அத்தியாயம் 2
சிவாவை அணைத்தவாறு அவன் கைகளில் உறங்கிக்கொண்டிருந்த காயத்ரி மெல்லக் கண்களைத் திறந்து ’இது கனவோ?’ என்பது போல் பார்க்க. அவன் அழகை மனதில் ரசித்தவாறே கைகளை நீட்டி அவன் கண்கள், முகம், மீசை என்று தன்னை மறந்து வருட, எதோ உணர்ந்து அவள் உறைந்து போனாள்.
அப்பொழுது மெதுவாகக் கண்களைத் திறந்த அவன் முகத்திலோ அதைவிடப் பெரிய அதிர்ச்சி!
“அம்மா!” அன்று அவள் அலறி விழுந்தடித்துக் கொண்டு கட்டிலின் ஒரு புறம் அவள் போய்ப் பதுங்கிக் கொண்டாள்.
அவனும் அவள் கத்திய கத்தில் அரண்டு கீழே உருண்டு விழுந்தான்! இருவரும் மெதுவாகக் கட்டிலின் எதிர் எதிர் பக்கத்திலிருந்து எட்டிப் பார்த்தனர்.
“காயு நீ இங்க என்ன பண்றே? எப்படி வந்தே?” என்றான் கடுமையும் குழப்பமுமாக. கட்டிலின் மறுபுறத்திலிருந்து எழாமல் .
“நான் எங்க வந்தேன்? நீங்கத் தானே வந்தீங்க?” என்றாள்.
மூச்சு வாங்க குழப்பமாய் அவன் தலையைப் பிடித்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்துவிட்டான்.
‘என்ன நடந்தது ? ஏன் தலை இப்படி வலிக்கிறது ?‘ குழப்பம் தாங்காமல், கண்களை மூடிக் கொண்டான் சிவா.
அவளுக்கும் அதேபோல் தலையில் யாரோ பலமாக அடித்தது போல் பயங்கர தலைவலி மற்றும் அதே குழப்பம் !”
“காயு !“
“ம்ம்” என்று மட்டுமே அவளால் சொல்ல முடிந்தது.
“என்ன நடந்தது எனக்கு ஒன்னுமே புரியலை. நாம எல்லாரும் பேசிண்டு இருந்தோம் வேற ஒன்னும் நியாபகம் இல்ல. நான் ஒன்னும் உன்கிட்ட தப்பா நடக்கலைன்னு நினைக்கிறேன். சரிதானே ?” என்று கேட்டான்
“ம்ம்ம்…அப்படிதான் நெனைக்கிறேன். எனக்கும் எதுவும் ஞாபகம் இல்லை” இப்போவும் அவளிடம் இருந்தும் பெரிதாய் குரல் வெளியே வரவில்லை.
ஆக மொத்தம் இருவருக்கும் நடந்த எதுவும் நினைவில் இல்லை, நடப்பதும் புரியவில்லை.
மீண்டும் அங்கே ஆழ்த்த அமைதி. அவளின் வயிற்றிலோ கடா மூடா என்று சப்தம் எழ, மெதுவாக எழுந்த சிவா மெல்ல அறையை விட்டு வெளியேறினான்.
ஒரு புறம் பத்திரமாக இருக்கிறோமென்ற எண்ணம் நிம்மதியை அளித்தாலும் மறுபுறம் எப்படி சிவாவுடன் ஒரே கட்டிலில் உறங்குமளவிற்கு வந்தாள் என்பது கலக்கத்தைக் கொடுத்தது.
எவ்வளவு யோசிக்க முயன்றும் எதுவும் புலப்படவில்லை. நடந்ததை அவனிடமே மறுபடி கேட்க முடிவு செய்தாள்.
எதோ பாத்திரம் உருளும் சத்தம் கேட்கவும், பதறியபடி அவள் அறையை விட்டு வெளியே வந்தாள்.
எதிரே இருந்த திறந்த சமையல் அறையில் சிவா கீழே விழுந்த பாத்திரத்தை எடுத்து மேடையில் வைத்துக்கொண்டிருந்தான்.
“என்னாச்சு? என்ன பண்ரீங்க ? ” என்றபடி அவளும் அங்கே செல்ல.
“உனக்குப் பசிக்கிறதுன்னு நெனச்சேன். எனக்கும் பசி அதான் ஏதாவது சாப்பிட இருக்கான்னு பாக்க வந்தேன் ! ” என்றான் அங்கே இருந்த பிரிட்ஜை திறந்தவாறே.
அப்போதுதான் அவள் அவர்கள் இருந்த இடத்தைக் கவனித்தாள். அவர்கள் இருந்த சமையலறை ஹாலுடன் இணைந்து இருந்தது.
ஹாலின் வலப்புறம் இடப்புறம் பெரிய கண்ணாடி சுவர்கள், வலப்புறம் வெளியே செல்ல வாயிற்கதவும்.இடப்புறம் பால்கனி செல்லக் கதவும் இருந்தது.
எல்லாவற்றிற்கும் மேல் இரண்டு பக்கமும் பறந்து விரிந்த ரம்மியமான நீலக் கடல்!
அவளுக்கு எதிர் புறம் இரு அறைகள் ஒன்று அவர்கள் இருந்த படுக்கை அறை மற்றொன்று மூடி இருந்தது. வீடு மிகவும் நாகரிகமாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. ஹாலில் ஒரு L வடிவ சோஃபா அதன் எதிரே பெரிய 75 இன்ச் டிவி. இரண்டிற்கும் நடுவில் கண்ணாடி மேசை.
கண்களை வெறித்தவாறே வலப்புறம் இருந்த கதவின் வழியே வெளியே பார்த்தவள் மெய் மறந்து நின்றாள். அவர்கள் இருந்த அந்த வீட்டைச் சுற்றி கடல்…கடல் மட்டுமே. அதில் தீவுபோல அவர்கள் இருக்கும் வீடு.
பதறி உள்ளே வந்தவள் “சிவா நாம எங்க இருக்கோம் ? இது யார் வீடு ? உதயா கௌதம் அண்ணா எங்கே? இங்க எப்படி வந்தோம்? ” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டேபோனவள் “எப்படி ஒரே பெட்ல ?” வார்த்தைகளை விழுங்கினாள்.
அவனோ எந்தப் பதிலும் சொல்லாமல் தோளைக் குலுக்கி பிரிட்ஜ்ஜில் இருந்த பழம் காய்கறிகளை எடுத்து மேடையில் வைத்துக் கொண்டு இருந்தான்.
“ப்ளீஸ் சிவா ! எனக்குப் பைத்தியம் பிடிக்கும் போல இருக்கு. பயமாவும் இருக்கு. ப்ளீஸ்.”
சிவாவோ முகம் இறுக கோவமாய் “நான் தான் சொல்றேன்ல எனக்கு எதுவும் ஞாபகம் இல்லை. நான் உன்னை எதுவும் செஞ்சுடலை “ என்று கடுகடுத்தவன் நொடியில் குரலை தாழ்த்தி “நானும் உன்னைப்போலத்தான் நம்பு மா ப்ளீஸ்!“ என்றான்.
“மொதல்ல ஏதான சாப்பிட்டு அப்புறம் யோசிப்போம் ப்ளீஸ். எனக்கு பசி தாங்கல“ என்றான் கெஞ்சலாய்.
‘நான் தான் பதற்றமா இருக்கேன் அவர் கூலாதான் இருக்க மாதிரி இருக்கு, இருந்தாலும் எப்படி இவர் கூட தனியா இருக்க முடியும் ? உதயா கௌதமண்ணா எங்க ? ‘ என்று அவள் எண்ணம் ஓட அதற்கு மேல் பசியில் மூளை வேலைநிறுத்தம் செய்தது.
எப்படியும் அவனைப் பார்த்தால் அவளைக் கடத்திக் கொண்டு வந்தவனைப் போலவும் இல்லை. ‘கௌதம் அண்ணாவுடைய கிளோஸ் பிரெண்ட். அவனும் தன்னை போன்றுதான் ‘ என்று தோன்ற. இவனிடம் கோவப்பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை என்று மனதில் நினைத்துத் தன்னை சமாதானம் செய்து கொண்டாள்.
“ம்ம்ம் சரி” என்று சொன்னபடியே அவனை நெருங்கினாள்.
ஒரு ஆப்பிளைக் கடித்தவாறே, அவளிடம் மற்றொன்றை நீட்டினான். அவளும் அதைத் தின்று கொண்டே சமையலறையை ஆராய்ந்தாள்.
“எனக்குச் சமைக்க தெரியாது காயு, உனக்குத் தெரியுமா?” என்று பாவமாய் அவன் கேட்க.
அவள் புன்னகைத்துக் கொண்டே “தெரியும் இந்தப் பக்கம் வாங்க நான் சமைக்கிறேன்” என்று அவள் முடிக்கும் முன்னமே
“நான் வேணும்னா காய்கறி கட் பண்ணித்தரேன். அது எனக்கு நல்லா தெரியும்” என்றான் உற்சாகமாய்.
இருவரும் மெதுவாகச் சமைக்கத் துவங்கினர்.
‘இவரைப் பார்த்தால் கெட்டவனா தெரியலை. ம்ம்… ஆனா எவ்வளவு நேரம் இங்க இவர் கூட இருக்க முடியும்?
யோசிக்க யோசிக்க தலைவலி பிளக்க…’பொறுமையா யோசிச்சு பார்ப்போம். இப்போதைக்கு கூல் டௌன் காயு! ‘
தன்னைத்தானே நிதானமாக வைத்துக்கொள்ள உள்ளுக்குள் போராடிக்கொண்டிருந்தாள்.
“நீங்க உங்க வைஃப்கு கிச்சன்ல உதவி பண்ணுவீங்களா? அழகா காய் வெட்டறீங்களே! “.
‘என்ன சொல்றே? ‘ என்பது போல் முழித்த சிவாவோ
“அம்மா தாயே நான் நல்லா இருக்கிறது பிடிக்கலையா ? எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை.” என்று சிரித்தான் கண்ணில் குறுகுறுப்புடன்.
“ஓ சாரி!” என்று அவளும் வழிய.
“சமையல் செய்ய ஒருத்தர் இருக்காங்க அவங்க லீவு போட்டா கௌதம் சமையல் பண்ணுவான் நான் கூட மாட ஒத்தாசை பண்ணுவேன்.”
“கெளதம் அண்ணா கூடவா ? “ என்று அவள் குழம்ப
“நான் கெளதம் உதயா எல்லாரும் சில வருஷம் ஒரே வீட்டுல தங்கி இருக்கோம். என்னை மாதிரியே அவங்களுக்கும் பெற்றோர்களோ மற்ற உறவுன்னு சொல்லிக்க யாரும் இல்லையே. ஸோ எங்களுக்கு நாங்களே உறவா இருந்துக்குறோம்” என்று சொல்லிக் கொண்டே அவன் வேலையைத் தொடர்ந்தான்.
இதைக் கேட்டவளின் கண்கள் சிறிது கலங்க…”எனக்கும் யாரும் இல்ல. அப்பா நான் 12வது முடிக்கும்போது போய்ட்டார். நான் தனியாகத்தான் இருக்கேன் இரண்டு வருஷமா அப்புறம் புக், யு-டியூப்ன்னு பார்த்துச் சமையல் கத்துண்டேன் ! ” என்றாள்.
சில நொடிகள் அவளையே பார்த்துக்கொண்டிருந்த சிவா. மனதில் எதோ பலமான யோசனையுடன். தன் கலங்கிய கண்களை மறைக்க “ரெஸ்ட்ரூம் போயிடு வரேன்” என்று வேகமாய் நகர்ந்தான்.
சமையலும் முடிந்து இருவரும் பரிமாறிக் கொண்டு சோஃபாவில் அமர்ந்தனர். சிவா ஒரு வாய் சாப்பிடும் வரை காயத்ரி அவனையே பார்த்துக் கொண்டு இருக்க.
அதைக் கவனித்தவன் “என்ன ? நல்லா தான் இருக்கு மா. நீ சாப்பிடு. ” என்று சொல்ல. அதற்காகவே காத்திருந்தார்போல் அவளும் அதன் பின் மெல்லச் சாப்பிடத் தொடங்கினாள்.
சாப்பிட்டு முடித்து இருவரும் சிறிது நேரம் இளைப்பாற அமர்ந்தனர்.
“சரி வா இப்போ என்ன செய்யலாம்னு யோசிப்போம். முதலில் நம்ம செல்போன் எங்கன்னு பார்ப்போம்” என்று அவன் சொல்ல இருவரும் வீடு முழுதும் தேடியும் அவர்கள் கைப்பேசிகள் கிடைக்கவில்லை.
அங்கே டெலிபோனும் கிடையாது. ஆகமொத்தம் வெளியுலகை தொடர்பு கொள்ள எந்த ஒரு கருவியும் அங்கு இல்லை. அவளின் கைப்பை மட்டுமே அங்கிருந்தது.
தேடி தேடி அலுத்து சோஃபாவில் சாயும் நேரம்தான் எதிரே இருந்த மேஜையின் மேல் கிடந்த அந்தக் கடிதம் சிவாவின் கண்ணில் பட்டது.
அதன் மேல் “அன்புள்ள சிவா , காயத்ரி” என்று எழுதி இருந்தது … “காயு இங்க பார்” என்று அதை எடுத்துப் படித்தவனோ ஏதும் சொல்லாமல் அந்த கடிதத்தை காயத்ரியின் கையில் கொடுத்துவிட்டுக் கண்மூடி நெற்றியைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தான்.
அக்கடிதத்தில் ….
அன்புள்ள சிவா , காயத்ரி
குட் மார்னிங் !
என்னடா எங்க எப்படி வந்தோம்னு குழப்பமா இருக்கா?
நான் தான் உங்க இருவரையும் அங்க கொண்டு விட்டேன்.
ஏண்டா உனக்கு டான்ஸ் ஆட மூட் இல்லையா? நியாயமா? காயத்ரி கூடத்தான் ஆடுவேன்னு சொல்ல வேண்டியதுதானே? ஏன்டா இந்த பூனையும் பாலைக் குடிக்குமான்னு முகத்தை வச்சுண்டு, நீங்க இரண்டு பேரும் நேத்து ராத்திரி அந்த ஆட்டம் ஆடினீங்க? டான்ஸ் என்ற பேரில் அப்படி என்னடா ரொமான்ஸ் ரெண்டு பேருக்குள்ள?
ஏண்டா சிவா , உனக்குள்ள ஒரு ரெமோ இருக்கிறது தெரியாமல் போச்சே டா.
அங்க ஆடினது போறதுன்னு அது என்னடா போட்ல அப்படி ஒரு கொஞ்சல்?
டேய் சிவா! நீ காதல் கல்யாணம்னு ஏதுமே இல்லாமல் சாமியாரா இருக்கியே , பாவம் உன்ன தனியா விட கூடாதேன்னு , நான் லட்சுமிகிட்ட என் காதலை சொல்லாமல் ரெண்டு வருஷமா கஷ்ட படறேன். நீ என்னடான்னா அவளை மீட் பண்ண உடனே அவகிட்ட “ஐ லவ் யு பேபி!” ன்னு சொல்றதும், அவ எதோ ஆஸ்கார் கொடுத்த மாதிரி “ஹைய்! ஐ லவ் யு டூ!” ன்னு சொல்றதும்.
முடியலடா திஸ் இஸ் டூ மச்!
நீங்கத் தானே நாங்க தனியா இருக்கனும், தனியா பேசணும்னு சொன்னீங்க. அதான் தனியா விட்டேன்.
எனக்கு வேலை இருக்கு உங்கள நாலு நாள் கழிச்சு வந்து திரும்ப கூட்டிண்டு வரேன் . அதுவரை பொறுமையா இருங்க . பேசி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கோங்க .
எனக்கு நிம்மதி வேணும் .நானும் தனியா இருக்கணும் அதுனால அதுக்கு முன்னாடி என்னை எதிர் பார்க்காதீங்க.
இப்படிக்கு,
அப்பாவி அம்பி! கெளதம்
‘லவ் யு சொன்னேனா? டான்ஸ் ஆடினேனா? என்ன சொல்றார் கெளதம் அண்ணா ? ‘ என்று காயத்ரி மண்டையை பிய்த்துக்கொள்ளாத குறையாய் முழிக்க
“நானா ஐ லவ் யு சொன்னேன்? ஐயோ அது எப்படி சாத்தியம்? அப்படி நடந்தது நிஜம்ன்னா ஏன் ஒண்ணுமே ஞாபகம் இல்லை?” என்று அவன் மனதிலும் பெரும் குழப்பம்.
“ஒரு வேளை கெளதம் அண்ணா விளையாடுறாரா? கொஞ்சம் யோசிச்சு பாருங்க ப்ளீஸ்” என்று கெஞ்சலாக அவள் கேட்க .
‘இருக்காது ! ‘ என்பது போல் அவன் தலை அசைத்தான்.
“கெளதம் இப்படி விளையாட மாட்டான், ஆனால் அப்படி நடந்து இருந்தால் நமக்கு ஏன் ஞாபகம் இல்ல ? நாம எப்படி நேத்து டான்ஸ்,லவ்? ” என்று தொடராமல் வார்த்தையைப் பாதியில் விழுங்கினான்.
அதற்கு மேல் அவளால் அவனைப் பார்க்க முடியவில்லை , பார்க்கும் வலிமை இல்லை .மனதில் ஏதேதோ நினைவுகள் . இதற்குமேல் எதையும் யோசிக்க மாட்டேன் என்று மனம் அடம் பிடிக்க காயத்ரி மௌனமானாள் ! அவன் நிலையும் அதுவே. மௌனம் நீள , இரவும் வந்தது .
“வேற வழி இல்ல…அவனே கண்டிப்பா வருவான். நாலு நாள் நம்மள இங்க விடமாட்டான் கவலைப் படாதே . எனக்குப் பசி இல்லை நான் தூங்க போறேன்! நீ பசிச்சா சாப்பிட்டு குட் நைட் “என்று அவள் பதிலுக்குக் காத்திராமல் சிவா எழுந்தான்.
எனக்கும் பசி இல்லை” என்றவள் தயங்கி தயங்கி“சரி நான் எங்க தூங்கறது? ” என்று அவள் கேட்க .
அவனோ “ஏன் இங்கதான்” என்று சோஃபாவை காட்டி
“என் உயரத்துக்கு என்னால சோஃபால படுக்க முடியாதுமா. நீ இங்க படு நான் உள்ள படுத்துகிறேன். தலைகாணி போர்வை எடுத்துக்கோ. குட் நைட் !” என்று சொல்லி அறைக்குச் சென்றுவிட . அவளும் வேண்டியதை எடுத்துக் கொண்டு சோஃபாவில் படுத்துகொண்டாள்.
நாள் முழுதும் இறுக்கமான மன நிலையிலிருந்ததால் படுத்ததும் இருவருமே உறங்கி விட்டனர்.
கிட்டத்தட்ட நடுநிசி நேரம்
” ஆ….ஆ….” என்று அவள் அலறும் சப்தம் கேட்டு உறக்கம் கலைந்து ஹாலுக்கு ஓடி வந்த சிவா விளக்கை போட்டு அவளைப் பார்த்தான்.
அவளோ சோஃபாவில் இல்லை. மேஜைக்கும் சோஃபாகும் இடுக்கில் எலிக் குஞ்சு போல் சுருண்டு கிடந்தாள்.
சிரிப்பு தாங்காமல் “என்னமா நீ குழந்தையா உருண்டு விழறதுக்கு? “என்று கேட்டபடியே அவள் அருகே வந்தவன் அவள் முகம் கண்டவுடன் அதிர்ச்சியில் ஒரு கணம் உறைந்தான்.
அவள் முகம் முழுவதும் வேர்வை துளிகளுடன் , கண்கள் வெறித்த படி உடல் நடுங்கி கொண்டு இருக்க
“காயத்ரி இங்க பாரு, என்னாச்சு மா? எதானா கெட்ட கனவா?” என்று கேட்டபடி சுற்றும்முற்றும் பார்வையிட்டான். வெளி ஆள் யாரும் வந்த தடயம் இல்லை,வர வாய்ப்பும் இல்லை.
“ரிலாக்ஸ் மா. நான் கூட இருக்கேனே , பயப்படாதே ” என்று அவள் தலையை ஆறுதலாய் வருடிக் கொடுத்தான்.
அவள் மெல்ல சுதாரித்துக் கொண்டு “உள்ள ரூம்ல என் பேக்ல டைரி ! சீக்கிரம் ப்ளீஸ் ” என்று அவள் சொல்ல…அவன் ஓடிச் சென்று அவள் கைப்பையை எடுத்து வந்தான்.
உள்ளிருந்த டைரியையும் பேனாவையும் எடுத்து எதோ அவரசமாய் எழுதினாள். ஒன்றுமே புரியாமல் அவனும் அவள் அருகிலேயே இருந்தான் .
அவள் எழுதி முடித்ததும் ..”காயு வா, உள்ள வந்தே தூங்கு” என்றவன் அவள் தயங்குவதை பார்த்து “என் மேல் நம்பிக்கை இருந்தால் வா. புரியும்னு நினைக்கிறன்.. ம்ம்” என்று அவளை மீண்டும் அழைக்க.
மெல்ல எழுந்தவள் தள்ளாடுவதைக் கவனித்தவன் , மெல்ல கை தாங்கலாய் அவளை உள்ளே அழைத்து சென்றான்.
அவளோ கட்டிலின் ஓரமாய் படுத்து மெல்ல அழுது கொண்டே உறங்கிப் போனாள். அவனோ அவளை தேற்ற வழி தெரியாமல் அவள் உறங்கும் வரை விழித்திருந்து பின்பு உறங்கிப்போனான்.
மறுநாள் காலை வெளியே வந்தவன் ஹாலில் இரு பைகள் இருப்பதை கண்டான்.
ஒரு பையில் காயத்ரியின் உடைகளும் மற்றொரு பையில் சிவாவின் உடைகளும் அவன் பையின் மேலே ஒரு கடிதமும் இருந்தது.
அக்கடிதத்தில்
அன்புள்ள சிவா !
என்மேல் கோவமாய் இருப்பேன்னு தெரியும். நான் பார்ட்டியில் சொன்னதை நெனச்சு பாரு அப்போ என்பக்க நியாயம் புரியும். இனியும் காலம் கடத்தாம மனம் திறந்து எல்லாத்தையும் அவ கிட்ட பேசு டா.
பார்ட்டில நான் தான் வெறும் ஜூசுன்னு பொய் சொல்லி ** கலந்த ஜூஸ் கொடுத்தேன். இல்லைனாநீ இதுக்கு சம்மதிக்க மாட்டே.. சாரி டா !
நான் நடந்ததாக நேத்து லெட்டர்ல சொன்ன எல்லாம் நிஜம்! நீங்கள் ரெண்டு பேரும் காதலை சொல்லி கொண்டதும் உண்மை! இனியாவது மனதை மறைக்காமல் நீ அவ கிட்ட பழகுவேன்னு நம்பறேன்!
நான் உங்க பக்கத்துலத்தான் இருக்கிறேன்.
ஏதாவது அவசரம் ஆபத்துன்னா என்ன செய்யணும்னு உனக்கு தெரியும் !
ரொம்ப ரொம்ப ஸாரிடா மன்னிச்சுடு!
இப்படிக்கு ,
கெளதம்
“டேய் நீ மட்டும் என் கையில் சிக்கினே, மவனே தொலைஞ்சே ! ” என்று பல்லை கடித்துக்கொண்டே அந்த கடிதத்தை சுக்குநூறாக கிழித்து குப்பையில் போட்டவன் தொலைக்காட்சியை ஆன் செய்து அதில்வரும் பாடலை கேட்டவாறு கண்களை மூடிக்கொண்டான்.
சிறிது நேரம் கழித்து காயத்ரி ஹாலுக்கு வர அவளைக் கண்டதும் ” காபி போடவா ? “என்று சமையலறையினுள் புகுந்தான் . “இல்லை நான் காபி குடிக்கிறது இல்ல . பால் அல்லது சாக்லேட் மில்க் மிக்ஸ் இருந்தா அது. நானே பாக்கறேனே ” என்று அவள் சொல்ல.
“அப்பாடா எனக்குக் காபி போடத் தெரியாது , எனக்குக் காபி குடிக்கும் பழக்கம் இல்ல உன்னைப்போலவே சாக்லேட் மிக்ஸ் தான். வெறும் பால்கூட அவ்வளவாய் பிடிக்காது ” என்று சொல்ல
இருவருமாக ஹாட் சாக்லேட் கலந்து கொண்டு வீட்டின் வெளியே இருந்த வராண்டாவிற்கு சென்றனர்.
கண்ணிற்கெட்டிய தூரம்வரை நீலம் பூசிய வானம் நீள, துள்ளும் நீல கடல் அலைகள் அந்த வீட்டை மீண்டும் மீண்டும் மோதிச்செல்ல, ஆங்காங்கே சீகல் பறவைகள் கடலில் அமர்வதும் பறப்பதுமாய் இருக்க, பூமியே எல்லையில்லா நீல போர்வையை போர்த்தியதுபோல் இருக்க, ஒரு புறம் மட்டும் கூப்பிடும் தொலைவைத்தாண்டி வீடொன்று தென்பட்டது.
இயற்கையெழிலில் தொலைந்தவள் அவனை பார்த்தபோது சிவா குனிந்தவாறு கைப்பிடி கம்பியில் ஒருகை முட்டியை ஊன்றி மற்றொரு கையால் கப்பைப் பிடித்துக்குடித்துக் கொண்டு இருந்தான்.
அவன் பக்கவாட்டு தோற்றம் ஓவியம் போலிருக்க அதில் மெய்மறந்தவள் ‘ப்பா எவளோ அழகா இருக்கான், பார்த்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே’ பார்வையை அவனிடமிருந்து விலக்கும் முன்பே சடார் என்று அவள் புறம் திரும்பியவன்
“என்ன மேடம் பலமான யோசனை?” என்று புன்முறுவலுடன் கேட்க .
அதுவரை அவனுடைய நீல நிற விழிகளை அவள் பார்ட்டியின் மங்கல் ஒளியிலும் , முந்தைய நாள் பதட்டத்திலும் கவனித்திருக்கவில்லை.
நீலம் வண்ணம் கடலையும் வானையும் ஆட்கொண்டதைப்போல அவன் நீல விழிகள் அவள் மனதை ஆட்கொள்ள துவங்கியது.
“விழிகளில் ஒரு வானவில்
இமைகளை தொட்டு பேசுதே
இது என்ன புது வானிலை
மழை வெயில் தரும்”
மெல்லிய ஒலியில் பாடல் வரிகள் காற்றில் கலந்து மனதை ஈர்க்க தன்னைமறந்து கண்களால் அவனை உள்வாங்க துவங்கினாள். அலைகளின் சாரல் தன்மேலடிக்க சுதாரித்தவள்
“நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. உங்க கண்ணுவேற செமயா ப்ளூவா இருக்கா அதன் சைட் அடிச்சுட்டு…” என்று உளறி விட்டு உதட்டைக் கடித்துக் கொண்டாள்.
அவளையே வெறித்துப் பார்த்தவன் ” ரொம்பத்தான் தைரியம் உனக்கு ! ” என்று தன் ஒற்றை புருவத்தை உயர்த்திவிட்டு மீண்டும் வேடிக்கை பார்ப்பதைத் தொடர்ந்தான்.
‘அடக்கடவுளே ! இவன் எப்போ கேள்வி கேட்டாலும் நான் ஏன் உண்மையை உளறுறேன் ? ஐயோ நான் மௌன விரதம் தான் இருக்கணும் போல இருக்கு ! ‘ என்று எண்ணிக்கொண்டு காயத்ரி வீட்டினுள் ஓடிவிட்டாள்.
அன்றும் அவர்கள் இருவரும் சேர்ந்தே சமைத்தனர்.மதிய உணவிற்குப் பின் மெதுவாக அவளிடம் இரவு நடந்ததை பற்றிக் கேட்க ஆரம்பித்தான் சிவா .
” என்ன ஆச்சு ராத்திரி ? என்ன கனவு கண்டே?”
“…”
“அது என்ன டைரி ?”
“…”
“நீயே ஒரு மாதிரி இருந்தே அதான் உடனே கேட்கலை !”
அவள் ஏதும் பேசாமல் மௌனமாய் இருக்கவே
“சரி…சொல்ல விருப்பம் இல்லைனா விடு ” என்று அவன் எழமுயல.
“அப்படி இல்லை. நான் சொன்ன நீங்க சிரிப்பீங்களோ இல்லை என்னை லூசுன்னு நினைப்பீங்களோன்னு… அதான் ” என்று அவள் தயங்க.
“அதெல்லாம் மாட்டேன். உண்மையை சொல்லனும்னா நான் நேத்து ராத்திரி பயந்துட்டேன். என்னை பிரெண்டுன்னு நெனச்சு சொல்ல முடியும்னா சொல்லு ” என்று நிறுத்தினான்
“எனக்கு சில சமயம் வரும் கனவுகள் முக்கால்வாசி அப்படியே நடக்கும் ! அதுனால எழுந்த உடனே டைரில அதை எழுதி வச்சுடுவேன் . அது என் ட்ரீம் டைரி.
ராத்திரி மட்டும் இல்லை சில சமயம் பகலில் கூட இந்த கனவு வரும். அதனாலே அந்த டைரியை பேக்லேயே வச்சுருப்பேன். உதயாக்கும் , லட்சுமிக்கும் மட்டும் இது பற்றித் தெரியும். வேற யார் கிட்டயும் நான் இது பற்றிச் சொன்னதில்லை” என்று மௌனமானாள்.
உதயா பள்ளியிலிருந்தே காயத்ரியுடன் ஒன்றாகப் படிக்கிறாள். முதல் முதலாய் அவளுக்கு இப்படி கனவுகள் வரத் துவங்கும் பொழுதே அதை அவள் உதயாவிடம் சொல்லி இருக்கிறாள்.
முதலில் பயந்த உதயா பின்பு , கனவுகளை ஒரு டைரியில் குறித்து வைக்கும் படி அறிவுறுத்தினாள்.
ஆனால் லட்சுமியிடம், முதல் முறை அவள் கனவுகள் பற்றி சொன்ன பொழுது ” என்னடி நைட் எதான இங்கிலிஷ் படம் பார்த்து அதே நினைப்பில் தூங்கிட்டியா?” என்று கிண்டல்தான் செய்தாள் .
“நேத்து என்ன கனவு வந்தது ? ” என்று மீண்டும் கேட்ட சிவா அவள் பதிலுக்காக ஆர்வமாய் காத்திருந்தான் .