உன் காதல் என் தேடல்

ei8VUJK48458-56884fc8

உன் காதல் என் தேடல்

தேடல் – 6

 

துருவ் அருகாமையில் நிலா சிலையாக சமைந்திருக்க, அவன் வாசமா இல்லை அவன் பர்ஃப்யூம் செய்த மோசமா? எதுவென்று தெரியவில்லை… ஆனால், தன் நாசி தொட்ட வாசத்தில் மங்கை அவள் மதி மயங்கி நின்றாள். ‘ஏய் நிலா நேத்து நீ எடுத்த முடிவு உனக்கு மறந்து போச்சாடி லூசே! நீ அவனை மறக்கணும். உன் லட்சியம் தான் உனக்கு முக்கியம். அதுல மட்டும் ஃபோகஸ் பண்ணு. கான்சன்ட்ரேட், கான்சன்ட்ரேட் என்று அவள் மனசாட்சி யாழினி குரலில் பேசி அவள் மண்டையில் நறுக்கென ஒரு கொட்டு வைக்க, ‘அய்யோ! ஆமா! ஆமா!’ என்று துருவ்வை விட்டு இரண்டடி பின்னால் நகர்ந்தவள். முகத்தில் தண்ணீர் பட்ட பூனைக்குட்டி போல் தலையை ஒரு சிலுப்பு சிலுப்பி நிகழ்வுலகிற்கு வந்தாள்.

 

“ஹலோ மிஸ்டர்.பாஸ்சுசுசு! எதுவா இருந்தாலும் ரெண்டு, இல்ல இல்ல ஒரு நாலடி தள்ளி நின்னு பேசு. அது என்ன பொம்பள புள்ள கிட்ட நெருங்கி நின்னு பேசுற பழக்கம்” என்று கத்தியவளை, ஏற இறங்க பார்த்த துருவ் “ஏன் மிஸ்.முகில்நிலா நா கிட்ட வந்து பேசுனா உனக்குள்ள எதுவும் ஆகுதோ? ஐ மீன் சம் கெமிக்கல் ரியாக்ஷன்”? என்று கண்ணடித்த துருவ்வை மூக்கு முட்ட முறைத்த நிலா. ‘பாவி பாவி! எப்புடி கண்ணடிக்கிறான் பாரு. இப்டி பண்ணித்தான் முன்ன என்னைக் கவுத்தான் படுபாவி. அடிக்கிற அந்தக் கண்ணை பச்சை பாம்பு புடுங்க’ என்று கருவியவள் “அதெல்லாம் ஒரு மண்ணு ரியாக்ஷனும் இல்ல. பொண்ணுங்க கிட்ட தள்ளி நின்னு பேசுறது தானே ஒலக வழக்கம். அது தான் நல்ல ஆம்பளப் புள்ளைக்கு அழகு. அதைத் தான் சொன்னேன்” என்று இதழைச் சுளித்து ஒழுங்கு காட்டிய நிலாவை நக்கலாக பார்த்த துருவ்.

 

”நா நல்லா புள்ளைன்னு உனக்கு யார்டி சொன்னது? ஐ அம் நாட் ஏ குட் பாய்” என்றவன் நிலாவை ஒரு மாதிரி பார்க்க.

 

‘இதென்ன போகப் போக பேச்சு டேக் டைவர்ஷன் எடுத்து வேற‌ எங்கயோ போகுது’ என்று நினைத்தவள், “நீங்க வவ்வால் பாய்யா இருங்க, இல்ல வேற எந்தக் கண்றாவியா வேணும்னாலும் இருந்துட்டுப் போங்க. இப்ப நம்ம மேட்டருக்கு வாங்க” என்று முகத்தை அஷ்ட கோணலாக வளைத்து நெளித்துச் சொல்ல.

 

“எது மேட்டர்க்கு வரணுமா? ஓய் என்ன பேசுறன்னு புரிஞ்சு தான் பேசுறியா நீ?”

 

“ஆமா புரிஞ்சு தான் சொல்றேன். இப்ப நீங்க சொன்னீங்களே? நா உங்களுக்கு பி.ஏவா வரணும்னு அந்த மேட்டரை விட்டுட்டு நீங்க கெமிக்கல், ஹெர்பல்னு வேற என்… என்னவோ பேசிட்டு இருக்கீங்க”? என்று கோவத்தில் புசுபுசுவென்று மூச்சுவிட,

மூச்சு விடும் போது அழகாய் சிவக்கும் அவள் கன்னத்தை ரசித்தவன், “ஓஓஓ… நீ அத சொல்றீயா?”

 

“ஆமா நீங்க வேற என்ன நெனச்சீங்க? என்ற நிலாவைக் கூர்மையாகப் பார்த்த துருவ் “ம்ம்ம்ம்ம்…. நா வேற ஏதோன்னு நெனச்சேன்” என்று சற்றுக் குழைந்த குரலில் சொல்ல, இப்போது நிலா வயிற்றில் புலியே வந்து பிரண்டு பிரண்டென்று பிரண்டியது.

 

துருவ் ஒரு நிமிடம் நிலாவை ஆழ்ந்து பார்த்தவன் “நாளையில இருந்து, நோ… இன்னையில இருந்து நீதான் எனக்குப் பி.ஏ” என்று திமிராகச் சொல்ல மீண்டும் நிலாவின் கோபம் குதித்து வெளியே வந்தது. “ஹலோ மிஸ்டர்.பாஸ்! நா என்ன நீங்க வச்ச ஆளா? நீங்க சொல்றதுக்கெல்லாம் பூம்பூம் மாடு மாதிரி தலையாட்ட? நா எதுக்கு உங்களுக்கு பி.ஏவா வேல பாக்கணும். டெல் மீ ஒன் குட் ரீசன்” என்று நிலா கொதிக்க.

 

”ஒன்னு இல்ல மிஸ்.முகில்நிலா நெறயா ரீசன் இருக்கு. அதுல ரொம்ப முக்கியமான ஒன்னு, நீங்க இந்தக் கம்பெனில எடுத்திருக்க நல்ல பேர். நேத்து ஃபுல்லா என்னோட மாமா நிலா அப்டி, நிலா இப்டின்னு உன்னையே தான் புகழ்ந்திட்டு இருந்தாரு” என்றவன் குரல் ஒரு மாதிரி இருக்க,

 

‘ஓஓஓ… சாருக்கு நம்ம மேல லைட்டா பொறாமை எட்டிப் பாக்குது போல, அதான் நம்ம கூடவே வச்சிருந்து, ஏதாவது தப்பு பண்ண வச்சு இங்கிருந்து தொறத்த ப்ளான் போட்டிருக்கான் போல இந்த டகர டப்பி. ம்ம்ம் நியாயமா இந்தப் பன்னிய நா பழிவாங்கனும். ரெண்டு வருஷம் நீதான்டி என் உயிரு உன் கழுத்துல கட்டுவேன் கயிறு. நா உனக்கு, நீ எனக்கு. நீ இல்லாம நா இல்ல பேனில்லாம தலையில்லன்னு டையலாக் எல்லாம் விட்டுட்டு அம்மாவை பாக்க வாடான்னு சொன்னதும் அந்தர் பல்டி அடிச்சி ஓடுனா நாயி, இப்ப வந்து என்னென்ன பேசுது பாரு? இதுல என்னை முன்னப்பின்ன தெரியாத மாதிரியும், பாக்காத மாதிரியுமே ஆக்டிங் வேற குடுக்குது. உன் நல்லநேரம் டா மகனே, நா உன்னை மறந்தே ஆகவேண்டிய சூழ்நிலையில இருக்கேன். அப்டி மட்டும் இல்லாம இருந்திருக்கணும், மவனே நேந்து உன்னை ஆஃபிஸ்ல பாத்த அடுத்த செகண்ட் உன் மண்ட முடியைப் புடிச்சு ஆட்டி, மண்டைய காலி கிரவுண்டாக்கி இருப்பேன். என்ன செய்ய எல்லாம் என் தலையெழுத்து. போயும் போயும் உன்ன லவ் பண்ணிட்டேன். அதுவும் உண்மையா வேற லவ் பண்ணி தொலச்சிட்டு, இப்ப கிடந்து தவிக்கிறேன்’ என்றவள் விழிகள் அவளையும் அறியாமல் கலங்கி விட, துருவ் பார்க்கும் முன் கண்களைத் துடைத்து விட்டு, “மிஸ்டர்.பாஸ் சார் நீங்க இன்னும் சரியான காரணத்தைச் சொல்லல” என்று தன் பிடியிலேயே உறுதியாக நின்றாள்.

 

“என்ன மிஸ்.முகில்நிலா இன்னுமா உங்களுக்குப் புரியல? ம்ம்ம்… ஓகே நா தெளிவாவே சொல்லிடுறேன். மாமா நேத்து உங்கள” என்று தொங்கியவன் “ம்ஹூம் உன்னை” என்று ஒருமைக்கு மாறவும் நிலா அவனை முறைத்தாள்.

 

“ஹலோ என்ன முறைக்கிற? நீ என்ன விட சின்னப் பொண்ணு தான, அப்றம் எதுக்கு இந்த வாங்க போங்க எல்லாம்? அதனால தா அப்படிச் சொன்னேன். இதுல என்ன தப்பு?”

 

”தப்பு தான் சார். இங்க நா ஒர்க் பண்றேன் அண்ட் நீங்க என்னோட பாஸ். சோ! நீங்க எனக்கும் நா உங்களுக்கும் அஃபிஷியலா மரியாதை கொடுத்துத் தான் தீரணும். இல்ல நீ என்னை விட சின்னப் பொண்ணு. நா உன்னை வா போன்னு கூப்பிடுறேன்னு அது என்னோட பழக்கம்னு சொன்னா, எனக்கும் ஒரு பழக்கம் இருக்கு. என்னை வா, போன்னு உரிமையோட கூப்புடுறவங்களை நா வாடி, போடி, வாடா போடான்னு கூப்பிடுவேன். உங்களுக்கு வசதி எப்டி மிஸ்டர்.பாஸ் சார்” என்று புருவம் உயர்த்திக் கேட்க.

 

துருவ்வுக்குத் தூக்கிவாரிப் போட்டது. ‘இது என்ன நம்ம மரியாதைக்கே இவ வேட்டு வைக்றா’ என்று நினைத்தவன், “அம்மா தாயே! அதெல்லாம் ஒன்னும் வேணாம். நா உன்” என்று தொடங்கியவன் “உங்கள இனி பேர் சொல்லியே கூப்புடுறேன்”.

 

நிலா, “ம்ம்ம்… சௌன்ட்ஸ் பெட்டர் மிஸ்டர்.பாஸ், இப்ப நீங்க காரணத்தைச் சொல்லுங்க”.

 

“ம்ம்ம்… நா இங்க எம்.டியா வந்து முதல்ல எடுத்து செய்யப் போற ப்ராஜெக்ட் நம்ம கம்பெனிக்குக் கெடச்சதே உன்னோட டிசைன்காகத் தான்னு மாமா சொன்னாரு. சோ! இந்த ப்ராஜெக்ட் முடியுற வரை நீ எனக்குப் பி.ஏவா என் கூடவே ஃபுல்லா டிராவல் பண்ணனும்னு… நீ என் கூடவே இருக்கணும்” என்றவனை அவள் மீண்டும் முறைக்க “ஐ மீன் இந்தப் பிராஜெக்ட் முடியுற வரை நீ என்னோட இருக்கணும்னு சொன்னேன்.”

 

“இதுக்கு நா முடியாதுன்னு சொன்னா நீங்க என்ன செய்வீங்க மிஸ்டர்.பாஸ்சுசு”? என்றவளை அலட்சியமாகப் பார்த்த துருவ் “வெரி சிம்பிள், நீங்க இந்தக் கம்பெனியில ஒன் இயர் காண்ட்ராக்ட் சைன் பண்ணி இருக்கீங்க. அது படி, ஹஸ் ஏ எம்.டி நா சொல்றதை நீங்க கேட்டுத் தான் ஆகணும். அதர்வைஸ் நா எடுக்குற எந்த லீகல் ஆக்ஷனுக்கும் நீங்க பதில் சொல்லணும். அதோட என் மாமா சொன்ன மாதிரி ஒர்க்ல நீங்க ஒன்னும் அவ்ளோ சின்சியர் இல்லன்னு எல்லார்க்கும் புரிஞ்சிடும்” என்று அவன் நிலாவின் ஈகோவில் கை வைக்க அது சரியாக வேலை செய்தது.

 

“நிலா தன் கையில் இருந்த ஆர்டர் பேப்பரை முழுதாக படித்துக் கூடப் பார்க்காமல் கடகடவென கையெழுத்துப் போட்டு அவன் முகத்திற்கு முன் நீட்டியவள் “எனக்கு எப்பவும் எடுத்த காரியத்தில் பின்வாங்கிப் பழக்கம் இல்ல மிஸ்டர்… இந்தப் ப்ராஜெக்ட்டும் (நா இங்க முடிக்க வந்த என்னோட ப்ராஜெக்ட்டும்) முடியும் வரை நா உங்க பி.ஏவா இங்க தான் இருப்பேன்” என்றாள் இனி நடக்கப் போவது எதுவும் அறியாமல். 

 

நிலா அங்கிருந்து நகரப் போக, “மீட் யூ இன் டுமாரோ மார்னிங் முகில்நிலா. அதோட இனிமே நீ என்னை மிஸ்டர் போட்டு எல்லாம் கூப்பிட வேண்டாம். துருவ்னு கூப்டா போதும்” என்க “சரி” என்று தலையாட்டியவள், “ஓகே துருவ் சார்” என்று விட்டுச் செல்ல “உனக்குக் கொஞ்சம் திமிரு அதிகமா தான்டி இருக்கு, அடக்குறேன். மொத்தமா ஒரு நாள் அடக்குறேன்” என்றவன்‌ அவள் கையெழுத்துப் போட்ட பேப்பரைப் பார்த்து வில்லத்தனமாகச் சிரித்தான். (நா ஒருத்தன் இங்க இருக்குறதையே மறந்துட்டீங்களே டா என்று விதி இவர்கள் இருவரையும் பார்த்து சிரித்தது.)

 

யாழினி கப்பில் இருந்த காஃபியை ஒரு சொட்டுக் கூட விடாமல் கப்பை வாயில் கவுத்து காஃபியை தொண்டையில் இறக்கிக் கொண்டிருக்க, நிலா அவளைத் தீயாக முறைத்துக் கொண்டிருந்தாள். 

 

“அடியேய் எரும! நா இங்க எவ்வளவு சிரியஸான விஷயத்தைச் சொலிட்டிருக்கேன். நீ என்னடி கடைசி சொட்டு காஃபி வரை நாக்குல நக்கிட்டு இருக்க? அந்த துருவ் கழுத இன்னைக்கு என்ன செஞ்சிது தெரியுமா”? என்றவள் நடந்த அனைத்தையும் ஒரே மூச்சில் சொல்லி முடிக்க யாழினி நாக்கால் கப்பை சுத்தமாக துடைத்தவள் “நிலா” என்றழைக்க அவள் துருவ் பற்றித் தான் ஏதோ சொல்லப் போகிறாள் என்று நினைத்து நிலா ஆர்வமாகச் “சொல்லு யாழி” என்று கேட்க, “உனக்கு நைட்டுக்கு பூரி வேணுமா? சப்பாத்தி வேணுமா?” என்று யாழினி சிரியஸாகக் கேட்க.

 

“அடியேய்! உன்ன நா இங்க மண்ட காஞ்சு போய்க் கெடக்கேன். உனக்கு நைட்டுக்கு திங்குறதப் பத்தி கவல வருதா?”

 

“பின்ன இப்போதைக்கு உருப்படியான விஷயம் இது தானா. நைட்டு திங்குறதுக்கு செய்யணும் இல்ல”? என்று யாழினி பதிலுக்கு முறைக்க,

 

“எதுடி சப்பாத்தி, பூரி தான் இப்ப முக்கியமா? நா துருவ் என்னை அவனுக்கு பி.ஏவா ஆக்கிட்டான்னு சொல்றேன். நீ இப்படி இருக்க? இந்த மேட்டர்ல டோட்டலா உன்னோட ரியாக்ஷன் இது தானா யாழி? உனக்கு என் மேல அன்பு வத்திப் போச்சா? பாசம் கெட்டுப் போச்சா?” என்று டைலாக் விட்ட நிலா முதுகில் நன்றாக கும்மாங்குத்து குத்திய யாழி 

 

“அடியேய்! எரும நல்ல யோசிச்சுப் பாரு. அவன்… சரியா எங்க அடிச்சா நீ விழுவேன்னு தெரிஞ்சு கரெக்ட்டா உன்னோட ஈகோல கை வச்சிருக்கான். நீயும் பி.ஏவா இருக்க ஓகேன்னு சட்டுன்னு சைன் பண்ணிட்டு வந்திருக்க. உன்னோட வாயை அவன் வாடகைக்கு எடுத்து அவனுக்குத் தேவையானத உன்னைப் பேசவச்சிருக்கான்டி லூசே. அது கூடவா உனக்குப் புரியல? இப்ப கூட அவன் உன்னை நல்லா தான் புரிஞ்சு வச்சிருக்கான். நீதான் இன்னும் அவன சரியா புரிஞ்சிக்கல” என்று யாழினி திட்டும் போது தான் நிலாவிற்குப் புரிந்தது. துருவ் அவள் வேலையைப் பற்றிக் குறை சொன்னால் பிடிக்காதென்ற அவள் குணத்தை வைத்து அவளையே மடக்கி விட்டான் என்று. “அடபாவி சண்டாளா என்ன வேலை பாத்துட்டடா நீ”? என்று துருவ்வை வண்டை வண்டையாகத் திட்டி தீர்த்தாள்.

 

“இப்ப புலம்பி ஒன்னும் ஆகிப்போறது இல்ல. இன்னும் என்னென்ன காத்திருக்கோ” என்று புலம்பிய யாழினி அங்கிருந்து நகர, நிலாவுக்கு நாளையில் இருந்து அவனுடன் எப்படிச் சேர்ந்திருப்பது என்ற பயம் இப்போதே அடிவயிற்றில் நண்டென பிரண்டியது. யாழினிக்கோ “துருவ் ஏன் இப்படி எல்லாம் செய்கிறான்” என்ற எண்ணம் உள்ளுக்குள் அவளை வண்டாக குடைந்து கொண்டு இருந்தது. நிலாவை தெரியாதது போல் நடிக்கும் அவன்… ஏன்? அவளைத் தன்னருகில் வைத்து கொள்ள நினைக்கிறான் என்று அவளுக்குப் புரியவில்லை. மொத்ததில் தோழிகள் இருவரையும் குழப்பி விட்டு அங்கு துருவ் நிலாவுக்குப் பெரிய ஆப்பாகச் சீவி வைத்திருந்தான்.

 

மறுநாள் ஆஃபிஸ் வந்த நிலா “ஏன்டா? என்னடா நடக்குது இங்க? எனக்குன்னே தனியா ரூம் போட்டு ஐடியா யோசிப்பியாடா நீயி” என்று தலையில் கைவைத்து அமர்ந்து விட்டாள்.

 

Leave a Reply

error: Content is protected !!