பூவனம்-23-1
நாட்காட்டிகளும், கடிகார முட்களும் தங்கள் வேலையை ஓய்வின்றி செய்து கொண்டிருந்தன. கிரியின் பெற்றோர்கள் சென்னைக்கு வந்து மூன்று மாதம் முடிந்திருந்தது. கிரியின் தம்பி முரளிதரன் தன் நண்பனின் உதவியுடன், காய்கறி மண்டி ஒன்றை குத்தகைக்கு எடுத்து நடத்த ஆரம்பித்திருந்தான். அதிகாலை நான்கு மணிக்கு செல்பவனுக்கு உதவியாக சுப்பையாவும் காலை எட்டு மணிக்கு அங்கே சென்று, தினப்படி வேலைகளை சரிவர கவனித்து பகல் பொழுதில் வீட்டிற்க்கு வருவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தனர்.
மாலை வேளைகளில் தன் அண்ணனின் உதவியுடன் “தரணி பிரெஷ்செஸ்” என்ற பெயரில் காய்கறி விற்பனை வலைதளத்தை ஆரம்பித்து, அதன் மூலம் மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரங்கள் நடத்தி, அதற்கு பகுதி நேர வேலையாக கல்லுரி மாணவர்களை வேலைக்கு அமர்த்தி இருந்தான் முரளிதரன்… இங்கு வந்த இரண்டாம் மாதமே செந்தாமரை கருவுற, அவளை கவனிக்கும் பொறுப்பையும் சேர்ந்தே செய்து வந்தான்.
சமையலறைப் பொறுப்பை மீனாட்சி அம்மாளே ஏற்க, அவரவர்க்கு வேண்டிய உணவை கேட்டு செய்தது தான் அங்கே ஆச்சரியம். அந்த நேரத்தில் மட்டுமே மருமகளிடம் பேசி வந்தார். கிரிதரனின் அன்றைய பேச்சு மீனாட்சி அம்மாளை பதம் பார்க்க, தன் பேச்சினை சற்றே குறைத்துக் கொண்டார் என்று சொல்வதை விட, அவருக்கு நேரம் வாய்க்கவில்லை என்று சொல்வதே பொருந்தும்… அந்த அளவிற்கு பேரபிள்ளைகள் அவர் நேரத்தை கபளீகரம் செய்து கொண்டிருந்தனர்…
சின்ன மருமகளின் மசக்கையின் காரணமாக பேரனை கவனிக்கும் பொறுப்பை மீனாட்சி அம்மாள் மேற்கொள்ள, தம்பியுடன் எந்நேரமும் விளையாடும் இந்திராக்ஷியும் இப்பொழுது பாட்டியை துணைக்கு அழைக்க தொடங்கி விட்டாள்… இருகுழந்தைகளின் கள்ளமில்லா சிரிப்பிலும், செயலிலும் மெதுமெதுவாக தன் சுபாவத்தை மாற்றிக்கொள்ள தொடங்கினார் என்றே சொல்ல வேண்டும்.
வாரம் இருமுறை ரம்யாவின் அன்னை செல்வி, மகளையும் பேத்தியையும் பார்த்து விட்டு செல்வதை வழக்கமாக்கி கொண்டிருந்தார்… பேத்தி இல்லாத வீட்டின் தனிமையை, மகள் வீட்டிற்கு வரும் பொழுதெல்லாம் கண்ணீர் விடாத குறையாக தன் தவிப்பை சொல்லிவிட்டு செல்வார். பேத்தியை தன்னோடு அழைத்து செல்லும் எண்ணம் தோன்றினாலும், மீண்டும் புது வாழ்வை தொடங்கிருக்கும் நேரத்தில், தனது அழைப்பினால் ஏதேனும் வார்த்தை தடிப்புகள் எற்பட்டுவிட்டால் எப்படி எதிர் கொள்வது என்று எண்ணமும் வர செய்தது.
தன் மகன் சிவாவிற்கு பெண் பார்க்கும் படலத்தையும் ஆரம்பித்து, அதற்கான வேலைகளும் துரித கதியில் நடந்து கொண்டிருக்க, இங்கே மகளின் வீட்டிற்க்கு வருபவர்க்கு, சம்மந்தி அம்மாளின் முகம் பார்த்து வரவேற்கும் அளவிற்கு உறவு நிலை பலப்பட்டிருந்தது… தன் ஓவியம் தீட்டும் திறமையில் அனைவரையும் தன் மீதே கவனம் கொள்ள வைத்து, வீட்டினை ஒரு வரைகூடமாக மாற்றி வைத்திருந்தாள் சுட்டிப்பெண்… ரெயின்போ கலர்ஸ் பாட்டிகளுக்கு தெரியவில்லை என்று வண்ணங்களை பற்றி எடுத்து சொல்லும் பெரிய வேலையையும் அவள் மேற்கொள்ள, நல்ல பிள்ளையாய் அவன் தம்பியும் தலையாட்டி கேட்டு வைத்து கொள்வான்…
முன்பானால் ரம்யாவின் அதட்டல் மகளிடம் சற்றே வேலை செய்யும், ஆனால் இப்பொழுது அனைவரும் ஒரு சேர தூக்கி வைத்து கொண்டாடிட ரம்யாவின் பேச்சு காற்றோடு பறந்து சென்றது.
“பெரியவங்கள எப்படி கூப்பிட்றதுனு குழந்தைக்கு சொல்லி குடுக்க மாட்டியா ரம்யா? வாங்க போங்கனு கூப்பிட சொல்லி பழக்கி விடு” என்று செல்வி குறைபட
“நான் சொல்லறத கேட்டுட்டு தான் உன் பேத்தி வேற வேலை பாக்குற பாரு? இதே பேச்ச நான் சொன்னப்போ செல்வி பாட்டிய எப்படி கூப்பிடுறேனோ, அப்படிதான் அவங்க பாட்டியையும் கூப்பிடுவேன்னு சொல்றா உன் பேத்தி, அவங்களும் உனக்கு பிடிச்ச மாதிரி கூப்பிடுனு சொல்லி ஏத்தி வைச்சு, அவங்களுக்கு மேல நல்லா ஆடிக்கிட்டு இருக்கா”
“என்னோமோ போ… அப்பறம் இதுக்குன்னு ஒரு பேச்சு வந்து, பிள்ளைய பேசிடாம ரம்யா, கொஞ்சம் சொல்லி வை” என்று சொல்லி வைக்க மகளும் சரியென்று தலையாட்டி வைத்தாள். தன் மாமியாரிடமும் “ஆம், இல்லை” என்ற சொல்லை தவிர வேறு பேச்சுக்களை வைத்துக் கொள்வதில்லை.
ஓய்வு நேரங்களில் வீட்டு நிலவரங்களை கவனித்து கொண்டு, செந்தாமரைக்கு தன்னால் முடிந்த சிறு சிறு உதவிகளை செய்து கொண்டு, நாட்களை கடத்திகொண்டிருந்தாள். மறந்தும் கிரியின் பக்கம் தன் எண்ணத்தை செலுத்த நினைக்கவில்லை.
அவனும் அப்படியே அன்றைய நீண்ட விளக்கத்திருக்கு பிறகு மனைவியை அவள் போக்கில் விட்டு விட தீர்மானித்து, அதன் படி செயல்பட தொடங்கினான்.
சிறிது நாட்கள் பிள்ளைக்காகவென தன் வேலை நேரத்தை மாற்றி வைத்துக் கொண்டவன், மீண்டும் முழுநேர வேலையினை கையில் எடுத்துகொண்டு ஒதுங்கிக்கொள்ள ஆரம்பித்திருந்தான். மொத்தத்தில் இருவரும் ஒட்டவும் இல்லை, ஒதுங்கவும் இல்லை.
வார இறுதி நாட்களில் குடும்பத்துடன் எங்கேயாவது வெளியே சென்று வருவதை வழக்கமாக்கி கொண்டிருந்த வேளையிலும் இருவரும் பிள்ளையை முன்னிட்டு சென்றனர். இவர்களின் ஒதுக்கம் வீட்டிலுள்ளவர்களுக்கு தெரிந்தாலும் என்னவென்று சொல்லி இவர்களை சேர்த்து வைப்பது என்ற பெரிய கவலையே அனைவரின் மனதையும் போட்டு குடைய ஆரம்பித்திருந்தது.
இந்த நிலையில் சிவாவிற்கு பெண் அமைய, வீட்டு பெண்ணாய் பெண் பார்க்கும் படலம் முதற்கொண்டு அனைத்து வேலைகளையும் செய்து பொறுப்பாய் நடந்து கொண்டாள் ரம்யா.
சண்முகமும் செல்வியும் சேர்ந்தே வந்து மாப்பிள்ளை மற்றும் சம்மந்தி குடும்பத்தை முறை கொண்டு அழைக்க, மறுப்பில்லாமல் நடந்து முடிந்தவைகளை பற்றி மேற்கொண்டு பேசாமல், திருமணத்திற்க்கு சென்று வந்தனர்.
விழா மேடையில் ரம்யாவும் கிரியும் தனித்தனியாக தங்கள் அன்பளிப்பை வழங்கிட, அவர்களது உறவின் தன்மை வெட்ட வெளிச்சமாகியது.
மனைவி கேட்ட பிறகு, தான் செய்யப்போவதை சொல்லலாம் என்று கிரியும், தன் அண்ணனுக்கு செய்யப்போவதில் யாரிடம் எதற்கு கேட்க வேண்டும் என்ற மனோநிலையும் சேர்ந்து ஒருவரிடம் ஒருவர் கேட்டு கொள்ளாமல் சபையில் மாட்டிகொண்டு முழித்து வைத்தனர்.
“என்ன மாப்பிள்ளை இப்படி தனித்தனியா செஞ்சுட்டு எங்களை குழப்ப விட்றீங்க? ரம்யா நீயாவது அவர்கிட்ட சொல்லகூடாதா? திரும்பவும் என்னம்மா?” என சிவா அண்ணனாய் அவள் நிலையை கேட்டு வைக்க,
“அது… அவர் உனக்கு மாப்பிள்ளை முறைக்கு செஞ்சுருக்கார்ன்னா, நான் செய்றது தங்கை முறைக்குனு வச்சுக்கோ… ஏன் நான் ரெண்டு முறை செஞ்சா ஏத்துக்க மாட்டியா நீ?”
“அப்படி இல்லடாம்மா… எப்படி சொல்றது?” அவனும் சபையில் தடுமாற
“நீ இல்லனா, இன்னைக்கு நானும், என் பொண்ணும் இல்ல… நீ செஞ்சதுக்கு நன்றி சொல்லி நான் தூரமா இருக்க விரும்பலண்ணா… இது என்னோட பாசத்த காட்ட எனக்கு ஒரு வாய்ப்பு… வேற எதுவும் சொல்லாதே” என சிவாவின் கேட்காத கேள்விக்கு பதில் சொல்லி வைத்தாள்.
மணப்பெண் நித்யாவிற்கு எல்லா விடயங்களும் முன்னரே சொல்லிருந்ததால் அவளும் நன்றாகவே அங்கு நடப்பதை புரிந்து கொண்டாள்.
இச்செயலை மீனாட்சி அம்மாவினால் சகஜமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. இவர்களின் மேம்போக்கான நிலை இப்பொழுது வெளியினில் தெரிய ஆரம்பித்திருக்க, தாமரை இலையின் மேல் தண்ணீரை போல் வாழத்தானா அந்த அளவிற்கு பாடுபட்டு, ஊராரிடம் பேச்சை வாங்கி கொண்டு இங்கே வந்தது என்று கவலைப்பட ஆரம்பித்துவிட்டார்.
கிராமத்து காற்றை சுவாசித்துக் கொண்டு அனைவரையும் அதிகாரம் செய்து கொண்டிருந்தவருக்கு, ஒரே வீட்டினில் அடைந்து கிடந்த உடல் புழுக்கம், மகனின் வாழ்வு இன்னும் சீராகவில்லையே என்ற மனபுழுக்கமும் சேர்ந்து அவரின் மனதை அழுத்திட, உடல் அதனை தாங்கிக் கொள்ளாமல் ரத்த அழுத்தத்தை ஏற்றி வைத்து அவரை மயக்கம் கொள்ள வைத்தது.
அந்த நேரத்தில் ஆண்கள் அனைவரும் வெளியில் சென்றிருக்க, வீட்டில் இருந்த செந்தாமரைக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை, கணவனுக்கு அழைத்து அவன் எடுக்காமால் போனவுடன், தாமதிக்காமல் ரம்யாவை அழைத்து சொல்லி விட்டாள்.
அவளும் வரும்பொழுதே கையுடன் மருத்துவரை அழைத்து வந்து, அவரை மயக்கம் தெளிய வைத்த பின்னே, அனைத்து பரிசோதனைகளும் செய்யவென மருத்துவமனைக்கு அழைத்து சென்றாள். குழந்தையை வைத்துகொண்டு, ஏற்கனவே சோர்ந்திருந்த செந்தாமரையை உடன் அழைத்து செல்லவில்லை.
ஒரு மணிநேரம் கழித்து தத்தம் வேலைகளை முடித்துக்கொண்டு வந்தவர்களிடம் நிலைமையை சொல்லி, மருந்துடன், நல்ல ஒய்வு எடுப்பது மட்டுமே தீர்வு என்று சொன்னதனை விளக்கி வீட்டிற்கு அழைத்து வந்தாள்.
கூடுதல் பொறுப்புக்கள் தானாய் வந்து சேர வீட்டு மனுசியாய், எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்த மருமகளை பார்த்து விழியுயர்த்தி ஆச்சர்ய பார்வை பார்ப்பது மாமியாரின் முறையாயிற்று. அவரை பொறுத்தவரை “வேலை பார்ப்பதில் சற்றே சுணக்கம் கொண்டவள் தன் மருமகள்” என்ற தன் மனதில் இருந்த கூற்றை மீனாட்சி அம்மாள் உடைத்து கொண்டார். மருமகள்கள் கவனிப்பில் ரத்த அழுத்தம் சீரானாலும், மனதை அழுத்திக் கொண்டிருந்த பாரம் இன்னும் சீரடையவில்லை அவருக்கு.
மகனை அழைத்து தன் மன ஆற்றாமையை கூறி விட்டார்… “உன்னோட வாழ்க்கையே இன்னும் சரியாகத இந்த நேரத்துல நாங்களும் இங்கே வந்து உக்காந்து உனக்கு இடைஞ்சலா இருக்கிறோமோனு தோணுது பெரியதம்பி… கிராமத்துல இருந்துகிட்டே என் இஷ்டபடி உன்னோட வாழ்க்கைய என் மனம் போன போக்குல மாத்தி வச்சதுக்கு தண்டனையா தான், நாங்க ஊர விட்டு வந்தோம்னு நினைச்சுக்கிட்டு இங்கே இருக்கேன். ஆனா நீயும் உன் பொண்டாட்டியும் முகம் குடுத்து பேசாம இருக்குறத பாக்கும் போது, எங்கே நீ பட்ட கஷ்டம் எல்லாம் வீணா போயிருமோன்னு மனசு பதறுது பெரிய தம்பி… நான் வேணா மருமக கிட்ட பேசி பாக்காவா? அப்படியாவது அவ கோபம் குறைஞ்சு உன்கூட சகஜமா பேச வாய்ப்பிருக்கு தானே?”
“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லம்மா… நாங்க நல்ல பேசிட்டு தான் இருக்கோம்.. உன் மருமக எண்ணி பேசுறதுல கலெக்டர்னு உனக்கு தெரியாதா என்ன? அதுவுமில்லாம உடனே சகஜமா வாழறதுக்கு நான் என்ன சின்ன வேலையா செஞ்சு வச்சுருக்கேன்… அவளுக்கு மத்தவங்க என்ன சொன்னாலும் நான் அவ பக்கம் நின்றுக்கனும்னு நினைச்சிருக்கா… அது ஒண்ணும் தப்பில்லையே, போக போக சரியாகிடும், சரியாக்கிருவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. நீ எதையும் மனசுல போட்டு குழப்பிக்கமா ரெஸ்ட் எடு… உன் மருமகள பத்தின கவலை உனக்கு வேணாம்” என ஆறுதல் படுத்தினான். ஆனாலும் மனது கேட்காமல் தன் வருத்தத்தை மருமகளிடம் முறையிடவும் செய்தார்.
“என் மேல இருக்குற கோபத்தை என் பையன் மேல காமிச்சு நீயும் சந்தோசமா இல்லன்னு நல்லா தெரியுது எனக்கு, ஆனா என்ன செய்ய? காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டவ, எங்கே என் பையன எங்கிட்ட இருந்து பிரிச்சுடுவியோனு நினைச்சு தான், உன்னை கொஞ்சஞ்கொஞ்சமா ஒதுக்க ஆரம்பிச்சு, அதுவே எல்லை தாண்டி போய், உன்னை பிரிச்சு வச்சு பார்த்துருச்சு.. பெண் குழந்தைய ஒதுக்குறவ இல்ல நான், ஆனாலும் அந்த சமயத்துல கேட்பார் பேச்ச கேட்டு, மனசாட்சி இல்லாம நிறைய ஒத்து வராத காரியத்த எல்லாம் செய்ய வச்சுருசுன்னு நினைக்கிறேன்…”
“இப்போ எதுக்காக அந்த பேச்ச இழுக்கறீங்க அத்த… எல்லா மாமியாருக்கும் வர்ற கவலை தான், உங்களுக்கு கொஞ்சம் அதிகமா வந்துருச்சு, நானும் அங்கே உள்ள பழக்க வழக்கத்தை கத்துகிட்டு, அங்கே இருக்குறவங்களோட பேசி பழக முயற்சி பண்ணிருக்கணும் தானே, அத நான் செய்யலையே? எந்தொவொரு புது விசயமும் ஆரம்பத்துல கஷ்டமா தான் இருக்கும், நான் அதையே பெருசா நினைச்சு மனசுக்குள்ள பூட்டி வச்சுகிட்டேன். இதோட விட்ருங்க…”
“அப்படி சொல்லாதே ரம்யா… நானும் உனக்கு எல்லாமே பக்கத்துல இருந்து சொல்லி குடுத்திருக்கணும், ஆனா தூரமா இருந்து அதிகாரம் பண்ணதோட விட்டுட்டேன். தப்பு எல்லாமே என் பக்கம் தான் ஆரம்பிச்சுருக்கு…”
“நடந்து முடிஞ்சத பத்தி இப்போ பேச வேணாம் அத்த… நானே அத மறக்க முடியாமா முள்ளு மேல நிக்கிறத போல தான் இங்கே இருக்கேன்… நீங்களும் என் மேல பாவபட்டு பேசி என்னை சங்கடப்படுத்தாதீங்க, பெரியவங்க நீங்க என்கிட்டே இப்படியெல்லாம் பேசக்கூடாது”
“அப்படி இல்ல ரம்யா… நாங்க ஒதுங்கி இருந்தா தான் உன்னால இதுல இருந்து வெளியே வர முடியும்னு தோணுது, நான் வேற இடத்துக்கு போக கூட தயார இருக்கேன். நீங்க மனசு விட்டு பேசி சந்தோசமா வாழணும் அதுதான் இப்போ முக்கியம்… உங்கள இப்படி பார்த்துகிட்டே இருக்குறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. இப்படி கேக்குறதும் என்னோட சுயநலம் தான், ஆனாலும் சொல்லாமா, கேக்கமா இருக்க முடியல” மன்னிப்பு கேட்காமல் சமாதான வார்த்தைகள் பேசி வைத்தார்.
“என்னடா இது ஆச்சரியமா இருக்கு, பேசுறது என் மாமியார் தானா? வார்த்தைக்கு வார்த்தை என் புள்ள, என் பையன்னு சொல்லிட்டு இருக்குறவங்க, உன் புருசன்னு சொல்லி மருமக கிட்ட பேசுறாங்க!! அது சரி புள்ளையோட சந்தோசத்துக்கு தானே பேசுறாங்க,,, இல்லனா இவங்க என்கூட இப்படி பேசுவாங்களா என்ன?” என மனதிற்குள் ஆச்சர்யப்பட்டு, தனக்கு தானே ஆறுதல் கூறி அமைதிப்படுத்திக் கொண்டாள்.
“போதும் அத்த மருந்து சாப்பிட்டு பேசமா ரெஸ்ட் எடுங்க… எல்லாமே தன்னாலே சரியாகும், எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு, நீங்களும் அத மனசுல வைங்க”
மருமகளின் இந்த பேச்சில் மீனாட்சி அம்மாள் அசந்து விட்டார். மகன் சொன்னதையே மருமகளும் சொல்லிவிட, இரண்டு பேரும் நல்ல ஜோடி பொருத்தம் தான்… இருவரின் எண்ணங்களும், செயல்களும் ஒன்றாய் தான் பயணித்து கொண்டிருக்கின்றது என்ற ஆறுதல் வந்துவிட, தன் கவலையினை சற்றே ஒதுக்கி வைத்து, அவர்களின் சந்தோஷ நாட்களை காண காத்திருக்க ஆரம்பித்தார்.
மாமியாரிடம் பேசிய பின்பு தன்னை பற்றிய சுய அலசலில் கணவனை பற்றிய நினைவு சற்றே இனிமையை கொடுத்தது எனலாம்.
“எல்லோரும் கவனிச்சு பாக்குற அளவுக்கா நான் என் புருஷனை படுத்தி வைக்கிறேன்… முன்னாடி இந்த குட்டி கூட இருக்குறேன்னு சொல்லிட்டு, என் முன்னாடியே சுத்தி சுத்தி வந்துட்டு இருந்த ஆளு இப்போ ரொம்ப சின்சியர் சிகாமணியா வேலை பாக்க ஆரம்பிச்சுடாரு. நானா ஒதுங்கிப் போக சொன்னேன்? நினைச்சா சுத்தி வர்றது இல்லைன்னா தூரபோறதுன்னு, இவன் தான் கண்ணாமூச்சி ஆடிக்கிட்டு இருக்கான். வரட்டும், கேட்டு வைப்போம் மனசுல என்னதான் நினைச்சுட்டு இருக்கான்னு” மனதில் எண்ணியவாறே
“ஏண்டா குட்டி உங்க அப்பா உன்னை வெளியே கூட்டிட்டு போறதில்லையா? டெய்லியும் லேட்டா வர்றாரு?” மகளிடம் தூண்டில் போட
“நான் சித்தப்பா கூட தம்பிய கூட்டிட்டு போறேன்ம்மா… சண்டே மட்டும் அப்பா கிட்ட கூட்டிட்டு போக சொல்லிருக்கேன், ஹெவிவொர்க் இருக்காம், நானும் ஓகே சொல்லிட்டேன்”
“இவன் பேச்சுக்கு பிள்ளைய கூட தலையாட்டுற மாதிரி சொல்லி வச்சுருக்கான்” என மனதிற்குள் பொருமியவாறே அவனை எதிர் கொள்ள காத்திருக்க, அவன் வந்த நேரம் இரவு 11 மணியை தாண்டி இருந்தது.
“ஏன் இவ்ளோ நேரம்? இதுதான் வீட்டுக்கு வர்ற டைமா?”
“சீக்கிரம் வந்து என்ன செய்ய?”
“ஏன் உங்க பொண்ணு கூட பேசணும், அவள கவனிக்கணும் சொல்லி அலட்டுவீங்களே அதெல்லாம் எங்கே போச்சு?”
“அவ என்னை விட பெரிய மனுசி ஆகிட்டா, மேடம் ரொம்ப பிஸி, அவங்க தம்பி கூட சேர்ந்து விளையாட, அவனுக்கு எழுத சொல்லி குடுக்கனு ரொம்ப பொறுப்பா நடந்துக்குறா, அதான் நான் இடைஞ்சல் பண்ண வேண்டாம்னு தூரமா இருந்து அவகிட்ட காலையில பேசிக்கிறேன்”
“தூரம் அவகிட்ட மட்டும்தானா? இல்ல எல்லோர்கிட்டயுமா?”
“யாரும் என்னை தேடுன மாதிரி தெரியல, அதான் நான் எல்லோருக்கும் தூரமாயிட்டேன்” என்று சொல்லி செல்ல, இவளுக்கு தான் பதில் சொல்ல வாய் வரவில்லை
“இப்போ நான் என்ன சொல்லிட்டேனாம் இவன்கிட்ட? இந்த பேச்சு பேசிட்டு போறான்… ஐயோ பாவமே ரொம்ப கெஞ்ச வச்சோமே!! கொஞ்சம் பேசி வைப்போம்னு பார்த்தா, ரொம்பத்தான் பேசறான் போடா!! உனக்கெல்லாம் லோலோன்னு அலைய விட்டாதான் வழிக்கு வருவே… பெருசா வெளிநாட்டுக்கு போய் வேலை பார்த்துட்டு வந்து என்ன பிரயோஜனம்? பொண்டாட்டி கிட்ட எப்படி நடந்துக்கணும்னு ஒரு புண்ணாக்கும் தெரிஞ்சுக்க முடியல? எப்ப பாரு லாப்டாப் கட்டிட்டு அழுதுட்டு இருக்கான். உனக்கு இந்த ஜென்மத்துல பொண்டாட்டி கூட கொஞ்சி குலாவுற பாக்கியம் இல்லடா” மனதில் சபித்துக்கொண்டே முறைத்து வைத்தாள்.
“பேசினா காது ஜவ்வு கிழியுற அளவுக்கு கொட்டி வைக்குறது, இல்லன்னா ஒரு சிரிப்புக்கு கூட பஞ்சமா நிக்கிறது, இந்த லட்ச்சனத்துல இவன் கூட சந்தோசமா குடும்பம் நடத்திற வேண்டியது தான், நீ வந்து பேசும் போது இருக்குடா உனக்கு?”
மனதிற்குள் வீராவேசமாய் சவால்கள் விட்டாலும், அவன் ஒதுங்கி செல்வதை பொறுக்க முடியாமல் தன் தவிப்பினை முணுமுணுப்புடன் வெளிப்படுத்தி வந்தாள்.
“எல்லோர் கூடவும் பேச நேரமிருக்கு, நம்ம கிட்ட பேச மட்டும் நல்லநாள் பார்த்துகிட்டு இருப்பான் போல? எதிர்ல இருந்தா கூட பேச தெரியல, எனக்கு மட்டும் வேண்டுதலா என்ன?” என அவன் கேட்கும் படியே பேசி வந்தாள்.
மனைவியின் தவிப்பை அறிந்து கொண்டாலும், அவனால் சகஜமாய் பேசிட இயலவில்லை… தனிமை என்பது அரிதாகிப் போனது. அவனுக்கோ அல்லது அவளுக்கோ ஒருவர் மாற்றி ஒருவர் பக்கத்தில் இருப்பது, இருவரின் மனத்தவிப்பை அதிகரிக்க செய்ததே ஒழிய குறையவில்லை.