாள் மேகா .
அவளுடன் இன்னும் நெருங்கி அமர்ந்து கொண்டு , அவளது கரங்களை தனது கரங்களுக்குள் எடுத்து கொண்ட ரித்து ராஜ்,
” பயப்படாத மேகா சரி பண்ணிரலாம் ” என ஆறுதல் கூறினான் .
” அப்பா தான் எல்லாமே. அவர் வேணும் ” மீண்டும் மீண்டும் அழுதாள் .
” நான் பார்த்துகிறேன் டா மா ” தண்ணீரை குடிக்க கொடுத்து அவளை ஆறுதல் படுத்தினான் .
தீரனின் பார்வை மொத்தமும் அவர்கள் மேலே இருக்க , மேகாவின் கரங்கள் ரிதுராஜின் கரங்களுக்குள் இருப்பதை கண்டவன் ,தனது வேறுன்றிய கால்களுடன் கொஞ்சமும் அசையாமல் ,இமை கூட தட்டாமல் , உணர்ச்சிகள் துடைக்கபட்ட முகத்துடன் ,கரங்களை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு அப்பொழுதும் மௌனமாகவே அவளை வெறித்தபடி நின்றிருந்தான் .
மௌனம் ஒரு நிலை வரைக்கும் அமைதி !அதுவே நீடித்தால் சமாதி ! பெண்ணின் மெல்லிய மௌனத்தில் அழகிய நாணம் பேசும் ! அவளது நீண்ட மௌனம் சம்மதத்தை எழுதும் ! அவளின் ஆழ்ந்த மௌனம் பக்தியை வரையும் !ஆனால் ஆணின் மௌனம் ஒருபொழுதும் நாணத்தையோ , அவனது சம்மதத்தையோ, பக்தியையோ குறிப்பதில்லை !அது அவனது அழுகை, துக்கம் ,வெறுப்பு ,கோபம் ,அவமானம் ,தோல்வி, வலி , ஆக்ரோஷம் என இவற்றில் ஏதோ ஒன்றின் வெளிப்பாடாகும் . அதே போல் தான் தீரனின் வெறித்து பார்க்கும் இந்த மௌனம் கூட வர போகும் புயலுக்கான அறிகுறியே !
இந்த ஆக்ரோஷ புயலில் சிக்கி கொள்ள போகும் இவர்கள் இருவரும் கரம் கோர்த்து கரை காண்பார்களா ? இல்லை வெவ்வேறு திசையில் பிரிந்து போவார்களா?
-தொடரும்
நாளை
நீல நிற அழகான லெஹங்காவில் தேவதையாக ரிதுராஜின் அருகே அமர்ந்திருந்த மேகாவின் பார்வை, அவ்வவ்பொழுது ஒருவித குற்ற உணர்ச்சியுடன் தீரனையே சுற்றி சுற்றி வர , ஆனால் தீரேனோ ஒரு நொடி கூட மேகாவை பார்க்க வில்லை .
———————-
” என்ன பண்றீங்க? என் கைய விடுங்க ” என மேகா அழுகையில் கரைந்தாள் ,
” அதெல்லாத்தையும் அங்க வந்து சொல்லு , முதல்ல வண்டியில ஏறு ” என காக்கிசட்டை அணிந்திருந்த பெண் அதிகாரி மேகாவின் கரம் பிடித்து இழுக்க , அவளுக்கு அப்படியே நிலத்திற்குள் புதைந்து விடலாம் போல இருந்தது .