நான் அவன் இல்லை 20
இருளை துரத்திவிட்டு தன் நிலவு காதலியை , காதலோடு ரசிப்பதற்காக சூரியன் தன் கதிர்களை பாரெங்கும் பரப்பிக்கொண்டிருக்கும் இந்த ரம்மியமான காலை பொழுதை கூட உணராமல் … தனது தூக்கத்தை மொத்தமாக களவுகொடுத்துவிட்டு …. வெகு நேரமாக ஒரே நிலையில் அமர்ந்திருந்ததின் பரிசாக கால்கள் ரெண்டும் உறங்கி போக …. மதியின் மதி முகத்தை பார்த்தபடி அமர்ந்திருந்தான் ஆதித்யா .
நேற்று இரவு இருந்த இறுக்கமும் , வெறுமையும் இப்பொழுது அவனிடம் இல்லை … மணிக்கணக்காக பார்த்த முகம் தான் ஆனாலும் தெவிட்டவில்லை .நேரம் போவது கூட தெரியாமல் பார்த்துக்கொண்டிருந்தான் .. மனதில் ஆசை அலை அடித்தது … அவளுடன் கழித்த இனிமையான தருணங்கள் ஆதித்யாவின் மனதை ஆட்கொண்டது .
அன்று டைனிங் டேபிளில் அவளை முத்தமிட்டு சீண்டியது … நேற்று இரவு பொய்யாய் அவளை மிரட்டியது … என அவளுடனான பொக்கிஷமான நினைவுகள் அனைத்தும் அவனுக்கு சொர்க்கத்தை காட்டியது .
உள்ளுக்குள் இனித்துக்கொண்டிருக்க …. அப்பொழுது ஆதித்யாவின் மகிழ்ச்சியை தட்டிப்பறிப்பது போல அவனது அலைபேசி ஒலித்தது … அலைபேசியின் சத்தத்தில் அவளது உறக்கம் களைந்து விட கூடாது என்பதற்காக அழைப்பு வந்த மறுநொடி சைலென்டில் போட்டவன் … யாரென்று பார்த்தான் … ஸ்டார் ஒன்.
சட்டென்று அவன் முகத்தில் ஒருவித இறுக்கம் குடிகொண்டது ….இந்த நிமிடம் வரை அவன் அனுபவித்த மகிழ்ச்சி எல்லாம் காற்றில் கரைந்து போக … உறங்கிக்கொண்டிருந்த கேள்விகள் எல்லாம் விழித்துக்கொள்ள … அது அவனை புரட்டி போட்டது .
தான் செய்வது சரியா ?? இந்த இனிமையை அனுபவிக்கும் உரிமை தனக்கு வாழ்க்கை முழுவதும் கிடைக்குமா …?? என விடை தெரியாத இந்த கேள்விகளை மதியை சந்தித்ததில் இருந்து தனக்கு தானே கணக்கில்லாமல் கேட்டுக்கொண்டே இருப்பவன் இப்பொழுதும் கேட்டுக்கொண்டான் .
பதில் தெரிந்தும் ஏற்றுக்கொள்ள மறுத்த தன் நிலையை எண்ணி வருந்தியவன் … ,
” என்ன ஆனாலும் உன்னை மட்டும் என்னால காய படுத்த முடியாது மதி ” என்றவன் ….தன் கடமை அழைக்க மனமே இல்லாமல் அவள் நெற்றியில் இதழ் பதித்துவிட்டு அங்கிருந்து சென்றான் .
உறங்காமல் இருப்பது ஒன்றும் ஆதித்யாவுக்கு புதிதான விஷயம் இல்லை என்பதால் அவன் கண்களில் எந்த சோர்வும் இல்லை … மதியின் அறையை விட்டு வெளியே வந்தவன் தன் அறைக்குள் சென்றதும் ஸ்டார் ஒன்னுக்கு அழைப்பு விடுத்தான் …. சில நிமிடங்கள் பேச்சுவார்த்தை தான் உடனே அழைப்பை துண்டித்தவன் . பிறகு வழமையாக அணியும் கோர்ட் சூட்டை தவிர்த்து விட்டு சாதாரண உடற்பயிற்சிக்கான உடையை அணிந்துகொண்டு ஓட்டுனரின் துணையின்றி தானே காரை ஓட்டிச்சென்றான் .
ஆதித்யாவின் கார் மூன்று மணிநேர பயணத்திற்கு பிறகு ஜெம் பிட்னெஸ் சென்டர் என்று பெயர் பொறிக்கப்பட்ட வானுயர்ந்த கட்டிடத்தின் நுழைவாயிலை அடைந்தது .
காரை பார்க்கிங் ஏரியாவில் பார்க் செய்தவன் … பாஸ்கெட் பால் கோர்ட்டை அடைய … அங்கே ஏற்கனவே இருந்த ஒருவன் பந்தை பாஸ்கெட்டில் போட முனைந்த நேரம் ” என்ன விஷயம்?? ” என பந்தை அவன் கையில் இருந்து தட்டி பறித்தபடி கேட்டான் ஆதித்யா .
” அர்ஜுன் லெஃப்ட் ஹாம்… ரொம்ப சீரியஸா மதுவை தேடுறான் … ஹி மே ரீச் ஹெர் … ஈவெண் அஸ் ” ஆதித்யாவின் முக மாற்றத்தை பார்த்தபடி கூறியவன் அவன் அசந்த நேரம் அவன் கையில் இருந்த பந்தை பறித்துக்கொண்டு அதனை நிலத்தில் தட்டியபடி ஓட ஆரம்பிக்க , சுதாரித்து கொண்ட ஆதி புயலாய் அவனை நெருங்கி ,
” நெவர் … அவனால் என்றுமே முடியாது ” என ஆக்ரோஷமாக கூறியபடி , அந்த புதியவன் கூடையில் போட வந்த பந்தை கண நேரத்தில் மீண்டும் பறித்து எடுத்து நிலத்தில் தட்டியப்படி… லாவகமாக பாஸ்கெட்டில் போட்டான் ஆதித்யா. இப்பொழுது ஆட்டம் சூடு பிடிக்க … கூடையில் போட்ட பந்தை தவறாமல் பிடித்து கொண்ட அந்த புதியவன் ,
” நம்ம இனப்பார்மற் H8 ஹஸ் பின் ஷாட் டவுன் ” என்ற மறுநொடி ஆதித்யாவின் கண்கள் தகித்தது .
” யாரு ?”ஓடி வந்த ஆத்தித்யா அந்த புதியவனின் கையில் உள்ள பந்தை தட்டியபடி கேட்டான் .
” நோ ஐடியா .. . அப்புறம் ஹரியானா … ராஜஸ்தான் பிஹார் இந்த மூணு ஏரியாவுல பதினெட்டு வயசு கீழ உள்ள பொண்ணுங்க கடத்த பட்ருக்காங்கன்னு இன்பார்மேஷன் வந்திருக்கு … ஆனா இன்னும் அவங்க சிட்டியை தாண்டலை … இது தயாளன் கேங்கா இருக்குமோன்னு நாங்க சந்தேக படுறோம் ” என ஆதித்யாவை தள்ளியபடி ஓடி வந்து பந்தை எடுக்க முயற்சித்தான் அந்த புதியவன். சுதாரித்துக்கொண்ட ஆதித்யா நிலத்தில் விழாமல்…. தன்னை சமாளித்து கொண்டு வேகமாக ஓடிவந்து ,
” தயாளன் டார்கெட் இன்டர்நெஷனல் மார்க்கெட் தான் … கண்டிப்பா அவன் கடல் வழியா தான் அவங்களை டிரான்ஸ்போர்ட் பண்ணுவான் …. இந்த முறை விட மாட்டேன் ” என்றபடி பந்தை மீண்டும் பாஸ்கெட்டில் போட …
“இது கத்தி மேல நடக்குற மாதிரி ஆதி … மிஸ் பண்ணினா மொத்தமா வேஸ்ட் ஆகிடும் … அவன் இங்க இருக்கும் பொழுதே நம்மளால அவனை நெருங்க முடியல … அவன் மட்டும் தப்பிச்சு வெளியூர் போய்ட்டா டோடல் வேஸ்ட் … அவன் பொண்ணுங்களை மட்டும் கடத்த மாட்டான் … கண்டிப்பா ட்ரக்ஸ் அண்ட் அவன் கொள்ளை அடிச்ச ஹவாலா கோல்டையும் சேர்த்து தான் கடத்துவான் ” என மெலிதாய் புன்னகைத்த புதியவன் , மேலும் தொடர்ந்து ,
“இன்னொரு முக்கியமான விஷயம் மதுமதி ஹஸ் பின் அண்டர் சஸ்பெக்ட் லிஸ்ட் … எல்லாரோட அக்கவுண்ட் செக் பண்ணினத்துல … அவளோடது தான் சந்தேகப்படுற மாதிரி இருக்கு … நான் கொடுக்குறேன் நீயே பாரு … யு மே கெட் சம் க்ளூ ” என்று அவன் கூறிய மறுநொடி , ஆதித்யா கூடைக்குள் போட்ட பந்து குறி தவறி வெளியே விழுந்தது .
” ஆதித்யா … ஐ திங்க் ஷீ இஸ் நாட் இன்னொசென்ட் ” என்று அந்த புதியவன் சொன்ன மறுநொடியே ஆதித்யாவின் உடல் விறைத்து நிமிர… அவன் முகம் விகாரமாய் மாறியது ,
” சந்தியா எப்படி இருக்கா ?” என கேட்டபடி காலில் கிடந்த பந்தை உதைத்து தள்ளியவன் … வியர்வையில் குளித்திருந்த தனது மேல் டி ஷர்டை கழற்றிவிட்டு ஸ்விம்மிங் பூளில் குதிக்க ஆயத்தமாக ,
” ஷீ இஸ் குட் … ஆதவன் , மிருதுளா டீட்டெயில்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணியாச்சு ” என்று அந்த புதியவன் கூற …. தலை அசைத்த ஆதித்யா ,
கண்களை இறுக்கமாக மூடி திறந்து , ” மதியை பத்தின சோர்ஸ் எதுவும் விக்டர்க்கு போற ஃபைனல் ரிப்போர்ட்ல வர கூடாது ” என்றான் திடமாக .
” வாட் … பட் …”
” உன்னை ஹயர் பண்ணினது நான் … சோ ஒபே மை ஆர்டர்ஸ் ” சீற்றத்துடன் இடைவெட்டிய ஆதித்யாவின் குரலில் திகைத்து போனான் அந்த புதியவன் .
என்ன ஒரு மாற்றம் ! சிறிதும் நிதானமில்லை ! இது ஆதித்யா இல்லை !என்னவாயிற்று என்று என சிந்தித்தவன் …காரணத்தை புரிந்து கொண்டு ஆதித்யாவிடம் ,
“எமோஷன்ஸ்க்கு இடம் கொடுக்காத ஆதி ” நிதர்சனத்தை எடுத்து கூறினான் .
” சோர்ஸ் ஃபயில் டெலீட் ஆகிருக்கணும் ” ஆணையிட்டான் …எதிர்த்து பேச முடியாது அவனது குரல் … சொன்னதை உடனே செய் என சொல்லாமல் சொல்லியது … புதியவன் திகைப்பில் நிற்க … மிக உயரத்துக்கு சென்ற ஆதித்யா தன் உடலை வளைத்தபடி தண்ணீருக்குள் பாய்ந்தான்.
ஸ்டார் ஒன் – ஆதித்யா சக்கரவர்திக்கு இருக்கும் முக்கியமான உளவாளிகளில் முதன்மையானவன் … வெகுநாட்களுக்கு பிறகு அவனிடம் இருந்து அழைப்பு வந்திருக்க .. ஊருக்குள் இருக்கும் பிட்னெஸ் சென்டருக்கு சென்றான் .
மிக பெரிய நீச்சல் குளம் … ஜிம் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான தனி தனி மைதானங்கள் என்று சிட்டியின் மையத்தில் இருக்கும் அந்த பிட்னெஸ் சென்டரில் விடுமுறை நாட்களில் கூட்டம் அலைமோதும் . அனைவரும் அவரவர் வேளையில் மும்முரமாக ஈடுபட்டிருக்க …இது போன்ற இவர்களின் ரகசிய சந்திப்புக்கு இதுவே ஏற்ற இடம் … மனிதர்களோடு கலந்துகொண்டு உடற்பயிற்சி செய்தபடி தங்களின் ரகசியங்களை பகிர்ந்து கொள்வதால் யாருக்கும் இவர்கள் மீது சந்தேகம் வராது .
மாஃபியா எனப்படும் இந்த பாதாளவாழ் குழுக்களில் அடிதடி , கொலை , கொள்ளை , கடத்தல் செய்பவர்கள் மட்டுமே இருப்பது கிடையாது இவர்களுக்குள்ளும் அட்வைசர் , லீடர், கமாண்டர், சோல்ஜர் என பல பதவிகள் இருக்கின்றது .
ஆலோசகர்கள் தாங்கள் எடுக்கும் முடிவை தலைவர்களுக்கு தெரிவிக்க … அதை சரியாக திட்டம் தீட்டி வீரர்களின் உதவியுடன் சிறு பிழை கூட வராமல் நடத்தி முடிக்க வேண்டியது கமாண்டர் எனப்படும் தளபதிகளின் பொறுப்பு .
வீரர்கள் அனைவரும் அவர்கள் செயல்படும் வேலைகளின் அடிப்படையில் பல குழுக்களாக பிரிந்திருக்கின்றனர்.
இதில் மிக முக்கியமான குழுக்கள் என்றால் அது ஒன்று ஆத்தியாவின் தலைமையில் இயங்கும் திட்டமிடுதல் & செயல்படுதல் குழு மற்றும் தகவல் சேமிக்கும் குழு .
கிரேக்க மற்றும் ரோமன் புராண கதா பாத்திரத்தில் வெட்ட வெட்ட ரெட்டிப்பாய் வளரும் ஹைட்ரா போல . இந்த மாஃபியாக்கள் ஆங்காங்கே நடக்கும் என்கவுண்டரில் வீழ்த்தப்பட்டாலும் மேலும் மேலும் ரெட்டிப்பாக வலிமை பெற முக்கிய காரணம் ஆற்றல் மிக்க வல்லுநர்களால் தரமாக செயல்பட்டு வரும் அவர்களின் தகவல் சேமிக்கும் குழு மற்றும் அவர்களது இறுக்கமான ஒழுங்கமைக்கப்பட்ட நெறிமுறைகள் தான் … அதனால் தான் மாஃபியாவை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுக்கள் என்கிறார்கள் .
இவர்களை போன்ற உளவாளிகள் மனதளவிலும் உடலளவிலும் நன்கு பயிற்சி பெற்றவர்களாக இருப்பார்கள் …நம் கூடவே இருந்து கொண்டு நம்மை பற்றின ரகசியங்களை கச்சிதமாய் கடத்தி உரிய இடத்தில் சேர்ப்பதில் வல்லுநர்கள் .
அப்படி ஒரு முக்கியமான கடமையை நிறைவேற்ற தான் ஸ்டார் ஒன்னை காண வந்த ஆதித்யா தன் கண்களை மூடிக்கொண்டு தன் உடலை பேலன்ஸ் செய்தபடி தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த நேரம் அவன் கைகளில் இருந்த கருப்பு நிற பென்ட்ரைவ் அவனை கேள்வி கேட்டது .
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
கார்டனில் போடப்பட்டிருந்த மூங்கில் ஊஞ்சலில் கைகளையும் கால்களையும் குறுக்கிக்கொண்டு சோகமாக அமர்ந்திருந்தாள் மதுமதி.
அவள் மனதில் நேற்று இரவு அவள் கண்ட கோரமான காட்சி பிழையின்றி ஓடி கொண்டிருந்தது .. ஆதித்யா அமிலம் என கொட்டிய வார்த்தைகள் ! அவள் மனதை உயிரோடு பொசுக்கிய வார்த்தைகள் ! நேற்று இரவு அவளை நிலைகுலைய செய்த வார்த்தைகள் !
‘ சரி மருமக இப்போ வீட்ல தான இருப்பா ‘
‘ ஆமா …. பாய் ‘
‘வீரா போ போய் கூட்டிட்டு வா … ரொம்ப போர் அடிக்குது …. ரெண்டு நாள் போதும்… மஹேந்திரன் நீயே வெயிட் பண்ணி கூட்டிட்டு போ என்ன ?’இதோ அவள் காதில் மீண்டும் மீண்டும் ஒளித்து அவளை இந்த நொடி வரை உயிரோடு வதைத்து கொண்டிருந்தது .
நேற்று இரவு மாத்திரை போட்டும் உறக்கம் வராமல் போகவும் … தோட்டத்திற்கு செல்வதற்காக கீழே வந்தவளை …. பேஸ்மெண்டில் இருக்கும் அறையில் இருந்த அழுகுரல் மேலும் செல்ல விடாமல் தடுக்க … ஒரு வித அச்சத்துடன் அங்கே நெருங்கியவள் … ஆதித்யா… மஹேந்திரனை தகாத வார்த்தையால் சித்திரவதை செய்வதை கண்டுவிட ,
அவள் மனம் பற்றி எரிந்தது … கால்கள் வலுவிழந்து துவண்டு விட …உடல் நடுங்கியது … ஏமாற்றமடைந்த உணர்வில் இதயமே வெடித்துவிடுவது போல இருந்தது … அதற்கு மேல் அங்கு நிற்கு முடியாமல் போக … பொங்கி வந்த கேவலை அடக்கிக்கொண்டு … தன் அறைக்குள் ஓடிச்சென்று மெத்தை மேல் விழுந்தவளுக்கு மனம் துடித்தது ….கண்ணீர் குளம் கட்டியது …
” அப்போ இந்த மாதிரியான எண்ணத்துல தான் , அவன் பக்கத்துலே என்னை தங்க வச்சிருக்கானா …? அதனால தான் நேத்து என் கிட்ட சீ ” முகம் அஷ்டகோணலாக மாற அவன் முத்தமிட்ட கன்னத்தை சிவக்க சிவக்க அழுத்தி துடைத்தவளுக்கு …. கண்ணீர் நிற்காமல் ஓடியது .
அழுது அழுது ஓய்ந்தவள் … உடல் அசதியில் எப்பொழுது உறங்கினோம் என்று அறியாமல் அழுதுகொண்டே உறங்கி விட … பொழுது விடிந்து வெகு நேரம் கழித்து கண்விழித்த மதிக்கு நேற்று இரவு வெகு நேரம் கழித்து ஆதித்யா தன் அறைக்கு வந்ததது … … தன் கன்னத்தில் இதழ் பதித்தது ..நெற்றியோடு நெற்றி வைத்து உருக்கமாக பேசியது … விடிய விடிய தன் கால்கள் மரத்துப்போக , உறங்காமல் தன்னை ரசித்தது என்று இரவு நடந்த எதுவும் தெரியாது . சூரியனின் வெப்பம் முகத்தில் சுள்ளென்று அடிக்கவும் கண்விழித்த மதிக்கு மனமும் தலையும் ஒரே நேரத்தில் வலிக்க … சிரமத்துடன் எழுந்து குளித்தவள் … உணவு உண்ண பிடிக்காமல் அப்படியே இந்த நாற்காலியில் வந்து அமர்ந்துவிட்டாள் .
இதுவரை மதிக்கு ஆதித்யா மீது இருந்த கோபம் … இப்பொழுது தவறான புரிதலால் வெறுப்பா மாறியது …
” இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும் எப்படி மதி .. ? இங்க உயிருக்கு மட்டும் இல்லை …மானத்துக்கே பாதுகாப்பு இல்லை … எப்படியவாது போயிரு .. ஏதாவது பண்ணு … எதை வேண்டுமானாலும் சகித்து கொள்ளலாம் … ஆனால் குணம் கெட்ட மனிதனை எவ்வாறு சகித்துக்கொள்வது ” வாய்விட்டே கதறினாள் .
“அர்ஜுன் கிட்ட பேசலாம்ன்னா …. ஒரு போன் கூட இல்லை … யார்கிட்ட உதவி கேட்க … “என மதி வழியும் கண்ணீரை புறங்கையால் துடைத்து கொண்டிருக்க ,
அப்பொழுது ” ஏன் இவ்வளவு சோகம் ? ” அந்த குரலை கேட்டதும் சட்டென்று திரும்பினாள் மதுமதி . அங்கே கையில் காஃபியோடு நின்றிருந்தான் வீரா .
‘இவனும் அவன் கூட்டாளி தானே இவன் மட்டும் என்ன பெரிய ஒழுக்க சீலனாகவா இருக்க போகிறான் ‘ மனதிற்குள் பொறுமியவள்
” கொஞ்சம் தலை வலி ” எரிச்சலை மறைத்து கொண்டு கூறினாள் .
” சாப்பிடாம இருந்தா தலை தான் வலிக்கும் ” என்றவன் தன் கையில் இருந்த காஃபி கப்பை அவளிடம் நீட்டினான் .
” வேண்டாம் வீரா “
” முதல்ல வாங்கி குடி ” என்று வற்புறுத்தினான் … அவளும் பகைத்துக்கொள்ள விருப்பம் இல்லாமல் வாங்கிகொண்டாள் .
” ஏன் இவ்வளவு டல்லா இருக்க ??” அக்கறையோடு தான் கேட்டான் …அவளுக்கு பற்றிக்கொண்டு வந்தது !ஏனோ அவளால் வீராவை கூட நம்ப முடியவில்லை.
” சொன்னா சரி பண்ணிருவியா ?”கோபமாக கேட்டாள்
” சொல்லு கண்டிப்பா பண்றேன் ” புன்னகையோடு கூறினான் .
” தலை ரொம்ப வலிக்குது ” வலியில் முகத்தை சுளித்தபடி கூறினாள் .
” என்னாச்சு ” பதறினான் .
” பயப்படாத … ஹாஸ்ப்பிட்டல் போனா தான் கேட்கும்ன்னு நினைக்கிறேன் “
” அச்சோ தாராவும் இங்க இல்லையே அவ அவளுடைய வீட்டுக்கு போயிருக்காளே …. வர டூ ஹார்ஸ் கிட்ட ஆகுமே … சரி வா ஆதித்யா கிட்ட சொல்லிட்டு …நான் உன்னை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போறேன் “
” ஆத்தியா கிட்ட வேண்டாம் ” மெல்ல கூறினாள் .
“அவன் கிட்ட சொல்லாம எப்படி ?” – வீரா தயங்கினான் .
” ப்ளீஸ் நீயே கூட்டிட்டு போ … வந்து சொல்லிக்கலாம் ப்ளீஸ் ” கெஞ்சினாள் .வீரா சற்று யோசித்தான் … ‘ சரின்னு சொல்லு டா … ‘ மனதிற்குள் வேண்டினாள் .
” ஆதிக்கு இதெல்லாம் புடிக்காது மதி … அவன் கிட்ட சொல்றதுல என்ன பிரச்சனை ?” – தயக்கத்துடன் கேட்டான் .
” பரவாயில்லை …. என்னால உனக்கு கஷ்டம் வேண்டாம் … நான் சமாளிச்சிக்கிறேன் …நாம போக வேண்டாம் ” வாடிய முகத்துடன் கூறினாள் . அதை கண்டதும் அவனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது ..வலியில் அவள் துன்பப்படுவதை காண முடியாதவன் .. மதியின் மனதில் ஒளிந்திருக்கும் நோக்கம் அறியாமல் ….ஆதித்யா விரும்ப மாட்டான் என்று தெரிந்தும் அவளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆயத்தமானான்.
-தொடரும்
Leave a Reply