சூரியநிலவு18

சூரியநிலவு18

அத்தியாயம் 18

வானத்தில் நிலவு! அமைதியாக பவனி வந்துகொண்டிருந்த நேரம். மதுரையில் தனது அறையில், தனது மனைவியை ரசித்திருந்தாலும், வெற்றிச்செல்வனின் மனதில் அமைதியின்றி தவித்திருந்தான். 

ஓவியமாக துயில் கொண்டிருந்த, தன் மனைவி ஓவியச்செல்வியை விட்டு, அவன் பார்வை வேறு எங்கும் திரும்பவில்லை. அவன் மனநிலையை அவனாலேயே நம்ப முடியவில்லை. 

‘நான் அம்முவை நேசிக்கிறேன்னா? அம்முவும் என்னை விரும்புகிறாளா?’ மதுவை சந்தித்துவிட்டு வந்த இந்த ஒருவாரம் முழுவதும், இதே கேள்வி அவன் மனதை வண்டாக குடைந்தது.  தன் மனைவியை ரசித்தாலும், மதுவின் நிலை அவன் மனதை போட்டு அலைக்கழித்தது.

‘இது தெரியாமல் எவ்வளவு பெரிய தவறு செய்ய இருந்தேன்? மதுவின் துன்பத்தை ஏன் அறியாமல் போனேன்? அவளின் தனிமையை ஏன் என்னால் உணரமுடியாமல் போனது? 

ஒருவேளை எங்கள் திருமணம் நடந்திருந்தாலும், நான் அவளை புரிந்து நடந்திருப்பேனா? மதுவுடன் என் வாழ்வை பிணைத்திருந்தால்? அவள் மனதில் புழுங்கியே இந்த உலகைவிட்டு போயிருப்பாளே.

கடவுளே நான் எவ்வளவு பெரிய பாவத்தை செய்ய இருந்திருக்கிறேன். இதில் ‘மதுவிற்கு துரோகம் செய்யமாட்டேன்’ என்ற பெருமை வேறு. ‘மதுவை திருமண செய்ய போகிறேன்’ என்று சொல்லிக்கொண்டு, ஓவியாவின் பின் சுற்றிக் கொண்டிருந்திருக்கிறேன். மதுவிற்கு துரோகத்தை மட்டுமே செய்திருந்திருக்கிறேன். இனியாவது அவள் வாழ்வில் சந்தோசம் வரட்டும்’ என மனம் புழுங்கினான்.

‘மீண்டும் அதே தவறை அம்முவிற்கும் செய்திருக்கிறேன். ஓவியாவின் பின் சுற்றி மதுவை காயப்படுத்தி இருக்கிறேன். இப்போ மதுவை தேடியலைந்து, அம்முவிற்கு மனகஷ்டத்தை கொடுத்திருக்கிறேன். நான் பிரதாப், ஆகாஷை குறை சொல்ல தகுதி இல்லாதவன். அவர்கள் மட்டும் மதுவின் வாழ்வில் வராமல் இருந்திருந்தால். இந்நேரம் மது….’ அங்கேயே அவன் எண்ணம் தடைபெற்று நின்றது. 

அதற்கு மேல் அவனால் நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. தன்னுடைய அலட்சியம் எங்கே கொண்டு சென்றுள்ளது. “இது வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிந்தால்,  எப்படி தாங்கி கொள்வார்கள்.” அவன் மதுவை நினைத்து கண் கலங்கினான். 

வெற்றி மன வேதனையை தாங்க முடியாமல், ஓவியாவை நெருங்கி அவளை அணைத்துப் படுத்தான். 

அந்த ஆழ்ந்த உறக்கத்திலும், அவனின் அணைப்பை உணர்ந்து கொண்ட ஓவியா, “ஏன் வெற்றி இன்னும் தூங்கலையா?” என கேள்வி எழுப்பினாள்.

“ஒண்ணுமில்ல அம்மு நீ தூங்கு” என அவளை, தன் மார்போடு அணைத்துக் கொண்டு படுத்தான். மனம் கொஞ்சம் அமைதியடைந்தது போலிருந்தது.  சிறிது நேரத்திற்கு பின்பே உறக்கத்தில் ஆழ்ந்தான்.

அவன் உறக்கத்தில் இருந்தாலும் அவன் நினைவு தூங்காமல், அன்று மதுவுடன் பேசிய நாளிற்கு சென்றது.

****************

அங்கு கோவையில் சூர்யா, மதுவை பற்றி அறிய அனுப்பிய ஆளிடமிருந்து கிடைக்க போகும், நிலாவின் எண்ணிற்காக, அவனின் கைப்பேசியில் கவனத்தை பதித்திருந்தான்.

இன்னமும் தகவல் வந்த பாடில்லை. “உன்னைய நம்பினேன் பாரு என்னை சொல்லணும்” என தன்னை தானே வாய்விட்டு கடிந்து கொண்டான்.

‘அந்த நபரை அழைக்கலாமா? வேண்டாமா?’ என்ற சிந்தனையோடு கைப்பேசியை எடுப்பதும், பின் வேண்டாமென வைப்பதுவுமாக இருந்தான். 

அவர் அவனுக்கு விட்ட வேண்டுகோள்,”அங்க எந்த சூழ்நிலையில் இருப்பேன் என தெரியாது. நானே கூப்பிடுற வரை, நீங்க கால் பண்ணாதீங்க” என்பதுதான். 

அதனால் அவனும் இந்த பத்து நாட்களை, மிகவும் பொறுமையோடு கடத்திவிட்டான். தகவல் வந்தபாடில்லை.

அவனின் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக, குறைந்து கொண்டிருக்கும் பொழுதே, அவனை குளிர்விக்கும் படி வந்தது வாட்ஸ் அப் செய்தி, நிலாவின் கைப்பேசி எண்ணுடன்.

வானத்தில் மிதந்தான். நேரத்தை பார்க்காமல் உடனே மதுவின் எண்ணிற்கு அழைத்துவிட்டான்.

மணி இரவு பத்தை கடந்திருந்தது. நிலா நல்ல உறக்கத்தின் பிடியில். கைப்பேசியோ அமைதி ஆக்கப்பட்டிருந்தது. 

கைப்பேசி ஐந்து முறை அடித்து ஓய்ந்தது. யாரும் எடுத்தபாடில்லை. 

அவன் இந்த முறை யோசிக்காமல், நிலாவின் எண்ணை கொடுத்த நபரை அழைத்திருந்தான். 

“ஏய் நீ குடுத்தது சரியான நம்பரா? யாரும் எடுக்க மாட்டேங்கறாங்க.” எதிரே உள்ள நபர் என்ன சொல்ல வருகிறார், என கேட்காமல் பொரிந்து தள்ளினான். 

“போதும் நிறுத்துங்க சூர்யா, இப்ப மணி என்ன பாருங்க. அவ இந்நேரம் தூங்கி இருப்பா. அப்பறம் எப்படி ஃபோனை எடுப்பா?”

“ஹி ஹி ஹி நிலா கூட பேசுற அசையில் டைம்மை பார்க்கல” என அசடு வழிந்தான். 

“என்னால் முடிந்தது, அவ நம்பரை கொடுத்துட்டேன். இதுக்கு மேலேயும் என்னை தொந்தரவு பண்ணாதீங்க. நீங்களாச்சு அவளாச்சு. என்னை ஆளைவிடுங்க. நான் மட்டும் உங்களுக்கு உதவி பண்ணுறது, அவங்க இரண்டு பேருக்கும் தெரிஞ்சது, என்னை உயிரோடவே விடமாட்டாங்க. குட் நைட்” என தொடர்பை துண்டித்தார்.

சூர்யா சிரிப்புடன்”டேய் சூர்யா! உனக்கு நிலா பைத்தியம் ரொம்ப முத்திடுச்சு, சீக்கிரம் அவளை சம்மதிக்க வச்சு, கல்யாணம் பண்ணிடு. இல்லை ரோடு ரோடா சட்டையை கிழிச்சிட்டுதான் சுத்தனும்” என தனக்கு தானே சொல்லிக் கொண்டான்.

ஆழ்ந்த நித்திரையிலிருக்கும் நிலாவை பார்த்துவிட்டு, ஆகாஷும் பிரதாப்பும் தங்களது அறையில் அடைந்துவிட்டனர்.

இங்கே பிரதாப், ஆகாஷின் நினைவும், வெற்றி வந்த அன்று நடந்த உரையாடலுக்கு சென்றது.

****************

அந்த பகல் நேரம், வெற்றியை அழைத்துக்கொண்டு, தன் இல்லம் நோக்கி செல்லும் பொழுதே, வெற்றியிடம் மதுவின் உடல்நிலை, மனநிலை பற்றியும், பிரதாப்பின் ஆசை, அவனின் குழப்பம் பற்றியும், ஆகாஷ் தனக்கு தெரிந்தளவு மறைக்காமல் கூறிவிட்டான்.

அதை கேட்ட வெற்றி ஆடிப்போயிருந்தான்.  மதுவிடம் பேசும் வரை,’நான் பிரதாப்பிடம் தோற்றுவிட்டேன்’ என்றே நினைத்திருந்தான். பிறகு தான் அவனின் தவறை உணர்ந்தான்.

“ஏன் மது, என்கிட்டே எதுவும் சொல்லாமல் போன?” என அவளை நெருங்கினான் வெற்றி.

வெற்றி அவளை நெருங்க முடியாமல், குறுக்கே மறைத்து, முறைத்து நின்றான் பிரதாப்.

“அவள் என் மாமா பெண். எனக்கு அவகூட பேசுற உரிமை இருக்கு.” என வெற்றி முறைதான்.

“அவ என்னோட உயிர். அவளை கஷ்டப்படுத்துற எதுவும், அவளை நெருங்க விடமாட்டேன்.” என பிரதாப் உறுதியாக நின்றான்.

அதை பார்த்து, மீதி இருந்த மூன்று ஜீவனும், வாய்க்குள் சிரிப்பை அடக்கி நின்றனர். மேகவர்ஷினியும் அங்கே தான் இருந்தாள்.

“வெற்றி கூடப் பேச, உனக்கு என்ன பயம் மது” என மேகா, மதுவை கடிந்துகொண்டாள்.

இப்போது பிரதாப்பின் பார்வை, மேகாவை குற்றம் சாற்றியது,’மது யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை’

அதை புரிந்த மேகா, அழகான புன்னகையுடன்,”மது அவங்களை பொறுத்த வரை, நீ பண்ணினது தவறு. அதற்கு நீ விளக்கம் சொல்லி தான் ஆக வேண்டும்” என மதுவை தேற்றினாள்.

மதுவும் ஒரு முடிவோடு பிரதாப்பை பார்த்தாள். அவன் ‘நீ பேசிடுவியா?’ என பார்வை பார்த்தான்.

“நான் பேசினா தான் இதற்கு தீர்வு வரும் பேபி” என பிரதாப்பை சமாதானம் செய்ய முயன்றாள்.

“நீ இவன்கூட பேசவேண்டிய அவசியமில்லை” என பிரதாப் குதிக்க ஆரம்பித்துவிட்டான்.

மது ஒரு விரலை உதட்டில் வைத்து,’பேசக் கூடாது’ என வாய் வார்த்தை இல்லாமல், செய்கையால் கட்டளையிட்டாள்.

அவ்வளவு நேரம் சிங்கமாக கர்ஜித்தவன், பூனைக்குட்டியாக அடங்கினான். மது ஆகாஷை பார்க்க, அந்த பார்வைக்குண்டான அர்த்தமுணர்ந்து, பிரதாப்பை வெளியே அழைத்தான்.

பிரதாப் அவனிடம் மறுக்க, மது “பேபி” என ஒரு வார்த்தைதான் சொன்னாள் அதில் அடங்கிய பிரதாப், கோபம் குறையாமல் அவளை முறைத்தான். அவள் விழி முடி திறந்து,’நான் பார்த்துக்குறேன்’ என சமாதானம் சொன்னாள். அவனும் பேசாமல் ஆகாஷுடன் தோட்டத்திற்குள் புகுந்து கொண்டான்.

இவர்களின் விழி வழி நடந்த பார்வை பரிமாற்றத்தை பார்த்திருந்த வெற்றி,’சில வருஷம் பழகிய இவர்களால், எப்பட ஒரு பார்வையில் அவளது மனதை புரிந்து கொள்ள முடிகிறது’ என அதிசயித்து நின்றான். ‘கல்லூரியில் ஜல்லிக்கட்டு காளையாகச் சுற்றிய எஸ்.பியா இது’ என திகைத்து நின்றான்.

அவனுக்கு எங்கே தெரிய போகிறது, ‘ஒருவரை ஆத்மார்த்தமாக உணர்ந்து பழகும்பொழுது, அவர்களின் சிறிய முக மாறுதலைக்கூட அறிய முடியும் என்று’. ‘எவ்வளவு பெரிய வீர சிங்கமாக இருந்தாலும், தன்னவளின் கடைக்கண் பார்வை பட்டால், காலைச்சுற்றும் பூனைக்குட்டியாக மாறிவிடுவான் என்று.’

“வெற்றி இங்க உட்கார்” என சோஃபாவை காட்ட, மறுப்பு சொல்லாமல் அமர்ந்து கொண்டான்.

“வெற்றி முதலில் என்னை மன்னிச்சுடு. மணமேடை வரை வந்து உன்னை அவமானப்படுத்திட்டேன்.” அவன் எதோ சொல்ல முயல,

“நான் பேசி முடிச்சுடுறேன் வெற்றி.” என அவனை அமைதி படுத்திவிட்டு.

“வெற்றி! நம்ம சின்ன வயசில் என்னை, உனக்கு மனைவியா பெரியவங்க சொன்னதால், நீயும் அதை உன் மனதில் பதிய வச்சுக்கிட்ட. உனக்கு என்மேல் ஆசை இருந்துச்சு, காதல் இல்லை. ஒரு நாளாவது என்கூட பேச, பழக ஆசைப்பட்டு இருக்கியா? என்னை பசங்க கிண்டல் பண்ணுனா, தட்டி கேட்டு இருக்கையா?

எனக்கு எது பிடிக்கும், பிடிக்காது? என்ன தெரியும், தெரியாது? என்னைப் பத்தி உனக்கு கொஞ்சமாவது தெரியுமா? உனக்கு என்மேல் கொஞ்சமாவது காதல் இருந்திருந்தால், என்னை பத்தி யோசித்திருப்ப, எனக்காக நேரம் ஒதுக்கி இருப்ப. உன்னோட காதல் யாருக்குன்னு? உன் மனசில் யார் இருக்கான்னு யோசி.

நீ கேட்கலாம் இதை மொதல்லையே சொல்லி இருக்கலாமேன்னு, நான் லண்டன் போன பின்னாடி, நீ புரிஞ்சுப்பன்னு  நினைச்சேன் . திரும்பி வந்தால் கல்யாணமென்று குண்டை போடுறாங்க.

எனக்கு பயங்கர ஷாக். யாருக்கும் என்கிட்ட, என்னோட விருப்பத்தை கேட்கணும்ன்னு தோணல. ஆகாஷ், பிரதாப்பை வர வச்சு சொல்லி புரிய வைக்கலாம்னு இருந்தேன். அதுக்குள்ள பல பிரச்சனைக்கள்ல  மாட்டிகிட்டோம். கடைசியா மண்டபத்தில் வச்சு சொல்லலாம்ன்னு தான் வந்தேன்.

ஆனால் ஓவியா, ஸ்டேஜ்ல நம்ம பேரை பார்த்து கண்கலங்கிட்டு இருந்தா. எனக்கு அவ மனசு புரிஞ்சது. உனக்கும் அம்முவை தான் பிடிக்கும் அதுவும் எனக்கு தெரியும். நான் அங்க இருந்தா பிரச்சனை வேற மாதிரி போகும். அதுதான் யாருக்கும் சொல்லாம கிளம்பிட்டேன். ராஜா மாமா நம்பர்க்கு, ‘ஓவியாவுக்கும் உனக்கும் கல்யாணத்தை முடிக்க சொல்லி’ மெஸேஜ் போட்டுட்டு, மொபைலை அங்கேயே விட்டுட்டு வந்துட்டேன்.” என நீளமாக பேசி முடித்தாள்.

அதற்கே மூச்சு வாங்கியது. ஜன்னல் வழியே பார்த்த பிரதாப்பிற்கு, பயம்பிடித்துகொள்ள ஓடி போய் நீரை கொடுத்தான்.

வெற்றி சிலையாக சமைந்து நின்றான் தான் செய்ய இருந்த தவறை நினைத்து.

*******************

பறவைகளின் சத்தம் இன்னிசை கீதமாக ஒலிக்க. தன் மன்னவனின் அணைப்பில் பெண்ணவள் சுகமாய் துயில. அத்துயிலை கதிரவனின் ஒளி களைய. சோம்பலாக மெல்ல இமை திறந்தாள் ஓவியச்செல்வி.

மிக நெருக்கமாக இருந்த வெற்றியின் முகம் பார்த்து, கனவு என நினைத்து திரும்பி படுக்க முயன்றாள்.

”என்னடா இது அசையக்கூட முடியலையே. என்ன ஆச்சு?” என எழும்ப முயன்றாள்.

அப்போதுதான் புரிந்தது, தான் வெற்றியின் அணைப்பிலிருப்பது. திகைத்து சிறிது நேரம் அவனையே பார்த்து சிந்தித்தாள், 

“என்ன ஆச்சு வெற்றி உங்களுக்கு? நண்பனைப் பார்க்க போய்விட்டு வந்ததிலிருந்து உங்க பார்வை, பேச்சு, செய்கை, எல்லாமே வித்தியாசமா இருக்கு. நீங்க என்ன நெருங்கி வர மாதிரி இருக்கு. உங்ககூட சேர்றதுக்கு மலையளவு ஆசையிருக்கு. ஆனாலும் என்னை பிரிஞ்சு போறேன்னு சொன்ன, உங்க வார்த்தை ரணமா இங்க வலிக்குது” என இதய பகுதியில் தன் கைவைத்து கொண்டாள்.

தெளிவில்லாத வார்த்தைகள், நல்ல உறக்கத்திலிருந்த வெற்றியை அடையவில்லை.

தன்னை தூய்மை படுத்திக்கொண்டு கீழே சென்று விட்டாள்.

கற்பகத்திடம் சென்று”அத்தை நான் எதுவும் செய்யணுமா?”

எங்கோ வெறித்திருந்த கற்பகம், தூக்கத்திலிருந்து விழித்தது போல,”என்ன அம்மு கேட்ட?” என்றார் சோர்ந்த குரலில்.

‘அத்தனை பேருடைய சந்தோசத்தையும் எடுத்துட்டு போய்விட்டாளே’ என மதுவின் மேல் கோபம் கொண்டாள்.  

‘மது யாரிடமும் சொல்லாமல் சென்றது இவளிற்காக’ என தெரியும்பொழுது ஓவியாவின் நிலை என்னவோ? 

மதுவின் இத்தனை வருட தனிமைக்கு இவளும் ஒரு காரணம் என தெரியும்பொழுது? ஏற்கனவே காலம் கடந்துவிட்டது.

வெற்றி தனது தவறை உணர்ந்து விட்டான். ஓவியா அவனை ஏற்றுக்கொள்வாளா?

********************

வெற்றி கிளம்பி இரண்டு நாட்கள் கடந்திருந்தது, சென்னையில் பிரதாப், ஆகாஷ், நிலா, மேகா சிறுவர்கள் போல விளையாடி கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு பெண் புயலை போல அங்கே நுழைந்தாள்.

உதட்டில் புன்னகையுடனும், நெஞ்சத்தில் வஞ்சத்துடனும் மதுவை நோக்கினாள்.

அவள் யார் என கெஸ் பண்ணுங்க மக்களே?

Leave a Reply

error: Content is protected !!