Puthu Kavithai 15

Puthu Kavithai 15

15

ஓட்டுனரின் இருக்கையில் அமர்ந்திருந்தவன், பக்கவாட்டில் சற்று முன்னே வந்து அவளது தோளோடு சேர்த்து அணைத்துக் கொள்ள, அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை எல்லாம் வெடித்து கிளம்பியது.
அதுவரை கலங்கிய தனது முகத்தையே யாருக்கும் காட்ட விருப்பப்படாதவள், அவனது தோளில் சாய்ந்து அழுது தீர்த்தாள். மதுவை பொறுத்தவரை அவளது கண்ணீரை யாருமே காண அனுமதித்தில்லை. அது என்னவோ சிறு வயது முதலான அப்படியொரு பிடிவாதம் அவளுக்கு. ஒரு வேளை அவளோடு உடன் பிறந்தவர்கள் இருந்து வளர்ந்திருந்தால் இந்த பிடிவாதம் இருக்காதோ என்னவோ? தனியாகவே வளர்ந்ததினால் தன்னுடைய உணர்வுகளையும் பொதுவில் அவள் வைக்க பிரியப்பட்டதில்லை. அது ஒருவிதமான ஈகோ! தன்னுடைய கண்ணீர் யாருடைய பார்வைக்கும் அல்ல என்ற பிடிவாதம்!
ஆனால் இப்போதோ அந்த நொடி வரை தான், தன்னுடைய தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் இழுத்து பிடித்து வைக்க முடிந்தது. அவனது தோளில் சாய்ந்த பின், ஆதரவு தேடும் பூனைக்குட்டியாக அவனது மார்பில் ஒண்டிக்கொள்ளத்தான் முடிந்தது.
ஒண்டிக் கொண்டாள்!
கழுத்தை இறுக்கமாகப் கட்டிக்கொண்டு அழுகையில் கரைந்துப் போனாள்.
என்னவென்று அவளும் சொல்லவில்லை. ஏனென்று அவனும் கேட்கவில்லை. மென்மையாக முதுகை வருடிக் கொடுத்தவனுக்கு அவளது உணர்வு தெளிவாக புரிந்திருந்தது. அவள் விளக்கித்தான் புரிந்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லையே!
பார்த்திபனை பொறுத்தமட்டில் மேலோட்டமாக ஷாலினி கூறினது மட்டுமே! அவளாக எதையுமே அதுவரைக் கூறவில்லை.
கேட்கவும் தோன்றவில்லை பார்த்திபனுக்கு!
இப்போது மதுவுக்கு தேவை தோள் மட்டுமே! எந்த நிலையாக இருந்தாலும், விஷயமாக இருந்தாலும், எதிர்ப்பாக இருந்தாலும் அவள் சமாளிப்பாள்! அவளுக்கு அந்த திறமை கண்டிப்பாக உண்டு… அவள் டீனேஜ் பெண் என்பதையும் தாண்டி, அவளது தன்மையை அறிந்திருந்தான்.
அவ்வளவு தெளிவான பெண் இவள் என்ற தைரியம் பார்த்திபனுக்குள் வந்து நாட்களாகி இருந்தன! அதை இன்று அவன் மனப்பூர்வமாக உணர்ந்தும் விட்டான்.
அப்படி சமாளிக்க முடியவில்லை என்றால் அவன் இல்லையா?
இந்த பார்த்திபன் சமாளிப்பான்…எத்தனை பிரச்சனையாக இருந்தாலும் அது மதுவை அணுக வேண்டும் எனில், அது தன்னைத் தாண்டி தான் என்பதை மிகவும் உறுதியாக எண்ணிக் கொண்டான்.
அழும் வரை அழட்டும் என்று விட்டவன், சற்றே மட்டுப்பட்ட போது,
“என்ன மதுக்குட்டி? இப்ப ஓகேவா?” முதுகை வருடிக் கொண்டே அவன் கேட்க, நிமிர்ந்து அவனை பார்த்தவள், மெளனமாக தலையாட்டினாள்.
அதை ஆமென்று கொள்வதா? இல்லையென்று கொள்வதா? ஆனால் அவளை இந்த நிலையில் மேலும் கேள்வி கேட்காமல்,
“உள்ள போகலாமா மது?” என்று நிகழ்ச்சி நடைபெறும் ஹாலை கைக் காட்டி அவன் கேட்க, அவள் தீர்மானமாக மறுத்துத் தலையாட்டினாள்.
“ம்ஹூம்… வேண்டாம்…” கண்களை துடைத்துக் கொண்டு சற்று தள்ளி அமர்ந்தவள், வாட்டர் கேனை எடுத்து கதவைத் திறந்து முகத்தில் நீரை வாரியடித்தாள்.
சில்லென்ற நீர் முகத்தில் தெறிக்கையில், மனதுக்குள் இருந்த துயரம் கரைந்துப் போனது போல ஒரு தோற்றம்.
ஒரே நேரத்தில் காதலும் பொய்த்து, லட்சியமும் பொய்த்து போன ஆற்றாமை அவளுக்கு!
“மது… இங்க பார்…” என்றவன், அவளை பிடித்து தன் பக்கம் திருப்ப, கைப்பையிலிருந்த டிஸ்யுவை எடுத்து முகத்தை துடைத்துக் கொண்டே,
“சொல்லுங்க மாமா…” என்றவளது முகம் வெகுவாக தெளிந்திருந்தது கண்டு அவனது மனம் திருப்திக் கொண்டது.
“பூனை கண்ணை மூடிக்கிட்டா பூலோகமே இருண்டு போச்சுன்னு நினைக்க முடியுமா மது?” என்று அவன் கேட்க, பதில் கூறாமல் அவனைப் பார்த்தாள்.
“சஞ்சய்யோ ரதீஷோ… அவங்க உன்னோட உலகம் கிடையாது… அவங்களை தாண்டியும் இந்த உலகம் இயங்கிட்டுத்தான் இருக்கு…” என்றவனை,
“நீங்க சொல்ல வர்றது புரியுது… ஆனா…” அந்த ஹாலுக்குள் செல்ல அவளுக்கு பிடிக்கவில்லை.
அதிலும் தான் ஆசைப்பட்ட விஷயத்தை இன்னொருவருக்கு தூக்கிக் கொடுப்பதை பார்க்க, தனக்கு பெரிய மனமெல்லாம் இல்லை.
“ஓடி ஒளிஞ்சுகிட்டா லைப்ல ஜெய்க்க முடியுமா மது? எந்த விஷயமா இருந்தாலும் நேருக்கு நேரா ஃபேஸ் பண்ணனும்… பிரச்சனையை பார்க்காம ஓடிட்டா மறுபடியும் அதை பார்க்க மாட்டியா?” என்று அவன் கூற, மது எதுவும் கூறாமல் அவனைப் பார்த்தாள்.
“நாளைக்கே நாம இப்படி பண்ணிருக்க கூடாதோன்னு நினைக்க தோணும்… சஞ்சய்யை மிஸ் பண்ணிட்டமோன்னு சந்தேகம் வரும்… அப்ப தேவையில்லாம உனக்கு இன்னொரு குழப்பம் வரும்… இது தேவையா? எதுவா இருந்தாலும் இப்பவே கிளியர் பண்ணிக்க…” என்று அவன் உறுதியாக கூற,
‘இவனுக்கு அதற்குள் விஷயம் வந்துவிட்டதா? எவ்வளவு தூரம் இவனுக்கு தெரியும்? எப்படி?’ குழப்பமாக பார்த்திபனை பார்த்தாள்.
“ஷாலினி தான் சொன்னாப்ல…” என்று அவளது புருவத்தை நீவி விட்டவன், அவளது கன்னத்தில் தனது உள்ளங்கையை வைத்து அழுத்தினான். அந்த அழுத்தம் அவளுக்கு உள்ளுக்குள் நூறு யானை பலத்தை தருவது போல இருந்தது.
பார்த்திபன் தொட்டு பேசுபவன் அல்ல. எப்போதுமே ஒரு ஒதுக்கம் அவனிடத்தில் இருக்கும். அவனும் ஒதுங்கி யாரையும் அருகில் கூட அண்ட விட்டவனில்லை.
மதுவுடன் இந்த சில காலங்களில் தான் பேச்சுவார்த்தை கூட சற்று முன்னேற்றமே தவிர, அத்தனை நாட்களில் பேச்சும் கூட அரிதுதான். அவளாக தொட்டுப் பேசினால் கூட தள்ளி நின்றவன். அதுவும் அவன் காரியமாகவே தள்ளி நின்றதில்லை. அது அவனது இயல்பு, அவனது குணம், அவனது பழக்கம். பழக்கத்தை கூட மாற்ற முடியும், இயல்பான குணத்தை மாற்ற முடியுமா?அதிலும் இப்படி செய்யாதே, அப்படி செய்யாதே என்ற ஆதிக்கம் தான் அவனது வார்த்தைகளில் பெரும்பாலான நேரங்களில் இருக்கும். மதுவை எரிச்சல்படுத்துவதும் அது போன்ற உத்தரவுகள் தான்.
ஆனால் அந்த நேரத்தில், அவளது நிலை புரிந்தவனுக்கு, தள்ளியே நிற்க முடியவில்லை. ஏனென்றால் இந்த நிலைகளை கடந்து வந்தவன் தானே அவனும்.
இலட்சியங்கள் கண் முன்னே காணமல் போகும் வலி என்னவென்று அவனுக்கு தெரியும். அதே நேரத்தில் காதலும் காணலாகி, பின் கனலாகி உயிரை எரிக்கும் வலியையும் அனுபவித்தவன் என்பதால், அதே நிலையில் நின்றிருந்த மதுவை அவனையும் அறியாமல் தன் மேல் தாங்கிக் கொண்டான்.
“இப்ப நீ என்னோட உள்ள வர்ற… எல்லாருமா சேர்ந்து ப்ரோக்ராமை பார்க்கறோம்… அப்புறமா ரெஸ்டாரன்ட் போய் நல்லா சாப்பிடறோம்… அப்புறம் கொஞ்ச நேரம் பீச்ல டைம் ஸ்பென்ட் பண்றோம்… அப்புறமா உன்னை வீட்ல விட்டுட்டு நானும் உன் அம்மாச்சியும் கிளம்பறோம்… சரியா?” என்று கேட்க,
“ம்ம்ம் எல்லாம் சரி… நீங்க வேண்ணா ப்ரோக்ராம் பார்த்துட்டு வாங்க… நான் வரலை…” அவள் பிடிவாதமாக கூற, அவளது மனம் எதனால் சங்கடப்படுகின்றது என்பதை நன்றாகவே உணர்ந்தான் பார்த்திபன். ஆனால் மதுவை அப்படியே விட்டுவிடவும் மனம் வரவில்லை.
“என் மேல உனக்கு கொஞ்சமாவது நம்பிக்கை இருந்தா வா மது…” அதற்கும் மேல் அவள் பேசவில்லை. சம்மதமாக தலையாட்ட, அவளது கையை பிடித்துக் கொண்டு உள்ளே சென்றான்.
பார்த்த மாத்திரத்தில் இந்த மேடை இன்று தனக்கு சொந்தமாகிருக்கலாம் என்ற ஒரு நினைப்பு சட்டென்று அவளது மனதுக்குள் ஓடியது.
நினைக்கும் போதே உள்ளிருந்து ஒரு கேவல் எழும் போல இருந்தது.
தைரியமாக மறுத்துவிட்டு வந்திருக்கலாம் ஆனால் அத்தனை நாட்களாக சேகரித்து வைத்த கனவு ஒரு நொடியில் ஆவியானதை அவளால் அவ்வளவு இயல்பாக எடுத்துக் கொள்ள முடியவில்லை என்பதே உண்மை.
அத்தனை நாட்களும் இதை தவிர அவள் வேறு எதையும் எண்ணியதில்லை. ஒவ்வொரு நொடியும் அவளது லட்சியத்தை பற்றிய கனவு மட்டுமே. ஆனால் இப்போது அதை விட்டுக் கொடுத்து, அதை இன்னொருவர் கைப்பற்ற போவதையும் தான் சாட்சி பூதமாக இருந்து பார்க்க போவதை பற்றி நினைத்தால் மனம் குமுறியது.
ஒரு வேளை கலந்து கொண்டு தோற்று போயிருந்தால் கூட இந்த வலி கண்டிப்பாக இருக்காது. ஆனால் கலந்து கொள்ள முடியாமல் வலுக்கட்டாயமாக கைவிட வேண்டிய சூழல். அந்த சூழலை அவ்வளவு இயல்பாக கடந்து விட முடியும் என்று தோன்றவில்லை.
பார்த்திபனின் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.
இல்லை… இனி நினைக்கக் கூடாது! நினைக்கவே கூடாது!
நினைத்தால் தன்னையும் அறியாமல் தோன்றும் ஆற்றாமையால் தனது இயல்பு மாறிவிடக் கூடும். வேறெதையும் காட்டிலும் கண்ணியம் மிக முக்கியம்.
அந்த கண்ணியமில்லாத வெற்றியும் அதற்கான வழிமுறைகளும் தனக்கு தேவையற்றது!
பெரிதாக மூச்சை வெளியே விட்டு, தீர்மானமாக நினைத்துக் கொண்டவள், பார்த்திபனின் இடது கையை இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டு மேடையை நேராக பார்க்குமாறு பின்னால் நின்று கொண்டாள்.
மனம் மெதுவாக சமன்பட துவங்கியது.
ஓரக்கண்ணால் மதுவை பார்த்த பார்த்திபனுக்கு தெளிந்த அவளது முகம் வெகுவான திருப்தியை கொடுத்தது.
நடுங்கும் கரங்களால் தன்னுடைய கையை இறுக்கமாக பற்றியிருந்தவளை தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
எப்படியும் அவளை வெளியே கொண்டு வந்துவிடலாம் என்ற நம்பிக்கை பிறந்தது. அவள் இந்த ஆற்றாமையிலிருந்து வெளிவந்து விட்டால் மதுவின் எண்ணப்போக்கை மாற்றுவதும் அவளை மடைமாற்றுவதும் பெரிய வேலையாக இருந்துவிடாது என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை!
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை!
பார்த்திபன் மதுவின் தோளோடு சேர்த்து அணைத்துக் கொள்ள, மதுவுக்கு ஏனோ பலம் கூடியது போல தோன்றியது. மேடையின் பின்புறமிருந்து சஞ்சய் தங்களை பார்ப்பதை உணர்ந்தவள், பார்த்திபனோடு இன்னும் நெருங்கி நின்று கொண்டாள்.
சஞ்சய்க்கு உள்ளுக்குள் கொதித்தது. திரும்பியும் பார்க்காமல் சென்றவளை அப்போதே சமாதானப் படுத்தி இருக்கலாம். ‘ஆனால் ஷோ ஆரம்பிக்க சில நிமிடங்களே இருக்கும் போது அதை விடுத்து காதலியை சமாதானப்படுத்த போக முடியாதே’ என்று அப்போது பல்லைக் கடித்துக் கொண்டான்.
இப்போது பார்த்திபனோடு அவளை சேர்த்துப் பார்த்தவனுக்கு நரம்புகள் தீப்பிடித்து விடும் போல இருந்தது. பார்த்திபனால் தான் அத்தனையும் என்ற அவ்வளவு கோபம்!
அவளை ரதீஷ் காட்டி கேலியாக சிரித்தது வேறு உள்ளுக்குள் கோபத்தை பலமடங்கு அதிகப் படுத்தி இருந்தது.
சஞ்சய்க்கு மதுவை மிக மிகப் பிடிக்கும். அவனைப் பொறுத்தமட்டில் அது காதல்!
காதலுக்கு அவன் கொண்ட விளக்கமும் பெஞ்ச் மார்க்கும் வேறு!
மது கொண்ட விளக்கமும் பெஞ்ச் மார்க்கும் வேறு!
அதை அவன் உணரவில்லை. இவன் இப்படித்தான் என்பதை அவளும் உணரவில்லை. வயதுக் கோளாறு என்பதை தாண்டி சொல்ல வேறு என்ன இருக்கிறது?
இப்போது பார்த்திபனோடு நின்றுக் கொண்டிருந்த மதுவை பார்க்க பார்க்க கோபம் எல்லை மீறிக் கொண்டிருந்தது. அவ்வளவு தெளிவாக நின்று கொண்டிருந்தாள், முகத்தில் சிறு தயக்கமும் வருத்தமும் இல்லாமல்!
அருகில் நின்றவனது முகம் தான் சற்று இறுகியிருந்தது. அவன் எப்போதுமே அப்படித்தானே என்று நினைத்துக் கொண்டான் சஞ்சய்.
“சஞ்சய் என்ன பண்ணிட்டு இருக்க? எல்லாம் ரெடியான்னு பாரு…” கோ ஆர்டினேட்டர் தான்யா கொடுத்த குரலில் மனதின் குழப்ப எண்ண குவியலிலிருந்து மீண்டான்.
‘இவளை இப்படியே விட்டுவிட முடியாது.’ என்று அவனது மனம் பிடிவாதம் பிடித்தது.
‘எப்படி விட முடியும்? இத்தனை நாட்களாக தன் கைகளில் இருந்த காதலியை விட்டு விட முடியுமா? அது தன்னால் ஆக கூடிய ஒன்றா? அவள் இல்லாமல் இருக்க முடியுமா? அவளுக்கு தான் அறிவில்லாமல் பெரும்பாடு பட்டு கிடைத்த சந்தர்ப்பத்தை தூக்கி எறிந்து விட்டு செல்லும் அளவு புத்தி மழுங்கி விட்டதென்றால் அவளை அப்படியே விட்டு விட முடியுமா?’
உள்ளுக்குள் கோபம் கனன்றது சஞ்சய்க்கு. ஆனால் அந்த நேரத்தில் அவனால் எதையும் பேச முடியவில்லை. ரதீஷ் வேறு ஓரக்கண்ணில் பார்த்துக் கொண்டே இருந்தான்.
மதுவுக்கு பதிலாக ஷிவானி ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்ட மகிழ்ச்சியை அவன் கொண்டாடிக் கொண்டிருந்தான். எப்படியும் ஷிவானியை ட்ரம்ப் கார்டாக்கி நிறைய விஷயங்களை சாதித்துக் கொள்ளலாம்.
எத்தனையோ விஷயங்களுக்கு அவள் கண்டிப்பாக பிள்ளையார் சுழியாக இருப்பாள் என்பதில் ரதீஷுக்கு சந்தேகம் இல்லை. தன்னுடைய லாபி வீணாகி விடவில்லை என்பதில் அவனுக்கு அளவிட முடியாத மகிழ்ச்சி.
மதுவுக்கு பதிலாக ஷிவானியை இங்கு வேண்டுமானால் களமிறக்க முடியும். ஆனால் வாழ்கையில்?
நினைத்துப் பார்த்த சஞ்சய்க்கு உள்ளுக்குள் வெப்பம் பற்றி எரிந்தது.
அது அவனை மட்டுமல்ல, அவளையும் சுட்டு பொசுக்கத் தயாராக இருக்கும் வெப்பம் என்பதை அவன் அறியவே இல்லை.
மாடல்கள் ஒவ்வொருவருவராக மேடையில் பூனை நடை பயின்று வர, அதை பார்த்த சஞ்சய்க்கு உள்ளுக்குள் கோபம் கொதித்தது. இத்தனை நாட்களாக எவ்வளவு சிரமப்பட்டு இந்த நிலை வரை கொண்டு வந்துவிட்டு, பெரிதாக கலாச்சாரமென்று மறுத்து விட்டு போனவளை நினைத்து வந்த கோபம்.
விட முடியாது!
அவளை விடவே முடியாது!
எந்த காலத்திலும், நேரத்திலும் அவளை விட்டு விட முடியாது!
அவளை சிறை எடுத்தாவது தன்னருகில் கொண்டு வந்தே தீர வேண்டும்!
இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்தே
என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ விதச்ச
அடி தேக்கு மரக்காடு பெரிசுதான்
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசுதான்
ஒரு தீக்குச்சி விழுந்து துடிக்குதடி
கருந்தேக்கு மரக்காடு வெடிக்குதடி
அவளருகில் தான் மட்டுமே இருக்க வேண்டும்… தான் அனுமதித்தால் மட்டுமே மற்றவர்… ஆனால் பார்த்திபன் இருக்கக் கூடாது!
இருக்கவே கூடாது!
வெறியோடு சஞ்சய் மதுவை பார்க்க, அதை உதட்டோர விஷமப் புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தான் ரதீஷ்.
இதை அவன் எதிர்பார்த்திருந்தான். இந்த நிலைக்கு சஞ்சயாக வராவிட்டாலும் ரதீஷ் வர வைத்திருப்பான். இப்போதும் என்ன? பின்னணியில் அவனது தூண்டுதல் இல்லாமலா இருந்தது?
நேரடியாக கொலை செய்தால் தான் கொலையென்று சட்டம் சொல்லலாம்… ஆனால் அந்த சட்டமும் கூட கொலைக்கு தூண்டியவனுக்கு தண்டனை அதிகமென்று தான் கூறுகின்றது. ஆனால் தூண்டி விட்டதையும் எதிராளி அறிய முடியாமல் காரியமாற்ற முடியும் என்றால் அது ரதீஷை போன்றவர்களால் தான் முடியும்.
ரதீஷ் அவனது விளையாட்டை ஆரம்பித்து இருந்தான். சஞ்சய் அவனது கைப்பாவையாகி இருந்தான்.
“அன்ட் தி வின்னர் இஸ் ஷிவானி சக்ஸேனா…” மேடையில் அறிவிப்பாளர் ஆரவாரமாக அறிவிக்க, ரதீஷின் முகத்தில் வெற்றிக் களிப்பு.
ஷிவானி அவனது கருவியாகியிருந்தாள்.
ஷாலினி உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஷிவானியின் முகமோ மகிழ்ச்சியில் விகசித்தது. வெற்றி தரும் களிப்பு அவளது அழகை பன்மடங்காக்கியிருந்தது. எதிர்பாராமல் கிடைத்த பொக்கிஷம் இந்த வெற்றி.
பார்த்திபனை இன்னும் ஒட்டி நின்ற மதுவுக்கு உடல் நடுங்கியது.
கண் முன்னே வாழ்க்கை பறிபோய் விட்டதாக தோன்றியது அவளுக்கு!
ஆனால் இனிதான் வாழ்க்கை அதன் ஆடுபுலி ஆட்டத்தை ஆடப் போவதை அவள் அறியவில்லை.
உண்மைக்கு மாற்று எதுவுமில்லை. இடம் பொருள் ஏவலில்லை. கசப்பாகத்தான் இருக்கும். விழுங்கித்தானாக வேண்டும். வேறு வழியில்லை. பொய்யையும் போலித்தன்மையையும் விழுங்குவதை விட அது மேலானது.
அடுத்த நாள் ஷிவானி அவளைத் தேடி வந்தாள்.
16
அன்று காரமடை தொழிற்சாலையில் மிக முக்கியமான கூட்டம் நடைபெற்றதால் முந்தைய தினம் இரவே சென்னையிலிருந்து கிளம்பியிருந்தான் பார்த்திபன். சகுந்தலாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் முட்டி வலி அதிகமாக இருந்ததால் அவரால் அவனோடு பயணிக்க முடியவில்லை.
சற்று வலி குறைந்ததும் காரமடை வருவதாக அவர் கூறவே அவன் மட்டும் கிளம்பியிருந்தான், ஆயிரம் அறிவுரைகளை மதுவுக்கு கூறிவிட்டு!
மதுவை மேடையில் பார்க்க முடியாத சிறு வருத்தமும், ஏமாற்றமும் வினோதகனுக்கும் பானுமதிக்கும் இருந்தாலும் மதுவந்தியின் முடிவு அவர்களுக்கும் பெருமையாகத்தான் இருந்தது, இவ்வளவு தெளிவாக மறுத்துரைப்பவளா தங்கள் மகள் என்ற பெருமிதமான கேள்வியோடு!
“டேய் குட்டி… அதான் சூப்பரா அவங்களுக்கு நோஸ்கட் கொடுத்துட்டியே, அப்புறமும் ஏன் இப்படி மூட் அவுட்டா உட்கார்ந்துட்டு இருக்க? கமான் சியர் அப் பேபி…” என்று வினோதகன் அவளை எழுப்பி தோள் மேல் கைப்போட்டுக் கொண்டு இயல்பு நிலைக்குக் கொண்டு வர முயல, சிறிதாகி விட்ட முகத்தோடு, அவரது கையை எடுத்துவிட்டு,
“ப்பா… புரியுதுப்பா… ஆனா எனக்கு ரிக்கவராக கொஞ்ச நாளாகும்…” என்று மீண்டும் அமர்ந்து கொள்ள,
“ஆமா… இந்த நாசா விஞ்ஞானி அனுப்புன ராக்கெட் மேல பாயாம, கடல்ல குதிச்சுடுச்சாக்கும்? மூஞ்சியை தூக்கி வெச்சுக்கிட்டே இருக்கா… அடச்சீ எந்திரி…” வேடிக்கையாக பார்த்திபன் அவளை எழுப்ப, அவனைப் பார்த்து முறைத்தாள்.
“மாமா… ப்ளீஸ்… உங்களால என்னோட பீலிங்ஸை புரிஞ்சுக்க முடியாது… என்னை விட்டுடுங்க…” சில மணி நேரங்களுக்கு முன் அவனது தோளில் சாய்ந்துகொண்டு அழுததையும், அவனது புரிதலை அவளையும் அறியாமல் உணர்ந்ததையும் சிறு பிள்ளையாக மறந்து விட்டு மீண்டும் எரிச்சலாக கூறினாள்.
“என்ன மது உன் மாமனால புரிஞ்சுக்க முடியாது? எல்லாருமே உன் வயசை தாண்டி வந்தவங்க தான்…” பானுமதி ஒரு பக்கம் குரல் கொடுக்க,
“மதிக்கா… கொஞ்சம் சும்மா இரு…” என்று அவரைப் பார்த்து கூறியவன், “மதுப்பாப்பா…” என்று ஆரம்பிக்க, நிமிர்ந்து பார்த்த மதுவின் பார்வையில் டிஎம்டி பார் கொதித்தது.
“நான் பாப்பாவா?” கடுப்பாக அவள் கேட்க,
“இல்லையா பின்ன? இப்படி உட்கார்ந்து மூக்கை உறிஞ்சுட்டு இருந்தா எல்லாருமே உன்னை பாப்பான்னு தான் சொல்வாங்க பாப்பா…” என்று சிரிக்காமல் கூற, எல்லோரும் அவனைப் பின்பற்றி,
“பாப்பா… பாப்பா…. மதுப்பாப்பா…” என்று கிண்டலாக கூற, அவள் காதை மூடிக் கொண்டாள்.
“ம்மா… உன் தம்பியோட சேர்ந்துகிட்டு என்னை நீ கிண்டலடிக்கிறியா?” அந்த நிலையிலும் பானுமதியிடம் மல்லுக்கு நின்றவளை பார்த்து சிரித்தான் பார்த்திபன். இதுதான் மது!
சிரித்து முடித்த சகுந்தலா, “மதுக்குட்டி, நாங்க எல்லாருமே உனக்காக தான் இருக்கோம்… என்னோட ஒரே பேத்தி நீ… இந்த பக்கத்துக்கும் சரி, உங்க அப்பா பக்கத்திலும் சரி, நீ தான்டா ராஜகுமாரி… எல்லாத்துக்கும் ஒரே வாரிசு… நீ போய் கலங்கி உக்காரலாமா? நாங்கல்லாம் எதுக்கு கண்ணு இருக்கோம்?” மிகவும் தீவிர முக பாவத்தோடு கூற, பார்த்திபன் அவசரமாக இடையிட்டான்.
“ஹலோ ஹலோ… என்ன? என்னை மறந்துட்டு அத்தனையையும் தூக்கி உன் பேத்தி கைல குடுத்துடுவியா?” வேண்டுமென்றே வம்பிழுக்க, அவனை பார்த்து கிண்டலாக சிரித்தார்.
“நீ எப்படியும் கல்யாணம் பண்ண போறதில்லை… சாமியாரா போகப் போறதா பேச்சு வருதே பார்த்தி… அதான் என்னோட பேர்ல இருக்கறது எல்லாம் என் பேத்திக்கு மட்டும் தான்…” சிரிக்காமல் அவர் கேலி செய்ய, மற்ற மூவரின் முகத்திலும் அதே கிண்டல் சிரிப்பு. விளையாட்டாக கூறினாலும் அவரது ஆசை அதுதான். அதற்கு கண்டிப்பாக பார்த்திபன் எதுவும் கூறப் போவதில்லை தான். ஆனாலும் வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தான் அவன்.
“அதனால? எல்லாத்தையும் தூக்கி உன் பேத்திக்கு குடுத்துடுவியா?”
“ஆமா… நீ ஒரு கல்யாணம் பண்ணி, பேரனோ பேத்தியோ என் கைல குடுத்துட்டு இப்படி போட்டிக்கு வந்தா பரவால்ல… ஒண்ணுமே இல்லாம இப்படி போட்டி போட்டா நாங்க என்ன பண்றது?”
“ம்மா… இதெல்லாம் உனக்கே ஓவரா இல்ல?”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல… சரி இப்பவும் ஒன்னும் கெட்டு போய்டல… சக்ரவர்த்தி நம்ம பதிலுக்காக காத்துட்டு தான் இருக்காப்ல… சொல்லிடவா?” என்று சகுந்தலா பார்த்திபனுக்கு கிடுக்கி பிடி போட, என்ன சொல்வது என்று தீவிரமாக ஆராய்ந்தான்.
“ம்மா… ஈஸ்வரமூர்த்தி குத்தகை பணத்தை தந்தாரா? அந்த ஆள் ரொம்ப லேட் பண்றாப்ல… அடுத்த வருஷம் குத்தகையை மாத்தி தந்துடலாமா?” சம்பந்தமே இல்லாமல் கேட்டவனை ஒரு மார்கமாக பார்த்து வைத்தார் சகுந்தலா.
“அந்த ஈஸ்வரமூர்த்திய நான் பார்த்துக்கறேன்… நீ ஒழுங்கா என் கேள்விக்கு பதில் சொல்லு…” என்று அவனுடைய தாய் அவரென்று சகுந்தலா நிருபிக்க, மது இப்போது வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்கத் துவங்கியிருந்தாள்.
“அம்மாச்சி… மாமாவை பத்தி என்ன நீ நினைச்ச? அவருக்கு எத்தனை ஆஃபர் இருக்கு… எவ்வளவு போட்டி இருக்கு?! நீ என்னடான்னா பொசுக்குனு இப்படி கேக்கறியே?!” பார்த்திபனை கேலியாக பார்த்தபடி, அவள் பங்குக்கு கிண்டல் செய்ய, அவன் கண்களால் எச்சரிக்கை செய்தான், ‘சொல்லிவிடாதே’ என்று!
அவள் பேசியது ஷாலினியை நினைத்துதான் என்றாலும், அஞ்சலியை பற்றிய பேச்சு வந்து விடுமோ என்ற கவலை அவனுக்கு. வெகு வருடங்கள் கழித்து இது போல சேர்ந்திருக்கும் சந்தர்ப்பத்தை அஞ்சலியை பற்றி பேசி இன்னொரு முறை கசப்பாக்க விரும்பவில்லை. பாதிக்கப்பட்டவன் அவன் தான் என்றாலும், வினோதகனின் மேல் கோபம் இருந்தாலும் இந்த நேரத்தில் அவள் பற்றிய பேச்சு எதற்கு என்ற எண்ணம் அவனுக்கு!
“ஏய் வாண்டு… ஒழுங்கா போய் படுத்து தூங்கு… அதை விட்டுட்டு வெட்டியா பேசிட்டு இருக்க நீ…” அவளை விரட்டப் பார்க்க,
“மாமா… உங்க ரகசியம் வெளிய வந்துடும்ன்னு பயப்படறீங்களா?” கண்ணை சிமிட்டியபடி மது கேட்க, அவனுக்கே அந்த ரகசியம் என்னவென்று புரியவில்லை. ஆனால் மற்றவர்களோ,
“ரகசியமா? அடப்பாவி… பார்த்தி நீயா?” என்று வாயை பிளந்தனர்.
“என்னது ரகசியமா?” அவனும் புரியாத பார்வையோடு கேட்க,
“ம்ம்ம் பின்ன?” என்றவள், தன்னுடைய அம்மாச்சியையும் தாயையும் நோக்கி, “அங்க ஒருத்தி இவரை பார்த்து உருகோ உருகுன்னு உருகிட்டு இருக்கா… எக்கச்சக்கமா சைட்டா அடிச்சுட்டு இருக்கா… இவரும் க்ரௌநட் பேக்டரியே ஓபன் பண்ணிருக்கார்… இதெல்லாம் தெரியாம நீங்கள்லாம் இவர நல்லவன்னு நம்பிட்டு இருக்கீங்க…” என்று சிரித்துக் கொண்டே போட்டுக் கொடுத்துவிட, மற்ற மூவரும் கண்களை விரித்து, “அடப்பாவி…” என்று அவனைப் பார்க்க,
“ஏய்… பாப்பா… நான் க்ரௌநட் பேக்டரி ஓபன் பண்ணதை நீ பார்த்தியா? ஏதோ சும்மா பேசினது… அதெல்லாம் ஒரு கணக்கிலேயே வராது…” தன்னுடைய நிலையை விளக்கிவிடத்தான் அவன் முயன்றான். ஆனால் அதிலேயே அவன் மாட்டிக் கொண்டு விட,
“போதுமா? இவரே ஒத்துக்காச்சு… என்ன அம்மாச்சி? உன் பையன் சாமியாராவா போக போறாப்ல?” என்று கேட்டு கண்ணடிக்க,
“பார்த்தி… மதுக்குட்டி சொல்றதெல்லாம் உண்மையா?” சகுந்தலா ஆச்சரியமாக கேட்டார். பின்னே, இப்படி எதாவதாவது செய்தி வந்து அதுவாவது உண்மையாகாதா என்ற ஆசை அவருக்கு. அவரும் தான் என்ன செய்வார்? தன் மகனின் குணம் அறிந்தவராயிற்றே!
ஆனால் அவரும் பானுமதியும் மறந்த விஷயம் என்னவென்றால் எந்த ஆணும் திருமணம் வேண்டாமென்று அவ்வளவு சுலபத்தில் சொல்லி விட போவதில்லை. தான் திருமணமே செய்து கொள்ள போவதில்லை என்றும் இறுகி இருக்கவும் போவதில்லை. அப்படி இருந்தால் அதற்கு கண்டிப்பாக ஒரு வலுவான காரணம் இருக்க வேண்டும். நிறைய வலிகளின் தாக்கங்கள் இருக்க வேண்டும்.
காயங்கள் ஆறிவிடலாம். ஆனால் தழும்புகள் மறைய வேண்டுமல்லவா! அந்த தழும்பை மறக்க வேண்டுமென்றால் அதை ஈடு செய்யும் பெண் வேண்டும்… அந்தப் பெண்ணை பார்க்காத வரை, அவள் அந்த காயத்துக்கு மருந்தாகும் வரை, அந்த ஆண் மாறப் போவதில்லை.
சில விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் அவையே விதிகளாவதில்லை!
வியப்பாக கேட்ட தாயை பார்த்து முறைத்தவன், மதுவையும் முறைத்தான்.
“ம்மா… இந்த லூசு சொல்லுதுன்னு நீயும் கேக்கற?” என்றவனை,
“ஹலோ யாரை லூசுன்னு சொல்றீங்க?” மது முறைத்தாள்.
“வேற யாரு? நீதான் லூசு… கொஞ்சமாவது அறிவு இருந்தா, இப்படி ஒரு காசிப்பை பரப்பி விடுவியா? இப்படித்தான் அந்த பொண்ணு கிட்டயும் பேசிட்டு இருக்கியா?” கடுப்பாக மதுவை திட்ட, அவள் உதட்டை வளைத்து முறைத்துப் பார்த்தாள்.
பானுமதிக்கும் சகுந்தலாவுக்கும் இது சுவாரசியமான விளையாட்டாக இருந்தது. வினோதகன் கண்டுக்கொள்ளவே இல்லை. கண்டுகொண்டால் மீண்டும் பார்த்திபன் தன்னுடைய வளைக்குள் சுருண்டு கொண்டால் என்னாவது என்ற பயம் வேறு. ரத்தம் சூடாக இருக்கும் போது எப்படி வேண்டுமானாலும் ஆடி விடலாம். ஆனால் வயதாகும் போது, தெளிவு வரும் போது, தான் செய்த தவறுகளின் வீரியம் புரிகின்றது.
அதிலும் வளர்ந்து நிற்கும் தன் மகள் மதுவந்தியை பார்க்கும் போதெல்லாம் ஒற்றையாக இருக்கும் பார்த்திபனுக்கு தான் செய்தது மிகவும் அநியாயமோ என்று அவ்வப்போது மனம் சாட்டையை எடுத்து விளாசுகிறது.
அப்போது நல்லதாக நினைத்தது, இப்போது இப்படியாகும் என்று அவரும் நினைக்கவே இல்லையே!
அப்போது அவர் தெரிந்து செய்த தவறுகளை அவன் சுலபமாக சமாளித்து விட்டான். ஆனால் அறியாமல் செய்த பிழை இன்று பாவமாகி நிற்கிறதே!
“அவளை ஏன்டா திட்டற? ஒரு ஆர்வத்துல தானே சொல்றா? நீ ஒழுங்கா ஒரு கல்யாணத்தை பண்ணியிருந்தா, நாங்க உன்னை ஏன் கண்டுக்கறோம்? சரி அந்த பொண்ணு யாரு? உனக்கு பிடிச்சுருந்தா எங்களுக்கு எந்த தடங்கலும் இல்லை தம்பி…” என்று சகுந்தலா பார்த்திபனை பிலுபிலுவென்று பிடித்துக் கொள்ள,
“ம்மா… இவ சொல்றான்னு சீரியஸா பேசாதே… அதுவும் இந்த மதுவை போல ஒரு வாண்டு… ரெண்டும் ஃப்ரெண்ட்ஸ்… சும்மா ஒன்னு ரெண்டு தடவை பேசியிருக்கு… அதுவும் இது விஷயமாத்தான்… அதுக்கு தான் இவ ஓவர் பில்ட் அப் கொடுக்கறா…” என்று விரிவாக விளக்கவும் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு சப்பென்றாகி விட்டது.
பாவமாக மதுவை பார்க்க, அவளது கண்களில் குறும்புக் கூத்தாடியது.
“அம்மாச்சி… இன்னும் எத்தனை நாள் இப்படி இருக்காருன்னு பார்த்துடலாம்… கத்தரிக்காய் முத்தினா கடைத்தெருவுக்கு வந்துதான் ஆகணும்ன்னு நீ தானே சொல்லிருக்க…” என்று சிரிக்க, அவனாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.
“வாலுப் பொண்ணே… ஓடிடு…” என்று அவன் கை ஒங்க, அவள் சிரித்துக் கொண்டே ஓடிப் போனாள் தனது அறைக்கு.
அழுது வடிந்து கொண்டிருந்த மகள், இப்படி சிரித்த முகமாக ஓடுவதை பார்த்த வினோதகனுக்கு மனம் திருப்தியாக இருந்தது. காரணம் பார்த்திபன். அவனை நன்றியாக பார்த்தார். அவனோ அவரது பார்வையை ஏற்கவில்லை.
“பரவால்லை பார்த்தி… கொஞ்சம் தேறிட்டா…” என்று மகிழ்ச்சியோடு பானுமதி கூற, அவனோ கிண்டலாக சிரித்தபடி,
“அக்கா… உன் பொண்ணு இன்னும் நாலு பேரை தேத்திடுவா! அவ்ளோ தெளிவு… நாம தான் கவலைப்பட்டுட்டு இருக்கணும்…” என்று கூற, சகுந்தலா இல்லாத காலரை ஏற்றிவிட்டுக் கொண்டார்.
“பின்ன? யாரோட பேத்தி?!!” என்று சிரிக்க,
“ம்மா… இந்த பெருமைக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை…” என்றவன், சற்று யோசிப்பது போல பாவனை செய்து,
“ஊருக்கு போனவுடனே இந்த கிழவியோட கையெழுத்தை முதல்ல வாங்கி வைக்கணும்… விட்டா பேத்தி பேத்தின்னு எல்லாத்தையும் அவளுக்கே குடுத்துடும்…” சப்தமாக அவன் யோசிக்க, ‘அடப்பாவி’ என்பது போல சகுந்தலாவும், பானுமதியும் வாய் மேல் கை வைத்துக் கொண்டனர்.
இரவு நடந்ததை நினைத்து பார்த்தவனுக்கு அந்த கூட்டத்தின் நடுவிலும் புன்னகை மலர்ந்தது.
தொழிற்சாலை விரிவாக்கத்துக்கான கூட்டம் அது!
சுமார் ஐம்பதாயிரம் டன் வருட உற்பத்தியை இரண்டு பங்காக பெருக்குவதற்காக மாவட்ட நிர்வாகத்திடமும் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகளிடமும் சம்மதம் பெறுவதற்காக கூட்டப்பட்ட கூட்டம். எப்படியிருந்தாலும் பணம் தான் பேசும் என்றாலும், பெயரளவிற்கு ஒரு கூட்டத்தை நடத்தி மினிட்சை ஒப்படைக்க வேண்டியது அதிகாரிகளின் கடமையாயிற்றே!
டிஎம்டி கம்பிகள் மட்டுமல்லாது, இரும்பு பெல்லட்ஸும், இரும்பு குண்டுகளையும் முக்கியமாக உற்பத்தி செய்து கொண்டிருந்தது அந்த தொழிற்சாலை.
இரும்பு பெல்லட்களை பவுண்டரிகளில் காஸ்டிங் செய்யவும், இரும்பு குண்டுகள் பெரும்பாலும் கியர்கள், பேரிங்குகள் செய்வதற்கும் பயன்படும்… கியர் என்றால் சிறு கியர்கள் முதல் ராட்சச இயந்திரங்களை இயக்கும் ராட்சச கியர்களும் கூட அடங்கும்.
பெருமளவில் நீர் உபயோகம் இருப்பதால், சுற்றுசூழல் அதிகாரிகளிடம் கண்டிப்பாக ஒப்புதல் பெற்றே ஆக வேண்டிய கட்டாயம் உண்டு. அதோடு மிக சூடான நீரை வெளிவிட வேண்டிய அவசியமும் இருப்பதால், சூழலை பாதிக்காத அளவு அந்த நீரை வெளியேற்ற வேண்டிய கட்டாயமும் உண்டு.
அருகில் உள்ள மனிதர்கள், உயிரினங்கள், பசுமைக்கும் எந்த தீங்கும் வராது என்பதை அவர்கள் தான் உறுதி செய்ய வேண்டும்.
கூட்டம் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
“சுமார் எவ்வளவு இன்வஸ்ட் செய்யலாம்ன்னு இருக்கீங்க பார்த்திபன்?” போரடித்த மினிட்ஸ் கூட்டத்தின் அழுத்தத்திலிருந்து தப்பிக்க, அந்த இளம் ஆட்சியர் பார்த்திபனிடம் பேச்சுக் கொடுத்தாள்.
அவள், அதாவது நந்தினிக்கு சுமார் முப்பது வயதுக்குள் இருக்கலாம் என்பது பார்த்திபனின் ஊகம். அந்த வாரத்தில் தான் கோவைக்கு மாற்றலாகி வந்திருந்தாள். தோற்றம் வெகு அழகு ப்ளஸ் நேர்த்தி. நெற்றி வகிட்டில் குங்குமமும், கழுத்தில் முகப்பு வைத்த தாலியையும் தவிர வேறேதும் ஸ்பெஷல் அலங்காரங்கள் எதுவுமில்லை. ஹைநெக் ப்லௌஸ், கஞ்சியிட்ட காட்டன் புடவை, இறுக்கமாக பின்னலிடப்பட்ட நீளக் கூந்தலென கம்பீரமான அழகு. வட இந்திய சாயல் இருந்தாலும் தமிழ் தான் பேசினாள், அதுவும் அவ்வளவு அழகான தமிழ்!
“ஒரு பைவ் சி ப்ளான் பண்ணிருக்கேன் மேடம்… செலவு எவ்வளவு இழுக்குதுன்னு பார்த்துட்டு இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா போடலாம்…” மரியாதையாகக் கூறியவன், “நீங்க தமிழா? இல்லைன்னா நார்த்தா?”
பொது அறிவுக் கேள்வியாகத்தான் அவன் கேட்டதே! நந்தினி சிரித்துக் கொண்டே, “என்னங்க? நம்மூர் தமிழைக் கூட கண்டுபிடிக்க முடியலையா? நான் கரூருங்க…” என்று அதே புன்சிரிப்போடு கூற, பார்த்திபன் ஆச்சரியத்துடன், “அட… நம்மூர் பொண்ணா நீங்க?” என்றவன்,
“அதான் அறிவுக்களை தாண்டவமாடுதா?” என்று நகைச்சுவையாகக் கேட்க,
“ஆஹா… இதை அப்படியே எங்க வீட்ல அவுங்க இருக்கும் போது சொல்லுங்க… அப்பவாவது நமக்கு மேல் மாடில சரக்கு இருக்கறதா ஒத்துக்கட்டும்…” என்று கிண்டலாக அவள் கூற, அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. மாவட்டத்துக்கே ஆட்சியர் என்றாலும் சராசரி பெண்களை போல கணவனிடம் அங்கீகாரத்தை எதிர்பார்ப்பது இயல்பு போல!
“வீட்ல என்ன பண்றாங்க?”
“சக்தி… சக்திவேல்… பிசினெஸ் பண்றாங்க… ரீட்டெயிலிங்க்… செய்யின் ஆப் ஸ்டோர்ஸ்…” என்றவள், அந்த பிரபலமான ரீட்டெயில் செயின் பெயரைக் கூற,
“அட அவங்களா? மேடம் பெரிய ஆளுங்க தான்…” வந்த காரியத்தை விட்டு அரட்டையில் இறங்கினாலும் அவ்வப்போது கூட்டத்தில் நடப்பவற்றை நந்தினி தானாக கிரகித்துக் கொண்டுதான் இருந்தாள்.
“அடடா…” என்று சிரித்தவள், “அதை நீங்க சொல்றீங்களா?” என்று சிரித்து விட்டு, சற்று சீரியசான மோடுக்கு போனவள், “பெரியவங்க, சின்னவங்க எல்லாம் சில காலம் தான்…” என்று தத்துவார்த்தமாக கூறினாள்.
நந்தினி சட்டென்று இந்தளவு யாருடனும் பேசிவிட மாட்டாள். பார்த்திபனை பற்றி நிறைய கேள்விப்பட்டு இருந்தாள். அதோடு அவனது கண்களில் தெரிந்த நேர்மையும் தெளிவும் அவளை நட்பு பாராட்ட சொன்னது.
“கண்டிப்பாங்க… நீங்க சொல்றது உண்மை தான்… எதுவானாலும் சில காலம் தான்… இன்னைக்கு என்கிட்டே இருக்கறது, நாளைக்கே உங்க கிட்ட வரலாம்…” என்று பொதுவாக அவன் சொல்ல, அது அவளுக்கென்றே கூறியதை போலத்தான் இருந்தது.
ஆரம்பத்தில் சித்ரா காதலித்த சக்தி எப்படி தன்னுடையவனானான் என்பதையே அவள் இப்போது வரை புரிந்து கொள்ளவில்லை! ஆனாலும் அவன் தான் இப்போது அவளது உயிர்!
அழகான இரண்டு குழந்தைகளும், அவளது செல்ல சக்தியும் மட்டுமே அவளது சுவாசம். ஐஏஎஸ் என்ற இந்த மூன்றெழுத்தை அடைய, அவளைக் காட்டிலும் பிரயத்தனப்பட்டவன் தன் சரி பாதி என்பதில் அவ்வளவு பெருமை அவளுக்கு.
சக்திவேலை பற்றி நினைக்கும் போதே அவளது முகம் மென்மையானது. புன்னகையை பூசிக் கொண்டது. ஆமென்று தலையாட்டிக் கொண்டாள்.
சற்று நேர மௌனத்துக்குப் பின், “உங்களை பற்றி நிறைய கேள்விப்பட்டேன் பார்த்திபன்…” என்று அவள் நிறுத்திவிட்டு அவனது முகத்தை தீர்க்கமாகப் பார்த்தாள்.
என்னவென்ற கேள்வியோடு நந்தினியை பார்த்தான் பார்த்திபன். எதையோ அவள் கேட்க விழைகிறாள் என்பது மட்டும் புரிந்தது.
“எனக்கு ஒரு ஆப்ளிகேஷன் இருக்கு…” என்றவள், “நான் இங்க கோவைல ரெண்டு இல்லைன்னா மூணு வருஷம் இருக்கலாம்… ஆனா நான் போகற ஒவ்வொரு இடத்துலையுமே கொஞ்சம் அர்த்தமுள்ள வேலைகளை செய்யனும்ன்னு நினைக்கறேன்… முக்கியமா லேடீசுக்கு…” என்றவள் நிறுத்த, பார்த்திபன் அவளை ஆச்சரியப் பார்வை பார்த்தான்.
“என்ன செய்யறதுன்னு மட்டும் சொல்லுங்க மேடம்… செஞ்சுடலாம்…” அவள் கூற வருவது புரிந்து அவள் கேட்கும் முன்பே அவன் ஒப்புதலைக் கூறிவிட, இப்போது ஆச்சரியமாகப் பார்ப்பது நந்தினியின் முறையாயிற்று.
“நான் என்ன சொல்ல வரேன்னு சொல்றதுக்குள்ள ஓகே சொல்லீட்டீங்களே…” என்று அவள் புன்னகையோடு கேட்க,
“நீங்க செய்ய நினைக்கறது சேவை மேடம்… அதை நீங்க கேட்டுத்தான் நான் செய்யனுமா? இல்லையே… எனக்கும் சமூகப் பொறுப்புணர்வு இருக்கே…” என்று அவனும் பதிலுக்கு புன்னகையோடு கூற,
“நான் ஏதாவது எடக்குமடக்கா கேட்டு இருக்கணும்…” என்று சற்று விளையாட்டாக கூற,
“நீங்களா? கண்டிப்பா மாட்டீங்க… உங்க கண்ல உண்மை இருக்கு… செயல்ல நேர்மை இருக்கு… மனுஷங்களை பிரிச்சு பார்க்க தெரியாட்டி இத்தனை பேரை கட்டி மேய்க்க முடியாது மேடம்…” என்று அவன் சிரித்தான்.
இது சக்தி எப்போதும் கூறுவது அல்லவா! ‘கிரேட் மென் திங்க்ஸ் அலைக்’ என்பது சரிதான் போல! பாராட்டுதலாக விழி உயர்ந்தது.
“என்னோட அம்மாவும் அக்காவும் தான் இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் பார்த்துக்குவாங்க… அவங்களை இதுல எங்கேஜ் பண்ணி விடறேன்… நீங்க என்ன செய்யனும்ன்னு நினைக்கறீங்களோ செய்ங்க…” என்றவனை மெச்சுதலாகப் பார்த்தாள்.
“இதை நானே செய்யலாம்… சக்தி கண்டிப்பா சப்போர்ட் பண்ணுவாங்க… ஆனா ஒவ்வொரு இடத்திலையும் என்னால கடைசி வரைக்கும் மானிட்டர் பண்ண முடியாது… அதுக்காக ஒவ்வொரு ஊர்லையும் உங்களை மாதிரி கொஞ்சம் பேரை ஆர்கனைஸ் பண்ணனும்ன்னு பார்க்கறேன்…” என்று சற்று அவள் விளக்க,
“நல்ல இன்டஷன் மேடம்… கண்டிப்பா செய்ங்க… நாங்கள்லாம் இருக்கோம்…” என்று தைரியம் கொடுக்க, பேச்சு வளர்ந்து கொண்டே அவனது தொழிற்சாலையை பற்றியும் நாட்டு நடப்பை பற்றியுமாகப் போனது.
கௌரவக் கொலை செய்யபட்ட அவளது தோழிகளையும், அதனால் பாதிக்கப்பட்டவர்களையும் நினைத்துப் பார்த்தாள். அவர்களை போன்றவர்களை மீட்டெடுப்பது முக்கியமான விஷயமாகப் பட்டது. கல்வியும் பொருளாதார சுதந்திரமும் இதுபோன்ற கொடுமைகளை கண்டிப்பாக தடுக்குமென அவளுடைய மனதுக்கு பட்டது.
அவளது மனம் கௌரவக் கொலைகளை மட்டும் கணக்கில் கொள்ளவில்லை. எத்தனையோ சமூக ஏற்றத்தாழ்வுகளை கொண்ட நமது சமூகத்தை சீர்த்திருத்துவதும் அவளது குறிக்கோளில்லை. தன்னால் முடிந்தளவு சமூகத்துக்கு செய்ய வேண்டிய அடிப்படை கடமையென்று தான் நினைத்தாள். ஆட்சியராக இருப்பது என்பது வேறு… அரசாங்கத்தின் வரம்பிற்கு உட்பட்டு, அனுமதி பெற்று செய்வதென்பது தலையை சுற்றி மூக்கை தொடுவது போல!
இதை அவளது தனிப்பட்ட முன்னெடுப்பாக செய்யவே விரும்பினாள். கரூரிலிருந்த வரை சற்று முயன்று பார்த்திருந்தாள். அதற்குள் கோவைக்கு மாற்றலாகிவிட்டதால் முழுமையாக செய்ய முடியாதது அவளது மனதில் ஒரு குறையாகவே தங்கி விட்டது. அதனால் தானோ என்னவோ இங்கு வந்த ஒரு வாரத்திலேயே சிலபல அடிகள் எடுத்து வைக்க ஆரம்பித்து இருந்தாள்.
“உங்களை மாதிரி இன்னும் நாலு பேர் கிடைச்சா போதுங்க… நிறைய விஷயம் செய்யலாம்…” அவள் கூறியது உண்மைதான். இந்த மனம் இல்லாமல் தான் நமது சமூகம் சீழ் பிடித்து புரையோடி போயிருக்கிறது.
அரசியல் என்பது தீண்டத்தகாதது இல்லை என்பதை மக்களும், படித்த இளைஞர்களும் புரிந்துக் கொண்டு, அதில் ஈடுபடாத வரை, மக்களுக்கு விடியல் என்பது எட்டாக்கனி தான் அல்லவா!
‘திட்டம் போட்டு திருடற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது’ என்பது எந்த காலத்துக்கு பொருத்தமோ, இன்று அவ்வளவு பொருந்தி போகிறது. மக்களின் நலன் மேல் அக்கறையில்லாத அரசாங்கம், தன்னுடைய நலனை மட்டுமே நாடும் ஆட்சியாளர்கள், இதற்கு நடுவே மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல மக்களுக்கு அத்தனை பக்கமும் இருந்து வாட்டியெடுக்க காத்திருக்கும் பிரச்சனைகள், பாவம் தான் மக்கள்!
தான் கொண்ட அதிகாரி எனும் முகமூடி அவளது இந்த எண்ணங்களை திரையிட்டு மறைக்கத்தான் செய்கிறது. ஆனாலும் எவ்வளவு தூரத்திற்கு மறைக்க முடியும்?
அவள் கூறியதை கேட்டு புன்னகைத்தவன், “உண்பது நாழி… உடுப்பது இரண்டே… உறைவிடம் ஒன்றே… மற்றது எதுவும் வேண்டாம்ன்னு சொல்ல மாட்டேன்… ஆனா நமக்குன்னு இருக்க சமூக கடமையை மறக்கக் கூடாதுன்னு நினைக்கறேன்…” என்று இயல்பாகக் கூறக் கேட்டுப் புன்னகைத்தாள்!
“ஐ அப்ரிஷியேட் இட் பார்த்திபன்… ஒரு கேப்பிடலிஸ்ட், கம்யுனிசம் பேசறது பெரிய விஷயம்…” மனமுவந்து கூற,
“இது கம்யுனிசம் இல்லம்மா… ஹியுமானிசம்… மனுஷனா இருக்க குறைந்தபட்சமான தகுதி…” என்று புன்னகையோடு கூறும் போதே பார்த்திபனின் செல்பேசி அழைத்தது.
ஷாலினி தான் அழைத்திருந்தாள்!
“ஜஸ்ட் எ மினிட்” என்று நந்தினியிடம் கூறியவன், “சொல்லும்மா ஷாலினி…” சற்றே ஒரு வகையான ஒதுக்கம் வந்திருந்தது, ‘எல்லாம் இந்த மதுவினால்…’
“பார்த்திபன்… ஒரு முக்கியமான விஷயம்…” அவளது குரலில் ஏனோ ஒரு அவசரத்தன்மை.
“என்னம்மா?”
“இங்க ஷிவானி கொஞ்சம் பிரச்சனையை இழுத்துவிட போறா மாதிரி இருக்கு…”
“என்னம்மா சொல்ற நீ? எங்க இருக்க?” சட்டென பதட்டம் வந்து அவனது குரலில் ஒட்டிக் கொண்டது.
“ஆம்ஃபா ஸ்கை வாக் வந்தோம்… ரெண்டு பேருக்குமே கொஞ்சம் சேஞ்ச் வேணும்ன்னு… அன்எக்ஸ்பெக்ட்டடா ஷிவானி வந்தா… வந்தவ, கிட்டத்தட்ட ஒன் ஹவரா ஆர்கியு பண்ணிட்டு இருக்கா, மதுகிட்ட!” என்று கூறவும்,
“என்ன விஷயமா ஷாலினி?” கடினமாக அவன் கேட்க,
“திரும்ப சஞ்சுவோட இவ ரீயுனிட் ஆகணுமாம்…” என்று கூறிக்கொண்டிருக்கும் போதே,
“ஷிவானி… திரும்ப திரும்ப அதே விஷயத்தை பேசாதே… உன்னோட ஆசை நிறைவேறிடுச்சு இல்லையா… கிளம்பு… உன்னோட ஸ்பான்சர்ஸ் வெய்ட் பண்ணுவாங்க…” சற்று குரலை உயர்த்தி மது பேசுவதும் காதில் விழுந்தது.
“மது… கடைசியா ஒரே ஒரு விஷயம் சொல்லனும்ன்னு நினைக்கறேன்… நீ இல்லைன்னா சஞ்சு செத்துடுவான்… அந்தளவு உன்னை லவ் பண்றான்… சும்மா மிரட்ட அவன் அதை சொல்லலை… ஹீ மீன்ஸ் இட்… அப்புறம் உன்னுடைய இஷ்டம்…” என்று அவள் முடிக்க, மது மௌனமாகியதும் கேட்டது.
ஷாலினியும் எதுவும் பேசாமல், அவர்களது விவாதத்தை பார்த்திபன் கேட்கட்டும் என்று லைனிலேயே இருந்தாள்.
சற்று நேர மௌனத்துக்குப் பின்,
“ஓகே ஷிவானி… நான் வர்றேன்… ஆனா அவனுக்கும் எனக்கும் இனிமே ஒன்னும் இல்லைன்னு சொல்லத்தான் வர்றேன்…” என்று அவள் கூற, ஷிவானி மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தாள்.
ஆனால் கண்களில் ஒரு குரூர வெற்றி சிரிப்பு மிளிர்ந்தது.
“தேங்க்ஸ்… தேங்க்ஸ் எ லாட் மது…” என்று அவள் மகிழ்ந்தது வெளிப்பார்வைக்கு என்பது பார்த்திபனுக்கு தெரியுமா? அல்லது அதை கவனிக்காமல் செல்பேசியில் கவனம் வைத்திருந்த ஷாலினி தான் அறிவாளா? இது எதையும் அறியாமல் தலைக்கு கையை முட்டுக்கொடுத்து அமர்ந்திருந்த மதுவுக்கு தெரியுமா, சஞ்சுவை பார்க்க இருக்கும் அந்த நாளோடு அவளது வாழ்க்கை தலைகீழாகப் போகிறது என்று!
முருகன் முகம் ஆறுதான்..
மனிதன் முகம் நூறுதான்..
ஒவ்வொன்றும் வேறு வேறு நிறமோ!

error: Content is protected !!