பன்னிரண்டாம் வகுப்பில்… அதிக மதிப்பெண்களுடன்… தேர்ச்சி பெற்றிருந்தாள் அம்மு… சரவணனும் அவளுக்கு இணையான மதிப்பெண்கள் பெற்றிருக்கவும்… “சத்தியமா இது உன் மார்க்தானா சரவணா?” என அவனை ஓட்டி எடுத்தான் சசி… மகிழ்ச்சியுடன்…
“எனக்கும்… டாக்டர் ஆகணும்னு ஆசைதான் அண்ணா! இருந்தாலும்… அம்மு கொடுத்த டார்ச்சரால தான்… அவளை மாதிரியே… விழுந்து… விழுந்து படிச்சேன்… பாருங்க இன்னுமே எனக்கு… அடிபட்ட காயம் ஆறலை…” என அம்முவை சரவணன் கிண்டல் செய்ய…
“இதோ பாரு… நீ இப்படியெல்லாம் பேசின… நான் எமரால்ட்…ஐ உன் மேல… ஏவி விட்டுடுவேன்… அது ஏற்கனவே… குட்டி போட்டுவிட்டு… எல்லாரையும் கடிச்சு குதறும் அளவிற்கு… வெறியில் இருக்கு… ஜாக்கிரதை!” என்று அவனை எச்சரித்தவள்…
“அண்ணா! பாருங்கண்ணா இந்த மங்கிய!” என ஆதியைத் துணைக்கு அழைத்தாள் அம்மு…
சிரித்துக்கொண்டே ‘யார்ரா இங்க! என் தங்கையையே ஓட்றது… பிச்சுடுவேன் பிச்சு!” என ஆதி அவளுக்காக வரிந்துகட்டிக்கொண்டு வர…
“பாருங்க… சசி அண்ணா! நீங்க ரெண்டு பேருமே அம்முவுக்கு சப்போர்ட் பண்ணா… மீ பாவம் இல்ல?” என அவன் சொல்லவும்…
“அவங்க கிடக்கறாங்க… நீ வாடா செல்லம்… நான் ஸ்வீட் செஞ்சு வச்சிருக்கேன்… உனக்கு மட்டும் கொடுக்கறேன்!” என… லட்சுமி… சரவணனுக்கு பரிந்துகொண்டு வர…
“இப்ப நீங்க எப்படி இதை அவனுக்கு கொடுக்கறீங்கன்னு பாக்கறேன்!” என்றவாறு…அங்கே இனிப்புகளால் நிரம்பியிருந்த பாத்திரத்தை தூக்கிக்கொண்டு… அங்கிருந்து ஓடியே போனாள் அம்மு…
“ஐயோ! ராஜா அவளைப் பிடி… சுவீட்டை எல்லாருக்கும் கொடுக்கணும்…” என லட்சுமி பதற…
சிறிது நேரம்… அனைவரையும் ஆட்டம் காட்டிவிட்டு… பிறகு தானே அந்த இனிப்பைக் கொண்டுவந்து எல்லோருக்கும் கொடுத்தாள் அம்மு…
அவளது மதிப்பெண்களால் ஏற்கனவே… அருள்… வரதன்… இருவருமே மகிழ்ச்சியில் இருக்க… மேலும் அவள் போடும் ஆட்டத்தைப் பார்த்து… வயிறு குலுங்க சிரித்துக்கொண்டிருந்தனர்…
ஆதியின் திருமணம்… அம்முவின் மருத்துவ படிப்பு என…அவர்களது இல்லமே மகிழ்ச்சியில் திளைத்திருந்தது…
இன்னும் பதினைந்து தினங்களில் நிச்சயதார்த்தம் என்று இருந்த நிலையில்… போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க… தனது இரு சக்கர வாகனத்தில்… ஆதி டெக்ஸ்டைல்ஸின் தாம்பரம் கிளை நோக்கி போய்க்கொண்டிருந்தான்… ஆதி…
ஒரு கிளையில் இருந்து… ஆதி டெக்ஸ்டைல்ஸின் மற்றொரு கிளைக்கு செல்ல வேண்டுமானால்… இப்படி இரு சக்கர வாகனத்தை உபயோகிப்பது அவனது… வழக்கம்தான்…
அன்றைக்கென்று பார்த்து… பெயருக்கு… நச நசவென்று… மழை பெய்து… GST சாலை முழுவதும்… சேரும் சகதியுமாக இருக்க… சரியாக அவனது கைப்பேசி ஒலித்தது…
அங்கே போக்குவரத்து நெரிசல் வேறு அதிகமாக இருக்க… அந்த அழைப்பு… அவனுக்கு எரிச்சலைக் கிளப்புவதாக இருந்தது…
வண்டியை நிறுத்தி விட்டு… அழைப்பை ஏற்கவும் அவனால் இயலவில்லை… இதில் ஹெல்மெட் வேறு…
தொடர்ந்து நான்காவது முறையாகக் கைப்பேசி ஒலிக்கவும்… ஒருவாறு பைக்கை… ஓரமாக நிறுத்தி… கைப்பேசியை எடுத்துக் பார்க்க… நான்கு அழைப்புகளும்… அனுவிடம் இருந்துதான் வந்திருந்தது…
“எதாவது… முக்கியமான விஷயமாக இருக்குமோ” என்று எண்ணி… அழைப்பை எடுத்தவன்… “சொல்லு… அணு… ஏதாவது… முக்கியமான விஷயமா?” என்று…அருகே ஒலித்த ஹாரன் சத்தத்தினால் உண்டான எரிச்சலை அடக்கிக்கொண்டு… அவன் கேட்க…
“ஏன்… முக்கியமான விஷயமாக இருந்தால்தான்… நான் உங்களுக்குக் கால் பண்ணனுமா? சும்மாதான் பண்ணேன்! ஏன் அட்டென்ட் பண்ண இவ்வளவு நேரம்?” என்று விளையாட்டாக ஒலித்தது அவளது குரல்… கூடவே கொஞ்சம் நக்கலும் கலந்திருந்ததோ?
ஆதியின் கோபத்திற்கு அளவே இல்லை எனலாம்… அதே கோபத்துடன் வந்தன வார்த்தைகள்… “ஏய்! அறிவில்ல உனக்கு… சும்மா வெட்டிய பேசணும்னா… அதுக்கு வேற ஆளைப் பாரு? ஒரு தடவை போன் பண்ணியிருந்தாலே போதுமே… எடுக்கும் நிலையில் இருந்தால்… நானே எடுத்திருப்பேன்… எப்படி பிஹேவ் பண்ணனும்னு அம்முகிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோ…” என்றவாறு அழைப்பைத் துண்டித்தான் ஆதி…
பிறகு அவன் பைக்கை கிளப்பிக்கொண்டு போக எத்தனிக்க… அதிவேகத்துடன் வந்த சின்னையானை வேன் ஒன்று ஆதியின் பைக்கை உரசிக்கொண்டு செல்ல… வண்டியைக் கட்டுப்படுத்த இயலாமல்… கீழே சரிந்தான் ஆதி… அந்த பைக் அவன்மீதே விழவும்… வலது காலில் பலமாக அடிபட்டிருந்தது… கைகளில் ஏற்பட்ட… சிறு சிறு உரசல்களினால்… ரத்தம் கசிந்துகொண்டிருந்தது…
மெதுவாக… தன்னைச் சமாளித்து… எழுந்துநிற்க முற்பட… காலில் உயிரே போவதுபோல் வலிக்கத் தொடங்கவும்… அருகில் இருந்தவர்கள் உதவிக்கு வரவே… அங்கே இருந்த கடையில் வண்டியை நிறுத்தி… அங்கேயே உட்கார்ந்துகொண்டவன்… வினோத்தை அழைத்து… அவனது நிலையைச் சொல்ல…
சில நிமிடங்களில்… அப்பொழுது வினோத் வேலை செய்துகொண்டிருந்த ‘கேர் ஃபார் லைஃப்” மருத்துவனைக்கு அழைத்துவரப்பட்ட ஆதிக்கு… சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது…
அதற்குள்… அங்கே வந்துசேர்ந்திருந்தனர்… வரதன்… லட்சுமி மற்றும் அம்மு மூவரும்…
அந்த விபத்து பற்றி மற்றவருக்குத் தெரியவந்தால்… அபசகுனம் என்று நிச்சயத்தைப் பாதிக்குமோ… என்ற எண்ணத்தில்… வேறு யாரிடமும் அதைப்பற்றிச் சொல்லவில்லை அவர்கள்…
அவனது காலில் x-ray செய்து பார்த்த மருத்துவர்… காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாகவும்… பிளேட் வைக்கவேண்டியதாக இருப்பதால் அறுவை சிகிச்சை தேவைப்படும்… என்றும் சொல்லவே… அங்கேயே அனுமதிக்கப்பட்டான் ஆதி…
அன்று இரவே…அறுவை சிகிச்சையும் செய்து முடித்து… ஐந்து நட்சத்திர விடுதியின் அறைப் போன்ற அறையில்… ஆதி… கொண்டுவந்து விடப்பட…
மருந்துகளின் பிடியில்… ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவன்… அடுத்த நாள் மதியம்தான் கண் விழித்தான்…
இயல்பாக நடக்க… மூன்று மாதங்களுக்கு மேல் ஆகலாம் என்ற நிலையில்… தொழில்… குடும்பம் என்று நினைத்து… நொந்துதான் போனான் ஆதி…
இரவு முழுதும்… கண்விழித்துச் சோர்ந்துபோயிருந்த… அன்னை மற்றும் தந்தையை பார்த்து வேதனை அடைந்தவன்… “இங்கே… நல்ல கேர் இருக்கும்மா… கவலைப்படாமல் நீங்க வீட்டுக்குப்போய்… ரெஸ்ட் எடுத்துக்கொண்டு… நாளைக்கு வாங்க… எப்படியும்… நாளைக்கே டிஸ்சார்ஜ் செய்தாலும்… செய்திடுவாங்க…” என்றவன்… அப்பாவைப் பார்த்து… “நீங்களும்… அம்மா… அம்மு… இரண்டுபேரையும் அழைத்துக்கொண்டு… வீட்டுக்கு போங்கப்பா… தாத்தா வேறு பயப்படுவாங்க…” என்று வற்புறுத்த…
“அண்ணா டிஸ்சார்ஜ் ஆகும் வரை… நான் இங்கேயே இருக்கேன்…” என்று வீட்டிற்குச் செல்ல மறுத்துவிட்டாள் அம்மு…
அதன் பிறகு ஆதி சொன்ன எதுவும் அவளது செவிகளுக்குள் நுழையவே இல்லை…
விதி கண்களை மறைக்கும் என்பார்கள்… ஆனால் அதே விதி… அவளது கண்களை மறைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்…
பதிலாகக் காதுகளை அடைத்து… அந்த இடத்தில் அம்முவின் விதி… சதி செய்துவிட்டது…
வேறுவழியின்றி… அம்முவை… ஆதியுடன் விட்டுவிட்டுச் சென்றனர்… வரதன்… லட்சுமி இருவரும்… அதுவே அவர்கள்… அம்முவை இறுதியாகப் பார்த்தது…
அன்று மாலை… அம்மு மற்றும் ஆதி இருவருக்கும்… மாற்று உடைகளை எடுத்துக்கொண்டு அங்கே வந்துசேர்ந்தான் கோபால்…
அப்பொழுதுதான்… கோபாலை பார்த்த ஆதி… நினைவு வந்தவனாக… “ப்சு… நீ உன் கல்யாண செலவுக்கு… பணம் கேட்டிருந்த இல்ல…” என்ற ஆதி… தொடர்ந்து… “நான் அப்பாகிட்ட சொல்லிடறேன்… நீ நாளைக்கு வாங்கிக்கோ…” என்று முடித்தான்…
அதைக் கேட்டுக்கொண்டிருந்த அம்முவின் முகம்… கடுமையாக மாறிப்போனது… அண்ணனையும்… கோபாலையும் மாறி… மாறிப் பார்த்தவள்… எதோ சொல்ல வரவும்… அங்கே வந்த செவிலிப்பெண்… ஆதிக்கு மறுபடியும் ஒரு X-ray எடுக்கவேண்டும் என்று சொல்லி… அவனைச் சக்கர நாற்காலியில் உட்கார வைக்கவும்… அவனுடன் X-ray எடுக்கும் இடத்திற்குச் சென்றாள் அம்மு…
அங்கே காத்திருக்கும் பகுதியில் அம்மு நிற்க… ஆதி மட்டும் உள்ளே அழைத்துச் செல்லப் பட்டான்…
அங்கே கொஞ்சம் தாமதமாகும் என அறிந்தவன்… ஒரு முக்கியமான போன் கால் செய்யவேண்டி இருந்ததால்…
அம்முவிடமிருந்த அவனது கைப்பேசியை வாங்கவென…செவிலிப்பெண்ணின் உதவியுடன் வெளியே வரவும்… அங்கே இருந்த கண்ணாடி தடுப்பிற்கு வெளியில்… அம்மு… தெளிவற்ற முகத்துடன்…அந்த கோபாலுடன் எதோ காரசாரமாக பேசிக்கொண்டிருக்கவும்… திடுக்கிட்டுத்தான் போனான் ஆதி…
அதே நேரம்… அங்கே ஸ்ட்ரெக்ச்சரில்… யாரையோ வைத்து அவசரமாகத் தள்ளிக்கொண்டு வரவும்… அம்மு… அதைப் பார்த்து… வலது கையால் தனது வாயை மூடிக்கொண்டு… அமைதியாகிப்போய்… ஓரமாக நகர்ந்துகொண்டாள்…
அதற்குள்… ஆதிக்கு அழைப்பு வரவும்… அவன் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டான்…
X-ray எடுத்துமுடித்து அவன் வெளியில் வரும்பொழுது… அம்மு அங்கே இல்லை…
அறைக்கு வந்த பிறகும்… அம்மு அங்கே வராமல் போகவே… அருகில் எங்காவது போயிருப்பாள் என்று… நினைத்து அமைதியானான் ஆதி…
அதற்குள்… அங்கே வந்த மருத்துவர்… அவனைப் பரிசோதனை செய்துவிட்டு… வலி நிவாரணி ஊசி ஒன்றை செலுத்திவிட்டுச் சென்றார்…
அம்முவிற்காகக் காத்துக்கொண்டிருந்தவன்… அப்படியே தூங்கிப்போனான்…
அடுத்த நாள் அவன் விழிக்கும்போது… நன்றாக வெயில் வரத் தொடங்கியிருந்தது… அவனுக்கு அருகில்… சசியும்… சரவணனும் உட்கார்ந்திருந்தனர்…
நேரத்தைப் பார்க்க… மணி ஒன்பது ஆகியிருந்தது…
அதற்குள் அங்கே வந்த ஆண் செவிலியர்… அவனுக்கு உதவி செய்ய… காலைக்கடன்களை முடித்து வந்தவன்… முகத்தைத் துடைத்துக்கொண்டே…
“பயங்கரமா தூங்கியிருக்கேண்டா… ச்சை! இன்னும் எவ்ளோ நாள் இந்த கொடுமையை அனுபவிக்கணுமோ” என்று தன் நிலையை எண்ணி நொந்துகொண்டே… “நீங்க எப்ப வந்தீங்க?” என்று கேட்க…
” நாங்க இப்பதான் வந்தோம்…” என்ற சசி… “பரவாயில்லடா… ரெஸ்டே இல்லாமல் காலில் சக்கரத்தை கட்டி சுத்திட்டு இருக்க இல்ல… அதனால் நீ இப்படித் தூங்கினால்தான் உண்டு” என்றுவிட்டு… அவன் மனநிலையை மாற்ற எண்ணி…
“உங்கம்மா கால் கட்டு போடணும்னு சொல்லிட்டே இருந்தாங்க… இப்ப போட்டாச்சு…” என்று சொல்லி சிரிக்க…
சரவணனைப் பார்த்த ஆதி… “எங்கடா… அந்த அருந்த வாலு? எவ்ளோ சொல்லியும் கேட்காமல்… அடம்பிடிச்சு… இங்கேயே இருக்காடா… ” என்று சொல்லும்போதே… அவன் முகத்தில்… புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது…
“யாரை சொல்றீங்கண்ணா… அம்முவையா?” குழப்பத்துடன் வந்தது அவனது கேள்வி…
“வேற யாரைச் சொல்லுவேன்… அவளைத்தான்…” என ஆதி சொல்ல… குழம்பினார் இருவரும்…
“நாங்க வந்து… ஒரு மணி நேரத்துக்கு மேல ஆச்சுடா… அவ இங்க இல்லையே…” என்று சசி பதட்டத்துடன் சொல்ல…
அதிர்ந்தான் ஆதி… அங்கே பணியில் இருந்த செவிலியரிடம் கேட்க… “நான் காலை ஆறு மணிக்கு இங்கே வந்தேன்… அப்படி யாரும் இங்கே இல்லையே!!!” என்றார் அவர்…
மேலும் அங்கே… அம்முவைப் பற்றி விசாரிக்க… அவளைப் பற்றி காலையில் பணிக்கு வந்திருந்த யாருக்குமே தெரிந்திருக்கவில்லை…
பயந்தே போனான் ஆதி… முதன்முதலாக… பயம் என்றால் என்னவென்று அவனை உணரவைத்தாள்… அவனது செல்லத் தங்கை…
“என்னோட பிசினெஸ் போன்… ஆக்சிடென்ட் ஆனப்ப உடைஞ்சு போச்சு!… பர்சனல் போன் வேறு… அம்முவிடம்தான் இருக்கு… நீ எதுக்கும் அந்த நம்பருக்குக் கால் பண்ணு…” என்று அவனிடம் நிலைமையை விளக்க…
சசி கைப்பேசியை எடுப்பதற்கும் முன்பாகவே… சரவணன்… அந்த எண்ணை அழைத்திருந்தான்… ஆனால் அது அணைத்து வைக்கப் பட்டிருந்தது…”
அடுத்ததாக… வீட்டிற்குத் தொடர்புகொள்ள… “ராஜா… எப்படிப்பா இருக்க… இந்த அம்மு பொண்ணு… என்ன செய்யுறா… போனை அவளிடம் கொடு… இன்னும் கொஞ்ச நாளில்… மறுபடியும்… ஹாஸ்டலுக்கு போய்டுவா… நினைக்கும்போதே மனசுக்கு என்னவோ போல இருக்கு… உனக்கு வேறு இப்படி ஆகிப்போச்சே” என்று… கண்ணீர்குரலில்… அடுக்கிக்கொண்டே போனார் லட்சுமி…
அம்முவின் பாதுகாப்பு நிலை குறித்த… அச்சத்தில் ஆதியின் உடல் நடுங்கி… வார்த்தைகள் வெளிவராமல் போக… ஸ்பீக்கரில் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த சசி… “இங்கே கேன்டீனுக்கு போயிருக்காம்மா… வந்ததும் பேச சொல்கிறேன்” என்று அழைப்பைத் துண்டித்தான்…
ஒரு வழியாக வினோத்தை தொடர்புகொள்ள… அரைமணி நேரத்தில்… தாமதத்திற்கு மன்னிப்பை வேண்டிக்கொண்டே… அங்கே வந்து சேர்ந்தான் அவன்…
அதன் பிறகு… அவனது உதவியுடன்… CC – TV பதிவுகளைப் பார்வையிட…
இரவு ஒன்பதரை மணியளவில்… யாராவது வருகிறார்களா என திரும்பித்… திரும்பி… பார்த்தவாறே… அவனது அறைக்குள் நுழைந்த அம்மு… ஆதியின் முகத்தைப் பார்த்துக்கொண்டே நின்றவள்… என்ன நினைத்தாளோ… அவன் அருகில் உட்கார்ந்துகொண்டு… அவனது iv போடப்பட்டிருந்த வலது கையை வருடியவள்… அவனது இடதுகையில்… தனது முகத்தைப் பதித்துக்கொண்டு… ஒரு சில நிமிடங்கள் அப்படியே இருக்க… பின்பு… பதறியவளாக… அவன் முகத்தைத் திரும்பி பார்த்தவாறே… அங்கிருந்து வேகமாகச் சென்றாள்…
அவை எதையும் அறியாமல் உணர்வற்ற ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் ஆதி…
வேறொரு பதிவில்… அம்மு அந்த மருத்துவ மனையை விட்டு வெளியேறியிருப்பதும் தெரிந்தது…
பிறகு துரித கதியில்… அவனது செல்வாக்கை பயன்படுத்தி… ஆதி… போலீஸ் உதவியுடன் தேட… அதிகாலையில்… அம்மு கிடைத்தாள்தான்…
ஆனால்… அதிவேக ரயிலில்… சிக்கி… அருகே இருக்கும் ரயில் தண்டவாளத்தில்… கூழ் கூழாக… தனித்தனியாக… சிதறிப்போய்… உருவமே இல்லாமல்… அம்மு கிடைத்தாள்தான்…
அங்கே வந்த அந்தப் பகுதியின் காவல்துறை ஆய்வாளர்… தகவலை அவனிடம் தெரிவிக்க… அந்தத் தருணத்தில்… காரணம்… ஏதும் விளங்கவில்லை ஆதிக்கு…
சிந்திக்கக்கூட இயலாமல்… மூளை மரத்துப்போய் உணர்வற்று… அழுகைகூட வராமல்… உயிருள்ள சடலம்போல்… உருக்குலைந்து போயிருந்தான் ஆதி… மனதளவில்…
அப்பொழுதுதான்… வினோத்தின் நண்பரான… அந்த போலீஸ் அதிகாரி… அம்மு வைத்திருந்த ஆதியினுடைய கைப்பேசியை… ரகசியமாக அவனிடம் கொடுத்து… “இதுல… உங்க தங்கை… ஒரு வீடியோ ரெக்கார்ட் பண்ணியிருக்காங்க… அதை பாருங்க… இதை விபத்துன்னு… எழுதணுமா… இல்லை தற்கொலைனு எழுதணுமா என்று… அதன் பிறகு சொல்லுங்க… அப்படியே செய்துடலாம்…” என்று சொல்லவே…
அவனது உயிரைக் குடிக்கும் அந்தக் காணொளியை பார்த்தான் ஆதி… அருகில்… அந்தக் காவலருடன்… சசி… வினோத் மற்றும் சரவணன் மூவரும்…
சரியாக இரவு… பத்து மணிக்கு… அந்த மருத்துவமனை… கார் பார்க்கிங் பகுதியில்… நின்றுகொண்டுதான்… அதைப் பதிவுசெய்திருந்தாள் அம்மு…
அம்முவின் முகம்… முழுவதும்… பீதியில் உறைந்திருக்க… தெளிவான குரலில் ஆரம்பித்தது அந்தக் காணொளி…
“நான்… நம்ம ட்ரைவர் கோபாலைத்தான்… வி…வி… விரும்பறேன்… அண்ணா… அவனிடம்… எவ்வளவோ சொல்லியும்… அவன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை…”
“அவன் வேற பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்ள முடிவெடுத்து விட்டதால்… எனக்கு வாழ… கொடுத்துவைக்கல அண்ணா…”
“எனக்கு! எனக்கு! எனக்கு… என் உயிரை விட மேலானவங்களுக்காக… என் உயிரை கொடுக்கப்போறேன் அண்ணா…”
“அவங்களை விட எனக்கு… என் உயிர் ஒண்ணும்… அவ்வளவு பெரிசு இல்ல அண்ணா…”
“அதை நீங்க உணரணும்… புரிஞ்சிக்கணும் அண்ணா… எந்த நிலையிலும் என்னை… கேவலமாக நீங்க நினைக்கவே கூடாது அண்ணா…”
“கடைசியா… எனக்காக ஒண்ணே ஒண்ணு மட்டும் செய்ங்க அண்ணா… உங்களோட எமரால்டு பத்திரமா பார்த்துக்கோங்க!”
“எமரால்டால் மட்டுமே… என் மனதை உணர முடியும்!”
“பை அண்ணா! மிஸ் யூ ஆல் அண்ணா!” தொண்டையை அடைத்துக்கொண்டு… வந்த அழுகையுடன்… அந்தப் பதிவு துண்டிக்கப்பட்டிருந்தது…
அதைப் பார்த்து முடித்ததும்… தனது கைப்பேசியை… அணைத்து… அருகில் இருந்த சரவணனிடம் கொடுத்துவிட்டு… அவனது முகத்தைப் பார்க்க…
“எமரால்டு னா… அது… உங்க வீட்டுக்கிட்ட குட்டி போய்ட்டிருக்கும் நாய் அண்ணா!” என்றான் அவன்… அழுதுகொண்டே…
சரவணன் பேசிய எதுவும்… அவன் மூளையைச் சென்று அடைந்ததோ… இல்லையோ! என்பதுபோல்…
தங்கையும்… அந்தக் காணொளியும்… அனைவருக்கும் காட்சிப்பொருள் ஆவது… கொஞ்சமும் சகிக்காமல்…
உணர்வற்ற குரலில் “ஆக்சிடென்ட்னே இந்த கேஸை முடிச்சிடுங்க…” என்று சொன்னான்…… சுக்கல் சுக்கலாக உடைந்துபோன தேவாதிராஜன்…