நிலா-முகிலன்1
அந்த குடியிருப்பின் மொட்டை மாடியிலிருந்து பார்க்க, தொலைவில் தெரிந்த குன்றுகள், நிலமடந்தை வாரி வழங்கிக் கொண்டிருந்த கடுங் குளிரைத் தாங்காமல் பச்சை போர்வையால் தம்மை முழுவதுமாக போர்த்திக்கொண்டிருந்தன.
ஆனால் இவை எதையுமே கருத்தில் கொள்ளாமல், ஏரெடுத்தும் பாராமல், ரசிக்கவும் மனமின்றி கண்களை இறுக மூடிக்கொண்டு, இருபதாம் தளத்தில் அமைந்திருந்த அந்த மொட்டைமாடியின் கைப்பிடி சுவரின் மேல், தன் உயிரை இழுத்துப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தாள் அந்த நிலவினை போன்ற அழகி! நம் நாயகி நிலவழகி.
ஒவ்வொரு விரலாய் நீட்டி எண்ணியவாறே, அவள் மனதிற்குள், ‘த்ரீ! டூ! ஒன்! ஃபால்!’ எனச் சொல்லிக்கொண்ட அடுத்த நொடி தடால் என்ற சத்தத்துடனும் ‘ஆஆஆஆ!’ என்ற அலறலுடனும் கீழே விழுந்திருந்தாள் அவள்.
அடுத்த விநாடியே, ‘உயிர் போற அளவுக்கு வலிக்கும்னு நினைச்சோம்!
அட! அவ்வளவா வலிக்கலையே!
ஈவன் ஹார்ட் சர்போஸ்ல விழுந்த மாதிரிகூட தெரியல!
மெத்துமெத்துன்னு சாஃப்டா இல்ல இருக்கு!
நாம உண்மையிலேயே செத்துட்டோமா? இல்ல உயிரோட இருக்கோமா?’ எனப் பல விதமான ஐயங்கள் மனதைக் குழப்ப, பயத்தில் கண்களையும் திறக்காமல், அப்படியே விழுந்த நிலையிலேயே அவள் கிடக்கவும், தன்னை சமாளித்துக் கொண்டு, தன்னுடன் சேர்த்து அவளையும் தூக்கி நிறுத்தியவாறு, அவனும் எழுந்து நின்றான் கார்முகிலன் என்ற பெயர் கொண்ட வசீகர இளைஞன் நமது நாயகன்.
நிலவொளியில் அவளது முகம் பொன்னென ஜொலிக்க, அவனுக்கு மிக அருகில் கண் மூடி அவள் நின்றிருந்த தோற்றம், கல்லில் செதுக்கிய சிற்பமாக அவன் மனதில் பதிந்தது. ‘லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்னு சொல்லுவாங்களே; இவளைப் பார்த்த உடனே அப்படி ஒரு பீல் வந்துதே எப்படி?’ என்ற யோசனையில் அவன் நிற்க, முதலில் ஒரு கண்ணை மட்டும் திறந்து பார்த்தவள், எதிரில் நின்று கொண்டிருந்த நெடியவனை கண்டதும், விழிகளை முழுவதுமாக விரித்து, பயத்தில் அரள மிரள நிற்கவும், அவளது அந்த தோற்றத்தைக் கண்டு எழுந்த சிரிப்பை அடக்கியவனாக, அவன் அவளைப் பார்த்துக் கேட்டான், “ஆர் யூ ஓகே பெய்பி?!”
அவள் வெளிப்புறமாகக் கீழே விழுவதற்குப் பதிலாக, உட்புறமாக, அதுவும் அவன் மேலே விழுந்திருந்தது புரியவும், அதுவும் அவளை அவன்தான் இழுத்துத் தள்ளியிருக்கிறான் என்பது சர்வ நிச்சயமாக அவளுக்கு விளங்கவும், தான் இன்னும் சாகவில்லை; உயிருடன்தான் இருக்கிறோம் என்கிற மமதையில், “அறிவில்ல! மேனர்ஸ் இல்ல! ஒரு பொண்ணு கஷ்டப்பட்டு சாக ட்ரை பண்ணா, இப்படித்தான் வந்து உயிரை வாங்குவீங்களா! யாரு சார் நீங்க! இந்த உலகத்தையே காக்க வந்த மார்வல் அவெஞ்சர்னு உங்களுக்கு நினைப்பா?!” எனக் குஷி பட ஜோதிகா பாணியில் அவனிடம் அந்த நிலா முகத்து அழகி பொரிந்து தள்ளவும்,
“எனக்கு புரிஞ்சு போச்சு; யூ ஆர் நாட் அட் ஆல் ஓகே! யூ ஆர் மேட்! கம்ளீட்லி மேட்! அண்ட் அஃப்கோர்ஸ் அ லவ்வபுல், பியூட்டிஃபுல் மெஸ்மரைசிங் மேட்! ஐ லைக் யூ பெய்பி!” என்று சொல்லிக்கொண்டே, அதுவரை மிக முயன்று அடக்கி வைத்திருந்த சிரிப்பெல்லாம் பீரிட்டுக் கிளம்ப, சத்தமாகச் சிரிக்கத்தொடங்கினான் முகிலன்.
“யாரைப் பார்த்து பைத்தியம்னு சொன்னீங்க? ஸ்டாப்! இப்ப சிரிப்பை நிறுத்த போறீங்களா இல்லையா?” என அவள் எகிறவும்,
குளிரில் அவளது தொண்டை கட்டிக்கொண்டு, அவளுடைய குரல் வேறு கீச் கீச்சென்று ஒலிக்கவும்,
“வேற யாரை! உன்னை பார்த்துத்தான் சொன்னேன் பெய்பி!” என்றவனின் சிரிப்பு, அவளுக்கும் அடங்காமல், அவனுக்கும் அடங்காமல் தொடர்ந்தது.
அந்த நேரம் பார்த்து, அரை இருளில் ஒரு உருவம், சுற்றும் முற்றும் யாராவது இருக்கிறார்களா எனப் பார்த்துக்கொண்டே, திருட்டுத்தனமாக அவர்கள் இருவரும் இருக்கும் திசை நோக்கி வந்து கொண்டிருந்தது.
முதலில் அது யார் என்பது புரியாவிட்டாலும், அருகில் நெருங்க; நெருங்க; அவர் யார் என்பது இருவருக்கும் புரிந்து போனது.
“ஐயோ! கோபாலன் மாமா!” என நிலாவும், “செத்தோம்!” என முகிலனும் ஒரே குரலில் கொஞ்சம் சத்தமாகச் சொல்லிவிட, ஓசை கேட்டு ஒரு நொடி திடுக்கிட்டவர், பின்பு தன்னை சுதாரித்துக்கொண்டு, அவர்களை நெருங்கி வந்தார் அவர்.
அதற்குள் நிலாவை அங்கே புதர் போல் வளர்ந்திருந்த நித்திய மல்லிகை கொடிக்குப் பின்பாக மறையும்படி தள்ளிய முகிலன், “என்ன மாம்ஸ்! இந்த நேரத்துல இங்க வந்திருக்கீங்க? உங்க கிட்ட ஏதோ திருட்டுத் தனம் தெரியுதே!” என கிண்டலுடன் கேட்கவும்,
“அட பாவி! என்னைப் பார்த்தா உனக்குத் திருட்டுத்தனம் பண்றவன் மாதிரியா தெரியர்து? இந்த கெழவிகூட சேர்ந்தது நீயும் ரொம்ப கெட்டு போயிட்டடா பையா!” எனக் கோபாலன் மாமா அங்கலாய்க்கவும்,
“ஹா! ஹா! நான் கெட்டு போயிட்டானா? நல்ல காமடி! எங்க நீங்க கொஞ்சம் திரும்புங்க பார்க்கலாம்!” என சொல்லிக்கொண்டே அவரது பின் புறமாக அவன் எட்டிப் பார்க்கவும், ஒரு சிறிய தோள் பையை பின் புறமாக அவர் மறைத்திருந்தது அவனுக்குத் தெரிந்தது.
அதை அவரிடமிருந்து கை பற்றி அவன் திறக்கவும், அதில் ‘கிராண்ட் ஸ்வீட்ஸ்’ கடையிலிருந்து வாங்கி வரப்பட்டிருந்த பலவகை இனிப்புகள் அடங்கிய பெட்டி ஒன்று அவனை பார்த்து இனித்தது.
“இதை என் ஃபிரெண்டுக்காக கொண்டு வந்தேன்! நான் சாப்பிடரத்துக்கு இல்ல; தெரிஞ்சுக்கோ!'” என்றவர், “ஆமாம், நான் இங்க நுழையும் போது நீ யார்கிட்ட பேசிண்டு இருந்த. ஏதோ பொண்ணு குரல் மாதிரி இருந்துதே!
பெருசா நல்லவன் மாதிரி அந்த கெழவி கிட்ட சீன போட்டு வெச்சிருக்க இல்ல?
இரு! இரு! நீ இங்க ஒரு பொண்ணு கூட ரொமான்ஸ் பண்ணிண்டு இருக்கற விஷயத்தை அவ கிட்ட போட்டு குடுக்கறேன்!” என அவர் காண்டாகப் பேச,
“முதல்ல அதை செய்ங்க மாம்ஸ்! சுசீ மாமி, எங்க அம்மா கூட சேர்ந்துட்டு எனக்கு பொண்ணு பாக்கறேன், பச்சை மண்ணு பாக்கறேன்னு ஒரு கூத்தே அடிச்சிட்டு இருக்காங்க. அதுக்கு ஒரு முடிவு வரும்!” என அவன் தீவிரமாகச் சொல்லவும்,
அதுவரை பொறுமையை இழுத்துப்பிடித்து மறைவாக நின்றிருந்த நிலா, அதைக் கைவிட்டவளாக, “ஐயோ! அப்படி எதையாவது செஞ்சுடாதீங்க யங் மேன்! ரொமான்ஸும் இல்ல ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல! எனச் சொல்லிக்கொண்டே வெளியில் வந்தாள்.
“ஐயோ! அழகி நீயா! நான் உன் கிட்ட இருந்து இதை எதிர்பாராகவே இல்ல!
இங்க; இந்த நேரத்துல; தனியா; அதுவும் என் ஜென்ம விரோதிகூட பேசிண்டு இருக்க!
இவன் அடிக்கடி, ‘இந்த நாய், மாடு இது கூடல்லாம் ஃப்ரண்டா இருக்கற அந்த பொண்ணு யாரு’ன்னு கேட்ட அப்பவே நான் புரிஞ்சிண்டு இருந்திருக்கணும்! எதார்த்தமா எடுத்துண்டது தப்பா போச்சு!” என அவர் கோபத்துடன் அடுக்கிக்கொண்டே போகவும்,
அவரது வார்த்தைகளில் கலவரமானவள்,
“ஓ மை காட்! ஜீ.கே மாமா! தப்பா இங்க எதுவும் நடக்கல. நீங்க பாட்டுக்கு எதையாவது கற்பனை பண்ணிக்காதீங்க! இதுக்கு முன்னால இவரை நான் பார்த்ததுகூட கிடையாது!” எனச் சொல்ல,
“அப்படினா, இங்க என்ன பண்ணிண்டு இருக்க?” என அவர் தொடரவும், அவள் என்ன பதில் சொல்வது என குழம்பித் தவிக்க, அது புரியவே, ‘எதையும் சொல்லி வைக்காதே!’ என முகிலன் ஜாடை செய்தான்.
அதை அவள் கொஞ்சமும் கவனிக்காமல் போக, எரிச்சலில் தலையில் அடித்துக்கொண்டான் அவன்.
அதற்குள்ளாகவே, “நான் இந்த இடத்துல இருந்து குதிச்சு சூசைட் பண்ணிக்கலாம்னு பார்த்தேன். உங்க எனிமிதான் என்னைத் தடுத்து, கீழ தள்ளி விட்டுட்டார்!” என்றாள் நிலா சிறிதும் யோசனை இன்றி.
“ஐயோ! என்ன ஆச்சு கண்ணா? மாடில இருந்து குதிக்க பார்த்தியா! கடவுளே!” என அவர் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு, அருகிலிருந்த கல் மேடையில் தொப்பென உட்காரவும், பதறியவன்,
நிலவை நோக்கி, “உண்மையிலேயே நீ லூஸுதாண்டி!” என பற்களை கடித்தவன், மாமாவிடம் திரும்பி, “மாமா! அவ சும்மா விளையாட்டுக்கு சொல்றா! உங்களை பார்க்கத்தான் அவ இங்கே வந்ததே!” என்னை இங்க பார்த்து பயந்துட்டா! அவ்வளவுதான்!” என்றான் முகிலன்.
பின்பு நிலாவை நோக்கி, “நீயே சொல்லு!” என்றான் முகம் கடுகடுக்க.
“ஆமாம் யங் மேன்! அவர் சொன்னதுதான் உண்மை!” என்றாள் நிலா, மாமாவின் மனநிலையை உணர்ந்துகொண்டு.
அப்படியும் அவர் தெளிவடையாமல் இருக்கவே, அவர் மனதைத் திசை திருப்பும் பொருட்டு விஷமக் குரலில், “மாம்ஸ்! இவதான் உங்க பார்ட்னர் இந்த கிரைமா! இந்த ஸ்வீட்சை இவ கூட ஷேர் பண்ணி சாப்பிடத்தானே இங்க திருட்டுத்தனமா வந்தீங்க? இருங்க சுசீ மாமி கிட்ட இப்பவே சொல்றேன்” என்ற முகிலன் கைப்பேசியை எடுத்து, எண்களை அழுத்தி, “பியூட்டி!” என்று சொல்லவும், வேகமாக அவனிடமிருந்து அந்த கைப்பேசியைப் பறித்து, அழைப்பைத் துண்டித்த கோபாலகிருஷ்ணன் மாமா,
“இதுல பாதிதான் உண்மை! நான் அழகிக்குதான் இந்த ஸ்வீட்சை கொடுக்க எடுத்துண்டு வந்தேன். நான் சாப்பிட இல்ல. தெரிஞ்சிக்கோ!” என்றார் கெத்தாக.
“மாம்ஸ்! எழுபத்து அஞ்சு வயசாகுது உங்களுக்கு! இந்த வயசுலயும் பொண்டாட்டிக்கு இப்படி பயப்படுறீங்க பாருங்க; யூ ஆர் கிரேட்!” என்றான் முகிலன் நக்கல் குரலில்.
“யாரு நானா! போடா போய் உருப்படியா வேற வேலை இருந்தால் பாரு!” என்றவர், நிலாவிடம் திரும்பி, “இவனைப் பத்தி உனக்குத் தெரியாது கண்ணா! ‘நான் தான் மேன் ஆஃப் ப்ரின்ஸிபல்; தம் அடிக்க மாட்டேன்; தண்ணி அடிக்க மாட்டேன்; பொண்ணுங்கள தப்பா பார்க்கவே மாட்டேன்னு’ இல்லாத சீனெல்லாம் போட்டு எங்காத்து கிழவியை கைக்குள்ள போட்டுண்டு அவளை எனக்கு எதிரா திருப்பி விட்டுட்டான்.
எதுக்கும் நீ இவன் கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளியே இரு! எதையாவது பேசி உன்னையும் குழப்பி நம்ம ஃப்ரண்ட்ஷிப்பை பிரேக் அப் பண்ணிட போறான்.” என அவளை எச்சரிக்கும் விதமாகச் சொன்னார் ஜீ.கே மாமா.
‘கெட்டது குடி! நாம இவளை எப்படி கரெக்ட் பண்றதுன்னு பார்த்தால், லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணறதுக்கு முன்னாடியே இந்த ஓல்ட் மேன் பிரேக் அப் பண்ணிவிட்டுடுவார் போல இருக்கே’ என எண்ணி நொந்தே போனான் முகிலன்.
“போனால் போகுது; இந்த சுவீட்ல எல்லாம் கொஞ்சம் சாம்பிள் உங்களுக்கு கொடுக்கலாம்னு நினைச்சேன். என்னை பத்தி இந்த பொண்ணுகிட்ட தப்புத்தப்பா சொல்லிடீங்க இல்ல. ஐடியா டிராப்ட்!” என அவன் மிரட்டலில் இறங்கவும்,
“அப்படிலாம் நான் எதுவுமே சொல்லலடா!” என்றவர், நிலாவிடம், “அழகிம்மா கேட்டுக்கோ! இவன் நல்லவன்! நல்லவனுக்கெல்லாம் நல்லவன்! கெட்டவனுக்கெல்லாம் கூட நல்லவன்தான்! ஆனா எனக்கு மட்டும் கெட்டவனோ கெட்டவன்!” என்று கொஞ்சமும் சிரிக்காமல், ஆனால் கிண்டலுடன் சொல்ல, மற்ற இருவருமே மனம் விட்டுச் சிரித்தனர்.
பின்பு மூவருமாக அந்த இனிப்புகளைச் சாப்பிட்டு முடிக்க, “ம்ப்ச்! மாம்ஸ்! சின்ன குழந்தை மாதிரி இப்படி பண்றீங்களே! சுகர் எகிறிப்போச்சுன்னா எவ்வளவு கஷ்டம்? மாமி ரொம்பவே கவலை படறாங்க!” என்றான் முகிலன் உண்மையான அக்கரையில்.
“பரவாயில்ல விடுங்க…” என அவன் பெயர் தெரியாமல் நிலா இழுக்கவும், “கார்முகிலன்! ஷார்ட்டா முகிலன். அதுதான் என் பேர் அழகி!” என்றான் முகிலன்.
“டேய் அவ பெரு நிலவழகி! எல்லாருக்கும் நிலா! நீயும் நிலான்னே கூப்பிடு! ஏன்னா அவ எனக்கு மட்டும்தான் அழகி!” என அதற்கும் அவனிடம் சண்டைக்கு வந்தார் ஜீ.கே மாமா!
“ஓகே! டன்!” என அவரிடம் சரணடைந்தான் முகிலன்.
“ஐயோ! விட்டா சண்டை போட அரமிச்சுடறீங்க! நான் சொல்ல வந்ததையே மறந்துடுவேன்!” என்றவள், “யங் மேன்! இன்னைக்கு ஸ்வீட் சாப்பிடீங்க இல்ல! இன்னும் ஒன் மந்துக்கு நோ ஸ்வீட்ஸ்! அப்பறம் மாமி கிட்ட சொல்லி, தண்ணில வெண்டைக்காய் போட்டு மார்னிங் வெறும் வயத்துல சாப்பிடறீங்க!
நாளையில இருந்து மார்னிங் என் கூட வாக்கிங் வரீங்க. பனியா இருக்கறதால செவென்க்கு கிளம்பலாம். டாட்!’ என முடித்தாள் நிலா.
அவளுடைய முகத்தைப் பார்த்து நக்கலாகச் சிரித்தவன், கைப்பிடி சுவரில், குதிப்பதற்காக அவள் ஏறி நின்றிருந்த இடத்தை பார்த்து, அவளை நோக்கி தலை அசைத்தான் முகிலன். தான் செய்த தவறை எண்ணி அவளுடைய கண்கள் கீழ் நோக்கித் தாழ்ந்தது.
அதை கவனிக்காதவன் போன்று, “நிலா! நீ மாமாவை அவரோட வீட்டுல விட்டுட்டு, உன் வீட்டுக்கு போ!” என அவன் கட்டளையாகச் சொல்ல, “நீங்க என்ன எனக்கு ஆர்டர் போடுறது. நீங்க சொல்லலன்னாலும் நான் அதைத்தான் செய்திருப்பேன்!” என நொடிந்துகொண்டு, மாமாவுடன் அங்கிருந்து கிளம்பினாள் நிலா.
“யாரு யங் மேன் அவர்! உங்களையே இந்த பாடு படுத்தறாரு?” என அவனை பற்றி அறிந்துகொள்ளும் ஆவலில் கேட்டாள் நிலா.
“இவன் எங்க ஊர் பையன்தான்மா! நான் கும்பகோணத்துல காலேஜ் லெக்ச்சரரா இருந்த அப்ப, இவனோட அப்பா என்னோட ஃபேவரைட் ஸ்டூடன்ட். அவன் கோஸ்ட் கார்ட்ல பெரிய போஸ்டிங்க இருந்து ரிட்டையர் ஆகிட்டு இப்ப விவசாயம் பார்த்துண்டு ஊரோட செட்டில் ஆகிட்டான்.
இந்த பையனுக்கு இங்கேதான் வேலை. எங்காத்து பக்கத்துல இருக்கும் என் பொண்ணோட பிளாட்ல குடிவெச்சிருக்கோம்.
அவன் மாமியோட பெட்!
அருந்த வாலு! நல்ல பையன்தான்! ஆனா எனக்கு மட்டும் ஆப்பு வெச்சுடுவான்.
சுகருக்குனு ஊருல இருந்து ஒரு கஷாயம் மிக்ஸ் வாங்கிண்டு வந்திருக்கான் கண்ணா இவன்.
கசப்புன்னா கசப்பு, விஷ கசப்பா இருக்கும்.
இப்ப கூட பாரு; வீட்டுக்கு போன உடனே, அந்த கஷாயம் ரெடியா இருக்கும். ஸ்வீட் சாப்பிட்டு இருக்கேன் இல்ல!” என்று முடித்தார் பெரியவர்.
பேசிக்கொண்டே, மொட்டை மாடியிலிருந்து படிகளில் இறங்கி, மின்தூக்கியில் பயணம் செய்து, மூன்றாம் தளத்தில் இருக்கும் மாமாவின் வீட்டிற்குள் வந்திருந்தனர் இருவரும்.
முழங்காலில் ஏதோ தைலத்தைத் தேய்த்துக்கொண்டே, அவர்கள் வீடு வரவேற்பறை இருக்கையில் உட்கார்ந்திருந்தார் சுசீலா மாமி.
அவர்கள் இருவரையும் பார்த்தவுடன், “வாம்மா நிலா!” என அவளை வரவேற்றவர், அங்கே இருந்த டீபாயை மாமாவிற்கு சுட்டிக்காட்டினார்.
அதில் இருந்த வெள்ளி குவளையில், கருப்பு நிறத்திலிருந்த அந்த கஷாயம், மாமாவைப் பார்த்து கசந்தது.
நிலாவின் கையை சுரண்டி, அதை அவளுக்குக் காண்பித்தவர், புருவத்தை உயர்த்தி, ‘எப்புடி’ என்பது போல் கேட்டார்.
“செம்ம; யங் மேன்!” என்றாள் நிலா.
“என்னடி பொண்ணே இங்க செமையா இருக்கு!” என்று மாமி கேட்க,
நிலா பதில்சொல்வதற்கு முன்பாக, “பாப்பா! டின்னர் சாப்பிடத்துக்கு அப்பறம் ஸ்வீட்டா எதாவது டெஸர்ட் இல்லனா ஐஸ் க்ரீம் சாப்பிடுவா! நீ ஏண்டி இப்படி விஷத்தை வெச்சிருக்க?” என மாமா கேட்கவும்,
“உங்களைப் பொறுத்த வரைக்கும் ஸ்வீட்தான்னா விஷம்! இந்த விஷம் தான் அமிர்தம்! அதனால பேசாம சாப்பிடுங்கோ! இல்லனா இப்பவே போன் பண்ணி உங்க பேத்தி கிட்ட கொடுத்துடுவேன்!” என்றார் மாமி மிரட்டலாக.
“என் நேரம் பத்து வயசு நண்டு சிண்டுக்கெல்லாம் பயப்பட வேண்டியதா இருக்கு!” எனப் புலம்பிக்கொண்டே அந்த கஷாயத்தை அருந்தி முடித்தார் மாமா!
அனைத்தையும் பார்த்துச் சிரித்தவண்ணம் மாமிக்கு அருகில் உட்கார்ந்திருந்த நிலா, நேரம் ஆவதை உணர்ந்து, “குட் நைட் மாமா! குட் நைட் மாமி! பை! நான் போயிட்டு வரேன்!” என்று கிளம்ப எத்தனிக்க, “எங்கடி போற பொண்ணே! இன்னைக்கு ராத்திரி இங்கேயே படுத்துக்கோ! எனக்கு முட்டி வலி அதிகமா இருக்கு! நடக்கவே முடியல! நீ இருந்தால் கொஞ்சம் ஒத்தாசையா இருக்கும்! நீயும் தனியான தங்கி இருக்க!” என அவர் இறைஞ்சலாகச் சொல்லவும் மறுக்க மனம் இன்றி அதற்கு ஒப்புக்கொண்டாள் நிலா.
அவர்கள் மாடியிலிருந்து கிளப்பியதும், மாமியைக் கைப்பேசியில் அழைத்து, “பியூட்டி! மாமாவுக்கு கஷாயம் போட்டு குடுத்துடுங்க!
அந்த நிலா பொண்ணு அங்க வருவா! அவளை இன்னைக்கு உங்க வீட்டிலேயே தங்க வெச்சுக்கோங்க!
எந்த காரணம் கொண்டும் போக விட்டுடாதீங்க! என்னனு நான் காலைல நேரில் சொல்றேன்!” என முகிலன் மாமியிடம் சொல்லியிருந்தது நிலவழகிக்கு தெரிந்திருக்க நியாயமில்லையே!