22
மது, மருத்துவமனையிலிருந்து வந்து ஒரு வாரமாகி இருந்தது. அவளை சென்னை வீட்டிற்கு அழைத்து செல்லாமல் காரமடைக்கு அழைத்து வந்திருந்தார் சகுந்தலா, மதியும் மறுபேச்சு பேசாமல் மகளுடன் காரமடை வந்திருந்தார்.
மது மருத்துவமனையில் இருந்த போதே, கமிஷனர் விசாரணைக்கு வருவதாக கூற, பார்த்திபன், அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
“நான் எல்லாத்தையும் சொல்றதுக்கு ரெடியா தான் மாமா இருக்கேன்…” மது தெளிவாக கூறினாள்.
“இல்ல… இந்த விஷயத்தை வேற மாதிரி நான் கொண்டு போய்க்கறேன்…” என்று அவளது முகத்தை பார்க்காமல் முடிக்க பார்க்க, மது கோபத்தில்,
“நான் எதுக்குமே பயப்படல… அவனுங்களுக்கு பனிஷ்மெண்ட் கிடைக்கணும். ஆனா நீங்க என்னை சொல்ல விடாம இருக்கறத பார்த்தா அந்த பொறுக்கிங்க தப்பிக்க நீங்களே ஹெல்ப் பண்ற மாதிரி இருக்கு…” என்று கடுமையாக கூற, அவளை பாராமல் முறைத்து பல்லைக் கடித்தவன்,
“நான் அவனுங்களுக்கு ஹெல்ப் பண்றேனா? எனக்கிருக்க கொலைவெறில அன்னைக்கு அவனுங்களை உயிரோட விட்டதே பெரிய விஷயம். அவுங்களுக்கு பனிஷ்மென்ட் கிடைக்கும். அவ்வளவுதான். அது எப்படி கிடைக்கும்ன்னு நீ ஆராயாத…” என்று எங்கோ பார்த்தபடி பார்த்திபன் கூறிவிட்டு எழ, இருவரின் பனித் திரையை கண்ட பானுமதிக்கு அய்யோ என்றிருந்தது.
திருமணம் செய்து கொள்ள தயார் என்று பார்த்திபன் கூறிய போதிருந்தே அவன் இப்படியாகத்தான் இருக்கிறான். மதுவின் முகத்தை கூட பார்ப்பதில்லை. அவளிடம் ஏதாவது சொல்ல வேண்டும் என்றாலும், அவளை தவிர்த்து விட்டு வேறெங்கோ பார்த்தபடி தான் அவன் கூறுவது.
இவ்வளவிற்கும் மது அப்போதே பெரியவர்களிடத்தில் கூறிவிட்டிருந்தாள், “தேவையில்லாம மாமாவை இந்த விஷயத்துக்குள்ள இழுக்காத அம்மாச்சி…” என்று தீர்மானமாக கூறியவளை முறைத்தனர், பாட்டியும் அவளது தாயும்!
“உன் கிட்ட இப்ப யாரும் சஜஷன் கேக்கல மது…” கறாராக மதி கூற, மதுவின் முகத்தில் கோபம், அதோடு சேர்ந்த உடல்வலி வேறு!
இந்த நிலையில் இவர்கள் இதையெல்லாம் பேச வேண்டுமா என்று முறைத்தாள். அதே கோபத்தொடு பேச வாயெடுக்க, அவள் சற்றும் எதிர்பார்த்தே இராத அவளது தந்தையின் கோபத்தை எதிர்கொள்ள நேரிட்டது.
“மது… இத்தனை நாள் உன் இஷ்டப்படி தான் இருந்த… நீ செய்ய நினைச்ச மாடலிங் தான் பண்ண, நீ பண்ண நினைச்ச கோர்ஸ் தான் பண்ண. உன்னோட ஆசைக்கு நாங்க யாருமே குறுக்க நிக்கல. ஆனா இப்ப இருக்க சிச்சுவேஷனை உன்னால ஹேண்டில் பண்ண முடியாது. சொல்றதை கேட்டுத்தான் ஆகணும் மது…” தந்தை தீர்மானமாக கூறிய பின் அவளால் எதுவுமே பேச முடியவில்லை.
“இந்த நேரத்துல பார்த்திபன் தான் எனக்கு கடவுளா தெரியறாப்ல… உன்னை அவர் கிட்ட பிடிச்சு கொடுத்துட்டா போதும் மதுக்குட்டி… எனக்கு வேற கவலை இல்ல…” உணர்ந்து கூறிய தந்தையை கண்களில் கண்ணீர் பூக்கப் பார்த்தாள் மது.
“ஒருத்தர் பாவப்பட்டு வாழ்க்கை தர வேண்டிய நிலைல நான் இருக்கேன்ல ப்பா…” என்றவளின் குரலில் அத்தனை வலி இருந்தது.
“மதுக்குட்டி… யாரோ ஒருத்தனா அவன்? உன்ர மாமனில்லையா? நல்லதுக்கும் கெட்டதுக்கும் அவன் தான் கண்ணு கடமப்பட்டவன்…” அவளது தலையை கோதிக் கொடுத்த சகுந்தலா, தனது பேத்தியை சமாதானப்படுத்த முயல, மளுக்கென்று வழிந்தது கண்ணீர்!
எந்த சூழ்நிலையிலும் அவள் அழுதவளில்லை.
அது எந்த சூழ்நிலையாக இருந்தாலும், அதை எதிர்கொள்ளும் துணிச்சல் அவளுக்கு இருந்தது. அந்த சூழ்நிலைகள் அவளது கட்டுப்பாட்டில் இருந்தது.
ஆனால் இந்த திருமணம்?
பார்த்திபனை கணவனென்ற கோணத்தில் அவள் நினைத்தும் பார்த்ததில்லை. அவன் மேல் மிகுந்த மரியாதையுண்டு. அவன் பால் பாசமும் உண்டு. அவன் மட்டுமே மது செய்யும் தவறுகளை எல்லாம் கண்டிக்கும் நிலையிலிருந்ததால் அவன் மேல் மிகவும் கோபம் கொண்டிருந்ததும் உண்டு. ஆனால் அவனை புரிந்து கொண்ட பின் அவனிடம் மட்டுமே பாதுகாப்புணர்வை உணர்ந்ததும் உண்டு.
ஆனால் இதுவரை அவன் மேல் காதல் என்ற உணர்வு தோன்றியிருக்கிறதா என்று கேட்டால் கட்டாயம் இல்லை. இனி தோன்றுமா? அதற்கு சாத்தியம் இருக்கிறதா என்று நினைத்துப் பார்க்கவும் அவளுக்கு தைரியம் இல்லை.
அந்த காதல் என்ற உணர்வு தோன்றாமல் எப்படி திருமணம் செய்வது?
மனதுக்குள் இவ்வளவு குழப்பம் இருந்தாலும் அவளால் அதற்கும் மேல் எதுவும் பேச முடியவில்லை. அதுவரை அவளது முடிவுகளுக்கு துணை நின்றவர்களின் மன நிம்மதிக்காக அதை செய்தேயாக வேண்டிய கட்டாயத்திற்கு தான் ஆளாகி விட்டதை உணர்ந்தாள் மது!
அதன் பின் எதுவும் நிற்கவில்லை.
கமிஷனரிடம் எழுத்துப்பூர்வமாக பார்த்திபன் புகார் தெரிவிக்கவில்லை. ஜெயச்சந்திரனிடம் கூட புகாரை முன்னெடுத்துக் கொண்டு செல்லவில்லை என்று கூறியிருந்தான். அதனால் அவரும் சற்று அவரது பிடியை தளர்த்தியிருந்தார். ஆனால் பார்த்திபன், அவனது வேலையை பார்த்துக் கொண்டுதான் இருந்தான்.
அவன் புகார் தெரிவித்தால், கண்டிப்பாக மது விசாரணைக்காக வந்தாக வேண்டும். இப்போதே சற்று கசிந்த செய்திக்காகவே நிருபர்கள் மருத்துவமனையை நோட்டமிட்டுக் கொண்டிருப்பதை அவன் அறிந்திருந்தான். மேலும் மேலும் இதை பெரிதாக்கினால், தமக்கையும் அன்னையும் காயப்படுவது உறுதி, மதுவின் பெயர் பொதுவில் இழுபடுவதை பார்த்து! அவர்களை காயப்படுத்தாமல், இதை சட்டரீதியாக அணுக முடியாது.
அதோடு இந்த விஷயத்தில் இனிமேலும் மதுவின் பெயர் இழுபடுவதையோ, அவள் எங்கும் இருப்பதையோ இனியும் அவன் அனுமதிக்க முடியாது. ஆரம்ப கோபத்தில் செய்த ஒன்றே திருமணம் வரை கொண்டு வந்துவிட்ட கோபம் வேறு!
ஆனால் அந்த இருவரையும் அப்படியே விட்டு விடவும் முடியாது.
இதை உணர்வுபூர்வமாக அணுகுவதை விட புத்திசாலித்தனமாக அணுக வேண்டும். ஓநாய்களை வேட்டையாட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தான்.
என்ன செய்வது என்று யோசித்தவனின் கைகளில் தட்டுபட்டது, ரதீஷ் மற்றும் சஞ்சய்யிடம் கைப்பற்றிய செல்பேசிகள்!
****
கட்டு போடப்பட்டிருந்த காலை, டீபாய் மேல் வைத்தபடி சோபாவின் மேல் சாய்ந்து அமர்ந்து கொண்டு செல்வி கொடுத்த எலும்பு சூப்பை குடித்தபடி தொலைகாட்சியின் மேல் பார்வையை பதித்திருந்தாள் மது. அவளது உடல் பழையபடி சரியாக வேண்டும் என்று அவளுக்கு அத்தனையும் செய்தபடி இருந்தார் சகுந்தலா. வினோதகன் சென்னையில்தான் இருந்தார். மகளின் திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாட்டை அங்கிருந்தபடி கவனித்துக் கொண்டிருந்தார் அவர். காரமடையில் தான் திருமணம் என்பதால் பானுமதி இங்கிருந்தபடி கவனித்தார்.
கூடுமானவரை சகுந்தலாவை எதற்கும் அலைய விடாமலிருக்க வேண்டும் என்பதுதான் பார்த்திபனின் எண்ணமும். அதனால், என்ன வேண்டுமென்றாலும் பானுமதி அவனைத்தான் அணுகுவார்.
என்னதான் திருமண வேலைகளை பார்த்தாலும், பார்த்திபனால் அதில் ஒட்ட முடியவில்லை. ஆர்வமும் இல்லை. கடமைக்கென்று அவன் செய்யும் வேலை எவ்வளவு தவறானது என்று அவனது மனசாட்சி அவனை குத்திக் காட்டிக் கொண்டே இருந்தது.
ஏதாவது எதிர்ப்பு தெரிவித்தால் அழுதே கரையும் தமக்கை, தாய் என இருபக்கமும் இடி வாங்கியபடி எதுவும் பேசாமல் திருமண வேலைகளுக்கு ஒத்துழைத்தான் பார்த்திபன்.
“கல்யாணம் முடிஞ்சு காரமடைக்கு வர்றியா இல்ல கோயம்புத்தூர்ல இருக்கியா சாமி?” பேச்சுவாக்கில் கேட்டு வைத்த தாயை முறைத்தான் பார்த்திபன்.
“ஏன் அத வெச்சு எதாச்சும் ப்ளான் பண்றியா?” பல்லைக் கடித்துக் கொண்டு பார்த்திபன் கேட்க,
“இல்ல கண்ணு… பாப்புக்குட்டிய பிஎஸ்ஜில கூட சேர்த்து விட்ரலாம்… இங்கன்னா கஷ்டம்ல…” தன்னுடைய கேள்விக்கு அவர் காரணத்தை கூற, பார்த்திபனுக்கு அனல் மேல் நிற்பது போலிருந்தது.
“படிப்ப முடிக்கற வரைக்கும் சென்னைலையே இருக்கட்டும்…” என்று அவன் முடிக்கப் பார்க்க, சகுந்தலா விடுவேனா என்றார்.
“அதெப்படி சாமி? பாப்பா அங்கிருக்க, நீ இங்கிருக்க அது சரியா வராது தங்கம். நீ கோயம்புத்தூர் கூட்டிட்டு போய்டு. அங்கன மதுக்குட்டி படிக்கட்டும். உன்கூட இருந்த மாதிரியுமாச்சு. படிப்ப விடாத மாதிரியுமாச்சு…” என்று அலுங்காமல் முடித்த தாயை எரித்து விடுவது போல பார்த்தான்.
“சொன்னா புரிஞ்சுக்க மாட்டியாம்மா?” கடுப்படித்தவனை கண்டுகொள்ளாமல்,
“மதி… நீயும் மாப்பிள்ளையும் அந்த வீட்டுக்கு போய் என்னல்லாம் செய்யனும்ன்னு பார்த்துக்க. செய்ய வேண்டியத குறிச்சுகிட்டு வந்திரு. அப்புறம் புள்ளைக்கு அது இல்ல, இது இல்லன்னு பொலம்ப கூடாதாக்கும் சொல்லிட்டேன்…” மகளிடம் கறாராக பேசுவதாக கணக்கு செய்து கொண்டு அந்த இடத்தை காலி செய்து விட்டார் சகுந்தலா.
பானுமதியும் தோழியின் வீட்டிற்கு போவதாக கூறிவிட்டு நழுவி விட்டார்.
இருந்தால் அவனிடம் யார் பாட்டை வாங்குவது?
இவை எதையும் கண்டும் காணாமல் தன் போக்கில் இருந்தாள் மது!
கண்டும் காணாதது போல இருந்தாலும் உள்ளுக்குள் வெகுவாக பதட்டமாக இருந்தது அவளுக்கு.
அவளை நிமிர்ந்து கூட பார்க்காமல் தவிர்க்கும் பார்த்திபன் அவளுக்கு புதியவன்!
முன்பும் தவிர்த்து இருக்கிறான் தான், ஆனால் அது அவளது பெற்றோரின் மேலுள்ள கோபத்தால். ஆனால் மாமனென்ற உறவோடு நன்கு பேசி பழகி, அவனது பாசம், அக்கறை, கோபம் என்று அனைத்தையும் அனுபவித்தபின் அவனது இந்த முகம் திருப்பல் அவளுக்கு வெகு ஏமாற்றமாய் இருந்தது, கோபமாகவும் இருந்தது.
திருமணம் வேண்டாமென்று இவளும் மறுத்துவிட்டாள் தான்… ஆனால் பிடிவாதமாக இருக்கும் பெரியவர்களிடமல்லவா இந்த கோபத்தை காட்ட வேண்டும்?! தன்னிடம் காட்டி என்ன புண்ணியம்?
அவன் சற்று ஆறுதலாக இருந்திருந்தாலாவது இந்த திருமணத்தை எதிர்கொள்ள அவளுக்கு தைரியம் இருந்திருக்கும். அந்த தைரியம் மதுவிடமிருந்து முற்றிலுமாக விடை பெற்று இருந்தது அப்போது!
முதலில் உடனிருந்து அவ்வப்போது பேசிய ஷாலினியும் கூட பார்த்திபனோடு தனக்கு திருமணம் என்ற செய்தியை உரைத்தபோது வெகுவாக கலங்கிய முகத்தை காட்டியது வேறு மதுவை மேலும் கலங்க செய்தது. அவளை பார்த்திபனோடு சேர்த்து வைத்து, தான் செய்த அலம்பல்கள் எல்லாம் நினைவுக்கு வந்தது.
மனதுக்குள் சொல்ல முடியாத குற்ற உணர்வும் கூட! தான் இப்படிப்பட்ட சிக்கலில் சிக்கியிருக்காவிட்டால் ஒருவேளை ஷாலினி பார்த்திபனிடம் காதலை உரைத்திருக்க கூடுமோ?!
அதை தான் அல்லவா கெடுத்து குட்டி சுவராக்கி இருப்பது!
ஒருவேளை பார்த்திபனுக்கும் ஷாலினி மேல் எதாவது அபிப்ராயம் இருந்திருக்குமோ? அதனால் தான் தன் முகத்தை கூட பார்க்க மறுக்கிறானோ என்றும் தோன்றியது!
சும்மா இருப்பவனின் மனம் சாத்தானின் உலைகளம் என்று சும்மாவா சொன்னார்கள்?
மது தெளிவானவள் தான்… ஆனால் சூழ்நிலை அவளை பல்வேறு விதமாக குழம்ப செய்தது.
அந்த இரவு வேளையில், எதையோ நினைத்தபடி, எதிலும் கவனமே இல்லாமல் தன் மனம் போன போக்கில் சிந்தித்தபடி இருந்தவளை உலுக்கியது அந்த தொலைக்காட்சி செய்தி.
உள்ளே போன மிளகு காரத்தை கூட உணராதபடி செய்திருந்தது.
‘பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்து வீடியோ எடுத்த அமைச்சரின் மகன்’ என்ற தலைப்பில் பிரேக்கிங் நியூஸ் என்று பரபரத்துக் கொண்டிருந்தது.
அதற்கு ஆதாரமாக அவனது செல்பேசி வீடியோ பதிவுகளின் காட்சிகளை மங்க செய்து ஒளிபரப்பிக் கொண்டிருக்க, அதை அதிர்ச்சியின் விளிம்பில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் மது. மற்ற பெண்களிடம் அத்துமீறிக் கொண்டிருந்தான் ரதீஷ், உடன் சஞ்சய்! மற்ற பெண்கள் அனைவர் முகத்தையும் மறைத்து இருந்தனர் அந்த வீடியோவில். ஆனால் அது ரதீஷும் சஞ்சயும் தெளிவாக தெரிந்தனர். அதாவது காரணமாகவே மறைக்கப்படவில்லை.
சஞ்சயும் ரதீஷும் இவ்வளவு மோசமானவர்களா? தன்னை மட்டும் தான் இது போல நடத்தினான் என்று இதுநாள் வரை நினைத்துக் கொண்டிருந்ததும் கூட பொய்யா? இதுதான் அவர்களது தினப்படி நியமமா?
அந்த பெண்களின் அலறல் சப்தம் அவளை உலுக்கியது.
பார்த்திபன் மட்டும் இல்லையென்றால் தன் கதியும் அது தானே?
இத்தனை செய்துவிட்டு எப்படி தன்னிடம் காதல் வசனங்களை பேசினான் இந்த சஞ்சய்?
தானும் அதை நம்பிக் கொண்டு, அவனை கண்மூடித்தனமாக காதலித்ததெல்லாம் அவளது நினைவில் வந்து அவளை குன்ற செய்தது.
அந்த அலறல் சப்தம் அவளை நடுங்க செய்தது. அவளையும் அறியாமல் அவளது உடல் தடதடத்தது. கண்கள் கலங்கி பார்வை மங்கியது. எழுந்து நின்றவளுக்கு கால்கள் தரையில் நிற்கவில்லை.
இரவு ஷிப்டை கண்காணிக்க செல்வதற்காக கிளம்பி வந்த பார்த்திபனின் கண்களில் பிரேக்கிங் நியூசை வெறித்து பார்த்தபடி இருந்த மது கண்ணில் பட்டாள்.
அவள் நடுங்குவதும், அவளது நடுக்கம் எதனால் என்றும் அவனால் உணர முடிந்தது.
அந்த மோசமான சூழ்நிலையை அவள் கடந்து வந்திருக்கிறாள் அல்லவா!
அதன் தாக்கம்!
மேலாடை கிழிந்த நிலையில் குளியலறையில் தன்னை பூட்டிக் கொண்டு துடித்தபடி கதறிய மது நினைவுக்கு வந்தாள்.
அவசரமாக அவள் அருகில் வந்தவன், நடுக்கத்தில் கீழே விழப் போனவளை தாங்கிப் பிடித்தான் பார்த்திபன்!
தலையைப் பிடித்துக் கொண்டு முகத்தை மறைத்தவாறு, “டிவிய ஆஃப் பண்ணுங்க… டிவிய ஆஃப் பண்ணுங்க…” என்று கத்த, அவளது சப்தம் கேட்டு சகுந்தலா ஓடி வந்தார்.
பானுமதி அப்போதுதான் வெளியே சென்றிருந்தார்.
சகுந்தலாவோடு வேலையாட்களும் ஓடி வர, ஓடிக் கொண்டிருந்த தொலைகாட்சியை அவசரமாக நிறுத்தி விட்டு, ஆட்களை உள்ளே செல்லும் படி கண்ணைக் காட்டினான் பார்த்திபன். யாருடைய கண்களுக்கும் கருத்துக்களுக்கும் மது விருந்தாக தேவையில்லையே, அவனைப் பொறுத்தவரை!
அவளோ விடாமல் தலையை பிடித்தபடி கதற, “மது… என்னாச்சும்மா?” என்று அவளது முகத்தை நிமிர்த்த முயன்றான் பார்த்திபன்.
அவன் தானென்று உணராமல், “ஐயோ… என்னை விடு… விடு…” என்று இன்னும் கதற, ஸ்தம்பித்து நின்று கொண்டிருந்த தாயை அவசரமாக அழைத்தான்.
“கொஞ்சம் தண்ணி கொண்டு வாம்மா…” என்று அவரை விரட்ட, ஸ்மரணை வந்தவர், அவசரமாக ஓடினார்.
“மது… இங்க பாரும்மா…” அவளது கைகளை பிரித்து விட முயல, அவளோ பிடிவாதமாக தலையை இறுக்கமாக பற்றியபடி கதறினாள்.
“வேணா… ப்ளீஸ்… என்னை விட்டுடு… மாமா… அவனை விட சொல்லுங்க…” என்று அவள் அலறிய போது அவனால் அதை தாளவே முடியவில்லை.
“மது… இங்க பாரு… நீ இப்ப நம்ம வீட்ல இருக்க… யூ ஆர் சேஃப்… நான் இருக்கேன்ல…” அவளது கைகளை வலுகட்டாயமாக பிரிக்க முயற்சித்தான் பார்த்திபன். ஆனால் முடியவில்லை. அவ்வளவு இறுக்கமாக தலையை பிடித்துக் கொண்டு முகத்தை மூடியவாறு கதறியவளை என்ன செய்வது என்று அவனுக்கு தோன்றவில்லை.
“மது… கொஞ்சம் இங்க பாரு… நான் தான்… அவங்க யாரும் இங்க இல்ல…” என்று பலவாறு கூறினாலும் அவள் சமாதானமாகவில்லை.
அவசரமாக வந்த சகுந்தலாவிடமிருந்து நீரை வாங்கியவன், “மது… இங்க பாரு… தண்ணியக் குடிம்மா…” அவனால் அதற்கும் மேல் சப்தமாக கூறவும் முடியவில்லை. மிரட்டவும் முடியவில்லை. என்னவென்று புரியாமல் வேலையாட்கள் இப்போது விழித்தாலும், கண் காது மூக்கு வைத்து எப்படி வேண்டுமானாலும் வெளியே பரவ வாய்ப்பிருக்கிறதே!
“மதுக்குட்டி… அம்மாச்சி இங்க தான்டா இருக்கேன்… என்ன சாமி ஆச்சு?” சகுந்தலாவும் தவித்தபடி கேட்க, யாருடைய வார்த்தைகளும் அவளது காதில் விழவில்லை.
அந்த பெண்களின் அலறல் சப்தம் மட்டுமே காதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது. அந்த பெண்களின் இடத்தில் தன்னை நிறுத்திப் பார்த்தவள், அவை அனைத்தும் தனக்கே நடப்பதை போன்ற பிரம்மைக்குள் சென்று விட்டாள். எப்போதும் இருக்கும் மது இப்படிப்பட்டவள் அல்ல. ஆனால் இப்போதிருக்கும் மது, ஒரு மோசமான விபத்திலிருந்து தப்பி வந்தவள், அதன் தாக்கம் அப்போதும் மாறவில்லை.
இப்படி ஒரு சம்பவத்தை தாண்டி வந்தவளுக்கு சுற்றி இருப்பவர்கள் சற்றேனும் ஒரு இடைவெளி கொடுத்திருந்தால் அந்த பிரம்மை தோன்றியிருக்காதோ என்னவோ? ஆனால் அவளது பாதுகாப்புக்கென பெரியவர்கள் நிச்சயித்த திருமணமும் அவளது மன உணர்வுகளோடு விளையாட, அதே நேரத்தில் தொலைக்காட்சியில் அவள் கேட்ட செய்திகளும் சேர்ந்து அவளது மன திடத்தை மொத்தமாக முடக்கிப் போட்டது.
அவளது தவிப்பையும் துடிப்பையும் கதறலையும் கண்டவன், ஒரு முடிவோடு எழுந்தான்.
மதுவை இரு கைகளால் அள்ளி எடுத்தவன், அவளது அறை நோக்கிப் போனான். அவளோ அந்த பிரம்மைக்குள்ளிருந்து வெளியே வர முடியாமலும், தன்னை தூக்கியது பார்த்திபன் தானென உணர தெரியாமலும், கதறியபடி துள்ளினாள். அவள் கீழே விழுந்துவிடாதபடி இறுக்கமாக பிடித்தவன்,
“ம்மா… ரூம் கதவை ஒபன் பண்ணு…” என்று சகுந்தலாவை நோக்கி கூற, அவர் பதட்டத்தோடு மதுவின் அறை கதவை திறந்தார். அவள் வரும் போதெல்லாம் கீழிருக்கும் அறையில் தான் தங்குவது. இப்போதும் அந்த அறையில் தான் இருந்தாள்.
பார்த்திபன் அந்த அறைக்குள் அன்று தான் நுழைந்தான். அவள் தங்க ஆரம்பித்தது முதல் அந்த அறைக்குள் அவன் நுழைந்ததில்லை. ஏனென்று தெரியவில்லை, அவனாக அங்கு போனதே இல்லை. பெரும்பாலும் அவன் கோவையில் இருந்ததால் அதை அவன் பெரிதாக நினைத்துமில்லை.
அவளை கையில் ஏந்தியபடி அறைக்குள் நுழைந்தவன், பெரும்பாடு பட்டு அவளை கட்டுப்படுத்தியபடி, படுக்கையில் கிடத்தினான்.
அப்போதும் அவள், “ஐயோ… என்னை விட்டுடு…” என்று அழுதபடியே அவனை தள்ளிவிட்டு எழுந்து ஓட முயல, பார்த்திபன் அவளது இருபுறமும் கைகளை இறுக்கமாக பற்றியபடி,
“மது…” வெகு அழுத்தமாக அழைக்க, முதன் முறையாக அவளது அரட்டல் குறைந்து கண்கள் ஓரிடத்தில் நிலையாக நின்றது. தன் அருகில் நிற்பது பார்த்திபன் தான் என்பதை அறிந்து சற்று ஆசுவாசமானாள்.
“மது… நான் இருக்கேன்… உன் மாமா உன் கூடத்தான் இருக்கேன். உனக்கு எதாச்சும் ஆக நான் விட்ருவேனா?” ஒவ்வொரு வார்த்தையாக அழுத்தமாக கூற, உதடு துடித்து முகம் கோவைப்பழமாக சிவந்து, அவனையே பார்த்தவள், அழுகையில் வெடித்தாள்.
“மாமா…” என்று கேவியவளை பார்த்தவனுக்கும் கண்கள் கலங்க பார்த்தது. சிரமப்பட்டு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவன்,
“ஒன்னுமில்ல மது… நான் இருக்கேன்… நான் உன் கூடவே இருக்கேன்…” என்றவன், படுக்கையில் அமர்ந்து அவளை தன் மேல் சாய்த்துக் கொண்டான்.
“பயமா இருக்கு மாமா…” என்று கேவியபடியே அவனது கழுத்தை மது கட்டிக் கொள்ள, அவளை அணைத்துப் பிடித்தபடியே,
“நான் இருக்கும் போது நீ எதுக்கு பயப்படற மது?” என்று அவளை தடவிக் கொடுக்க, அவனை இன்னுமே இறுக்கிக் கொண்டாள் மது. அவளது நடுக்கத்தை அவன் உணர்ந்தான். தண்ணீரை எடுத்துக் கொண்டு அவசரமாக வந்த சகுந்தலா, பார்த்திபனுக்கு அருகில் நீரை வைத்துவிட்டு, அவனிடம் கண்ணைக் காட்டி விட்டு வெளியேறினார்.
இனி பார்த்திபன் பார்த்துக் கொள்வான் என்ற நிம்மதி அவருக்குள் வந்தது!
மென்மையாக அவளது தலையை அவன் தடவிக் கொடுக்க, மதுவின் மனதுக்குள் பாதுகாப்பு உணர்வு!
அவனது தோளில் சாய்ந்தபடி கண்களை மூடியவள், அவளையும் அறியாமல் உறங்க ஆரம்பித்தாள்!
குமரி உருவம் குழந்தை உள்ளம்
ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ!
தலைவன் மடியில் மகளின் வடிவில்
தூங்கும் சேயோ!