rainbow kanavugal-1

ரெயின்போ கனவுகள்

1

‘ஐப்பசி மாதம் அடை மழையாம்’. அதற்கேற்ப சென்னையில் மழை தாறுமாறாக கொட்டித் தீர்த்து கொண்டிருந்தத சமயம் அது.

தண்ணீர் பஞ்சம் என்று பஞ்சப்பாட்டு பாடி கொண்டிருந்த சென்னை வாசிகளின் தண்ணீர் தட்டுப்பாட்டையும் உஷ்ணத்தையும் கொஞ்சமாக தணித்திருந்தது.

அடை மழை விடாமல் பெய்த போதும் பள்ளிகளும் அலுவலகங்களும் எப்போதும் போல் இயல்பாக இயங்கி கொண்டிருந்தன. அதுதான் மாநகரங்களின் தனிச்சிறப்பு.

மழையின் காரணமாக அந்த மாநகரமே தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் சேறும் சகதியுமாக காணப்பட்டது. அந்த குண்டும் குழியுமான சாலைகளில் நடப்பதும் வாகனங்களை ஓட்டி செல்வதும் மிக பெரிய விஷ பரிட்சைதான் எனினும் தினம் தினம் அந்த விஷ பரிட்சையை செய்து கொண்டிருக்கும் சென்னை வாசிகள் பெரும் சாதனை வாசிகள் என்றே சொல்ல வேண்டும்.

நாட்டின் அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரையிலான அலட்சிய போக்கின் கண்கூடான ஆதாரம் அந்த சாலைகள். யாரும் தட்டி கேட்க முடியாது. தட்டி கேட்கவும் கூடாது. ஏனென்றால் நடப்பது மக்களாட்சி!

இந்த சேற்றிலும் சகதியிலும் மக்களும் வாகனங்களும் அலைமோதும் சென்னை நகரின் பிரதான சாலையில் கடமை தவறாமல் பணியாற்றும் காவல் நிலையத்தின் பரந்துப்பட்ட வாயிலிற்குள்ளிருந்துதான் நம் கதை தொடங்க போகிறது.

உடைந்த சாராய பாட்டில்கள், காகிதங்கள், சிகரெட் துண்டுகள் போன்ற குப்பைகள் யாவும் அந்த காவல் நிலைய வாசலில் ஒதுங்கியிருக்க, குற்றங்களை களைவதே தங்களின் பிரதான குறிக்கோளாக கொண்டு  அல்லும் பகலும் இயங்கிகொண்டிருந்தது அந்த காவல் நிலையம்.

மாலை ஐந்து மணி. மழை காலம் என்பதால் மெல்ல இருள் சூழ தொடங்கியிருந்தது. மழையின் தாக்கம் குறைந்து சாரலாக மாறியிருந்தது.

எதிரே இருந்த டீ கடையின் உபயம். சூடாக பஜ்ஜிக்களும் தேநீர்களும் ஆவி பறக்க காவல் நிலையத்திற்குள் எடுத்து செல்லப்பட்டன.

மழையில் நனைந்து கொண்டிருந்த போலீஸ் வாகனமும் ஒரு சிலரையும் தவிர வேறு யாரும் வெளியே தென்ப்படவில்லை.

ஆனால் அதற்கு நேர்மாறாக அந்த காவல் நிலையத்தின் உள்ளே ஜனசஞ்சாரமாக இருந்தது.

“ஒழுங்கா மாமூலை வைச்ச்சிட்டு… கடையை நடத்து”

சாலையோரமாக  உணவகம் நடத்தி கொண்டிருந்த வயதானவரின் கெஞ்சலுக்கு அங்கிருந்த காவலாளியின் இரக்கமற்ற பதில்.

“ஏம்மா… இப்போ உன் புருஷன் அடிச்சிட்டான்னு இங்க வருவ… அப்புறம் நாளைக்கே ஒண்ணா கூடிட்டு கேஸை வாபஸ் வாங்குவ” தலையில் பெரிய கட்டோடு பரிதாபமாக நின்று கொண்டிருந்த பெண்ணிடம் கண்டிப்போடு உரைத்த பெண் கான்ஸ்டபிள்!

“மழையில் நசநசன்னு ஏன் இவ்வளவு கூட்டம்… ரோட்டில போறவங்க எல்லாம் மழைக்கு ஒதுங்க உள்ள வந்துட்டாங்களா என்ன?” துணை ஆய்வாளர் ஜெயா கேட்டு கொண்டே உள்ளே நுழைந்தாள்.

முப்பதுக்கும் நாற்பதுக்கும் இடைப்பட்ட வயது என்று சொன்னது அவளின் தோற்றம். காக்கி உடையும் நிமிர்ந்த நடையும் அவளுக்கு தனி கம்பீரத்தை தந்திருந்தன. அவள் வருகையை பார்த்த மாத்திரத்தில் அந்த காவல் நிலையமே பரபரப்பானது.

அதேநேரம் அங்கு நடக்கும் எதை பற்றியும் கவலையில்லாமல் ஒரு வயதான பெண்மணி அழுது  ஒப்பாரி வைத்து கொண்டிருக்க,

“ஏய் சும்மா இரு ம்மா.. எஸ் ஐ மேடம் வராங்க” என்று ஒரு பெண் கான்ஸ்டபிள் அவரை அதட்டினாள்.

“என்னம்மா பிரச்சனை?” என்று கேட்டபடி ஜெயா அவர் எதிரே வந்து நிற்கவும்,

“வீட்டில இருந்த என் கோழியை திருடின்னு போயிடறான்ம்மா… விசாரிங்கம்மா” என்று பொங்கி பெருகிய கண்ணீரோடு சொன்னார் அந்த பெண்மணி!

அவள் முகத்தில் பலதரப்பட்ட உணர்வுகள் மின்னல் வேகத்தில் மாற, அது கோபமா கடுப்பா அல்லது சலிப்பா என்று பிரித்தறய முடியாத வண்ணமிருந்தது.

பல்லை கடித்து கொண்டவள், “சரி சரி விசாரிக்கிறோம்… சத்தம் போடாம அப்படி போய் ஓரமா உட்காருங்க” என்று சொல்லிவிட்டு சென்றாள்.

உள்ளே தனக்கும் இந்த கூட்டத்திற்கும் சம்பந்தமில்லை என்பது போல் ஒரு மர பெஞ்சில் ரொம்பவும் ஒதுக்கமாக அமர்ந்திருந்தாள் ஓர் இளம் பெண்!

ஜெயாவின் பார்வை நேராக அந்த பெண்ணின் மீதுதான் பதிந்தது.

சேலை முந்தானையை தன் தோள்களில் இழுத்து மூடி கொண்டு அவள் அமர்ந்திருந்த விதத்தை பார்க்கவே ரொம்பவும் பரிதாபகரமாக இருந்தது.

யாரின் வருகையையும் அவள் கவனிக்கும் மனநிலையில் இல்லை.

“எதாச்சும் சாப்பிட குடுத்தீங்களா?” என்று அருகே இருந்த பெண் கான்ஸ்டபிளிடம் ஜெயா கேட்க,

“இல்ல மேடம்… எதுவும் சாப்பிட மாட்டேன்னுட்டா… டீ கூட குடிக்கல” என்றாள்.

“ஏன் மா… ஏன் நீ எதுவும் சாப்பிடல?” அவள் அதிகாரமாக கேட்க, தன் எதிரே நின்றிருந்த பெண் எஸ். ஐயை அப்போதே நிமிர்ந்து பார்த்தாள் அந்த பெண்!

சௌந்தர்யமான அவளின் முகம் ஜீவனிழந்திருந்தது. தொடர்ந்து எத்தனை நேரம் அழுதிருப்பாளோ? முகமெல்லாம் சிவந்த அடையாளங்கள். கண்கள் உப்பியிருந்தன. உதடுகள் உலர்ந்திருந்தன. கேசமெல்லாம் களைந்திருந்தன.

மிரட்சியோடு எழுந்து நின்றவள், “மேடம் என்னை விட்ருங்க மேடம்… நான் போகணும்” என்று இறைஞ்சினாள்.

அவள் வந்த நொடியிலிருந்து இதையேதான் சொல்லி கொண்டிருக்கிறாள்.

“சும்மா சொன்னதையே சொல்லி சொல்லி என்னை கடுப்பாக்கதே”

“என் வீட்டில தேடுவாங்க மேடம்”

“நீ எவன் கூடவோ ஓடி போக பார்த்தியே… அப்போ தேட மாட்டாங்களா உன்னை?”

அதிர்ந்த பார்வை பார்த்தவள், “ஐயோ! மேடம் நான் அப்படியெல்லாம் செய்யல” என்று படப்படத்தாள்.

“ஏ! போதும் நடிக்காதே… நீ எப்படியெல்லாம் செஞ்சேன்னு எங்களுக்கு தெரியாதா?!”

“நம்புங்க மேடம்…. நான் அங்கே போனது உண்மை… ஆனா நான் எதுவும் செய்யல” குரல் தழுதழுக்க அவள் கெஞ்சினாள்.

“இதை நான் நம்பணுமா?”

“ஐயோ! கடவுளே! நான் உங்களுக்கு எப்படி புரிய வைப்பேன்” என்றவள் கதறி துடிக்க, ‘என்ன இவ இப்படி அழறா?’ என்று அவளை எரிச்சலோடு பார்த்த ஜெயா,

“ஏ ஏ அழுகையை நிறுத்து… முதல வந்து டீ குடி… அப்புறமா பேசிக்கலாம்” என்றாள்.

“எனக்கு எதுவும் வேண்டாம்… ப்ளீஸ் என்னை வீட்டுக்கு அனுப்பிடுங்க மேடம்” அவள் தன் அழுகையை நிறுத்தியபாடில்லை.

“அழாதன்னு சொல்றேன் இல்ல” என்று அவளை அதட்டிவிட்டு,

தேநீர் பரிமாறும் கான்ஸ்டபிளை பார்த்து, “இந்த பொண்ணுக்கும் டீ கொடுங்க” என்றாள்.

“இல்ல… எனக்கு வேண்டாம்… நான் போகணும்” என்றவள் குழந்தை போல அடம் பிடிக்கவும்,

“சரி சரி போகலாம்… நீ வந்து இப்படி உட்காரு” என்று தணிந்து குரலில் உரைத்து அவளை தன் மேஜையின் எதிரே இருந்த இருக்கையில் அமர சொன்னாள்.

ஆனால் அவள் தயங்கியபடி நிற்க,

“வந்து உட்காரு… வா” என்று சத்தமிடவும் பதட்டதொடு வந்து அமர்ந்தாள். அவள் தேகமெல்லாம் நடுங்கி கொண்டிருந்தது.

சூடான தேநீர் அவள் முன்னே வைக்கப்பட்டது.

“எனக்கு வேண்டாம் மேடம்… என்னை அனுப்பிடுங்க” என்றவள் மீண்டும் அதையே பாட்டை பாட, ஜெயாவின் முகத்தில் அத்தனை கடுப்பு. இருப்பினும் அதனை காட்டி கொள்ளாமல்,

“சரிம்மா அனுப்புறேன்… நீ டீயை குடி” என்றாள்.

“கண்டிப்பா அனுப்பிடுவீங்களா மேடம்?”

“அனுப்பிடுறேன்… நீ முதல குடி”

சூடாக இருந்த அந்த தேநீரை அவசரமாக தன் தொண்டை குழியில் ஊற்றி கொண்ட அந்த பெண், “ம்ம்ம்… என்னை அனுப்பிடுங்க மேடம்” என்றாள்.

அவள் செய்கையை பார்த்து புன்னகைத்தவள்,

“ஆமா உன் பேர் என்னன்னு சொன்ன?” என்று அவள் கேள்விக்கு பதிலுரைக்காமல் பேச்சை மாற்றினாள்.

“இந்து…மதி மேடம்”

“இந்துமதி இல்ல… மறந்துட்டேன்”

ஜெயா அவளை ஆழ்ந்து பார்த்துவிட்டு, “இந்துமதி… நான் ஒன்னு சொல்றேன் நீ கேட்கிறியா?” என்று ஆரம்பித்தாள்.

“என்ன மேடம்?” அவள் ஒன்றும் புரியாமல் விழிக்க,

“நீ ஒரே ஒரு கையெழுத்து மட்டும் போட்டு கொடுத்திடு… நானே நீ போறதுக்கான எல்லா ஏற்படும் செய்றேன்”

“என்ன கையெழுத்து?” அவள் சொன்னதை சரியாக விளங்கி கொள்ள முடியமால் இந்துமதி கேட்க,

“அது ஒன்னும் இல்லை… தற்காப்புக்காக உன்னை கற்பழிக்க வந்தவனை நீ கொலை பண்ணிட்டன்னு ஸ்டேட்மென்ட் எழுதி கையெழுத்து போட்டு கொடுத்துடு… அவ்வளவுதான்”

இந்துமதிக்கு அந்த வார்த்தைகள் பேரதிர்ச்சியாக இருந்தன.

“உனக்கு அதான் நல்லது” என்று அவள் சொல்ல,

“உஹும்… முடியவே முடியாது.. நான் அதுக்கு ஒத்துக்க மாட்டேன்… அப்படியெல்லாம் எழுதியும் தர மாட்டேன்” என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டாள்.

“அப்படின்னா நாங்களே எழுதிடுவோம்… நகையெல்லாம் எடுத்துகிட்டு நீ அவனோடு ஓடி போக பார்த்த… அவன் உன்னை ஏமாத்திட்டு நகையை மட்டும் அபேஸ் பண்ண பார்த்தான்… நீ அவனை கொலை பண்ணிட்ட” என்று வெகுசாதாரணமாக எந்தவித உணர்ச்சியும் இல்லாமல சொல்லிவிட்டு,

“கள்ள காதலனை கொடூரமாக கொன்ற இளம் பெண் இந்துமதி கைது… அப்படின்னு நாளைக்கு நியுஸ் பேபர்ல கொட்ட எழுத்தில வரும்… பரவாயில்லையா?” என்று குரூரமாக கேட்டாள்.

இந்த வார்த்தைகளை கேட்ட இந்துவின் முகம் இருளடர்ந்து போனது. இதென்ன கொடுமை… கடவுளே! என்று தன்னகுள்ளாகவே அழுது கரைந்தவள்,

“அந்த மாதிரியெல்லாம் பண்ணிடாதீங்க மேடம்… என் குடும்ப மானமே போயிடும்” என்று கையெடுத்து கும்பிட்டு கெஞ்சினாள்.

“அந்த பயம் இருக்கு இல்ல… ஒழுங்கா நான் சொல்ற மாதிரி எழுதி கையெழுத்து போட்டு கொடு” இரக்கமே இல்லாமல் ஜெயா  சொல்ல அந்த வார்த்தைகள் இந்துமதியின் உணர்வுகளை துண்டு துண்டாக கூறு போட்டன.

“ஐயோ!!! நான் எந்த தப்புமே செய்யல செய்யல செய்யல” என்று அவள் உணர்ச்சிகள் பொங்க கத்த,

அந்த நொடி அங்கிருந்த சலசலப்புகள் அடங்கி எல்லோரின் பார்வைகளும் ஒரு சேர இந்துமதியின் புறம் திரும்பியது.

ஜெயாவோ சீற்றமாகி, “என்னடி திமிரா… நான் உன்கிட்ட பொறுமையாதானே பேசிக்கிட்டு இருக்கேன்… எதுக்கு இப்படி கத்தி சீன் போடுற” என்றாள்.

அந்த காவல் நிலையமே அவளின் ஆங்காரமான மிரட்டலுக்கு நிசப்தமாகி போனது

“கட்டின புருஷனை விட்டுட்டு பணத்துக்காக எவன் கூடயோ ஓடி போக பார்த்தவதானடி நீ… இப்போ என்னவோ நான் எதுவும் செய்யலன்னு பெரிய உத்தம பத்தினி மாதிரி கத்திற?” ஜெயா தீயாக வாரத்தைகளை வீச,

இந்துமதி பேச்சற்று போனாள். விழிகளில் திரண்ட நீர்த்துளிகள் அப்படியே உறைந்து நின்றுவிட, அவமானத்தின் உச்சத்தை தொட்ட உணர்வில் மனதிற்குள் புழுங்கினாள்.

இந்த உடம்பில் இன்னும் உயிர் ஒட்டி கொண்டிருக்க வேண்டுமா? அவள் வேதனையோடும் வலியோடும் முகத்தை மூடி வெதும்ப தொடங்க அங்கிருந்த எல்லோரின் விழிகளும் இரக்கமாக அவளை பார்த்தன.

ஆனால் ஜெயா அலட்சியமாக பார்த்தாள். இந்த மாதிரி எவ்வளவோ கண்ணீர்களை அவள் கடந்து வந்திருக்கிறாள். இவளின் அழுகை ஒன்றும் அவளை பெரிதாக பாதித்து விடவில்லை.

ஜெயா ஒரு வெள்ளை காகிதத்தையும் பேனாவையும் மேஜை மேல் வைத்து, “அழுதது போதும்… ஒழுங்கா நான் சொல்றதை எழுதி கொடு” என்றாள்.

இந்துமதி சில நிமிட மௌனத்திற்கு பின தன் அழுகையை விழுங்கி கொண்டு நிமிர்ந்தாள். அந்த பேனாவையும் தாளையும் பார்த்தவள் முடியவே முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட,

ஜெயாவின் கோபம் கட்டுகடங்காமல் பெருகியது.

“நீ இப்போ கையெழுத்து போடல… என்ன ஆவன்னே தெரியாது” என்று மிரட்ட, அப்போதும் அவள் தன் முடிவிலிருந்து மாறவில்லை.

அந்த சமயத்தில் ஆய்வாளர் சாரங்கபாணி உள்ளே நுழைய எல்லோரும் எழுந்து நின்றனர். ஜெயா தன் தொப்பியை எடுத்து தலையிலணிந்து கொண்டபடி,

“இனிமே உன்னை யாராலையும் காப்பாத்த முடியாது… அந்த ஆளு துடைப்ப கட்டைக்கு புடவை கட்டினாளே சும்மா விட மாட்டான்… நீ வேற ஆள் அம்சமா அழகா இருக்க… என்ன நடக்க போகுதோ” என்று அவள் காதோரம் ரகசியமாக சாரங்கபாணியின் நடத்தை குறித்து விவரிக்க, அந்த வார்த்தைகள் இந்துவை உலுக்கி போட்டது,

சாரங்கபாணியின் கருத்த நிறத்தையும் பருமனான தேகத்தையும் பார்க்கவே அவளுக்கு பயமாக இருந்தது

அவள் இதயம் மத்தளமாக கொட்ட, அந்த நொடி உள்ளே நுழைந்த சாரங்கபாணி அவளை ஆழ்ந்து பார்க்கலானார். அந்த ஒரு பார்வையிலேயே இந்துமதி துடிதுடித்து போனாள்.

“கையெழுத்து வாங்கிட்டியா ஜெயா?” என்று இந்துமதியின் மீதிருந்த பார்வையை கிஞ்சிற்றும் அகற்றி கொள்ளாமல் சாரங்கபாணி ஜெயாவிடம் கேட்க,

“இல்ல சார்… அதான் பேசிட்டு இருக்கேன்” என்று தைரிய நாயகியாக பேசி கொண்டிருந்த ஜெயா அவரிடம் தடுமாறினாள். சாரங்கபாணி முகம் கடுகடுத்தது.

அவர் முகத்தில் ஏறபட்ட மாறுதல்களை கவனித்த ஜெயாவிற்கு வெலவெலத்துப் போனது. அதன் பின் அவர் அங்கே நிற்காமல் தன்னறைக்குள் புகுந்துவிட, அவள் பெருமூச்செறிந்து மீண்டும் இந்துமதியிடம் பேச ஆரம்பித்தாள்.

ஆனால் இம்முறை மிகவும் பொறுமையாக!

“நான் சொல்ற மாதிரி எழுதி கையெழுத்து போட்டு கொடு… உனக்கு எந்த பிரச்சனையும் வராம நான் பார்த்துக்கிறேன்”

இந்துமதி தளர்ந்த பார்வையோடு, “நான் செய்யாத தப்பை எதுக்கு மேடம் நான் செஞ்சதா ஒத்துகிட்டு கையெழுத்து போட்டு கொடுக்கணும்?” என்று கேட்டாள்.

“ஏன்னா நீ கை வைச்ச இடம் அப்படி?”

“இங்கிருந்து உன்னை காப்பாத்த யாரும் வரமாட்டங்க… அப்படியே வந்தாலும் அவங்களாலையும் ஒரு ஆணியையும் புடுங்க முடியாது…

இங்க பணம்தான் பேசும்… ஒழுங்கா நான் சொல்றதை மாதிரி கேட்டா நீ தப்பிச்ச… இல்லன்னு வை… உன் நிலைமை அதோ கெதிதான்” என்று அப்போதைய நிலைமையை எடுத்துரைத்தாள்.

நீதி நியாயம் என்பதெல்லாம் இங்கே வெறும் வார்த்தைகளில் மட்டும்தான். பணம் படைத்தவர்கள் வைப்பதுதான் இவர்களுக்கு சட்டம். அவள் என்ன சொன்னாலும் அது இங்கே எடுபட போவதில்லை.

எத்தனையோ இழப்புகள் துயரங்கள் வலிகளை கடந்து வந்தாலும் இதுதான் இந்துமதி வாழ்க்கையில் மிக மிக மோசமான அத்தியாயமாக இருக்க போகிறது.