பூவனம்-22
பேத்தியின் கூச்சலை கேட்டு, அடுத்த வீட்டின் உள்ளே இருந்து சுப்பையா எட்டி பார்க்கவும், மீனாட்சி அம்மாள் பேத்தியை அடிக்க கை நீட்டவும், சட்டென்று தடுத்திருந்தார்.
உள்ளே சமையலறையில் மருமகள்கள் இருவரும் பேசிகொண்டிருக்க, இங்கே நடந்தது அவர்களுக்கு தெரியவில்லை. டிவியும் கத்திக் கொண்டிருந்தது.
“அறிவிருக்கா உனக்கு? கொஞ்சம் நான் பாக்காம விட்டுருந்தா இந்த சின்ன புள்ளைய அடிச்சுருப்பே, அப்படி என்னடி விரோதம் அவங்க மேல? நீயும் உன்னை மாத்திப்பேன்னு பார்த்தா, அது நடக்காது போலிருக்கு, உன்னை எல்லாம் இப்படி சுகமா வச்சுருக்க கூடாது, எங்கேயாவது பொட்டல் காட்டுல தான் கூட்டிட்டி போய் தங்க வச்சுருக்கணும்” என அடிகுரலில் சீறியவாறே,
பேத்தியை தூக்கிக் கொண்டு உள்ளே சென்றவர் “இப்படி எல்லாம் செய்யகூடாது ராசாத்தி, பாட்டி பெரியவங்க, அவங்க சொல்ற பேச்சு கேக்கனும் கண்ணு”
“இது அவங்க வீடுன்னு சொல்றாங்க தாத்தா… எனக்கு இந்த பாட்டி பிடிக்கல” எந்த குழந்தைக்கு தான், தன் வீட்டை பங்கு போடப் பிடிக்கும், அந்த உணர்வே பிள்ளையின் சொல்லாக வெளி வந்தது
“அப்படி சொல்ல கூடாது… இது நம்ம வீடு ராசாத்தி… இவங்க உன்னோட மீனாட்சி பாட்டி, இங்கே கொஞ்ச நாள் உங்க கூட சந்தோசமா இருக்க வந்துருக்காங்க… நீ அவங்க கூட சிரிச்சு பேசி பேசினா தானே அவங்களும் உன் கூட சிரிச்சு பேசுவாங்க”
“அப்போ அவங்க பிஷ் பாட்டியா தாத்தா?” சின்னபிள்ளை தன் அறிவில், பாட்டியை அடையாளப்படுத்திக் கொள்ள, புரியாமல் முழித்து வைத்த சுப்பையாவிடம் “மீனுக்கு பிஷ் சொல்லனும் தாத்தா, நான் “பிஷ் பாட்டி”ன்னு கூப்பிடுவேன்”
“பிஷ் பாட்டி நீங்க எங்க கூட சிரிச்சு பேச வந்துருக்கீங்களா? இனிமே முறைக்காம இருக்கணும் சரியா? அப்பதான் நான் சிரிச்சு பேசுவேன் ஒகே? நீயும் நானும் பிரண்ட்ஸ் சரியா?” குழந்தையின் பேச்சு பாட்டிக்கு சீண்டலாய் தோன்ற தன்னறைக்குச் சென்று விட்டார்.
பேத்தியின் பேச்சில் தன்னை மறந்து சிரிக்க ஆரம்பித்த மாமனாரிடம் விஷயத்தை கேட்டறிந்து செந்தாமரையும், ரம்யாவும் சேர்ந்து சிரித்து வைத்தனர்.
“நீ எங்க ஆத்தா தான் ராசாத்தி, அதுல எந்த மாற்றமும் இல்ல”
“தாத்தா என் பேரு இந்திராக்ஷி… ராசாத்தி இல்ல”
“இது எங்க ஆத்தா பேரு ராசாத்தி, எப்படி நான் கூப்பிடுவேன்?, உங்க அப்பனும் சித்தப்பனும் சேர்ந்து, ரெண்டு பாட்டிகளோட பேரையும் சேர்த்து வைச்சு, என் பேத்திய வாய் நிறைய பேர் சொல்லி கூப்பிட விடாம பண்ணிட்டாங்க” என்று கூறியபடியே ரம்யாவை பார்க்க
“இது எப்ப நடந்தது மாமா?” முதன் முறையாய் ரம்யா தன் மாமனாரை பார்த்து பேசிட
“எல்லாம் உன்னோட பிரசவ சமயத்துல தான் மருமகளே!! ஆஸ்பத்திரி சீட்டுல பேர் எழுத கேட்டாங்க, அப்போ உன்னோட மாமியார் தான் இந்த பேர் வைக்க சொன்னது, “இந்திராணி”ங்கற பேர்ல இருந்து பாதியும், “மீனாட்சி”யில இருந்து மீதியும் எடுத்து, பசங்க தான் ரெண்டு பாட்டிகளோட பேரும் இருக்கட்டும்னு சேர்த்து வச்சாங்க, பேர் மட்டுமில்ல, பாப்பா முக ஜாடை கூட எங்க அம்மா தான்.” உணர்ச்சி மேலிட, அன்றைய நாளின் தாக்கத்தில் தன் மனதில் உள்ளதை சொல்லி வைத்தார்.
“பொறந்த குழந்தைக்கு பேர் முதற்கொண்டு தான் தான் வைக்கணும், வேற யாருக்கும் அந்த உரிமைய கூட விட்டு கொடுக்க மனசு வரல அவளுக்கு… என்னென்னமோ நடந்து போச்சு… பிடிக்காத காரியங்கள் எல்லாம் செய்ய வேண்டியதாயிருச்சு… அவளோட பேச்சு, எல்லா இடத்துலயும் நியாயம் பேசுற என்னையே தப்பு பண்ண வச்சுருச்சு. எல்லாம் நம்ம கெட்ட நேரம்னு தான் சொல்லணும் வேற என்ன சொல்ல? எதையும் மனசுல வச்சுக்காதேனு சொல்ல கூட எனக்கு தகுதி இல்ல” என ஆற்றாமையுடன் பெருமூச்சு விட
“இப்போ அதை பத்தி நினைக்காதீங்க மாமா…. பேத்திகிட்ட அத்தை நாளைக்கே ராசியாகிருவாங்க… ஏன்னா நம்ம பொண்ணு தான், நம்ம மாமியாருக்கே மாமியாராச்சே!!! சரிதானேக்கா நான் சொல்றது…” என செந்தாமரை சூழ்நிலையை சகஜமாக்கும் பொருட்டு, ரம்யாவிடம் கூற, சிரித்துக்கொண்டே இரவு உணவை தாயரிக்க சென்று விட்டனர் இருவரும்.
இரவு உணவின் போதும் மாமியாரின் ஜாடை பேச்சுக்கள் ரம்யாவை தொடர்ந்த வண்ணமே இருந்தன, எப்பொழுதும் போல் மகன்களுக்கு இடையில் பரிமாறவென்று அமர்ந்து கொண்டு, குற்றம் குறை சொல்லியே உணவு வகைகளை தட்டி கழிக்க தொடங்கினார். இடையிடையே பேத்தியின் “பிஷ்பாட்டி” என்ற அழைப்பு வேறு அவருக்கு கடுப்பை கிளப்பியது.
அந்த நேரத்தில் யாருடைய மனமும் புண்படும் படி பேச ரம்யாவிற்கு பிடிக்கவில்லை. அனைவரும் உணவு உண்ணும் சமயத்தில், எதிர்த்து பேசிட அவளது மனநிலை இடம் தரவில்லை. மேலும் மேலும் எதிர்த்து பேசி, பகைமையை வளர்த்துகொள்வது அவளது இயல்பல்லவே!! தன் இயல்பு நிலையில் இருந்து மாறமால் இருக்க மௌனம் சாதித்தவள், தான் சாப்பிடுவதையும் தவிர்த்து தன்னறைக்கு சென்று விட்டாள்.
மாமியாரின் இந்த செயல் சின்ன மருமகளுக்கு பிடிக்கவில்லை
“அத்தை குறை சொல்லியே ஆகணும்னு கங்கணம் கட்டிட்டு பேசாதீங்க… நாங்க செய்றது பிடிக்கலன்னா நீங்களே சமையலை கவனிச்சுக்கோங்க, நாங்க தூரமா இருக்குறோம், இன்னும் எவ்வளவு தான் பேசி அக்காவ சங்கடப்படுத்துவீங்க, அக்காவுக்கு தலையழுத்தா என்ன? நீங்க அவ்வளவு பண்ணியும் உங்களுக்கு சமையல் செஞ்சு குடுக்கனும்னு, இப்போ உங்க புண்ணியத்துல சாப்பிடாம உள்ளே போய்ட்டாங்க” என தன் பிடித்தமின்மையாய் காட்டி விட்டாள் செந்தாமரை.
“நான் என்ன பண்ணினேன்னு என்னை சொல்ல வர்ற? இதோ இந்த குட்டியும் தான் என்னை இழுத்துட்டு போறா? அதை எல்லாமா சொல்லிட்டு இருக்கேன்?” என மீனாட்சி அம்மாவும், பேத்தியின் நடவடிக்கையை பற்றி ஜாடையாக, கிரியிடம் முறையிட, உள்ளுக்குள்ளே கனன்று கொண்டிருந்தவன், கொந்தளித்து விட்டான் தன் தாயிடம்.
“என்ன சொல்லலம்மா நீ? சின்ன குழந்தை அவ மேல ஏன் இவ்வளவு வெறுப்பு? அவளுக்கு என்ன தெரியும்? உங்க பேத்தி பத்தின குறை சொல்றத விட்டுட்டு அவள குழந்தையா அரவணைச்சு பாருங்க…”
“எனக்கே புத்தி சொல்ல வந்துட்டியா பெரியதம்பி? என் பிள்ளையாடா நீ?”
“இத்தன வருஷம் உன்னோட பையனா, உன் பேச்சு கேட்டு இருந்துட்டேன், இனிமே என் பிள்ளைக்கு அப்பாவா, பொண்டாட்டிக்கு பக்கபலமா தான் இருக்கப்போறேன்,
“என்னை காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டத தவிர என் பொண்டாட்டி வேற என்ன தப்பும்மா பண்ணினா? நீங்க செஞ்ச வேலைக்கு, கிட்டத்தட்ட மறு ஜென்மம் எடுத்து வந்துருக்காம்மா…
“கல்யாணம் ஆன நாள்ல இருந்து அவ யார் கூடயாவது ஒரு சின்ன சத்தம் போட்டோ, சண்டை போட்டோ பாத்துருக்கியாம்மா?”
“கல்யாணம் ஆனதும் எந்த பொண்ணும் தன்னோட கணவனை, அவங்க குடும்பத்துல இருந்து பிரிக்க நினைக்க மாட்டாங்க… மாமியார் மாமனாரோட நடவடிக்கை தான் அவங்கள அந்த முடிவுக்கு போக வைக்குது.
மருமகள மகளா பார்த்தீங்கண்ணா இந்த பிரச்சனை உங்களுக்கு வராது… ஊர்க்காரங்க, உறவுக்காரங்க பேச்ச கேட்டு, நீங்க அவளுக்கு செய்யாத கெடுதல் இல்ல…
வீட்டுக்கு வர்ற மருமக கைல தான் அந்த வீட்டோட சந்தோசம் அடங்கி இருக்குனு சொல்வாங்க… ஆனா இப்போ அவளுக்கு இந்த வீட்டுல சந்தோசம் கிடைக்குமானு யோசிக்க வைக்கிறீங்க…
அவ வீட்டுல அவள எப்படி தாங்குனாங்க தெரியுமா? ஆனா நான் அவள நரகத்துல கொண்டு வந்து தள்ளிட்டேன்”
“நீ நல்ல மனைவியா, அம்மாவா இருந்தே… ஏன் நல்ல மாமியாரா இருக்க முடியலே? இதே நிலைமை உனக்கு பொறந்த பொண்ணுக்கு வந்திருந்தா நீ என்ன செஞ்சுருப்பே…
“இதுக்கும் மேல உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்குறதுன்னு எனக்கு தெரியலம்மா? முடிஞ்ச வரைக்கும் நீ அமைதியா இருந்து, எங்களை நிம்மதியா இருக்க விடு”
“ரெண்டு பேரை வீட்டு வேலைக்கு சொல்லியாச்சும்மா… நாளையிலிருந்து வந்துருவாங்க, உனக்கு எப்படி வேணுமோ அப்படி சொல்லி செஞ்சுக்கோ… வீணா நீயும் பேசி, மத்தவங்களையும் சங்கடப்பட்டுத்தாதே!! படாதபாடு பட்டு இப்போதான் கொஞ்சம் நிம்மதியா மூச்சு விட்டுட்டு இருக்கேன், அதுக்கு திரும்பவும் நீ வேட்டு வச்சா உன்னை எதுவும் சொல்ல மாட்டேன், என் குடும்பத்தோட தனிக்குடித்தனம் போயிருவேன், இது தான் என்னோட முடிவு” என கிரியும் எச்சரித்து ஒதுங்கி விட, மீனாட்சி அம்மாளின் பேச்சை கேட்ட ஆள் இல்லை.
முந்தியா நாள் இரவிலிருந்து மனைவியின் பாராமுகத்தோடு, இரவு உணவையும் தவிர்த்து விட்டு அவள் சென்றது என கிரியின் மனம் தவிக்க, அவளை சமாதனபடுத்தும் முயற்சியாக உணவோடு அவள் அறைக்கு சென்றான்.
“ஏன் ரம்யா சாப்பிடாம வந்துட்ட? சாப்பிடு…”
“பசிக்கல”
“பசிக்கலையா இல்ல? அங்கே இருக்க பிடிக்கலையா?”
“என்னை கொஞ்சம் தனியா இருக்க விடுங்க”
“எதையும் மனசுல வச்சு அடைச்சுக்காதே… என்ன இருந்தாலும் வெளியே கொட்டிடு, இது உன் வீடு ரமி, யார் என்ன சொன்னாலும், நீ அங்கே நிக்கனும்னு உனக்கு தோணலையா?
“எப்படி இருக்க சொல்றீங்க? அவங்க எந்த நேரமும் என்னை சொல்லறதும் இல்லாம, இப்போ பாப்பவ பேசும் போது என்னால சும்மா இருக்க முடியாது, எல்லோர் முன்னாடியும் எதாவது எதிர்த்து பேசி, சின்ன குழந்தைங்க மனசுல அது ஆழமா பதிஞ்சு, நாளைக்கு அதே பேச்ச அவங்களும் பேசிடுவாங்களோனு பயமா இருக்கு கிரி? என்னை பார்த்து அவங்க கெட்டு போயிரக்கூடாது… எந்த நேரமும் எதிர்த்து பேசிட்டு இருக்குறது என்னோட சுபாவம் கிடையாது”
“அப்போ இதுக்கு என்ன தான் தீர்வு? அவங்கள பேச விட்டு நீ வேடிக்கை பாக்க போறியா?”
“இந்த தர்ம சங்கடமான நிலைமை வரகூடாதுன்னு தான், நான் இங்கே வரமாட்டேன்னு சொன்னேன், அவங்களுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இருக்கக் கூடாது, முகத்தை கூட பாக்க கூடாதுன்னு நினைச்சேன், யார் என் பேச்சை கேட்டா? ரொம்ப உத்தமனா நான் சொன்னதுக்கெல்லாம் தலையாட்டி, இங்கே கூட்டிட்டு வந்து, திரும்பவும் என்னை இந்த சாக்கடையில தள்ளி விட்டுட்டு நீங்க நிம்மதியா இருந்தாச்சு கிரி? இப்போ சந்தோசம் தானே? நானும் என் பொண்ணும் உங்க வீட்டுக்கு நேர்ந்து விட்ட பலியாடா? என்ன சொன்னாலும் சூடு சொரணை இல்லாம கேட்டுகிட்டு இருக்க?” இப்பொழுது கோபம் முழுமையும் கணவனிடம் திரும்பிட,
“ஏன் ரம்யா பெரிய பேச்செல்லாம் பேசுற? அந்த அளவுக்கு போக விட்டுருவேனாடி நான்? என்மேல உனக்கு நம்பிக்கையே வராதா?”
“உங்க மேல நம்பிக்கை வச்சு நான் பைத்தியாகாரியா நின்னது தான் மிச்சம்”
“இப்போ அத பத்தி பேச வேணாம், சாப்பிட்டு முடி அப்பறம் தெம்பா பேசலாம் ரம்யா”
“வேணாம் பேச்சை மாத்தாதீங்க, உங்களை பாக்கவும் பிடிக்கல எனக்கு”
“பார்த்துகிட்டே இரு பிடிச்சு போயிரும்… வந்து என் பக்கத்துல உக்காந்து என்னை பார்த்துகிட்டே சாப்பிடு செல்லம்”
ரம்யாவிற்கு அவனை நன்றாய் கடித்துக் குதறி விடும் ஆவேசம் வர, கைக்கு சுலபமாய் சிக்கிய தலையணையை கொண்டு அவனை மொத்த ஆரம்பிக்க,
“போதும்… மெதுவாடி இவ்ளோ அடி அடிச்சா நான் தாங்குவேனா? கொஞ்சம் யோசிச்சு செய்டி எதுனாலும்… இன்னும் நிறைய பிள்ளை குட்டிங்க பெத்துக்கனும்னு லிஸ்ட் போட்டு வச்சுருக்கேன் நான்” என சீண்டலை தொடர
“உங்க அம்மா இன்னொரு பொண்ணை கை காட்டுவாங்க, அவகிட்ட போய் உங்க லிஸ்டை சொன்னா, உடனே பெத்து குடுப்பா”
“வாய இழுத்து வச்சு தைச்சுருவேண்டி, இனி ஒரு தடவை இப்படி பேசினா? நான்தான் சொல்றேனே அந்த விஷயம் பிடிக்காம தான் இங்கே வந்தேன்னு, அத காதுல கூட வாங்காம உன் இஷ்டத்துக்கு மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டு போற? என்ன நினைச்சுக்கிட்டு இருக்க மனசுல?”
“உன்னை கொலை பண்ணனும்னு நினைச்சுட்டு இருக்கேன் கடுப்பேத்தாத கிரி!!… என்ன சொல்லி இங்கே வந்தேன்?, இப்போ என்ன நடக்குது? கொஞ்சமாவது யோசிச்சி பார்த்தியா என்னை பத்தி… உனக்கு உன்னோட சந்தோசம் தான் முக்கியம் காரியவாதி, சுயநலவாதி நீ, போயிரு என் மூஞ்சியில முளிக்காதே” கோபங்கள் வார்த்தைகளாய் வெளிவர தொடங்கின.
“வேண்டாம் ரமி!! இவ்வளவு வெறுப்பு யார்கிட்டயும் வச்சுக்காதேடி, நீ அப்படிபட்டவ இல்ல” என சொல்லியவாறே தன் தோள் வளைவில் அவளை கொண்டு வந்தவன், மார்போடு அணைத்துக் கொள்ள, முதலில் திமிறியவள், அவனின் அடக்கு முறையில், அவன் நெஞ்சோடு ஒன்றிப் போனாள்.
அணைத்தவனுக்கும், அணைப்பில் இருந்தவளுக்கும் அந்த நேரம் பொக்கிசமாய் தோன்ற, அந்த நிமிட நேரம் மௌனமாய் கரைய, இருவருக்குமே பேசும் எண்ணம் எழவில்லை. ரம்யாவின் உடல் குலுங்கும் அசைவில் அவள் அழுகையை உணர்ந்தவன்,
“சாரிடி, இப்படி உன்னை அழ வச்சு பாக்க, எனக்கு ஆசையா என்ன?, நிச்சயமா இப்படியெல்லாம் நடக்கும்னு கனவுல கூட நினைக்கலே? உன்னை பாக்கும் போதெல்லாம், உனக்கு நியாயம் செய்யலன்னு என் மனசு என்னை குத்தி காட்டுது, என்னோட சந்தோசத்துக்கு உன்னை நான் பலி குடுத்திட்டேனொன்னு நினைக்க தோணுது ரமி…”
“நீங்க ஒண்ணும் என்னை பத்தி நினைக்கவும் வேணாம், அக்கறை எடுக்கவும் வேணாம்” ரம்யா விசும்பலுடன் மீண்டும் திமிற
“இப்படியே கொஞ்ச நேரம் இரு ரமி, என்னை பேச விடு… போதும் இனிமே நடந்து முடிஞ்சத பேசி நமக்கு கஷ்டத்த நாமாளே குடுத்துக்க வேணாம்… புது வாழ்க்கைய தொடங்குவோம், உனக்கும் சரி, எனக்கும் சரி வேற யாரோட நினைப்பும் இல்லமா நம்ம குழந்தையோட நல்லதை மட்டுமே மனசுல வச்சு நடந்தத மறக்க முயற்சி செய்வோம் ரம்யா…”
“எப்படி மறக்க சொல்றே கிரி? நான் பட்ட கஷ்டம் என்ன கொஞ்சமா? மூணு வருஷம் நடைபிணமா வாழ்ந்திருக்கேன், அங்கே இருந்து என்னோட நிலைமைய தெரிஞ்சுகிட்டவனுக்கு என்னை வந்து பாக்கணும்னு தோணலையா? பொண்டாட்டி பிள்ளைய விட காசு பணம் பெருசா போயிருச்சா உனக்கு?” அவன் அணைப்பில் இருந்து விலகாமலேயே சண்டை பிடித்தாள்.
“இந்த கேள்விய இங்கே வந்த இத்தன நாள்ல கேக்கனும்னு தோணலையா ரமி? ஒரு நாளாவது என்கூட முகம் குடுத்து பேசிருக்கியாடி?” அவள் கையை எடுத்து தன் இடுப்பை சுற்றி போட்டுக் கொண்டு, தன் அணைப்பை இறுக்கி கொண்டான்.
“கேக்குற கேள்விக்கு பதில் சொல்லாம, இறுக்கிக்குற வேலையெல்லாம் வேணாம்”
“நீ அப்படியே இரு… நான் பதில் சொல்றேன்… இங்கே உன்னோட நிலைமைய நினைச்சு, வேலையில கவனத்த சிதற விட்டுட்டேன் ரமி. எனக்கு கீழே வேலை பாக்குறவங்கள கரெக்டா கைட்(guide) பண்ணல, புராஜெக்ட டீடைல்ஸ் எல்லாத்தையும் போட்டி கம்பெனிக்கு சொல்லிட்டேன்னு ஒரு புரளி கிளப்பி விட்டு, அந்த கெட்ட பேர் வேற எனக்கு. அங்கே ஆபீசில நிறைய டார்ச்சர் குடுக்க ஆரம்பிச்சுட்டாங்க, எங்கேயும் அசைய விடல என்னை, எந்நேரமும் அவங்க கண்காணிப்புல இருந்தேன், அவங்களோட நஷ்டத்துக்கு சமமா வேலை செஞ்சு கழிக்க சொன்னங்க, என் பேச்ச கேக்க அங்கே யாருமே இல்ல. இது எல்லாம் தான், நான் உடனே உன்னை பாக்க வர முடியாமா போயிருச்சு…”
இது எல்லாம் நிஜம்தானா என்கிற ரீதியில் ரம்யாவும் அவனை பார்த்து வைக்க,
“உன்னை மறந்துட்டு எப்படிடி நான் இருப்பேன்? கண்ணுக்குள்ள நீயும் பாப்பாவும் தான் வந்து நின்னிங்க. எந்த நேரமும் என்னை நோட்டம் விட்டுட்டு இருக்குறவங்க மத்தியில, என்னால யார்கூடயும் பொறுமையா பேச முடியல. எங்க அம்மாவோட பிடிவாதம் ஒரு பக்கம் இருந்தா, உங்க அப்பாவோட வீம்பு இன்னொரு பக்கம், நின்னு பேச வேண்டிய நீயும் என்ன நடக்குது ஏது நடக்குதுனு தெரியாத குழப்பத்துல இருந்தே, நானும் அங்கே மாட்டிக்கிட்டு எவ்ளோ தான் நான் பாக்க… வேலை பார்த்த இடத்தில எல்லாம் சரி செஞ்சு குடுத்த பிறகு தான், என்மேல எந்த தப்பும் இல்ல என்னோட கவனக்குறைவு மட்டுமே தான் காரணம்னு தெரிஞ்சு எனக்கு நஷ்டம் இல்லாம இங்கே அனுப்பி வச்சாங்க…
எல்லா கஷ்டத்தையும் அனுபவிச்சுட்டு இங்கே வந்தா… எல்லோரோட பேச்சும், உன்னோட வெறுப்பும் சேர்ந்து “போதும்டா சாமி”னு வாழ்க்கை மேல வெறுப்பு வரவச்சுருச்சு…
இந்த நிலைமை உனக்கு வந்திருந்தா நீ என்ன பண்ணிருப்பே? அவங்க அவங்க பக்கம் இருந்து பார்த்தா எல்லார் பக்கமும் நியாயம் இருக்கத்தான் செய்யுது… என்னோட நியாயம் தான் பெருசுன்னு பிடிச்சு தொங்குறத விட்டுட்டு வாழ்க்கைய வாழ்ந்து பார்த்து தான் என்னடி?”
“அப்போ உங்க அம்மா செஞ்சது நியாயம்னு சொல்ல வர்றியா?
“அவங்களுக்கும் அவங்க தப்பு என்னனு தெரிய வந்திருக்கு, அதனால தான் ஊருக்கு மத்தியில என்னை கூப்பிட்டு விட்டு மன்னிப்பு கேக்க வைக்காம, குடும்பத்தோட ஊரை விட்டு வந்துருக்காங்க… கோபப்படாம கொஞ்சம் யோசிச்சு பாரு ரம்யா உனக்கே புரியும்”
“ஆரம்பிச்சுட்டியா உன்னோட குடும்ப பாட்டு பாட? இது தான் எனக்கு பிடிக்கலன்னு சொல்றேன் கிரி… அவங்கள விட்டுக்கொடுக்காம பேசுறவனுக்கு, என்னோட வலிய தெரிஞ்சுக்க முடியல தானே?”
“திரும்பவும் ஆரம்பிச்ச இடத்துல வந்து நிக்காதே ரம்யா? எல்லோருக்கும் எப்பவும் சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் சரியா அமையுறதில்ல அப்படி அமைஞ்சா அது வாழ்க்கை இல்ல…”
“இந்த தத்துவம் பேசுறதெல்லாம் நிப்பாட்டு, வரவர உன் கூட பேசும் போது, பட்டிமன்றத்தில இருக்குற பீல் தான் வருது… அப்படி பேசிப்பேசியே கொல்றே என்னை… என்னை விட்டுடேன் கிரி என் வழிய பார்த்து நான் போயிர்றேன்”
“இப்படியே சொல்லிட்டு இருந்தா எப்ப தான்டி எனக்கு பாவ மன்னிப்பு கிடைக்குறது? எப்ப நாமா சந்தோசமா இருக்குறது? மன்னிக்கவும் வேணாம், மறக்கவும் வேணாம், என்னோட வாழ்ந்து உன்னோட கோபத்தை எல்லாம் தீர்த்துக்கோ”
“உன்னோட சந்தோசம் குடும்பம் நடத்துறதுக்கு பேரு தான் உனக்கு தண்டனையா? நல்லா இருக்கு உன்னோட நியாயம்… என்னை விட்ரு கிரி, எனக்கும் உனக்கும் எந்த காலத்திலயும் ஒத்து வராது. உங்க வீட்டுல பாக்குற பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா இரு, எனக்கு என் பொண்ணு போதும், அவள மட்டும் என்கிட்டே குடுத்துருங்க, நான் எங்கேயாவது கண்காணாத இடத்துக்கு போயிறேன்”
கணவனை ஒட்டிக்கொண்டே இத்தனை பேச்சையும் பேசிட, கேட்டவன் அடுத்த நொடியே அவளை உதறிவிட்டு, எழுந்து விட்டான்.
“இவ்வளவு நேரம் நான் பேசினத கேட்டும் கூட, இப்படி பேச எப்படிடி மனசு வருது? உனக்கு உன்னோட வலிக்கு மருந்து வேணும், நீ பட்ட கஷ்டத்துக்கு நியாயம் வேணும்னா, அது என்கூட இருந்தா தான் நடக்கும், நீ தனியா இருந்தா மட்டும் உன் கை விட்டு போன சந்தோசம் உனக்கு கிடைச்சிடுமா என்ன? கொஞ்சம் யோசனை பண்ணு ரம்யா… மறுபடியும் என்னை விட்டுட்டு போகணும்னு நினைக்கிற நினைப்ப மறந்துரு…
யார் என்ன சொன்னாலும், உன் நியாயத்த சொல்லு, மனசுல இருக்குறத பேசு… தயவு செய்து இனிமேயாவது உன்னோட வாழ்க்கைய உனக்காக வாழ்ந்து பாரு…உனக்குள்ள போட்டு வச்சுருக்கிற வட்டத்த விட்டு வெளியே வா…
உன் கைய விட்டு ஒரு விஷயம் போகுதுன்னா எதுக்காகன்னு யோசனை பண்ணு, அந்த விஷயம் மறுக்குற ஆள் நானா இருந்தா கூட என்கிட்டே ஏன்னு கேட்டு சண்டை போடுடி… அத விட்டு கோழை மாதிரி ஓடி ஒழிய பார்க்காதே… தனியா வாழ்ந்து காட்டுவேன்னு சொன்னத என்கூட வாழ்ந்து காட்டு… சந்தோசமோ, சண்டையோ, கோபமோ, துக்கமோ எதுவும் ஏத்துக்க நான் ரெடி…
இனிமே உன்கிட்ட இது விசயமா நான் பேச போறதில்ல… உனக்கு எப்படி இருக்க தோணுதோ அப்படியே இரு, என் கண்முன்னாடி இரு அது போதும் எனக்கு…
சீக்கிரம் சாப்பிட்டு முடி… பாப்பவ போய் கூட்டிட்டு வந்துறேன், படுக்க வச்சுக்கோ” தன் மனதில் உள்ளதை ஒளிக்காமல் சொல்லிவிட்டு சென்று விட்டான். இனியும் சொல்வதற்கு ஒன்றுமில்லை, இனிமேலும் வேறு திசை நோக்கி சென்றாலும் சேரும் இடம் ஒன்றே என்ற எண்ணத்தை மனைவியின் மனத்தில் ஆழப் பதியவைத்து சென்றான் கணவன்.