சூரியநிலவு 15
சூரியநிலவு 15
அத்தியாயம் 15
இதுவரை நடந்ததை யோசிப்பதை விட, இனி எப்படி நடக்க வேண்டும், என யோசிப்பவர்கள் வாழ தெரிந்தவர்கள். இதை வெற்றி பின்பற்றி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
கடனே என சுற்றித்திரிந்த, வெற்றியை பார்த்து அனைவரும் வேதனையுடன் நாட்களை கடத்தினர். அவன் முகத்தில் ஒட்டவைத்த சிரிப்பு இருந்தாலும், பெரியோர்களுக்கு அது போதவில்லை. அவனின் உயிர்ப்பான முகத்தை, காண அனைவரும் ஏங்கியிருந்தனர்.
அதை அறிந்திருந்த ஓவியா அவனுடன் பேச முடிவெடுத்தாள்.
ஒரு அழகான காலைப்பொழுதில், வெற்றி தங்கள் கடைக்கு கிளம்பி கொண்டிருந்தான். ஓவியா ‘இன்று அவனிடம் பேசிவிட வேண்டும்’ என்ற முடிவோடு அவன் முன் நின்றாள்.
வெற்றியின்,’என்ன?’ என்ற கேள்வி, தாங்கிய பார்வையை தொடர்ந்து,“ஏன் வெற்றி இப்படி இருக்கீங்க?” என்றாள் ஆதங்கத்துடன்.
“எனக்கு என்ன? நல்லா தான் இருக்கேன்” என்றான் அசட்டையாக.
“நீங்க முன்ன மாதிரி இல்லை”
“ஏன் இரண்டு கண்ணு, காது, மூக்கு, வாய் எல்லாம் அப்படியே தான இருக்கு? இதுல ஏதாவது மாறிடுச்சா?” என புருவம் உயர்த்தினான்.
“ம் அதுலாம் அப்படியே தானிருக்கு. உங்க சந்தோசம் தான் மிஸ்ஸிங்” இதை கேட்கவும் அவன் முகம் இறுகியது.
“சந்தோசமா! அதை தான் ஒருத்தி எடுத்துட்டு போய்ட்டாளே” அவன் சொன்னது, தன்னை அவமானப்படுத்தி சென்றுவிட்டாள், அதிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கிறேன் என்று, ஓவியா புரிந்து கொண்டதோ மதுவை மறக்க முடியவில்லையென.
“உங்களால் மதுவை மறக்க முடியலையா?” என்றாள் உடைந்த குரலில். ‘நான் என்ன சொன்னா, இவ என்ன புரிந்துகொள்கிறாள்?’ என பல்லை கடித்தான்.
“அப்படி இல்ல அம்மு” என சமாதானம் செய்ய வந்தான். ஒருவேளை அவனை பேசவிட்டிருந்தால் வார்த்தைகள் தடித்திருக்காது.
வெற்றி ஓவியாவின் பேச்சு, கொஞ்சம் கொஞ்சமாக பனிப்போராக மாறிக்கொண்டிருந்தது.
“எதுக்கு என்னை கல்யாணம் பண்ணுனீங்க? ஆசை பட்டா கட்டிக்கிட்டிங்க? இல்லைல, மாமா சொன்னதால தான கட்டிக்கிட்டிங்க. அப்படியே அவ நினைப்புல, சாமியாரா போய் இருக்க வேண்டியதுதான” என வார்த்தைகளை விட்டாள்.
தன் கணவன்! வேற ஒரு பெண்ணை, அவன் மனதில் நினைத்திருந்தால், எந்த பெண்ணால் அதை ஏற்றுக்கொள்ள முடியும். ‘இதே நிலையில் ஒரு காலத்தில் மதுநிலா இருந்தாள்’ என புரியாதது காலத்தின் கொடுமை.
‘ஏற்கனவே அவள் வாழ்க்கையை கெடுத்துவிட்டேனோ?’ என மருகி கொண்டிருப்பவனிடம், இந்த வார்த்தைகளை கூறினாள். அதன் எதிரொலி பயங்கரமாக தானிருக்கும். அதை சந்தித்துதான் ஆகவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.
“ஆமா உன்னை கல்யாணம் செய்து பெரிய தப்பு பண்ணிட்டேன். சீக்கரம் இதுல இருந்து விடுதலை தரேன். உனக்கு பிடிச்சமாதிரி வாழ்க்கையை அமைச்சுக்கோ” என கத்திவிட்டான். இவனாவது அமைதியாக இருந்திருக்கலாம், விதி யாரைவிட்டது. மறைமுகமாக விவாகரத்து தருகிறேன் என கூறிவிட்டான்.
நாம் சோகமாகவோ, கோபமாகவோ, நிலையான மனதில் இல்லாமலோ இருக்கும்போது, தேவையற்ற வார்த்தைகளை தவிர்க்க வேண்டும். இல்லை என்றால் வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்தே ஆகவேண்டும்.
இருவரின் வார்த்தைகளும் தவறாகிவிட்டன. இனி மனதின் கசப்புகளை சந்தித்துத்தானாக வேண்டும்.
இருவரிடமும் மீண்டும் இடைவெளி வந்துவிட்டது. முன்னை காட்டிலும் அதிக ஒதுக்கம் காட்டினர். பெற்றோர்கள் ‘இவர்களை எப்படி ஒன்று சேர்ப்பது’ என தெரியாமல் விழிபிதுங்கி நின்றனர்.
அந்த பழியையும் ஏற்க இருக்கிறாளே ஒரு அபலை பெண், அதுவும் மதுவின் மீதுதான் வந்தது.
“அவ மட்டும் ஓடி போகாம இருந்திருந்தால், வெற்றியை கல்யாணம் பண்ணியிருப்பா. ஓவியா நிம்மதியா இருந்திருப்பாள்.”
இப்போதும் ஓவியாவின் நிம்மதியை, பார்க்கும் பெற்றோர். மதுவிற்கு நிம்மதியும் சந்தோசமும் வெற்றியிடமிருந்து கிடைத்திருக்குமா? என சிந்திக்கவில்லை.
இங்கே குடும்பமாக இருந்த வீடு தனி மனிதர்களானது.
தனிமையை துணையாக கொண்ட மனிதர்கள், குடும்பமாகும் அதிசயம் அடுத்த ஒரு மாதத்தில் அரங்கேறியது.
*************************
சென்னை விமான நிலையம்! பயணிகளின் போக்குவரத்தால் பரபரப்பாக காணப்பட்டது. ஒரு பக்கம் வெளியூர் செல்லும் பயணிகள், தங்கள் உறவினர்களிடம் பிரியாவிடை பெற்றுக்கொண்டிருந்தார்கள்.
மறு பக்கம் சென்னையை நோக்கி வரும் பயணிகளுக்காக, உறவினர்கள் காத்துக்கொண்டிருந்தார்கள். நல விசாரிப்புகளுடன் சந்தோஷ ஆரவாரம் ஒரு புறம் நடந்துகொண்டிருந்தது.
இது அனைத்தையும் ஆர்வமின்றி பார்த்துக்கொண்டிருந்தான் ஆகாஷ். அவனருகில் அமர்ந்திருந்த மேகவர்ஷினி, பதற்றத்தில் கைவிரல் நகத்தை கடித்தவாறே பயணிகளின் வருகை நுழைவாயிலிலேயே, தன் பார்வையை பதித்திருந்தாள்.
மதுநிலா! லண்டன் சென்று ஒன்பது மாதங்கள் கடந்திருந்தது. அவ்வளவு மனவேதனையோடு, சென்ற தன் தோழியின் வருகைக்காக காத்திருந்தாள்.
“வீட்டில் வந்து நிலாவை பார்த்துக்கொள்.” என ஆகாஷ், சொல்லியும் அடம்பிடித்து அவனுடன் வந்திருந்தாள். அதனால் அவன் அவளை முறைத்திருந்தான். அதையும் அவள் கண்டுகொள்ளவில்லை.
‘அடங்காப்பிடாரி! சொல் பேச்சு கேட்கறதில்லை’ என மனதில் திட்டி தீர்த்துவிட்டான். பின்னே நேரில் திட்டி, யார் அவளிடம் வாங்கிக்கட்டிக்கொள்வது, என்ற நல்ல எண்ணம் தான் வேற ஒன்றுமில்லை.
மேகவர்ஷினியின் பொறுமையை அதிகம் சோதிக்காமல், மதுநிலா வந்த விமானம், சென்னையில் தன் பயணத்தை முடித்துக்கொண்டு, பயணிகளை வெளியே உதிர்த்தது.
செக் அவுட் சம்பிரதாயங்களை முடித்துக்கொண்டு, வெளியே வந்தாள் பிரதாப்பின் நிலா பேபி, அவன் கரம் கோர்த்து.
மதுவை பார்த்த மேகா, இருக்குமிடம் மறந்து ஓடிச்சென்று அவளை அணைத்திருந்தாள். அதை பார்த்திருந்த இரு ஆண்கள் காதிலும், புகை வராத குறை.
“போதும், போதும் உன் பாசத்தை கொஞ்சம் அடக்கியே காமி. இது ஏர்போர்ட்” என இவர்களுக்கு மட்டும் கேட்கும் குரலில் எரிந்துவிழுந்தான் ஆகாஷ்.
“எதுக்கு, இல்ல எதுக்குன்னு கேட்கறேன், நான் ஏன் அடக்கி வாசிக்கனும்? இது என் மது செல்லம். நான் அப்படித்தான் கொஞ்சுவேன் என்ன பண்ணுவீங்க?” என அகாஷிடம் பொங்கிவிட்டாள்.
“இவகிட்ட பேசினேன் பார். என்னை சொல்லணும். நீ வா டார்லிங் நம்ம போகலாம்” என ஆகாஷ், மதுவின் கரம் பற்ற வர,
அதை தடுத்த பிரதாப் “எங்களுக்கும் கூட்டிட்டு வர தெரியும். நீ பேசாம போ” என கூறி, சைகையால் வாயிலை நோக்கி கையை காட்டினான்.
“இவனை என்ன தான் பண்ணுறதோ?” என தலையில் அடித்த ஆகாஷ்,”டார்லிங்! இங்க எதிரி படை ஜாஸ்தியாகிருச்சு. நம்மை பிரிக்க சதி நடக்குது. அதுல நம்ம சிக்கிடவேகூடாது. அப்பறம் யாருக்கும் தெரியாம நாம தனியா மீட் பண்ணலாம்.” என மதுவின் கன்னத்தை தட்டிவிட்டு, வாகனம் நிறுத்துமிடம் சென்று விட்டான்.
“என்னமோ லவர் கிட்ட பேசுற மாதிரியே பேசறானே ஆண்டவா” என மேகா கோபத்துடனும், மது புன்னகையுடனும் பிரதாப் கொலைவெறியுடனும் அவனை பின்தொடர்ந்தனர், மீண்டும் ஒரு தரமான சம்பவத்தை நடத்த.
வாகனத்தின் பின்னிருக்கையில் நிலாவை அமரவைத்த பிரதாப், அவளருகே ஏறவந்த மேகாவை தடுத்து,”நான் இருக்கறவரை என்னோட நிலாகிட்ட, யாருக்கும் அனுமதியில்லை. நீ போய் முன்னாடி ஏறு” என முன்னிருக்கைக்கு அவளை விரட்டிவிட்டான்.
“ஹய்யோ சாமி! உங்களோட அக்கப்போர் தாங்கமுடியலடா. நான் பொண்ணு, என்னைக்கூடவா அவ கிட்ட விடமாட்டிங்க” என புலம்பமட்டும் தான் முடிந்தது. புலம்பலோடு நிலாவை பார்க்க, அவள் குறும்போடு கண்சிமிட்டி இவளை வெறுப்பேற்றினாள்.
“நீ என் கிட்ட தான் வரனும். மனசுல வச்சுக்க” என நிலாவிற்கு ஒரு எச்சரிக்கையை விடுத்தவள், முன்னிருக்கையிலேறி ஆகாஷின் அருகே அமர்ந்தாள்.
வாகனம் ஈ சி ஆர் பங்களாவை நோக்கி சென்றது. அங்கே கண்ணா இவர்களுக்காக ஆவலாக காத்திருந்தார். வாகனம் வந்து நிற்கவும்,”பார்வதி அவங்க வந்துட்டாங்க. சீக்கரம் வாங்க” என குரல் கொடுத்தார்.
வீட்டினுள்ளிருந்து ஐம்பது வயதை, கடந்த பெண்மணி ஆரத்தி தட்டுடன் வந்தார்.
பெண்கள் இல்லாத வீட்டில், மதுவிற்கு துணையாக பார்வதி அம்மாவை சேர்த்துள்ளனர்.
“சேர்ந்து நில்லுங்க ஆரத்தி எடுக்க” என சொல்ல, நிலாவின் இருபுறமும் ஆண்கள் நின்றுகொள்ள, மேகா ஒதுங்கி நின்றாள்.
அவளை பார்த்த கண்ணா,”நீயும் வாடா. இவங்க கூட சேர்ந்து நில்லு”
அவள் வர தயங்கினாள்,”நீயும் எங்கள் வீட்டில் ஒருத்திதான். வா” என நிலாவின் மனமறிந்து, அழைப்பு விடுத்தான் பிரதாப். கண்கலங்க அவளும் அவர்களுடன் இணைந்தாள்.
கவித்துவமான காட்சி அங்கே அரங்கேறியது.
******************
“கண்ணா மாமா” என ஓடிய நிலா, கண்ணாவின் கால்களில் பணிந்தாள், ஆசீர்வாதம் வாங்க.”நல்லா இரு பாப்பா” என மனநிறைவோடு ஆசிர்வதித்தார் கண்ணா.
நிலா பார்வதி அம்மா கால்களிலும் விழுக பதறிவிலகினார் அவர்.
“ஏன் மா என்னை ஆசிர்வதிக்க மாட்டிங்களா?” என சோகமாக வினவ. அதில் உருகிய அவர்,
“நல்லா இரு தாயி. பூர்ண ஆயிசோடு, உன் வாழ்வில் எல்லா மகிழ்ச்சியும் நிலைச்சு நிற்கட்டும்” என அவள் நெற்றியில் இதழொற்றினார்.
மேகா நமட்டு சிரிப்போடு ஆண்களை நோக்கினாள். அவள் பார்வை,‘அட்லீஸ்ட் நான் கட்டித்தான் பிடுச்சேன். இவர் முத்தமே கொடுத்துவிட்டார். இப்ப என்ன பண்ணுவ?” என கேள்வி கேட்டது.
ஆண்கள் கொலைவெறியுடன் இவர்கள் மூவரையும் முறைத்து நின்றனர்.
“சரி போய் ரெஸ்ட் எடுங்கள்” என கண்ணா, அவர்களை அனுப்பினார்.
நிலா அன்று தங்கியிருந்த அறைக்கு, மேகாவை அழைத்து சென்றாள்.
“மேகா எனக்கு ஒரு உதவி பண்ணுவியா?”
“என்ன மது உதவி அது இதுனு என்ன பண்ணனும் சொல்லு”
“இனி நீ இங்க தான் தங்கப்போற” என குண்டை போட்டாள் பெண்.
“என்ன நீ பைத்தியம் மாதிரி பேசுற. நான் எப்படி இங்க இருக்க முடியும்?”
“அஷ்” என குரல் கொடுத்த அடுத்த நிமிடம் அங்கிருந்தான்.
“மேகா இனி இங்க இருப்பா. உங்களுக்கு சம்மதமா”
“இது உன்னோட வீடு. எங்க கிட்ட கேட்க வேண்டாம். நீ என்ன முடிவு செய்தாலும் எங்களுக்கு சம்மதம்” ஆகாஷ்.
“பக்கத்து ரூமை சுத்தம் பண்ண சொல்லுறேன். அங்க மேகா இருக்கட்டும்” பிரதாப்.
“அஷ் நீ மேகாவை கூட்டிட்டு போய், ஹாஸ்டல் ரூமை காலிபண்ணிட்டு வா” என அனுப்பினாள்.
அன்று முதல் மது உடன் மேகாவும் ஏ எஸ் என் பங்களாவில் குடியேறினாள்.
தனிமையைத் துணையாகக் கொண்ட, அன்பிற்காக ஏங்கிய ஆறு நபர்கள், ஒரே கூரையின் கீழ் அழகான ஒரு குடும்பமாகினர்.
இந்த அழகான கூட்டிலிருந்து மதுவை பிரித்து, தன்னுடன் அழைத்து செல்ல, சூர்யா திட்டம் வகுத்துக்கொண்டிருக்கிறான்.
சூர்ய ஒளியில், இந்த அழகான கூடு எரிந்து சாம்பலாகுமா? இல்லை
சூர்ய ஒளியின் சக்தியை, தன்னிடம் ஈர்த்து வலு சேர்க்குமா?
****************
“மது சென்னை திரும்பிவிட்டாள்” என்று துப்பறியும் நிறுவனத்திடம் இருந்து சூர்யாவுக்கு தகவல் கிடைத்தது.
மதுவை எப்படி தொடர்பு கொள்வது என தெரியாமல் சிந்தித்திருந்தான்.
மாலில் வைத்து ‘அவனது எண்ணை அவளிடம் கொடுத்தானே’ தவிர, ‘அவளது எண்ணை வாங்க தவறியிருந்தான்.’
“என்னோட நம்பரை கொடுத்தேனே. அவ நம்பரை வாங்கினேனா? சூர்யா நீ சரியான முட்டாள். அவளை பார்த்தா இப்படித்தான் உலகத்தையே மறப்பாயா?” தன்னைத்தானே திட்டித்தீர்த்தான்.
“இப்ப எப்படி நிலாவோட நம்பர் வாங்குறது? இந்த மேகாவ கேட்ட சொல்லமாட்டா, சரியான வீம்பு புடிச்சவ. அந்த தடி பசங்க வேற கூடவே இருப்பானுங்க. எப்படி நிலாவை பிடிக்கிறது?”
சிந்தித்து கொண்டிருந்தவன் மனதில் ஒரு முகம் தோன்றியது. முகம் பிரகாசமாக அந்த நபரை தொடர்பு கொண்டான்.
“ஹே டியர் எப்படி இருக்க?”
“……….” என பதில் வர,
“எனக்கு என்ன நல்லா தான் இருக்கேன். பிசினஸ் நல்லா போகுது” என்றான்.
“……….” என மறுபக்கம் கேள்வி கேட்க,
“எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?” என்றான்.
என்ன என்று கேட்டிருக்க வேண்டும்
“உன்னால் ஏ எஸ் என் பங்களாக்கு, உள்ள போக முடியுமா?”
என்ன பதில் சொல்லப்பட்டதோ
“ரொம்ப நல்லதா போச்சு. என்னோட நிலா, அங்க தான் இருக்கா. எனக்கு அவ வேணும். நீ போயிட்டு அவ நம்பர் வாங்கி எனக்கு அனுப்பு.”
சிறிது மௌனத்திற்கு பின் பதில் வந்தது.
“கண்டிப்பா டியர். உனக்கு இல்லாததா. நிச்சயம் மீட் பண்ணலாம். பை டியர்” என தொலைப்பேசியை அணைத்தான்.
“நிலா குட்டி! சீக்கரம் உன்னை பார்க்க வரேன். இனியும் என்னால் பொறுமையா இருக்க முடியாது. லெட்ஸ் பினிஷ் இட் சூன்(Lets finish it soon).
நிலாவுடன் கனவில் டூயட் பாட சென்றுவிட்டான்.
********************
மது இந்தியா திரும்பிய தகவலறிந்து, வெற்றி சென்னைக்கு கிளம்பியிருந்தான்.
‘மதுவின் நிலை என்ன?’ என்பதை அறிந்த பிறகு வீட்டில் சொல்லிக் கொள்ளலாம், என குடும்பத்தில் யாரிடமும் மது வந்ததை தெரிவிக்காமல், “நண்பனை சந்திக்க” என கூறி கிளம்பியிருந்தான்.
சூர்யாவை போல் அவனுக்கு தடைகள் இல்லை. தன் உறவினள் என்பதே போதுமானது அவளை நேரில் சந்திக்க.
கருண்னின் சகோதரியை தொடர்பு கொண்டு, ஆகாஷ் இல்லை பிரதாப் எங்கே இருப்பார்கள் என கேட்டான்.
‘பிரதாப் ரிசார்ட் வரவில்லை என்றும் ஆகாஷ் மட்டும் இருப்பதை’ தெரிந்துகொண்டு, அவன் அலுவலகத்தை அடைந்தான். அனுமதி பெறாமலே ஆகாஷின் அறைக்குள் நுழைந்தான் வெற்றிச்செல்வன்.
“யாருடா இது? கதவை தட்டுற மேனர்ஸ் கூட இல்லாம நுழையறது” என்று எரிச்சலில் நிமிர்ந்த ஆகாஷ், நிச்சயம் அவனின் எதிரி வெற்றியை எதிர் பார்க்கவில்லை.
“ஹே மேன் நீ வெற்றித்தான இங்க என்ன பண்ணுற? நம்ம மீட் பண்ணி ஏழு வருஷம் இருக்குமா? எப்படி இருக்க? வா வந்து உக்காரு.” என ஆகாஷ் வெற்றியை வரவேற்றான்.
கோபத்தில் வந்திருந்த வெற்றியோ,”எங்கட அவளை? எப்படி இருக்கா?”
ஒன்றும்புரியாத ஆகாஷ்,”யாரை கேட்கற?” என்றான்
“ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்காத. என்னோட கல்யாணத்தை நிறுத்தி, என்னோட மதுவை கூட்டிட்டு வந்தியே. என் மது எங்கடா” என்றான் மிகுந்த கோபத்துடன்.
வெற்றி என் மது என்றது கோபத்தை குடுத்தாலும். அவன் வார்த்தைகள் சொன்ன செய்தி, ஆகாஷிற்கு சிரிப்பை வரவைத்தது. வயிற்றை பிடித்து கொண்டு, விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டான்.
“இப்ப இங்க என்ன காமெடி நடக்குதுன்னு சிரிக்கிற?” என்றான் வெற்றி எரிச்சலுடன்.
“நிலாவை கூட்டிட்டு போகும் போது, எந்த ஜீவனோட வாழ்க்கை, இதுல பாதிக்க பட போகுதுனு பயந்தேன். அது நீதானு தெரியவும் சிரிப்பு வந்திருச்சு.” ஆகாஷ் சொல்லி முடிக்கவும், வெற்றி அவனை அடிக்க பாய்ந்தான்.
“கூல் மேன்! சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். ஒரு அஞ்சு நிமிசம் வெயிட் பண்ணு போகலாம்”
என்னடா இவங்க, ஏற்கனவே தெரிஞ்ச மாதிரி பேசுறாங்கனு பார்க்கறீங்களா?
ஆம் ஆகாஷ், பிரதாப், வெற்றி சென்னையில் ஒன்றாக படித்த நண்பர்கள், அப்படி சொல்லத்தான் ஆசை, ஆனால் உண்மையில் அவர்கள் எதிரிகள்.
எதிலும் எப்போதும் போட்டி.
அது அவர்களறியாமல், திருமணம் வரை வந்துவிட்டது.
‘மதுநிலா யாருடன் மண்டபத்திலிருந்து சென்றாள்’ என்ற உண்மையை, சொல்லாமல் மறைத்த அந்த ஜீவன் யாரென்று, இப்போது தெரிந்து கொண்டீர்களா?
யாருடைய யூகமும் வெற்றியை நோக்கி திரும்பவில்லை, அதனால் அனைவருக்கும் பூஜ்யம் மதிப்பெண்.
Mee escape