MIRUTHNAIN KAVITHAI IVAL 3

cover page-3e25e757

MIRUTHNAIN KAVITHAI IVAL 3

மிருதனின் கவிதை இவள்

3

“விடுங்க சார் , இவரை கொலை பண்ண தான் என்னை ட்ரீட்மென்ட் பார்க்க சொன்னீங்களா ? உயிர்ன்னா அவ்வளவு ஈஸியா போச்சா  ” என ஆதங்கத்துடன் அக்னியின் கையை பிடித்து இழுத்தாள்  மேகா . சற்றென்று திரும்பியவனின் அசுர விழிகள் கோபத்தில் தகித்தது .

 “என்ன  துணிச்சல்  ம்ம்ம் ? என்னையே தொடுறியா ” என நரம்புகள்    புடைக்க  கர்ஜித்தவன் ஆத்திரத்தில்  தன் கரங்களை  அவளுது கன்னம் நோக்கி உயர்த்தி இருந்த தருணத்தில் .

அவனது சிவந்த கண்களை பார்த்தவள் தீரனின் கொடூர பார்வையில் நடுங்கி போனாள் . வீசிய குளுமை தென்றலையும் தாண்டி முகத்தில் வியர்வை துளிர்க்க .

” விட்ருங்க ப்ளீஸ் … சாரி …ப்ளீஸ்  …விட்ருங்க ப்ளீஸ் ” என இதே வார்த்தைகளை தன் கண்களை இறுக்கமாக மூடியபடி அவள் மீண்டும்  மீண்டும் உச்சரிக்க . அவன் அவளை அதீத ஆத்திரத்தில்  வெறித்து பார்த்தான்   .

 மூடிய இமைகளில் இருந்து கண்ணீர் நில்லாமல் வலிந்து கொண்டிருந்தது , முகத்தில் முத்து முத்தாய் வியர்வை துளிகள், காற்றில் கலைந்த கேசம் வதனத்தை பாதி மறைத்திருக்க ,தான் பற்றியிருந்த அவனது கரத்தை தன் இரு கரங்களுக்குள் இன்னும் இறுக்கமாக பிடித்துக்கொண்டு   மழையில் மாட்டிக்கொண்ட பூனை குட்டி போல பயத்தில் நடுங்கி கொண்டிருந்தாள் .

அவளது வெளிறிய முகத்தை ஒரு கணம் பார்த்த தீரனுக்கு என்ன தோன்றியதோ ? சற்றென்று அவன் முகத்தில் ஒரு வித மாற்றம் கடுமையின் அளவு மெல்ல மெல்ல குறைந்திருக்க .

“ஓகே … காம் டவுன் … ரிலாக்ஸ் ” அவளை பயத்தில் இருந்து வெளியே கொண்டு வர ஏதோ தன்னால் ஆனா முயற்சியை செய்தான் .

” ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் “இன்னும் சத்தமாக கதறினாள் .  

” ஏய் நிப்பாட்டு டி … எரிச்சலா இருக்கு … சரியான கோழை ” எரிச்சலில் தலைமுடியை அழுந்த கோதி தன்னை சமன் படுத்தினான் .        

அவனது அடி குரலில் தெரிந்த சீற்றம் கண்டு மேலும் நடுங்கியவள் ,

” சாரி சார் என்னை விட்ருங்க ” என  கெஞ்ச , எரிச்சல் அடைந்தவன் ” என்னடா இது ” என அஷோக்கை தீ பார்வை பார்த்து விட்டு அவளை பார்த்தான் . ஜன்னி வந்தது போல நடுங்கி கொண்டு இருந்த அவளது நிலை கண்டு ஆழ்ந்த மூச்செடுத்தவன் ,

“அஷோக் இந்த நியூஸென்ஸை  முதல்ல வெளிய தூக்கி போடு ச்ச ” என்றவன் அவளது மருண்ட பார்வையை பார்த்து ,

” என்ன என்னை விட மனசில்லையோ ம்ம்ம்? ” என அவளது கரங்களுக்கு அடைபட்டு கிடந்த தன்  கரத்தை தன் கண்களை காட்டி கேட்க  நிதர்சனம் புரிந்து பதறியபடி  உடனே  விலகி நின்றவளை ஏற இறங்க பார்த்த தீரனின் தோள்பட்டையை  அவனை நோக்கி வந்த தோட்டாக்கள் குறிபார்த்தது.

எதிர்பாரத நேரத்தில் நடந்த இந்த தாக்குதலை கண்டு அனைவரும் அதிர்ந்து இருக்க . அரை நொடியில் தன்னை சமன் செய்த அக்னி இது பாஸ்கரின்  வேலை என்பதை புரிந்து கொள்ள,  அவன் முகம் கடும் பயங்கரமாய் மாறியது . உடனே தன் ஆட்களுக்கு அவன் கட்டளையிட அக்னியும் அவனது ஆட்களும்  பதில் தாக்குதல் நடத்தினர் .

சரமாரியான  துப்பாக்கி தாக்குதலில் ஆங்காங்கே  குருதி பெருக்கெடுத்து  ஓடிக்கொண்டிருக்க இதையெல்லாம் கண்ட மேகாவுக்கு தான் தலை சுற்றியபடி கண்கள் இருண்டு கொண்டு வந்தது .

அப்பொழுது அங்கே ஒரு ஓரமாய் இரெண்டு காதையும் மூடியபடி அழுது கொண்டிருந்த மேகாவை கண்ட அக்னி ,

” இவ இன்னும் போகாம என்ன பண்ணிட்டு இருக்கா ? ” என அஷோக்கிடம் சீறியபடி பற்களை கடிக்க .

அவனோ ,

” டென்ஷன்ல மறந்துட்டேன் அக்னி நான் அவளை பார்த்துக்கறேன்.அதுக்கும் முதல்ல பின் கேட்டை  க்ளீயர் பண்றேன்,  நீ உடனே வந்திரு உனக்கு ரொம்ப ப்ளீட் ஆகுது ” என்றவன் அக்னியை குறிபார்த்தபடி நின்றிருந்த ஒருத்தனை சுட்டுவிட்டு நிமிர,  அக்னியோ அதே நேரம் மறுபக்கம் பாய்ந்து அஷோக்கிற்கு குறிவைத்திருந்தவர்களை  சுட்டு தள்ளிவிட்டு மேகாவை பார்க்க , அவளது கழுத்தை வளைத்து பிடித்த ஒருவன் அவள் தலையிலே துப்பாக்கியை வைத்து விட்டான் .

அதை கண்ட அஷோக் ,

” டேய் கன்னை கீழே போடு டா ” என்று பதற ,

அவனோ ,

” முடியாது நீங்க எல்லாரும் துப்பாக்கியை கீழே போடலைன்னா இந்த குட்டியோட தலை சிதறும் ” என சொல்லிய அடுத்த நொடியே சொன்னவனின்  தலை சிதறியிருந்தது .

அவனோ நெற்றியில் பொட்டில் இருந்து குருதி வழிய மேகாவை விட்டபடி தரையில் மல்லாக்க விழ , மேகாவோ அஷோக்கை பார்த்துக்கொண்டே அவன் பார்வை செல்லும் திசையை பார்க்க ,அவர்களை நோக்கி துப்பாக்கியை ஏந்தியபடி வந்த அக்னி தீரனோ , மிரட்சியுடன்  தன்னையே பார்த்து கொண்டிருந்த மேகாவை பார்த்து ,

” ஏய் தள்ளு ” என்றவன் மேகாவை குறிபார்த்திருந்தவனின் கையில் சுட்டுவிட்டு நொடிப்பொழுதில் அவளது அருகில் வர , அஷோக் மென்னகையுடன் மற்றைய பக்கம் சுட சென்று இருந்தான் .

மேகாவை ஆக்ரோஷமாக பார்த்தபடி நெருங்கி நின்ற அக்னி ஒரு கணம் அவளை பார்த்துவிட்டு மறுநொடியே அவளது கையை பிடித்து இழுத்து கொண்டு ஒரு தூணின்  பின்னால் மறைந்து நிற்க , அந்த அகலமான தூணின் பின்னால் அவன் மார்போடு ஒன்றி நின்றிந்த  மேகாவின் இதயம் தாறுமாறாய் துடித்தது .

அந்த கணம் அவளது விழியை நோக்கியவன் ,’என்ன ?’என்பதை போல   தன் புருவம் உயர்த்த அவள் எதுவும் இல்லை என்பதாய் தன் தலையை மறுப்பாக அசைக்க ,

“ம்ம் ” என்றவன் அவளிடம்,

” நான் சொல்லும் பொழுது பின்பக்கமா  ஓடிருக்கணும் புரியுதா ?” என  அவளது விழிகளை பார்த்தபடி சொல்ல  அவளும் அவன் விழிகளை பார்த்துக் கொண்டே  ,

” மாட்டேன் பயமா இருக்கு  ” என்று பயத்தில் அழுதபடி   அவனது மார்போடு இன்னும் ஒன்றி நிற்க  ,எரிச்சல் அடைந்தவன். அவள்  தலையில் துப்பாக்கியை வைத்து  ,

” ஏய் நிறுத்து இனிமே அழுத , உன்னை சுட்டு தள்ளிட்டு போயிட்டே இருப்பேன் “என தன் குரலை உயர்த்தாமல் ஆனால் அழுத்தமான குரலில் மிரட்டினான்.  உடனே மடமடவென தன் கண்ணீரை துடைத்தவள்   கப்பென்று தன் வாயை தன் இரு கைகளால் மூடிக்கொண்டு  தன்னை முறைக்கும் தீரனை கெஞ்சலாக பார்த்தாள்.

அவனும் அவளையே பார்த்து கொண்டிருக்க , அப்பொழுது  அருகில் கேட்ட துப்பாக்கி சத்தமோ அவனை சுய நினைவிற்கு கொண்டு வந்தது .

சட்டென்று  மறைந்திருந்தபடி வெளியே நோக்கி சுட்டவன் மெல்ல தூணில் இருந்து எட்டி பார்க்க , அந்த வினாடியே உறைந்து  நின்றான் .

துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதும் அவனது நெஞ்சோடு இடைவெளி இன்றி ஒட்டிக்கொண்ட   மேகாவின் உதடுகள் ,” ஜெய் ஸ்ரீ ராம் ஜெய்  ஸ்ரீ ராம் “என முணுமுணுக்க ,

சட்டென்று  தன் உடல்  விறைத்து நிமிர்ந்தவன் , பெண்ணவளை தன்னிடம் இருந்து விலக்கினான்.

அடுத்த கணமே அவனை இறுக்கமாக அணைத்து கொண்டு அவன் நெஞ்சில் முகம் புதைத்தவள் ,

” ப்ளீஸ் ப்ளீஸ் பயமா பயமா இருக்கு “என கதற ,

” ஏய் என்னடி நீ ? எல்லாத்துக்கும் பயந்துட்டு ச்ச தள்ளி போடி ” என அதட்டியவன்  அவளை தள்ளிவிட முயற்சிக்க அவளோ ” ப்ளீஸ் என்னை விட்றாதீங்க ” என அவனை விட்டு பிரியாமல் மேலும் மேலும் நெருங்கி  ஒட்டிக்கொள்ள ,

” ச்ச இவனுங்களை கூட சமாளிச்சிருவேன் ஆனா இவளை,  உஃப் “என பெருமூச்சை வெளியிட்டவன் . அவளது கெஞ்சல் பார்வையை பார்த்தபடியே தங்களை பின்னால் இருந்து நெருங்கும் ஒருவனின் பூட்ஸ் சத்தத்தை வைத்து அவனது  காலிலும் மார்பிலும் சுட்டு வீழ்த்தியவன் , மேகாவை அழுத்தமாக பார்த்துவிட்டு மீண்டும் தூணில் இருந்து எட்டிப்பார்த்து தன் விழிகளால் வெளியே ஆராய்ந்தான் .

எதிரிகள் தன்னை நோக்கி வருவதை கண்டவன் தன் துப்பக்கியை எடுத்து வேறு திசையில் சுட்டான் .

தோட்டாவின் சத்தம் காதை கிழிக்க , எதிரிகள் அனைவரும் சத்தம் வந்த திசை நோக்கி குழுமுவதை  பார்த்தவன் .

மேலே படியில் பதுங்கி இருந்த தன் ஆளுக்கு எதோ செய்கையால் செய்தி சொல்லி தலை அசைத்து விட்டு தன் இடையில் இருந்த துப்பாக்கியை எடுத்து லோட் செய்தவன் தன் சட்டையை இறுக்கமாக பிடித்தபடி நடுங்கி கொண்டிருந்த மேகாவை ஒரே ஒரு கணம் பார்த்தவன் , அடுத்த கணமே அவளை தன்னிடம் இருந்து வலுக்கட்டாயமாக  பிரித்து வெளியே தள்ளிவிட்டான் . அவளோ ” வீல் ” என அலறி கொண்டு தரையில் விழுந்தாள்.

-தொடரும் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!