mu-27

காதல் நோய்

அரங்கநாதன் மருத்துவமனை எப்போதும் போல் பரபரப்புக்் குறையாமல் இருக்க,

அர்ஜுன் மும்முரமாய் நோயாளிகளைக் கவனித்துக் கொண்டிருந்தான்.

எப்போதும் போல் அவனுக்காகக் காத்திருப்போரின் வரிசை நீண்டதாய் இருக்க, அவனின் பொறுமையும் கவனிப்பும் வியப்புக்குரியதாகவேப் பேசப்பட்டது.

ஆனால் செவிலியர்கள்தான் அவனுக்காக வரும் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் சலித்துக் கொண்டனர். இந்த விஷயம் அர்ஜுனின் செவிக்கு எட்டிவிட, சிகிச்சைக்கு வந்த அனைத்து நோயாளிகளும் சென்றபின் செவிலியர்களை அழைத்துக் கொஞ்சம் அதீதக் கண்டிப்போடுப் பேசி அனுப்பி வைத்தான்.

பின்னர் தன் இருக்கையில் அமர்ந்தபடி ஓய்வாகத் தன் கைப்பேசியினை எடுத்து அபிமன்யுவிற்கு அழைப்பு விடுத்தான்.

மறுபுறத்தில், “சொல்லு அர்ஜுன்!” என்று அபிமன்யு கேட்க,

அவன் “கிளம்பிட்டியா ?” என்று  வினவினான்.

“ம்ம்ம்… இப்பதான் கொஞ்ச நேரமாச்சு… அம்மாதான் ரொம்ப பீஃல் பண்றாங்க.. நீ கொஞ்சம் பேசிப் புரிய வைடா” என்றான்.

“நட்ட நடுராத்திரில போய் காதலியை மட்டும் சமாதானப்படுத்த முடிஞ்சுது… அம்மாவை சமாதானப்படுத்த முடியல… அதுக்கு மட்டும் நான் வேணுமா?!” என்று அர்ஜுன் அழுத்தமாய் கேட்க,

“டேய் அர்ஜுன்… இதான் சான்ஸ்னு குத்திக் காட்டுறியா?!”

“சேச்சே இல்ல.. சரி  சொல்லு… காலையில எதுவும் கேட்க முடியல… ” என்றான்.

“என்ன கேட்க முடியல… என்னடா சொல்லணும்?”

“அதான் சார் நேத்து சொல்ல சொல்லக் கேட்காம ரம்யா வீட்டு அட்ரெஸ் வாங்கிட்டுப் போனிங்களே… சூர்யாவை மீட் பண்ணி ப்ரொப்போஸ் பண்ணியா?” என்று கேட்டான்.

அபிமன்யு சற்று நேரம் மௌனமாகிட அர்ஜுன் உடனே, “என்னாச்சு… சைலன்ட்டா இருக்க… சூர்யாகிட்ட அடி கிடி வாங்கினியா?” என்று கேட்டு சிரித்தான்.

“யாரு… அவ என்னை அடிக்கப் போறாளாக்கும்… நான்தான் அவ பண்ண வேலைக்கு கன்னத்துல ஒண்ணு கொடுத்திருக்கணும்… மிஸ்ஸாயிடுச்சு” என்றான்.

அர்ஜுன் பதறியபடி, “அப்படி என்னடா நடந்துச்சு…?!” என்று கேட்க,

“எவ்வளவு திமிரிருந்தா நான் விளையாட்டுக்குதான் பிரொப்போஸ் பண்ணேன்னு என்கிட்டயே சொல்லி இருப்பா” என்றான் அபிமன்யு கோபத்தோடு!

“அப்போ இரண்டு பேரும் சண்டைதான் போட்டுக்கிட்டீங்களா!”

“என்னைப் பத்தி உனக்குத் தெரியாதா அர்ஜுன்… நான் போய் சண்டை போடறதாவது… அவகிட்ட சமாதானமா பேசி நல்லா ஸ்ட்ராங்கா புரிய வைச்சுட்டேன்… இனிமே என்கிட்ட  விளையாட மாட்டா” என்றான்.

“எனக்கு உண்மையிலேயே ஆச்சர்யமா இருக்கு அபி… உங்க இரண்டு பேரோட லைஃப் ஸ்டைலும் வேற வேற… அதுவுமில்லாம கரிசன் சோழாவும் மும்பையும் வேற வேற உலகம்… அப்படி இருக்க ஒருத்தரை ஒருத்தர் இந்தளவுக்குப் புரிஞ்சுக்கிட்டுக் காதலிக்க முடியுமா” என்று கேட்டான் வியப்புக்குறியோடு.

“நீ ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கோ அர்ஜுன்… வேற வேற உலகம்… வேற வேற வாழ்க்கை முறை… ஆனா நாங்க இரண்டு பேரும் வேற வேற இல்ல… சூர்யாவைப் பார்த்த அந்த நிமிஷமே நான் முடிவுபண்ணிட்டேன்… அவதான் என் பொண்டாட்டின்னு… எங்களுக்குள்ள இருக்குற புரிதலும் காதலும் இன்னிக்கு நேத்து ஏற்பட்டதுன்னு தோணல….. அதை எப்படி சொல்லிப் புரிய வைக்கிறதுன்னும் தெரியல…  அவளோட முகம் நான் அவளைப் பார்த்த பிறகு எனக்குள்ள பதிஞ்சதில்ல… ஏற்கனவே என் மூளைக்குள்ள ரொம்பவும் அழுத்தமா பதிவாகியிருந்த முகம்னு தோணுது…  பூர்வ ஜென்ம பந்தம்னு சொல்வாங்களே அந்த மாதிரி… உங்க மெடிக்கல் டெர்ம்ஸ்ல சொல்லணும்னா… ஜெனட்டிக் மெமரி ” என்றான்.

“ஜெனட்டிக் மெமரியா… என்னடா உளர்ற… காதல் வந்ததும் நீ என்ன லூசாயிட்டியா?” என்று ஏளனமாய் அர்ஜுன் சிரிக்க,

“உனக்கு இதெல்லாம் புரியாது அர்ஜுன்… புரிய வைக்கவும் முடியாது… பிகாஸ் உங்க  மெடிக்கல் சயின்ஸைப் பொறுத்த வரை… மனிதனுடைய உறுப்புகள்தான் உடம்பை இயக்குது… பட் அதுமட்டுமே இல்லன்னு சித்தம் சொல்லுது… அதை எல்லாம் தாண்டி ஒரு பவர் இருக்கு… பூமியை  இயக்குகிற பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாயம் போல புரிந்து கொள்ள முடியாத ஒண்ணு அது” என்றான்.

“பவருங்குற… ஆகாயங்குற… இப்ப என்னதான் சொல்ல வர்ற”

“ம்ம்ம்… மனிதனையும் பஞ்ச பூதங்கள்தான் இயக்குது… அதுல ஆகாயம்ங்கறது மனிதனோட எண்ணங்கள் மாதிரி…  எது அழிவுபெற்றாலும் ஆகாயம் அழியாது… அப்படித்தான் எண்ணங்களும்… எங்கயோ எப்பவோ தொலைச்சிருப்போம்… அது திடீர்னு நம்ம கைக்கு கிடைக்கும்ல… அப்படி ஒரு உறவு எனக்கும் சூர்யாவுக்கும்… நீங்க சொல்ற மாதிரி அது வெறும் ஹார்மோன்ஸ் செக்ரீஷன் இல்ல… இட்ஸ் பியான்ட் தட்” என்று உணர்வுபூர்வமாய் அபிமன்யு உரைக்க,

அர்ஜுனிற்கு அவன் சொன்னதைப் புரிந்து கொள்ள இயலாமல், “அபி… வேண்டாம்… நீ சொல்றதை எல்லாம் கேட்டா நான் படிச்சதெல்லாம் மறந்துடும்… விட்டிடு”என்றான்.

“கரெக்ட் … அதுதான் ஒரு சித்த வைத்தியனுக்கும் டாக்டருக்கும் உள்ள வித்தியாசம்… நீங்க படிக்கிறீங்க… நாங்க வாழ்றோம்… நல்லா கேட்டுக்கோ அர்ஜுன்…

நீ டாக்டரா இருக்கிற வரைக்கும் சத்தியமா உன் காதலைப் பிரொப்போஸ் பண்ணவே மாட்ட… முதல்ல உன் வெள்ளைக் கோட்டைக் கழட்டி வைச்சிட்டு… அர்ஜுனா மட்டும் ரம்யாகிட்ட பேசு… அப்புறம் நான் சொன்னதெல்லாம் உனக்குத் தானா புரியும்.

சரி சரி அர்ஜுன்…  ஃபோனை வைச்சிடு…  நான் கரிசன் சோழாவுக்கு ரீச்சானதும் உன்னைக் கூப்பிடுறேன்” என்றான்.

“ம்ம்ம்… ஒகே அபி” என்று சொல்லியபடி இருவரும் தங்கள் உரையாடல்களை முடித்துக் கொள்ள, அர்ஜுன் அபிமன்யு சொன்னதை எண்ணி சிந்தனையில் ஆழ்ந்தான்.

அர்ஜுன் அபிமன்யு சொன்னதைப் பற்றி எண்ணியபடித் தன் அறையின் ஜன்னலோரமாய் சாய்ந்து நிற்க அப்போது ரம்யா உள்ளே வர அனுமதிக் கேட்டாள்.

அவளின் வரவை எதிர்நோக்கியே அவன் காத்திருக்கக் கொஞ்சம் ஆர்வமாய், “கம்மின் ரம்யா” என்றழைத்தான்.

ரம்யா அவன் இருக்கையில் காணாமல் தேடியவள் அவன் ஜன்னலோரமாய் சாய்ந்து நின்றிருக்க அவன் முகத்தைக் கூடப் பார்க்காமல், “நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ண வேண்டியவங்க ரிப்போர்ட்ஸ்… இதை செக் பண்ணிட்டு… பேஷன்ட்ஸையும் ஒருதடவைப் பார்த்துடுங்க” என்று சொல்லி ஒரு பைஃலை மேஜை மீது வைத்துவிட்டு அவனைக்  கண்டுகொள்ளாமல் வெளியேற,

அவளின் மீது அவனுக்குக் கோபம் உண்டாக அவளை அழைக்கலாம் என எத்தனிக்கும் போதே அவளே எதையோ நினைவுகூர்ந்தபடி அவன் புறம் திரும்பியவள், “சாப்பிட்டீங்களா?” என வினவினாள்.

மனதில் காதலை வைத்துக் கொண்டு அதைத் தெரிவிக்காமல் ஏதோ கடமைக்கென்று பேசுவது போல் நடிப்பவளை என்ன செய்யலாம் என அர்ஜுன் யோசித்துக் கொண்டிருக்க மீண்டும் அவள், “உங்களைதான் டாக்டர்… சாப்பிட்டீங்களான்னு கேட்டேன்” என்று அழுத்தமாய் கேட்க,

அர்ஜுன் அவளின் மீதானப்  பார்வையை எடுக்காமல் “இல்ல இனிமேதான்” என்றான்.

“லேட்டாகுதுல்ல… சாப்பிட்டிருங்க” என்று சொல்ல அவளின் அந்த அலட்சியப் போக்கு அவனை ரொம்பவும் காயப்படுத்தியது.

அவள் மீண்டும் அந்த அறையைவிட்டு வெளியேறப் போக, “ரம்யா” என்று அழைத்தான்.

அவள் மேலே செல்லாமல் நின்ற இடத்திலிருந்து திரும்பி, “ம்ம்ம்… சொல்லுங்க டாக்டர்” என்றாள்.

“ஒரு  விஷயம் பேசணும்” என்றவன் ஆரம்பிக்கும் போதே அவள் இடைமறித்து,

“கொஞ்சம் வொர்க் இருக்கு அப்புறமா ஈவ்னிங் பேசுவோமா” என்று தவிர்த்தபடி மீண்டும் அவள்
அவசரமாய் கிளம்ப எத்தனிக்க இன்னும் இன்னும் அவனுக்குக் கோபம் பெருகிக் கொண்டே வந்தது.

“மேடம் எப்போ ஃப்ரீன்னு சொன்னா நான் வேணா அப்ப வந்து மீட் பண்ணட்டுமா?” என்று அவன்  சொன்ன நொடி அதிர்ச்சியோடு அவள் திரும்பி நோக்க, அவன் கையைக் கட்டியபடி அவளைக் கூர்மையாய் நோக்கிக் கொண்டிருந்தான்.

அந்தத் தோரணையில் கொஞ்சம் மிரட்சியடைந்தவளிடம் மீண்டும், “உங்ககிட்ட பேசுறதுக்கு அப்பாயின்ட்மென்ட் ஏதாச்சும் வாங்கணுமா மிஸ். ரம்யா?” என்று கேட்டான்.

“சாரி டாக்டர்… ஏதோ டென்ஷன்ல… சொல்லுங்க” என்று கேட்டுப் பதட்டத்தோடு நின்றாள். அர்ஜுனின் பார்வை அவளை மட்டுமே குறி வைத்திருக்க ரம்யாவிற்கு அவனின் பேச்சும் பார்வையும் கொஞ்சம் புதிதாய் தோன்றியது. ஏற்கனவே செவிலியர்களிடம் அவன் கோபமாய் நடந்தத் தகவல் அவளுக்குள் அச்சத்தைத் தோற்றுவித்தது.

அர்ஜுன் சலிப்போடு,
“டாக்டர் டாக்டர்னு கூப்பிடாத ரம்யா… கால் மீ அர்ஜுன்” என்றுரைக்க அவள் புரியாமல், “அதெப்படி டாக்டர்?” என்றுயங்கியவளை அவன் முறைத்தபடி, “டாக்டர் இல்ல… அர்ஜுன்” என்றான் அழுத்தமாக.

ரம்யாவிற்கோ புதிதாய் ஏன் இப்படி எல்லாம் பேசுகிறான் என்று எண்ணியபடி,”சரி சொல்லுங்க அர்ஜுன்” என்றாள்.

அவனோ, “அது… எப்படி உனக்குப் புரியற மாதிரி சொல்றது” என்று யோசிக்க,

“ஏதுவாயிருந்தாலும் பரவாயில்ல அர்ஜுன், சொல்லுங்க” என்றாள்.

அர்ஜுன் யோசனைக்குறியோடு, “ஐம் நாட் பீலிங் வெல் ரம்யா… என்னமோ  சரியில்ல… ரெஸ்டலஸ்ஸா இருக்கு… சரியா  பேஷண்ட்ஸைக் கூடப் பார்க்க முடியல… சாப்பிடப் பிடிக்கல… தூக்கம் வரமாட்டேங்குது” என்று பொய்யான முகப்பாவனையோடு அவன் உரைக்க

ரம்யா அதிர்ந்தபடி, “உங்களுக்கா டாக்டர்?” என்று கேட்டவளை அவன் முறைக்க,

“சாரி சாரி… அர்ஜுன்… ” என்று தன் தவறை திருத்திக் கொண்டாள்.

பின்னர் அவள்,
“நான் அப்பவே நினைச்சேன்… நீங்க ரெஸ்டில்லாம எப்பப் பாரு பேஷண்ட்ஸையே கவனிச்சுக்கிட்டு… அதைப் பத்தியே யோசிச்சுக்கிட்டு… டைமுக்கு சாப்பிடாம… தூங்காம உடம்பைக் கெடுத்துக்கிட்டீங்க… சரி இப்ப என்னதான் பண்ணுது… பீவரிஷ்ஷா இருக்கா?” என்று கேட்டாள்.

அவனோ தனக்குள் புன்னகையித்தபடி, “எனக்கென்னன்னு என்னாலயே டையக்னைஸ் பண்ண முடியல… ரம்யா” என்று கூற,

ரம்யா அக்கறையோடு, “என்னதான் அப்படி” என்று சொல்லி அவன் கரத்தைப் பற்றி பல்ஸை சரி பார்க்க அர்ஜுனின் கண்களில் வெளிப்பட்டக் குறும்புத்தனத்தை அவள் கவனிக்கவில்லை.

“பல்ஸ் நார்மலாதானே இருக்கு” என்று சொல்லி அவனை அவள் நிமிர்ந்து நோக்க அர்ஜுன் தலையசைத்தபடி,

“நோ ரம்யா… சம்திங் ராங்… இப்ப கூட ஒரே படபடப்பா இருக்கு… மூச்சு வாங்கற மாதிரி இருக்கு” என்று உரைத்தான்.

ரம்யா தெளிவற்ற நிலையில்,”ஒரு வேளை பிபி ரைஸ்ஸாகி இருக்குமோ”
என்றவள் அவனிடம்,

“நீங்க முதல்ல இப்படி வந்து உட்காருங்க” என்று சொல்லி அவனை இருக்கையில் அமரச்சொல்லி அருகில் நின்று  பிபியை சரி பார்த்தாள்.

அர்ஜுனோ அந்தத் தருணத்தை ரசித்தபடி இருக்க ரம்யா தீர்க்கமானப் பார்வையோடு, “பிபி கூட நார்மலாதான் இருக்கு… யூ ஆர் பெர்ஃபெக்ட்லி அல்ரைட்… நீங்க வேறெதோ குழப்பத்துல” என்று சொல்லி முடிப்பதற்கு முன்னதாக,

“நோ ரம்யா… ஐம் நாட் ஆல்ரைட்… உனக்கு நான் சொல்றது புரியமாட்டேங்குது” என்றான்.

அர்ஜுனின் முகப்பாவனையைக் கவனிக்காமல் ரம்யா யோசித்துவிட்டு, “ம்ம்ம்… நான் போய் டாக்டர். சந்த்ருவைக் கூட்டிட்டு வர்றேன்… பெட்டர் ஹி கேன் டையக்னைஸ்” என்று செல்லப் பார்த்தவளின் கரத்தை இறுக்கமாய் பற்றிக் கொண்டு குறும்புத்தனமாய் புன்னகையை உதிர்க்க,

அந்த நொடி அவனின் பார்வை அவளைக் காந்தமாய் இழுத்தது.

அவன் அவளிடம், “உன்னைத் தவிர வேற யாராலயும் எனக்கென்னன்னு டையக்னைஸ் பண்ண முடியாது… ” என்றான்.

ரம்யா அவன் பார்வையையே உற்று நோக்கி ஒருவாறு புரிந்து கொண்டவளாய், “அப்படி என்ன அர்ஜுன்… யாரலயும் டையக்னைஸ் பண்ண முடியாத டிசீஸ்” என்று கேட்டுப் புருவத்தை உயர்த்தினாள்.

“இன்னுமா  உன்னால் கண்டுபிடிக்க முடியல” என்று அவன் ஏக்கமாய் பார்த்தான்.

அவன் எண்ணத்தைக் கணித்த போதும் அவள் அலட்சியத்தோடு, “எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் உங்களுக்கு ஒண்ணுமில்ல அர்ஜுன்… நீங்களா ஏதாச்சும் கற்பனை பண்ணிக்காதீங்க” என்றாள்.

“இந்த நோய் இப்படி எல்லாம் டெஸ்ட் பண்ணிக் கண்டுபிடிக்க முடியாது… ”  என்றான்.

“பின்ன வேற எப்படி?” என்று அவள் குழப்பமாய் கேட்க,

“என் ஹார்ட் பீட்டை பீஃல் பண்ணிப் பாரு ரம்யா…  உனக்குப் புரியும்” என்றான்.

ரம்யா வேடிக்கையாகத் தலையசைத்து, “ஓ… ஒகே… ஹார்ட் பீட்டையும் செக் பண்ணிட்டா போச்சு” என்று சொன்னபடி அவள் ஸ்டெத்தஸ்கோப்பை கையில் எடுக்கப் போனவளின் கரத்தைத் தடுத்து,

“ஸ்டெத்ஸ்கோப்பில ஹார்ட் பீட்டை கேட்கதான் முடியும்… பீஃல் பண்ண முடியாது…” என்று சொல்லி மறுகணம் அவன் அவளின் வளை கரங்களை தன் கையால் பற்றி அவன் இடதுபுற மார்பகத்தின் புறம் வைத்துப் பிடித்துக் கொள்ள உணர்வுகளால் கட்டுண்டு அவன் விழிகளில் மெய்மறந்தவள் தன்னை மீட்டுக் கொள்ள முடியாமல் நிற்க,

“இப்பையாச்சும் புரிஞ்சுதா” என்று கேட்டான் அவன்.

ரம்யா சுதாரித்துக் கொண்டு அவளின் கரத்தை மீட்க முயன்றபடி,
“அர்ஜுன் ப்ளீஸ்… யாராச்சும் வந்துடப்போறாங்க… கையை விடுங்க” என்றாள்.

“என் அனுமதி இல்லாம யாரும் என் ரூமூக்குள்ள வர முடியாது… நீ சொல்லு… இப்பயாச்சும் உன்னால டையக்னைஸ் பண்ண முடிஞ்சுதா” என்று கேட்டான்.

அவனோ  அவள் தவிப்பை உணராமல் பிடிவாதமாய் அவள் பதிலை எதிர்பார்த்துக்கொண்டிருந்தான். ரம்யா பதில் சொல்லாமல் பேச்சற்று நிற்க,

“இப்படியே அமைதியா இருந்தா என்ன அர்த்தம்… நான் உன் மனசைப் புரிஞ்சிக்கலைன்னுதானே கோபமா இருந்த… இப்போ நான் என் மனசிலிருக்குற காதலை உனக்குப் புரிய வைச்சிட்டேன் … இப்போ நீதான் சொல்லணும் ரம்யா” என்று அவன் மீண்டும் அவள் பதிலை எதிர்நோக்க,

ரம்யாவிற்கு தேகம் சில்லிட்டுப் போக பேச்சு வராமல் நின்று அவனை மிரள மிரள பார்த்துக் கொண்டிருந்தாள்.

அந்த சமயம் அர்ஜுன் மேஜை மீதிருந்த ஃபோன் ஒலிக்க, அவள் கரத்தை விடுத்துவிட்டு ஃபோனை எடுத்துப் பேசினான்.

“தப்பிச்சோம்” என்று அறையை விட்டு வெளியேறப் பார்த்தவளைக் கண்ணசைவால் அவன் போகவிடாமல் தடை செய்ய,

இப்போதைக்குத் தன்னை இவன் லேசில் விடமாட்டான் போலிருக்கிறதே என அச்சம் கொண்டவள் தன் மனதில் உள்ளதை எல்லாம் எவ்விதம் அவன்  தெரிந்து கொண்டிருக்கிறான் என எண்ணி யோசனையில் ஆழ்ந்தாள்.

அவனோ பேசி முடித்த பின்னர் மேஜை மீதிருந்த பொருட்களை ஒழுங்குபடுத்திவிட்டு கோர்ட்டை எடுத்துக் கொண்டு அவள் முன்னே வந்து கம்பீரமாய் நின்று,

“நான் கொஞ்சம் வெளியே கிளம்பணும்…  வர லேட்டாயிடுச்சுன்னா… ஈவனிங் வர்ற பேஷண்ட்ஸை நீ பார்த்துக்கோ ஒகேவா” என்று  கேட்க  ரம்யா தலையை மட்டும் அசைத்தாள்.

அவள் கிளம்பிவிடப் போகிறான் என அவள் நிம்மதி அடைய,

“சரி நான் கேட்டதுக்கு சீக்கிரம் பதில் சொல்லு … நான் கிளம்பணும்” என்றான்.

‘இவன் என்ன விடாக் கொண்டனாய் இருக்கிறான்’ என எண்ணியபடி அவனை நோக்கி, “இப்போ நீங்க போயிட்டு வாங்க… நாம அப்புறம் பேசுவோம்” என்று தவிர்க்க,

“ஒகே பேசுறது அப்புறம் பேசுவோம்… ஆனா நான் உனக்குக் கொடுக்க வேண்டியது ஒண்ணு இருக்கு” என்றான்.

“என்னது அர்ஜுன்?” என்று அவள் ஆர்வமாய் கேட்க,

“டாக்டர் பீஃஸ்” என்றான்.

“பீஃஸா… எதுக்கு?” என்று ரம்யா அதிர்ச்சியடைய,

“எனக்கு ட்ரீட்மென்ட் பார்த்துட்டு இப்போ பீஃஸ் எதுக்குன்னு கேட்டா எப்படி?”

“விளையாடாதீங்க அர்ஜுன்… முதல்ல கிளம்புங்க” என்று அங்கிருந்து செல்லப் பார்க்க  அவன்  வழிமறித்து நின்றான்.

“அர்ஜுன் இது ஹாஸ்பிடல்?” என்றாள் அவள் பதட்டத்தோடு!

“எனக்குத் தெரியாதா இது ஹாஸ்பிடல்ன்னு… நான் பீஃஸ்தானே கொடுக்கறேன்னு சொன்னேன்…. கிஸ்ஸா கொடுக்கிறேன்னேன்… எதுக்கு இவ்வளவு பதர்ற” என்று கேட்டான் இறுக்கமானப் பார்வையோடு.

ரம்யாவோ என்ன செய்யப் போகிறானோ என யோசனைக்குறியோடு நின்றாள்.

“எனக்கு டைம் இல்ல… நான் கிளம்பணும்… சீக்கிரம் கண்ணை மூடு” என்றான்.

“எதுக்குக் கண்ணை மூடனும்?” என்று அவள் சந்தேகமாய் கேட்டாள்.

“ப்ச்… சும்மா கேள்விக் கேட்காம கண்ணை மூடு” என்று மிரட்டல் தோரணையில் உரைக்க வேறு வழியில்லாமல் ரம்யா  விழிகளை மூடிக் கொண்டாள்.

அர்ஜுனும் அபிமன்யுவும் வேறு வேறு ரூபமாய் நின்றாலும் ஓர் கருவில் ஜனித்தவர்கள் என்று அவ்வப்போது நிரூபித்துவிடுகின்றனர். ஆனால் அர்ஜுன் அவன் காதல் முத்திரையை வேறுவிதமாய் பதிவிட்டான்.

விழிகள் மூடியிருந்த ரம்யாவின் கரத்தைப் பற்றி ஒரு அழகிய காதல் சின்னம் கொண்ட தங்க மோதிரத்தை அவள் விரலில் மாட்டிவிட்டான்.

ரம்யா தன் இமைகளைத் திறந்து வியப்பாய் பார்த்துக் கொண்டிருக்க அர்ஜுன் புன்னகையோடு, “சாரி…எனக்குக் காதல் வசனமெல்லாம் பேச வராது … ஷார்ட்டா சொல்றேன்… நீ என் லைஃப் முழுக்க வேணும் ரம்யா… ஒரு ப்ரெண்ட்டா… பிலாஸஃபரா… வைஃப்பா… எல்லாமுமா வேணும்… ” என்றான்.

ரம்யாவோ வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஆனந்தத்தோடு சற்று நேரம் ஸ்தம்பித்து நின்றவள் இப்போது தான் பேசியே ஆக வேண்டும் என மனதைரியத்தை வரவழைத்துக் கொண்டு,
“தேங்க்ஸ் அர்ஜுன் … தேங்க்யூ சோ மச்…  இந்த நிமிஷத்துக்காகதான் நான் இத்தனை நாள் ஏங்கிட்டிருந்தேன்… ஏன் காத்துகிட்டிருந்தேனு சொல்லணும்… இது போதும்… உங்க வாழ்க்கை முழுக்க நான் கூடவே இருப்பேன்… நீங்க எதிர்பார்த்த எல்லாமுமாய்…” என்றாள். எது அவளை அப்படியெல்லாம் பேச வைத்தது என்று அவளுக்கேரியவில்லை.

“அட்லாஸ்ட்… நீ உன் மனசிலிருக்குறதை சொல்லிட்ட ரம்யா… பட்  எனக்கு நீ தேங்க்ஸ் சொல்லக் கூடாது… உன் சிஸ்டர் சூர்யாவிற்குதான் சொல்லணும்… அவதான் எல்லாத்துக்கும் காரணம்” என்று உரைக்க ரம்யா யோசனையோடு நின்றாள்.

அவன் அவசரமாய், “ஓகே ரம்யா… பை… நாம அப்புறம் பேசுவோம்” என்று சொல்லி விடைப்பெற்றுக் கொண்டு அவன் அறையை விட்டு வெளியேறினான்.

ரம்யா புரியாமல் அர்ஜுன் எதற்குத் தன்னை சூர்யாவிற்கு நன்றி  சொல்லச் சொல்கிறான்  என்று சிந்தித்தாள்.

எதுவாயிருந்தாலும் சூர்யாவிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என எண்ணிவிட்டு வேலையில் ஆழ்ந்தாலும்  அவள் மனமோ அர்ஜுன் நினைவுகளிலேயே சஞ்சரிப்பதை அவளால் தடுக்க முடியவில்லை.

இவர்களின் உறவைப் போன பிறவியில் அக்னீஸ்வரியின் மீது கொண்ட வன்மத்தால் ருத்ரதேவன் உடைத்தெறிந்தான். அக்னீஸ்வரி உயிரற்றுப் போனாலும் அவர்களின் உறவைன்தான் பிரித்தோம் என்ற குற்றவுணர்வு அவளின் மனதின் ஆழத்தில் நிலைகொண்டுவிட இன்று சூர்யாவாக ஜனித்து அவளே அவர்களின் காதலை அவர்களுக்கேப் புரிய வைத்து இணைத்தும் வைத்துவிட்டாள். இனி இவர்களின் அழகான பந்தம்   இப்பிறவியில் செழிப்பாய் வளர, விரைவில் இவர்களாலயே அரங்கநாதன் குடும்பமும் தழைத்தோங்கி சிறக்கப்போகிறது.