💙இருளை ஈர்க்கும் ஒளி💙

eiFC8EY29611-1d175009

💙இருளை ஈர்க்கும் ஒளி💙

ஈர்ப்பு – 4

“செருக்கு, அகம்பாவம், ஆணவம் என்னும் இருள்களற்ற நேர்மையான செல்வந்தன் நன்மதிப்பு, தொடர் வெற்றி, மனநிம்மதி என்னும் ஒளிகள் பெறுவான்”.

அன்று மாலை அனைவரும் அண்ணா நகரில் உள்ள ஷ்யாம் வர்ஷுவின் வீட்டிற்குச் சென்றனர்.

அதை வீடு என்று சொல்வதை விட பங்களா என்று அழைத்தால் பொருத்தமாக இருக்கும், வீட்டைச் சுற்றி அழகிய தோட்டம் அங்கு தான் விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

தியா வீடும் பெரியது தான், தியா வீடு இரண்டு அடுக்குகள் கொண்டது.

கீழே வரவேற்பறை, சமையலறை அதன் அருகிலேயே அளவான உணவருந்துமறை, ஒரு படுக்கையறை, அது ராமச்சந்திரன் லட்சுமியினுடையது,

அதன் அருகே லைப்ரரி செட்டப்பில் ஒரு அறை. தியா வீட்டில் அனைவரும் படிக்கும் பழக்கம் உள்ளவர்கள், எனவே அதற்காகத் தனி அறை அமைத்திருந்தனர். தியா அவள் கல்லூரி பாடங்கள் இங்கே தான் படிப்பாள். அதன் அருகே பூஜை அறை.

மாடி செல்வதற்கு உள்ளேயே ஹாலின் நடுவில் படிகள் அமைத்திருந்தனர்.

மேலே இரண்டு அறைகள், ஒன்று தியாவின் அறை, அவள் அறைக்கு முன் இன்னொரு படுக்கையறை உண்டு அது விருந்தினர் அறை.

வீட்டைச் சுற்றி தோட்டம் அமைத்துப் பராமரிக்கிறாள் தியா.

பெரும்பாலும் அவை காய் மற்றும் கனி வகைகள், அவை வீட்டின் சமையலுக்குப் பயன்படும் அளவு நல்ல விளைச்சலும் தந்தது. சில மலர் வகைகளும் உண்டு அவை பூஜைக்கும் அவர்கள் தேவைக்கும் பயன்படும்.

இங்கே, இந்த தோட்டத்தில் மலர் மற்றும் அழகுக்காக வைக்கப்படும் குரோட்டன்ஸ் செடிகள் தான் இருந்தன. ஆனால் அனைத்தும் நேர்த்தியாய் வெட்டப்பட்டு அழகாய் காட்சி அளித்தது. ஆங்காங்கே சிச்சிறு சீரியல் லைட்டுகள் போட்டு, வீட்டின் பின் பகுதி தோட்டத்தின் நடுவில் கேக் வெட்ட மேடை அமைத்திருந்தனர்.

 இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டே அனைவரும் நடக்கத் தியா மட்டும் தோட்டத்தை பார்த்தபடி பின்தங்கினாள்,

 “என்னங்க அப்படியே நின்னுட்டிங்க “, என்ற குரல் திடீரென அருகில் கேட்கவும் பதறித் திரும்பியவள் தடுமாறி விழப்போனாள்.

எதிரிலிருந்த ஷ்யாம் அவள் கைப் பற்றி நிறுத்தி, “தியா ரிலாக்ஸ் ஏன் எவ்வளவோ பதட்டம்”.

“இல்ல…. திடிர்னு….. கூப்பிடவும்…. பயந்துட்டேன்”.

“நம்ப வீட்டுக்குள்ள என்ன பயம்”.

“ம்…….”

“சரி வாங்க எல்லாரும் போய்ட்டாங்க பாருங்க”.

“ம்….”, என்று அனைவருடன் சேர்ந்துகொண்டாள் தியா.

தியா மற்றும் மித்துவின் குடும்பத்தினரின் வரவை பார்த்து வர்ஷு வர, அவளை முந்திக்கொண்டு வந்த கிருஷ்ணமூர்த்தி, “வாங்க ராம், எப்படி இருக்கீங்க” எனவும்,

“நான் நல்லா இருக்கேன், நீங்க…. எப்படி…. இங்க” என வினவினார் ராமச்சந்திரன்.

“நல்லா கேட்டிங்கப்போங்க இது நம்ப வீடு தான்”.

“அப்போ வர்ஷு, ஷ்யாம்……”, என்று அவர் முடிப்பதற்குள்…..

“என் பிள்ளைகள் தான்”, என்றார்.

இவர்கள் இப்படி இழைந்து கொள்ள ஒன்றும் புரியாமல் முழித்தனர் சுற்றியிருந்தவர்கள். அப்போதுதான் அதைக் கவனித்த கிருஷ்ணன், “இவர் நம்ப கம்பெனி அக்கௌன்ட் வைத்திருக்க வங்கியுடைய மேனேஜர்” எனக் கூறினார் கிருஷ்ணா.

முக்கிய காசோலை மற்றும் கையெழுத்திற்கு நேரில் அவரே செல்லுவதினால் பழக்கம், இப்போது சிலநாட்களாக அது நட்பாய் மாறியிருந்தது.

பின் இருவரும் அவரவர்க் குடும்பத்தை அறிமுகப் படுத்தினர்.

“வர்ஷு காலையில் உங்க வீட்டுக்கு வந்ததும், அங்கு நடந்த அனைத்தையும் சொல்லி மகிழ்ந்தாள்”, என்று கூறிய ராதா தியாவின் புறம் திரும்பி,

 “உன்ன பற்றித்தான் இப்பல்லாம் வீட்டில் பேச்சி” என, அதற்குச் சிரிப்பை மட்டும் பதிலாய் தந்தாள் தியா.

“அப்போ என்ன பத்தி ஒன்னும் சொல்லலையா ஆண்ட்டி”, என்று சண்டைக்கு வந்தாள் மித்து.

“நீ மித்துனு நினைக்கிறேன்மா, சரியா?”

“என்னைப் பத்தியும் சொல்லிருக்கா ஒத்துக்குறேன் ஆண்ட்டி”, எனச் சிரித்தாள் மித்து.

அருண் மற்றும் மித்துவின் பெற்றோர்கள் சிறிது நேரம் அவர்களுக்குள் பரஸ்பரம் அளவளாவி மகிழ்ந்தார்கள்.

விழாவிற்கு அவர்கள் சென்னை கம்பெனி ஊழியர்கள் அனைவரும் வந்திருந்தனர்.

பின் கேக் வெட்டி விழாவைச் சிறப்பாய் முடித்து அனைவரையும் உண்ணச் செய்து, தொழிலாளர்களை அனுப்பிவிட்டு, குடும்ப நண்பர்கள்(தியா, மித்து மற்றும் அருண் வீட்டினர் ) மட்டும் அமர்ந்து பேசினர்.

“இது முக்கியமா நம்பத் தொழிலாளர்களுக்கான விழா , இந்த நாளில் தான் தொழிலை ஆரமித்தேன், இப்போ நான் இந்த அளவு முன்னேறி இருக்கேனா அதுக்கு தொழிலாளர்கள் தான் காரணம். அதான் எப்போதும் இந்த நாளில் அனைவரையும் அழைத்துக் கொண்டாடுகிறோம்”, என விளக்கினார் கிருஷ்ணன்.

பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்க, தோழிகளுக்கு வீட்டைச் சுற்றிக் காட்டினாள் வர்ஷு.

பெரிய ஹால், கீழே மூன்று படுக்கையறைகள், ஒன்று கிருஷ்ணன் ராதாவின்னுடையது, மற்றொன்று கிருஷ்ணனின் தாய் தந்தைக்கு.

அவர்கள் கும்பகோணத்தில் இருக்கின்றனர். தங்களுடன் வரச்சொல்லிப் பல முறை அழைத்தும் மறுத்துவிட்டனர், அவர்களுக்குச் சொந்த ஊரைவிட்டுவர மனமில்லை, அங்கே இருக்கும் மல்பெரி தோட்டம், மா, தென்னை தோப்புகள், பண்ணை அனைத்தையும் கவனித்துக் கொள்கிறார் கிருஷ்ணனின் அப்பா வீரராகவன்.

விடுமுறை நாட்களில் அங்க சென்று வருவர். எப்போதாவது இங்கே வருவார்கள் அப்படி வரும் நேரம் அந்த அறையைப் பயன்படுத்துவார்கள்.

மற்றொன்று விருந்தினர் அறை.

மேலே ஹால், ஷ்யாமின் அறை, வர்ஷுவின் அறை, சகல வசதிகள் கொண்ட ஜிம், மினி தியேட்டர், அறையின் உட்புறம் அமைத்த நீச்சல்குளம், என அணைத்து வசதிகளும் இருந்தது.

சிறிது நேரம் கழித்து அனைவரும் விடைபெற்றுச் சென்றனர்.

மித்து தியா இரு குடும்பங்களும் ராமசந்திரன் காரில் ஒன்றாய் சென்றார்கள், வழி முழுவதும் ஷ்யாம் வீட்டைப் பற்றிய பேசு தான்.

தியா மித்து இருவரும் கடைசி சீட்டில் அமர்ந்து வளவளத்துக் கொண்டுவர, பெரியவர்கள் முன்புறம் அமர்ந்து அவர்களுக்குள் பேசிக்கொண்டனர்.

“எவளோ பெரிய இடம்! பணம் இருந்தாலும் இப்படிப் பட்ட குணம் அமையுமா?!, புருஷன் பொண்டாட்டி இரண்டு பேரும் பணத்தை பெரிசா நினைக்காதவங்க, ரொம்ப நல்லமாதிரியா இருக்காங்க”, என மித்துவின் அம்மா கூற.

“ஆமா ஏகன்யா, அவங்க மட்டும் இல்லாம பிள்ளைகளையும் அதே மாதிரி வளர்த்திருக்காங்கப் பார்”, என்றார் லட்சுமி.

“உண்மைதான் அக்கா”.

**********

மறுநாள் காலை கல்லூரியில், அடுத்த செமஸ்டருக்கான அட்டவினை வந்தது.

ஸ்டடி ஹாலிடேசில் தோழிகள் ஒவ்வொரு நாள் ஒவ்வொருவர் வீட்டிற்குச் சென்று படித்தனர். தியா இருதோழிகளுக்கும் படிப்பில் உதவினாள்.

தேர்வுகளும் ஆரம்பமானது, முன்பே படித்து நோட்ஸ் எடுத்ததினால் அதை மட்டும் ஒருமுறை பார்ப்பதே போதுமானதாக இருந்தது.

செமஸ்டர் விடுமுறையில் ஷ்யாம் தன் தந்தையுடன் கம்பென் சென்றான்.

இது அவன் பள்ளிப் படிப்பை முடித்தக் காலத்திலிருந்தே வழமையானது, கல்லூரி முடிந்த பின் அவன் கம்பெனி பொறுப்பை சிறிது சிறிதாக ஏற்றுக்கொள்ளவே இந்த ஏற்பாட்டைச் செய்தார் கிருஷ்ணன்.

வர்ஷு தன் அன்னையுடன் தன் தாத்தா பாட்டி ஊருக்குச் சென்று வந்தாள்.

இத்தனை நாட்களில் ஷ்யாம், அருண், தியா, மித்து, வர்ஷு அனைவரும் மிகவும் நெருங்கி இருந்தனர்.

ஐந்து பேர் கொண்ட இவர்கள் குழுவிற்கு “லைட்டிங் ஸ்டார்ஸ்”(lighting stars) என்ற பெயர் வைத்தனர்.

தேர்வு முடிவுகளும் வந்தது. லைட்டிங் ஸ்டார்ஸ் அனைவரும் அதிக பெர்ஸன்ட் எடுத்தனர்.

நாட்கள் மாதங்களாய் விரைந்தோட அடுத்த செம்மேஸ்டர் முடிந்தது.

ஷ்யாம் அருணுக்கு இது இறுதி செமஸ்டர் எனவே தங்கள் படிப்பில் கவனமாக இருந்தனர்.

மற்ற மூவரும் இரண்டாம் ஆண்டின் இறுதியில் இருந்தனர். அவர்களுக்கு எப்போதும் போல் அரட்டை, படிப்பு என நாட்கள் சென்றது.

இவ்வாறு இருக்க ஒரு நாள் தியா ஷ்யாமிற்கு கால் செய்தாள்.

“ஹலோ ஷ்யாம் உங்ககிட்ட பேசணும் ஃப்ரீயா”

“ம்ம்… ஃப்ரீ தான் சொல்லு”.(இவ்வளவு நாளில் அவன் அவளை ஒருமையில் அழைக்கப் பழகியிருந்தான்)

“உங்ககிட்ட ஒரு உதவி கேட்கலாம்னு தான் கூப்பிட்டேன். அருண் அண்ணா யாரையாச்சி லவ் பண்றாங்களா”.

“என்ன திடிர்னு….”

“சொல்லுங்க..”

“ஆமா, ஆனா இன்னும் அந்த பொண்ணுகிட்ட சொல்லல”.

“அப்படியா..” என்றவளின் குரல் கீழ்யிரங்கியது.

அது…..அந்த பொண்ணு யாருனு உங்களுக்கு தெரியுமா”.

“நீ முதல் விஷயத்தை சொல்லு ஏன் இப்போ இந்த விசாரணை”.

அவள் அமைதியாக இருக்க.

அந்த பெண் மித்து தான் என்ற உன்மையைச் சொன்னான் ஷ்யாம்.

அதைக் கேட்டவள் துள்ளிக் குதிக்காத குறை தான் அவ்வளவு மகிழ்ச்சி.

“உன்மையாவா……”

“ஆமா…. சரி இப்போவாச்சு என்னனு சொல்றியா”.

மித்து கொஞ்ச நாளா சரியில்ல வழமையான கலகலப்பு போய் ஒரு மாதிரி இருந்தாள்.

தியா, வர்ஷு அவளிடம் கேட்டுப் பார்த்தும் பதில் இல்லை. பின் ஒரு மரத்தடியில் அருண் ஷ்யாம் பேசுவதைத் தூரத்தில் மறைந்திருந்து பார்த்த மித்துவை கவனித்த தியா, “என்னடி பண்ற இங்க”.

“அது…..”

“எது……நீ அருண் அண்ணாவைத் தானே பார்த்த”.

சிறுவயதிலிருந்தே தோழியிடம் எதையும் மறைக்காதவள் தன் மனதைத் திறந்தாள்.

“ஆமாடி, அவர் எப்பவும் போன்ல பேசுவாருடி இப்போ லாஸ்ட் செம்ல அதான் அதிகமா பேசறதுதில்ல, இவளோ நாள் இல்லாம இப்போ ஒரு மாதிரி இருக்குடி அவர பாக்கணும் பேசணும்னு தோணுதுடி”.

தோழி காதல் நோயில் விழுந்தது புரிந்தது தியாவிற்கு. ஆனால் எதுவும் தெரியாமல் அவளை ஊக்கவிக்கவும் விரும்பவில்லை அவள்.

இவ்வாறு நடந்தது அனைத்தையும் ஷ்யாமிடம் கூறினாள்.

“உண்மையா அருண் அண்ணா மித்துவ விரும்புறாங்களா”.

“ஆமா தியா அவனுக்கு மித்துனா ரொம்ப பிடிக்கும்”.

“அப்புறம் ஏன் இன்னும் அவகிட்ட சொல்லல”.

“அவன் ஒரு நல்ல நிலைமைக்கு வந்த அப்புறம் சொல்லாம்ன்னு இருந்தான்”

“அவங்க வீட்ல ஒன்னும் பிரச்சனை இல்லையே”.

“இல்ல தியா, அவங்க அப்பா ஒருநாள் என்கிட்ட சொன்னாங்க அவர் தங்கச்சி பொண்ண அருணுக்கு கேட்கலாம்னு இருக்கேன்னு. சோ அங்க எதுவும் பிரச்சனை இல்லை. மித்து வீட்ல எப்படி”.

“ஆண்ட்டி எனக்கு கிளோஸ் தான் ஆண்ட்டிகிட்ட இதுபத்தி இண்டிரெக்டா பேசி பாக்குறேன்”.

“சரி பேசிட்டு சொல்லு”.

“கண்டிப்பா சொல்றேன் பை”, எனப் பேசியை வைத்துவிட்டு ‘மித்துவின் அம்மா ஏகன்யாவிடம் என்ன பேசலாம்’, என சிந்திக்கலானாள் தியா.

(தியா எப்படி மித்து அம்மாகிட்ட பேச போற அடுத்த எபில தெரிஞ்சிக்கலாம் வாங்க)

 

Leave a Reply

error: Content is protected !!