NSOV 9

NSOV 9

பலவண்ண மலர்களால் செய்யப்பட்ட பூங்கொத்து ஒன்றை வலது கையில் ஏந்தியவாறு…

வெள்ளை நிறத்தில் சிறிய பிங்க் நிற பூக்களிட்ட ஜார்ஜெட் புடவை அணிந்து… கழுத்தில் மெல்லிய தங்கச் சங்கிலியும்… கைகளில் மெல்லிய வளையல்களும்…  காதில் சிறிய வெள்ளைக் கல் பதித்த தோடும்… மூக்கில் சிறிய வெள்ளைக்கல் மூக்குத்தியும் அணிந்து…

பளிங்குபோன்ற முகத்தில் சிறியப் பொட்டு வைத்து… வேறு ஒப்பனை ஏதுமின்றி… மிக எளிமையாக…

சரியாகக் காலை பத்து மணிக்கு… பொன்னிற எழுத்துக்களில் “ஹரிதா குரூப் ஆப் கம்பனிஸ் ” என்று பெயர் பொறிக்கப்பட்டிருந்த, அந்த அலுவலகத்தின் உள்ளே நுழைந்தாள் ஸ்வேதா

அங்கே வரவேற்புப் பகுதியில் இருந்த பெண்ணிடம் சென்று “நான் மிஸ்டர். ஹரி கிருஷ்ணனை பார்க்க அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியிருக்கிறேன்” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே…

அவளது காதின் ஓரம் ஒலித்த “வெல்கம் ஸ்வேதா!!!” என்ற ஹரியின் குரலில்… திடுக்கிட்டுத் திரும்பியவள், அவன் மீதே மோதி… தடுமாற… அவளது கையைப் பற்றி… அவளை நிறுத்தியவன்…

பேச்சற்று… இமைக்க மறந்து… அவனையே பார்த்துக் கொண்டு நின்றவளின் கையைப் பிடித்தவாறே… அவனது அலுவலக அறை நோக்கி அவளை அழைத்துச் செல்ல…

அதற்குள் சுற்றுப்புறம் உணர்ந்தவள், தனது கையை விடுவித்துக்கொள்ள முயல..

அவள் கையில் ஏந்தியிருந்த மலரினும் மெல்லிய அவளது விரல்களின் மென்மையில் தன்னைத் தொலைத்திருந்தவனின் பிடி… மேலும் இறுகியது… அவளது கரத்தை விட்டுவிட மனமின்றி…

அங்கேயிருந்த கதவில் அவனது என்ட்ரி கார்டை பதித்து, அந்தக் கதவைத் தள்ளிக்கொண்டு, “இது நம்ம கம்பெனியோட ‘ஆர் அண்ட் டி’ செக்க்ஷன்… இதில் வேலை செய்பவர் தவிர, மற்ற டிபார்ட்மென்ட் ஸ்டாப்ஸ் கூட… இங்கே நுழைய முடியாது… என்று சொல்லிக்கொண்டே… உள்ளே சென்றான்…

 

உள்ளே தனித்தனியாக கணினிகளுடன் கூடிய கேபின்களில் கிட்டத்தட்ட நாற்பதுபேர் வேலை செய்துகொண்டிருந்தனர்…

“ஹை கைஸ்!’ என்றவாறே அவர்களைத் தாண்டிச் சென்ற ஹரியையும்… அவனுடன் கைகோர்த்துச் சென்ற ஸ்வேதாவையும் அவர்கள் விசித்திரமாகப் பார்த்து வைக்க… அதில் கலவரமடைந்தவள்…

மென்மையான குரலில் “ஹரி ப்ளீஸ்” என்றவாறு தன் கையை மெதுவாக இழுக்க …

“ப்சு… நீ கொஞ்சம் பேசாமல் வா” என்றவனிடம்… “பிடித்தால் குரங்குப் பிடிதானா?” என்று அவள் கிண்டலாகச் சொல்ல…

“ஏய் யாரைப் பார்த்து குரங்குன்னு சொன்ன?”என்று ஹரி கோபம் போல் கேட்க…

அடக்கப்பட்டச் சிரிப்புடனேயே “எல்லாம் இந்த ஹரிதா குரூப் ஆப் கம்பெனிஸோட எம்.டி ஹரியைதான்.” என்றவள் தொடர்ந்து… “தெரியுமா சான்ஸ்க்ரிட்ல ஹரி என்றால் குரங்கு” என முடிக்க…

“அடிப்பாவி… எவ்வளவு நாளாக என்னை இப்படி சொல்லணும்னு காத்திருந்த?” என்று கேட்க… ” இப்பதான், ஜஸ்ட் இரண்டு நாளாக…” என்ற அவளது பதிலில் சிரித்தவாறே அவனது கேபினுக்குள் நுழைந்து, அதன் பிறகே அவளது கையை விட்டான்… அதுவும் மனமே இன்றி…

தனது இருக்கையில் போய் அமர்ந்தவன்… அவளையும் எதிரில் போடப்பட்டிருந்த இருக்கையில் உட்காருமாறு கையைக் காட்ட…

“கங்கிராட்ஸ் ஹரி” என்று சொல்லித் தனது கையில் வைத்திருந்த பூங்கொத்தைக் கொடுத்துவிட்டு அங்கே உட்கார்ந்தாள் ஸ்வேதா… எதற்காக வாழ்த்தினாள் என்று அவளும் சொல்லவில்லை…

அதை “நன்றி” என்று பெற்றுக்கொண்ட ஹரியும்… எதற்கு என்று கேட்க இல்லை.

 

“எப்படி இருக்கீங்க ஹரி…” என்று ஸ்வேதா கேட்க…

 

இருக்கையிலிருந்து எழுந்து அவள் அருகில் வந்து, மேசைமீது சாய்ந்து நின்றவாறே… “பார்த்து நீயே சொல்லு… நான் எப்படி இருக்கேன்” என்க.

அவனது கம்பீரமான தோள்களை எடுப்பாகக் காட்டும், வெள்ளை நிற சட்டையும்… கரும் பச்சை நிற கால்சராயும் அணிந்து… அடர்க்கேசம் நெற்றியில் புரள… உதடுகளோடு சேர்ந்து கண்களும் புன்னகைக்க நின்றித்தவனை… நிமிர்த்து பார்க்கக்கூட முடியாமல்… பிஞ்சுக் குழந்தையின் பாதம் போன்று முகம் சிவந்து போனாள் ஸ்வேதா…

“முன்பு கல்லூரியில் படிக்கும் காலத்தில் பழகும்போது… இவன் இப்படி இல்லையே!”

“அதுவும் இவன் திருமணமானவன் வேறு!”

“பிறகு ஏன் இப்படி விசித்திரமாக நடந்து கொள்கிறான்?!!: என்று எண்ணிய ஸ்வேதா…

ஒரு தெளிவுக்கு வந்தவளாக… “நீங்கதான் ரொம்பப் பெரிய ஆளாக ஆகிட்டிங்களே… விருதெல்லாம் வேறு வாங்கியிருக்கீங்க… உங்களோட அப்பாயின்மென்ட் கிடைப்பதே கஷ்டம் போலிருக்கே? அதனால… நீங்க எப்படி இருக்கீங்கன்னு நீங்கதான் சொல்லணும்… ” என்று முடிக்க…

அவளுடைய வெட்கச் சிவப்பை ரசித்துச் சிரித்தவாறே… “நான் நன்றாக இருக்கிறேன் சுவீட்…” என்றுவிட்டு… பிறகு போன் மூலம் அவனது உதவியாளரை அழைத்த, ஹரி… “சாப்பிட ஏதாவது அனுப்புங்க விவேக்” என்று பணித்தான்.

“உங்களோட நிறுவனங்கள் பற்றி கூகிளில் பார்த்தேன்… ரியலி… எப்பேர்ப்பட்ட வளர்ச்சி இது… சான்ஸே இல்ல… மிகவும் சந்தோஷமா இருக்கு ஹரி!” என்றவளிடம்…

“இந்த ப்ளோரில் ரிசெர்ச் அண்ட் டெவலப்மென்ட் பகுதி மட்டும் இருக்கு… இங்கே ஐம்பத்துநான்கு பேர் வேலை செய்யறாங்க… மேலே உள்ள தளத்தில், நிர்வாகம் மற்றும் அக்கௌன்ட்ஸ் பிரிவுகள் இருக்கு… பேக்டரி தனியாக இருக்கிறது…

இது இல்லாமல் அப்பாவின் ஆர் கே எண்டர்ப்ரைசஸ் நிறுவனத்தை விரிவு செய்திருக்கிறேன்… அது தனியாக திருவள்ளூரில்… அதே இடத்தில இருக்கு… என் வீடும் அதே இடத்தில்தான் இருக்கிறது… என்று சொன்னவனின் குரலில்… நீ நினைத்திருந்தால் என்னை நேரில் வந்து சந்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டு அப்பட்டமாகத் தெரிந்தது…

அதற்குள் பணியாளர் ஒருவர்… அவளுக்கு ஹாட் சாக்கலேட்டும்… அவனுக்குக் காபியும் வைத்துவிட்டுச் செல்ல…

“வாவ்! நான் ஹாட்சாக்கலேட்தான் சாப்பிடுவேன்னு இன்னும்நினைவில் வைத்திருக்கீங்க… தேங்க்ஸ்.” என்ற ஸ்வேதா தொடர்ந்து… “ஆனால் நான் இந்தக் காபியை எடுத்துக்கறேன்…” என்று அதை எடுத்துக்கொள்ள…

ஹரி… “ஹேய்… உனக்குத்தான் காபி பிடிக்காதே…” என்க..

“இல்ல இப்பொழுதெல்லாம் நான் காபி சாப்பிடுகிறேன்… அதுவும் இந்த நேரத்தில் காபி சாப்பிடவில்லை என்றால் தலை வலி வந்துவிடும்..” என்று காபியை எடுக்க…

“ஆனால் இது அதிக ஸ்ட்ராங்காக… சர்க்கரை குறைவாய் கசப்பாக இருக்கும்… இரு உனக்கு வேறு சொல்கிறேன்” என்ற ஹரியிடம்…

“இல்ல நானும் இதைப் போன்ற காபிதான் சாப்பிடுவேன்… நீங்க உங்களுக்கு வேறு காபி சொல்லிடுங்க…” என்றவளை விசித்திரமாகப் பார்த்தவன்…

தோள்களை குலுக்கி “ஓகே… எனக்கு இதுவே போதும்” என்று அந்த சாக்கலேட் பாணத்தை எடுத்துப் பருக… இப்போது வியப்பது  ஸ்வேதாவின் முறையானது…

அவளின் வியந்த பார்வையில் லயித்தவனாக… ஹரி… “ஸ்வேதா! நீ அவசரமாக எங்கேயாவது போகணுமா?’ என்று கேட்க…

“அவசரம்னு எதுவும் இல்லை… தாம்பரம் பாஸ்போர்ட் ஆஃபீஸ் போகணும்…” என்று ஸ்வேதா இழுக்க…

“சரி நீ அங்கே போய்விட்டு, வேலை முடிந்ததும் எனக்கு மெசேஜ் பண்ணு… நான் உன்னை அங்கேயே வந்து பிக் அப் செய்துகொள்கிறேன்…

உன்னை ஒரு முக்கியமான இடத்திற்கு அழைத்துப் போகலாம் என்று நினைக்கிறேன்…” எனச் சொன்ன ஹரியை யோசனையாகப் பார்த்த ஸ்வேதா.

அவனுடைய செய்கை பேச்சு என எல்லாமே விசித்திரமாகவே இருக்கவும்… அவனுடன் செல்ல அவளுக்குக் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. எனவே அவனைத் தவிர்க்கும் பொருட்டு…

“இல்லை ஹரி! அங்கே கொஞ்சம் தாமதம் ஆனாலும் ஆகலாம்… நான் வேறு ஒரு நாள் வரட்டுமா?” என அவள் கேட்க…

“நீ எப்பொழுது என்னுடன் வருவாய்? ஆறு மாதத்திற்குப் பிறகா?” என்று அவன் சற்று குரலை உயர்த்திக் கேட்கவும்…

இன்னும் ஆறு மாதம் அவளது பி.ஹெச்.டி. படிப்பு மீதம் இருக்கிறது. அடுத்த வாரத்திலேயே அவள் அமெரிக்கா செல்ல வேண்டி இருந்தது… “அது இவனுக்கு எப்படித் தெரியும்?” அதிர்ந்தாள் ஸ்வேதா…

அவள் நினைத்ததை அவனிடம் கேட்பதற்குள்… கொஞ்சம் தணிந்திருந்தவன்… “இப்பொழுதே என்னுடைய பாக்டரிக்கு என்னுடன் வா… பிறகு உன்னை வீட்டில் விடுகிறேன்…”

“பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு நீ போகத் தேவை இல்லை… விவேக்கிடம் எல்லாத் தகவலையும் கொடுத்துவிடு அவர் பார்த்துக் கொள்வார்…” என்று கட்டளையாகவே அனைத்தையும் சொல்லி முடித்தான் ஹரி.

“இவன் என்ன… நம்மை இப்படி டாமினேட் பண்றான்! ஓ மை காட்!” என்று மனதில் எண்ணினாலும்…

மேலும்…ஏதும் மறுத்துக் கூறத் தோன்றாமல்…  அவனுடன் தொழிற்சாலைக்குச் சென்றாள் ஸ்வேதா…

ஒரகடம் பகுதியில் பல ஏக்கர் பரப்பளவிலான தொழிற்சாலையை நிறுவியிருந்தான் ஹரி…

மூவாயிரம் தொழிலாளர்களுக்குமேல் வேலை செய்யும் மிகப் பிரும்மாண்டமான தொழிற்சாலை… அதி நவீன இயந்திரங்கள்… எனப் பிரமிப்பாக இருந்தது அவளுக்கு… தொழிலாளர்களுக்கான… உணவுக் கூடம்… மருத்துவமனை… என எல்லா வசதிகளும் செய்யப்பட்டு… மிக நேர்த்தியுடன் பராமரிக்கப்பட்டிருந்தது…

‘விஜயா சாரிடபிள் டிரஸ்ட்’ என்ற பெயரில், அங்கே வேலை செய்யும் தொழிலாளர்களின் குழந்தைகளுடைய படிப்பிற்கு எனத் தனியாக உதவிகள் செய்து கொண்டிருந்தான்…

மகிழ்ச்சியுடன் ஒவ்வொரு இடத்தையும் அவளுக்குக் காண்பித்து… ஹரி விளக்கிக்கொண்டே வர… ஸ்வேதா வியப்புடன் அனைத்தையும் மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருந்தாள்…

அவனைக் காணும் பொழுது… அங்கே வேலை செய்பவர்கள் ஒவ்வொருவரின் கண்களிலும் அவ்வளவு மரியாதைத் தெரிந்தது…

அங்கே இருந்த அவனுடைய அலுவலக அறைக்கு அவளை அழைத்துச் சென்ற… அங்கேயே உணவு வரவழைக்க… இருவரும் உண்டு முடித்தனர்.

பிறகு ஸ்வேதாவை அழைத்துக்கொண்டு போய் அவளது குடியிருப்பின் வாயிலிலேயே அவளை விட்டுவிட்டு அவன் கிளம்ப எத்தனிக்க …

“வீட்டுக்கு வாங்க ஹரி… உங்களைச் சந்தித்தால் அம்மா சந்தோசப்படுவார்கள்…” என்று ஸ்வேதா அழைக்க…

அதற்கு ஹரி… “இன்னும் ஒருமணி நேரத்திற்குள் நான் ஏர்போர்ட்டில் இருக்க வேண்டும் ஸ்வேதா. துபாய் போகிறேன்… இன்னும் நான்கு நாட்களில் திரும்ப வந்துவிடுவேன்… பிறகு கண்டிப்பாக உன்னுடைய அப்பாயின்மென்ட்… எனக்குத் தேவைப்படும்” என்க…

அதில் வியப்பின் உச்சிக்கே போய்விட்டாள் ஸ்வேதா…

முதல்நாள் நள்ளிரவில்தான் அவன் வெளிநாட்டிலிருந்து திரும்பியிருந்தான் என்பதை அவனுடைய உதவியாளர் விவேக்குடனான அவனது உரையாடல் மூலம் அவள் அறிந்திருந்தாள்.

“அன்று முழுவதும் அவளுடன்தான் இருந்திருக்கிறான்!”

“அன்றைக்கே மறுபடி… துபாய்க்குத் திரும்புகிறான் என்றால்?”

“ஆக… அவளைச் சந்திக்க மட்டுமே அவன் இங்கே வந்திருக்கிறானா?”

 

‘அப்படியானால் அவனுடைய திருமணம்?” யோசனையுடன் நின்றிருந்தவள்… “ஸ்வேதா ஒரு நிமிஷம்!” என்ற ஹரியின் அழைப்பில்… ஸ்வேதா… கேள்வியுடன் அவனுடைய முகத்தைப் பார்க்க…

“இப்ப சொல்லு… நான் எப்படி இருக்கிறேன்?… சிங்கத்தின் வால் போலவா? இல்லை எலியின் தலை போலவா?” என்றவனின் கேள்வியில்…

அவளது கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைத்த மகிழ்ச்சியில்… கண்கள் மின்ன, “உங்கள் பெயருக்கு ஏற்றார் போல சிங்கம் மாதிரி!!! ஹரி என்றால் சிங்கம் என்றும் ஒரு மீனிங் இருக்கு தெரியுமா!!!” என்று பெருமைப் பொங்கும் குரலில் சொன்னாள்… ஸ்வேதா.

error: Content is protected !!