ஆழியின் ஆதவன் 20

ஆழியின் ஆதவன் 20

அத்தியாயம் 20

 

மறுநாள் காலையிலேயே சைத்ராவை பார்க்க நிலாவை தூக்கிக்கொண்டு வந்துவிட்டாள் ஆழி.

 

நிலாவை பார்த்த அடுத்த நிமிடம் முகம் மலர ஓடி வந்த சைத்ரா, “ஏய்‌ நிலா பாப்பா என்னைப் பாக்க நீங்களே வந்துட்டீங்களா, வாங்க வாங்க” என்று கையை நீட்ட, நிலா ஆழியிடம் இருந்து சைத்ராவிடம் தாவினாள்.

 

“இங்க பாரு மீரா இவளா, என்கிட்ட இருக்கும்போது அவங்க அப்பா கூப்ட கூடப் போகமாட்டா. ஆனா, இப்ப இவ கூப்டது உடனே ஓடிட்ட பாரேன்” என்ற ஆழி குரலில் லேசாகப் பொறாமை எட்டிப்பார்த்தது.

 

“என்ன ஆழி மேடம் உங்க பேச்சுல பொறாமை வாசம் காத்தோட கலந்து வீசுது” என்று சிரித்த சைத்ராவை செல்லமாக முறைத்தாள் ஆழி.

 

“பொறாமையும் இல்ல வெறும் ஆமையும் இல்ல..‌. கொடைக்கானல்ல நீ அவகூட விளையாட்டிட்டு இருந்த ஞாபகம். அதான் நீ கூப்டது வந்துட்டா… மத்தபடி அவளுக்கு அவங்க அப்பாவை விட என்னைத் தான் புடிக்கும்” என்று வீம்பாக நின்றவளை பார்த்து சிரித்த சைத்ரா,

 

“பாருடா பாப்பா உங்கம்மா கீழ விழுந்தாலும் மீசைல டஸ்ட் ஒட்டலன்னு சீன் போடுற” என்றபடி ஆழி முகம் பார்க்க, ஆழி முகம் சடுதியில் வாடிவிட்டது.

 

“ஏய் சாரி ஆழி, நான் ஒரு ஃப்லோல அம்மான்னு சொல்லிட்டேன்… சாரி சாரி” என்று சைத்ரா கெஞ்ச, சாரியாக அந்த நேரம் குழந்தையும் “சதிம்மா சதி” என்று தன் மழலை மொழியில் ஆழியை அம்மா என்று அழைக்க, ஆழிக்குக் கண்கள் கலங்கி விட்டது.

 

“அய்யோ நிலா பாப்பா, இந்த ஆழி பொண்ணு சரியான அழுமூச்சு பொண்ணு ஆகிட்ட, இவ நமக்கு வேணாம். வா நம்ம உள்ள போய் விளையாடாலாம்” என்று துள்ளிக்குதித்தபடி நிலாவைத் தூக்கிக்கொண்டு சைத்ரா சொல்ல, சைத்ரா இயல்புக்கு திரும்பியதை பார்த்து மீரா, ஆழி இருவருக்கும் நிம்மதியாக இருந்தது.

 

“ஆழி உன்கிட்ட முக்கியமான ஒரு விஷயம் பேசணும்”

 

“சொல்லு மீரா… என்ன அந்த யுவ்ராஜ் பத்தி எதுவும் புது மேட்டர் தெரிஞ்சித?”

 

“இல்ல ஆழி. அவன் பிஸ்னஸ் டூர்காக ஃபாரின் போயிருக்கான், திரும்பி இந்தியா வர, எப்படியும் பத்து நாள் மேல ஆகும். இது அவனைப் பத்தி இல்ல, வேற‌ மேட்டர்…”

 

“ம்ம்ம் அப்ப இன்னும் பத்து நாள் தான் அவனுக்கு வேலிடிட்டினு சொல்லு… சரி வேற என்ன விஷயம் மீரா?”

 

“முகில் உன்கிட்ட எதாவது பேசினாரா?”

 

“ம்ம்ம் ஆமா மீரா. காலையில கால் பண்ணாரு, அப்ப பாத்து பாப்பா அழுத, நான் அப்பறம் பேசுறேன் ஃபோனை வச்சிட்டேன். ஏன் அவர் எதுவும் சொன்னாரா?”

 

“ம்ம்ம் ஆமா ஆழி… நேத்து நீ போனதுக்கு அப்புறம் அவர் என்கிட்ட பேசினாரு” என்று தொடங்கி நேற்று நடந்த அனைத்தையும் கொட்டி முடித்தாள் மீரா.

 

ஆழி கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவள், “முகில் மாதிரி ஒருத்தர் கிடைச்ச நம்ம சைத்து ரொம்ப லக்கி தான். ரொம்பப் பாசமான கேரக்டர். விஷ்ணுவும் நல்ல டைப் தான். பட் கோவம் கொஞ்சம் அதிகம் வரும் போல.”

 

“அப்ப நீ என்ன சொல்ற ஆழி… உனக்கு ஓகேவா?”

 

“இதுல நான் சொல்ல ஒன்னு இல்ல மீரா‌. இது உங்க லைஃப். நீங்க தான் முடிவு செய்யணும். லைஃப் பாட்னர் செலக்ட் பண்றது ஒரு பொண்ணோட தனிப்பட்ட உரிமை. இதுல நீயும் சைத்தும் தான் முடிவெடுக்கணும். என்னைப் பொருத்தவரை முகிலும் விஷ்ணுவும் தீ பெஸ்ட் சாய்ஸ்” எனும் போது சைத்ராவும் நிலாவுக்குச் சிரிக்கும் சத்தம் அந்த வீடு முழுவதும் கேக்க,

 

“நீ பாப்பாவை இங்க கூட்டிட்டு வந்தது நல்லத போச்சு ஆழி. பாரேன் நிலாவை பாத்ததும் அவ முகத்துல எவ்ளோ சந்தோஷம்னு.”

 

“கரெக்ட் மீரா… நிலா பாப்பாகிட்ட ஏதோ மேஜிக் இருக்கு. எப்பவும் அவகூட இருக்க எல்லாரும் சந்தோஷமா இருப்பாங்க… நான் கிளம்பும்போது ஆதவ் தான், நிலாவை பாத்தா சைத்துவுக்குச் சந்தோஷமா இருக்கும். நீ இவளையும் தூக்கிட்டு போன்னு சொன்னாரு. அது சரியா இருக்க. கொஞ்ச நாள் பழக்கமா இருந்தாலும் ஆதவ்க்கு சைத்து மேல எவ்ளோ அக்கறை இல்ல” என்ற ஆழி முன் சூடான காஃபியை வைத்தாள் மீரா.

 

“சரி முகில், விஷ்ணு பத்தி சொல்லிட்ட, அப்ப ஆதவ்?” என்று மீரா கேட்ட கேள்வியில் குழப்பமாக மீராவை பார்த்தாள் ஆழி.

 

 

“ஆதவ்க்கு என்ன? இதுல அவர் எங்க இருந்து வந்தாரு?”

 

“வந்தாரா… முதல்ல இதை ஆரம்பிச்சதே உன் ஆளு தான்” என்றதும் அழிக்குக் கோபம் வந்து விட,

 

 

“வாட் நான்சென்ஸ் மீரா? என்னோட ஆளா…‌ என் பேச்சு இது” என்ற ஆழி மீரா கொடுத்த காஃபியை ஒரு வாய் குடிக்க,

 

“நான் சென்ஸோட தான் பேசுறேன். ஆதவ் சார் உன்னை லவ் பண்றாரு” என்றவள் நேற்று விஷ்ணு அவளிடம் ஆதவ் சொன்னதாகச் சொன்ன அனைத்தையும் ஒப்பிக்க, ஆழிக்கு காஃபியோடு மீரா சொன்ன தகவலும் தொண்டை தாண்டி உள்ளே சொல்லாமல் சிக்கிக்கொண்டது.

 

“ஏன் ஆழி கொஞ்ச நாள் பழகுனா சைத்துவையே இவ்ளோ புரிஞ்சு வச்சிருக்க ஆதவ்க்கு, இவ்ளோ நாளா கூடவே இருக்க உன் மனசு‌ புரியாம‌ இருக்கும்னு நீ நினைக்குறீயா, ஐ மீன் உன் மனசுல அவர் தான் இருக்காருன்னு‌ அவருக்குத் தெரியாமய இருக்கும்…”

 

“மீரா ப்ளீஸ் இத பத்தி நம்ம ஏற்கனவே பேசிட்டோம். என் மனசுல அவர் இல்ல, அவர் மட்டும் இல்ல அங்க யாரும் இல்ல… இன்ஃபக்ட் எனக்கு மனசுன்னு ஒன்னு இல்லவே இல்ல. அது எப்பவோ செத்து போச்சு”

 

“ம்ம்ம் அப்டியா ஆழி… உன்‌ மனசு செத்து போச்சு சரி… ஆனா, செத்த அந்த மனசுக்கு நிலாவையும் ஆதவ் சாரையும் பாக்கும்போது மட்டும் உயிர் வந்து வந்து போகுது போல…”

 

“ப்ளீஸ் மீரா… இந்த டப்பிக் வேணாம். நான் என் முடிவை ஏற்கெனவே சொல்லிட்டேன். இனிமே அதைப் பத்தி பேச ஒன்னும்‌ இல்ல”

 

“அப்கோர்ஸ் அழி‌… நீ உன் முடிவை ஏற்கனவே சொல்லிட்ட தான். பட், அது ஆதவ்வும் நிலாவும் உன் வாழ்க்கையில் வர்ரதுக்கு முன்னாடி…”

 

“சோ வாட்… அவங்க வந்தனால மட்டும் என் முடிவு‌ மாறிடாது”

 

“அது எனக்கும் தெரியும் ஆழி. ஆனா, நான் இப்ப கேக்குறது நீ எடுத்த முடிவையே, உன்னோட பதிலையே இல்ல… நான் தெரிஞ்சிக்க நினைக்குறது உண்மையை…” என்று ஆழியைக் கூர்மையாகப் பார்த்தவள்,

 

“அது நீ நிலா பாப்பாக்கு அம்மாவ இருக்க ஆசைப்படும் உண்மை, வெண்மதி அம்மாக்கு மருமகளா இருக்க நினைக்கும் உண்மை… மிஸ்டர். ஆதவேஷ்வரனுக்கு மனைவிய, மிஸஸ். ஆழினி ஆதவேஷ்வரன, அவர் பொண்டாட்டிய காலம் முழுக்க அவர் கூட இருக்க ஆசைப்படும் உண்மையை” என்று அழுத்தமாகச் சொல்ல,

 

மீராவின் வார்த்தையில் இருந்த உண்மை ஆழியின் உள்ளதை சுட, கண்களை இறுக்கி மூடிக் கொண்டாள்.

 

மீரா ஆழியைத் தோளோட அனைத்துக்கொண்டவள், “எங்களைத் தவிர உன்கிட்ட இதைப் பத்தி பேசா யாருக்கும் உரிமை இல்ல. எங்க ரெண்டு பேரால மட்டும் தான் இதையெல்லாம் உன்கிட்ட கேக்க முடியும். அதான் கேட்டேன். ஆதவ் பத்தி யோசி பாரு ஆழி…”

 

“இல்ல மீரா இது நடக்காது. விட்டுடு, எனக்கு உங்க ரெண்டு பேர் தவிர வேற யாரும் தேவையில்ல”

 

“பொய் சொல்லாத ஆழி. நான் நேத்துப் பாத்தேன். நீ ஆதவ் தோள்ல சாஞ்சு அழுததை. உனக்குக் கஷ்டம்னு ஒன்னு வரும்போது உன் மனசு உன்னையும் அறியாமல் அவரைத் தான் தேடுது, முதல்ல அதை நீ புரிஞ்சுக்க, அவர்கிட்ட நீ நீயா இருக்க, அது உனக்குப் புரியாத இல்லயா?” என்று சற்று கடினமாகவே கேட்க,

 

மீராவை விட்டு விலகிய ஆழி, அவள் முகத்தைப் பார்த்து, 

 

“எனக்குப் புரியுது மீரா, நல்லா புரியுது. நான் நிலாவை தூக்கின நொடி தாய்மையை உணர்ந்தேன்னு சொன்னேன், ஞாபகம் இருக்கா உனக்கு… அதோ மாதிரி அன்னைக்கு டிரக்ஸ் எடுத்து எதுவும் முடியாம படுத்துக் கிடக்கும் போது, ஆதவ் தான் என்னைக் கவனிச்சிக்கிடாரு. அவர் என் பக்கத்தில் இருந்த ஒவ்வொரு நிமிஷமும், அவர் என்ன தொட்ட ஒவ்வொரு நொடியும் முதல் முதல்ல நான் ஒரு பொண்ணுன்னு ஃபீல் பண்ணேன்டி… அவர் தொடும் போது என்னையும் அறியாமல் எனக்கு உடம்பு கூசிச்சு… எனக்குக் கூட வெக்கம் வரும்னு எனக்கே அன்னைக்குத் தான் தெரிஞ்சது” என்றவள் கண்களில் ஆனந்தத்திற்குப் பதில் அழுக்கை தான் வந்தது.

 

“ஏய் ஆழி… இப்ப எதுக்கு அழற? இது நல்ல விஷயம் தானடி இதுக்கு ஏன் அழற நீ?” என்று மீரா பதற,

 

“அதுக்கு எனக்குத் தகுதி இல்லயேன்னு நெனச்சு அழுக்குறேன்டி… அவருக்குப் பொண்டாட்டிய இருக்கத் தகுதி இந்தக் கொலகாரிக்கு இல்லன்னு நெனச்சு அழுகுறேன்.” என்றவள் மீரா மடியில் முகம் புதைக்க, மீரா மெதுவாக அவள் தலையை வருடி விட்டவள், ஆழியின் மனதை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லி இதற்கு ஒரு முடிவெடுக்க முடிவு செய்தாள்.

 

ஆழி அங்கிருந்து சென்றவுடன், சைத்ரா ஆழி முகம் வாடி இருந்ததைப் பார்த்து, மீராவிடன் என்ன நடந்ததென்று கேட்க, மீரா சொன்ன செய்தியில் சைத்ரா முகத்தில் புன்னகை.

 

“வாவ் அப்ப நம்ம நெனச்சுது சரிதான். ஆதவ் சார் நம்ம ஆழிய விரும்புறாரு. ஜாலி தான்” என்று கத்த,

 

“அவர் இவளை விரும்புறாரு தான். ஆனா, இவ பிடிவாதமா அதெல்லாம் முடியாதுனு கத்திட்டு போறாளே,” என்ற மீரா முகத்தை யோசனையாகப் பார்த்த சைத்ரா,

 

“மீரா நீ ஆதவ்‌க்கு ஃபோன் பண்ணி அழி சொன்னதை எல்லாம் சொல்லிடு, மீதிய அவர் பாத்துப்பாரு, இதுல நம்மால ஒன்னு செய்யமுடியாது. அவரும் நிலா பாப்பாவும் தான் ஆழிய அடக்க ஒரே வழி. நீ ஃபோன் போடு” என்றதும் மீரா, ஆதவ்வை அழைத்து அனைத்தையும் அவனிடம் சொல்லிவிட, அதைக் கேட்ட ஆதவ்,

 

“தேங்க்ஸ் மீரா… இனிமே அவளைப் பத்தி நீங்க கலவைபடாதீங்க, நான் பாத்துக்குறேன். என்னை விட்டு ‌எங்க போய்டா போற அவ… எங்க சுத்துனாலும் அவ என்கிட்டயும் நிலாகிட்டயும் தான் திரும்பி வந்தாகணும்.” என்றுதும் தான் மீராவுக்கு நிம்மதி வந்தது.

 

யுவ்ராஜ் வர இன்னும் பத்து நாள் ஆகும் என்பதால் மூவரும் அவனை என்ன செய்யலாம் என்று பெண்கள் டிசைன் டிசைனாக யோசிக்க, ஆண்கள் மூவரும் அவர்கள் ஆளை கவுகக்க விதவிதமாக யோசித்தனர்.

 

வீட்டில் இருந்து போர் அடிக்குது என்று ஆழியும், மீராவும் சைத்ராவை ஒரு ரெஸ்டாரன்ட் அழைத்துச் செல்ல, அங்கு முகிலும் விஷ்ணுவும் ஆதவ்வுடன் உட்கார்ந்து இருந்தனர்.

 

ஆழியும் மீராவும், சைத்து முகிலை கோர்த்துவிட ப்ளான் போட, முகிலும் விஷ்ணுவும் ஆழி, ஆதவ்வை சேர்த்து வைக்க ப்ளான் போட்டு, ஆதவ்வையும் அங்கு வர வைத்தது இருந்தனர். ஒரே வீட்டில் இருந்துகொண்டு ஆதவ்வை பார்பதை தவிர்த்து வந்த ஆழி இங்கு அவனைத் தவிர்க்க முடியாது போக, அமைதியாக அமரந்து கொண்டாள்.

 

ஆர்டர் செய்த உணவை வந்துவிட, அனைவரும் அமைதியாக உண்ண, முகில் சைத்ராவை ஓரக்கண்ணால் பார்த்தவன், விஷ்ணுவுக்குச் சிக்னல் தந்தான்.

 

“அப்பறம் மீரா, இந்த யுவ்ராஜ்க்கு என்ன ப்ளான் பண்ணி இருக்கீங்க?” என்று பேச்சை தொடங்கினான் விஷ்ணு.

 

“அந்த ராஸ்கல் இப்ப ஊர்ல இல்ல விஷ்ணு… ஃபாரின் போயிருக்கு, வர பத்து நாள் ஆகும்.”

 

“ம்ம்ம் அப்ப பத்து நாள் கழிச்சு அவனுக்குப் பாலுத்திடலாம், அப்படித் தானா”

 

“ம்ம்ம் ஆமா விஷ்ணு, அதோட எல்லாம் ஒரேயடியா முடிச்சிட்டும்” என்ற ஆழியை ஆதவ் முறைக்க, அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

 

“ஆமா நீ சொல்றது சரிதான் ஆழி. இதெல்லாம் முடிஞ்சதும், அடுத்து ஒவ்வொருத்தர கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிட வேண்டியது தான். நாங்களும் எவ்ளோ நாள் தான் சிங்கிளா சுத்துறது.” என்றான் விஷ்ணு.

 

“ஆமா விஷ்ணு, நீ சொல்றது தான் கரெக்ட். அம்மா வேற சீக்கிரம் கல்யாணம் பண்ணு பண்ணுன்னு நச்சரிச்சிட்டே இருக்காங்க, ஊர்ல இருந்து அத்தை வேற ஃபோன் பண்ணி இந்த விஷ்ணுவுக்கு ஒரு கல்யாணம் பண்ணிவைக்கக் கூடாதான்னு ஒரே புலம்பல். சோ, சீக்கிரம் கல்யாணத்தை முடிக்கணும். நம்ம ரெண்டு பேர்க்குப் பிரச்சனை இல்ல… எனக்கும் உனக்கும் ஆல்ரெடி ஆள் இருக்கு, இந்த முகில்க்கு தான் ஒரு நல்ல பொண்ணா பாக்கணும்” என்ற ஆதவ்வை ஆழி முறைக்க, சைத்ரா மெதுவாக இமைகளை உயர்த்தி முகிலிலை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் தன் உணவை உண ஆரம்பிக்க, அவள் கவனம் மட்டும் முகில் என்ன சொல்லப்போகிறான் என்பதிலேயே இருந்தது.

 

“டேய் எனக்குப் பொண்ணு பாக்குற வேலை எல்லாம் வேணாம். நானெல்லாம் ஒரு லட்சியத்தோட வாழ்ந்துட்டு இருக்கவன்… உங்க இஷ்டத்துக்குப் பொண்ணு பாத்த நான் அவளைக் கட்டிக்க மாட்டேன்… சொல்லிட்டேன்.”

 

“ஏய் என்னடா புதுசா லட்சியம் அதே இதுன்னு சொல்ற… இதுவரை நீ அப்டி எதும் சொன்னதில்லயே” என்று உலறிய விஷ்ணு காலை சட்டென மீதித்த முகில்‌,

 

“மவனே இப்ப நீ வாயமூடல… சில்லி சாஸ் எடுத்து மூஞ்சில உத்திடுவேன். முடிட்டு கம்முன்னு இருடா” என்று காதை கடிக்க, விஷ்ணு கப்பென வாயை மூடிக்கொண்டான்.

 

“இங்க பாரு ஆதவ் எனக்குப் புடிச்ச மாதிரி பொண்ணு கிடைச்ச தான் நான் கல்யாணம் பண்ணுவேன். அட்லீஸ்ட் எனக்கு வர்ர பொண்டாட்டி அமைதியான பொண்ண இருக்கணும். முடிஞ்ச அப்படி ஒரு பொண்ணைப் பாரு” என்றவன் தலையில் தட்டியவன்,

 

“ஆமா இவரு பெரிய இவுரு… போடா டேய். உனக்கெல்லாம் நல்ல வாயாடுற பொண்ணா தான் பாப்பேன். உனக்கு அப்படி இருக்க பொண்ணு தான் செட்டாகும். சிம்பிளா சொல்லணும்னா, ம்ம்ம்… ஹான்… நம்ம சைத்து மாதிரி நல்ல கலகலப்பாகப் பொண்ணு தான் உனக்குப் பாப்பேன்” என்று சைத்ராவுக்கு தூண்டில் போட்டான்.

 

“அதென்ன ஆதவ் சைத்து மாதிரி… பேசாம நம்ம சைத்துவையே இவனுக்குக் கட்டி வச்சிட்ட என்ன? என்ன சைத்து நீ என்ன சொல்ற? தயவுசெய்து இந்தக் கொரங்குக்கு வாழ்க்கை குடும்மா” என்ற விஷ்ணுவை சைத்ரா அதிர்ந்து பார்த்தவள், பதில் சொல்ல வாய்திறக்கும் முன்,

 

“டேய் டேய் யார்கிட்ட என்ன கேட்டுட்டு இருக்க நீ… நான் யாரு அவ யாரு… எனக்கு அவ ஜோடிய… லூசுப்பயளே” என்றதும் சைத்ரா முகம் சட்டென வாடிவிட்டது. 

 

“ஏன் முகில் அவளுக்கு என்ன குறைச்சல்? ஏன் அப்படிச் சொல்றீங்க?” என்று ஆழி கோபமாக கத்த,

 

“அய்யோ ஆழி… அவளுக்கு ஒரு குறையும் இல்ல, எல்லாத்துலயும் அவ என்னைவிட மேல இருக்கா. அப்புறம் எப்டி நான் அவளைக் கட்டிப்பேன், அதான் அப்டி சொன்னேன். அவ பெரிய இன்ஜினியர், டாப் போட்டோகிராஃபர், பாக்க சும்மா பொம்மை மாதிரி அழகா, அம்சமா இருக்கா. ஆனா, என்னை பாரு, நான் வெறும் ஐபிஎஸ், சொந்தம்னு சொல்லிக்க ஆதவ், விஷ்ணுவை தவிர எனக்குன்னு யாரும் இல்ல. அப்டி பட்ட என்னைக் கட்டிக்க இவ சம்மதிப்பாளா சொல்லு… அவ ரேஞ்ச்க்கு அவ அமெரிக்கா மாப்பிள்ளை தான் கட்டிக்குவா… என்னை எல்லாம் எங்க கட்டிக்கப்போற” என்று முகத்தைப் பாவமாக வைத்துக்கொள்ள, சைத்து சட்டென எழுந்து நின்றாள்.

 

“ஹலோ நான் எப்ப சொன்னேன் அமெரிக்கா மாப்ளய தான் கட்டிப்பேன். நான் ஒன்னும் ஃபாரின் பையனை எல்லாம் கட்டிக்க மாட்டேன்” என்றவள் தூண்டில் சரியாகச் சிக்க, முகிலுக்கு உள்ளுக்குள் பேரானந்தம்.

 

“ஒஒஒ அப்ப நீ ஃபாரின் மாப்ளய எல்லாம் கட்டிக்க மாட்டீய?” என்று மீண்டும் கேட்க, அவள்‌ ஆமாம் என்று வேகமாகத் தலையாட்டினாள்.

 

“சரி ஃபாரின் மாப்ளய கட்டிக்க மாட்டா..‌. ஆனா, அதுக்காக என்னை மாதிரி ஒருத்தனை கட்டிகவும் ஒத்துக்கமாட்டா இல்ல”

 

“ஏன் ஏன்… ஏன் ஒத்துக்க மாட்டேன். உங்ளுக்கு என்ன குறைச்சல், உங்கள மாதிரி என்ன… நான் உங்கள தான் கட்டிக்குவேன்” என்று தன்னை மறந்து சொல்லிவிட, அனைவர் முகத்திலும் புன்னகை.

 

“அது சரி நீ ஒத்துக்கிட போதுமா?” என்ற முகிலை முறைத்த சைத்ரா,

 

“வேற யார் ஒத்துக்கணும்?”

 

“ஏய் அதுக்கு நான் சம்மதிக்கணும்டி?”

 

“அதெல்லாம் சம்மதிக்காம எங்க போய்டுவீங்கன்னு நானும் பாக்குறேன். என்னை விட்டு நீ வேற எவளை கல்யாணம் பண்ண‌ முடியாது. நான் விடவும் மாட்டேன்” என்று மூக்கை உறிஞ்சியபடியே அங்கிருந்து ஓடிவிட,

 

“டேய் அவ நீ நிஜமா சொல்றேன்னு நெனச்சிட்டு கோச்சிட்டு போற போல… போடா போய் அவகிட்ட உண்மையா சொல்லு…” என்று விஷ்ணு விரட்ட, முகில் சைத்ரா பின்னால் ஓடினான்.

 

கண்களில் வழிந்த கண்ணீர் துடைத்தபடி சைத்ரா விசும்பிக்கொண்டிருக்க,

 

“இங்க என்னடி பண்ற?” என்ற முகிலின் குரல் பின்னால் கேட்க, கோவமாக எழுந்தவள், “நான் என்னமோ பண்றேன். உனக்கென்ன வந்தது‌. அதை ஏன் நீ கேக்குற?”

 

“நீ என் வருங்காலப் பொண்டாட்டி, உன்னை நான் கேக்காம வேற எவன்டி கேட்பான்.”

 

“அதான் என்னைக் கட்டிக்க மாட்டேன்னு சொல்லிடீயே… அப்புறம் என்னவாம்” என்று அவள் திருப்பி நின்று கொள்ள, அவள் குழந்தை தனத்தை ரசித்தான் முகில்.

 

“சரி.. நான் தான் அப்ப கட்டிக்க மாட்டேன்னு சொன்னேன். இப்ப நானே சொல்றேன் உன்னைக் தான் கட்டிக்குவேன்” என்றவன் சைத்ராவை இழுத்து அணைத்துக்கொண்டான்.

 

சைத்ரா அவன் தோளில் முகம் புதைக்க, அவளின் ஆனந்த கண்ணீர் அவன் சட்டையை நனைத்தது.

 

“என்னைக் கட்டிப்பீங்களா?” என்று அவள் கேட்க,

 

“ஓய் வாயாடி இப்ப உன்னைக் கட்டிட்டு தானாடி இருக்கேன்.?” என்று அவள் காதை உரசியபடி அவன் சொல்ல, லேசாக உடலை தெளித்த சைத்ரா, “நான் இத சொல்லல” என்று சினுங்கியவளை பார்த்து முகில் சத்தமாகச் சிரித்தவன்,

 

“நீ இப்ப ஓகேனு சொல்லு, பேன்ட் பாக்கெட்ல தாலிய ரெடிய வச்சிருக்கேன். நம்ம ஃப்ரண்ஸ் முன்னாடி வச்சு இப்பவே உன்னைக் கட்டிக்குறேன் போதுமா” என்றவன் தன் பாக்கெட்டில் இருந்த தாலியை வெளியே எடுத்து காட்ட, சைத்ரா கலங்கிய விழிகளுடன் அந்தத் தாலியை தொட்டு பார்த்தவள், முகிலை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

 

தூரத்தில் இருந்து இவர்கள் இருவரையும் மனநிறைவோடு பார்த்துக்கொண்டிருந்த ஆழி அருகில் வந்த ஆதவ், நமக்குப் பின்னால ஸ்டாட் பண்ணி நம்மை முந்திட்டு போய்ட்டு இருக்காங்கடி, இந்த ரெண்டு ஜோடியும்” என்வனை ஆழி திரும்பி பார்க்க,

 

“எப்படி எனக்குக் கிரீன் சிக்னல் குடுப்ப” என்று கேட்டு கண்ணடிக்க, ஆழி இடவலமாகத் தலையாட்டி “அது நடக்காது” என்று சொல்ல,

 

“அத நடத்திக்காட்டாம நான் விடமாட்டேன்” என்று ஆழி கையை இறுக்கிப் பிடித்தான் ஆதவ்.

 

 

 

Leave a Reply

error: Content is protected !!