paadal thedal- 9(1)

paadal thedal- 9(1)

9

நட்பின் பயணம்

ஜானவியின் சிந்தனையில் முழுக்க முழுக்க அன்புச்செல்விதான் நிறைந்திருந்தாள். தாயில்லாத அந்த குழந்தையின் மனதை தான்  வேதனைப்படுதிவிட்டோமே என்று அவள் மனம் கலங்கியது. அதே நேரம் தான் செய்த தவறை தானே சரி செய்துவிட வேண்டும் என்று முடிவு செய்தாள்.

கிரிஜா சொன்னது போலவே காலையிலேயே மீனாவை ஜெகனுடன் அனுப்பிவிட்டிருந்தாள். அதன் பின் ஜானவி மகளுக்கு  பள்ளி சீருடை அணிவித்து, தன்னுடைய மற்ற வேலைகளையும் முடித்துவிட்டு மகளை பள்ளிக்கு அழைத்து செல்ல தயார் நிலையில் இருந்தாள்.

அதேநேரம் செழியனும் அன்புச்செல்வியை  பள்ளிக்கு அழைத்து செல்ல வேண்டி தன் வீட்டிலிருந்து வெளியே வர, ஜானவியும் தன் மகளை அழைத்து கொண்டு வெளியே வந்தாள்.

அன்புச்செல்வியின் முகத்தில் ஒருவித சோர்வு படர்ந்திருந்தது. அதேநேரம் மீனாவிற்கோ அவர்கள் இருவரும் மீண்டும் சண்டை போட்டு கொள்ள போகிறார்களோ என்ற ஆர்வம், அச்சம் இரண்டுமே மிகுந்தது.

ஆனால் செழியனுக்கு எந்தவித சிந்தனையும் இல்லை. அவன் தன் மகளை பள்ளிக்கு அழைத்து செல்வதில் மட்டுமே கவனமாக இருந்தான். அதுவும் நேற்று ஜானவி அவன் பேசியதற்கு எதுவுமே பதிலுரைக்காத காரணத்தால் அவள் மனதில் என்ன இருக்கிறது என்று அவனுக்கு பிடிப்படவில்லை.

ஆதலால் செழியன் எந்தவித எதிர்பார்ப்புமின்றி தன் மகளை அழைத்து கொண்டு படிக்கெட்டில் இறங்க போக அவர்கள் கடந்து செல்வதற்கு முன்னதாக ஜானவி முந்தி கொண்டு, “ஒரு நிமிஷம்” என்று அவனை தடுத்து நிறுத்தினாள்.

மீனாவோ, “நிச்சயம் சண்டை கன்ஃபார்ம்” என்று எண்ணி கொண்டாள்.

ஆனால் நடந்தது எல்லாம் அவள் எண்ணத்திற்கு முற்றிலும் நேர்மார். செழியன் நின்று ஜானவியை பார்க்க அவளோ அன்புச்செல்வியிடம் மண்டியிட்டு, “ஐம் சாரிடா கண்ணா… இனிமே எப்பவும் நான் மீனாகிட்ட… உன் கூட பேச கூடாதுன்னு சொல்ல மாட்டேன்” என்று அவள் மன்னிப்பு கேட்கும் பாணியில் காதுகளை பிடித்து கொண்டு கெஞ்சலாக சொல்ல,

மீனா தன் அம்மாவின் செய்கையை அதிசயித்து பார்த்து கொண்டிருந்தாள்.

அன்புச்செல்வியோ சந்தோஷ மிகுதியில், “நிஜமாவா?” என்று கேட்க,

“நிஜமா” என்று அழுத்தி கூறிய ஜானவி, “இனிமே நீங்க எப்பவுமே பிரெண்ட்ஸ்… ஓகே தானே?” என்று சொல்லி மீனாவை அன்புவின் அருகில் நிறுத்தினாள்.

அந்த குழந்தைகள் இருவரின் முகத்திலும் அத்தனை சந்தோஷ பூரிப்பு. ஜானவி அப்போது, “ரெண்டு பேரும் இப்ப இல்ல… எப்பவுமே பிரெண்ட்ஸாதான் இருக்கணும்… யாருக்காகவும் எதுக்காகவும் சண்டை போட்டுக்க கூடாது… ஓகே… இப்ப கை குடுத்துக்கோங்க” என்றாள்.

அவர்கள் இருவரும் ஆர்வமாக கைகுலுக்கி கொண்டனர். ஜானவி அவர்கள் இருவரின் கன்னங்களிலும் முத்தம் பதித்தாள். அந்த காட்சியை பார்த்து கொண்டிருந்த செழியனுக்கு வார்த்தைகளே வரவில்லை. ஜானவியின் இந்த மாற்றம் செழியனை  ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அதேநேரம் மகளின் களிப்பு அவனை இன்பத்தில் திளைக்க செய்தது.

ஜானவி அதன் பின் எழுந்து நின்று செழியனை பார்க்க, அவனுக்கு அந்த நொடி அவளிடம் என்ன பேசுவதென்றே புரியவில்லை.

“செழியன்” என்ற அவளின் இயல்பான அழைப்பு அவனை மீண்டும் வியக்க செய்தது.

“சாரி… நான் உங்ககிட்ட ரொம்ப ஹார்ஷா” என்று அவள்  சொல்லி கொண்டிருக்கும் போதே, “சாரி எல்லாம் வேண்டாங்க… நீங்க இப்போ செஞ்ச விஷயமே போதும்… அன் தேங்க்ஸ் டூ… என்னை செழியன்னு கூப்பிட்டு பேசனதுக்கு” என்றான்.

“இனிமே நீங்களும் என்னை ஜானவின்னே  கூப்பிடலாம்” என்றாள் அவள் மலர்ந்த முகத்தோடு!

செழியன் அவள் சொன்னதை கேட்டு புருவங்களை நெரித்து, “ஷுவரா?” என்று கேட்க, ஜானவியின் இதழ்கள் இயல்பை விட கொஞ்சம் அதிகமாக விரிய அவள், “ஹ்ம்ம” என்றபடி  தலையசைத்து சிரித்தாள்.

இந்த கண்கொள்ளா காட்சியை பார்த்து அந்த இரண்டு குட்டி வாண்டுகளும் ரசித்து லயித்த அதேநேரம் மீனா அவர்கள் இடையில் வந்து நின்று, “அப்போ நீங்க இரண்டு பேரும் இனிமே சண்டை போட்டுக்க மாட்டீங்களா?” என்று கேட்டாள்.

ஜானவி சிரித்துவிட செழியன் மீனாவை பார்த்து, “சண்டை எல்லாம் போட்டுக்க மாட்டோமா தெரியல… ஆனா இப்போதைக்கு பிரெண்ட்ஸ் ஆயிட்டோம்” என்க,

“நிஜமாவா ம்மா” என்று மீனா தன் அம்மாவிடம் உறுதிப்படுத்தி கொள்ள கேட்டாள்.

“ஆமா” என்று ஜானவி மகளிடம் சொல்ல, “அப்போ ரெண்டு பேரும் கை குடுத்துக்கோங்க” என்று ஜானவி சொன்ன வாக்கியத்தை அவளுக்கே மீனா அச்சுபிசகாமல் உரைத்தாள்.

ஜானவி முகத்தில் புன்னகை மறைந்து அவள் செழியனை திகைப்பாக பார்த்து கொண்டு நிற்க அன்புச்செல்வியும் மீனவோடு சேர்ந்து கொண்டு, “கை குடுங்க ப்பா” என்றாள் செழியனை பார்த்து.

“மீனு ஸ்கூலுக்கு நேரமாகுது… போலாம்” என்று ஜானவி சொல்ல மீனாதான் தெளிவான பிள்ளையாயிற்றே.

“கையை கொடுக்க எவ்வளவு நேரம் ஆக போகுது… கை குடுங்க ம்மா” என்று தன் அம்மாவிடம் சொல்ல

செழியன் சிரித்த முகத்தோடு ஜானவியை பார்த்து, “கையை கொடுத்துப்போம் ஜானவி… இல்லாட்டி போனா… நம்ம பசங்க இந்த ஒரு விஷயத்தை பிடிச்சிக்கிட்டு… ஏன் நம்ம கையை கொடுத்துக்கலன்னு கேள்வி மேல கேட்டே நம்மல ஒரு வழி பண்ணிடுவாங்க” என்றான்.

“அதுவும் கரெக்ட்தான்” என்று ஜானவியும் புன்னகைத்து அவன் கரத்தோடு கரம் கோர்த்து கொண்டாள்.

அவர்கள் நட்பின் பயணம் அங்கிருந்து தொடங்கி உறவாக மாறி அவர்கள் வாழ்கையின் இறுதிவரை தொடர போவதை அவர்களே அறிய மாட்டார்கள்.

குழந்தையையும் தெய்வமும் ஒன்று என்பது போல் அன்பு மீனாவின் செயல் தீர்க்கதரிசனம்தான்.

அதன் பின் ஒரு மாத காலம் எப்படி கடந்து சென்றது என்றே  தெரியாமல் ஓடிவிட ஜானவிக்கு அந்த இடம், வேலை, தனிமை என எல்லாமே நன்றாக பழகி போனது. செழியனையும் சேர்த்து!

இருவரும் பார்க்கும் போதெல்லாம் இயல்பாக ஒரு புன்னகை, அவசியம் ஏற்பட்டால் பேசி கொள்வது என்று அவர்கள் நட்பு சுமுகமாக இருந்தது. ஆனால் அன்புச்செல்வி மீனாவின் நட்பு நாளாக நாளாக ரொம்பவும் நெருக்கமாக மாறியிருந்தது.

அன்பு மீனாவின் வீட்டில் விளையாடுவதும் மீனா அன்புவின் வீட்டில் படிப்பதும் என்று அவர்கள் இருவருக்கும் எல்லாம் ஆனந்தமயம்தான். குழந்தைகளுக்கு தங்கள் வயதை ஒத்த நண்பர்கள் கிடைத்தால் போதுமானது. இருவரும் இறக்கையில்லா பட்டாம்பூச்சிகளம்தாம்!

இதற்கிடையில் ஜானவியை அவள் வீட்டிலிருந்து அவ்வப்போது வந்து பார்த்து கொண்டிருந்தனர். ஆனாலும் ஜானவி ஒருமுறை கூட அங்கே போகவில்லை. மீனாவிற்கும் அன்புச்செல்வியை விட்டு பிரிய மனதே இல்லை. ஆதலால் தன் அம்மம்மா வீட்டிற்கு போகும் ஆர்வம் அவளுக்கும் குன்றிவிட்டது.

இடையில் ஒரு முறை சங்கரனும் கிரிஜாவும் கூட வந்திருந்தார்கள். ஜானவியை அழைத்தும் பார்த்தார்கள். ஆனால் அவள் தன்னிலையில் இருந்து கிஞ்சிற்றும் அசைந்து கொடுக்கவில்லை.

அவர்கள் பார்வைக்கு தெரிந்தது ஜானவியின் வீம்பும் பிடிவாதமும்தான். ஆனால் அதை தாண்டி அவளுக்குள் இருந்த வலி, ஏமாற்றம், சோகம், கண்ணீர் எதுவும் அவர்கள் பார்வைக்கு புலப்படவில்லை.

இதுநாள் வரை அவர்களின் எண்ணமோ மகள் தனியாக பேத்தியை வைத்து கொண்டு சமாளிப்பது கஷ்டம். விரைவாக அவளே திரும்பி வந்துவிடுவாள் என்றுதான் எதிர்பார்த்தார்கள். ஆனால் நடந்தது முற்றிலும் வேறு.

ஜானவியும் மீனாவும் தனியாக இருக்க பழகி கொண்டனர். ஒரு வகையில் அதற்கு செழியனும் அன்புச்செல்வியும் காரணம்.

நடப்பவை அனைத்தும் சுமுகமாகவே இருந்தாலும் சந்தானலட்சுமிக்கு ஜானவியையும் மீனாவையும் அவ்வளவாக பிடிக்கவில்லை. முதல் பார்வையில் உண்டான வெறுப்பு மாறாமல் அவருக்குள் அப்படியே தேங்கியிருந்தது. அதுவும் மீனா இயல்பாகவே சேட்டை அதிகம் செய்பவள்.

அவள் செழியன் வீட்டில் அன்புவுடன் விளையாடும் போது ஏதாவது எடாகுடமாக செய்துவிட சந்தான லட்சுமி அவளிடம் எரிந்துவிழுவார். மீனாவோ சிறிதும் கலங்காமல் பதிலுக்கு பதில் பேசி அவரை கலங்கடித்து விடுவாள்.

“உனக்கு அமைதியாவே விளையாட தெரியாதா?” என்றவர் கோபமாக கேட்க,

“அமைதியா எப்படி விளையாடுறது பாட்டி” என்று மீனா தன் மழலையோடு பதில் கேள்வி கேட்டாள்.

“உனக்கு ஒன்னும் நான் பாட்டி இல்ல” என்றுசந்தான லட்சுமி கடுப்பானார்.

“நீங்க பார்க்க ஆன்ட்டி மாறி கூட இல்லையே… பாட்டி மாறித்தான் இருக்கீங்க” என்ற மீனாவின் பதிலை கேட்டு, அங்கிருந்த பாண்டியன் விழுந்து விழுந்து சிரித்துவிட சந்தானலட்சுமியின் கோபம் இன்னும் அதிகரித்தது.

“இது ஒன்னும் அவ்வளவு பெரிய ஜோக் இல்ல… வாயை மூடிறீங்களா?” என்று கோபமாக கணவனை மிரட்டிவிட்டு அவர் உள்ளே சென்றுவிட்டார். இது இப்படியாக தினமும் நடக்கும் காட்சிகள்தான்.

மீனாவிற்கு வயதை தாண்டிய குறும்புத்தனமும் முதிர்ச்சியும் இயல்பாகவே கொஞ்சம் அதிகம்தான். இதனால் பாண்டியனுக்கு நன்றாக பொழுதுபோனது.

இந்த நிலையில் ஜானவி ஒரு முறை சந்தானலட்சுமியிடம் வாயை கொடுத்து வகையாக சிக்கி கொண்டாள்.

ஒருமுறை ஜானவி அன்பு வீட்டில் விளையாடி கொண்டிருந்த மீனாவை அழைத்து வர சென்ற போது சந்தான லட்சுமியிடம், “உங்களுக்கு வீட்டு வேலை செய்றவங்க யாராச்சும் தெரியுமா ஆன்ட்டி?” என்று கேட்டுவிட,

“என்னை பார்த்தா வீட்டு வேலைக்கு ஆள் வெச்சு செய்ற மாறியா இருக்கு?” என்று படுஎரிச்சலாக கேட்டார் சந்தானலட்சுமி.

“ஏன்… வைச்சு செஞ்சா என்ன? நீங்க எக்கனாமிக்கலா நல்லாத்தானே இருக்கீங்க” என்று பதிலுக்கு ஜானவி கேட்க,

“ஹ்ம்ம்… பொறுபில்லாதவங்கதான் வீட்டுக்கு ஆள் வைச்சு வேலை செய்வாங்க… நானெல்லாம் வேலைக்கு போன காலத்தில கூட என் வீட்டு வேலையை நான்தான் செஞ்சேன்” என்று அவர் பெருமையாகவும் கர்வமாகவும் கூற,

“அப்படியா லட்சு?” என்று அங்கே இருந்த பாண்டியன் மனைவியை கிண்டல் செய்யும் விதமாக கேட்க,  ஜானவிக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்துவிட்டது.

சந்தானலட்சுமி கணவரை முறைத்து பார்க்க அவர் உடனே மனைவியை சமாளிக்க வேண்டி, “அந்த டைம்ல நானும் உனக்கு ஒத்தாசைக்கு வேலை செஞ்சேன்னு சொல்ல வந்தேன் லட்சு” என்றார்.

ஆனால் சந்தான லட்சுமி கோபம் இறங்கியப்பாடு இல்லை.

‘உங்களை அப்புறம் வைச்சுக்கிறேன்’ என்று கணவனை கண்ஜாடையால் மிரட்ட ஜானவியோ அதற்கு மேல் அங்கே நிற்க கூடாது என்ற முடிவோடு, “சரிங்க ஆன்டி… எனக்கு வேலை இருக்கு… மீனு வா” என்று மகளை அழைத்து கொண்டு சென்றுவிட்டாள்.

சந்தானலட்சுமி கணவரை நன்றாக முறைத்துவிட்டு உள்ளே சென்றுவிட பாண்டியன், ‘தப்பித்தோம்’ என்ற எண்ணத்தோடு வெளியே வந்தவர் ஜானவி வீட்டு வாயிலிற்கு வந்து நிற்க,

“வாங்க அங்கிள்… உள்ளே வாங்க” என்று அழைத்தாள் ஜானவி.

“இருக்கட்டும் ம்மா… வீட்டு வேலைக்கு ஆள் கேட்ட இல்ல… மேல் போஷன்ல என் பிரெண்ட் வீட்டில ஒரு பொண்ணு வேலை செய்ற… நான் அவன்கிட்ட பேசி உன்கிட்ட அந்த பொண்ணை பேச சொல்றேன்” என்றார்.

“தேங்க்ஸ் அங்கிள்” என்று ஜானவி முகம் மலர கூற,

“அப்புறம் என் மனைவி பேசுனதை பெருசா எடுத்துக்காத ம்மா… அவ அப்படிதான் துடுக்கா பேசுவா…. ஆனா மனசுல எதுவும் வைச்சுக்க மாட்டா” என்றார்.

“அதெல்லாம் நான் பெருசா எடுத்துக்கல அங்கிள்… இன்னும் கேட்டா அவங்களுக்கு என் மேல இருக்க கோபத்தில் நியாயம் இருக்கு … நான் வந்த புதுசுல… செழியன் பத்தி தெரியாம அவர் கிட்ட சண்டை போட்டுட்டேன்… தப்பு என் பேர்லதான்… எனக்கே அதை இப்ப நினைச்சு பார்த்தா ரொம்ப கில்டியா இருக்கு…

ஃபர்ஸ்ட் இம்ப்ரஷன் இஸ் ஆ பெஸ்ட் இம்ப்ரஷன்னு சொல்லுவாங்க… அந்த வகையில முதல் அறிமுகத்திலயே நான் மோசமா நடந்துகிட்ட விதம் அவங்க மனசுல ஆழமா பதிஞ்சிடுச்சு” என்றாள்.

ஜானவியின் இந்த தெளிவான பேச்சு பாண்டியனை வியப்புக்குள்ளாக்கியது. இவளா தன் மகனிடம் சண்டை போட்டிருப்பாள் என்று சந்தேகமே உண்டானது.

அதேநேரம் ஜானவியிடம் பேசியதில் பாண்டியனுக்கு அவள் மீது  ரொம்பவும் நன்மதிப்பும் உண்டானது. இதெல்லாம் ஒரு புறம் இருக்க சந்தானலட்சுமி ஜானவியிடம் சண்டை போட்டதை செழியன் வந்ததும் அப்படியே வத்தி வைத்துவிட்டாள் மீனா.

“எங்க அம்மா கிட்ட உங்க அம்மா சண்டை போட்டாங்க” என்று!

சந்தான லட்சுமியின் நிலைமை பரிதாபத்திலும் பரிதாபம். செழியன் அவரை வறுத்தெடுத்துவிட்டான்.

சந்தான லட்சுமி பக்கம் ரொம்ப வீக்! கணவரின் ஒட்டு கூட அவருக்கில்லை. அவருமே ஜானவிக்குத்தான் ஆதரவாக பேசினார்.

“ஓ! எல்லோருக்கும் அந்த வாயாடிதான் ஒசத்தியா போச்சா?” என்று சந்தான லட்சுமி சீற்றமாக கேட்க,

“ம்மா ஜானவி பத்தி அப்படி எல்லாம் பேசாதீங்க… அன்னைக்கு இருந்த சூழ்நிலையில அவங்க அப்படி பேசிட்டாங்க” என்று செழியன் சொல்ல,

“நீ அந்த பொண்ணுக்கு ரொம்பத்தான் சப்போர்ட் பண்ற… இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ” என்றவர் சொல்ல,

“ம்மா போதும்… இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுனீங்க… அப்புறம் அவ்வளவுதான்” என்று கண்டித்துவிட்டு சென்றான்.

சந்தான லட்சுமிக்கு மகன் பேசியதில் உள்ளுர பொருமி கொண்டார்.

“இவன் வந்ததும்… அந்த மீனா பொண்ணு கிட்ட பேசும் போதே நான் நினைச்சேன்… எல்லாம் அந்த வாயாடியோட வேலையாதான் இருக்கும்” சந்தானலட்சுமி செழியன் காதுக்கு எட்டாமல் மெதுவாகவே புலம்பி கொள்ள, இந்த வார்த்தைகள் அன்புக்குட்டியின் காதில் விழுந்துவிட்டது.

“என் பிரெண்ட் பத்தி எதாச்சும் சொன்னீங்க… அப்புறம் அவ்வளவுதான்” என்று தன் அப்பா பாணியில் அவளும் தன் பாட்டியை மிரட்டிவிட்டு போனாள். ‘இது உனக்கு தேவையா?’ என்று பாண்டியன் மனைவியை எள்ளலாக ஒரு பார்வை பார்க்க, சந்தானலட்சுமி முகம் சுருங்கிப்போனது.

“ம்ம்கும்… எல்லாம் என் தலைவிதி… ஆழாக்கு சைஸுல இருந்துக்கிட்டு இதுக்கு அது பிரெண்டாமே… நான் பெத்தும் சரியில்ல… அது பெத்ததும் சரியில்ல… அதுக்கு மேல எனக்கு வாச்சது சுத்தமா சரியில்ல” என்று கணவனை பார்த்து சொல்ல, “யாரடி மறைமுகமா குத்தி பேசுற?” என்று பொங்கினார் பாண்டியன்.

“இதுல மறைமுகமா என்ன வேண்டி கிடக்கு… எனக்கு வாச்சதுன்னு உங்களைத்தான் சொல்றேன்” என்று கணவனிடம் அவர் நேரடியாகவே சொல்ல,

“நேரடியா சொன்னா ஓகேதான்” என்று தோள்களை குலுக்கிவிட்டு மனைவியிடம்  அப்படியே ஆஃப் ஆகிவிட்டார் பாண்டியன்.

செழியன் உடைமாற்றி கொண்டு வெளியே வந்தவன் அவர்கள்  பேசி கொண்டிருந்ததை கேட்டு சிரித்துவிட்டு,

“இருந்தாலும் நீங்க அம்மா கிட்ட இப்படி அந்தர் பல்டி அடிக்க கூடாது ப்பா” என்றான்.

“உங்க அம்மா கிட்ட அடிக்காம அப்புறம் வேற யார்கிட்ட டா” என்ற பாண்டியனின் பதிலை கேட்டு செழியன் இன்னும் சத்தமாக சிரிக்க, அன்புச்செல்வியும் அப்பாவோடு சேர்ந்து சிரித்தாள். “ஐயோ ஐயோ! இந்த மனுஷனை கட்டிக்கிட்டு” என்று சந்தானலட்சுமி கணவனின் வார்த்தைகளில் சங்கடப்பட்டு தலையிலடித்து கொண்டார்.

இந்த செல்ல சண்டைகளோடும் சிரிப்போடும் முடிந்தது அவர்களின்  இரவு உணவு.

பாண்டியன் உறங்காமல் தன்னறையில் யோசனையோடு அமர்ந்திருக்க சந்தான லட்சுமி குடிக்க தண்ணீரை எடுத்துவந்து அறையில் வைத்தபடி, “தூக்கம் வரலையா ங்க” என்று கேட்க,

“சந்தோஷமா இருக்கு லட்சு… அதான் தூக்கம் வரல” என்றார்.

“எனக்கும்தான்… அன்பு இப்படி வாய் விட்டு சிரிச்சே எவ்வளவு நாள் ஆகிடுச்சு பார்த்து” என்று கணவனின் மனநிலை புரிந்து பேசினார்.

“நம்ம பேத்தி கூட இப்ப எல்லாம் ரொம்ப சந்தோஷமா இருக்கா… பார்த்தியா? ரஞ்சனி பத்தி அதிகமா கேட்குறதில்ல ”

“ஆமா” என்று சந்தான லட்சுமி ஆமோதிக்க, “எல்லாத்துக்கும் மீனா பொண்ணுதான் காரணம் லட்சு… அதான்… நான் என்ன சொல்றேன்னா…” என்று பாண்டியன் தயக்கமாக மனைவி அருகில் வர, “புரியுது… இனிமே அந்த எதிர் வீட்டு பொண்ணு கூட நான் பிரச்சனை பண்ண கூடாது… அதானே” என்று அழுத்தி கேட்டார்.

“ஹ்ம்ம்” என்று பாண்டியன் தலையை மட்டும் அசைக்க, “ஆகட்டும் விடுங்க… எனக்கு பிள்ளைங்க சந்தோஷம்தான் முக்கியம்… ஆனா அந்த வாயாடி திரும்பவும் எதாச்சும் பிரச்சனை பண்ணா” என்று சந்தானலட்சுமி அழுத்தமாக  கணவனை பார்க்க,

“ஜானவி ரொம்ப நல்ல பொண்ணுதான்” என்று பாண்டியன் அவளுக்கு ஆதரவாக பேச, “நீங்கதான் மெச்சிக்கணும்” என்று அவர் நொடித்து கொண்டு தன் படுக்கையில் படுத்து கொண்டார்.

சந்தான லட்சுமிக்கு ஜானவி மீதான மனத்தாங்கல் தீரவில்லை என்ற போதும் அவளிடம் மேலே எந்த பிரச்சனையையும் வளர்த்து கொள்ள வேண்டாம் என்று முடிவுக்கு வந்தார். தன் மகன் மற்றும் பேத்தியின் மனம் வருத்தப்படுவதில் அவருக்கும் விருப்பமில்லை.

 

 

 

error: Content is protected !!