MIRUTHNAIN KAVITHAI IVAL 8

cover page-2dec1625

MIRUTHNAIN KAVITHAI IVAL 8

மிருதனின் கவிதை இவள் 8

கண்ணை கவரும் வண்ண விளக்குகள்  ,நாசியை தீண்டிய மென்மையான நறுமணம் என பல அலங்கரிப்பிற்கு  நடுவே அமைந்து இருந்தது அந்த நைட் க்ளப் , பாலர் பேதமையின்றி அனைவரும் மதுகுவளையுடன் தங்கள் தங்கள் ஜோடிகளுடன் ஆடிக்கொண்டிருக்க , அந்த இடமே டிஜேவின் இசையால் அதிர்ந்து கொண்டிருந்தது .

இதை அனைத்தையும்  அங்கு இருந்த  வட்ட மேஜை அருகே போட பட்டிருந்த நாற்காலியில் ,இசைக்கேற்ப தலையை ஆட்டி கொண்டே  தன் எதிரே இருக்கும் மேகாவை பார்த்து கொண்டிருந்தான் அக்னி தீரன் .

கருப்பு நிற ஜீன்சும்,  கருப்பு நிற ஷர்ட்டும் , ஷர்ட்டிற்கு மேலாக கருப்பு நிற கோர்ட்டும் அணிந்திருந்தவனோ தலையை ஜெல் வைத்து இழுத்து இருக்க , ஒரு கரம் அருகில் இருந்த நாற்காலியின் மீது இருக்க , வலது கையோ , மேகா கரம் தொட்டு போடப்பட்ட கட்டோடு டேபிள் மீது தாளம்  போட்டுக்கொண்டிருக்க  ,அடிபட்ட எந்த வித சோர்வும் இல்லாமல் அமர்ந்திருந்தவனது  தோரணையில் ஆளை அசத்தும் கம்பீரம் அப்பட்டமாய்  தெரிந்தது .

தீரன் என்றால் சொல்லவா வேண்டும் ! கம்பீரத்துக்கு அங்கே குறைவேது?

அங்கிருந்த பெண்கள் தொடங்கி அனைவரின்  பார்வையும் அவன் மேலே படிந்திருக்க , அவனது பார்வையோ மேகாவின் விழியை தாண்டி அங்கும் இங்கும் பேருக்கு கூட அசையவில்லை . ஆனால் அவளோ முகத்தில் போட்ட பவுண்டேஷனை தாண்டி வழிந்த வியர்வையை  ஒற்றியபடி அமர்ந்திருக்க , இஷிதா தான் கோபத்தில் பற்களை கடித்து கொண்டு இருந்தாள் .

அவளுக்கு அக்னியை பார்த்தும் பயம் ,மேகா மீதும் கோபம்,   அந்த இடத்தில் ஏதும் பேசவும் முடியவில்லை . ஆக தனக்குள் கனன்று வந்த கோபத்தை தண்ணீரை குடித்து அணைத்து கொண்டவள் ,

” ஏன் டி இவனையும், அவனையும் இங்க கூட்டிட்டு வந்த ?” மெல்லிய குரலில் மேகாவிடம் பற்களை கடித்தவள்,  அக்னியை பார்த்து அசடு வழிந்தாள். ஆனால் அவன் பேருக்கு கூட அவளை கவனிக்க வில்லை .

” நான் என்ன ஆசை பட்டா கூட்டிட்டு வந்தேன் ? வெளியே போய்ட்டு வரேன்னு சொன்னேன் , உடனே யாருக்கோ கால் பண்ணினான்,  கருப்பு கார் வாசலுக்கு  வந்துச்சு , அஷோக் வந்தாரு ,   ரெண்டு நிமிஷம் ரூம் குள்ள போனான் டிப் டப்பா வந்து நிக்கிறான் , அட்ரஸ் கேட்டான் சொன்னேன் கூட்டிட்டு வந்துட்டான் ” மெதுவாக  இஷிதாவுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறினாள் .

” என்னாச்சு என்ன பேசிட்டு இருக்க வர்ஷினி ?  “அவளது மிரட்சியான முகபாவத்தை பார்த்தபடி கேட்டான் .

” ரெஸ்ட் ரூம் போகணுமாம்  சார் ” இஷிதாவிடம் இருந்து பதில் வந்தது .

மேகா , ‘நான் எப்போ டி அப்படி சொன்னேன் ‘என்பது போல் தோழியை பார்த்தாள்.

” அதை என்கிட்ட சொல்ல வேண்டியது தானே வர்ஷினி , போ மா போய்ட்டு வா ” முரட்டு குரலில் காதல் வழிந்தது .

“ம்ம் ” மேகா சட்டென்று எழுந்து கொள்ள ,

” ஒரு நிமிஷம் , ஏய் நீயும் கூட துணைக்கு போ ” என்றான் இஷிதாவை அதட்டியபடி , ‘ அது என்ன ஏய் ?’ இஷிதாவிற்கு கோபம் தான் வந்தது,  ஆனாலும்  அவன் சரித்திரம் அறிந்தவளால் அவனிடம் எகிறி பேச முடியாமல் போக,  தலையசைப்போடு  மேகாவுடன் சென்றாள் .

விடாது துரத்தும்  அவனது பார்வையில் இருந்து தப்பித்தால் போதும் என்று  வாஷ்ரூமிற்குள்  புகுந்து கொண்ட மேகாவுக்கு உடல் நடுக்கம் மட்டும் கொஞ்சமும் குறையவில்லை ,

“என்னடி இவன் ? பீமன் மாதிரி வந்து மொத்த இடத்தையும் அடச்சிட்டு உக்கார்ந்திருக்கான் ” பின்னாலே வந்த இஷிதா புலம்பி தீர்த்தாள் .

” நான் என்ன பண்றது டி ?” மேகா இயலாமையுடன் கூறினாள் .

” எந்திச்சு போகவும் முடியல ,  முறைக்கிறானா  என்னன்னு ஒன்னும் புரியல ,ஆமா உன்னை ஏன் அப்படி பாக்குறான்? “

” அதான் டி எனக்கும் தெரியல ?”

” என்ன தான்  டி தெரியும் உனக்கு? ” என்று சலித்து கொண்டவள் ,

“இன்னும் கொஞ்சம் நேரத்துல ரித்து வருவான் டி , அவன் வரும் பொழுது இவன் இருந்தா நல்லா இருக்காது  ?”என்றாள் இஷிதா .

” பயப்படாத  இஷு,  ரித்து அண்ணா கேட்டா கனகராஜ் அங்கிள் சொல்லி தான் அவர் இருக்காருன்னு சொல்லிக்கலாம்  , உன் அண்ணாக்கிட்டா நான் பேசிக்கிறேன் , நீ பயப்பட  வேண்டாம் ,உன்னை திட்டமாட்டாரு ” என்ற மேகாவை ஏற இறங்க பார்த்த இஷிதா ,

‘எத என் அண்ணனை பார்த்து நான் பயப்படுறேனா ?ஓ அவன் திட்டிருவானோ ?இவ வேற , அவன் ஏன் வரான்னு தெரியாம  அவனையே அண்ணன்னு சொல்றா , டேய் அண்ணா இந்த ட்யூப்லைட் தான் உனக்கு வேணுமா டா, சரியான தத்தி டி நீ  ‘ மானசீகமாக மேகாவை எண்ணி தலையில் அடிகொண்டாள் இஷிதா .

பேசிவிட்டு கதவை திறந்து கொண்டு இஷிதாவும்  மேகாவும் வெளியே வர  , அப்பொழுது அவர்கள் அருகில் வந்த  பெண் ஒருவள் இஷிதாவிடம் வந்து ,

” ஏய் இஷு உன் கூட வந்திருக்கிறது  மிஸ்டர் அக்னி தீரன் தானே ?” தொலைவில் இருந்து தீரனை பார்த்தபடியே  முகத்தில் ஆர்வம் மின்ன கேட்டாள் .

” ஆமா ” மேகாவை பார்த்தபடி இஷிதா பதில் கூறினாள் .

” ஐயோ அவரை பத்தி ஏகப்பட்ட மேகசின்ல  படிச்சிருக்கேன் டி ” முகத்தில் அவ்வளவு பூரிப்பு .” நேர்ல பார்க்க ஹீரோ மாதிரி தாடியெல்லாம் வச்சிட்டு செம கண்ட்சம்மா இருக்காரு ” அவன் குணம் அறியாது அவனை ரசித்தாள் .

” பாம்பு கூட தான் அழகா இருக்கும் , கிட்ட போனா தானே அது வேலைய காட்டும்,  இவ வேற அவன் குணம் தெரியாம ” என இஷிதா முணுமுணுக்க மேகா சிரித்தே விட்டாள்.  ஆனால் அதெல்லாம் அந்த பெண்ணின் காதில் எங்கே விழுந்தது அவள் தான் அவனை பார்வையால் அளவெடுத்துக்கொண்டிருந்தாளே .

“ஆமா  அவரு ரொம்ப பெரிய இடமே,  உனக்கு எப்படி அவர் பழக்கம் ?” என்று கேட்க ,

‘என்னடி சொல்லவா என்பது போல இஷிதா மேகாவை பார்க்க ,மேகவோ தன்  கண்களாலே வேண்டாம் என்று சொல்ல’ சிரித்தவள் ,

“அப்பாக்கு ஃப்ரண்ட்  டி ” என்றாள் .

“ஓ சரி எனக்கு கொஞ்சம் இன்ட்ரோ பண்ணி விடறது ” என்றவளை ஏற இறங்க பார்த்தவள் ,” அவரு ஒரு மாதிரி டைப் டி உனக்கு செட் ஆகாது  ” இஷிதா சமாளித்தாள் .

” உனக்கு பொறாமை , எங்க நான் அவரை கரெக்ட் பண்ணிருவேன்னு , நீ ஒன்னும் இன்ட்ரோ பண்ணி விட வேண்டாம் ,நானே பார்த்துக்கறேன் ” என்றவள் தன் பர்ஸை திறந்து கொஞ்சம் டச்சப் செய்து ,

” நான் அழகா இருக்கேன்ல ?” என இஷிதாவிடம் கேட்க , அவளது  வதனத்தை பிடித்து இரு கன்னங்களையும் மாறி மாறி பார்த்த இஷிதா ,அக்னியின் கரங்களை ஒருமுறை பார்த்துவிட்டு  அந்த பெண்ணின் ஒரு பக்க கன்னத்தை தனது கையை வைத்து அளந்தவள் ,” ஓகே ” என்று கூற ,

அவளோ ,” ஏய் என்ன பண்ற?  இப்போ தான் டி டச் அப் பண்ணினேன் , அதுக்குள்ள கலைச்சிடாத” என முகத்தை சுளிக்க ,

” அது ஒன்னும்  இல்லை , அவருக்கு ஒரு பழக்கம் இருக்கு , கோபம் வந்தா செவில்லையே   சாத்துவாரு , உன் கன்னம் வேற நல்லா மெத்த மாதிரி அளவா அவர்கிட்ட அடிவாங்க செஞ்ச மாதிரியே இருக்கா,  அதான் பார்த்தேன் ” என்று இஷிதா கூற ,

” அவரை பத்தி தப்பா பேசி அவர் இமேஜை டேமேஜ் பண்ணாத இஷிதா , இவ்வளவு பொறாமை உனக்கு வேண்டாம் ” என்றவள் முகத்தை திருப்ப ,

அந்த பெண் மீது இரக்கம் கொண்ட மேகா ,

” நீங்க அவர் கிட்ட போகாதீங்க அவர் கொஞ்சம் வித்யாசமானவரு ” என்று கூற

” ஓ உனக்கு ரொம்ப தெரியுமா ?வந்துட்டா ஆளும் ட்ரஸும் , பார்ட்டிக்கு   எந்த டிரஸ் போடணும்ன்னு கூட தெரியாம,  புடவை கட்டிட்டு வந்துட்டு பார்க்கிறத பாரு , நாட்டுப்புறம் ” என்றவள் தன் கூந்தலை மேகாவின் முகத்தில் அடிக்க பின்னால்  போட்ட படி செல்ல ,

” ஏய் ” என இஷிதா கோபத்தில் சீற ,அவளை தடுத்த மேகா ” விடு டி ” என்று தோழியை சமாதானம் படுத்த ,மேகாவுக்கு தான் அக்னி அந்த பெண்ணிடம் ஏதும் கடினமாக நடந்துவிடுவானோ என்று பயமாக இருந்தது.

“பிரச்சனை வருமோன்னு  பயமா இருக்கு டி ” மேகா கையை பிசைந்தாள்  .

” விடு நாலு சாத்து சாத்தட்டும்,  அப்போ தான் அவளுக்கு புத்தி வரும் ” என இஷிதா ஆர்வத்துடன் அவர்களையே பார்க்க .

அக்னியின் அருகே சென்ற அந்த பெண் ,” ஹாய் சார் ஐயம் மதனா ” இழைந்தபடி தன் கரங்களை நீட்டினாள் .

அவளை ஒரு பார்வை பார்த்தவன் ,

” ….   “இருந்துட்டு போ என்கின்ற தோரணையில் தன் தோளை குலுக்கிவிட்டு  மீண்டும்  மேகாவின் வரவையே எதிர் பார்த்து கொண்டிருக்க , மதனாவின் தன்மானம்  மிகவும்  அடிவாங்கியது .

‘ பெரிய ஆளு அப்படி தான் இருப்பாரு ‘ என்று தன் மனதை தேற்றியவள்  ஒட்டவைத்த புன்னகையோடு ,

” உங்கள எனக்கு ரொம்ப புடிக்கும்   ” என்றபடி அவன் அருகில் இன்னும் நெருங்கி வர ,

அவளை பார்த்தபடி,

“ம்ம்ம் ” என்றவன் தன் உள்ளங்கையை பார்த்தபடி  தன் தாடியை நீவ  அவன் கண்கள் தீவிரமாக  மாறியது .

“என் கூட டான்ஸ் பண்ண வாரீங்களா சார் ” அவனது பார்வையின் அர்த்தம் புரியாமல் கேட்டாள் .

” எடு டி கைய ” ஒருமையில் விழித்தவனின் பார்வை  தன் கோர்ட்டின்   மேல் , அவள் எதார்த்தமாக வைத்த அவளது கரத்தை பார்த்து விட்டு ,அவளிடம் மீண்டது.

முதலில் திகைத்தவள், பிறகு அவனிடம் இருந்து விலகி நின்றாள் .

அவனது துஷ்ட பார்வையை கண்டவளுக்கு பயத்தில் நெஞ்சம் அடைத்தது  ‘ அவன் குரலும் அவனது பார்வையும்  ‘ என மனதில் எண்ணியவளுக்கு  அவனை பார்க்கவே அச்சமாக இருக்க, அவமானத்தில் கண்ணீர் கண்களில் இருந்து இறங்க , அவனை பாவமாக பார்த்தாள் .

” போ ” இருக்கையில் இருந்து எழுந்தபடி எச்சரித்தான்,  அரண்டவள் அழுதுகொண்டே சென்றுவிட , அந்த காட்சியை கண்ட இஷிதாவுக்கு  முகத்தில் திருப்தியான புன்னகை மலர் ,

மேகாவுக்கு,’ ஒரு பெண்ணிடம் இப்படியா நடப்பது ?’ என்கின்ற ஆதங்கத்தில்  முகம் வாடியது .

அவர்கள் இருவரும் அழுது கொண்டே செல்லும்  மதனாவை பார்த்தபடி அக்னியின் முன்னால் வந்து அமர , அதுவரை இறுக்கமாக இருந்த அக்னி மேகாவை கண்டதும் விடுமுறை கண்ட சிறுவன் போல  இறுக்கம் தளர்ந்து புத்துணர்ச்சியுடன் காணப்பட்டான் .

ஆனால் மேகவோ வழக்கம் போல ‘  இவன் தொல்லை எப்பொழுது முடியும் ?’ என்று மனதிற்குள் நினைத்தபடி அமர்ந்திருந்தாள், அவளிடம் மறந்தும் கூட புன்னகை இல்லை .

மீண்டும் மூவருக்கும் இடையே கனத்த மௌனம் நிலவ , அதை முதலில் உடைத்தது என்னவோ அக்னி தான் ,

” யாரையோ பார்க்கணும்ன்னு சொன்ன , ஆளையே காணும் ” இரண்டு கரங்களையும் தன் அருகில் இருந்த இரு நாற்காலியில் அகல விரித்து வைத்த படி  கேட்டான் .

” இப்போ வந்துருவாங்க சார் ” நலிந்து ஒடுங்கி அவள் குரல் வெளிப்பட்டது .

“ம்ம் ” என்று அவன் சொன்ன மறுகணம் அக்னியின் சட்டையை ஒருவன் இறுக்கமாக பற்றியிருக்க , தீரனின் கண்கள் கோபத்தில் சிவந்தது .

” ஏன் டா என்  ஃப்ரண்ட திட்டின ” கோபத்தில் அக்னியின் முகத்தை நேருக்கு நேராக பார்த்தபடி கத்தினான் அந்த புதியவன் .

அந்த ஆடவனின் இந்த செயலில் மேகாவுக்கும் இஷித்தவுக்கும் பக்கென்று  ஆனது .

அக்னியை பற்றி நன்கு அறிந்திருந்த மேகாவுக்கோ உள்ளுக்குள் திகிலாக இருந்தது . இன்று காலை நடந்த சம்பவம் கண் முன்னால் வந்து போக அதிர்ந்தே விட்டாள்  .

அவ்வளவு தான் அந்த ஆடவன் முகத்தில் இடியென ஒரு அடி  விழ , அந்த ஆடவனுக்கு உலகமே தலைகீழாக சுற்றுவது போல பார்ட்டி ஹால் சுத்த, தீரன்   கொடுத்த ஒரே அறையிலே ஒரு ஓரமாக அவன் விழுந்து கிடந்தான் .

தீரனோ கீழே விழுந்த அந்த ஆடவனை பார்த்தபடியே சிகரெட்டை எடுத்து பற்றவைக்க ,  அந்த புதியவனோ விண் விண் என்று  எறிந்த  தன்  கன்னத்தை பொத்தியபடி எழுந்து ,

” பேசிட்டு இருக்கும் பொழுது ஏன் சார் அடிசீங்க ?” என்று கேட்டான் . தீரனோ தான் இருந்த நாற்காலியை பின்னால் தள்ளிவிட்டு எழுந்தவன் எதுவும் பேசாமல் தன் கோர்ட்டை  கழற்றி நாற்காலியில் போட்டு  ,  தன் முழு கை சட்டையின் பொத்தானை கழற்றி அதை தன் முழங்கை வரை ஏற்றி விட்டு , தான் அணிந்திருந்த கருப்பு நிற கை கடிகாரத்தை சற்று இறக்கி  தன் கைக்குள் வைத்து மூடி கொண்டு,  அவனை எரித்து விடுவது போல பார்க்க , அக்னியின் செய்கையில் அதிர்ச்சியுடன் அவன்  எச்சில்  விழுங்கினான்  .

இத்தனைக்கும்  தீரன் எதுவுமே பேச வில்லை , ஆனால் பார்தானே ஒரு பார்வை !அந்த கொடூர பார்வையிலே கீழே விழுந்தவனுக்கு சர்வமும் ஒடுங்கியது . பார்த்தே அவனது உயிரை பாதியாக்கினான் .

தீரனின் முகத்தில் அப்படியொரு வெறி .  சிவந்த விழிகள் அவன் உக்கிரத்தின் அளவை கூறியது .

இஷிதாவோ தலையில் கைவைத்தபடி நிற்க ,மேகாவுக்கு நடக்க போகும் அனைத்தும் விளங்கியது .

ஆனால் என்ன செய்வது?  என்று சிந்திப்பதற்குள் அந்த ஆடவனின் தாடையை உடைத்திருந்தான் அக்னி .  இவ்வாறு நொடி தாமதிக்காது  அந்த ஆடவனை அவன் அடிக்க, முகவாயில் ரத்தம் கசிய நின்றவனை பார்த்து கலங்கியவள்,

  “தீரன் ப்ளீஸ் விடுங்க ” என அலறியபடி அவனை நெருங்கியவள் தீரனின் கரம் பிடித்து இழுக்க , அதீத கோபத்தில் இருந்தவன் அவள் ஸ்பரிசம் பட்டதும் மூச்சு வாங்க தன் ஓங்கிய கையை  இறக்கிவிட , அந்த ஆடவனோ  தீரனிடம் இருந்து தப்பிக்கும் பொருட்டு அங்கிருந்து ஓட ,ஓடும் பொழுதே அருகில் இருந்த மேகாவையும்  கீழே தள்ளிவிட்டு ஓட,  அவளோ நிதானம்  இன்றி அப்படியே முன்னால் இருந்த நாற்காலியில் மோதி கீழே விழுந்தாள்.

” டேய் ” அக்னியின் கர்ஜனையில் ஓடியவன் பயத்துடன் திரும்பி பார்க்க , தீரன் வேகமாக அவனை நெருங்கவும்,  மேகா இஷிதாவின்  உதவியுடன்  தன் தலையை பிடித்தபடி எழுந்து நின்று  அக்னியை தடுக்கவும்  , அவன் கவனம் மொத்தமும் மேகா பக்கம் விழ, அவனது கண்களில் அப்படி ஒரு தவிப்பு .

” வர்ஷினி  வலிக்குதா? ” அவளது காயத்தை பார்த்தபடி கேட்டான் .

” அக்னி ப்ளீஸ் என்னால முடியல ” அவள் அக்னி மேல் உள்ள கோபத்தில் எரிச்சலோடு கூற , அவனோ அவளுக்கு தான் முடியவில்லை என்று எண்ணி கண் இமைக்கும் நொடியில் மேகாவை கையில் ஏந்தி  கொண்டு ஓடினான் .

மேகாவை தூக்கி காரில் அமரவைத்தவன் , தன் பின்னால் தயங்கியபடி நின்ற இஷிதாவை பார்த்து ,

” என்ன யோசிச்சிட்டு இருக்க ? ஏறு வண்டில யூஸ்லெஸ் ” தாறுமாறாய் திட்டினான் .

” ஹாங் இதோ ” அவனது பேச்சை காதில் போட்டுக்கொள்ளாமல் தோழியின் அருகே  ஏறி அமர்ந்தாள், பெண்கள்  இருவருக்கும் முழி பிதுங்கியது  .

” டேய் என்ன பார்வை ?வண்டிய எடு டா  ” ட்ரைவரை  அதட்டியபடி  மேகாவின் மறுபக்கம் வந்து அமர்ந்தான் .

” என்னாச்சு மா? ரொம்ப வலிக்குதா  ? சீக்கிரம் போயிரலாம் ” அவனது அதிரடியான செயலில் பயத்தில்  முகம்  வெளிற இருந்தவளின் முக மாற்றத்தை தவறாக எண்ணி பதறியவன் ,  அவளை படுத்தி எடுத்தான் .

ட்ரைவர் அக்னியின் சீற்றத்தால் பயந்து காரை தாறுமாறாய் ஓட்ட,  ஏதோ கொஞ்சமாக குலுங்கியது அவ்வளவு தான் ,அதற்காக 

” டேய் என்ன ஓட்டிட்டு  இருக்க ? மெதுவா வேகமா போ ” ட்ரைவரை ஒருவழி பண்ணினான் .

மேகா நடுங்கி போய் இருக்க , இஷிதாவின் பார்வை அக்னி மீது சுவாரசியமாக படிந்தது . அவள் கேள்விப்பட்ட அக்னி, அவள் பார்த்த அக்னி வேறு அல்லவா ,அவனது இந்த பரிமாற்றம்  அவளது சிந்தனையை கிளறியது .

கார் மருத்துவமனை வாசலில் வந்து நிற்க , மேகா காரை விட்டு இறங்காமல் இருக்க ,அவள் பக்கம் வந்தவன் ,

” என்னாச்சு வரு ” என்று கேட்டான் .

“அக்னி எனக்கு வலி “

“ரொம்ப  வலிக்குதா , டாக்டரை இங்க வர சொல்லவா ” அவளை பேச விடாமல் படுத்தி எடுத்தான் .

” இல்லை வரேன் ” அவள் காலை தரையில் வைக்க வில்லை அவன் கையில் குழந்தையாய்  தவிழ்ந்தாள் .

” அக்னி இறக்கிவிடுங்க ப்ளீஸ் ” குரல் அவன் செவியை அடையும் முன்பே  காற்றில் கரைந்தது .

” டாக்டர் எங்க ?” அனைவரையும் பார்த்து கத்தியபடி வந்தான் .

” அச்சோ அக்னி ப்ளீஸ் மெதுவா ” அனைவரும் அவர்களை பார்க்க அவளுக்கு தான் அவமானமாக இருந்தது .

” சொல்லுங்க என்னாச்சு ?” மருத்துவ ஊழியர் ஒருவர் ஆர்ப்பாட்டமில்லாமல்  , பொறுமையாக கேட்க ,

” அடி பட்டு வலியில துடிக்கிறாங்க சீக்கிரம் வாங்க ” சீறினான் .

” உள்ள கொண்டுவாங்க ” என்றார் பொறுமையாக , மேகா அவன் கரத்தில் இருந்து கீழே இறங்க முற்பட்டாள் , ” இல்லை இப்படியே இரு” உறுதியாக கூறினான் .

அறைக்குள் நுழைந்தவன் அவளை படுக்கையில் படுக்க வைத்து ” டாக்டர் எங்க ” என்றான் கர்ஜிக்கும் குரலில்,

“டாக்டர் முக்கியமான ஆபரேஷன்ல இருகாங்க சார் வருவாங்க ” என்று அவர் கூறவும் எரிச்சலில் நெற்றியை நீவியவன் , மேகாவை பார்க்க அவளோ ,”ப்ளீஸ் ” என கண்களால் கெஞ்ச ” டாக்டர் இங்க வரணும் ”  என்றான் .

” சார் முதல்ல ஃபார்ம் ஃபில் பண்ணுங்க , டோக்கன் போடுங்க இது தான் இங்க ரூல்ஸ்  ” என்று அந்த நபர் சொல்ல ,

அவனோ,

” எனக்கு ரூல்ஸை உடைச்சு தான் பழக்கம் , இப்போ இங்க உங்க டாக்டர் வரணும் ரைட் நவ் , இல்லை உன் பல்லு உடையும் ” பற்களை கடித்தபடி அடக்கப்பட்ட கோபத்துடன் கூறியது தான் தாமதம் , மறு நிமிடமே மருத்துவர்  அந்த அறையில் இருந்தார்  .

அவனுடைய செயலை கண்டு மேகாவுக்கு சங்கடமாக இருக்க எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள் .

“வர இவ்வளவு நேரமா? வந்து பாருங்க ” கடித்து துப்பாத குறையாக மருத்துவரிடம் பாய்ந்தான் .

” இதோ சார் ” பணிவாக பேசினார் , அக்னி தீரன் என்னும் பெயர்,  சமுதாயத்தில் அவனுக்கு இருக்கும் செல்வாக்கு , அவ்வாறு பேச வைத்தது .

” சார் இது சின்ன அடி தான் இதுக்கெல்லாம் ட்ரீட்மென்ட் தேவை இல்லை ” என்றார் டாக்டர் .

” ஆர் யு மேட் ? உனக்கென்ன பைத்தியமா ? அவ முகத்தை பாரு  வலியில எப்படி உக்கார்ந்திருக்கான்னு , நீ ஒன்னும் இல்லைனு சொல்ற “

” சார் ப்ளீஸ் ஏதாவது பண்ணுங்க இல்லைனா அவர் விட மாட்டார் ” மேகா டாக்டரிடம் கெஞ்ச , அவரும் நிலைமை உணர்ந்து சின்னதாக ஒரு கட்டு போட்டுவிட , அங்கிருந்து கிளம்புவதற்குள் ,

‘ காயம் எப்பொழுது  சரியாகும் ?

எவ்வளவு நாள் மருந்து சாப்பிட வேண்டும் ?

வலி இருக்குமா ?’ என கேள்விகள்  கேட்டு ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கு  மருத்துவரை ஒருவழி பண்ணிவிட்டு தான்  அவன் மேகாவை அழைத்து கொண்டு வீட்டிற்கே வந்தான் .

தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!