Naan aval illai 32

Naan aval illai 32

விதியா?  மதியா? 
ஜென்னி வீணையை எடுத்து மடியில் ஏந்திய வரை மட்டுமே அவளுக்கு நினைவிருந்தது.
அதற்கு பிறகு அவள் விரல்கள் அதன் தந்திகளோடு சரசம் புரிய தொடங்க, அவள் இமைகள் மூடி தனக்கென்ற ஓர் உலகில் சஞ்சரிக்க தொடங்கினாள்.
வரையறையின்றி அவள் நினைவுகள் அவளை எங்கெங்கோ கூட்டிச் சென்று கொண்டிருக்க, அந்த நினைவுகள் எதுவும் அவளுக்கு இன்பம் நல்காமல் ஏமாற்றத்தையே தோற்றுவித்தது.
அவள் வாசிக்க வாசிக்க கட்டுபடுத்த முடியாமல் மூடியிருந்த விழிகள் வழியே பெருகிய கண்ணீர் வீணையின் தந்திகளில் பட்டு தெறிக்க, அந்த வீணையும் அவளோடு சேர்ந்து அழுதது.
இசையென்ற பரிமாணத்தில மாறி…
அவளும் அவள் வீணை மட்டுமே அந்த இசைஉலகத்தில் சஞ்சரிக்கவில்லை. அவர்களோடு சேர்ந்து இன்னொரு ஜீவனும் அந்த இசைபயணத்தில் இணைந்திருந்தது.
உலகையே மறந்திருந்தது.
எதற்காக வந்தோம் ஏன் வந்தோம் என்பதை கூட மறந்து.
அது வேறு யாருமில்லை. ராகவ்தான்!
அதை போன்று மனதை உருகச் செய்யும் இசையை அவன் வாழ்நாளில் கேட்டதேயில்லை.
நதிகள் தாம் கடந்து வந்த பாதையில் எத்தனைதான் மாசுப்பட்டிருந்தாலும் அது சமுத்திரத்தில் சங்கமிக்கும் போது தன் மாசு நீங்கி ஒன்றென கலந்துவிடுவதில்லையா ?!
அப்படிதான் அவனும் இசை கடலுக்குள் மூழ்கி சங்கமித்துவிட, அவன் எண்ணங்களெல்லாம் மாசற்று போனது.
ஆனால் அதனால் எல்லாம் அவள் மீதான மோகம் அவனுக்கு தெளிந்து விட்டதென்று சொல்வதற்கில்லை. 
மாறாய் அது இன்னும் பன்மடங்கு பெருகி ஊற்றாய் சுரந்து கொண்டிருக்க,
ஒருநாளில் தீர்ந்துவிடும் போதையல்ல அது. காலம் கடந்து அவன் மரணம் வரை அவனை அடிமைப்படுத்த போகும் போதை. 
இனி வாழ்ந்தாலும் மறித்தாலும் அது அவளோடுதான் என்று அவன் மனம் அசரீரியாய் உறைக்க, அவள் தீண்டலில் உயிர்பித்து கொண்டது வீணை மட்டும் அல்ல. 
அவன் மோக உணர்வுகளுக்குள் உறைந்து கிடந்த அவன் உள்ளமும்தான். 
எத்தனை நேரம் அந்த இசைமழையில் திகட்ட திகட்ட நனைந்தானோ தெரியாது. ஆனால் அவன் தாபமும் அவள் மீதான மோகமும் தீர்ந்தபாடில்லை.
ஆனால் அவள் ஆசை தீர அந்த வீணையை மீட்டிவிட்டு, தன்னிலையை மீட்டுக் கொண்டு அவள் விழிகளை திறக்க, கண்ணெதிரே ராகவ் நின்றிருப்பதை பார்த்து திடுகிட்டாள். 
ஆனால் அந்த அதிர்ச்சி அவளுக்கு சிலநொடிகள் மட்டுமே!
அவன் தன் வீட்டில் தன் அறையில் என்ன செய்து கொண்டிருக்கிறான் ?
இந்த கேள்வியொடு எழுந்து வந்தவள் அவனை ஒரு பொருட்டாகவும் மதியாமல் அறைக்கதவு திறந்து வெளியேறினாள்.
அவளை தடுப்பதற்கான எந்த முயற்சியும் செய்யாமல் அவள் பின்னோடு அவனும் வெளியே வர, 
“ரூப்ஸ்” என்று ஜென்னி குரல் கொடுத்தாள். பதிலில்லை. 
மீண்டும் ,
“ரூப்ஸ்… எங்கே போனே ?” என்று தொண்டை வற்ற அவள் கத்த, அப்போதும் அவள் எதிர்பார்த்த பதில் அவளுக்கு கிட்டவில்லை. 
அந்த வீடே நிசப்தத்தில் மூழ்கிகிடக்க, அவள் செவிகளுக்கு எட்டியது படபடப்பாய் துடிக்கும் அவள் இதயத்தின் சத்தம் மட்டும்தான்.
அவள் நிற்காமல் நேராய் சமையலறைக்குள் புகுந்து “சங்கர் ண்ணா” என்றழைக்க, அங்கேயும் ஆள் அரவமே இல்லை. 
சுற்றும் முற்றும் அவள் தேடலாய் ஒரு பார்வை பார்த்தவள் வெளியே வந்து ராகவை பார்க்க, அவனோ ஏளனமான புன்னகையோடு நடந்து சென்று அங்கிருந்து சோபாவில் கால் மீது கால் போட்டு அமர்ந்து கொண்டான்.
அவன் செய்கையில் அதிர்வுற்றவள், வீட்டின் வாயிலின் மூடியிருந்த கதவினை திறக்க பார்த்து போது அது வெளிப்புறமாய் பூட்டப்பட்டிருப்பது புரிந்தது.
அவள் அப்போதும் விடாமல் அதை திறக்க முயற்சி செய்து பார்க்க,
அந்த நொடி ராகவ் அங்கிருந்த நிசப்தத்தை கிழித்தபடி “தேவையில்லாம உன் எனர்ஜியை வேஸ்ட் பண்ணாதே… கதவு திறக்காது” என்றான்.
அவள் அவன் சொல்வதை காதில் வாங்காமல் கதவை தட்டிப் பார்க்க, 
அவன் மீண்டும் “நோ யூஸ் ஜென்னி… வெளியே என் ஆளுங்கதான் நிற்கிறாங்க… உன்னை காப்பாத்த யாருமே வரமாட்டாங்க” என்றான்.
அவன் புறம் திரும்பியவளின் பார்வையில் அத்தனை கோபமும் ஆவேசமும் ரௌத்திரமும் ஊற்றென பொங்கி கொண்டிருந்தது.
“ரூபாவை என்ன பண்ண? அவ எங்க? ” என்று ஆக்ரோஷமாய் கேட்டவளை 
சலிப்பாய் ஏறிட்டவன் “சே… அவளை போய் நான் என்ன பண்ண போறேன்… என் ஆளுங்க அவளை அவுட் ஹவுஸில அடைச்சு வைச்சிருக்காங்க…” என்க, அவள் யோசனையோடு நின்றுவிட்டாள்.
அந்த சந்தர்பத்தில் அவன் தன் பேக்கெட்டில் வைத்திருந்த சிகரெட்டை பற்ற வைக்க யத்தனிக்க அதனை சீற்றத்தோடு பார்த்தவள், அவனை பற்ற வைக்க விடாமல் அவன் கைகளை பபற்றி பிடித்து தடுக்க, “ஜென்னி விடு” என்றவனும் விடா கொண்டனாய் அந்த சிகரெட்டை காப்பாற்றி கொள்ள முயன்றான். 
அவர்கள் இருவருமே விடாப்பிடியாய் சண்டையிட்டு கொள்ள, அத்தனை நெருக்கமாய் இருப்பவளை பார்த்து அவன் கவனம் சிதறியது, அந்த கணம், அவன் கரத்திலிருந்து லைட்டரை அவள் கைப்பற்றி தூக்கி வீசினாள். 
“என் வீட்டில யாரும் சிகரெட் பிடிக்காது… ஐ ஹேட் தட்” என்றவளின் முகத்தில் உக்கிரம் தாண்டவமாட,
அவள் செய்கையில் சினம் கொண்டாலும் அதை காட்டிக் கொள்ளாமல் அவள் அருகில் எழுந்து நின்றவன் “இட்ஸ் ஓகே… அது போனா போகட்டும்… ஐ நீட் யூ” என்று சொல்லி அவன் விழிகள் அவளை நோட்டமிட, 
நேர்த்தியாய் தீட்டப்பட்ட ஓவியம் போன்றிருந்த அவளின் செம்மாதுளை உதடுகளையும், பளிங்கு போன்றிருந்த மேனி அழகையும் அந்த அழகை தன்னகத்தே சிறைப்பிடித்து வைத்திருந்த அவள் ஆடையையும் பார்த்து ஆதங்கம் பட்டு அவன் பெருமூச்செறிய அவனின் அந்த பார்வையில் அவள் உடலெல்லாம் கூசிப் போனது. 
அவனை வெட்டி வீழ்த்துவிடலாமா என்பது போல் கூரிய பார்வையை அவன் மீது அவள் வீச,
அவனோ அவள் நிர்கதியாய் நிற்பதை பார்த்து ஏளனமாய் புன்னகையித்து “பகவான் நே ஆயா தோ துஜே முஜ்சே பச்சா நஹி சக்தா” (அந்த கடவுளே வந்தாலும் இப்போ உன்னை என்கிட்ட இருந்து காப்பாத்த முடியாது) என்க,
“ஐசா க்யா ?!” (அப்படியா) என்று புருவத்தை நெறித்து எள்ளலாய் கேட்டாள். 
அந்த நொடி அவள் முகத்தில் இருந்த கோபம் மறைந்து அவள் நிதானமாய் நிற்க, அவளின் அந்ந தெளிவை பார்த்து அவன் வியந்து நின்றுவிட்டான். 
எந்த சூழ்நிலையிலும் தன் நிதானத்தை இழக்காமல் நிற்பவளை என்ன செய்வது ?
அவனுக்கு கோபம் தலைக்கேறியது.
அவளை நோக்கி அவன் பாதங்களை முன்னோக்கி எடூத்து வைக்க,
அவளுக்குள் உணர்ந்த பதட்டத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் திடமாய் நின்றவளிடம்,
“பயப்படாத மாதிரி நல்லா நடிக்கிற… நீ மட்டும் சினி இன்டிஸ்டீரிக்குள் வந்தன்னு வைச்சுக்கோ… உனக்கு பெரிய எதிர்காலம் காத்திட்டிருக்கு” என்றான். 
“ஆஹான் !” என்று ஆச்சர்யகுறியோடு அவள் கேட்க,
அவளின் ஏளனப் பார்வையில் கோபமுற்றவன் “இவ்வளவு அலட்சியமும் திமிரும் வேண்டாம்… அப்புறம் ரொம்ப கஷ்டப்படுவ ஜென்னி” என்று எச்சரிக்கை தொனியில் அழுத்தமாய் வார்த்தைகளை உச்சரிக்க,
“நீ ரொம்ப உணர்ச்சிவசபடிற ராகவ்… நிதானமா யோசிச்சி முடிவெடு” என்றாள். 
“நான் முடிவெடுத்திட்டேன்… இனிமே நீதான் யோசிக்கனும்… நீயா வர்றியா இல்லன்னா படத்தில வர்ற ரேப் ஸீன் மாதிரி ஏதாவது ஸ்டன்ட்ஸ் பண்ணனுமா” என்று நகைத்தவனை நிதானித்து பார்த்வள்,
“நான் சொல்ல வர்றதை முதல்ல கேளு ராகவ்… அப்புமா நாம ஸ்டன்ட்ஸ் பன்றதா வேணாமான்னு பேசி முடிவெடுக்கலாம்” என்று ரொம்பவும் இயல்பாய் சொன்னவளை விசித்திரமாய் பார்த்தான்.
“என்னடி சொல்ல போற ?” என்று யோசனையாய் பார்க்க,
“எல்லாம் உன் நல்லதுக்குதான் ராகவ்… அப்புறம் நீ ப்யூச்சர்ல கஷ்டபடக் கூடாது பாரேன்”
“நான் கஷ்டப்படுவேன்னா ?!” அலட்சியமாய் சிரித்தான். 
அவன் விழியை நேர்கொண்டு பார்த்தவள் “ஆமாம் பின்ன… நீ ஸ்டன்ட்ஸ் எல்லாம் பண்ணி என்னை ரேப் பண்ணிடுவ… அப்புறம் என்ன நடக்கும்னு கொஞ்சமாவது யோசிச்சியா…?”என்க,
பதில் பேசாமல்அவளை கூர்ந்து பார்த்தவன் “நீ என்னை ரேப் பண்ணிட்டு அவ்வளவு ஈஸியா தூக்கி போட்டுட்டு போக, நான் ஏதோ அனாதை பொண்ணுன்னு நினைச்சியா…
ஐம் ஜென்னித்தா… ஜென்னித்தா விக்டர்… எனக்கெதாவது ஆச்சு… உன் லைஃப் காலி… யோசிச்சிக்கோ… உணர்ச்சிவசப்பட்டு ஏதாவது செஞ்சிட்டு அவஸ்த்தை படாதே” என்றவளின் விழிகள் அகல விரிந்திருக்க,
அவன்அவளை ஏற இறங்க பார்த்தவன்,
“என்னை உன்னால என்னடி பண்ண முடியும் ?”
“என்ன வேணா பண்ண முடியும்… நீ கஷ்டப்பட்டு உருவாக்கி வைச்சிருக்கியே ஹீரோங்கிற இமேஜ்… அதை சுத்தமா ஒண்ணுமே இல்லாம பண்ண முடியும்… ” என்றாள்.
அவன் எதுவும் பேச முடியாமல் சிந்தித்திருக்க, அவளே மேலும் “டூ யூ நோ மை ப்ரண்ட் டேவிட் தாமஸ்… லீடிங் சேனல் நெட்வொர்கோட எம்.டி… அவர் போதாதா ராகவ்?! உன் இமேஜை டேமேஜ் பண்ண” என்றவளை சீற்றமாய் பார்த்தவன் தன் இருகரத்தாலும் தலையை கோதி விட, முகத்தில் இயலாமையும் கோபமும் கலந்திருந்தது.
அவன் பேரும் புகழையும் எந்த காரணத்தை கொண்டும் அவனால் விட்டு கொடுக்க முடியாது. அவள் சொன்னதை யோசித்து பார்க்கும் போது தான் எப்படி இதை எல்லாம் யோசிக்காமல் விட்டோம் என்று அவன் மூளை அவள் மீதான மோகத்திலிருந்து மெல்ல சுதாரித்தது.
அவள் தன்னை கையாண்ட விதத்தில் அவனுமே சற்று நேரம் அசந்துவிட,
மீண்டும் அவளிடம் தோற்று போவதா என்று அவன் ஈகோ தலைதூக்கி அவனை மூன்னேயும் செல்ல முடியாமல் பின்வாங்கவும் முடியாமல் தவிப்போடு நிற்க செய்தது.
அவளை எதுவும் செய்ய முடியவில்லையே என்று அதீத வெறியோடு அவன் யோசித்திருக்க, 
அவளோ ஒய்யாரமாய் சோபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டு அங்கிருந்த தன் டேபையை(Tab) அவள் கையில் வைத்து ஏதோ செய்து கொண்டிருக்க,
“என்னடி பன்ற ? உன் டேவிடுக்கு மெஸஜ் அனுப்பிறியா?!” என்று கேட்க,
“நோ… ஜஸ்ட் ப்ளேயிங் கேன்டி க்ரஷ்… ஸ்டிரஸ் ரிலீஃப்க்காக…” என்க,
அவளை கடுப்பாய் பார்த்தான். 
அவளே மேலும் “எவ்வளவு நேரம் யோசிச்சிட்டிருக்க போற… சீக்கிரம் டிசைட் பண்ணு” என்றாள்.
“எனக்கு என் இமேஜ் ரொம்ப முக்கியம்” என்று அழுத்தமாய் சொல்ல
“தென் வாட்?” 
“ஆனா உன் இமேஜை நான் டேமேஜ் பண்ணாம விடமாட்டேன்” என்று ச
சவாலாய் உரைக்க,
அவள் டேபிலிருந்து தன் பார்வையை நிமிர்த்தாமல் “அதுக்கு வேறெதாவது பெட்டர் ஐடியாவா யோசிக்கலாமே… இப்ப நீ செய்ய நினைக்கிறது உன் இமேஜையும் சேர்த்து டேமேஜ் பண்ணிடுமே” என்றாள்.
அதற்கு மேல் தாக்கு பிடிக்காமல் அவள் அமர்ந்திருந்த இருக்கையை சிறைப்பிடித்தபடி நெருங்கி வர அவள் விதிர்விதிர்த்து போனாள். 
“உன்னை எதுவுமே செய்யாம உன்னை இப்படியே விட்டுட்டு போக எனக்கு மனசு வரல… ஒரேயொரு லிப்லாக் ஸீனாவது இருந்தாதனே இந்த ராகவுக்கு பெருமை” என்று சொல்ல அத்தனை நேரம் அவளிடம் இருந்த நிதானமெல்லாம் சிதைவுற்றது. 
அவளின் உறுதி தளர்ந்து போனது. அவள் வாழ்வில் அவளுக்கு ஏற்பட்ட அந்த அருவருக்கத்தக்க உணர்வு அவளை ஆட்கொள்ள, நெற்றியிலிருந்து சரசரவென வழிந்த வியர்வை துளி அவள் பதட்டத்தை அறிவுறுத்திவிட்டது.
அதை ராகவ் கவனிக்க, அவளின் அதீத தைரியத்திற்கும் நிதானத்திற்கும் முற்றிலும் முரண்பாடாய் இருந்த இந்த பயத்தையும் பதட்டத்தையும் வினோதமாய் பார்த்தவன்
“இவ்வளவு நேரம் இருந்த உன் கூல் ஆட்டிட்யூடுக்கு என்னாச்சு ஜென்னி?” என்று கேள்வி எழுப்ப,
அந்த நொடி அவள் தொண்டையை அடைத்திருந்த ஏதோ ஒன்று அவள் வார்த்தைகளை வெளிவரவிடாமல் தடுத்தாட்கொண்டது. 
அவள் நா உலர்ந்து தேகமெல்லாம் நடுக்கமுற, அவள் நினைவுகள் பயணித்த திசையில் அவள் முற்றிலும் பலவீனமானாள்.
மீண்டும் அப்படியொரு மோசமான அனுபவத்தை அவள் விரும்பவில்லை.
அவள் வாழ்வில் அனுபவித்த முதல் முத்தத்திலிருந்த வன்மம் அப்படி.  
அவள் உணர்வுகளை உயிரோடு புதைத்துவிட்ட முத்தம் அது 
அவளை மறிக்க செய்த முத்தம் அது.
சிரமப்பட்ட வார்த்தைகளை வெளிக்கொணர்ந்து “ப்ளீஸ் ராகவ்… வேண்டாம்” என்று கெஞ்சியவளின் விழிகளில் கசிந்த நீரை பார்த்தவனுக்கு அவள் மீது அவன் கொண்டிருந்த வஞ்சத்தையும் குரோதத்தையும் துவேஷத்தையும் தொலைந்து போக செய்தது.
அவளை காயப்படுத்திவிடாதே என்று எங்கிருந்தோ ஒரு குரல் அவன் காதில் ஒலிக்க, 
அவளை அப்படி உடைந்து போவதை பார்க்க முடியாமல் விலகி நின்றான்.
அந்த கணமே மூச்சை இழுத்துவிட்டு கொண்டு தலையை தன் கையில் தாங்கியபடி கவிழ்ந்து கொண்டாள்.
எந்த உணர்வை அவள் ஒவ்வொரு முறையும் மறைக்க யத்தனிக்கிறாளோ அது அவளையும் மீறிக் கொண்டு எட்டி பார்த்துவிடுவதை அவளால் ஏற்க முடியவில்லை.
அவன் முன்னே தன்னிலை இழுந்து அழுது விடக் கூடாதே என்று கட்டுபடுத்தி கொண்டவளை ஆழ்ந்து யோசனையில் பார்த்திருந்தவன்,
“கொஞ்சம் நேரத்திற்கு முன்னாடி இருந்த ஜென்னித்தா இல்லையே இது… வாட்ஸ் ராங் வித் யூ ?… எவ்வளவு பெரிய மாடல் ? ஒரு கிஸ்ஸுக்கா இவ்வளவு ரியாக்ட் பன்ற…” என்றவனை அவள் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.
அவன் மேலும் “ஏன் ? அந்த டேவிட் உன்னை கிஸ் பண்ணதே இல்லையா? !!” என்று கேட்ட மாத்திரத்தில் அவள் வெடித்து எழுந்து கொண்டாள்.
“டேவிட் பத்தி பேச எல்லாம் உனக்கு தகுதியே இல்லை.. ஹீ இஸ் அ ஜெம்… அதுவும் இல்லாம ஹீ இஸ் மை குட் ப்ரண்ட்… ” என்று சீறியவள் மீது கோபம் எழுந்தாலும் அவனை நண்பன் என்று சொன்ன வார்த்தையில் அவன் மனம் சந்தோஷப்பட்டு கொண்டது.
நிதானமாய் அவளை பார்த்தவன் “அப்படின்னா இப்ப வரைக்கும் உன் லைஃப்ல லவ் இல்லையா?!” ஆர்வம் மேலிட கேட்டவனை எரிச்சலாய் பார்த்தவள்,
“இல்லைன்னு சொன்னா இப்ப என்ன பண்ண போற ?” என்க,
” நான் அந்த இடத்தை பூர்த்தி செய்யலாம்னு”
“வாட் ?” அதிர்ந்த பார்வையோடு அவள் வினவ,
“ஏன் செய்ய கூடாதா ?” என்று கேட்டவனிடம் என்ன பேசுவதென்றே அவள் புரியாமல் நிற்க,
அவன் மேலும் “என்னடா இவன் வந்தது எதுக்கு ? இப்ப என்ன பேசிட்டிருக்கன்னு யோசிக்கிற இல்ல ?! எனக்கே தெரியல… படத்தில லவ் டயலாக் பேசும் போது அதெல்லாம் நான்ஸென்ஸ்னு யோசிச்சிருக்கேன்… பட் இந்த நிமிஷம் அந்த ப்ஃலிங்க் உண்மையிலேயே ஸென்ஸிபிள்னு தோணுது… உன் மேல அவ்வளவு வெறியோட வந்தேன்.. ஆனா உன்னை டச் கூட பண்ணாம பேசிட்டிருக்கேன் பாரேன்… எனக்கே நான் நடந்துக்கிறது ஆச்சர்யமா இருக்கு…”என்று தன்மனவுணர்வுகளை கொட்டி தீர்த்தவனை எகத்தாளமாய் பார்த்தவள்,
“இப்ப நான் என்ன பண்ணனும்… உன் பிரப்போஸலுக்கு ஒகே சொல்லனுமா ?!” 
“ஒய் நாட்…?” என்று கேட்க,
“நீ படத்தில வேணா ஹீரோவா இருக்கலாம்… பட் ரியல் லைஃப்ல வில்லன்”
“ஏன் ? வில்லனை காதலிக்க கூடாதா ? இன்னும் கேட்டா வில்லனோட வொய்ஃபா இருந்தாதான் ஸேஃப்… ஹீரோவோட லைஃப்ல இருந்தா நிறைய ரிஸ்க்” என்று சொல்லி எள்ளலாய் அவன் நகைக்க,
“பரவாயில்லை… பெஸ்ட்டான விஷயத்துக்காக எவ்வளவு வேணா ரிஸ்க் எடுக்கலாம்” என்று பதிலடி கொடுத்தாள். 
“என் பாயின்டும் அதேதான்… அதனாலதான் எனக்கு நீ வேணும்னு தோணுது ஜென்னி”
“எனக்கு தோணலயே” அலட்சியமாய் அவள் சொல்ல,
அவன் புன்னகையித்துவிட்டு “தோணும்.. தோண வைப்பேன்” என்க,
அவனை அந்த நேரம் எப்படி சமாளிப்பது என்ற யோசித்தவள்,
“அது தோணும் போது பார்த்துக்கலாம்… இப்போ ப்ளீஸ் இங்கிருந்து ?!” என்று வாயில் கதவை அவள் காண்பிக்க,
அவளை பார்த்து ஏக்க பெருமூச்சொன்றை வெளிவிட்டவன், “ஓகே போறேன்… பட் உன் வீட்டை விட்டுதான்… உன் லைஃபை விட்டு இல்ல” என்றான் தெளிவோடு !
அவன் தன் கைப்பேசியை எடுத்து மனோவிற்கு அழைக்க, அவள் வீட்டின் வாயிற் கதவு திறந்து கொண்டது.
ராகவ் வெளியேற போனவன் மீண்டும் அவள் புறம் திரும்பி வந்து “சொல்ல மறந்துட்டேன்… உன் மியூசிக்ல ஏதோ மேஜிக் இருக்கு ஜென்னி… செம பீஃலா இருந்துச்சு… ஸ்ரீய்ஸ்லி ஐம் ஸ்பெல்பவுண்ட்” என்று உணர்வுகள் பொங்க சொல்லியவனை உணர்வற்ற பார்வை பார்த்தாள்.
இவ்விதம் பேசிவிட்டு அவன் அகன்றுவிட அவளுக்கு அவன் பேசியதை  எப்படி எடுத்து கொள்வதென்று புரியவில்லை.
அவன் வெளியே சென்ற பின்னரே அவள் உயிர் அவளிடம் திரும்பியது.
அவள் நேராக சென்று குளிர்சாதனப்பெட்டியை திறந்தவள், ஒரு முழூ பாட்டில் தண்ணீரை மொத்தமாய் குடிக்க அவள் தாகம் தீர்ந்தாலும் அவள் கோபம் அடங்கியபாடில்லை.
அந்த நொடி பதட்டத்தோடு ரூபா ஓடிவந்து “ஜென்னி” என்று அழைக்க,
அவள் புறம் திரும்பினாள் ஜென்னி.
உச்சபட்ச படபடப்பில் இருந்தவளை பார்த்து “ரூப்ஸ்… ரிலேக்ஸ்… ஒண்ணுமில்லை” என்க,
அவள் வேகமாய் ஓடிவந்து ஜென்னியை கட்டிக் கொண்டு அழுதாள்.
“ரூப்ஸ் எனக்கு ஒண்ணுமில்லை” என்று ஜென்னி திரும்ப திரும்ப சொல்லி அவள் முதுகை தடவி ஆசுவாசப்படுத்தினாள்.
அவள் கண்ணீரோடு நிமிர்ந்து “நான் ரொம்ப பயந்துட்டேன் ஜென்னி… அந்த ராகவ் உங்களை என்ன பண்ணிடுவானோன்னு” என்றதும் 
அவள் புன்முறுவலோடு “நான் நல்லாதான் இருக்கேன் ரூப்ஸ்… நீ ரிலேக்ஸாகு” என்றாள்.
ரூபா பதறியபடி “முதல்ல இந்த விஷயத்தை டேவிட் சார்கிட்ட சொல்லனும்” என்க,
“நோ ரூப்ஸ்.. டேவிடுக்கு இந்த விஷயம் தெரியவே கூடாது… அட் எனி காஸ்” அவள் இறுக்கமாகவும் அழுத்தமாகவும் சொல்ல,
“ஆனா ஜென்னி” என்று தயங்கியவளிடம்,
“ப்ச் சொல்ல கூடாதுன்னா சொல்ல கூடாது…” என்றாள்.
“வேணா போலீஸ் செக்யூரிட்டி ஏதாச்சும் கேட்போமா?!”
ஜென்னி சிரித்துவிட்டு “நம்ம பாதுகாப்புக்காக அடுத்தவங்கள நம்பிற மாதிரியான ஒரு அறிவீனம் இந்த உலகத்திலயே இல்ல… அப்படி செய்றது  நம்மல நாமே பலவீனப்படூத்திக்கிற மாதிரி” என்று தீர்க்கமாய் அவள் உரைக்க,
ரூபா பதில் பேசாமல் மௌனமாய் நின்றாள். அவளின் கோட்பிடுகளை புரிந்து கொள்ளுமளவிற்கு அவளுக்கு திறமையில்லை. 
ஜென்னி மேலும் “நீ போய் படு ரூப்ஸ்… எதுவாயிருந்தாலும் காலையில பேசிக்கலாம்” என்று சொல்லி அவளை அனுப்பிவிட்டாள். 
அத்தனை நேரமாய் அடைப்பட்ட அந்த உணர்வு ஜென்னிக்கு மூச்சு முட்ட வைத்தது.
அவள் தன் அறைக்கு போகாமல் மாடியிலிருந்த பால்கனிக்கு சென்று வெளிக்காற்றை சுவாசிக்க யத்தனிக்க, 
வெளியே மழை கொட்டி தீர்த்து கொண்டிருந்தது.
அந்த சூழ்நிலை அவளின் மனநிலைக்கு வெகுபொருத்தமாய் அமைய,
அவளுக்கு பதிலாய் அந்த வானமே அழுதிருந்த உணர்வு.
ராகவ் தன்னை நெருங்கிய போது அவனை எதிர்கொள்ள முடியாமல் வலிவிழுந்து போனதை எண்ணும் போது அவள் அவமானமாக உணர்ந்தாள். 
மீண்டும் மீண்டும் அவளை பலவீனப்படுத்தும் அந்த நினைவிலிருந்து அவளால் எப்படி விடுபடுவதென்றே தெரியவில்லை. 
நடக்க இருந்த அந்த ஆபத்திலிருந்து அவளை காப்பாற்றியது அவள் மதியா அல்லது விதியா?  என்பதை அவளால் யூகிக்க முடியவில்லை. 
அவள் விதி மதியை வென்றது இல்லை அவள் மதி விதியை வென்றதா? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!