mu-final1

mu-final1

வீர சாகசம்

அந்த அழகிய மலையின் உச்சியில் இரவின் குளிர் நடுக்கமுற செய்து கொண்டிருந்தது. இருளோடு பெரும் அமைதியை அந்த இடத்தை முழுவதுமாய் கவ்விக் கொண்டிருக்க, சில இரவுப் பறவையின் சத்தங்கள் ஆங்காங்கே ஒலித்து லேசாய் அச்சத்தை உண்டாக்கியது.

சுற்றிலும் உயரமான மரங்கள் பாதுகாவலனாய் நிற்க உதகை நகரத்தின் ஒதுக்கு புறமாய் அதிக ஆட்கள் நடமாட்டமே இல்லாத காட்டு பகுதியின் தொடக்கத்தில் தனிமையில்  அமைக்கப்பட்டிருந்த அந்த பங்களா  ஈஷ்வரின் சதித்திட்டங்களுக்கும் ரொம்பவும் வசதியாயிருந்தது.

எல்லோரும் உறங்கி கொண்டிருக்க இவ்வுலகின் நிம்மதியை முற்றிலுமாய் கெடுக்க ஈஷ்வர் விழித்திருந்து தன் சதியாலோசனையில் ஈடுபட்டிருந்தான். அந்த பங்களாவின் மேல்புறத்தில் இருந்த அந்த பெரிய அறை அப்போது ஆராய்ச்சி மையமாகவே காட்சியளித்தது.

ஈஷ்வர் தன் மோசமான திட்டத்தை வகுத்து கொண்டிருக்க, அந்த ஐந்து பேர் கொண்ட குழுவிடம்  டீ7 நோயின் மருந்தை சோதிக்க யார் மேல்… எப்படி… எவ்வாறு செயல்படுத்துவதென விவரித்து கொண்டிருந்தான்.

மதிக்கு கண்களை சுழற்றி கொண்டு தூக்கம் வர, இவர்களுக்கு இரவு நேரம்தான் கிட்டியதா என அலுத்த மேனிக்கு நின்றிருந்தான்.

கிட்டதட்ட அவர்களின் உரையாடல்கள் முடிவுற அந்த குழுவின் தலைமையானவனான சலீம் மட்டும் தயங்கியபடி, “பாஸ்… ஒரு சின்ன மேட்டர் கேட்கலாமா? என்றான்.

ஈஷ்வர் தலையசைத்து, “ம்ம்ம்… கேளுங்க சலீம்” என்று ஆர்வமாக,

சலீம் தயக்கத்தோடு, “நம்ம கொங்ககிரி பிராஜக்ட்டை பிளாஃப்பாக்கின அந்த பெர்ஸன்  உண்மையிலேயே  டீ7 டிஸீஸை க்யூர் பண்ணான்னா?” என்று கேட்டான். எல்லோர் மனதிலும் இருந்த வியப்பான கேள்விதான் அது.

ஈஷ்வருக்குமே இந்த கேள்வி மனதை துளைத்து கொண்டிருக்க யோசனையோடு, “இட்ஸ் அ மில்லியன் டாலர் க்வ்ஷின்… எனக்குமே அந்த கேள்விக்கான பதில் வேணும் சலீம்…  டோன்ட் வொரி… அதை பத்தி நாம அவன்கிட்டயே கேட்டு தெரிஞ்சிக்கலாம்” என்று சொன்ன நொடி அந்த அறையின் ஜன்னலருகே ஏதோ விழுந்த சத்தம் கேட்க, ஈஷ்வரின் முகம் மாறியது.

“மதி” என்று ஈஷ்வர் அழைக்க அறைகுறை தூக்கத்தில் இருந்தவன் இப்போது ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தான். மீண்டும் ஈஷ்வர் கோபத்தோடு, “டே இடியட் மதி” என்று உரக்க அழைக்க மெல்ல விழித்தவன் தூக்க கலக்கத்தோடே, “எஸ் பாஸ்” என்றான்.

“ஏதோ சத்தம் கேட்குது… ஜன்னல் எல்லாம் லாக்காயாருக்கான்னு பாரு” என்று சொன்னதும் மதி தெளிவுப்பெற்று  எல்லா ஜன்னல்களையும் சோதனை புரிந்தான்.

“எல்லாமே லாக்டாதான் இருக்கு…” என்று மதி சொல்ல,

ஈஷ்வர் பதட்டத்தோடு, “சரி மதி… செக்யூரிட்டிக்கு கால் பண்ணி வீட்டை சுத்தி செக் பண்ண சொல்லு… சம்திங் ராங்” என்று பணிக்க, மதியும் அவ்வாறே செய்தான்.

இருப்பினும் ஈஷ்வரின் மனம் நிம்மதியடையாமல் ஒருவித அபாய ஒலியை எழுப்பிக் கொண்டிருந்தது. யாரோ ஒருவன் அவன் ரகசியத்தை களவாட வந்திருக்கிறானோ என்று சிந்தித்தவன், பின்னர் இந்த பங்களாவின் இத்தனை பெரிய சுவற்றினை தாண்டி  நுழைவது சாத்தியமா என யோசிக்க, அத்தகைய அசாத்தியமான காரியத்தை செய்ய ஒருவனால் முடியும். அவனுக்கு மட்டுமே ஈஷ்வரின் சாம்ராஜ்ஜியத்திற்குள் நுழையும் வல்லமையும் அசாத்தியதைரியமும் உள்ளது.

அந்த அசாகாய சூரன்தான் அந்த பங்களாவின் வெளிபுறத்தில் இருந்த மரத்தின் மீது ஏறி ஒரு கயிற்றை லாவகமாய் குறி பார்த்து வீசி உள்ளே  இருந்த ஒரு மரத்தின் பிடியில் சிக்க வைத்து கயிற்றை பாலாமாக்கி அந்த பங்களாவிற்குள் நுழைந்தான். மரங்களும் காட்டு மிருங்களும் இரவின் குளிரும் அவனுக்கு புதிதல்ல. எல்லாமே அவனுக்கு தண்ணிபட்ட பாடு.

ஆதலால் அவன் அத்தனை விரைவாய் கடந்து உள்ளே வந்த நொடி தான் உள்ளே வர உதவி புரிந்த அந்த மரத்தை கட்டியணைத்து நன்றி சொல்லும் விதமாய் முத்தமிட்டுவிட்டு இறங்கும் போதுதான் கால் இடறி கீழே விழுந்தான்.

ஈஷ்வரின் சதிகூட்டத்தில் அபிமன்யு பற்றி பேச தொடங்கிய நொடி அவன் தன் வீரசாகசங்களை புரிந்து நுழைந்திருக்க, நூறு ஆயுசு என்று பாராட்ட எண்ணிவிடலாம் என்பதற்குள் அத்தனை உயரமான மரத்தில் இருந்து தொப்பென்று கீழே விழுந்தும் தொலைத்தான். அவன் விதியை தீர்மானிப்பதில் நமக்குமே கொஞ்சம் குழப்பம்தான்.

ஆனால் எத்தனை உயரத்தில் இருந்து விழுந்தாலும் எப்படி விழுந்தால் காயம் ஏற்படாது என்ற மாயவித்தையை கற்று தேர்ந்தவனாயிற்றே. ஆதலால் காயம் ஏற்படாமல் கீழிருந்த கிளையை பிடித்து சடாரென்று குதித்து கை கால்களை உதறி சரி செய்து கொண்டான்.

சூர்யா சொன்னது போல் அவன் புத்திகூர்மையும் தைரியமும் வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதே நேரத்தில் அவன் எதிர்கொள்ளும் எந்த பெரிய ஆபத்தையும் அவன் திறமையால் கடந்துவிடுவான் என்பதே அவனின் இந்த வீரசாகசம் அறிவுறுத்தியது.

அபிமன்யுவை ஈஷ்வரே அழைத்திருக்கும் போது அவன் நேர்பாதையிலேயே வந்திருக்கலாமே. ஆனால் அவன் மூளை ஏனோ அத்தகைய வழியை தேர்ந்தெடுக்க விரும்பவில்லை. சூர்யாவை கைப்பேசியில் அழைத்த போது அவள் பேசாமல் இருந்ததும் பின் நீண்ட நேரம் போஃன் ஸ்வட்ச் ஆஃப்பானதும் அவனை பதட்டமடைய செய்தது.

அபிமன்யு உடனே அர்ஜுனின் மூலமாக ரம்யாவிடம் சூர்யா எங்கே சென்றிருக்கிறாள் என்பதை கேட்டு தெளிவுப்படுத்தி கொண்டான். அதன் பின் அவளை பார்த்துவிட வேண்டும் என எண்ணி கரிசன் சோழாவிலிருந்து புறப்பட்டு கோயமுத்தூர் வந்தடைய,

அப்போது ஈஷ்வரின் அழைப்பு இன்னும் அவனை கலவரப்படுத்தியது. சூர்யாவை பற்றி அவ்வாறெல்லாம் அவன் ஏன் தன்னிடம் சொல்ல வேண்டும் என்ற கேள்விக்கான பதில் ஒரு விஷயத்தை பதிய வைத்தது. அது சூர்யாவிற்கு ஈஷ்வரால் ஏதோ ஒரு ஆபத்து நிகழப்போவதாக தோன்ற அந்த எண்ணத்தாலேயே அவன் இப்போது இங்கிருக்கிறான்.

சூர்யா எத்தகைய பிரச்சனையில் சிக்கி கொண்டிருக்கிறாள் என்பது தெரியாமல் நேரடியாக வந்து தானும் அந்த ஈஷ்வரிடம் சிக்கி கொள்ள கூடாதென்று எச்சரிக்கை உணர்வோடே அபிமன்யு இப்படி ஒரு திருட்டுத்தனத்தில் ஈடுபட்டான்.

அந்த பங்களாவை சுற்றியுள்ள தோட்டத்தில் உள்ள மரம் செடி கொடிகளில் இருளில் மறைந்தபடி சூர்யா எங்கே இருப்பாள், அவளை எப்படி கண்டுபிடிப்பது என யோசித்தபடி அந்த பங்களாவை சுற்றி சுற்றி வந்து இறுதியாய் ஒன்று பயனின்றி ஓரு மரத்தினடியில் சலிப்பாய் அமர்ந்து கொண்டான்.

“எப்படியோ உள்ளே வந்துட்டேன்… ஆனா சூர்யாவை எப்படி கண்டுபிடிக்கிறது… ஃபோன் பண்ணாலும் அந்த ஈஷ்வர் எடுப்பானே… எங்கடி இருக்கே?” என்று புலம்பியவனின் செவியில் ஒரு குரல் தீட்சண்யமாய், “லவ் இஸ் ஸோ பீயூட்டிப்புஃல்…” என்றது.

அபிமன்யுவின் இதயம் அவனை மீறிக் கொண்டு சந்தோஷத்தில் படபடக்க, அது அவளுடைய குரல்தான் என எண்ணிக் கொண்டு ஆனந்தம் அடைந்தபடி சுற்றும் முற்றும் பார்வையை திருப்பினான். ஆனால் அவன் கண்களுக்கு யாரும் தென்படாமல் போக அவளுடைய குரல் மீண்டும் ஒலித்தது.

“யூ ஆர் ஸோ ஹேப்பி… எனக்கு உங்களை பார்த்தா பொறாமையா இருக்கு…” என்று சொல்லும் போதே அவளின் குரலின் தவிப்பு அழுத்தமாய் உணரப்பட அபி புன்னகை ததும்ப,

‘இங்க எந்த குரங்கு கிட்ட இப்போ இவ பேசிட்டிருக்கா?’ என்று சொல்லியபடி தேடினான். மீண்டும் அவளின் மென்மையான குரல் ஒலித்தது.

“நீங்க ஹேப்பியா இருக்கீங்க… பட் நான்” என்று ஏக்கம் ததும்ப அவள் கேட்க,  யாரிடம் பேசிகிறாள் என்று அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

சுற்றும் முற்றும் தேடியவன் இறுதியாய்அவன் நின்றிருந்த மரத்திற்கு பின்புறம் ஜன்னலில் இருந்து வெளியே பார்த்தபடிதான் அவள் பேசிக் கொண்டிருந்தாள் என்பதை கவனித்தான்.

ஜன்னலின் வெளியேதான் நாம் நிலவை பார்க்கலாம் எனினும் இப்போது அபிமன்யுவின் விழிகளுக்கு அந்த வீட்டின் ஜன்னலின் உள்ளே நிலவு காட்சியளித்தது.

அவள் முகம் முழுமதியாய் அவனுக்கு புலப்பட, அவனின் விழிகள் அப்போது உலகையே மறந்து அவளின் சௌந்தர்யமான வதனத்தில் ஸ்தம்பித்து போனது.

அவள் மீண்டும் ஏக்கத்தோடு, “எனக்கும் உங்களை போல இறக்கை இருக்க கூடாதா… இங்கிருந்து நிமஷத்தில பறந்து போயிடுவேன்… ” என்று சொல்ல அப்போதுதான் அவன் அவளின் எதிரே இருந்த மரத்தின் கூட்டிலிருந்த ஜோடி பறவைகள் கொஞ்சி குலாவி கொண்டிருப்பதை  கவனித்து புன்னகைத்தான்.

அவளின் ஏக்கமும் தவிப்பும் அவனுக்கு பிடிபட அவளை பார்த்த நொடி சந்தோஷம் கிட்டினாலும் இப்போது அவள் முகத்தில் படர்ந்திருந்த சோகம் அவனை வேதனைக்குள்ளாக்கியது.

அவள் மேலும் அந்த பறவைகளை பார்த்தபடி, “ஐ டோன்ட் லைக் திஸ் பிளேஸ்… எனக்கு என் அபியை மீட் பண்ணனும்… பேசினும்… அழனும்” என்று சொல்லி கொண்டே அவளை மீறி கண்களில் நீர் வெளியேற அவள் அந்த நீரை துடைத்தபடி,

“நோ… நான் அழமாட்டேன்… ஐ வில் நாட் லூஸ் மை கரேஜ்… அட் எனி காஸ்… ஈஷ்வர்கிட்ட நான் தோற்று போகமாட்டேன்” என்று தனக்குத்தானே புலம்பியபடி நின்றிருந்தாள். அப்போது அபிக்கு அவளின் விழி நீரை துடைத்து அவளை அரவணைத்து கொள்ள தவிப்பு உண்டானது.

அதே சமயத்தில் அவள் ஈஷ்வர் என்று சொன்ன நொடி அவனும் அந்த தோட்டத்தில் வேகமாய் சுற்றி வர, சூர்யா அவனை பார்த்துவிட்டு ஜன்னல்கதவை மூடினாள். அவன் அவளிடம் பேசிய வார்த்தைகள் அவளை காயப்படுத்தி இருந்ததினால்தான் அவள் அவ்விதம் தளர்ந்து போயிருந்தாள்.

சூர்யாவின் கோபம், துடுக்குத்தனம், புத்திசாலித்தனம் என அபிமன்யு எல்லாவற்றையும் பார்த்திருக்கிறான். ஆனால் இப்படி அவள் துவண்டு போவதை பார்த்து புரியாமல் நின்றிருக்க, சரியாய் அந்த சமயம் ஈஷ்வர் கையில் டார்ச்சை பேட்டரி அந்த தோட்டத்தின் இருளில் எதையோ தேடி  கொண்டே சென்றான்.

அபிமன்யு மறைவாய் ஒளிந்து கொள்ள சூர்யா ஜன்னலிலிருந்து எட்டி பார்த்தபடி, ‘இந்த நடுராத்திரில இவன் அப்படி என்னத்தை தேடிட்டிருக்கான்… லெட் மீ பைஃன்ட் அவுட்’ என்று சொல்லி அந்த இருளை பொருட்படுத்தாமல் அவளும் வீட்டிற்கு வெளியே வந்தாள்.

அந்த இருளில் அவனை பின்தொடர எண்ணி சூர்யாவும் தோட்டத்தில் நுழைந்து சுற்றி முற்றும் பார்த்தபடி தேடினாள். எத்தனை பிரச்சனையிலும் அவளின் துடுக்குத்தனம் மட்டும் மாறவேயில்லை என்பதற்கு உதாரணமாய் அவள் ஜேம்ஸ் பாண்ட் என்றளவுக்கு அவனை பின்தொடர,

சட்டென்று ‘எங்க ஆளே காணோம்’ என்று எண்ணி அவளின் கூர்மையான விழிகள் தேடலில் ஆழ்ந்தது.

அப்போது பின்னோடு இருந்தபடி சூர்யாவின் இடையை ஒரு கரம் சுற்றி வளைத்து இழுத்து அவளை வாயை பொத்திவிட அவள் அதிர்ந்து போனாள். இப்படியெல்லாம் அந்த ஈஷ்வர்தான் செய்ய கூடும் என எண்ணியவளின் தவிப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

error: Content is protected !!