O Crazy Minnal(5)

O Crazy Minnal(5)

5

 

கதிரவன் விழித்துப் பல மணி நேரமாகியிருந்தது. ஆனால் இன்னமும் விழிக்காமல் அந்த மெத்தையில் உருண்டு கொண்டிருந்தாள் அஷ்மி.

இரவு தாமதமாக உறங்கியதின் பலன், இன்னும் எழவில்லை.

நிம்மதியான உறக்கத்தைக் கெடுக்கும் வகையில் கதிரவன் அவன் கரங்களைத் திறந்திருந்த யன்னல் வழியாக நீட்டி இவளது கன்னத்தை வருட, அதில் அவளது தூக்கமோ ஊசலாடிக் கொண்டிருந்தது.

 

‘ப்ச்..’ என்றவாறு மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொள்ள, இப்பொழுது அமுதமாக அவள் செவியில் இறங்கியது அந்த குழலோசை!

அது அவளது ரிங்டோன்.

இமைகளைப் பிரிப்பதே பிரம்ம ப்ரயத்தினமாக இருக்க, கண்களை திறவாமலேயே கையால் துழாவி ஃபோனை எடுத்தவள் இடது கண்ணை மட்டும் லேசாகத் திறந்து பார்க்க அதிலோ ‘இஞ்சி’ என்ற பெயருடன் அவளது அருமை தங்கை குறிஞ்சி யாழ் கண்ணடித்து கொண்டிருந்தாள்.

பச்சையை இழுத்தவள் மறுபடியும் கண்ணை மூடிக்கொண்டு அதைக் காதில் வைத்தாள்.

 

“சொல்லு இஞ்சி!”

 

“தூங்கறியா அஷ்மி?” என அதில் கடுப்பாகிப் போனவள்

 

“இல்ல துணி தொவைக்கறேன்.. என்ன தூங்க விட்டியா நீ நேத்து?” என்று பொங்கிவிட்டாள் அஷ்மி.

 

“இதுக்கே கோச்சிக்கிட்டா எப்படி அஷ்மி.. மை பட்டுகுட்டில அப்டியே கைய நீட்டினா டேபிள்ல லேப்டாப் இருக்குமாம் அதுல இருந்து நீ எனக்கொரு ஃபைல அனுப்புவியாம்.. நான் உனக்கு வரும்போது குச்சிமிட்டாய் வாங்கிட்டு வருவேணாம்..” என்று சொல்லிக் கொண்டே போக, அஷ்மிதாவின் தூக்கம் மொத்தமும் காற்றில் பறந்திருக்க எழுந்தமர்ந்தவள்,

 

“அப்போ நீ வீட்ல இல்லையா?”

 

“எப்டி இவ்ளோ ப்ரில்லியண்ட்டா இருக்க அஷ்மி?” என்ற பின்னரே ‘ச்சே வீட்ல இருந்தா ஏன் ஃபோன் பண்ணப்போற?’ என்ற ஞானோதயம் பிறக்க

 

“ஹீ.. ஹீ.. சாரி இஞ்சி தூக்க கலக்கத்துல.. அது சரி நீ வாலண்ட்டியர்தானே? அப்பறம் என்ன?”

 

“நான் வாலண்ட்டியர்தான்.. பட் இன்னைக்குதான் சபா மேம் ஃப்ரீயா இருப்பாங்க, அதான்.. நான் ஆட்டோ ஏறப்போறேன் அஷ்மி இல்லன்னா நானே வந்து எடுத்துப்பேன்.. ஆனா லேட் ஆகிடும்”

 

“சரி.. ஓகே இஞ்சி ஒரு டூ மினிட்ஸ் குடு நான் அனுப்பறேன்” என்று வைத்தவள் முதல் வேலையாக அதை அனுப்பிய பின்னே மெத்தையை விட்டுக் கீழிறங்கினாள்.

 “லலலலலா.. லல்லலலலலா..” என்று பாவாடையை இருக்கைகளாலும் பிடித்து கொண்டு அடுக்களைக்குள் நுழைந்தவளை லீலா வினோதமாக பார்க்க, அவளோ சிரித்து கொண்டே

 

“ஸைட் எஃபக்ட்ஸ் ஆஃப் இஞ்சி!” என்றுவிட்டு அங்கொரு முக்காலியை இழுத்துப் போட்டு அமர, ஆவி பறக்கும் காபியை அவள் கையில் திணித்தார் லீலா.

 

“நைட் எப்போ தூங்கினே?”

 

“தூங்கின இல்ல.. தூங்கினீங்கன்னு கேளு. இரண்டு மணி வரைக்கும் பேசிருக்கா, காலைலயும் எழுப்பிவிட்டுட்டா”

 

“இரு அவ வரட்டும். இவ்வளவு லேட்டா தூங்கி லேட்டா எழுந்தா உடம்பு என்னத்துக்காகும்”  என்று ஒரு தாயாக அவர் வருந்த அவரை தோளோடு சேர்த்தணைத்துக் கொண்டவள்

 

“அம்மா.. அதெல்லாம் ஒன்னுமில்லம்மா எனக்கு இன்னைக்கு லீவ் தானே.. அது மட்டுமில்லாம அவ எல்லா விஷயத்தையும் என்கிட்டதான் ஷேர் பண்ணிப்பா அதான் பேசிட்டே இருந்ததுல நேரம் போனதே தெரியல. என்னைக்காவதுதானே” என்றவளைப் பார்த்தவர்

 

“அதுதானே! நீ என்னைக்கு விட்டு குடுத்துருக்க? சரி எதாவது சாப்பிடறீயா.. வெறும் வயத்தோட எவ்வளவு நேரம் இருப்ப?” என்றெழ

 

“ஃப்ரெஷாகிட்டு வரேன்மா” என்று அவர்களறைக்குச் சென்றாள்.

அவள் குளியலறையிலிருந்து வெளியே வரவும் ஃபோன் பாடவும் சரியாக இருந்தது.

 

‘யாருடா அது நம்மல தேடுறது?’ என்று எட்டிப் பார்க்க அதிலோ நரேந்திரன் என்ற பெயர் மட்டும் ஒளிர்ந்து கொண்டிருந்தது. ‘இவன் எதுக்கு இப்போ கூப்பிடறான்’ என்றெடுத்தாள்.

“ஹலோ நரேன்!”

 

“ஹலோ அஷ்மிதா! ஃப்ரீயா?”

 

“ஹான்.. சொல்லு நரேன்”

 

” இல்ல அந்த கான்ஃப்ரன்ஸ்காகத்தான்.. நீ ஃப்ரீயாகிட்டு சொல்லு அஷ்மி” எனச் சற்று சிந்தித்தவள் பின்

 

“ஒரு நிமிஷம் நரேன்” என்றுவிட்டு ஹாலிற்கு வர லீலா அந்த செய்தித்தாளை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தார்.

 

“அம்மா என் க்ளாஸ்மேட் நரேந்திரன் தெரியும்லமா?”

 

“ஆமாடா நீயும் அந்த பையனும்தானே பார்ட்டிஸிபேட் பண்ணப்போறீங்க?”

 

“ஆமாம் மா. அவன வீட்டுக்கு இன்வைட் பண்ணவா? டிஸ்கஷனுக்கு.. இல்ல வேற எதாவது ப்ளான் இருக்காமா?”

 

“தாராளமா இன்வைட் பண்ணுடா. இன்னைக்கு எந்த ப்ளானுமில்ல” என்றுவிட

அவளும் நரேனிடம் ” நரேன் பேசாம வீட்டுக்கு வரியா? இன்னைக்கே டிஸ்கஷன் பார்ட முடிச்சிடலாம், அப்போதான் நமக்கு டைம் கிடைக்கும்” என்று விலாசத்தையும் அனுப்பிவிட அவனும் ஒரு மணி நேரத்தில் அங்கிருப்பேன் என்றிருந்தான்.

***************

ஆட்டோவில் அமர்ந்திருந்த புவனும் குறிஞ்சியும் ஒருவரின் கையை மற்றவர் இறுக்கமாகப் பற்றியிருக்க, குறிஞ்சியோ மனதிற்குள் ‘கடவுளே! நல்லபடியா காலேஜ் போய் சேர்ந்தா இந்த புவனுக்கு நாலு டைரி மில்க் வாங்கித் தரேன்பா’ என்று வேண்ட, புவனா அந்த ட்ரைவர் அண்ணன் ஓட்டிய விதத்தில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். இடையில் குறிஞ்சியிடம் வேறு ‘நான் பாட்டுக்கு நேரா காலேஜுக்கே வந்திருப்பேன்.. இப்படி என் உசுரோட விளையாடறீயே’ என்று பார்க்க இவளோ ‘நண்பேன்டா!’ என்ற லுக்விட புவன வெறுத்துவிட்டாள்.

 

கடைசியாக  அவர்களது காலேஜின் பக்கத்திலிருக்கும் பேக்கரி வர அங்கேயே நிறுத்திவிடும்படி கூறி இறங்கினர்.

 

அவர் நிறுத்திய மறு வினாடியே இருவரும் அடித்து பிடித்து இறங்கியிருந்தனர். ஜெய்ன்ட் வீலில் நாலைந்து முறை சுற்றியது போலிருக்க முதலில் தெளிந்தது புவனாதான். மீட்டரைப் பார்த்துவிட்டு அவள் பர்சை தேட குறிஞ்சி அவரிடம்,

 

“நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல.. ஹாலிவுட்ல இருக்க வேண்டியவரு! நியாயப்படி பார்த்தா ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ்ல நீங்கதான் நடிச்சிருக்கனும்..” என்று சொல்லி கொண்டே போக அந்த ஓட்டுநரோ புரியாதப் பார்வைப் பார்த்தார் என்றால், இவள் சொன்னது புரிந்த புவனாவோ ‘அடியாத்தி வில்லங்கத்த வீட்டுக்கே கூப்பிடறாளே!’ என்று பதறி, சில்லறைகூட வாங்காமல் இவளை இழுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

 

“ஹே புவி!” என்று யாரோ அழைக்கத் திரும்பிப் பார்த்தால் அது அவளது பழைய ட்யூஷன் நட்பு!

 

“ஒரு நிமிஷம் மேடி!” என்றுவிட்டு அவள் செல்லவும்

 

” ம்ம்ம் சரி..”என்று திரும்பவும் அவள் ஃபோன் சிணுங்கவும் சரியாகவிருக்க, அதைப் பார்த்தவள் பாவம் அந்த பேக்கரியில் இருந்து வெளியில் வந்தவனைக் கவனிக்கவில்லை!

 

வெளியே வந்தவனோ ஏதோ சிந்தனையில் வலதுபுறம் திரும்பியபடியே பின்னால் இரண்டு அடியெடுத்து வைக்க, இவளும் புவனா சென்ற திசையைப் பார்த்துக் கொண்டே திரும்ப, அவன் மேல் மோதி கீழே விழுந்தாள். ஹீரோயின் விழும்போது டைமிங்கில் தாங்கிப் பிடிக்க இது என்ன படமா? அதனால்தானோ என்னவோ இடித்த வேகத்தில் அவள் தரையில் லான்ட் ஆகியிருந்தாள்.

கையில் பெரிய அளவிலான கேக் டப்பாவுடன் நின்று கொண்டிருந்தவனுக்கோ, முதலில் அவளைப் பார்த்த அதிர்ச்சி இருக்க, அவள் கீழே விழுந்த பின்னரே “அய்யோ சாரிங்க!” என்றவளுக்கு கை கொடுக்க, அவர்கள் அருகிலிருந்த ஒரு சிலரும் உதவ முன்வர, எல்லோரையும் ஒரு தாங்க்ஸுடன் தவிர்த்தவள் தானே எழுந்து நின்று அவனைப் பார்த்த பார்வையில் ஆயிரம் ஆட்டம் பாம்கள்!

 

 அவள் அவனை பார்வையாலேயே குழி தோண்டிப் புதைத்து கொண்டிருக்க, அங்கு வந்த புவனா, “பெல்லடிச்சிட்டாங்க! வா மேடி போகலாம் லேட்டாச்சு!” என்று இழுத்துச் சென்றாள். அவன் கண்களுக்கு புவனா அவன் குல தெய்வமாகத் தெரிந்தாள் என்றால் அது மிகையல்ல!

 

அஷ்மிதாவிடம் பேசிய பின் அவள் வீட்டிற்குக் கிளம்பியவனை அவன் நண்பன் என்ற பெயரில் ஒருவன் அழைத்திருந்தான். இவன் இருக்கும் இடத்தை அறிந்தபின்,  இவனிடமே ஆர்டர் கொடுத்திருந்த கேக்கை வாங்கி விடும்படியும் போகும் வழியில் அவன் வந்து எடுத்துக் கொள்வதாகவும் கேட்டிருக்க இவனும் சரியென்று வந்திருந்தான்.

 

ஆனால் அவளைச் சந்தித்தது அவன் எதிர்பாராத ஒன்று!

 

நண்பனை அழைத்தவன் அவன் சொல்லிய இடத்தில் கேக்கை கொடுத்துவிட்டு அஷ்மி அனுப்பிருந்த அட்ரஸை நோக்கி வண்டியைத் திருப்பினான்.

 

அது சில பல திருப்பங்களுக்குப் பின் ஒரு முட்டுச் சந்தில் கொண்டு போய் சேர்க்க, மறுபடியும் அவளுக்கே அழைத்து வழி கேட்டு, என்று பல வீர தீர செயல்களுக்குப் பின்னே அவன் அந்த கோட்டையை.. சாரி வீட்டை அடைந்தான்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!