tik 4

tik 4

முந்தைய தினம் கை முட்டியில் அடிப்பட்டிருந்ததால்… இரவு முழுதும் வலியில் துடித்துப்போனாள் மல்லி…

நல்ல, அழகான குடும்பம் இருக்கிறதுதான் அவளுக்கு… பாதுகாப்பாக  இருக்க வேண்டிய அவளது அப்பாவின் நிலையோ பரிதாபமாகிப்போனது…

தம்பியும் மிகவும் சிறியவன்..

அம்மாவிடம் கூட நடந்தது எதையும் சொல்லவில்லை…  ஏற்கனவே அப்பாவின் உடல்நிலையில் ஓரளவிற்குமேல் எந்த முன்னேற்றமும் இல்லை என்ற கவலையில் இருப்பவர்… தெரிந்தால் அவர்  மிகவும் வருந்துவார்…

இது போன்ற பிரச்சினையைச் சொன்னால் அவருடைய முதல் நடவடிக்கை… இருப்பதையெல்லாம் திரட்டி மகளுக்குத் திருமணம் செய்துவிட வேண்டும் என்பதாகத்தான் இருக்கும்.

குறைந்தபட்ச ரொக்கம், நகை, மற்ற பொருட்கள் என்று நிறையச் செலவு செய்ய வேண்டி வரும்…

மேலும் அவர்கள் வழக்கத்தில் மாப்பிள்ளைக்கு என்று பைக் வேறு எதிர்பார்ப்பார்கள். மொத்தத்தில் தீபனின் படிப்பிற்கு உலை வைப்பது போல் ஆகிவிடும்…

தீபன் NEAT தேர்விற்காக முயற்சித்தால் கட்டாயம்,  மருத்துவப் படிப்பிற்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது என்று சொல்வதற்குத்தான், அவனுடைய வகுப்பு ஆசிரியர் அன்று அவளைப் பள்ளிக்கு அழைத்தது…

அதோடு நிறுத்தாமல், தனிப்பட்ட முறையில் அவரது நண்பர் ஒருவர் நடத்தும்  பயிற்சி வகுப்பில், குறைந்த கட்டணத்தில் சேரவும் ஏற்பாடு செய்திருந்தார். பள்ளி நேரம் முடிந்தபின் அந்த வகுப்புகளுக்கும் போகத் தொடங்கியிருந்தான் தீபன்.

ஆக வலியுடன் பிரச்சனையையும் பொறுத்துக்கொண்டாள்…

 

 

காலை எழும் பொழுது வலி கொஞ்சம் குறைந்திருந்தது… விடுப்பு எடுத்துக்கொண்டு  வீட்டில் தனியாக இருக்கவும் மனமில்லை அவளுக்கு. எனவே அலுவலகம் கிளம்பிவிட்டாள் மல்லி …

எனோ தேவாவைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவள் மனம் அலைபாயத்தொடங்கி விடுகிறது… “வேண்டாம்! அவனிடமிருந்து விலகியே இரு… அதுதான் உன் குடும்பத்துக்கு நல்லது” என்ற அறிவின் கட்டளையை அவளால் புறந்தள்ள முடியவில்லை…

அவனது அக்கறையான செயல் ஒவ்வொன்றும்… அவன் பால் அவளை ஈர்ப்பதைத் தடுக்கமுடியாமல்தான் அவனிடம், அவள் அப்படி எடுத்தெறிந்து பேசியதே… அவன் அவளுக்காக வைத்திருந்த வலி நிவாரணி அவள் கண்களில் கண்ணீரை வரவழைத்தது…

மாலை வீட்டிற்குக் கிளம்பும் முன்… தீபனுக்கு… “உன்னால ஒரு ஐந்து நிமிடம் முன்னதாகவே வந்து வெயிட் பண்ண முடியுமா?”  என்று குறுந்தகவல் அனுப்பினாள்.

“அக்கா!! க்ளாஸ்ல இருக்கேன்… சீக்கிரம் வர முயற்சி செய்யறேன். முன்ன பின்ன ஆனாலும் வெயிட் பண்ணு… ப்ளீஸ்!!” என்று அவனிடமிருந்து பதில் வந்தது…

முதல் நாள் நடந்த நிகழ்வு… அவளை மிகவும் பாதித்திருக்கவே.. “மறுபடியும் வந்து அவன் ஏதாவது தொந்தரவு செய்தால் என்ன செய்வது?…” என்று எண்ணியவளாய்  தன் கரங்களால் தலையை தாங்கிப் பிடித்தவாறு சிறிது நேரம் உட்கார்ந்திருந்தாள் மல்லி…

பிறகு பேருந்திற்கான நேரமாகிவிடவே, அங்கிருந்து கிளம்பிச்ச்சென்றாள்.

அங்கே நிலைமையோ… தலை கீழாக மாறியிருந்தது!!!

அத்தனையும் நினைத்தவாறே, குழப்பதுதானேயே வீடு வந்து சேர்ந்திருந்தாள் மல்லி…

“இதே மாதிரியே போச்சு… நமக்கும் பைத்தியம்தான் பிடிக்கும்… யார்ரா அவன் இந்த வீராவோட கைய இப்படி ஓடிச்சு வச்சிருக்கான்?, அவன் நேத்து பேசின பேச்சுக்கு… இன்றைக்கு இப்படி பம்முறான்? ஐயோ!!!” என மனதிற்குள்ளேயே புலம்ப மட்டுமே முடிந்தது அவளால்…

“ஆனால் இனி அவன் அவளை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யமாட்டான்” என்ற எண்ணம் தோன்றவே சற்று நிம்மதியாக உணர்ந்தாள் மல்லி..

அடுத்த நாள் அலுவலகத்திற்குள் நுழையும்போதே அந்த மெல்லிய நறுமணம் இதமாக அவளை வரவேற்றது…  சிறிது நாட்களாகவே அவளுக்கு அலர்ஜி ஏற்படுத்தும் அந்த ஸ்பிரே மாற்றப்பட்டிருந்தது… எப்பொழுதிலிருந்து என்றுதான் அவள் கவனிக்கவில்லை…

மலர்ந்த முகத்துடன் உள்ளே நுழைந்தவளைக் கண்ட தேவா… அவளை அழைத்து “உன் கை வலி தலை வலி எல்லாம் சரியாகிவிட்டது போல இருக்கே” என்று உணர்ச்சியற்ற குரலில் கேட்க…

“தேவா சார்…” என்று அரம்பித்தவளை… “மிஸ்.. மரகத வல்லி!… நீங்க என்ன சொல்லுவீங்கன்னு தெரியும்…”

“இனி நாம வேலையை மட்டுமே பார்க்கலாம்…” என்றவனின் வார்த்தைகள் அவளை ஊசி போல் குத்தியது…

“இனி உங்களுக்கான வேலைகளை சுமாயாவிடம் ரிப்போர்ட் பண்ணுங்க..” என்றதோடு முடித்துக்கொண்டான்…

அன்றுமுதல் அவன் மல்லியிடம்  நேரடியாக எந்த வேலையும் கொடுப்பதில்லை… சுமாயா மூலமாகேவே அவளை தொடர்பு கொண்டான்…  மதிய உணவு அவர்களுடன் உண்பதையும் தவிர்த்தான்… மல்லிக்கு அவனைப் பார்ப்பதே அரிதாகிப்போனது…

அவனுடைய இந்த பாராமுகம், நல்லதுக்கே என்று அவளுக்குத் தோன்றினாலும்…  அவளை மிகவும் பாதிக்கவே செய்தது… அவள் எவ்வாறு உணர்கிறாள் என்று அவளுக்கே புரியவில்லை.

உணவு இடைவேளையில் பெண்கள் நால்வரும் அமர்ந்து சாப்பிடும் நேரம்…

சுமாயா… “மல்லி! உங்க ஏரியால ஏதாவது பிளாட் காலியா இருக்கா? எனக்கும் என் கணவருக்கும் வேலைக்குப் போக அந்த இடம்தான் வசதியாக இருக்கும்…” என்று கேட்க

அதற்கு மல்லி, “ஹேய்! எங்க பக்கத்துக்கு பிளாட்டே, ரொம்ப நாளா காலியாகத்தான்பா  இருக்கு… நீங்க வேணா வந்து பார்க்கறீங்களா?” என்று உற்சாகமாகப் பதில் சொல்ல…

அதற்குள் சவிதா… கொஞ்சம் நக்கலாக… “அது ஒரு மிடில் கிளாஸ் அபார்ட்மெண்ட் ஆச்சே” என்க…

மேகலா அதற்கு ஒரு படி மேலே போய்… “ஹேய் ஆமாம்பா… அது உனக்கு செட் ஆகாது… இன்னும் பெட்டரா வேற இடம் பாருப்பா…” என்று சொல்ல…

மல்லியின் முகம் வாடிப்போனது…

அனால் சுமாயாவோ… “மல்லி… எப்பயாவது என் சிஸ்டர் இன் லா வந்து தங்குவாங்க… டபிள் பெட் ரூம் இருந்தா போதும். அந்த ஏரியாதான் எனக்கு கம்பர்டபிள்… இன்று வேலை முடிந்து நான் உன் கூடவே வந்தால் அந்த பிளாட்டை பார்க்க முடியுமா?…”  என்று முடிவாய்க் கேட்க…

மல்லி அந்த வீட்டு உரிமையாளரிடம் பேசிவிட்டு அன்றே சுமையாவை அவளுடன் அழைத்துச் சென்றாள். சுமாயாவிற்கும் அந்த இடம் பிடித்து விடவே… முன்பணமும் கொடுத்துவிட்டேச் சென்றாள்..

அடுத்த வாரத்திலேயே அங்கே சுமாயா தன் கணவருடன் குடியேறினாள். அவள் தினமும் அலுவலகத்திற்குப் பேருந்தில்  மல்லியுடனேயே செல்லவே… மல்லிக்கும் தீபனை துணைக்கு அழைக்கத் தேவை இல்லாமல் போனது…

 

மல்லி சில துணிகளின் மாதிரியை வைத்துக்கொண்டு… அவற்றைப் பற்றிய தகவல்களைக் குறித்துக்கொண்டிருந்தாள்.

சவிதாவும், மேகலாவும் சிரித்துப் பேசியவாறே கணினியில் ஆழ்த்திருந்தனர்… அப்பொழுது அவர்கள் இருவரையும் தேவா அழைப்பதாகக் கூறிச்சென்றாள் சுமாயா…

இருவரும்  போய் தேவாவின் எதிரில் நிற்க… செல் பேசியை குடைந்து கொண்டிருந்தான் அவன்.

அவர்களை நிமிர்ந்து பார்க்கவும் இல்லை…

சிறிதுப் பொறுத்துப் பார்த்த சவிதா… “சார்” என்று அழைக்க… மேலும் சில நிமிடங்கள் காக்க வைத்த பிறகே  அவர்களை நோக்கி… “நீங்களெல்லாம் வேலை செய்யத்தான் வறீங்களா… இல்ல அரட்டையடிக்கவா?… ஒழுங்காக வேலை செய்வதானால் செய்ங்க இல்ல  இதே ஆட்டிட்யூட்டோட இருந்தீங்கன்னா…  உங்கள பெர்மனண்ட் செய்ய விடமாட்டேன்…” என்று மிரட்ட… அதிர்ந்தனர் இருவரும்…

பிறகு “சாரி” என்ற வார்த்தையுடன் முகம் தொங்கிப்போய்  வெளியே வந்தனர் இரண்டுபேரும்…

இன்னும் ட்ரைனிங் முடிய வெகு சில நாட்களே இருக்க, அவனைப் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை அவர்கள்… அவ்வளவே…

அன்று மாலை  கொஞ்சம் முன்பாகவே கிளம்ப எண்ணியிருந்தாள் மல்லி…   அனுமதி கேட்கவேண்டி கதவைத் தட்டிவிட்டு, தேவாவின் கேபினுக்குள் நுழைய…

“சொல்லுங்க மிஸ்.மரகத… வ…ல்…லி… என்ன விஷயமா என்னைப் பார்க்கணும்னு சொன்னீங்க…”என்று தேவா அவள் பெயரை ஒவொவொரு எழுத்தாய் பிரித்து உச்சரித்து… மல்லியிடம் கேட்க…

அவள் வெளியில் காட்டிக் கொள்ளவில்லையே தவிர, ஏற்கனவே அவன் அவளைக் கொஞ்சம்கூட கண்டுகொள்ளவில்லை என்ற கடுப்பில் இருக்கிறாள். அதுவும் அன்று அவன்  மற்ற இருவரை மட்டும் கூப்பிட்டு எதோ பேசியிருக்கிறான் என்றும்  தெரியும். ஆனால்  அவர்களை அவன் வறுத்து எடுத்ததெல்லாம் அவளுக்குத் தெரியாதே… அந்தப் புகைச்சல் வேறு சேர்ந்துகொள்ள, அவனது இந்த நக்கலான பேச்சு இன்னும் அவளது கோபத்தை கிளப்பினாலும்…அவளால் பற்களை மட்டுமே கடிக்க முடிந்தது…

“இன்று கொஞ்சம் வெளியே போகவேண்டும்… நான்கு மணிக்கு நான் கிளம்ப பெர்மிஷன் வேண்டும்” அவன் முகத்தைக்கூடப் பார்க்காமல் அவள் கேட்க…

அவளது அந்தச் சிறுபிள்ளைத்தனமான செய்கையில் சிரிப்புதான் வந்தது அவனுக்கு… அவளை வம்பிழுக்க எண்ணி… “தாராளமா நீங்கப் போகலாம் ஆனால் எங்கே போகப்போறீங்கனு சொன்னா… பெர்மிஷன் கொடுக்கலாமா வேணாமான்னு நான் முடிவுசெய்வேன்” என்று சொல்ல…

“பர்சனல்…என்னால ரீசென்லாம் சொல்ல முடியாது… நீங்க அனுமதிக்கலன்னா… நான் மணியிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டு திரும்பியும் பார்க்காமல் சென்றுவிட்டாள் மல்லி…அடுத்த நிமிடம் மணியின் எதிரில் நின்றிருந்தாள் அவள்…

அவனோ கொஞ்சம் கூட யோசிக்காமல் “எதுவாக இருந்தாலும் மிஸ்டர்.தேவாவிடம் கேட்டுக்கொள்…” என்று  சொல்லிவிட…

“என்ன மணி இப்படி சொல்றீங்க? நீங்க அவருக்கு சீனியர் தானே? என்றுமல்லி  கேட்க…

“உங்களைப் பொறுத்தவரை அவர்தான் இன்ச்சார்ஜ்… நீ அவரிடம்தான் அனுமதி கேட்கவேண்டும்” என்று முடித்துவிட்டான் மணி…

அதற்கெல்லாம் அடங்காமல்… “நான் குமார் சாரிடம் கேட்டால்?” என்ற அவளது கேள்விக்கு… மணியோ.. “இதையேதான் அவரும் சொல்வார்… நீ தேவையில்லாமல் பல்பு வாங்காதே” என்றுவிட்டான்…

தேவாவிடம் மறுபடியும் போய் நிற்கப் பிடிக்காமல், அவளது இடத்தில் அமைதியாக உட்கார்ந்திருந்தாள் மல்லி…

அவள் அருகில் வந்து நின்றான் தேவா… சுமாயா மட்டும் அங்கே இருந்தாள்… மற்ற இருவரும்   தையல் வேலை செய்யும் பகுதிக்குச் சென்றிருந்தனர்.

“சொல்லு… எங்கே போகணும்.. என்று தேவா கேட்க…”

அவள் அமைதியாக இருக்கவும்… “நீ என்னிடம் இப்படி பதில் பேசாமல் இருந்தால் வீட்டுக்குக் கூட போக முடியாது…” என்று அடுத்த குண்டை போட்டான்…

“ஐயோ!” என்றவள்… நான் “ஜி ஹெச்… போகப்போறேன்..” என்றாள் மெதுவாக…

“என்ன? நீ எதுக்கு அங்கே போகணும்” என்று அவன் அடுத்த கேள்விக்கு தாவ…

எப்படியும் பதில் சொல்லாமல் அவன் விடமாட்டான் என்பது தெரியவே… “இல்ல… அங்க நம்ம சுகுணா அக்கா கணவரை அட்மிட் பண்ணி இருக்காங்க… அவங்களை பார்க்கத்தான்…” என்று ஒருவாறு சொல்லி முடித்தாள்…

“யாரு ந…ம்..ம.. சுகுணா அக்கா…” என்றவனை.. முறைத்தவாறே… “இங்கே ஆபீஸ் அட்டெண்டர் வேலை செய்யறாங்களே… அவங்க” என்று நொடிந்துகொண்டாள்..

இப்பவே மணி நான்கு… நீ போவதானால் போகலாம்… என அவன் அனுமதித்த அடுத்த நொடி அங்கிருந்து பறந்திருந்தாள் மல்லி…

அவனிடம் மட்டும் ஏன் இப்படி கோவம் கொள்கிறாள?

ஏன் இவ்வளவு உரிமை உணர்வு??

அவனை வேண்டாம் என்று விலகவும் முடியவில்லை… வேண்டும் என்று பழகவும் முடியவில்லை…

அவன் பெயரைத் தவிர அவனைப் பற்றி வேறு எதுவும் தெரியாது…

யார் அவன் அவளுக்கு?

அன்றைய பார்ட்டியில் அவளை காப்பாற்றியது யார்?

வீராவை அடக்கியது யார்?

அனைத்தையும் விட…

அம்மு எங்கே இருக்கிறாள்?

எதற்கும் பதில் இல்லை அவளிடம்…

குழப்பங்கள் மட்டுமே மிஞ்ச… பேருந்து நிலையத்தில் நின்றிருந்தாள் மல்லி…

அவள் அருகில் வந்து நின்றது அந்த சிவப்பு நிற ஸ்விப்ட்…

உள்ளே உட்கார்ந்திருந்தான் தேவா… முன் பக்க ஜன்னல்  கண்ணாடியை திறந்து.. “உள்ளே வந்து உட்கார் மல்லி…” என்றவனுக்கு…

மல்லியோ… “இல்ல நான் பஸ்லயே போய்க்  கொள்கிறேன். உங்களுக்கு ஏன் வீண் சிரமம்” என்று பதில் கொடுக்க…

நான் இப்ப டீ.நகர் ஷோரூம் போகிறேன்… நீ என்னுடன் வந்தால் அங்கே போய்ட்டு ஜி ஹெச் போகலாம்…”

“அங்கே போனால் அப்படியே அந்த “சுவர்ணதாரிணி” காலெக்க்ஷன்ஸ் புடவைகளைப் பார்க்கலாம் என்க…

அந்தப் புடவைகளைக் காணும் ஆவல்… அவனுடன் போகச்சொல்லி அவளைத் தூண்ட… அவள் முகம் பூவாய் மலந்து போனது… ஆனால் அடுத்த நொடியே வாடியும் போனது…

“இந்த மாதிரிலாம் நான் யாரோடும் வெளியே போனதில்லையே… அம்மாவிடம் கேட்கவே பயமாக இருக்கே…” என்று மல்லி கலவரமாகவும்…

தேவாவோ… விட்டுக்கொடுக்காமல் கதவைத் திறந்து விட்டவாறே “சரி உள்ளே வந்து உட்கார்ந்து, உங்க அம்மாவுக்கு போன் பண்ணு… பிறகு முடிவு செய்யலாம்” என்க..

தயங்கியவாறே அவள் ஏறி உட்கார்ந்து, அவளது போனில் டயல்  செய்யத் தொடங்குவதற்குள் கார் அவன் கையில், நூற்றியிறுபதில் பறக்கத் தொடங்கியிருந்தது.

பதறியவாறே போனில் பரிமளாவை அழைத்து அவள் “அம்மா” என்க…

எதிர் முனையில், “மல்லி நம்ம சுமா சொல்லிச்சு மா… தேவா தம்பி, உன்ன ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டு போறேன்னு சொன்னா… நீ கூட போக மாட்டேன்னு சொல்லிட்டியாமே…  நானே அவ்ளோ தூரம் நீ தனியா போகணுமேன்னு நினைச்சேன்… அவரை பத்தி அந்த பொண்ணு ரொம்ப  நல்ல விதமா சொல்லுது மா.. உன்னை பத்திரமா அழைச்சுட்டு போவாரு… அவரோடவே போயிடு வா…”

அவளுக்கு பேச வாய்ப்பே கொடுக்காமல் பேசி முடித்தார் அவர்.

“சரிம்மா” என்றவளுக்கு ஆயாசமாக இருந்தது… “என்னவெல்லாம் செய்து வைத்திருக்கிறான் அவன்… எல்லோரையும் இப்படி வளைத்து வைத்திருக்கிறானே… அலுவலகத்தில் இன்னும் யார்தான் மீதம்?” என்று.

அவளுக்குத் தெரியாது வீட்டிலும் யாரும் மீதமில்லை என்று… அவளையும் சேர்த்து…

 

error: Content is protected !!