tik3

tik3

வியர்க்க விறுவிறுக்க, அலுவலக வளாகத்திற்குள் நுழைந்து… பட்டனை அழுத்திவிட்டு லிப்ட்டிற்காக காத்திருந்தாள் மல்லி…

அங்கே தெளிக்கப்பட்டிருந்த ரூம் பிரெஷ்னரின் நெடி வேறு அவளது நாசியில் எரிச்சலை உண்டாக்கித் தும்மல் வரவழைத்துக் கொண்டிருந்தது.

அப்பொழுதுதான் அவள் அருகில் வந்து நின்றான் அவன்…

அதற்குள் லிப்ட் கீழே வந்துவிட மல்லியுடனேயே அதன் உள்ளே நுழைந்தான் அந்தப் புதியவன்.

லிப்ட்டிற்குள்ளும் அந்த ரூம் பிரெஷ்னர் மணம் அதிகமாக இருக்கவே… மல்லிக்கு அடுத்தடுத்து தும்மலாக வந்து கொண்டே இருக்க … கண்களில் நீர் வடியத்தொடங்கியது… அவள் இதழிகளிலிருந்து “சாரி”, “எக்ஸ்க்யூஸ் மீ” இரண்டும் அனிச்சையாக மீண்டும் மீண்டும் உதிர்ந்து கொண்டே இருந்தது.

தினமும் அங்கே உபயோகிக்கும் ஸ்பிரேதான் அது… ஏனோ அந்த மணம் அவளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். தினமும் கொஞ்சம் தும்மலுடன்தான் அலுவலகத்தின் உள்ளேயே நுழைவாள் அவள். அதுவும் இன்று அந்த ஸ்பிரேவும் அதிகம்.. அவளது தும்மலும் அதிகம்..

கண்களத் துடைத்துக்கொண்டு, தனது துப்பட்டாவின் நுனியால் மூக்கை மூடிக்கொண்டாள்…

பிறகுதான் அவனைக் கவனித்தாள்  அவள்…

ஆறடிக்குக்  கொஞ்சமே கொஞ்சம் குறைவான உயரம்… மாநிறத்திற்கும்  கொஞ்சம் அதிகமான நிறம்… சதுரமான முக அமைப்பு…  சுத்தமாக ஷேவ் செய்திருந்தான்…  அகலமான நெற்றி… கூர்மையானக்  கண்கள்… அவனுடைய  அழுத்தமான தாடைகள் அவன்  “பிடிவாதக்காரன்” என்பதைப்  பறைசாற்றியது… அலை அலையான கருமையான கேசம், அடங்காமல் பறந்துகொண்டே இருக்க, அதை தன்னுடைய  நீண்ட விரல்களால் கொத்திக்கொண்டே இருந்தான்…

அவனது முகமும், அந்த வசீகரக் கண்களும், முன்பே எங்கேயோ பார்த்த, நீண்ட நாட்கள் பழகிய ஒரு உணர்வை தோற்றுவிக்க…அவனது முகத்தையே கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் மல்லி.

என்ன? என்பதுபோல் அவன் தனது ஒற்றைப் புருவத்தை ஏற்றி, தலை அசைத்துக் கேட்க…

அவள் தலை தானாகவே ஒன்றுமில்லை என்று ஆடியது…அப்பொழுதுதான்  தன்னை மறந்து, அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்ததை அவள் உணர, முன்பே அதிகத் தும்மலினால் சிவந்து போயிருந்த அவளது  முகம் மேலும் ரத்தமெனச் சிவந்து போனது…

மின் தூக்கி, அவள் இறங்க வேண்டிய இரண்டாவது தளத்தைத் தாண்டிவிட்டதையே பிறகுதான் உணர்ந்த மல்லி, அவள் அதற்கான பட்டனை அழுத்த மறந்ததை நினைத்து மானசீகமாகத் தலையில் அடித்துக்கொண்டாள். கடைசியாக இருந்த,   ஐந்தாவது தளத்தில்  அவன் இறங்க, அவள் லிப்ட்டின் உள்ளேயே இருக்கவும்… ஒரு அடக்கப்பட்ட சிரிப்புடன் அவன் சென்றதை பார்த்தவள்… நொந்தே போனாள்.

மணி, ஐஸ்வர்யா மற்றும் பயிற்சியிலிருக்கும் பெண்கள் மூவர்… என்று இவர்கள் வேலை செய்வதற்கான காபின், ஒரு ஹால் போல் சற்று பெரியதாக இருக்கும்… அதில் மணிக்கு என்று தனியாக ஒரு சிறு கேபின் இருக்கும்… டிசைன்கள் செய்வதற்கான கணினிகள், வரைவு மேசை என வசதிகள் செய்யப்பட்டிருக்கும்.. தையல் வேலைகளுக்கான பிரிவு, தனியே இருந்தது…

மல்லி ஒருவழியாக அங்கே வந்து சேர, அந்த இடமே  பெரும் அமைதியாக இருந்தது… அங்கே ஒருவரையும் காணவில்லை.

பிறகு வாஷ் ரூம் சென்று முகம் கழுவி வந்தவள்… வெளியில் இருக்கும் ‘சுகுணா’ என்ற அட்டெண்டர் பெண்ணை அழைத்து ‘அக்கா! எங்கே ஒருவரையும்  காணவில்லை?” என்று கேட்க…

“உனக்கு தெரியாதாம்மா? மேல ஏதோ மீட்டிங்காம்.. எல்லாம் அங்கதான் போயிருக்காங்க..” என்று அவள் பதிலளிக்க… மறுபடியும் மின் தூக்கியை நோக்கி ஓடினாள் மல்லி.

இரண்டு நாளில் அவ்வளவு ஓய்ந்து போயிருந்தாள் மல்லி… யார் சுமதி என்று அறிய, கைப்பேசியில்,  மணிக்கும்… ஐஷுவிற்கும் மறுபடி மறுபடி முயற்சித்துக் கொண்டே இருந்தாள்… ஒரு முறை கூட அவளது அழைப்பு எடுக்கப்படவில்லை.

வேறு வழியே இல்லாமல் திங்கள் நேரில் விசாரித்துக்கொள்ளாம் என்று முடிவு செய்தாள்… ஆனால் திங்கள் காலையிலேயே தீபனுடைய வகுப்பு ஆசிரியரை வந்து சந்திக்குமாறு அழைத்திருந்தனர்… விஜயாவால் போகமுடியாத சூழல் ஏற்படவே… மல்லி போகவேண்டியதாக ஆகிப்போனது…. பிறகு மெயில் மூலம், அலுவலகத்திற்கு பதினோரு மணிவரை நேர அனுமதிபெற்று… அங்கே சென்றுவிட்டாள்.

அவன் படிப்பது, அரசுப்பள்ளி… அவளும் அங்குதான் படித்தாள். படிக்கும் காலத்தில் அத்தனை ஆசிரியருக்கும் செல்ல மாணவி மல்லி… தீபனும் நன்கு படிக்கக் கூடியவன், அதனால், பெற்றோருக்குப் பதில் அவள் அங்கே போனால் யாரும் மறுப்பு சொல்வதில்லை..  பெரும்பாலும் தீபனுக்காக அவள்தான் போவாள்.

அங்கேயே எதிர்பார்த்ததை விடத் தாமதம் ஆகிவிட… பேருந்து பிடித்து, அவள் அலுவலகம் வந்துசேரவே மணி பதினொன்றரையைத் தாண்டியிருந்தது..

இன்னும் அவளது சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள நேரம் வரவில்லை போலும்.

அந்தப் புதியவனிடம் வாங்கிய ‘பல்பு’ வேறு அவளை இம்சித்தது…

அடுத்து இந்த திடீர் மீட்டிங் வேறு… அங்கே இன்னும் வேறு என்னவெல்லாம்  காத்திருக்கிறதோ???

நம்ம ராசிக்கு ” இந்த நாள் இம்சையான நாள்” என்று இருக்குமோ.. என்று தன்னை நொந்தவாறே ஐந்தாம் தளத்திலிருந்த அந்த மீட்டிங் ஹால் கதவை லேசாகத் தட்டிவிட்டு உள்ளே நுழைத்த மல்லி ஆடித்தான் போனாள்.

காஞ்சனாதான் எல்லோரையும் அழைத்திருப்பார் என நினைத்து அவள் அங்கே செல்ல…  அங்கே காஞ்சனா இல்லை… ஆனால் சசிகுமார் இருந்தார்… மற்ற எல்லோருமே அங்கே கூடியிருக்க… இவள்தான் கடைசி…

அந்தப் புதியவனும் அங்குதான் இருந்தான்..  ‘ஐயோ ‘ என்று இருந்தது அவளுக்கு…

மணி நன்றாகத் தன்னை  கடிந்துகொள்ளப் போகிறான் என்று இவள் எண்ணிக்கொண்டிருக்க … அதற்ககு மாறாக அவளைப் பார்த்து புன்னகைத்தவாறே அமரும்படி சைகை செய்தான் அவன்…

அவளும் ஒன்றுமே நடக்காததுபோல் போய் சவீதாவின் அருகில் இருந்த நாற்காலியில்  உட்கார்ந்துக கொண்டாள்.

சசிகுமார் புன்னகை முகமாக “என்ன மணி! இப்பொழுது மீட்டிங்கை ஆரம்பிக்கலாமா? எல்லோரும் வந்தாகிவிட்டதில்லையா?” என்று கேட்க.. “ஓகே சார்!” என்றான் மணி…

“மிஸ்.காஞ்சனா… சில சொந்தக் காரணங்களால் ரெசிக்னேஷன் கொடுத்திட்டாங்க…”  என அனைவருக்கும் முதல் அதிர்ச்சியைக் கொடுத்தார் குமார்.

“இனிமேல் அவர்களுக்குப் பதில் அந்த இடத்தில் …” என்று நிறுத்தி, அனைவரின் இதயத்துடிப்பையும் அதிகரிக்கச் செய்தவர்… “மிஸ்டர்.மணிகண்டன்  இன்றுமுதல் நியமிக்கப்படுகிறார்!!!…” என்று  மகிழ்ச்சியாக முடித்தார். நன்றித் தெரிவிக்கும் விதமாக எழுந்துநின்றான் மணி..

கைகளைத் தட்டியவாறே மல்லி, மகிழ்ச்சியுடன்  மணியைப்  பார்க்க,அவன் முகம் துடைத்து வைத்தாற்போன்று சலனமின்றி இருந்தது… “நியாயத்திற்கு அவன் சந்தோஷமாகத்தானே இருக்கணும், ஏன் இப்படி இருக்கான்?” என்று நினைத்தவளுக்குள் “ஐயோ அப்படின்னா மணி இடத்துக்கு ஐஷுவ அப்பாயிண்ட் பண்ணா நம்ம நிலைமை அவ்ளோதான்” என்ற எண்ணம் தோன்ற, அதிர்ந்தாள் மல்லி.

அவளது பயம் தேவை இல்லாதது, என்றவாறு… “இனிமேல் மிஸ்டர்.மணிகண்டனுக்கு பதிலாக மிஸ்டர்.தேவா நியமிக்கப்படுகிறார்” என்ற சசிகுமார்… அந்த புதியவனை ‘தேவா’ என்று அனைருக்கும் அறிமுகப்படுத்தினார்.

‘உஃப்’ என்ற நிம்மதிப் பெருமூச்சு ஒன்று எழுந்தது மல்லியிடம்.

ஐஸ்வர்யாவை வேறு ஒரு பிரிவிற்கு மாற்றியிருப்பாகவும் தெவிக்கப்பது.. அவளுக்குப் பதில் ‘சுமாயா’ என்பவரை நியமித்திருந்தனர்.

ஐஸ்வர்யாவின் முகம் கோபத்திலோ, பயத்திலோ பேயறைந்தது போல் ஆனது…

பிறகு பொதுவான சில விஷயங்களுடன் அந்த சந்திப்புக் கூட்டம் முடிந்தது.

மீட்டிங் முடித்து வரவுமே அவர்களுக்கு உணவருந்த நேரமாகியிருந்தது. களைப்புடன் பசியும் சேர்ந்துகொள்ளவே… அவள் கொண்டுவந்திருந்த  லன்ச் பாக்சுடன் ஓய்வறைக்குள் சென்றாள் மல்லி.

அவளுக்கு முன்பாகவே அங்கே சவியும், மேகலாவும் அமர்ந்திருந்தனர்… உடன் தேவாவும்…

பார்ட்டியில் நடந்ததுபற்றி கேட்கலாம் என்றால், அந்தப் புதியவனின் முன்பாக அதைப் பற்றி பேச அவளுக்குத் தயக்கமாக இருந்தது…

யோசித்தவாறே அவளது பாக்ஸை திறந்தாள் மல்லி… அதில் காஞ்சிபுரத்தின் சிறப்பு உணவான “குடலை இட்லி.. பொடியுடன் இருந்தது”…

“வாவ்! இதெல்லாம் உங்க வீட்ல செய்வார்களா?” என்று ஆச்சர்யத்துடன் தேவா கேட்க..

“அடிக்கடி செய்வாங்க… உங்களுக்கும் இந்த இட்லி பிடிக்குமா?” என்று கேட்டாள் மல்லி…

“ரொ….ம்ப” என்றவன் “எங்க வீட்டுல முன்பெல்லாம் அடிக்கடி செய்வாங்க…”

“இதை நான் எடுத்துக்கறேன்” என்றவன், அவளது அனுமதியைக்கூட கேட்காமல்,  அதைத் எடுத்துக்கொண்டு அவளிடம் அவனுக்காக ‘அமிர்தம்’ உணவகத்திலிருந்து வாங்கிவந்திருந்த உணவை அப்படியே கொடுத்துவிட்டான். அவளும் மறுக்கமுடியாமல் அதை உண்ணத்தொடங்கினாள்..

ஏனோ அந்த நேரம் அவளுக்கு மல்லியின் நினைவுதான் வந்தது. அவளுக்கும் காஞ்சீபுரம் இட்லி என்றால் மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு சமயம்  விடுமுறை முடிந்து விடுதிக்குத் திரும்பும்போதும் அம்மாவை செய்யச் சொல்லி, இவள்  அதை அம்முவிற்கு எடுத்துச் செல்வாள்.

அதில் மிளகு சுக்கு எல்லாம் கலந்து செய்யப்பட்டிருப்பதால், இங்கே யாருக்கும் அது பிடிப்பதில்லை. மணி மட்டும் எப்பொழுதாவது ஒரே ஒரு துண்டு மட்டும் எடுத்துக்கொள்வான்.

தேவா இவ்வளவு விரும்பி அதை எடுத்துக்கொண்டது மல்லிக்கு சந்தோஷமாக இருந்தது.

“ஆள் பார்க்கத்தான் இவ்ளோ ஹான்ட்சம்மாக இருக்கான்…போயும்போயும் இந்தக் கிராமத்து கிளிக்கிட்டபோய், இப்படி பொங்கிட்டு இருக்கனே” என்று கிசுகிசுப்பாக மேகாவிடம் சொல்லி விஷமமாகச் சிரித்தாள் சவீதா..

பின்பு அவன் பார்வையில் மல்லியை  மட்டந்தட்டும் பொருட்டு “பார்ட்டி” என்று அவள் எதோ கேட்க வர… அதற்குள்..

“மல்லி இதோட ரெசிபி உங்களுக்குத் தெரியுமா?” என்று அவளிடம் தேவா கேட்க… உற்சாகமாக அதை விளக்கத் தொடங்கியிருந்தாள் மல்லி…பிறகு சவிதாவிற்கு பேச வாய்ப்பே கிடைக்காமல் போனது.

வேலைகளை முடித்துக்கொண்டு வீட்டிற்குக் கிளம்பும் முன்… அனுமதி பெற்று  மணியைச் சந்திக்க அவனது கேபினுக்குள் சென்ற மல்லி… “வாழ்த்துக்கள் மணி… சார்…” என்க..

“ஹேய்… நன்றி… ஆனா .. என்ன சார் எல்லாம் பலமா இருக்கு… ” மணி கேட்க

“நீங்கதான் பெரிய ஆளாகிட்டீங்களே… அப்ப மரியாதையும் பெருசாத்தான இருக்கணும்..” என்றவள் “நீங்க ஏன் இன்றைக்கு எங்களுடன் லஞ்ச் சாப்பிட வரல?” என்று கேட்க…

“என்ன சொல்வது” என்று முதலில் யோசித்தவன்… “இல்லை வேலை நிறைய இருந்தது… அதனால்தான் சாப்பிட்டுக்கொண்டே அதையும் செய்தேன்” என்று ஒருவாறு கோர்வையாக சொல்லி முடித்தான்…  பிறகு “அன்று பார்ட்டி யிலிருந்து ஏன் சொல்லாமல் போயிட்ட?” என்று அவன் கேட்க…

அப்பொழுதுதான் அவளுக்குப் புரிந்தது, அவள் அன்று மயங்கி விழுந்தது இங்கு யாருக்குமே தெரியவில்லை என்று…

“சரி… நம்ம கம்பெனில சுமதின்னு யாரையாவது உங்களுக்குத் தெரியுமா?”  என்று மல்லி கேட்க…

“சுமதி யா? எனக்குத் தெரியலியே. யாரது?” என்றான் யோசனையுடன்…

“இல்லை சும்மாதான் கேட்டேன்… பை…” என்றுவிட்டுக் கிளம்பினாள் மல்லி…

இதற்கிடையில் சுமாயாவும் வேலையில் சேர்ந்திருந்தாள்.

அங்கே, அந்தப் புதிய மாற்றங்களுக்குப் பழகிக்கொண்டிருந்தாள் மல்லி… மணி அதன்பின் ஒருநாள் கூட அவர்களுடன் உணவருந்த வரவில்லை…

தேவாவுடன் வேலை செய்வதும்  சுலபமாகவே இருந்தது அவளுக்கு… நாட்கள் நத்தை வேகத்தில் நகர.. அவளுடைய பயிற்சி காலத்தின் ஐந்து மாதங்கள் முடிந்திருந்த நிலையில்…

ஒரு நாள் மாலை வேலை முடிந்து பேருந்தில் வந்து இறங்கி… தீபனுக்காகக் காத்திருந்தாள் மல்லி… அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் மிக மெதுவாகவே ஊர்ந்து கொண்டிருந்தது…

அங்கே சற்று தள்ளி இருந்த ரோட்டோர கடையில் ‘சாட்’ உணவுகளை நண்பர்களுடன் சேர்ந்து உண்டுகொண்டிருந்த வீரா… மல்லி தனியாக இருப்பதைக் கண்டு… “என்ன உன்னோட பாடிகார்ட் இன்னும் வரலியா?” என்றவாறே தள்ளாடியபடி அவள் அருகில் வந்து நின்றான்…

அவனிடமிருந்து வந்த மதுவின் நாற்றத்தில் அவளுக்குக் குமட்டிக்கொண்டு வர… முகம் சுளித்தவாறே அங்கிருந்து செல்ல முற்பட…

“என்னடி நான் பேசிக்கிட்டிருக்கும்போதே  நீ பாட்டுக்கு போயிட்டே இருக்க..” என்றவாறே அவளது கையை பிடிக்கவர.. அவனின்  தொடுகையிலிருந்து தப்பும் பொருட்டு.. வேகமாக நகர.. அங்கே இருந்த கல்லில் தடுக்கி… மெதுவாக நகர்ந்துகொண்டிருந்த ஒரு உயர்ரக ஆடிகாரின் மேல் மோதி நின்றாள்… அவளது முழங்கை அந்தக் காரில் நன்றாக இடித்துவிட்டது… வலி உயிர்போக வீராவை திரும்பி முறைத்தவள்… “இதோ பார்… இந்த மாதிரி எல்லாம் கலாட்டா செஞ்சா… இப்பவே போய், போலீஸ்ல கம்ப்ளைன்ட் செஞ்சிடுவேன்… ஜாக்கிரதை…” என்று சீற…

“நீ எங்க வேணா போய் சொல்லு… உன்னால ஒண்ணும் பண்ண முடியாது… நான் யாருன்னு உனக்குத் தெரியுமா?” என்று அவன் சவால் விட…

உள்ளுக்குள்ளே குளிரெடுத்தாலும், அதை வெளியில் காட்டாமல் “எல்லாம் தெரியும் நீ இந்த ஊர்த் தலைவரோட அல்லக்கைனு…” என்று அவனுக்கு பதில்கொடுத்துவட்டு… அந்த சாலையைக் கடந்து சென்றிருந்தாள் மல்லி..

அவள் சாலையை கடந்து எதிர்த்திசையில் வரவும் அங்கே தீபன் வரவும் சரியாக இருந்தது…  அவனைக் காய்ச்சி எடுக்கும் கோவத்தில்தான் இருந்தாள் மல்லி… ஆனால் சோர்ந்து களைத்த அவனது முகத்தை பார்த்ததும்… அவள் கோபம் தணிந்து போனது… அவனும் இரவுபகல் பாராமல் பரிட்சைக்குப் படித்துக்கொண்டிருக்கிறான்… அக்கறையுடன்  அவளை அழைத்துப்போக வருகிறான்… அவனிடம் அவளால்  கோபம் கொள்ள முடியவில்லை…

 

தீபன் “அக்கா உனக்கு ரோடு கிராஸ் பண்ண பயம்தானே? ஏன்கா வந்த… நான் அங்கேயே வந்திருப்பேனே” என்க…

“அங்கே ஒரு வெறி நாய் இருந்தது…” என்றவாறு வண்டியின் பின்னால் ஏறி அமர்ந்தாள்…

“நாயைப் பார்த்து ஒரு பேயே பயப்படுகிறதே… ஆச்சரியக்குறி…” என்ற தீபனின் முதுகில் இரண்டு அடியைக் கொடுத்து சீக்கிரம் வீட்டுக்குப் போடா கை முட்டியில் அடி பட்டிருக்கு… ரொம்ப வலிக்குது…” என்றவளை ஏதும் கேட்காமல் வீட்டிற்கு அழைத்து வந்தவன்… வலி நிவாரணியை எடுத்துவந்து அவள் கையில் தடவியவாறே…

“என்னாச்சு கா” என்று கேட்க.. “ஒண்ணும் இல்லடா… ரோடு கிராஸ் பண்ணும்போது ஒரு கார்ல இடித்துகொண்டேன்…” என்க…

விஜயாவும் “பார்த்து வரக்கூடாதா?” என்று பதறினார்..

***********

அடுத்தநாள் வலியுடனேயே அலுவலகம் வந்திருந்தாள் மல்லி…

மல்லியை சில டிசைன்களை பற்றிச் சொல்ல அவனது கேபினுக்கு அழைத்திருந்தான் தேவா… கை வலி காரணமாக…அவன் சொன்ன குறிப்புகளை எல்லாம்  மெதுவாக நிறுத்தி எழுதிக்கொண்டிருந்தவளை..

தேவா,. “என்னாச்சு மல்லி…கைல ஏதாவது அடிப் பட்டிருக்கா” என்றவாறே அவளது கையை பிடிக்க வர…

கையில் வைத்திருந்த நோட் பாடினால் அவனை தடுத்தவள்… “ஒண்ணுமில்லை… நாம வேலையை  மட்டும் பார்க்கலாம்”… என்று காரமாக சொல்லிவிட…

அதற்குமேல் அவன், அவளிடம்  ஏதும் கேட்கவில்லை. ஆனால் அவனுடைய அடக்கப்பட்ட கோவம் அவளுக்குப் புரிந்தது..

பிறகு அழளிடமிருந்து குறிப்புகளை பிடுங்கிதி தானே எழுதிக்கொடுத்து அனுப்பி விட்டான்.

பிறகு அவள் இடத்தில் வந்து அமர… அங்கே ஒரு வலி நிவாரணி ஸ்பிரே அவளுக்காக உட்கார்ந்திருந்தது…

அன்று மாலை மல்லிக்காகப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தான் வீரா…

அவனுடைய வலது கையில் எலும்பு முறிவிற்கான கட்டு போடப்பட்டிருந்தது…

கண்களில் அப்பட்டமான பயம் குடியேறியிருந்த்து..

அவள் பேருந்திலிருந்து இறங்கிய அடுத்த நொடி…  “மேடம் தெரியாம உங்ககிட்ட தப்பா பேசிட்டேன்… இனி நீங்க இருக்கும் திசைக்கே வரமாட்டேன்.. அதைச் சொல்லத்தான் வந்தேன்… என்ன மன்னிச்சிடுங்க…” என்றவாறு,  அங்கிருந்து ஓடியே போனான் அவன்…

அவனுக்கு என்ன ஆனது என்று கேட்க எண்ணி “ஹலோ!! எக்சிகியூஸ் மீ!!!” என்று அவனை அழைத்த மல்லியின் குரல் காற்றில் கரைந்து காணாமல் போனது.

 

 

error: Content is protected !!